நிரந்தர பக்கங்கள்

11/30/2005

வீடணன் மற்றும் கும்பகர்ணன்

வீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு தனிப்பதிவு போட வந்தேன்.

முதலில் பின்புலம் என்னவென்று பார்ப்போம். ராமர் மற்றும் கிருஷ்ணரை பார்ப்பனர்களாகப் பலர் இங்கு பார்த்து அவ்வாறே எழுதியும் வருகின்றனர். முதலில் இதை சந்தேகத்துக்கிடமின்றி தீர்த்துக் கொள்வோம். ராமர் ஷத்திரிய வகுப்பை சேர்ந்தவர், கிருஷ்ணர் வைசியர் (விவசாய, வாணிக வகுப்பு). ராவணன் வகையறாக்கள்? அவர்கள்தான் பார்ப்பனர்கள்.

இத்தருணத்தில் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்கள் சமீபத்தில் 1961-ல் கூறியது நினைவுக்கு வருகிறது. அதாகப்பட்டது, "ஈ.வே.ரா. அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ள நினைத்தார். திராவிடனான ராவணன் பெயரை வைத்து தன் பெயரை ராவணசாமி என்று மாற்றிக் கொள்ள விரும்பினார். அப்போது அவரிடம் கூறப்பட்டது, அதாவது ராவணன் பார்ப்பனன் என்று. சரி அப்படியானால் ராமசாமியாகவே இருந்து விட்டுப் போகிறேன்" என்றார்.

மேலே எழுதுவதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேனே. முக்கால்வாசி இந்த நிகழ்ச்சி ஒரு அபோக்ரிஃபல் என்ற வகையைச் சேர்ந்த கற்பனையாகவே எனக்கு இப்போது படுகிறது. இருந்தாலும் இங்கே அதை போடுவதற்கு காரணம் தமிழகத்தில் இதே தவறுதான் பலரும் செய்வது.

நிற்க. வீடணன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றிப் பேசுவோமா? இருவருமே நல்லவர்கள். இருவருக்குமே ராவணன் மற்றும் இலங்காபுரியின் நலன் பற்றி அக்கறை உண்டு. எல்லா சிறப்புகளும் பெற்ற ராவணன் சீதையை அபகரித்து வந்ததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதைக் கையாண்ட முறையிலேயே வீடணன் மற்றும் கும்பகர்ணன் மாறுபடுகின்றனர்.

சீதையைக் கடத்தி வந்த போது கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வீடணன் தன்னால் முடிந்தவரை ராவணனுக்கு அறிவுறை கூறினான். ராவணன் அவனை மிகவும் இழிவு செய்ய, வேறு வழியின்றி அவனை விட்டு விலகினான். கவனிக்கவும், அத்தருணத்தில் ராவணன் வலுவான நிலையிலேயே இருந்தான். அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, இங்கு பல பகுத்தறிவாளர்கள் கூறியது போல.

கும்பகர்ணன்? தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது ராவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தான். அப்போது கூட அவனிடம் பிரச்சினை என்னவென்று விவரிக்கப்பட்ட பின்னால் முதலில் அவனும் அண்ணனுக்கு அறிவுறை கூறினானே. சீதை என்ற யமனை கூட்டி வந்து தான் கெட்டதுமன்றி இலங்கையையும் ஏன் ராவணன் அழிக்க வேண்டும் என்றுதானே கேட்டான்? இருப்பினும் அண்ணன் படும் மன வேதனையைப் பார்த்து அவனுக்காக யுத்தம் செய்யப் போனான். அப்போது கூட தான் உயிருடன் திரும்புவோம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லை. ஆகவே அண்ணனிடம் கேட்டுக் கொண்டான், தான் இறந்த பிறகாவது ராமருடன் சமாதானமாகப் போகுமாறு.

கும்பகர்ணன் போர்முனைக்கு வரும்போது வீடணன் அவனைப் பார்க்க சென்றான், அவனையும் ராமர் பக்கம் இழுக்கும் முயற்சியில். அவனைப் பார்த்ததுமே கும்பகர்ணன் வேறு விதமாக நினைத்துப் பதறினான். அவன் கூறினான், "அடேய் தம்பி, நீயாவது பிழைத்து நாங்கள் இறந்த பிறகு இலங்கையைக் காப்பாய் என நினைத்தேனே, என்ன ஆயிற்று, ஏன் இப்பக்கம் வந்தாய்?" பிறகு உண்மை அறிந்து சமாதானம் அடைந்தான். இருப்பினும் ராவணனை விட்டு வர முடியாது என்பதை அன்புடன் வீடணனுக்குக் கூறி அவனை ராமரிடமே திருப்பி அனுப்பினான்.

யார் இதில் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரை இருவரும்தான். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

60 comments:

  1. "மகாபாரத்ததில் ஒதுங்கி இருந்த விகர்ணனைபோல."

    இது என்ன புதுக்கதை? ஒதுங்கி நின்றது யுயுத்ஸு, அதுவும் அபிமன்யு அதர்ம முறையில் கொல்லப்பட்ட அன்றுதான் அதை எதிர்த்து யுத்தகளத்தை விட்டே விலகினான். அதற்கு அடுத்த நாள் சண்டையில் (அன்றுதான் முதன் முதலாக இரவிலும் சண்டை நடந்து, துரோணவதம் நடந்தது), பீமனுக்கும் கர்ணனுக்கும் பலத்த யுத்தம் நடக்க, துரியோதனனின் தம்பிகள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். அவர்களில் விகர்ணனும் ஒருவன். கர்ணனை இங்கு குறிப்படவில்லை, ஏனெனில் அதற்கு தனிப்பதிவே தேவை. அது வேறு தளத்தைச் சேர்ந்தது. இங்கு பின்னூட்டத்தில் வேண்டாம் என்று விட்டுவிடுகிறேன்.

    அவன் இறந்தபோது மட்டும் பீமனே யுத்தத்தை கணநேரத்துக்கு நிறுத்தி, "தம்பி விகர்ணா, உன்னையும் கொல்ல நேர்ந்ததே, மிகக் கொடியதுதான் இந்த யுத்தம்" என்று பிரலாபிக்கிறான்.

    ஒரு வகையில் பார்த்தால் மகாபாரதத்திலும் வீடணன் நிலையும் கும்பகருணன் நிலையும் எடுக்கப்பட்டுள்ளன.

    "ஆக எனது முடிவான பதில்,சற்று குழப்பமான பதில்தான்"
    இதைத்தான் தர்மசங்கடம் என்று கூறுவார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. எது தர்மம் என்பதில் குழப்பம் வரும்போது தர்ம சங்கடம் உருவாகிறது. பலருக்கு அது ஏற்பட்டு விட்டது, யுதிஷ்டரனுக்கும் அது பல முறை ஏற்படுகிறது. வாழ்க்கை எப்போதும் கருப்பு வெளுப்பாக இருக்க முடியாது என்பதைத்தான் இது விளக்குகிறது.

    "ஆக தேர்சக்கரம் ஏன் அப்போதே தரையில் இறங்கவில்லை?"
    இதற்கு உடனடியான பதில் அவனிடம் அப்போது தேர் இல்லை என்பதே. (வேடிக்கையாகத்தான் கூறினேன்). அதாவது அஞ்ஞாதவாசம் என்பதே தான் யார் என்று கூறக்கூடாதுதானே? இந்த இடத்தில் அதற்கே முக்கியத்துவம் தரவேண்டும், அதையே தருமனும் செய்தான். இது பொய்யுடன் சேராது.

    வாய்ம்மை எனப்படுவது யாதொன்றும் தீமையில்லாத சொலல் என்று கேள்விப்பட்டதில்லையா?

    அசுவத்தாமா விஷயத்திற்கு வருவோம். அத்தருணத்தில் துரோணர் பிரும்மாஸ்திரத்தை ஏவும் முயற்சியில் இருந்தார். அதை விட்டிருந்தால் சேதம் எவ்வளவாக இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. தெய்வத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம். செய்ய வேண்டும்.

    இதுதான் தர்ம சூக்ஷ்மம்.

    தெய்வத்துக்காக தகப்பனை துறந்தான் குழந்தை பிரகலாதன். தெய்வத்துக்காக குருவைத் துறந்தான் மஹாபலி. தெய்வத்துக்காக அண்ணனையும், தன் தேசத்தையும் துறப்பதா கடினம்.

    வீடணன் இலங்கை யுத்தம் விரைவாகவும், சுமுகமாகவும் முடிய பாடுபட்டான். அதன்படி இலங்கையையும், இராவணின் புலஸ்திய குலத்தையும் காத்து தானும் நல்வழி ஏகினான்.

    அவனைப் போற்றுவோம்.

    கும்பகர்ணன் அண்ணன் பேச்சு கேட்பது என்ற சின்ன தர்மத்திற்காக இறைவனிடம் அடைக்கலம் என்ற பெரிய தர்மத்தை மறந்தான்.

    இதே தவறைத்தான் தசரதனும் புறிந்தான். அதனால் தசரதனுக்கு வைகுண்ட பிராப்தியில்லாமல் போயிற்று.

    கும்பகர்ணனை விபீஷணனுடன் சம நிலையில் வைப்பது சரியல்ல. வீடணனே உயர்ந்தவன் என்பதே பெரியவர்களின் கருத்து.

    தங்கள் கட்டுரை நன்றாக உள்ளது.

    ஜயராமன்.

    ReplyDelete
  4. முதலில் கதையிலிருக்கும் கடவுள்-மாயாஜாலக் கான்செப்டுகளை எடுத்து விடுவோம். இந்த மாதிரி விவாதங்களில் அது தேவையில்லை.

    இராவணன் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான். அந்தப் பெண்ணின் கணவன் சண்டைக்கு வந்திருக்கிறான். இதுதான் கதைக்களம்.

    இராவணன் செய்தது சரி என்று வாதிடுவது மிகக்கடினம். ஆக இராவணனின் தவறு இங்கு தொடங்குகிறது. வீடணன் அறிவுரை சொல்கின்றான். சரி. இராவணன் கேட்கவில்லை. சரி. அந்த நிலையில் ஒதுங்கியிருப்பதே உத்தமம். எதிரியோடு சேருவது சரியன்று. சேர்ந்த பின்னும் அண்ணனை அழிக்கும் வழியைச் சொல்வது இன்னும் பாதகம்.

    கும்பகருணன் கதையென்ன? போர் ஏற்கனவே தொடங்கியாகி விட்டது. எழுப்பிதான் நடந்ததைச் சொல்கின்றார்கள். அவனும் முதலில் அறிவுரைதான் கூறுகின்றான். இராவணன் கேட்காத போது சண்டைக்குப் போகிறான். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்றான்.

    இருவருமே ஒரு பெண்ணைக் காக்க வேண்டியதற்கான அரசியல் வழிமுறைகளை ஆராயாமை என்ற அறியாமைக் குழியில் விழுந்திருக்கின்றனர். ஆகையால் இருவரிடமும் தப்பு உள்ளது.

    ஆனாலும் எதிரி என்று ஒருவன் வருகையில் நாட்டை விட்டுக் கொடுப்பது முறையாகாது. நாட்டின் அத்தனை ரகசியங்களையும் தெரிந்த வீடணன் அனைத்தையும் ராமனுக்குச் சொல்லும் நிலை.

    இராவணன் நினைத்திருந்தால் வீடணனை அன்றைக்கே கொன்றிருக்கலாம். இருந்தாலும் போ என்று விட்டான். இதிலிருந்து தெரிவது அவனும் நியாயத்திற்குக் கட்டுப்பட்டவன் என்பதே.

    தன்னை ஒருவன் கொல்ல தக்க காரணங்கள் இருந்தும் கொல்லாமல் விட்டவனை கொலை செய்யக் காரணமாக இருந்த வகையில் வீடணன் குற்றவாளியே. அவனுடைய செய்கை உள்ளர்த்தம் பொதிந்ததோ என்றே தோன்றுகின்றது.

    ReplyDelete
  5. தங்கள் கட்டுரை நன்றாக உள்ளது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. "தெய்வத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம். செய்ய வேண்டும்."

    வீடணனுக்கு ராமர்தான் கடவுள் என்று தெரியும். ஆகவே சரணாகதி தத்துவத்துக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்குகிறான். ஆகவே அவன் சிறந்தவன் என்பதில் சந்தேகமே இல்லை. அதையேதான் கும்பகர்ணனும் ஒத்துக் கொள்கிறான்.

    இருப்பினும் கும்பகர்ணன் சிறந்தவன் அல்ல என்பதை என்னால் கூற இயலவில்லை. அவன் ராவணனுடன் சேர்ந்து வதமாவதும் ராம அவதாரத்தின் ஒரு நோக்கம்தானே?

    ஏன இருந்தாலும் அப்பாத்திரத்தையும் சோடையின்றி வருணித்த வால்மீகி மற்றும் கம்பர் பாராட்டுக்குரியவர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. //"தெய்வத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம். செய்ய வேண்டும்."//
    டோண்டு சார்,
    முன்னரே நாட்டாமை கூறிய மாதிரி தெய்வம் என்ற கோணத்தில் பார்த்தால் மட்டுமே விபீடணன் செய்தது சரியென்று ஒத்துக்கொள்ளமுடியும என்பது என் கருத்து.

    ராகவன் சொன்னது போல, வீபிடணன் ஒதுங்கியிருந்திருக்கலாம். ஆனால், ரகசியங்களை சொன்னது தவறு. அல்லது இராமராவது அவனின் அறிவுரைகள் தேவையில்லை என்று சொல்லியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

    பின்னர் திருந்தினாலும், அண்ணனுக்காக பெற்ற தாயையே பழித்த பரதனை என்ன சொல்வது??

    ReplyDelete
  8. "கடவுள்-மாயாஜாலக் கான்செப்டுகளை எடுத்து விடுவோம். இந்த மாதிரி விவாதங்களில் அது தேவையில்லை."

    ஏன் எடுக்க வேண்டும்? அதுவும் கதையைச் சேர்ந்ததுதானே? ஒரு முடிவிற்கு வரும் முன்னால் எல்லா தரப்பையும் ஆராய்வதுதானே முறை?

    வீடணனுக்கு அபயம் அளிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தது சுக்ரீவன். அவன் கூறியது என்னவென்றால் தன் அண்ணனையே கைவிட்டவன் நம்மிடம் எப்படி உண்மையாக இருப்பான் என்பதே. அதைக் கேட்ட ராமன் புன்முறுவல் புரிய, நாக்கைக் கடித்துக் கொள்கிறான் சுக்ரீவன். அது பற்றி பிறகு இன்னொரு பதிவு போடுகிறேன்.

    வீடணன் மற்றும் கும்பகர்ணனிடம் வருவோம். இலங்கையின் நலன் வேறு ராவணனின் நலம் வேறு என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்தது ராவணனே. ஆனாலும் அவரவர் நிலைப்பாட்டில் இவ்விருவரும் சரியே என்பது என் எண்ணம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. "சீதை தீக்குளிப்பு, காட்டுக்கு கர்பிணியாக இருக்கும்போது துரத்தபடல் ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
    என்னால் இவற்றை ஒத்துகொள்ள முடியவில்லை."ராமா நீ தவறு செய்துவிட்டாய்" என்று உரக்க குரல் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது"

    என் நிலையும் அதுவேதான். சற்று விளக்கமாகக் கூறுகிறேன். 1 ஆண்டு தனியாக இருந்தது ராமரும்தானே, ஆதலால் அவரும் அக்கினிப் பரீட்சைக்கு உள்ளகியிருக்க வேண்டும். ஆனால் அதை சீதையே கேட்கவில்லை என்பதுதான் சோகம். ஆணாதிக்கம் அக்காலத்திலேயே தலைவிரித்து ஆடியிருக்கிறது.

    சீதை காட்டுக்கு தனியான போன நிகழ்ச்சியும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சீதையை ராமரால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் நிஜமே. ஆகவே மன்னராக நீடிக்கும் தகுதி அவருக்கு இல்லை. அவர்தான் பதவியைத் துறந்திருக்க வேண்டும் என்று நான் என் டில்லி நண்பர் சர்மாவிடம் கூறிக் கொண்டிருந்த அன்றுதான் ராமானந்த் சாகரின் உத்திர ராமயணத்தில் அன்று அந்த நிகழ்ச்சி காட்டப்பட்டது. என்ன ஆச்சரியம், சாகரின் ராமாயணத்தில் நான் சொன்ன அதே நிலைப்பாட்டைத்தான் ராமர் எடுக்கிறார். ஆனால் சீதைதான் அதை மறுத்து தானே காட்டுக்குச் செல்வதாக எபிஸோட் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரம் ராமாயணத்தில் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என் மனதுக்கு அது ஆறுதலாக இருந்ததே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. நன்றி ஜோசஃப் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. "இராமராவது அவனின் அறிவுரைகள் தேவையில்லை என்று சொல்லியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்."

    வீடணன் துணையின்றியே ராமர் வெற்றி பெற்றிருக்க முடியும்தான். இருப்பினும் அவன் உதவியை பெற்றதால் யுத்தம் சீக்கிரம் முடிவுக்கு வர முடிந்தது. நினைவிருக்கட்டும், பரதனை வேறு தீக்குளிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அவ்வளவு சீக்கிரம் முடிந்தும் அனுமன் மூலம் முதலில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டியிருந்தது!!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. ஒரு technical திருத்தம் குறிப்பிட விரும்புகிறேன்.

    ராமன் க்ஷத்திரியன். கிருஷ்ணன் யாதவன் என்று எழுதியுள்ளீர்கள். க்ஷத்திரியன் என்பது வர்ண்ம் (அதாவது பிறிவு. "பகுத்தறிவாளர்கள்" திரிப்பது போல கலர் அல்ல) ஆனால், யாதவன் என்பது சாதி.

    கிருஷ்ணன் வைசியன் (விவசாய, வாணிக வகுப்பு) என்பதே சரி.

    இந்து மதத்தில் சாதி இல்லை. வகுப்பு உண்டு. இப்போது நடைமுறையில் இருக்கும் சாதிப் பிரிவுகள் இந்து சாத்திரத்திலிருந்து விலகியவையே.

    இதை திருத்தி தவறான எண்ணத்தை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  13. தங்கள் கருத்துக்கு நன்றி கல்பனா ஸ்ரீராம் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. "கிருஷ்ணன் வைசியன் (விவசாய, வாணிக வகுப்பு)"

    திருத்தி விட்டேன் ஜயராமன் அவர்களே, நன்றி. ஆனால் ஒரு சந்தேகம், யாதவ குலம் என்று மாகாபாரதத்திலேயே வருகிறதே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. "கம்சன் =அசுரன்
    அவன் தங்கை தேவகி எப்படி அசுரப் பெண் இல்லாமல் போனாள்?"

    நல்ல கேள்வி. இதற்கும் விடை பாகவதத்தில் உண்டு. கம்சனுக்கு அசரீரி நடக்கப் போவதை பற்றிக் கூறும் முன்னால் அவன் சாதாரண மனிதன்தான். தேவகியைச் சிறையில் அடைத்தப் பிறகு நாரதர் அவனிடம் அவன் பூர்வ ஜன்மத்தில் காலநேமி என்ற அரக்கன் என்பதை நினைவுபடுத்தி ஒரு வழி பண்ணி விடுகிறார். அப்போதிலிருந்து அவன் அரக்க அம்ஸம் பெறுகிறான்.

    இதில் இன்னொரு விஷயம். முன் பிறவியில் அவனூக்கு 6 பிள்ளைகள். அவர்களுக்கு தங்கள் தந்தையின் கையால்தான் அடுத்தப் பிறவியில் மரணம் என்ற சாபம் வேறு. அவர்கள்தான் தேவகிக்கு இப்பிறவியில் முதல் 6 பிள்ளைகளாகப் பிறக்க, கம்சனால் கொல்லப்படுகிறார்கள். ஏழாவது பிள்ளை பலராமர். அவரை தேவகியின் கருவிலிருந்து பலராமனின் இன்னொரு மனைவி ரோகிணியின் கருவில் விட்டு விடுகின்றனர். எட்டாவதாக நம்ம வாத்யார் கிருஷ்ணன் பிறக்கிறார். இது தகவலுக்கு மட்டுமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. வர்ணம் என்பது கலர் என்பது தமிழில்.

    வடமொழியில் வர்ணம் என்பதன் முக்கிய பொருள் "பிறிவு". கலர் என்கிற பொருளும் உண்டு.

    தமிழ் சமுதாய குழப்பங்களுக்கு முக்கிய காரணம் தமிழ் மொழி வடமொழியிலிருந்து விலகி இருப்பதனால் ஏற்படும் குழப்பங்கள் (சில தவறான அபிப்ராயங்களால். பல சுயநல அடிப்படையில் ஏற்படுத்திய குழப்பங்களால்).

    உதாரணத்திற்கு, வடமொழியில் காமம் என்றால் ஆசை என்று அர்த்தம். வீடு வாங்க காமம் என்பது மாதிரி. தமிழில் இதற்கு குறுகிய பொருள் கொள்ளப்படுகிறது.

    வடமொழியில், கேவலம் என்றால் தனித்து என்று பொருள். தமிழில் சம்பந்தமேயில்லாமல் ஏதோஒன்று பொருளாகின்றது.

    இதுபோல பல.

    நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  17. குலம் என்பதே வம்சம்.

    இதுவே திரிந்து சாதியானது என்று எண்ணுகிறேன்.

    இந்து மத பிரகாரம் வர்ணத்துக்குள் பிரிவில்லை. வடகலை, ஐயர், பூசாரி, கன்னட பார்ப்பான், பீகார் மிஸ்ரா, குஜராத் பட் எல்லோரும் ஒன்றுதான்.

    அதேபோல், செட்டி, தேவன், முதலி, வன்னி, பிள்ளை, யாதவ், குப்தா, மார்வாடி எல்லோரும் ஒன்றுதான்.

    நன்றி.

    ஜயராமன்

    ReplyDelete
  18. "/பின்னர் திருந்தினாலும், அண்ணனுக்காக பெற்ற தாயையே பழித்த பரதனை என்ன சொல்வது?? /

    ராமநாதன்,
    தந்தையை கொன்று,அண்ணனை காட்டுக்கு அனுப்பிய தாயை பழிக்காமல் என்ன செய்வது?"

    இது பற்றி என்னார் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
    http://ennar.blogspot.com/2005/08/blog-post_23.html

    கைகேயி பற்றி நான் வாய்ஸ் ஆன் விங்க்ஸின் ஆங்கிலப் பதிவு ஒன்றில் கீழ்க்கண்டப் பின்னூட்டம் இட்டேன். பார்க்க:
    http://voiceonwings.blogspot.com/2005/02/kaikeyi-mother.html#comments

    "Actually, Kaikeyi is a complex character. She loved Rama very much and her love was returned, till the day of her asking the boons. In fact, when Mantara tells her of the impending coronation of Rama, her first reaction was unadultrated joy. It was only after Mantara's ill-advise that she turned against Rama. Here we have to see the inevitable hand of fate. Just consider. Had she not asked these boons, Rama would have become king and Sita would not have been abducted. Then how could Ravana be killed? After all that was the aim of Ramavatar.
    Once the banishment of Rama becomes irreversible, Kaikeyi wakes up from her dream and she is the most distressed person in Ayodhya. She accompanies Bharat to the forest and begs Rama to return.

    There is another version to the events in one of the Ramayanas. It seems that Shani Bhagwan comes to her in disguise and tells her that he was going to cast his spell on Ayodhya for the next 14 years. Kaikeyi, not wanting to have her beloved Rama face problems, decides to put her own son at the helm of affairs, so that any problem on account of Shani will not touch her beloved Rama. How about it?"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. "நம்ம இஷ்டத்துக்கு இதிகாசாங்களை திரிப்பது சரிதானா? உள்ளதை உள்ளவாறே கூறுவதில் என்ன பிரச்சனை?"
    சரியில்லைதான். இருப்பினும் என் அப்பன் ராமன் தவறு செய்தான் என்பதைப் பார்க்க என் மனம் இடம் கொடுக்கவில்லையே? நீரில் மூழ்குபவன் சிறுதுரும்பையும் பற்றுவது இதுதான் போலும். இதனால் நான் அஞ்ஞானி என்று யாரேனும் கூறலாம். அப்படியே இருக்கட்டும், எனக்கு கவலையில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. "இந்து மத பிரகாரம் வர்ணத்துக்குள் பிரிவில்லை. வடகலை, ஐயர், பூசாரி, கன்னட பார்ப்பான், பீகார் மிஸ்ரா, குஜராத் பட் எல்லோரும் ஒன்றுதான்.

    அதேபோல், செட்டி, தேவன், முதலி, வன்னி, பிள்ளை, யாதவ், குப்தா, மார்வாடி எல்லோரும் ஒன்றுதான்."

    என் கருத்தும் அதுவேதான் ஜயராமன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. கலருக்கும் வர்ணத்திற்கும் சம்பந்தமில்லை.

    இந்த எண்ணம் யாரால் ஏன் ஏற்பட்டது என்பது பெரிய controversial விழயம்.

    இராவண பார்ப்பனன் கருப்பு. அவனை எதிர்த்த இராமன் கருப்பு. இராமனுக்கு சேவை புறிந்த இலக்குவன் சிகப்பு.

    மேலும், அரக்கன் என்பது சுபாவத்தாலும், குணத்தாலும், சாபத்தாலும் ஏற்படுவது. வர்ணம் அன்று.

    இராவணன் அரக்கன். அவன் தந்தை சான்றோர் போற்றிய ரிஷி.

    புரிந்ததா?

    நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  22. டோண்டு இராகவன் அவர்களே,

    இராமன் பிழையேதும் செய்யவில்லை. அவ்வாறு எண்ணி இராமனை cover செய்ய முயலுவது அறியாமை.

    தங்களின் இரண்டு விழயங்களைப் பற்றி பூர்வாசாயார்கள் சிறிதும் ஐயமில்லாமல் விளக்கியிருக்கிறார்கள். இப்போது அலுவலகத்தில் உள்ளதால் எழுத நேரமில்லை. பிறது பின்னூட்டமிடுகிறேன்.

    நன்றி.

    ஜயராமன்

    ReplyDelete
  23. "இராவண பார்ப்பனன் கருப்பு. அவனை எதிர்த்த இராமன் கருப்பு. இராமனுக்கு சேவை புறிந்த இலக்குவன் சிகப்பு.
    மேலும், அரக்கன் என்பது சுபாவத்தாலும், குணத்தாலும், சாபத்தாலும் ஏற்படுவது. வர்ணம் அன்று.
    இராவணன் அரக்கன். அவன் தந்தை சான்றோர் போற்றிய ரிஷி.
    புரிந்ததா?"

    எனக்கும் அது தெரியும். ஆனால் பகுத்தறிவுப் பகலவர்களுக்கு யார் புரிய வைப்பது? ராவணன் மற்றும் கும்பகருணனை கொன்றதால் வந்த பிரும்மஹத்தி தோஷத்தைப் போக்க ராமர் பிராயச்சித்தம் செய்ய வேண்டியிருந்ததே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. "தங்களின் இரண்டு விழயங்களைப் பற்றி பூர்வாசாயார்கள் சிறிதும் ஐயமில்லாமல் விளக்கியிருக்கிறார்கள். இப்போது அலுவலகத்தில் உள்ளதால் எழுத நேரமில்லை. பிறது பின்னூட்டமிடுகிறேன்."

    படிக்கக் காத்திருக்கிறேன்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. "நமக்கு பிடித்தமானவர்களை அப்படியே அவர்களுடைய நிறைகுறைகளோடு ஏற்றுகொள்ள வேண்டும். நமக்கு வேண்டியதை போல பிடிப்பதற்கு அவர்களொன்றும் களிமண்ணிலிருந்து பிடிக்கும் பொருள் அல்ல.."

    இதுதான் எனது அஞ்ஞானம் என்று பலர் கூறுவர். ஜயராமன் அவர்கள் விளக்கம் வரட்டும். என் அப்பன் ராமன் தவறு செய்யவில்லை என்பதைக் காண ஆசையுடன் உள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. excellent interpretations by all who wrote back. Thanks Gondu for this topic. But, the prolem is- teh so called `intellects'- do they come out of their own politics and read e-magazines, especialy such articles? Then why we elaborate this theme? Should not a message reach all especially the 'negative shaded guys' ? (Hope this is not varnam!!). With expectations,
    Chandrasekaran

    ReplyDelete
  27. நன்றி சந்திரசேகர் அவர்களே. நான் குறிவைப்பது இணையத்திலேயே சுறுசுறுப்பாய் இருக்கும் பகுத்தறிவுப் பகலவர்களையே.

    இப்போது பாருங்கள் வேடிக்கையை, சீறிக் கொண்டு வரும் பின்னூட்டங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. // "கடவுள்-மாயாஜாலக் கான்செப்டுகளை எடுத்து விடுவோம். இந்த மாதிரி விவாதங்களில் அது தேவையில்லை."

    ஏன் எடுக்க வேண்டும்? அதுவும் கதையைச் சேர்ந்ததுதானே? ஒரு முடிவிற்கு வரும் முன்னால் எல்லா தரப்பையும் ஆராய்வதுதானே முறை? //

    டோண்டு, பிரச்சனையே இங்குதான் வருகிறது. கடவுள் கான்செப்ட் வந்து விட்டால் எல்லாமே சரியென்றே ஆகிவிடும். சமயங்களில் எல்லாமே சரியென்பதற்காகவே கடவுள் கான்செப்டுகள் வருவதுண்டு. உலகம் முழுதும் நடப்பதுதான் இது.

    ஆகையால் கடவுள் கான்செப்டை நீக்கிப் பார்ப்பதே சிறந்தது என்பது என் கருத்து. கடவுள் கான்செப்டை நீக்கிப் பார்த்தாலும் அது சரியென்றே வரவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

    // வீடணன் மற்றும் கும்பகர்ணனிடம் வருவோம். இலங்கையின் நலன் வேறு ராவணனின் நலம் வேறு என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்தது ராவணனே. ஆனாலும் அவரவர் நிலைப்பாட்டில் இவ்விருவரும் சரியே என்பது என் எண்ணம். //

    பிறன்மனை கவர்ந்த குற்றம் என்பது ஒத்துக் கொள்ளப்பட்டதே. இராவணனின் அந்தக் குற்றத்தை யாரும் மறைக்கவில்லை. பிரச்சனை வீடணன் மற்றும் கும்பகருணன் பற்றியது. ஆகையால் அந்தக் கோணத்திலேயே போகலாம்.

    இல்லை. இராவணனின் குற்றம் என்ற கோணத்தில் ஆராய வேண்டுமெனில்,

    1. இராவணன் செய்தது குற்றம்.
    2. சீதையைக் கொண்டு வந்தது அந்தக் குற்றம்.
    3. சீதையை அவன் பாராமல் இருந்திருந்தால் அந்தக் குற்றத்தைச் செய்திருக்க மாட்டான்.
    4. அந்தக் குற்றத்தைத் தவிர வேறு குற்றம் இராவணன் மீது சாற்றுவார் இல்லை.
    5. அப்புறம் ஏன் அவனை அழிக்க வேண்டும்.
    6. ஆனால் இராமாவதாரமே இராவணை அழிக்க. (கடவுள் கான்செப்ட்)
    6. ஆக இராவணன் குற்றம் செய்யும் முன்னரே அவனை அழிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதை எப்படிச் சரிக்கட்டுவது?
    7. இராவணன் இலங்கை அரசனாகும் முன்னால் வைகுண்டத்தில் இருந்தான். சாபத்தால் கீழே வந்தான். (இன்னொரு கடவுள் கான்செப்ட்).
    இப்படி எங்கெல்லாம் கதையை மீறிய ஓட்டைகள் வருகிறதோ...அங்கெல்லாம் கடவுள் கான்செப்ட் போட்டுப் பூசி விடுகிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.)

    அதனால்தான் நான் வீடணன் கும்பகருணன் என்ற வகையிலேயே பேசினேன். இருவருமே அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்தத் தவறி விட்டனர் என்ற உண்மை சுடத்தான் செய்கிறது.

    தாயை இகழ்ந்தமை பற்றி இராமநாதன் கேட்டிருந்தார். அந்தச் சூழ்நிலை அப்படி. ஒரு பெரிய குழப்பம் வருகிறது. அந்தச் சூழலில் தாயைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா?

    அதே போல என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத இன்னொரு விஷயம் சீதையைத் தீக்குளிக்க வைத்தமை. அதைத் தாங்க மாட்டாமல் நான் எழுதிய கொளுத்துவோம் என்ற கதை இந்த லிங்கில் உள்ளது.
    http://gragavan.blogspot.com/2005_06_01_gragavan_archive.html

    // சாகரின் ராமாயணத்தில் நான் சொன்ன அதே நிலைப்பாட்டைத்தான் ராமர் எடுக்கிறார். ஆனால் சீதைதான் அதை மறுத்து தானே காட்டுக்குச் செல்வதாக எபிஸோட் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரம் ராமாயணத்தில் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. //
    டோண்டு இது தொடர்பாக நான் ராமானந்த சாகரின் பேட்டியைக் குறிப்பிட விரும்புகிறேன். அவருக்குப் பல பெண்கள் லெட்டர் போட்டு, ராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்புகிற மாதிரி எடுக்க வேண்டாம் என்று சொன்னார்களாம். அதனால் கதையை அந்த மாதிரி மாற்றி விட்டார்களாம்.

    ReplyDelete
  29. இராவணன் பார்ப்பான் - இது எனக்கு செய்தி.

    தயவு செய்து, இன்னும் தெரிந்த பார்ப்பன மன்னர்களை சொல்லுங்களேன்.


    மற்றபடி உங்களின் இந்த பதிவையும், மற்ற பின்னூட்டங்களையும் பார்க்கும் போது...

    1. ஒரு கருத்தை சொல்லி, விவாதித்து பிறகு அதன் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளல். இதுவே தர்மம்.

    2. //இப்போது பாருங்கள் வேடிக்கையை, சீறிக் கொண்டு வரும் பின்னூட்டங்கள்.//
    இதை வெறும் பின்னூட்டங்களுக்காகவே குறுகிய மனப்பாண்மையோடு சொல்லியதாக நினைக்கிறேன்.

    3. இப்படி நீங்கள் சொல்லியதால் நீங்கள் குறிவைத்தவர்கள் உங்களை அசட்டை செய்யும் நோக்கில் கவனிக்கப்படாதமாதிரி நடித்து விடலாம்.

    4. அதனால் இக்குறிப்பை மற்றவர் படிக்கும்போது வெறும் பதிவு + அடிவருடிகளின் பின்னூட்டம் என தவறாக நினைத்துவிட வாய்ப்புண்டு.


    நன்றி,

    -பூங்குழலி

    ReplyDelete
  30. "//இப்போது பாருங்கள் வேடிக்கையை, சீறிக் கொண்டு வரும் பின்னூட்டங்கள்.//
    இதை வெறும் பின்னூட்டங்களுக்காகவே குறுகிய மனப்பாண்மையோடு சொல்லியதாக நினைக்கிறேன்."

    கண்டிப்பாக இல்லை. வேண்டிய அளவுக்கு பின்னூட்டங்கள் வந்து விட்டன, அவற்றை மோகித்தக் காலமும் போய் விட்டது. எதிர்ப்பு வரும் என்று தெரியும் போது, அதற்கு நான் தயார் என்று இருப்பதைத்தான் இங்கு கூற நினைத்தேன்.

    "ஒரு கருத்தை சொல்லி, விவாதித்து பிறகு அதன் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளல். இதுவே தர்மம்."
    ஏன், agreeing to disagree என்று கேள்விப்பட்டதில்லையா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. "ஆனால் இராமாவதாரமே இராவணை அழிக்க. (கடவுள் கான்செப்ட்).
    ஆக இராவணன் குற்றம் செய்யும் முன்னரே அவனை அழிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதை எப்படிச் சரிக்கட்டுவது?"

    அதுவும் சம்பந்தப்பட்ட இரு துவார பாலகர்களும் விஷ்ணுவை வேண்டிக்கொண்டபடித்தான் நடந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பின் குறிப்பு: உங்கள் கொளுத்துவோம் என்ற கதை மிக அருமை.

    ReplyDelete
  32. திரு இராகவன் அவர்களுக்கு,

    தங்கள் பின்னூட்டத்தில் பல இடங்களில் பொருட்பிழை உள்ளது. அதை சுட்டிக்காட்டவே இந்த சிறு பின்னூட்டம்.

    1. இராமன் தன்னை எப்போதும் இறைவன் என்று நினைத்ததில்லை. நடந்த்துமில்லை. இராமாயண காதையில் எல்லா பாத்திரங்களையும் "இராமன் மனிதன்" என்ற ஒரு கோணத்திலேயே நியாயப்படுத்தலாம். இந்து மத சாஸ்திர பெரியோர்களின் விளக்கங்கள் மிகவும் உகந்தவை

    அவைகளை அறிந்தால் இம்மாதிரி கருதத் தோன்றாது.

    பிராட்டியை தீப்புகுத்த முற்படுகையில் பிரம்மா, சிவன் என எல்லோரும் இராமனை தடுக்கிறார்கள். "நீ இரைவன். தேவி இலக்குமி" என்று பல முறை கூறியும் இராமன் ஏற்க மறுக்கிறான். நான் மனிதனே என்கிறான்.

    இதனால்தான் சொல்கிறேன். கும்பகர்ணன், வீடணன் இவர்களின் நடவடிக்கைகள் இராமன் இறைவன் என்பதால் மட்டுமல்ல, மனிதன் என்கிற தோரணையில்கூட சாலச் சிறந்தவை.

    2. தேவி தீக்குளித்த பின் இராமன் இதற்கான காரணத்தை விபரிக்கின்றான். அதை கேட்போருக்கு இராமன் மீது எந்த ஐயமும் தோன்ற வாய்ப்பில்லை.

    ஆனால், தீக்குளிக்கும் படலத்தை கேட்ட பெரும்பாலோர் இராமாயணத்தை முழுதாக அறியாதலால் இம்மாதிரி கருதுகிறார்கள். (தங்களை சொல்லவில்லை).

    இராமன் பிராட்டியிடம் எப்போதுமே எள்ளளவும் சந்தேகம் கொண்டதில்லை என்கிறான். தேவி, உலகத்திற்கு உன் தூய்மையை உணர்த்தவே இவ்வாறு நாடகமாடினேன்" என்கிறான்.

    இராமன் நடவடிக்கைகளை இராமன் கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். இராமன் உலகத்திற்காக வாழ்ந்தவன். உலகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக மனைவி, அரசு எல்லாவற்றையும் துறந்தவன்.

    3. இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல. அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன் கொடுத்தாரே அவரேதான்)உடையது. அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக் கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக கூறப்பட்டுள்ளது.

    ஆதலால், தங்கள் நியாயப்படி பார்த்தால், வீடணன் இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா support செய்ய வேணும்.

    3. இராவணனின் death certificate முதலிலேயே எழுதப்பட்டு விட்டது என்பது சறியே. ஆனால், காரணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்களா என்பது எனக்கு தெளிவில்லை.

    இராவணன் செய்த அட்டூழியங்கள் எண்ணிலடங்கா. சீதையை அபகரித்த்து மட்டும் அவன் தீய செயல் என்று நீங்கள் கருதுவது தவறு.

    அவன் இறைவனோ, தேவதையோ அல்ல (இதை நீங்கள் எப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை).

    இராவணன் இரம்பாவை மானபங்க படுத்த பார்க்கிறான். குபேரன் மனைவியிடம் முறை தவறுகிறான். இதனால் சாபம் பெருகிறான். இதுவும் இராமாயணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    அவன் தன் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து கொண்டு பலப்பல வருடங்கள் முனிவர், தேவர்களுக்கு தீங்கிழைக்கிறான்.

    நீண்டு விட்டது. நிறுத்திக்கொள்கிறேன்.

    நன்றி.

    ஜயராமன்.

    ReplyDelete
  33. "இராவணன் செய்த அட்டூழியங்கள் எண்ணிலடங்கா. சீதையை அபகரித்த்து மட்டும் அவன் தீய செயல் என்று நீங்கள் கருதுவது தவறு.
    அவன் இறைவனோ, தேவதையோ அல்ல (இதை நீங்கள் எப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை)."

    நான் அவ்வாறு எங்கும் எழுதவில்லையே. உத்திர ராமாயணத்தில் ராவணன் செய்த தீய செயல்கள் எல்லாம் விலாவாரியாகப் படித்துள்ளேன். ஆனால் ஒன்று. சீதையைக் கவராதிருந்தால் ராமர் அவனைக் கொன்றிருக்கப் போவதில்லை என்பதும் நிஜமே. ஆகவே மர்ற துர்செயல்கள் இரு கோடுகள் கோட்பாட்டில் அடிபட்டுப் போயின என்றுதான் கூற வேண்டும்.

    "இராவணனின் death certificate முதலிலேயே எழுதப்பட்டு விட்டது என்பது சரியே. ஆனால், காரணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்களா என்பது எனக்கு தெளிவில்லை."
    எனக்கு அது தெரியும். கோ. ராகவன் அவர்கள் பின்னூட்டத்துக்கான பதிலில் வைகுண்டக் கதையைக் குறிப்பிட்டு விட்டேன். அத்துடன் கூட ராவணனே தன் வரத்தின் மூலம் மானிடன் கையால்தான் சாவு என்ற செட்டிங்கைப் பெற்று விட்டானே.

    "ஆதலால், தங்கள் நியாயப்படி பார்த்தால், வீடணன் இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா support செய்ய வேணும்."
    குபேரனுடன் போரிட்டுத்தான் ராவணன் இலங்கையை வென்றான். சீதையைத் திருட்டுத்தனமாகக் கவர்ந்தான். இரண்டும் எப்படி ஒன்றாகும்?

    குபேரனும் இந்திரஜித்தைக் கொல்லும் அஸ்திரத்தை பற்றி இலக்குவனுக்குக் கூறியதாகவும் படித்த ஞாபகம்.

    சீதை அக்னிப் பிரவேசத்தைப் பற்றி நான் எழுதியது என் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே. வனவாசத்தின் கடைசி பகுதியில் உண்மை சீதை அக்னி வசம் பாதுகாப்பாகச் செல்ல, மாயசீதையைத்தான் ராவணன் கவர்ந்தான் என்றும் ஒரு வெர்ஷன் கூறுகிறது. நல்ல வேளை ராவணன் அது தெரியாமலேயே செத்தான். இல்லாவிட்டால் வாழ்க்கையே வெறுத்திருப்பான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. நான் இராவகன் என்று அழைத்தது G,Raghavan அவர்களை.

    அவர் பின்னூட்டத்திற்கு பதில் எழுதினேன்.

    நன்றி.

    ஜயராமன்

    ReplyDelete
  35. "நான் இராவகன் என்று அழைத்தது G,Raghavan அவர்களை."

    அதானே பார்த்தேன். நன்றி ஜயராமன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. //இராவணன் இரம்பாவை மானபங்க படுத்த பார்க்கிறான். குபேரன் மனைவியிடம் முறை தவறுகிறான்.//

    இராவணன் சீதையை அபகரித்தது அக்காலகட்டத்தில் இருந்த போர் மரபுகளில் ஒன்றே.

    இரம்பாவை மானபங்கப்படுத்திய இராவணன், குபேரன் மனைவியிடம் முறை தவறி நடந்த இரவணன் சீதையிடம் மட்டும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டிய காரணம் என்ன? ஆனால் அவ்வாறு நடக்காமல் இருந்ததில் இருந்ததே இராவணன் பெண்கள் விஷயத்தில் உத்தமனாகவே இருந்துள்ளான் என்பதை அறியலாம்.

    இராமாயணம் கட்டுக்கதையே என்றாலும், அது தமிழனின் ஒழுக்கத்தையும் பறைசாற்றியே உள்ளது. சீதையின் அக்னிப்பிரவேசம் அவளின் தூய்மையை மட்டுமின்றி இராவணனின் ஒழுக்கத்தையும் சேர்த்தே பறைசாற்றுகிறது. எனவே இராவணனை தூற்றுவதை நிறுத்துங்கள்.

    ReplyDelete
  37. "இராவணன் சீதையை அபகரித்தது அக்காலகட்டத்தில் இருந்த போர் மரபுகளில் ஒன்றே."
    என்ன உளறல் ஐயா? போர் எங்கே செய்தான் ராவணன்? திருடன் போல அல்லவா நடந்து கொண்டான்? அதைத்தானே கும்பகர்ணன் கேட்டான்?

    "இரம்பாவை மானபங்கப்படுத்திய இராவணன், குபேரன் மனைவியிடம் முறை தவறி நடந்த இராவணன் சீதையிடம் மட்டும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டிய காரணம் என்ன?"
    அப்படி வாரும் வழிக்கு. விருப்பம் இல்லாத பெண்ணைத் தொட்டால் அவன் தலை சுக்கு நூறாய் வெடிக்கும் என்று அவனுக்கு சாபம் அந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் குபேரன் மற்றும் வேகவதி இட்டிருக்கின்றனர். ஆகவே ராவணன் செய்தது ஒன்றும் பெருமை அளிக்கும் விஷயம் அல்ல.

    ராமாயணத்தை சரியாகப் படித்து விட்டு வாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. திரு வெங்காயம் அவர்களின் பின்னூட்டத்திலிருந்து நான் முரண்படுகிறேன். அவர் சரியான நிலையிலிருந்து இக்கதையை பார்க்கவில்லை என்றே எண்ண தோன்றுகிறது.

    1. இராவணன் இரம்பாவினால் சாபமிடப்படுகிறான். "இணங்காத மங்கையிரிடம் கூடினால் தலை தங்காது" என்று. அதனால், அதுவரை பெண்களை இழிவாக நடத்தியவன் சீதையை நெருங்க இயலாமல் வருந்துகிறான்.

    இது வெங்காயம் அவர்கள் முழுதாக படித்ததில்லாதது போல் தோன்றுகிறது.

    2. இராவணன் தமிழன் இல்லை. அவன் பார்ப்பனன். வடமொழி வித்தகன். நான்மறை விடாமல் ஓதுபவன். பெண் லோலன். இவ்வடையாளங்கள் தமிழருடையவா?

    இலங்கையை அவன் குபேரனிடமிருந்து வலுவாக கவர்ந்தவன். அவனைத் தமிழனாக்குவது என்ன பேதமை?

    இராமாயணம் கட்டுக்கதையாக தங்களுக்கு தோன்றினாலும், எப்படி கட்டியிருக்கிறார்கள் என்று தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பதுவே சரி.

    நன்றி.

    ஜயராமன்

    ReplyDelete
  39. //திருடன் போல அல்லவா நடந்து கொண்டான்?//

    //விருப்பம் இல்லாத பெண்ணைத் தொட்டால் அவன் தலை சுக்கு நூறாய் வெடிக்கும் என்று அவனுக்கு சாபம் அந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் குபேரன் மற்றும் வேகவதி இட்டிருக்கின்றனர். ஆகவே ராவணன் செய்தது ஒன்றும் பெருமை அளிக்கும் விஷயம் அல்ல.//

    விருப்பம் இல்லாத பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாய் வெடிக்கும் என்று சாபமிடப்பட்ட ஒருவன், இவ்வாறு செய்தால் தன் தலை வெடிக்கும் என்பதை அறிந்த நிலையில் அவளின் விருப்பம் இல்லாமலேயே கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

    அவ்வாறு கடத்திச் சென்றும் அவன் தலை சுக்குநூறாய் ஏன் வெடிக்கவில்லை. சாபம் பலிக்கவில்லையா? அல்லது சீதை விரும்பிச் சென்றாரா?

    ReplyDelete
  40. "விருப்பம் இல்லாத பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாய் வெடிக்கும் என்று சாபமிடப்பட்ட ஒருவன், இவ்வாறு செய்தால் தன் தலை வெடிக்கும் என்பதை அறிந்த நிலையில் அவளின் விருப்பம் இல்லாமலேயே கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
    அவ்வாறு கடத்திச் சென்றும் அவன் தலை சுக்குநூறாய் ஏன் வெடிக்கவில்லை. சாபம் பலிக்கவில்லையா?"
    விருப்பம் இல்லாத பெண்ணைத் தொடுவது என்றால் அவளை வன்புணருவது என்று அர்த்தம். இது கூட தெரியாமல் பலர் பேசுவது வேடிக்கையே.

    இதில் ஒரு விசேஷம். கம்ப ராமாயணத்தில் ராவணன் அவளைத் தொடாமல் தரையுடன் பேர்த்து எடுத்துச் செல்வதாக எழுதியிருக்கிறார். ஆனால் வால்மீகி அவ்வாறு எழுதவில்லை. அதுதான் உண்மை நிலையை அதிகம் பிரதிபலிக்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  41. ராவணனிடம் அவன் மந்திரி ஒருவன் கேட்கிறான், "அரசே நீங்கள்தான் மாயாவி ஆயிற்றே, ராமன் போல வேடம் தரித்து ஏன் சீதையை அடையக்கூடாது?" என்று. "ராவணன் பதிலளிக்கிறான். "அந்த யோசனை எனக்கும் வந்தது. நானும் ராமனின் ரூபத்தைத் தரித்தேன். ஆனால் அந்தோ அந்த நிமிடமே பிறன் மனையை நோக்கக் கூடாது என்ற எண்ணமும் வந்ததே" என்று.

    "இவ்வாறு செய்தால் தன் தலை வெடிக்கும் என்பதை அறிந்த நிலையில் அவளின் விருப்பம் இல்லாமலேயே கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?"
    அதுதான் ராவணனின் தலைவிதி, தவறு தலைகளின் விதி!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. "சீதை இணங்கிவிடுவாள் என்று ராவணன் பலமாக நம்பியிருந்தான்."

    அதுவும் காரணமே. மேலும் சும்மாவா சொன்னார்கள், விநாச காலே விபரீத புத்தி. அழிவு காலத்தில் புத்தி பிசகும் என்பது தெரிந்ததே.

    இக்கால இளைஞர்களின் அறிவு கூர்மை என்னை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. அவர்களிடம் ஆரிய மாயை ஜல்லியெல்லாம் இனிமேல் செல்லாது என்பது வெள்ளிடை மலை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. //"இவ்வாறு செய்தால் தன் தலை வெடிக்கும் என்பதை அறிந்த நிலையில் அவளின் விருப்பம் இல்லாமலேயே கடத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?"
    அதுதான் ராவணனின் தலைவிதி, தவறு தலைகளின் விதி!!//

    ஆக... தவறு விதியை உண்டாக்கிய கடவுளின் மீதுதானே ஒழிய, இராவணன் மீது அல்ல என்று கூற வருகிறீரோ....

    //சீதை இணங்கிவிடுவாள் என்று ராவணன் பலமாக நம்பியிருந்தான்.தனது செல்வசெழிப்பு,வீரம் ஆகியவற்றை காட்டிபார்த்தான்.ஜனகன் வேஷம் போட்டு அரக்கரை அனுப்பிபார்த்தான்.அரக்கிகளை விட்டு தனது பெருமைகளை சொல்லிகொண்டே இருந்தான்.கடைசியில் ராமனை கொன்றால் சீதை இணங்கிவிடுவாள் என்று நினைத்திருந்தான். //

    இந்தக் கதையும் நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  44. விதி ஒரு பக்கம், சுய விருப்பம் என்பது இன்னொரு பக்கம். இரண்டுமே கடவுள் நமக்கு அருளினதே.

    சிறு உதாரணம் மூலம் விளக்குவேன். மாட்டை ஒரு நீண்ட கயிற்றில் பிணித்து, அக்கயிற்றை ஒரு முளையில் கட்டி புல் வெளியில் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்தானே. அக்கயிற்றின் நீளத்தை ஆரமாக வைத்து அந்த மாடு ஒரு வட்டப் பரப்பில் மேய முடியும். அதற்குள் எவ்வளவு தூரம் மாடு நிஜமாகவே போகிறது என்பது அதன் சுய விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பேசாமல் முளையின் அருகிலேயே படுத்துக் கிடக்கலாம் அல்லது அதிகப்பட்ச பரப்பில் மேயலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. "ராவணனுக்கு சீதை மகள்."
    பிதற்றல்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  46. "Limited freewill என்பதை தான் இந்து மதம் வலியுறுத்துகிறது என நினைக்கிறேன்."

    அதே அதே.

    கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தில் இவற்றையெல்லாம் அழகாக எழுதியுள்ளார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. விதி பெரிதா? மதி பெரிதா?

    விதிப்படியே எல்லாம் நடக்கும் என்றால் முயற்சி ஏன்.

    நல்ல நடவடிக்கையில் நடக்கும் ஒருவனுக்கு கஷ்டம் வருவதேன்?

    இது போன்ற பல குழப்பங்கள் மத சாத்திர அறியாமையால் வருகின்றன.

    இதை விளக்கவே இந்து சாத்திர விளக்கங்களை தொகுத்து என் பதிவில் வழங்கிக்கொண்டிருக்கிறேன்.

    அதில் இதற்கான விளக்கங்கள் நிறைவாக இருக்கின்றன.

    உரல்:

    http://vaithikasri.blogspot.com/2005/11/blog-post.html

    படித்து தங்களின் ஐயங்களையோ, ஐடியாக்களையோ வழங்கவும்

    நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  48. நன்றி ஜெயராமன் அவர்களே.

    1. நீங்கள் கொடுத்த சுட்டி வேலை செய்யவில்லை.
    2. உங்கள் முகப்பு பக்கத்திற்கு சென்றேன். அங்கிருந்தும் முதல் பாகத்தை அடைய முடியவில்லை
    3. இரண்டாம் பாகம் காணக் கிடைக்கிறது.
    4. ஆனால் அதில் ரொம்பத்தான் பல்லை உடைக்கும் சொற்களுடன் விளக்கம் வருகினறது.
    5. அதை எளிய தமிழில் மறுபதிவு செய்தால் நலம்.
    6. இப்போது இருக்கும் வெர்ஷன் படிக்க முடியாது என்று கூறவரவில்லை. என்னால் முடியும். ஆனால் ரொம்ப நேரம் எடுக்கும். இருப்பினும் முயற்சி செய்வேன்.

    அன்புடன்,
    டோண்ட்யு ராகவன்

    ReplyDelete
  49. FYI:

    பல்வேறு ராமாயணங்கள்
    http://www.hinduonnet.com/fr/2005/03/04/stories/2005030400080200.htm

    இந்த ராமாயணத்தில் ராமனுக்கு சீதை தங்கை
    http://www.palikanon.com/english/pali_names/d/dasaratha_jat_461.htm

    http://preetamrai.com/weblog/archives/2005/11/01/happy-deepawali-and-the-story-of-deepawali

    இராமர் சீதையைக் கொல்லச் சொன்ன கதை
    http://www.cambodianonline.net/pphistory03.htm

    சீதை ராவணனைக் கொன்றது
    http://www.maxwell.syr.edu/maxpages/special/ramayana/Spot02.htm

    இன்னும் சீதை ராவணணை விரும்பிய கதை பெங்காலி ராமாயணத்தில் இருக்கிறது.
    சீதை ராவணனின் படத்தை வரைய ராமன் பொறாமை கொண்டு அவளை துரத்திவிட்டான்.

    . In a Kannada folk Ramayana, Ravula (the Ravana figure) becomes pregnant,
    and at the end of nine days, sneezes Sita into existence.
    (In Kannada the word sita also means ஓhe sneezed.ஔ) This motif of Sita as
    Ravanaஒs daughter occurs elsewhere

    http://www.telegraphindia.com/1040530/asp/opinion/story_3299009.asp

    பழைய ராமாயணம்
    http://www.tamil.net/projectmadurai/pub/pm0061/pm0061.pdf

    ராவணன் புத்த துறவியாக , சிவனாச்சார்யனாக , சமண துறவியாக இப்படி பல
    version இருக்கிறது. சிங்கள ராமாயணத்தில் ராவணன் நாயகன் என்று கேள்வி.

    ReplyDelete
  50. "இந்த ராமாயணத்தில் ராமனுக்கு சீதை தங்கை
    http://www.palikanon.com/english/pali_names/d/dasaratha_jat_461.htm"
    ஓ, அதைத்தான் விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்று கூறினார்களாமா?

    இப்படிக்கு,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  51. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  52. I don't understand what you are trying to say. Also Ram was not born in Ayodhya in some versions.

    Lets' s leave kumbakarnan. When they polled women, they said they thought
    Ravanan was better husband rather than Raman. How about rasing this question?

    (I have problem typing in tamil right now.)

    ReplyDelete
  53. "I don't understand what you are trying to say."
    It was only a joke. If you cannot get the point thereof, leave it. Not worth explaining.

    "When they polled women, they said they thought Ravanan was better husband rather than Raman. How about rasing this question?"
    Which poll are you talking about? Please give links. Having said that who knows what is passing through a human brain? It is God's gift that it is not given to one to know what others think. Otherwise life will be impossible.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  54. நன்றி நாட்டமை அவர்களே. கண்டிப்பாகப் போடுகிறேன். தற்சமயம் நிறைய மொழிபெயர்ப்பு வேலைகள், அதனால்தான் போடவில்லை. என் பின்னூட்டங்களைப் பார்த்து வருகிறீர்கள்தானே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  55. கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளலாம். என் மின்னஞ்சல் முகவரி raghtransint@gmail.com
    If you are in Chennai, do contact me at 22312948 and 9884012948.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. ŨÄ¢ø ÀÊò¾ '§À¡ø'¾¡ý. link ±øÄ¡õ ¿¢Â¡À¸Á¢ø¨Ä.
    அதற்கென்ன வலைப்பதிவிலேயே ஒரு poll நடத்தலாமே.

    விபீஷணன் (எட்டப்பன்)களைப் பற்றி machiavelliயின் Prince இல் எப்படி
    சொல்கிறார்களென்றால், இது போல ஒரு நாட்டை பிடிப்பதற்கு
    அந்த நாட்டில் உள்ள கோடாலி காம்புகளை பயன்படுத்தலாம். போருக்குப்பின்
    அந்த கோடாலி காம்புகளை கண்டம் துண்டமாக வெட்டி போடுவது நலம். சொந்த
    அண்ணை காட்டி கொடுத்தவன் நாளை உன்னையும் காட்டி கொடுப்பான். அவனை
    நம்ப முடியாது. ஆபத்தானவன்.

    இந்த விதிகள் இன்றளவும் உண்மை. ராமன் எப்படி சுக்ரீவன் படையை
    பயன் படுத்தினானோ அப்படி சிலரை அமெரிக்கா ஒரு காலத்தில்
    ஆப்கானில் பயன்படுத்தியது. சொந்த படையை பயன்படுத்தாமல்
    மற்றவன் படையை நம்பியதால் விளைவுகளையும் சந்தித்தது.

    அமெரிக்கா இன்றும் சில எட்டப்பர்களை பயன்படுத்துகிறது. முன்பு
    இவர்கள் வசதிக்காக பயன்படுத்திய சிலர் அவர்களுக்கு எதிராக
    திரும்பியதும் நடந்ததுதான். இன்று ஈராக் போருக்குப்
    பின் போருக்கு முன்பு உதவிய விபீஷணன்களை கழற்றி விட்டதாகவும் கேள்வி.

    வாலிக்கும் சுக்ரீவனுக்கும் உள்ள பகைமையை ராமன் பயன்படுத்திக்கொண்டான்.
    அதுபோல தான் விபீஷணன் ராவணன் கதையும். அண்ணனுக்கு புத்தி சொன்னான்
    அப்புறம் அவனை கடவுளுக்காக விலகினான் என்பதெல்லாம் கப்சா.

    சீதையை தேடி போனவன் நடுவில் ஏன் வாலியுடன் சண்டைக்கு போனான். ?
    குரங்கு படைகளை பயன் படுத்திக்கொள்ளதானே. இவனுக்கென்று படை
    ஒன்றும் இல்லை. படையில்லாமல் ராவ்ணணை எதிர்க்க முடியாது.

    ஒரு காலத்தில் சதாமுடன் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துவிட்டு,
    இப்பொழுது அவன் கொடுங்கோலன் என்று பிரச்சாரம் செய்வது போலதான்
    ராவணன் அரக்கன் என்ற பிரச்சாரமும்.

    ReplyDelete
  57. Dondu sir,

    good post and comments.

    hope you have read "Vidhura Needhi"
    a part of Mahabaratha. excellent
    compilations of wise Vidhura's sayings and teachings.

    My DK background (in spite of many
    transformations) makes me wonder
    sometimes, if Ramyana was true,
    then it throws some probablities :
    When humans lived in N.Indian and
    Srilanka, did TN was populated by
    only monkeys ? (Anjeneya, pls forgive me) ...

    and the present contrvoersy against sethu project and Ramar bridge. no proof that it is a man-made strucutre. and if there is a
    pertinent and strategic need to
    demolish the structure (say to contain LTTE, etc), then BJP govt or any other govt would not have hesitated in doing so. Political
    and economic expediancy overrules
    many sentiments. Temples, etc are
    demolished to make way for roads, etc...

    Anbudan
    K.R.Athiyaman

    ReplyDelete
  58. வாருங்கள் அதியமான் அவர்களே. விதுர நீதி மேம்போக்காக படித்திருக்கிறேன். நம்ம திருக்குறளை ஞாபகப்படுத்தும் அது.

    அது தவிர இன்னொரு நீதியும் கேள்விப்பட்டிருக்கிறேன். கைவல்ய நீதி என்பதுபோலப் பெயர் வரும். அது திருதிராஷ்டரனுக்கு கூறப்பட்டது. உலகில் உள்ள எந்த அநீதியாக இருந்தாலும் அது உனக்கு சாதகமாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள் என்ற ரேஞ்சில் போகும் அது. சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தில் அது வருகிறது.
    பீஷ்மரும் நீதி அம்புப் படுக்கையிலிருந்து கூறுகிறார். அப்போது துரௌபதி சிரித்தாளாம். ஏன் என்று பீஷ்மர் அவளைக் கேட்க இந்த நீதியெல்லாம் தான் துகிலுரியப்பட்டபோது எங்கு போயிற்று என்று கேட்டாளாம். அதற்கு பீஷ்மர் அளித்த பதில்: "அச்சமயம் நான் தீயோன் துரியன் அளித்த உணவை உண்டு அதனால் உண்டான கெட்ட ரத்தத்துடன் இருந்தேன். ஆகவே மூளை மழுங்கி விட்டது. ஆனால் அருச்சுனன் விட்ட அம்புகள் அக்கெட்ட ரத்தத்தை நீக்கி விட்டன, ஆகவே "ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா" (பீஷ்மர் மற்றும் கண்ணதாசன் மன்னிக்கவும்).

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  59. GOOD IS RAVANAN...HE DON'T WANT TO TOUCH A GAL WITHOUT HER CONSENT....I appreciate ravanan....he don't want to giveup from his stand....

    ReplyDelete
  60. //GOOD IS RAVANAN...HE DON'T WANT TO TOUCH A GAL WITHOUT HER CONSENT//
    பெண்ணுக்காக சண்டையிடுவது ஒன்றும் புதிதல்ல. அக்காலத்திலேயே அதுதான் நிலைமை. ஆனால் ராவணன் திருட்டுத்தனமாக சீதையை தூக்கி வந்ததுதான் பெரிய தவறாக அவனது தம்பி கும்பகருணனே குறிக்கிறான்.

    மற்றப்படி அவன் சீதையை அவள் சம்மதமின்றி தொட்டிருந்தால் அவன் தலை வெடித்து போயிருக்கும் என்பது அவன் பெற்ற சாபம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete