6/18/2005

அபூர்வ மனிதர் சி.பா. ஆதித்தனார்

தமிழ் நாட்டில் பாமரனும் பத்திரிகை படிக்குமாறு செய்தவர் தினத்தந்தியை நிறுவிய திரு. சி.பா. ஆதித்தனார் அவர்கள் என்றால் அது மிகையாகாது. உதாரணத்துக்கு ஒரு செய்தி. ஒரு சரக்கு ரயில் வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அது கடந்து வந்த முந்தைய ரயில் நிலையம் இப்போதிருந்த ரயில் நிலையத்தை விட தாழ்ந்த மட்டத்தில் இருந்திருக்கிறது. இஞ்சின் ஓட்டுனர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது திடீரென்று வண்டியின் பார்க்கிங் ப்ரேக் செயலிழந்தது. ஆகவே வண்டி அப்படியே பின்னால் சில கிலோமீட்ட்ரகள் சென்று முந்தைய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேறு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டது. எல்லா பத்திரிகைகளிலும் இதை வெறுமனே வார்த்தைகளில் வர்ணித்து விட்டு விட்டனர். ஆதித்தனார் அவர்கள் சற்று வித்தியாசமாக சிந்தித்தார். அதன் விளைவு ஒரு லைன் ஸ்கெட்ச். இரு ரயில் நிலையங்களுக்கிடையில் இருந்த சரிவு மிகத்தெளிவாகக் காட்டப்பட்டது. அப்படத்தை பார்த்த எவருக்கும் என்ன நடந்தது என்பது உடனே விளங்கியது. அதுதான் ஆதித்தனார்.

இன்னொரு முறை நேரு அவர்கள் திருமதி கென்னடியை ஆலிங்கனம் செய்து வரவேற்றார் என்று ஒரு நிருபர் எழுதியதைப் படித்தார் ஆதித்தனார் அவர்கள். சம்பந்தப்பட்ட நிருபரை அழைத்து ஆலிங்கனத்துக்கு பதில் நல்ல தமிழ் சொல்லை போடுமாறு கூறினார். நிருபர் தயங்கியபடி "கட்டித் தழுவி" என்ற சொல்லைக் கூற அவ்வாறே போடுமாறு அவருக்கு உத்தரவிட்டார். அவர் கவலை எல்லாம் அவர் பத்திரிகையைப் படிக்கும் சாதாரண ரிக்க்ஷா தொழிலாளிக்கு புரியுமாறு இருப்பது பற்றித்தான். தங்களை அறிவு ஜீவிகளாகப் பாவித்து கொண்டிருந்த ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல.

பல விஷயங்களுக்கு அவர் முன்னோடியாக இருந்தார். அவற்றில் முக்கியமானது மாத நாவல் வெளியிடுவதாகும். தினசரிப் பத்திரிகைக்கான காகிதம் நியூஸ்பிரின்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் மிகுதி இருந்த பேப்பரை உபயோகிக்கும் எண்ணத்திலேயே அவர் ராணி முத்துவைத் தொடங்கினார். அதைப் பின்பற்றி மற்ற மாத நாவல்கள் வந்தன என்பது யாவரும் அறிந்ததே.

ஒரு சமயம் சில அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சென்னைக்கு வந்த போது தினத்தந்தியைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. உள்ளூர் செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் இப்பத்திரிகையில் கொடுக்கப்பட்டதை அவர்கள் எல்லோரும் ஆதரித்தனர். அமெரிக்காவிலும் அப்படித்தான் என்றும் அவர்கள் கூறினர்.

ஆதித்தனார் அவர்கள் செய்திகளுக்கு தலைப்பிடுவதில் வல்லவர். 1963-ல் கென்னடி அவர்கள் தலையில் குண்டு பாய்ந்தது என்ற செய்தியைத் தைரியமாக கென்னடி மரணம் என்றே குறிப்பிட்டார். தலையில் குண்டடி பட்டு யாரும் பிழைத்ததில்லை என்று அவர் பின்னால் கூறினார். இவ்வாறு அவர் எடுத்தத் துரித முடிவுகள் மிகப் பிரசித்தி பெற்றவை.

இதெல்லாம் எழுதிய பிறகு எனக்கு ஒரு சந்தேகம். கன்னித் தீவு எப்போது முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

குழலி / Kuzhali said...

ஆலிங்கனம் விடயத்தை நானும் படித்திருக்கின்றேன்... தினத்தந்தியின் மீதிருந்த என் பார்வையும் உங்கள் பார்வையைப்போன்றதே... சமீபத்தில் ஒரு பின்னூட்டத்தில் கூட இட்டிருந்தேன்... நக்கீரன் பத்திரிக்கையைப்பற்றி எழுதியது போல தினத்தந்திக்கும் எழுதலாம் என இருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் :-))

இன்னும் கூட எப்படி தினத்தந்தி உருவானது, எந்த மாதிரியான காலகட்டத்தில் ஆதித்தனார் இதை ஆரம்பித்தார் என்பதைப்பற்றியும் எழுதியிருந்தால் என் போன்றோருக்கு இன்னும் உதவியாக இருந்திருக்கும்...

- குழலி

-/பெயரிலி. said...

இது டோண்டு ஐயா பதிவுதானா இல்லை யாராவது ஒரு வாண்டு எழுதிவிட்டு, புலிக்குட்டியிலே அழுத்தி "ப்ளாக்கரையே ஹைஜாக்" பண்ணிக்கொண்டு போய்விட்டதா என்ற சந்தேகம் தலைப்பினைப் பார்த்தபோது எழுந்தது ;-)

சி. பா. ஆதித்தனார் படிக்கும் வழக்கத்தை வேர்வரைக்கும் கொண்டு சென்றவர் என்று வாசித்திருக்கிறேன். ஆனாலும், சி. பா. ஆதித்தனான், கென்னடி செத்தார் என்பது உறுதியாகமுன்னால், தானே "கென்னடி மரணம்" என எழுதியிருந்தால், அது குற்றம்.

மாயவரத்தான் said...

'தமிழர் தந்தை' என்றழைக்கப்படும் அமரர் சி.பா. ஆதித்தனாரின் 'இதழாளர் கையேடு' பத்திரிகை உலகில் பிரகாசிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் மட்டுமல்லாமல், பொதுவாக அனைவருக்குமே உபயோகமான நூல். 'நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால் தான் செய்தி' என்பது போல பல சுவையான, நறுக்குத் தெறித்த வார்த்தைகளில் பத்திரிகைகளில் எழுதுவது குறித்த அவரது கருத்துக்கள் சிம்ப்ளி சூப்பர்!

இப்போது ராணி ஆசிரியரும் அம்ரர் ஆதித்தனாரின் பிரதான சீடர்களில் ஒருவருமான அ.மா.சாமி (குரும்பூர் குப்புசாமி & அல்லி) 'ஆதிதனார் நூற்றாண்டு விழா'வை முன்னிட்டு 'தமிழர் தந்தை அமரர் ஆதித்தனார்' என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். படித்துக் கொண்டிருக்கிறேன். (நவமணி பதிப்பகம் வெளியீடு : navamanipathippakam@yahoo.com, சென்னை : 044 ௨43 40 523). 'நாம் தமிழர்' போராட்டம் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு சில தகவல்கள் மட்டும் மீண்டும் மீண்டும் வேறு ஆட்களின் வார்த்தைகளில் சொல்லப்படுவதாக வெளியாகியிருப்பது தான் ஒரு குறை.

சென்னை மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை எழுப்பி கிட்டத்தட்ட 15000 பேரிடம் கையெழுத்து வாங்கி போராட்டமெல்லாம் நடத்தினார். பிறகு சட்டசபைத் தலைவராக ஆதித்தனார் இருந்த போது தான் 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது முக்கியமானதாகும்.

அப்புறம் டோண்டு சார்.. கன்னித்தீவு குறித்து கேள்வி எழுப்பினீர்களே.. .அந்த கன்னித் தீவு கதை குறித்து தனியாகவே ஒரு தொடர் பதிவு போடலாம். ராணி ஆசிரியர் அ.மா.சாமியின் கை வண்ணத்தில் வரும் கன்னித் தீவிற்கு உலகம் உல்ல வரைக்கும் தொடரும் போல!! (இதுவரை கன்னித்தீவிற்கு நான்கு/ஐந்து ஓவியர்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு ஓவியர் வரைந்து கொண்டிருக்கும் போதே அதே ஸ்டைலில் வரைய அடுத்து ஒருவருக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறதாம்!)

மாயவரத்தான் said...

//எப்படி தினத்தந்தி உருவானது, எந்த மாதிரியான காலகட்டத்தில் ஆதித்தனார் இதை ஆரம்பித்தார் என்பதைப்பற்றியும் எழுதியிருந்தால் என் போன்றோருக்கு இன்னும் உதவியாக இருந்திருக்கும்//

நீங்களிருக்கும் சிங்கப்பூரிலிருந்து கிளம்பி தமிழகம் வந்து தினத்தந்தியை ஆதித்தனார் தொடங்கிய கதையை மேற்படி நூலில் அ.மா.சாமி சுவை பட எழுதியிருக்கிறார், குழலி!

மாயவரத்தான் said...

'தேசப் பிதா' என்று மகாத்மா காந்தியை அழைக்கவில்லையா? ஒரு தேசத்துக்கே எப்படி ஒருவர் தந்தையாக இருக்க முடியும் என்ற அநாகரிக கேள்வியா கேட்பீர்கள்? அதே போல தான் இதுவும். மாற்றபடி உண்மையிலேயே அவர் தமிழர்களின் நலனுக்காக அரும்பாடு பட்டவர் என்பதில் சந்தேகமேயில்லை. (ஒரு சில விஷயங்களில் தினத் தந்தியின் அணுகுமுறை எனக்கு பிடிக்காவிட்டாலும்) இன்றைய காலகட்டத்தில் தமிழில் இத்தனை பத்திரிகைகள் வந்திருப்பதற்கு பெரும் காரணம் அவர்(அவரும்) தான் என்பதில் மிகையல்ல. மற்றபடி பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் 'அடை மொழிக்கும்' நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமேயில்லாத இன்றைய அரசியல்வா(ந்)திகளைப் போல அல்ல அவருடைய பட்டம். அதனை கொச்சைப்படுத்தாதீர்கள். (நீங்களும் தமிழர் தானே?!)

dondu(#11168674346665545885) said...

நன்றி மாயவரத்தான் மற்றும் குழலி.

எல்லா தரப்பு மக்களுக்கும் பத்திரிகை வாசிப்பைப் பழக்கப்படுத்தியது / பழக்கப்படுத்துவது தினத்தந்தியே என்று கூறுவதில் தமிழன் என்ற முறையில் நான் பெருமை அடைகிறேன். சும்மா சொல்லப்படாது அம்மனிதரின் தோற்றமே கம்பீரமானது. மரியாதை உணர்ச்சியைப் பார்ப்பவர்களிடம் வரவழைப்பது.
தினத்தந்தியின் சொற்றொடர்கள் பிரபலம்: "துடிதுடித்து சாவு" "18 வயது அழகி கற்பழிப்பு" "சதக் சதக் என்று குத்தினார்" ஆகியவையே. அதையெல்லாம் ஒரு ரிக்க்ஷாக்கரர் ராகம் போட்டு படிக்க மற்றவர்கள் ஆர்வமாகக் கேட்பது கண்கொள்ளா காட்சி.
ஆனால் ஒன்று இவையெல்லாம் பிடிக்காத ஒரு கூட்டமும் இருந்தது. தினத்தந்தியை விரும்பிப் படித்தாலும் அவர்கள் அதை ரகசியமாகவே செய்தனர். எது எப்படியானாலும் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் தினத்தந்தியையோ அதன் நிறுவனரையோ பற்றி யாரும் ஏதும் கூறாமல் மறைக்க முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

I repeat my comment on http://penathal.blogspot.com/2005/06/blog-post_16.html:

குழலி - தினத்தந்தி குறித்தான உங்கள் கருத்துடன் நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன். மத்திய, அடித்தட்டு மக்களில், வட இந்திய மக்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் அன்றாட செய்தித்தாள் படிப்பது. அதை நிகழ்த்தியது தினத்தந்தி தான் என்பதில் துளியும் ஐயமில்லை!!

Anonymous said...

நல்ல பதிவு! பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தலைவா. தெரியாத பல விசயங்கள் உன்னால் அறிந்தோம். நன்றி!

dondu(#11168674346665545885) said...

அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் கன்னித்தீவு முடியவில்லை போலிருக்கிறதே! :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது