11/30/2005

வீடணன் மற்றும் கும்பகர்ணன்

வீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு தனிப்பதிவு போட வந்தேன்.

முதலில் பின்புலம் என்னவென்று பார்ப்போம். ராமர் மற்றும் கிருஷ்ணரை பார்ப்பனர்களாகப் பலர் இங்கு பார்த்து அவ்வாறே எழுதியும் வருகின்றனர். முதலில் இதை சந்தேகத்துக்கிடமின்றி தீர்த்துக் கொள்வோம். ராமர் ஷத்திரிய வகுப்பை சேர்ந்தவர், கிருஷ்ணர் வைசியர் (விவசாய, வாணிக வகுப்பு). ராவணன் வகையறாக்கள்? அவர்கள்தான் பார்ப்பனர்கள்.

இத்தருணத்தில் ஈ.வே.ரா. அவர்களைப் பற்றி என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்கள் சமீபத்தில் 1961-ல் கூறியது நினைவுக்கு வருகிறது. அதாகப்பட்டது, "ஈ.வே.ரா. அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ள நினைத்தார். திராவிடனான ராவணன் பெயரை வைத்து தன் பெயரை ராவணசாமி என்று மாற்றிக் கொள்ள விரும்பினார். அப்போது அவரிடம் கூறப்பட்டது, அதாவது ராவணன் பார்ப்பனன் என்று. சரி அப்படியானால் ராமசாமியாகவே இருந்து விட்டுப் போகிறேன்" என்றார்.

மேலே எழுதுவதற்கு முன் ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேனே. முக்கால்வாசி இந்த நிகழ்ச்சி ஒரு அபோக்ரிஃபல் என்ற வகையைச் சேர்ந்த கற்பனையாகவே எனக்கு இப்போது படுகிறது. இருந்தாலும் இங்கே அதை போடுவதற்கு காரணம் தமிழகத்தில் இதே தவறுதான் பலரும் செய்வது.

நிற்க. வீடணன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றிப் பேசுவோமா? இருவருமே நல்லவர்கள். இருவருக்குமே ராவணன் மற்றும் இலங்காபுரியின் நலன் பற்றி அக்கறை உண்டு. எல்லா சிறப்புகளும் பெற்ற ராவணன் சீதையை அபகரித்து வந்ததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதைக் கையாண்ட முறையிலேயே வீடணன் மற்றும் கும்பகர்ணன் மாறுபடுகின்றனர்.

சீதையைக் கடத்தி வந்த போது கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வீடணன் தன்னால் முடிந்தவரை ராவணனுக்கு அறிவுறை கூறினான். ராவணன் அவனை மிகவும் இழிவு செய்ய, வேறு வழியின்றி அவனை விட்டு விலகினான். கவனிக்கவும், அத்தருணத்தில் ராவணன் வலுவான நிலையிலேயே இருந்தான். அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, இங்கு பல பகுத்தறிவாளர்கள் கூறியது போல.

கும்பகர்ணன்? தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது ராவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தான். அப்போது கூட அவனிடம் பிரச்சினை என்னவென்று விவரிக்கப்பட்ட பின்னால் முதலில் அவனும் அண்ணனுக்கு அறிவுறை கூறினானே. சீதை என்ற யமனை கூட்டி வந்து தான் கெட்டதுமன்றி இலங்கையையும் ஏன் ராவணன் அழிக்க வேண்டும் என்றுதானே கேட்டான்? இருப்பினும் அண்ணன் படும் மன வேதனையைப் பார்த்து அவனுக்காக யுத்தம் செய்யப் போனான். அப்போது கூட தான் உயிருடன் திரும்புவோம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லை. ஆகவே அண்ணனிடம் கேட்டுக் கொண்டான், தான் இறந்த பிறகாவது ராமருடன் சமாதானமாகப் போகுமாறு.

கும்பகர்ணன் போர்முனைக்கு வரும்போது வீடணன் அவனைப் பார்க்க சென்றான், அவனையும் ராமர் பக்கம் இழுக்கும் முயற்சியில். அவனைப் பார்த்ததுமே கும்பகர்ணன் வேறு விதமாக நினைத்துப் பதறினான். அவன் கூறினான், "அடேய் தம்பி, நீயாவது பிழைத்து நாங்கள் இறந்த பிறகு இலங்கையைக் காப்பாய் என நினைத்தேனே, என்ன ஆயிற்று, ஏன் இப்பக்கம் வந்தாய்?" பிறகு உண்மை அறிந்து சமாதானம் அடைந்தான். இருப்பினும் ராவணனை விட்டு வர முடியாது என்பதை அன்புடன் வீடணனுக்குக் கூறி அவனை ராமரிடமே திருப்பி அனுப்பினான்.

யார் இதில் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரை இருவரும்தான். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/22/2005

ஜயராமன் அவர்களுக்கு என் பதில்

என்னுடைய "துணைவியின் பிரிவு" என்ற பதிவுக்கு திரு ஜயராமன் அவர்கள் இட்டப் பின்னூட்டத்திற்கான பதில் பெரிதாகி விட்டதால் இங்கு தனியாக இடுகிறேன்.

ஜயராமன் அவர்கள் கூறுவது:
"டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன்" என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் blog ல் இது சம்பந்தமாக ஒன்றையும் காணோம்."

ஜயராமன் அவர்களே, நீங்கள் என்னுடைய பதிவுகளை சரியாகப் படித்தது போல் தெரியவில்லை.

வாடிக்கையாளர்களை அணுகுவது எப்படி என்று 10 பதிவுகள் போட்டுள்ளேனே. பத்தாவது பதிவுக்கான சுட்டி இதோ. இதில் மற்ற ஒன்பது பதிவுகளுக்கான சுட்டிகளும் உண்டு.

ஜெர்மன்/பிரெஞ்சு மொழிகளை பற்றி எழுதவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள். பார்க்க:
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
11)
12)
13)
14)
15)
16)

"குருவி, நங்கநல்லூரில் மழை, என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்."
குருவியின் துயரம் உங்களை பாதிக்கவில்லையா? என்னை மிகவும் பாதித்தது. வீட்டின் உள்ளே உங்கள் கண்ணெதிரில் வெள்ளம் மெதுவாக நுழைந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன், எழுதினேன் என்ன தவறு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/19/2005

துணைவியின் பிரிவு

என் நண்பர் ரவி பாலசுப்ரமணியன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை தமிழாக்கிக் இங்கு தருகிறேன். நன்றாக இருந்தால் ஆங்கில மூலத்திற்கு பெருமை. நன்றாக இலையென்றால் என் மொழிபெயர்ப்புத்தான் அதற்கு பொறுப்பு. ஆங்கில மூலத்தை என்னுடைய ஆங்கிலப் பதிவில் போட்டுள்ளேன்.

1. அது ஒரு வானமூட்டமான சனிக்கிழமை மாலைப் பொழுது. ஒரு பறவைக் கூட்டம் பிரதான சாலை நடுவில் உணவைத் தேடிக் கொண்டிருந்தது. அவ்வப்போது விளையாட்டு வேறு. திடீரென ஒரு பெரிய லாரி சாலையை வேகமாகக் கடந்தது. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஒரு பறவை அடிப்பட்டு இறந்து விட்டது.



2. பறவைக்கும் துயரம் உண்டு. இறந்த பறவையின் அருகில் அதன் கூட்டாளி ஆண் பறவை பறந்து வந்து அமர்கிறது. தன் துணைவி இறந்து விட்டாள் என்பதை அது ஏற்க மறுக்கிறது.



3. சற்று நேரத்தில் அப்பக்கமாக இன்னொரு லாரி விரைந்து வர, காற்றில் இறந்த பறவையின் உடல் அசைய, ஆண் பறவை லாரி சென்ற பிறகு மறுபடியும் அதன் அருகில் வந்தமர்கிறது. துணைவி உயிருடன் இருப்பதாக அது எண்ணுகிறது போலும்.



4. துணைவியின் பக்கத்திலிருந்து கொண்டு கத்துகிறது ... "எழுந்திரு, என்ன ஆச்சு!?"



5. ஆனால் துணைவியால் கேட்க முடியாது. இப்போது ஆண் பறவை தன் துணைவியை தூக்க முயல்கிறது.



6. ஆனால் அதனால் முடியவில்லை. இன்னொரு கார் அப்பக்கம் வர, ஆண் பறவை சற்றே நகர்கிறது. கார் போனவுடன் மறுபடி வருகிறது, தன் துணைவியிடம்.



7. மற்றப் பறவைகள் ஆண் பறவையிடம் இது நடக்காத காரியம் என்று கூறினாலும் அது கேட்பதாக இல்லை. தண் துணைவியை எழுப்பி அவளை மறுபடி பறக்கச் செய்ய அது எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது.



8. தன் முழு சக்தியையும் ஆண் பறவை பயன்படுத்தியது, ஆனாலும்...

என்னால் அதற்கு மேல் படம் எடுக்க மனமில்லை. இந்த கலாட்டாவில் உயிருடன் இருக்கும் பறவையும் அடிப்பட்டுச் சாகப் போகிறதே என்ற கவலை வேறு. ஆகவே இறந்த பறவையைக் கையில் தூக்கி தெருவோரம் மென்மையாக வைத்தேன். ஆண் பறவை அருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து தன் துணைவியை இழந்த துக்கத்தை தன் சோக கீதம் மூலம் வெளிப்படுத்தியது. தன் துணைவியின் அண்மையை விட்டுச் செல்ல அதற்கு மனமில்லை.

மனிதர்களும் அந்த அளவுக்கு உணர்கிறார்களா? தெரியவில்லையே.

ரவி அவர்களின் மின்னஞ்சலை படித்ததும் எனக்கு ராமாயணத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. இது பற்றி நான் ராஜாஜி அவர்களை பற்றிய பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதினேன்.

"அப்போது ராஜாஜி அவர்கள் "சக்கிரவர்த்தித் திருமகன்" என்றத் தலைப்பில் குழந்தைகளுக்காக ராமாயணக் கதை ஆரம்பித்தார். முதல் அத்தியாயம் "சந்தத்தைக் கண்டார்" என்றத் தலைப்பில். வால்மீகி அவர்கள் ராமகாதையை எழுதத் தூண்டிய நிகழ்ச்சியை அது விவரித்திருந்தது. இப்போது அதைத் திரும்பப் படித்தாலும் மெய் சிலிர்க்கும் எனக்கு. துணையிழந்த க்ரௌஞ்ச பட்சியின் சோகத்தால் பாதிக்கப்பட்டு வால்மீகி முனிவர் வேடனை சபிக்க, அச்சாபத்தின் வார்த்தைகள் ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து விட, வியாகூலத்தில் ஆழ்கிறார் மஹரிஷி. தேவ ரிஷி நாரதர் அவர் முன் தோன்றி அவர் செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிக் கூற நிகழ்ச்சிகள் விறுவிறுவென்று நகர்கின்றன."

எனக்கு தன் மின்னஞ்சலைப் பதிவாகப் போட அனுமதி அளித்த ரவி அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2005

பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றி

இந்தத் தலைப்பில் பதிவு போட எனக்கு தகுதி இருக்கிறதா என்பதை பற்றி மற்றவர்கள்தான் கூற வேண்டும். என்னால் ஆனது, எனக்குத் தோன்றுவதை எழுதிவிட்டு விலகுவதே. மற்றதைப் பற்றி மற்றவர்கள் (இதில் மாற்று கருத்தினரும் அடக்கம்) வேறு முறையில் கூறலாம். இது அவர்களது உரிமை.

நான் பதிவுகள் போட ஆரம்பித்து சில நாட்கள் ரொம்பப் பின்னூட்டம் இல்லாமலேயே கழிந்தன. ஆனால் இந்தப் பதிவுக்கு முதலாக இரட்டை எண்களில் பின்னூட்டங்கள் வந்தன. தமிழர்களுக்கு அறிவு பூர்வமானக் கேள்விகள் பிடிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இம்மாதிரிப் பதிவுகள் எப்போது நான் போட்டாலும் சீறிக்கொண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவற்றின் சுட்டிகள் 1, 2, 3, 4 முதலியன.

அரசியல் சம்பந்தமாகப் பதிவுகள் போட ஆரம்பித்ததும் நிலைமை சூடு பிடிக்க ஆரம்பித்தது. சோ சம்பந்தமாக நான் போட்ட இப்பதிவு 22 பின்னூட்டங்களைப் பெற்று தந்தது. காசி சார் அவர்கள் சில மாதங்கள் பிறகு என்னிடம் நேரடியாகப் பேசும்போது இப்பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு, என் கருத்துக்களிலிருந்து மிகவும் மாறுபடுவதாகக் கூறினார். எனக்கு அது ஒரு eye opener-ஆக இருந்தது. அதாவது கருத்து வேறுபாட்டையும் எவ்வளவு அழகான முறையில் கூற முடியும் என்பதை அவரது மென்மையான வார்த்தைகள் நிரூபித்தன.

பின்னூட்டங்கள் நிஜமாகவே சூடு பிடிக்க ஆரம்பித்தது பெரியார் அவர்கள் திருமணத்தைப் பற்றிய இப்பதிவால்தான். ஆனாலும் ஒன்று கூற வேண்டும். எதிர்த்துப் பின்னூட்டம் இட்ட அனைவரும் மிகக் கண்ணியமாகவே எழுதினர். நல்ல கருத்துப் பரிமாறல்கள் நடந்தன. பெரியார் பற்றி மற்றப் பதிவுகள் பின்வருமாறு: ஒன்று (35 பின்னூட்டங்கள்) மற்றும் இரண்டு (21 பின்னூட்டங்கள்).

தலித்துகள் எதிர்க்கொள்ளும் கொடுமைகளில் ஒன்று இரட்டைத் தம்ளர் முறை. அதை அவர்கள் எப்படி எதிர்க்கொள்ளலாம் என்பதற்கு நான் ஒரு பதிவு போட்டேன். அதற்கு 17 பின்னூட்டங்கள். ஆனால் தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாயக் காத்திருப்பில் போட்டதை பற்றி எழுதிய பதிவுக்கு 11 பின்னூட்டங்கள் மட்டுமே.

இப்போது ரெக்கார்ட் ப்ரேக்கிங் அளவுக்கு பின்னூட்டங்களை பற்றிப் பார்க்கும் முன்னால் என்னுடைய இப்பதிவை பற்றிக் கூறுவேன். இது என்னை வலைப்பதிவாளர்களுக்கு நன்றாக அடையாளம் காட்டிற்று. இது ஒரு செய் அல்லது செத்துமடி தோரணையில் போட்டப் பதிவு. என் வெளிப்படையான எண்ணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது இப்பதிவு. இதற்கு 33 பின்னூட்டங்கள்.

இப்பதிவை நான் போடும்போது பின்னூட்டங்கள் 308 வரும் என்று நினைக்கவேயில்லை. எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது இப்பதிவு. ஆனாலும் போலி டோண்டு என்ற இழிபிறவி வரக் காரணமாகி விட்டது இப்பதிவு என்பதில் எனக்கு சிறிது வருத்தமே. தர்ம் கெட்டப் பின்னூட்டங்கள் வரவில்லை என நான் சந்தோஷப்பட்டது தவறு என்று அவன் நிரூபித்தான்.

போலி டோண்டுவின் கைங்கர்யத்தால் நான் எழுதியப் பலபதிவுகள் அதிகப் பின்னூட்டங்கள் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானது இப்பதிவு. இது வரை அதற்கு 488 பின்னூட்டங்கள். இன்னும் வரும் ஏனெனில் நான் எப்போதெல்லாம் மற்ற பதிவுகளில் பின்னூட்டம் இடுகிறேனோ அதன் ஒரு நகல் இப்பதிவுக்கு வந்து விடும். கன்னிமாரா நூலகத்தில் புத்தகம் சேர்வது இம்முறையில்தான். ஆனால் இப்பதிவை போடும்போது மனக்கஷ்டத்துடன் இருந்தேன். அப்போதுதான் இணைய நண்பர்கள் எவ்வளவு அற்புத மனிதர்கள் என்பது எனக்குத் தெரிந்தது. அடேங்கப்பா எத்தனை ஆதரவு. முக்கியமாக என்னுடன் தீவிர கருத்து வேறுபாட்டுடன் இருந்தவர்கள் கொடுத்த ஆதரவு என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. மனம் பிறழ்ந்த போலி டோண்டுவை பற்றி நான் இட்ட இன்னொரு பதிவை இங்கு சுட்ட விரும்பாததற்கு காரணம் அவன் அதில் இட்ட தரம் மிக மிக தரங்கெட்டப் பின்னூட்டங்கள்தான் என்று கூறவும் வேண்டுமோ?

என் மனத்துக்கு பிடித்த பதிவு என் உள்ளங்கவர்கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பற்றி நான் இட்டதேயாகும். மனதுக்கு நிறைவை தந்தப் பதிவு அது.

இஸ்ரேலை பற்றி 5 பதிவுகள் இட்டேன், மாமனிதர் ராஜாஜியை பற்றியும் எழுதியுள்ளேன். (போலி டோண்டு கவனிக்க: நேதாஜியை பற்றி அல்ல!). என் ஆர்கைவ்ஸில் பார்த்துக் கொள்ள முடியும். சர்ச்சைக்குரிய சில பதிவுகளில் ஆண், பெண் கற்பு நிலையைப் பற்றி நான் போட்ட 3 பதிவுகள் அடங்கும். அவற்றின் சுட்டிகளையும் நான் இங்கு தர விரும்பவில்லை.

நான் மிக்க உபயோகமாக இருக்கும் என நினைத்து வாடிக்கையாளர்களை அணுகும் முறைகளை பற்றி போட்ட 10 பதிவுகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு பின்னூட்டங்களை பெறுவதில் வெற்றி பெறவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இரா முருகனுக்கு நன்றி

இரா முருகன் அவர்கள் சில வாரங்களுக்கு முன்னால் என்னுடன் தொலை பேசினார். என்னுடைய பக்கவாட்டுச் சிந்தனை (lateral thinking) அடிப்படையில் நான் கேட்டிருந்த ஒரு புதிரை தன்னுடைய ப்ராஜக்ட் M -ல் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டார். எனக்கு கசக்கவா செய்யும்? அதுவும் என்னுடைய அபிமான எழுத்தாளரே கேட்கும்போது? சந்தோஷமாக அனுமதி கொடுத்தேன். இன்றைய தினமணி கதிரில் வந்துள்ளது. இந்தப் பக்கத்தில் அதை பார்க்கலாம். விக்ரம் பற்றியக் கேள்வியுடன் கூட வந்த மற்றக் கேள்விகளை இப்பதிவில் பார்க்கலாம். (அப்பதிவில் நான் உபயோகித்தப் பெயர் ராமமூர்த்தி, இருப்பினும் விக்ரம் இன்னும் பொருத்தமாகவே உள்ளது. கேள்வி ரைமாக வருகிறது.)

தினமணி பக்கங்களை பார்க்கும்போது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று. அதாவது இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் பார்ப்பதை விட Firefox-/ பார்ப்பது நலம். என்கோடிங் ஐ.எஸ்.ஓ. 8859-1 என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/06/2005

வெள்ளம் உள்ளே வந்தது

நங்கநல்லூரில் உள்ள எங்கள் வீடு 1969-ல் கட்டப்பட்டது. அப்போது தெருமட்டத்தை விட உயர்ந்த நிலையில் இருந்தது. வாசலில் மூன்று படிக்கட்டுகள் வேறு. நடுவில் சுமார் 22 வருடம் இங்கில்லாது தில்லியில் வசித்து விட்டு 2001-ல் திரும்பி வந்து பார்த்தால் வாசற்படிகள் காணவில்லை. சுற்றுப்புற நிலம் உயர்ந்து படிகள் நிலத்துள் புதைந்து போயின. இப்போது வீடு தெருவிலிருந்து சற்றுக் கீழே உள்ளது. இதனால் பிரச்சினை இல்லை. அவ்வப்போது வெள்ளம் வீட்டினுள் வரும் அவ்வளவுதான்.

அதுதான் இன்று நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இது மூன்றாம் முறை. முதல் முறை 2002-ல், அதன் பிறகு போன மாதம், பிறகு இன்று. இப்போதைக்கு மழை நின்றிருக்கிறது. தண்ணீரும் வடிய ஆரம்பித்துள்ளது. ஆனால் முழுக்க வடியாது. ஏனெனில் வெளியே செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. நாளை காலை இறைத்துத்தான் வெளியேற்ற வேண்டும்.

போன மாதம் இரண்டு நாட்களுக்கு மின்சாரம் இல்லாததால் அந்த வெள்ளத்தைப் பற்றி உடனே பதிவு போட இயலவில்லை. இப்போது ரன்னிங் காமண்டரி கொடுக்க எண்ணம். தண்ணீர் வடிதல் தொடர்கிறது. மழையும் நின்றிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மறுபடி ஆரம்பிக்கலாம்.

இன்று காலையிலிருந்து மழை விடாது பெய்கிறது. பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், மவுண்ட் ஆகிய இடங்களில் உள்ள சப்வேக்கள் நிரம்பி விட்டன. ஆகவே நங்கநல்லூரிலிருந்து சென்னைக்கு காரில் வருவது கடினம். இன்று காலை ஒரு திருமணம் புரசைவாக்கத்தில். மீனம்பாக்கத்தில் ரயில் பிடித்து எக்மோர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் புரசை செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறே செய்தேன்.

நகரம் முழுதும் நல்ல மழை. எங்கள் கிணற்றில் நீர் கையை விட்டு மொள்ளும் அளவுக்கு வந்து விட்டது. போர் பம்ப் போட்டால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டம் மிக உபயோகமாக இருக்கிறது. ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக பல சமயம் எதிர்த்தாலும் இந்தத் திட்டத்திற்கான முழு க்ரெடிட்டையும் அவருக்கே கொடுப்பதில் எந்தத் தயக்கமும் எனக்கில்லை.

இப்போது இந்திய நேரப்படி மணி இரவு 11.22. தண்ணிர் வடிய ஆரம்பித்து விட்டது. இரவில் இதற்கு மேல் மழை பெய்யாது என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முதல் ஆண்டு நிறைவு

இன்று நவம்பர் 7, 2005. வலைப்பூவில் என் முதல் ஆண்டின் கடைசி நாள். போன வருடம் 8-ஆம் தேதி முதல் பதிவு போட்டேன். இப்பதிவு 173-ஆம் ப்திவு என்று ப்ளாக்கர் கூறுகிறது. நூறாம் பதிவு வந்ததை கவனிக்கவில்லை.

இந்த ஒரு ஆண்டில் பல விஷயங்கள் நடந்து விட்டன. அவற்றைப் பற்றி ஒரு நீள் பார்வை இப்போது. போன ஆண்டு அக்டோபர் ஹிந்துவில் தமிழ் ப்ளாக்ஸ் பற்றி படித்தேன். கூக்ளேயில் "Tamil blogs" என்று சர்ச் போட்டதில் http://tamilblogs.blogspot.com/ என்ற உரல் கிடைத்தது. ஒவ்வொரு வலைப்பூவாகப் போய் சுட்டியதில் பல வலைப்பூக்கள் படிக்கக் கிடைத்தன. அவற்றில் என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவு முக்கியமானது. அவரது திருவல்லிக்கேணி நினைவுகள் என் மனத்தைக் கவர்ந்தன. அவற்றுக்கு பின்னூட்டம் இடலாம் என்றால் ப்ளாக்கர் கணக்கு திறக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. சரி என்று திறந்து வைத்தேன். இருப்பினும் தமிழில் தட்டச்சு செய்ய ஏதுவாக என்னைத் தயார் செய்து கொள்ள சில நாட்கள் பிடித்தன. என் முதல் பதிவு போன நவம்பர் 8-ஆம் தேதிதான் வந்தது.

வந்த புதிதில் நான் நிறைய நேரம் மற்றப் பதிவுகளை பார்ப்பதில் செலவிட்டேன். பிறகு மெதுவாக என்னைப் பற்றியும் என் மொழிபெயர்ப்பு அனுபவங்களையும் பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணத்தில் இணைத்துக் கொண்டதில் பலர் என் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தனர்.

இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து என் பதிவுகள் சூடு பிடிக்க ஆரம்பித்தன. சோ, ராஜாஜி ஆகியோரைப் பற்றி நான் போட்டப் பதிவுகள் பலவகையான எதிர்வினைகளைக் கொண்டு வந்தன. ஆனால் என்னுடைய இப்பதிவு வந்ததும்தான் நிலைமை முற்றிலும் மாறியது. இதற்கு 308 பின்னூட்டங்கள் வந்தன. பல பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டன, அவை இந்த எண்ணிக்கையில் சேர்த்தி இல்லை. முக்கியமான விளைவு போலி டோண்டு வந்ததே. அவன் அடித்த/இன்னும் அடிக்கும் கூத்தை தமிழ்மணமே அறியும். அது சம்பந்தமாக நான் சில பதிவுகள் போட வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இப்பதிவு. நான் எங்குப் பின்னூட்டமிட்டாலும் அதன் ஒரு நகலை இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அது இன்னும் தொடர்கிறது. இன்றையத் தேதி வரை 477 பின்னூட்டங்கள், and still going strong.

போலி டோண்டு வந்ததில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அது மற்றவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த மாபெரும் மாரல் சப்போர்ட். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். மற்றப்படி எல்லாம் என் உள்ளம் கவர் கள்வன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் திருவுள்ளப்படியே.

வரும் நாட்களிலும் என் வலைப்பூவை தொடர்ந்து நடத்துவேன் என்று கூறி இது வரை தந்த, இனிமேல் தரப்போகும் ஆதரவுக்காக நன்றி கூறி இப்பதிவை முடிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: பேய் மழை காரணமாக வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து கொண்டிருக்கிறது. இப்போதே கணுக்கால் அளவு தண்ணீர் ஏறி விட்டது. ஒரு வேளை நாளை பதிவு போட முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே சிறிது முன்கூட்டியே இப்பதிவை போட்டு விடுகிறேன். 7-ஆம் தேதி இது வெளி வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்.

11/05/2005

நாளை உலகம் அழிந்தால்

நாட்டாமை அவர்கள் என்னுடை அப்புசாமி பதிவில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவே இப்பதிவு போடப்படுகிறது. பதில்கள் கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் தமாஷ்.

"1.உங்கள் ரசனை ஏன் எப்படி வித்யாசமாக இருக்குது?அது என்ன சோ,இஸ்ரேல் அப்படின்னு வில்லங்க பார்ட்டியாவே புடிக்குது உங்களுக்கு?"
சோ சம்பந்தமாக நான் இட்ட இந்தப் பதிவையும் அதன் பின்னூட்டத்தையும் பாருங்கள்.
இஸ்ரேலை பற்றி நான் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். என் ஆர்கைவ்ஸில் அவை படிக்கக் கிடைக்கும். இருப்பினும் உங்கள் கேள்விக்கான நேரடி பதிலை இங்கு இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் (அவர் ஒரு ஜெர்மானியர்) திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே."

2.உங்கள் கையில் ஒரு துப்பாக்கி,ஒரு ரவை உள்ளது.போலிடோண்டு மற்றும் ஒசாமா பின்லாடன் இருவரும் எதிரில் உள்ளனர்.யாரை சுடுவீர்கள்?
கண்டிப்பாக பின் லேடனைத்தான். போலி டோண்டு யார் என்பது எனக்குத் தெரியும். அவர் எழுதும் தமிழ் நடை பிடிக்கும். என்னை குறிவைத்து அவர் எழுதிய சில நையாண்டிகளுக்கு நானே சிரித்துள்ளேன்.

3.சோவுக்கு அப்புறம் துக்ளக் என்ன ஆகும்?
அந்தக் கவலை எனக்கும் உண்டு.

4.போலிடோண்டு உங்களை விட சிறப்பாக எழுதுவதாக பலரும் சொல்கிறார்களே.உண்மையா?
அவருக்கு எழுதுவது நன்றாக வருகிறது. தொழில் நுட்ப அறிவுடையவர்.

5.நாளை உலகம் அழியபோகிறது என்று வைத்துகொள்ளுங்கள்.அப்போது என்ன தலைப்பில் பின்னூட்டம் இடுவீர்கள்?
இப்பதிவின் தலைப்பையே வைத்து விட்டால் போகிறது. என்ன செய்வேன் என்று கேளுங்கள். இந்த நீதிக்கதையை கூறி இதனால் அறியும் நீதி யாது எனக் கேட்பேன். ஏதோ போகும் வழிக்கு புண்ணியம்.

6.பம்பாய் போனேன் என்று சொன்னிர்களே.நீங்கள் பம்பாய் போனதற்கு ஆதாரம் என்ன?எப்படி நம்புவது?
இதற்காக என் மூன்றரை வருட வாடகை ரசீதுகள், கன்ஸர்ன்ஸ் ரசிதுகள் எல்லாவற்றையுமா காட்ட முடியும்?

7.சொந்தகார் யாரும் வைத்துகொள்ள வேண்டாம் என்று எழுதியுள்ளீர்களே?மாருதி கார்கம்பனி காரன் பாவமில்லையா?ஜப்பான்காரன் பாவம் உங்களை சும்மா விடுமா?
நான் கூறும் வழி சுற்றுப்புறச் சூழல் கெடாமலிருக்கும் வழி. பிற்காலத்தில் சொந்தக் கார்கள் தடை செய்யப்படும் காலம் வந்தாலும் வியப்படைவதற்கில்லை.

8.நீங்கள் பிரதம மந்திரியாக மாறினால் என்ன சட்டம் முதலில் போடுவீர்கள்?
தலைவலி பிடிச்ச வேலை, நமக்கெதற்கு?

9.உங்களுக்கு பிடித்த blog எது?ஏன்?
வெங்கட், பத்ரி ஆகியோரது பதிவுகள் உள்ளடக்கங்களுக்காக, என்றென்றும் அன்புடன் பாலாவின் பதிவு திருவல்லிக்கேணி நினைவுகளுக்காக, நேசமுடன் வெங்கடேஷின் பதிவு அவர் தெளிவான நடை காரணமாக, இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

10.அது என்ன உங்கள் போட்டோவில் அப்படி ஒரு புன்சிரிப்பு? smile please என்று சொன்னதற்கு இவ்வளவு சிரிப்பா? அது என்ன பாஸ்போர்ட் எடுக்கும்போது எடுத்த போட்டோவா?
என் நங்கநல்லூர் நண்பர் பத்ரி நாராயணன் என்னை வெப் காமெராவில் எடுத்த போட்டோ அது. தர்சன் அவர்களின் சகோதரி மாற்றம் செய்த என் படம் இதோ:



"hi hi....சும்மா டமாசு பண்ணினேன். நான் என்றும் உங்கள் ரசிகன்."
பிரச்சினையேயில்லை. உங்கள் கேள்விகளை நான் மிகவும் ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/04/2005

அழிக்கமுடியாத அப்புசாமி மற்றும் சீதா பாட்டி

சமீபத்தில் 1963-ஆம் வருடத்திலிருந்து நம் எல்லோரையும் பரவசப்படுத்தி வரும் இந்த தம்பதிகளைப் பற்றி என் நினைவுகள்.

சீதா பாட்டியின் வயது 70, அப்புசாமிக்கு 75 வயது. அது கடந்த 42 வருடங்களாக அப்படியே உள்ளது. குமுதத்தில் ஜனனம், பல ஆண்டுகள் அங்கேயே வாசம். அவர்களை படைத்த ஜ.ரா.சுந்தரேசன் இப்போது அவர்களை மற்றத் தளத்திலிருந்தும் நமக்குக் காட்டுகிறார். இப்போது என் நினைவுகள்.

முதல் கதையே தூள். அப்புசாமி பொடி போடுவதைத் தடுக்க சீதாபாட்டி நடவடிக்கை எடுக்க, அப்புசாமியின் எதிர்வினைகள் எல்லாமே அட்டகாசம்தான். என் மனதில் இருக்கும் இன்னொரு கதை இதோ.

அப்புசாமியையும் சீதா பாட்டியையும் போலீஸ் ஹிந்தி எதிர்ப்புக்காகப் பிடித்துக் கொண்டு செல்ல இருவரும் தப்பிப்பதற்காக "பச்சோங்கீ கிதாப்" என்ற ஹிந்தி பாடநூலை வைத்து இன்ஸ்பெக்டரை குழப்பிய சீன். நினைவிலிருந்து தருகிறேன்.

அப்புசாமி: "ஏ மேஜ் ஹை, மேஜ் பே கலம் ஹை, கலம் மே ஸ்யாஹீ ஹை" *மொழிபெயர்ப்பு: இது மேஜை, மேஜையின் மேல் பேனா இருக்கிறது. பேனாவில் மை உள்ளது.

இன்ஸ்பெக்டர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே: "அடேங்கப்பா, ஒரே ஹை ஹையாக இருக்கே, நம்மால் முடியலை சாமி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போகலாம்"

சீதாபாட்டி (கருணையுடன்): "அச்சா, சாரதா சோமு கீ பெஹன் ஹை" (நல்லது, சாரதா சோமுவின் சகோதரி).

இதை படித்துவிட்டு நான் என்னை மறந்து சிரிக்க ஆரம்பிக்க, நூலகத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிலர் மெதுவாக என் பக்கத்திலிருந்து விலகி தூரப்போய் அமர்ந்து கொண்டனர்.

அப்புசாமிக்காகவே இப்போது இணையத்தளமும் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு அப்புசாமி ஜோக்:

அப்புசாமியின் நண்பர் எழுதிய துணுக்கு ஒரு பத்திரிகையில் பிரசுரமாயிருந்தது. எழுதியவர் அப்புசாமிக்கு போன் செய்தார். "என் துணுக்கைப் படித்தீர்களா?" என்றார் ஆவலுடன்.

அப்புசாமி "படித்தேன். ரொம்ப நன்றா யிருந்தது, இவ்வளவு திறமை உங்களிடம் இருக்கிறதே. பேஷ்! பேஷ்!" என்றார்.

மறுதினம் விடிகாலை நாலு மணிக்கு அந்த நண்பருக்கு அப்புசாமி மறுபடி போன் செய்தார். "உங்கள் துணுக்கு மகாப் பிரமாதம். நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்ப அருமை" என்றார். "ரொம்ப நன்றி. சந்தோஷம்" என்றார் நண்பர்.

அப்புசாமி அன்று இரவே பன்னிரண்டு மணிக்கு மறுபடி நண்பருக்கு போன் செய்தார். "ரொம்பப் பிரமாதம் உங்க துணுக்கு. என்னால் மறக்கவே முடியாது. பாராட்டுக்கள்" என்றார்.

"இனிமேல் நான் துணுக்கு எழுதினால் சத்தியமாக உம்மிடம் சொல்ல மாட்டேன்" என்றார் நண்பர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2005

எனக்கு விடை தெரிஞ்சாகணும்

கேள்விகள் கேட்டு ரொம்ப நாளாகி விட்டது. என்ன, விடை அளிக்கத் தயாரா?

1. கீழே உள்ள பாராவின் விசேஷம் என்ன?
"How quickly can you find out what is unusual about this paragraph? It looks so ordinary that you would think that nothing was wrong with it at all, and in fact, nothing is. But it is unusual. Why? If you study it and think about it you may find out, but I am not going to assist you in any way. You must do it without coaching. No doubt if you work at it for long, it will dawn on you. I don't know. Now, go to work and try your luck."

2. இருட்டான அறைக்குள் நுழைகிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு நெருப்புக் குச்சிதான் இருக்கிறது. அறைக்குள் மெழுகுவர்த்தி, குத்து விளக்கு, ஹரிக்கேன் விளக்கு ஆகியவை தலா ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. எதை நீங்கள் முதலில் கொளுத்துவீர்கள்?

3. 1971-ல் அமெரிக்க குடியரசுத் தலைவரின் பெயர் என்ன? நிக்ஸன் தவறான விடை.

4. என்னிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 55 ரூபாய். ஆனால் அதில் ஒன்று ஐந்து ரூபாய் நோட்டு அல்ல. விளக்க முடியுமா? என்னென்ன நோட்டுகள் என்னிடம் உள்ளன?

5. சிங்க்கத்தை சொப்பனத்தில் கண்ட என் அண்ணன் தூக்கத்திலேயே பயத்தில் இறந்தான் என்ற ஒருவனிடம் "புளுகாதே" என்றான் இன்னொருவன். ஏன்?

6. கீழே குறிப்பிடப்பட்டுள்ள குதிரையின் பெயர் என்னவாயிருக்கும்?
"There once was a race horse
That won great fame
What-do-you-think
Was the horse's name."

7. ஒரு g நான்கு t கொண்ட ஆங்கில வார்த்தை ஒன்றைக் கூற முடியுமா?

8. There was an airplane crash, every single person died, but two people survived. How is this possible?

9. இரண்டு ரத சாரதிகளுக்குள் போட்டி. அதாவது இரண்டாவதாக வரும் ரதம்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். போட்டியும் தேவையற்றத் தாமதம் இன்றி முடிக்கப்பட வேண்டும். என்ன செய்யலாம்?

10. ஆங்கிலத்தில் மிக நீள வார்த்தை எது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/01/2005

கார் வாங்கத் தேவையில்லை

வருடம் 2001. தில்லியிலிருந்து வீடு காலி செய்து சென்னைக்கு வந்தேன். சென்ட்ரலில் இறங்கியதும் போர்ட்டர்கள் சூழ்ந்து கொண்டனர். நான் தேர்ந்தெடுத்த போர்ட்டரிடம் எங்கள் பொருட்களை கால் டாக்ஸியில் ஏற்றிவிடும்படி கூறினேன். யாரிடமும் எதுவும் பேசாமல் தன் பின்னால் வரச் சொன்னார். வெளியே வந்து பழைய மூர் மார்க்கெட் நோக்கி சென்றபோதே எங்களைப் பின்தொடர்ந்த ஆட்டோக்காரர்களில் ஒருவர் சலிப்புடன் "இவங்க கால் டாக்ஸிக்கு போறாங்கப்பா" என்று கூற எல்லா ஆட்டோக்காரர்களும் பின்தொடர்வதை நிறுத்தினர். கால் டாக்ஸி பற்றி நான் டில்லியில் இருந்தபோதே படித்திருந்ததால் எனக்கு இது சாத்தியமாயிற்று.

அன்றிலிருந்து இன்று வரை எங்கு போவது என்றாலும் முதல் தெரிவு கால் டாக்ஸிதான், அது இல்லாவிட்டால் பஸ். இல்லாவிட்டல் நடை. ஆட்டோ கடைசி பட்சம்தான். அந்த அளவுக்கு ஆட்டோக்காரர்கள் நம்மை வெறுப்படையச் செய்துள்ளனர். ஒரு சிறு உதாரணம். நங்கநல்லூரிலிருந்து அடையாறு செல்ல எத்தனை ஆகும் என்று கேட்க, 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அடையாறுக்கு 130 ரூபாய் ஆகும் என்று ஒரு ஆட்டோக்காரர் கூறினார். கால்டாக்ஸிக்கும் அத்தனைத்தான் ஆகும் என்ற நிலையில் ஆட்டோவுக்கும் ஏன் அதே தொகையை கேட்கிறீர்கள் என்று அவரைக் கேட்டதற்கு அதற்கு அவர் ரிடர்ன் காலியாக வரவேண்டியிருக்கும் எனக் கூறினார். அப்படியானால் அடையாறு சென்று ஒரு பொருளைக் கொடுக்கவேண்டும் உடனே அதே ஆட்டொவில் வருவதற்கு என்ன ஆகும் என்று கேட்டால் 240 ரூபாய் ஆகும் என்று கூசாமல் கூறினார் அவர். நம்மை என்ன காதில் பூ வைத்தவர்கள் என எண்ணிவிட்டார்களா என்ன?

கால் டாக்ஸிகளால் என்னென்ன சௌகரியம் பாருங்கள். சற்றே முன்கூட்டி திட்டமிட முடிந்தால் போன் செய்து வரவழைக்கலாம். பாஸ்ட் ட்ராக், பாரதி, சென்னை கால் டாக்ஸி ஆகியோரது கணினிகளில் ஒருமுறை உங்கள் தொலைபேசி எண் பதிவாகிவிட்டால் போதும். அடுத்த முறையிலிருந்து அந்த நம்பரைக் கூறியதுமே அவர்களே உங்கள் முகவரி மற்றும் லேண்ட்மார்க் ஆகியவற்றை உங்களிடமே ஒப்பிப்பார்கள். வீட்டிற்கு வந்து நீங்கள் எல்லோரும் வண்டியில் ஏறியதும்தான் மீட்டரையே போடுவார்கள். முக்கியமாக ஆட்டோ டிரைவர்கள் உபயோகிக்கும் சாவு கிராக்கி என்ற வாழ்த்துச் சொற்களையெல்லாம் கேட்கத் தேவையில்லை. முக்கியமாக மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் தர வேண்டியதில்லை. எது எப்படியானாலும் சார்ஜ் செய்யும் முறை வெளிப்படையாக இருப்பதால் ஏமாற்றப்படுவதற்கு சான்ஸே இல்லை.

சென்னையில் ஆயிரத்துக்கும் மேல் இப்படிப்பட்ட டாக்ஸிகள் இருக்கின்றன. நிலைமை இப்படியிருக்க எதற்கு கார் வாங்கவேண்டும்? சொந்தக் காரினால் தொல்லைகளே அதிகம். டிரைவர் தொல்லை, பார்க்கிங் தொல்லை, மராமத்து தொல்லை என்று தொல்லையோ தொல்லை.

இன்னொரு விஷயம். 30 கிலோமீட்டர்கள் மேல் பயணம் செய்ய நேர்ந்து, 5 மணி நேரத்துக்குள் வீடு திரும்புவீர்கள் என்ற நிலை இருந்தால் டூரிஸ்ட் டாக்ஸிகள் இருக்கவே இருக்கின்றன. 5 மணி +30 கிலோமீடர்களுக்கு ரூபாய் 350 மட்டுமே. கால் டாக்ஸியில் சென்று காத்திருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் இதை விட அதிகம் ஆகும்.

ஆக, எல்லா சாத்தியக்கூறுகளுக்கும் சேவைகள் இருக்கும்போது எதற்கு சொந்தக் கார் வாங்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது