12/30/2005

கூகிள் என்னும் நண்பன்

நாட்கள் செல்லச் செல்ல கூகிளின் மேல் என் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. என் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அது இன்றியமையாத கருவியாகி விட்டது. சில நாட்களுக்கு முன் நான் கார்களில் பொருத்தப்படும் ரேடியோ ஆம்ப்ளிஃபையர்கள் சம்பந்தமாக ஒரு operating manual-ஐ ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட வணிகப் பெயரைத் தாங்கிய கருவி அது.

இந்த இடத்தில் நான் மொழி பெயர்ப்பு எவ்வாறு செய்கிறேன் என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது. ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை என்னைப் போன்றவர்கள் நேரடி மொழி பெயர்ப்பு என்று கூறுவோம். அதாவது வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்கோ அல்லது அதன் ஈடான மொழிக்கோ (ஆங்கிலம்) மொழி பெயர்ப்பதுதான் அது. அதுவே ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கொ அல்லது பிரெஞ்சுக்கோ மொழி பெயர்ப்பது ரிவர்ஸ் மொழி பெயர்ப்பு என்று ஆகிவிடும். இது உலகளாவிய நிலை. ஜெர்மனை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு நிலைமை நான் எனக்கு கூறிக் கொண்டதற்கு தலைகீழ் ஆகும்.

மொழிபெயர்ப்பு உலகில் இப்போதைய நிலை என்னவென்றால் முடிந்த வரை வேறு மொழியிலிருந்து தாய்மொழிக்குத்தான் மொழி பெயர்க்க வேண்டும், ரிவர்ஸ் மொழிபெயர்ப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும் நான் பல முறை அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது பற்றி நான் ஏற்கனவே போட்ட பதிவை மீள்பதிவு செய்துள்ளேன்.

இப்போது கூகிளுக்கு வருவோம். நான் மேலே கூறியபடி ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வாக்கியத்தை பிரெஞ்சில் எழுதியதும் அது சரியா, அதாவது பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒத்துக் கொள்வார்களா என்று பார்ப்பது முக்கியம். இல்லாவிட்டால் வாக்கியம் இலக்கண சுத்தமாக இருந்தாலும் அதற்கு உயிர் இருக்காது என்பதே உண்மை. அதற்காக இந்த இடத்தில் நான் பிரெஞ்சு கூகிளை திறந்து வைத்துக் கொண்டேன். நான் மொழி பெயர்த்த ஒரு வாக்கியத்தை தேடு பெட்டியில் போட்டு க்ளிக் செய்தேன். கிட்டத்தட்ட 10 hits கிடைத்தன. அதாவது நான் எழுதிய வாக்கியம் ஒத்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் இங்கு இன்னொரு சோதனை முக்கியம். அந்த வாக்கியம் வரும் தளங்கள் பிரெஞ்சுத் தளங்களாக இருக்க வேண்டும். ஆங்கிலத் தளங்களாக இருந்தால் அவையும் என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்த வேலையையே குறிக்கும். அவ்வளவு சிலாக்கியமானதாக அவற்றைக் கருத முடியாது. ஆகவே தளம் தளமாக அதையும் பார்க்க வேண்டியிருந்தது. என்ன ஆச்சரியம் அவற்றில் ஒன்று நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த கம்பெனியின் ஆம்ப்ளிபையரைப் பற்றியதே. ஆனால் என்ன பொருளின் நம்பரில் சிறிது மாற்றம் அவ்வளவே. மற்றப்படி பத்திகள் எல்லாம் அப்படியே இருந்தன. தளமும் பிரெஞ்சுத் தளமே.

பிறகு என்ன, வேலை சுலபம்தானே. அந்த சுட்டியில் குறிப்பிட்டிருந்த கட்டுரையை அப்படியே ஒரு word கோப்பில் நகலெடுத்துக் கொண்டு, நம்பர்களை மட்டும் தேவைக்கெற்ப மாற்றியதில் என் வேலைக்கான மொழிபெயர்ப்பு தயார். மூன்று நாள் எடுத்திருக்க வேண்டிய வேலை இப்போது ஒரே நாளில் முடிந்தது. சம்பந்தப்பட்ட கட்டுரை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவரால் செய்யப்பட்டிருந்ததுதான் இன்னும் உபயோகமான விஷயம். வாடிக்கையாளருக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி.

முன்பெல்லாம் பல நூலகங்களுக்கெல்லாம் சென்று படிக்க வேண்டியிருந்தது. இப்போது அதற்கானத் தேவை மிகவும் குறைந்து விட்டது. வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது. இதற்கு கூகிள் உதவுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/29/2005

ஆர். நரசிம்மன் - என். ருக்மிணி: ஆதர்சத் தம்பதியர்

அவர்கள் திருமணம் 1943-ல் நடந்தது. ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு பையன். ஆர்.என். என்று அவர் கூட வேலை செய்பவர்களால் அறியப்படும் நரசிம்மன் ஹிந்து நாளிதழில் ஒரு நிருபர். ருக்மிணி ஹவுஸ்வைஃப். வீட்டை நன்கு நிர்வாகம் செய்பவர். மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருந்தாலும் பிரைவேட்டாகத் தன் அண்ணன் துணையுடன் தானே படித்து இன்டர் வகுப்பு லெவலுக்கு பாடங்கள் கற்றவர். தன் மகனுக்கும் மகளுக்கும் ஆங்கில மற்றும் ஹிந்தி இலக்கணங்களின் அடிப்படையைக் கற்றுத் தந்தவர்.

ஆர். என். எழுதும் ரிப்போர்ட்கள் ஹிந்துவில் பை-லைன் இல்லாமல் வரும். மிஞ்சிப் போனால் "நமது நிருபரிடமிருந்து" என்றுப் போடுவார்கள். அவரைப் போல பல ரிப்போர்டர்கள் அங்கு உண்டு. அவர்கள் ரிப்போர்டுகளும் வரும். இந்தப் பெண்மணி இரவில் கணவர் வீட்டிற்கு வரும் போது அவரிடம் ஒரு குறிப்பிட்டக் கட்டுரையைக் காட்டிக் கேட்பார்: "ஏன்னா இது நீங்கள் எழுதியதா" என்று. முதல் முறை அவ்வாறு நடந்தப் போது ஆர். என். ஆச்சரியத்தில் மூழ்கினார். "எப்படிக் கண்டு பிடிச்சே" என்று மனைவியைக் கேட்க, அவர் "இல்லேன்னா, இது எனக்கு சுலபத்தில் புரிஞ்சுது, அதனால்தான்" என்றுக் கூறினார்.

அதன் பிறகு மனைவி அம்மாதிரி பல முறை தன் கணவரைக் கேள்வி கேட்க, ஒவ்வொரு முறையும் அவர் 100% சரியாகவே தன் கணவர் எழுதியக் கட்டுரையை அடையாளம் காண்பது ஒரு விளையாட்டுப் போலவே நடந்து வந்தது. தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ராஜாஜி அவர்களே பாராட்டியதைக் கூட ஆர்.என். பெரிசாக நினைக்கவில்லை. மற்றவர்கள் சட்டென்றுப் புரிந்துக் கொள்ளும் முறையில் எளிய ஆங்கிலத்தில் எழுதுவது என்பது எல்லாருக்கும் கைக்கூடாது. அது தனக்கு லகுவாக வந்ததை அவர் மனைவி வாயிலாகவே தெரிந்துக் கொள்வதை விட ஒரு கணவனுக்கு வேறு என்ன வேண்டும். அதைத்தான் அவர் பெருமையாகக் கருதினார்

1960, திசம்பர் 29-ஆம் நாள் ருக்மிணி அவர்கள் காலமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட 19 தனிமையான ஆண்டுகளைக் கழித்து செப்டம்பர் 9, 1979 அன்று ஆர்.என். தன் அருமை மனைவியிடம் சென்றார்.

இந்தத் தனிமை நிறைந்த ஆண்டுகளில் அவர் பல முறை தன் மகனுடன் அவன் அம்மாவைப் பற்றிப் பல விஷயங்கள் கூறுவார். தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்னால் ஆஸ்பத்திரியில் வைத்து தன் மகனிடம் இவ்வாறுக் கூறினார்:

"மற்றவர்களை பிரமிக்க வைக்கும் சொற்களைப் போடுவதால் எந்த மொழியும் சிறப்பதில்லை. மற்றவர்களுக்கு எளிதில் புரிய வேண்டியது மிக அவசியம். இதைத்தான் உன் அம்மா எனக்குச் சொல்லாமல் கூறியது. இதை எப்போதும் மறக்கக் கூடாது, டோண்டு".

அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. இன்று திசம்பர் 29. இது ஒரு மறுபதிவு.

12/26/2005

மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை

போன வருடம் என் பொறியியல் கல்லூரி நண்பனைப் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தேன், தொலைபேசியில். பேச்சுவாக்கில் அவன் தன்னுடைய அப்போதைய போஸ்டிங்கில் 2000 ஆண்டு ஜனவரி-2 அன்று சேர்ந்ததாகக் கூற, உடனேயே நான் "என்னடா உளறுகிறாய், அன்று ஞாயிற்றுக் கிழமை அல்லவா என்று கூற, "டேய் இன்னும் நீ அந்த வேலையை விடவில்லையா" என்று என்னைக் கலாய்த்தான்.

அது என்ன வேலை? சாதாரணமாக என்னிடம் தேதியைக் குறிப்பிட்டால் அது என்னக் கிழமை என்பதைக் கூற என்னால் முடியும். அதற்கென்று ஒரு ஃபார்முலா இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அது என்னவென்று எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளும் ஆசையுமில்லை. எப்போதும் நான் first principles-லிருந்தே இந்தக் கணக்கைப் போட விரும்புவேன். அந்தத் திறமை என்னிடம் என்னை அறியாமலேயே குடி புகுந்தது.

இதெல்லாம் ஆரம்பித்தத் தருணம் மட்டும் ஞாபகம் இருக்கிறது.

வருடம் 1968, நவம்பர் மாதம். நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. ஐந்தாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு மழை நிறைந்த பகல் வேளையில் லைப்ரரியில் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். மேஜை மேல் கல்லூரியின் பழைய ஆண்டு விழா மலர்கள் இருந்தன. புரட்டிப் பார்த்தேன். 1912-ஆம் வருட மலர் கிடைத்தது. என் தந்தை பிறந்த வருடம். அதைப் புரட்டிப் பார்த்தேன். நவம்பர் 1912-ல் நடந்த சில நிகழ்ச்சிகளைப் போட்டிருந்தார்கள். எதேச்சையாகக் கிழமையைப் பார்த்தால் ஒரு குறிப்பிட்டத் தேதியின் கிழமை 1968- ஆம் வருடத்துக்கான அதே தேதியுடன் ஒத்துப் போயிற்று. இரண்டுமே லீப் வருடங்கள். ஆக 1912 மற்றும் 1968 வருடங்கள் காலெண்டர் ஒன்றே. இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி 56 வருடங்கள். இங்கு என் மனதில் ஒரு ஜம்ப் நடந்தது. அதாவது 56-க்கு காரணிகள் 7,4 மற்றும் 2. இதில் 7 என்பதை ஏழு கிழமைக்கு வைத்துக் கொள்ளலாம், 4 என்பது லீப் வருட இடைவெளிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றியது. சரி, 2? உடனே 56-ஐ 2-ஆல் வகுத்துப் பார்க்க, 28 கிடைத்தது.

உடனே 1940 வருட ஆண்டு விழா மலரைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்? அதுவும் 1968-ன் கிழமைகளையே கொண்டிருந்தது. சரி, 14 வருட இடைவெளி? நோ சான்ஸ், ஏனெனில் 1954 லீப் வருடம் அல்ல. அந்த வருடத்துக் காலெண்டரை தேடக்கூட இல்லை. ஆக அன்று நான் கற்றுக் கொண்டது, 28 வருடங்களுக்கொரு முறை கிழமைகள் அப்படியே ரிபீட்டு என்று வரும்.

மேலே நடந்த நிகழ்ச்சிகளுக்கு சில மாதங்களுக்குப் பின்னால் ஒரு ஆங்கில நாவல் படித்து கொண்டிருந்தேன். அதில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 20, 1966 என்று இருந்தது. உடனே எனக்கு தோன்றியது, அடேடே, 1960 நவம்பர் 20 கூட ஞாயிறுதானே என்று. அந்தத் தேதி சென்னையில் பெரும் புயல், ஆகவே நன்றாக நினைவு இருந்தது. இதில் 1960 லீப் வருடம் ஆனால் 1966 லீப் வருடம் அல்ல. ஆகவே இந்த ஒற்றுமை மார்ச் முதல் தேதியன்றுதான் அமுலுக்கு வரும். இந்த மாதிரி என்னென்ன வருடங்கள் வருகின்றன என்று இன்னும் சில நாட்கள் கழித்து யோசித்து பார்த்தேன்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் ரங்கா ராவ் அவர்கள் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதாவது, ஒரு வருடத்தில் குறிப்பிட்டத் தேதியில் ஞாயிறு என்று வைத்துக் கொண்டால் அடுத்த வருடத்தில் அதே தேதியின் கிழமை திங்களாக வரும், நடுவில் பிப்ரவரி 29 வராத பட்சத்தில். அவ்வாறு வந்தால் அது செவ்வாயாக வரும். இதை வைத்து 1940-லிருந்து சோதித்து பார்த்தேன். லீப் வருடத் தொல்லையைக் குறைக்க மார்ச் மாதத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தேன்.

அதில் எனக்கு கிடைத்த ரிஸல்ட் இதோ. 1940, 1946, 1957 மற்றும் 1968 ஆண்டுகளில் கிழமைகள் மார்ச் 1-முதல் கிழமைகள் ரிபீட்டு ஆகும். அதாவது லீப் வருடம் 6 ஆண்டுகளுக்கு பிறகு, லீப்+1 வருடம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லீப்+2 வருடம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றும் லீப்+3 வருடம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிழமைகள் திரும்ப வரும். மார்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகுதான் நான் இங்கே கூறியது பொருந்தும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

என் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் தேதி மற்றும் கிழமையுடன் எனக்கு ஞாபகம் இருக்கும். அதை வைத்து மற்றவர்கள் ஏதாவது தேதி சொல்லும் போது கிழமையைக் கூற ஆரம்பித்தேன். பலர் ஆச்சரியப்பட்டனர், சிலர் எனக்கு ஜோஸ்யம் தெரியும் என்று கூட நினைத்து விட்டனர். ஒரு 19 வயது ஃபிகர் தன் கையை நீட்ட அவளிடம் உண்மை கூற மனமில்லாது கையை சிறிது நேரம் பிடித்துப் பார்த்து (மெத்து மெத்தென்று இருந்தது, கையைத்தான் கூறுகிறேன் ஐயா) பாவ்லா காட்டியதை இந்த நேரத்தில் மறந்து விடுவோம்.

பிறகு ஒரு காலண்டர் வருடத்தில் கிழமைகளின் வரிசையை ஆராய்ந்தேன். லீப் ஆண்டுகள் இல்லாத போது, பிப்ரவரி-மார்ச்-நவம்பர், ஏப்ரல்-ஜூலை, செப்டம்பர்-திசம்பர் மாதக் கிழமைகள் ஒன்றாக இருக்கும். லீப் வருடங்களில் பிப்ரவரி ஆட்டத்தை விட்டு அகலும், ஆனால் ஜனவரி-ஏப்ரல்-ஜூலை கிழமைகள் ரிபீட்டு ஆகும்.

பல ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் கடுப்படித்த வண்ணம் இருந்தன. ஒரு நாள் திடீரென ஞானோதயம் வந்தது. இந்த ஆண்டு மே மாதம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் ஒத்துப் போகும். அதே போல இந்த ஜூன் அடுத்த பிப்ரவரியுடன் ஒத்துப் போகும். அதற்காக அடுத்த பிப்ரவரி 30 இந்த ஜூன் 30 கிழமைகள் ஒன்றா என்றெல்லாம் கேட்டு வெறுப்பேத்தக் கூடாது. நான் செய்வதெல்லாம் இருந்ததை இருந்தபடி ஆனால் சற்று வரிசைப்படுத்திக் கூறுவதேயாகும்.

இன்னொரு விஷ்யம், வருடத்து 364 நாள் என்றிருந்தால் மேலே கூறியத் தொல்லைகள் ஒன்றும் கிடையாது. ஒரே காலண்டர் அத்தனை ஆண்டுகளுக்கும் வரும். ஆனால் என்ன, அவ்வாறு செய்தால் வேறு தொல்லைகள் வரும். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் கிறிஸ்துமஸ் கடும் கோடையில் வரும். இப்போதே அப்படித்தான் என்று துளசி அவர்கள் கடுப்படிக்கக் கூடாது. நீங்கள் இருப்பது பூமத்திய ரேகைக்குக் கீழே. இது வேறு ஆட்டம்.

என் விஷயத்துக்கு மறுபடியும் வருவோம். நான் சாதாரணமாக கிழமையைக் கூற சில நிமிடங்கள் ஆகும். கூறப்பட்டத் தேதிக்கு மிக அருகில் உள்ள தேதியில் என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஏதாவது இருந்தால் அதிலிலிருந்து வொர்க் அவுட் செய்வேன். ஒருவர் 1964 ஜனவரி முதல் தேதிக்கானக் கிழமையைக் கேட்க, அவரிடம் புதன் என்று கூற, எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்க, அவரிடம் ஏப்ரல் முதல் தேதி 1957 ஆம் வருடம் திங்கள், அதிலிருந்து கண்டுபிடித்தேன் என்று கூறி விடுவேன். ஆகவே நேரம் பிடிக்கும். அதே நேரத்தில் என் வாழ்வில் நடந்த அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை அசைபோடவும் நேரம் கிடைக்கும். அதனால்தான் நான் என் பதிவுகளில் சமீபத்தில் 1955 வருடத்தில் என்றெல்லாம் எழுத முடிகிறது.

உதாரணமாக, மேலே குறிப்பிட்ட 1957, ஏப்ரல் 1-ஆம் தேதி நயா பைசா அமுலுக்கு வந்தது, அதன் சம்பந்தப்பட்ட நினைவுகள், அன்று என் வாத்தியார் கே. ராமஸ்வாமி அய்யர் அவரிடம் உதை வாங்கியது, நான் மட்டும் உதை வாங்குவானேன் என்ற நல்லெண்ணத்தில் என் நண்பன் டி.வி. ரங்காச்சாரியையும் போட்டுக் கொடுத்தது எல்லாம் ஞாபகம் வரும். மறுபடியும் என் வயது 11 ஆகி விடும். அம்புடுத்தேன்.

போன ஆண்டு என்னிடம் ஒருவர் மே 27, 1964 என்னக் கிழமை என்று கேட்டு வாயை மூடும் முன்னாலேயே, புதன் என்று கூறினேன். நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நேரம் கூட எடுக்காததைக் கண்டு வியப்படைந்த அவர் காரணம் கேட்க, அன்று நேரு அவர்கள் இறந்த நாள் என்று கூறினேன். தானும் அதை வைத்துத்தான் கேட்டதாகக் கூறி விட்டு அவர் நடையைக் கட்டினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/24/2005

C.P.W.D. அனுபவங்கள் - 2

ஜனவரி 70-ல் என் இன்ஜினியரிங் தேர்வு ரிஸல்ட் வந்தது. நல்ல வேளையாக பாஸ் செய்தேன். உடனே வேலை வாய்ப்பு தேடித்தரும் அலுவலகத்தில் பதிவு செய்தேன். பிறகு வழக்கம் போல என் ஜெர்மன் படிப்பைத் தொடர்ந்தேன். வேலை? அது கிடைக்க சரியாக ஒரு வருடம் ஆயிற்று. அதே வருடம் நவம்பர் மாதம் மத்தியப் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வுகாக எனக்கு அழைப்பு வந்தது. அடுத்த ஜனவரியில் பம்பாயில் போஸ்டிங் கிடைத்தது. இந்த வேலைக்காக நான் ஒரு பைசாவும் செலவழிக்கவில்லை, போஸ்டல் ஆர்டர் என்ற ரூபத்தில். 1974 வரை பம்பாய் வாசம். அந்தக் காலக்கட்டத்தைப் பற்றி ஏற்கனவே 3 பதிவுகள் போட்டுள்ளேன். பார்க்க:

1)
2)
3)
4)

பம்பாயில் இருந்த முழுக்காலமும் குடும்பக் கவலையின்றி அறை நண்பர்களுடன் கொட்டம் அடித்தேன். வெறும் கோப்புகள் பார்க்கும் வேலை என்பதால் வேலை காரணமாக மன அழுத்தம் ஏதும் இல்லை.

சென்னையில் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள் இருந்தேன். ஒரே போஸ்டிங்தான், மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் சைட் வேலை. கட்டிடங்களின் மின்மயமாக்கம், தெரு விளக்குகள், தரையின் கீழ் கேபிள்கள் இடுவது எல்லாம்தான். நல்ல வேளையாக மராமத்து வேலையோ அல்லது ஸ்டோர்ஸ் வேலையோ இல்லை. கூரைகளுக்கு ஸ்லாப் போடும்போது மின்னிழைகள் செல்வதற்கான காண்ட்யூட் பைப்கள் போடுவதை மேற்பார்வை செய்து அளவை புத்தகத்தில் ஏற்றுவது, அவ்வப்போது காண்ட்ராக்டர் பில்கள் போடுவது என்று மூச்சு விடாது வேலை.

ஃபிரெஞ்சு வேறு கற்க ஆரம்பித்திருந்தேன். காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் இரவு 9 மணியளவில்தான் வீட்டுக்கு வர முடியும். நங்கநல்லூர் வீட்டிலிருந்து மீனம்பாக்கம் ஸ்டேஷன் வரை சைக்கிள், அங்கிருந்து கிண்டி வரை மின் ரயில், கிண்டியிலிருந்து கரையான் சாவடிக்கு பஸ், கரையான் சாவடியிலிருது ஆவடி அண்ணா சிலை வரை இன்னொரு பஸ், ஆவடியிலிருந்து சி.ஆர்.பி.எஃப். வரை இன்னொரு பஸ் என்று பயணமே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகி விடும். மாலை அல்லியான்ஸ் பிரான்சேஸில் மாலை வகுப்புக்கள் வேறு. பயண நேரத்தில்தான் பாடங்கள் படிப்பது. அலுவலகத்திலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பு என்று இருந்ததால்தான் ஃபிரெஞ்சு படிப்பு வெற்றிகரமாக முடிந்தது.

மத்தியப் பணித்துறையில் சேர்ந்த பிறகு நான் செய்த முக்கிய வேலைகள் எதுவுமே எங்கள் பொறியியல் கல்லூரிப் பாடத் திட்டத்தில் இல்லை என்பதுதான் வேடிக்கை. இருப்பினும் ஏற்கனவே அச்சடித்த ஸ்பெசிஃபிகேஷன்கள், வேலை அட்டவணைகள் எல்லாம் எங்கள் முன்னோடிகள் செய்து வைத்துவிட்டுப் போயிருந்ததால் வேலை சுலபத்தில் பிடிபட்டது. பம்பாயில் இருந்ததைப் போல் சென்னையில் பொறுப்புகள் இல்லாமல் இருக்க முடியவில்லை. கல்யாணம் வேறு ஆகியிருந்தது.

என்னுடைய வேலை அனுபவங்களைப் பற்றிக் கூறும்போது அந்நிய மொழிகள் பற்றியும் கூற வேண்டியிருக்கும். ஏனெனில் வெவ்வேறு தருணங்களில் வெவேறு மொழிகளைக் கற்றுக் கொண்டிருந்தேன். என்னுடைய எலெக்ட்ரிகல் கோட்டகப் பொறியாளருடன் இது சம்பந்தமாக நேர்ந்த அனுபவத்தை இப்பதிவில் போட்டுள்ளேன்.

சிவில் கோட்டகப் பொறியாளருடன் எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் நட்பு இம்முறையிலேயே வந்தது. அதைப் பற்றிக் கூறும் முன்னால் பின்புலனைக் கூறுவேன். சிவிலுக்கும் எலக்ட்ரிகல்லுக்கும் எப்போதுமே ஆகாதுதான். மேலும் கோட்டகப் பொறியாளருக்கும் என்னை போன்ற இளநிலைப் பொறியாளருக்கும் எப்போதுமே கடக்க முடியாத இடைவெளி உண்டு. அந்த இடைவெளி நானும் சிவில் கோட்டகப் பொறியாளரும் பிரெxசு வகுப்புக்கு போனதால் சுலபமாகக் கடக்கப்பட்டது. பிரெஞ்சு வகுப்பில் அவர் எனக்கு ஒரு வருடம் ஜூனியர்!! பாதியில் வகுப்பை வேறு விடவேண்டியதாயிற்று. நான் மட்டும் விடாமல் தொடர்ந்துப் எல்லா பரீட்சைகளையும் பாஸ் செய்ததில் அவருக்கு என் மேல் தனி அபிமானம். எப்போதுக்கு சைட்டுக்கு வந்தாலும் என்னைக் வரவழைத்து பேசுவார். சிவில் ஏ.இ.க்களுக்கெல்லாம் எரிச்சலாக இருக்கும்.

ஒரு நாள் அவர் என்னையும் சென்னை வரை தன் ஜீப்பில் வரச் சொன்னார். அவர் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். அவரிடம் "சார் இப்படி அனியாயமாக பிரெஞ்சு படிப்பை விட்டு விட்டீர்களே, எல்லாமே மறந்து விடுமே" என்று அங்கலாய்த்தேன். அவரும் "என்ன செய்வது ராகவன், வேலைப் பளு அம்மாதிரி. நீங்கள் கொடுத்து வைத்தவர். படிப்பை முடித்தீர்கள். இருப்பினும் நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மன் படித்தேன். இப்போது கூட ஜெர்மன் பேசுவேன்" என்றார். எனக்கு ஒரே சந்தோஷம். எங்கு ஜெர்மன் படித்தார், அந்த நிலை வரை படித்தார், எப்போது படித்தார் என்பதையெல்லாம் மடமடவென்று ஜெர்மனில் கேட்டேன். ஜீப் மேலும் அரை கிலோமீட்டர் சென்றது. அப்போது அவ்ர் மெதுவாகத் தமிழில் கூறினார். "ராகவன் உங்களுக்கு ஜெர்மனும் தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் இதை நான் கூறியேயிருக்க மாட்டேன் தெரியுமா" என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்குத்தான் மிகவும் கஷ்டமாகப் போயிற்று. "மன்னிக்கவும் சார்" என்று கூற அவர் என் தோளில் தட்டி ஆறுதல் சொன்னார். உண்மையிலேயே உயர்ந்த மனிதர்.

மற்ற அனுபவங்கள் அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/20/2005

தர்க்க சாஸ்திரம் - 1

கார்த்திக் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில பதிவுகளுக்கான உந்துதலைத் தந்து விட்டார். அவை நன்றாக உங்களுக்குப் பட்டால் நன்றி அவருக்கு, நன்றாக இல்லையென்றால் கண்டனம் எனக்கே. என்ன, சரியானப் பங்கீடுதானே?

இதில் நடு நடுவே ஆங்கிலம் வரும். ஏனெனில் தர்க்க சாஸ்திரம் சம்பந்தப்பட்ட சில தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு என்னிடம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சொல்லாட்சி இல்லை.

தர்க்க சாத்திரம் என்பது விஞ்ஞானத்துக்கு விஞ்ஞானம், கலைக்குக் கலை என்று கூறுவார்கள். விளக்குவேன். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் எல்லாமே தர்க்க சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டவையே. அதே சமயம் அவற்றை ஒழுங்கான முறையில் அணிவகுத்து வெளியிடுவது ஒரு கலையே. Hence logic is a science of sciences and art of arts.

விஞ்ஞானப் பிரிவுகள் இருவகைப்படும். ஒரு வகை இருப்பதை இருப்பது போலக் கூறுவது. உதாரணம் வான சாஸ்திரம். கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பது நாம் விடாது கிரகணங்களை நோக்கியதாலும் அதைப் பற்றி பரிசோதனைகள் மேற்கொண்டதாலும் நமக்குத் தெரிய வருகிறது. இப்போது நாம் துல்லியமாகக் கிரகணங்களை கணிப்பது அவற்றை பற்றி நாம் கண்டுணர்ந்ததன் எதிரொலியேயாகும். நாம் சொல்லி அவை வருவதில்லை. இவைகளை positive sciences என்று கூறுவார்கள். மற்றொரு வகை எவ்வாறு இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது. உதாரணம் எதிக்ஸ், தர்க்க சாஸ்திரம் போன்றவை. தர்க்கம் செய்ய விதிகள் உண்டு. அவற்றை மீறினால் தர்க்கம் தவறாகி விடும்.

இப்போது தர்க்க சாஸ்திரத்துக்கு வருவோம். அவை deduction மற்றும் induction எனப்படும். Deduction என்பது பொது விஷயங்களிலிருந்து குறிப்பிட்ட விஷயங்களுக்கு வருவதாகும். உதாரணம்:

All men are mortal.
Socrates is a man
___________________
Therefore Socrates is mortal.
This is a valid argument using categorical syllogism.

Categorical syllogisms are named as such because they divide things up into categories. These form groups which can be analyzed using set theory and displayed using Venn diagrams.

There are six rules that categorical syllogisms must obey:

All syllogisms must contain exactly three terms, each of which is used in the same sense.
The middle term must be distributed in at least one premise.
If a major or minor term is distributed in the conclusion, then it must be distributed in the premises.
No syllogism can have two negative premises.
If either premise is negative, the conclusion must be negative.
No syllogism with a particular conclusion can have two universal premises.
When you hear people talking about syllogisms without describing what type of syllogism, they often mean categorical syllogisms.

Categorical syllogisms are sometimes viewed as being a 'spatial reasoning' as it divides the world up into 'spaces'. This is creating a 3D image of the categories, or sets.

The basic flaw that often appears is the an assumption that if you have one characteristics of a group, you have all of the characteristics of the group. This leads people into stereotyping and comments such as 'Oh, they are all like that.'

Whenever you hear a generalization (all, never, some, most, etc.) there is a good chance that there is a categorical syllogism in there that you can challenge.

On the other hand, you can create your own categorical syllogisms, which will often go unchallenged.

என்ன தலை சுற்றுகிறதா. அதுதான் லாஜிக்.

சில வாதங்கள் பார்ப்பதற்கு சரியாகத் தோன்றலாம் ஆனால் அவை தவறானவை.

இப்போது பாருங்கள்:

All soverigns are circular.
Queen Elizabeth is a sovereign
Therefore Queen Elizabeth is circular.

The above argument commits the fallacy of ambiguous middle. இங்கு பொதுவாகக் கூறப்பட்டது sovereign. இதற்கு ஒரு பொருள் சவரன் இன்னொரு பொருள் அரசன் அல்லது அரசி. இரண்டும் ஒரே பொருளுடன் இருப்பது அவசியம். இங்கு அவை வெவ்வேறு பொருளில் கூறப்பட்டுள்ளன. அவை இங்கு பொருந்தா. இவ்வாறு பல வாதங்களிலிருந்து தவற்றைக் கண்டுபிடிப்பதே லாஜிக்கின் வேலை என்று கூடப் பொருள் கொள்ளலாம்.

இது சம்பந்தமாக ஒரு பலான ஜோக் உண்டு. ஆனால் அது இங்கு வேண்டாம்.

சமீபத்தில் கல்வியாண்டு 1962-63-ல் புதுக்கல்லூரியில் எங்களுக்கு லாஜிக் போதித்தவர் திரு. முகம்மத் காசிம் அவர்கள். அவர் ஓர் எடுத்துக்கட்டு கூறுவார். நடப்பது மனிதனுக்கு இயல்பு ஆனால் ராணுவத்தில் தாளத்துக்கேற்றவாறு நடப்பதைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதே போல சிந்திப்பது என்பது எல்லோரும் செய்வது என்பது உண்மையானால் தர்க்க சாஸ்திரம் சில விதிகளுக்கு உட்பட்டு தர்க்கம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறது என்பார் அவர்.

அடுத்தப் பதிவில் மற்றத் தாளங்களைப் பார்ப்போம். அவற்றில் தோன்றக்கூடியத் தப்புத்தாளங்களையும் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/18/2005

சோ அவர்களைப் பற்றி

ஆ ஊ என்றால் உடனே சோ அவர்களை இழுப்பதே இங்குத் தமிழ்ப் பதிவுகளில் எல்லோருக்கும் வேலையாகிப் போயிற்று. இப்போது சோ உத்தி என்று வேறு கூற ஆரம்பித்து விட்டார்கள். "அவருக்கு ஆதரவாக டோண்டு எழுதுவதற்குக் காரணமே சோ அவர்கள் பார்ர்ப்பனர் என்பதுதான் என்று அவரே கூறிவிட்டார்" என்று என்னைப் பற்றி எனக்கே புதுத் தகவலே தந்து அருள் பாலிக்கிறார் ஒருவர். "என்னுடைய எழுத்துக்களிலிருந்து அதை நிரூபிக்க முடியுமா" என்று சவால் விட்டால் என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு நிலையைக் காரணம் காட்டி மேலும் அசடு வழிகிறார். அதே சமயம் சோவை எதிர்ப்பது அவர் பார்ப்பனர் என்பதால் இல்லை என்று வேறு எழுதி அப்பா குதிருக்குள் இல்லையென்று போட்டு உடைத்து விடுகிறார்.

அருண் அவர்கள் இந்தப் பதிவில் நான் பார்த்தப் பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டது என்னவென்றால் பலருக்கு நானும் அருணும் வைக்கும் வாதங்களைப் பாயிண்ட் பை பாயிண்டுகளாக பதில் சொல்ல முடியவில்லை. அப்பதிவிலிருந்தும் வேறு சில பதிவிலிருந்தும் நான் பார்த்ததை இங்கே பட்டியலிட முயற்சிக்கிறேன். ஒரு பதிவில் இடமில்லையென்றால் பகுதி 2 கூட இப்பதிவுக்கு வரலாம்.

முதலில் அருண் அவர்கள் எழுதியது.
"(1) இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது இதிகாசங்களிலும், வேதங்களிலும் அவருக்குப் பெருத்த மரியாதையும் பண்டிதமும் உண்டு. அவற்றைப் பற்றி அவர் எழுதியிருக்கும் மஹாபாரதம் பேசுகிறது, இப்போது எழுதி வரும் இந்து மகா சமுத்திரம் போன்றவைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

(2) தமிழ் தமிழ் என்று மொழி மேல் உள்ள வெறியினால் மற்ற மொழிகளின் மீது தார் பூசுவதோ அல்லது அதற்காக பந்த், கடையடைப்பு போன்றவை நடத்துவதோ கடுமையாய் எதிர்ப்பவர். நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தனது ஆசையைப் பல சமயங்களில் வெளிப்படுத்துபவர்.

(3) தீவிரவாத இயக்கங்களை பயங்கரமாய் எதிர்ப்பவர். அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருபவர். தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் …அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வருபவர்.

(4) பி.ஜே.பி தலைவர்கள், அந்தக் கட்சி மற்றும் த.மா.கா, மூப்பனார் போன்றோரிடம் மிகப் பரிவு கொண்டிருப்பவர். இருப்பினும் அவர்களை எங்கெங்கு திட்ட வேண்டுமோ அல்லது கிண்டல் செய்ய வேண்டுமோ அங்கே தயங்காமல் அவற்றையெல்லாம் செய்து, நார் நாராய் கிழிப்பவர்.

(5) வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்.

(6) எந்த ஒரு தலைவரின் தனிப் படத்தையும் அட்டையில் போட்டு கௌரவிக்காத துக்ளக் மூலம், நல்லகண்ணுவின் புகைப்படத்தைப் போட்டு, அவரின் நேர்மையான அரசியலைப் பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து எழுதியவர். நேர்மையான அரசியல் தலைவர்களை, அவர்களின் திறமைகளை பாராட்டத் தயங்காதவர். தனக்குக் கருத்து ரீதியாகப் பிடிக்காத தலைவர்களிடம் கூட, பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தால்…சமயம் கிடைக்கும் போது, அதை வெளியே சொல்லத் தயங்காதவர்.

(7) இட ஒதுக்கீட்டை வைத்துத் தற்போதைய அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டு வங்கி அரசியலை எல்லாம் புள்ளி விவரங்களோடும், ஒரு வக்கீலின் வாதாடும் திறமையோடும் விவாதிப்பவர்.

(8) அசத்தலான நகைச்சுவையுணர்வும்,புத்தி கூர்மையும் கொண்டவர். அவர் இயக்கிய அரசியல் நகைச்சுவைப் படமான முகம்மது பின் துக்ளக், மற்றும் திரைப்படங்களைக் கிண்டலடித்து எடுத்த தொலைக்காட்சித் தொடரான சரஸ்வதியின் செல்வன் போன்றவற்றை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்குமளவுக்கு தீர்க்கதரிசனப் பார்வையோடு எழுதி,இயக்கியவர்.

(9) இது எல்லாவற்றையும் விட, சமீபத்திய குஷ்பு பிரச்சினை என்று மட்டுமல்ல, பெண்ணியம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் எப்போதும் நக்கலும், கிண்டலும் அடிக்கக் கூடியவர். குஷ்பு சொன்ன கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், ஆனால் அவரை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

(10) அப்துல்கலாம் எது செய்தாலும் ‘ஆஹா ஓஹோ’ என்று பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுத ஆரம்பிக்கவும், எப்படி அப்துல் கலாம் எது சொன்னாலும் வியாபாரமாக்கப்படுகிறது என்று அதையும் கிண்டலடித்துத் தள்ளியவர். தமிழில் நையாண்டி, கண்ணியமான அரசியல் நகைச்சுவை போன்றவற்றில் தனி இடம் பிடித்து வைத்திருப்பவர்.

அவரது பல கருத்துக்களில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வரும் ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவும் சில இடங்களில் இடறியிருக்கலாம், அவரது கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடு இல்லாமல் போகலாம்…ஆனால், தமிழகப் பத்திரிக்கையுலகிலும் இன்ன பிற கலைத்துறைகளிலும் அவருக்கென்று இருக்கும் இடம் அலாதியானது, அசைக்க முடியாதது! எல்லோருக்கும் பிடித்தமான விதமாக எந்த ஒரு மனிதராலும் இருந்து விட முடியாது…சோ மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், அவரது எழுத்தை ரசிப்பது என்பதும், அவரது பாணி அரசியல் விமர்சனமே சகுனித்தனம்,amusing என்றெல்லாம் வலைப்பதிவுலகில் அவ்வப்போது விமர்சனம் வைக்கப்படும் போது, அவரை ரசிப்பவர்களும் காரணங்களோடு பதிவு செய்வது அவசியமாகிறது. எனக்கும் கூட, சோ விமர்சகர் என்ற நிலையைத் தாண்டி த.மா.கா-தி.மு.க-ரஜினி கூட்டணியில் பெரும் ஆர்வம் காட்டியதிலும், பெண்கள் குறித்த அவரது அபிப்ராயத்திலும் கருத்து வேறுபாடுகளுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பக்குவமும், அவற்றைக் கட்டுரையாய் எழுதினால் (நன்றாக இருந்தால்) பிரசுரிக்கும் தில்லும் சோவுக்கும், அவர் நடத்தும் துக்ளக்கிற்கும் உண்டு என்று நம்புகிறேன். துக்ளக் ஹேராமைப் பற்றி எழுதிய விமர்சனத்தை, நான் கிழித்து எழுதியதைப் பிரசுரித்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஆரம்பித்த விதமே "இது நாள் வரை அரசியலும் அரசியல் சார்ந்த இடத்திலுமே குப்பைக் கொட்டிக்கொண்டிருந்த துக்ளக், நீண்ட நாட்களுக்குப் பிறகு கலையும் கலை சார்ந்த இடத்தில் கொட்டியிருக்கிறது" என்று இருக்கும். அங்ஙனமே பிரசுரமும் ஆனது."

அருண் அவர்களே, நீங்கள் என்னதான் நம்பரெல்லாம் கொடுத்து எழுதினாலும் ஒரு பூட்டப்பட்ட மனநிலையில் உள்ளவர்களுக்கு அவை புரியாது, அவற்றைப் புரிந்து கொள்ளவும் அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்தான்.

இப்போது கார்த்திக் அவர்கள் எழுதிய இப்பதிவுக்கு வருவோம். சோ அவர்கள் எம்.பி. யாக இருந்து ஆற்றியப் பணிகளை மறுக்க இயலாத நிலையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

"//"எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக, சோவை "வாய்ச்சொல்லில் வீரரடி" என்று சொல்ல முடியா வண்ணம்" // என்று எழுதவேண்டும் என்றால், இது என்ன அயோக்கியத்தனமாக இருக்கவேண்டும்? சரி இவருக்காக பிற எல்லாகட்சிகளிலும் இருக்கிற/இருந்த எம்.பிக்கள் கட்டிய கக்கூஸ்களை, பள்ளிகளை, போட்ட ரோடுகளை,சமத்துவ புரங்களை, மதிய உணவுகளை, பழங்குடி முன்னேற்ற ஏற்பாடுகளை எங்காவது கஷ்டப்பட்டு தேடிபிடித்து பட்டியலிட்டால் அருண் என்ன எழுதிய வாக்கியத்தை திரும்பப்பெற்றுக்கொள்வாரா?"

அதற்கு நான் அங்கு கொடுத்த பதில்:
"அதைத்தான் செய்து பாருங்களேன். அதில் பெரும்பான்மையான கேஸ்களில் சம்பந்தப்பட்ட எம்.பி. அடித்தக் கமிஷன்களும் கூடவே வரும். சோ அவர்கள் ஏதாவது கமிஷன் அடித்தார் என்று உங்களால் நாக்கின் மேல் பல் போட்டுப் பேச முடியுமா?

அதைக் கூறினால் அவர் தன் கடமையைத்தானே செய்தார் எனக் கூறி விட வேண்டியது. மற்ற எம்.பி.க்கள் செய்ததைப் பற்றிப் பேசும்போது மட்டும் ஊரில் நடக்காததையா செய்து விட்டார்கள் என சப்பைக்கட்டு கூறிக் கொள்வது. இதே வேலையாகப் போயிற்று."

இப்போது முத்து அவர்கள் எழுதிய இப்பதிவுக்கு வருவோம்.

அவர் எழுதுகிறார்:
"இது போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்."
அதற்கு என் பதில்:
என்ன உளறல் ஐயா? நான் அவ்வாறு கூறியதை நிரூபிக்க முடியுமா? அவரைப் பற்றி மூன்று பதிவுகள் போட்டுள்ளேன். பல பதிவுகளிலும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். நான் கூறாத ஒன்றை கூறியதாகக் கூறுவது உங்களுக்கு அழகில்லை.

"திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."
என் பதில்:
அதாவது நீங்கள் சோவை எதிர்ப்பதால் உங்களை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று கூறக்கூடாது அப்படித்தானே? ஆனால் என்னைப் போன்றவர்கள் சோவை ஆதரிப்பது மட்டும் எங்கள் பார்ப்பன ஆதரவைக் குறிப்பிடும் என்று நீங்கள் கூறுவதை என்னவென்று கூறுவது? அதற்கு மற்றவர்கள் போடும் பின்னூட்ட ஜிஞ்சாக்கள் காதைத் துளைக்கின்றன.

"அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?"

அதற்கு நான் இட்ட பதில்:
"சொன்னாலும் சொல்லாவிட்டாலும் லஞ்சம் வாங்குவதை விஞ்ஞான பூர்வமாகச் செய்தவர்கள் திமுகவினரே. அந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது அவற்றைப் பற்றிப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்தவன் நான்.

அதே சோ 1975-ஜூன் மாதத்தில் எழுதியதைப் பற்றி நான் என் பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளேன். "வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.

கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.

ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை."
பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
இந்த ஆண்மை எந்த வேறு எவ்வளவு பத்திரிகையாளருக்கு இருக்கிறது?

துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.

ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விற்பனையை பெருக்கிக் கொள்ள இலவச பற்பொடி தரும் இக்காலத்தில், கவர்ச்சி, திரை செய்திகள், கிசு கிசுக்கள் இல்லாது இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை போட்டு வருகிறார். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதியாவது நேர்மையுடன் நடந்து கொண்டாலே பத்திரிகை உலகம் உருப்பட்டுவிடும்."

முத்து அவர்கள் மேலும் எழுதினார்:
"dondu அண்ணா, உங்களுக்கு புரிவது கடினம்..படிக்கிற மத்த ஆளுங்க புரிஞ்சுக்குவாங்க...உங்க பதிவுகளோட திரண்ட கருத்து அதுதான்...போதுமா...
மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.. (emphasize mine)
அதற்கு நான் இட்ட பின்னூட்டம்:
"எவ்வளவு நாளைக்கு? நான் கூறிய மத்ததுகளை மறுபடியும் இங்கே திருப்பிக் கூறுவேன்.
1. நெருக்கடி நிலை வந்தப் போது (சமீபத்தில் 1975-ல்) அவர் தைரியமாக கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசியது. மற்ற பத்திரிகையாளர்கள் மாநில திமுக அரசுக்கு தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்தப்போது மத்திய அரசை விமசரிக்க உரிமை இல்லாத நிலையில் மாநில அரசையும் விமசரிக்க மாட்டேன் என்று கூறியது.
2. கருணாநிதியின் அரசை சமீபத்தில் 1976-ல் கலைத்தப் போது தைரியமாக அவர் வீட்டுக்குச் சென்று தன் ஆதரவை அவருக்குத் தெரிவித்த ஆண்மையானச் செயல். வேறு எந்தப் பத்திரிகைக்காரரும் அக்காலத்தில் அதை செய்யத் துணியவில்லை. திமுகவினர் பலரே கருணாநிதியை தவிர்த்தனர். அந்த ஆண்மையைப் பற்றிக் கேட்டேன். அதுவும் நீங்கள் பதில் கூறவேண்டிய மற்றதுதான்.
3. மற்றப் பத்திரிகைகள் எல்லாம் கிசு கிசுவெல்லாம் எழுதி அதில் ஜீவிதம் நடத்தும்போது துக்ளக் மட்டுமே தன் தரத்தைக் காப்பாறிக் கொண்டுள்ளது. அது இன்றைக்கும் தொடர்கிறது. இதுவும் நீங்கள் பதில் கூற வேண்டிய "மத்ததைச்" சேர்ந்ததுதான். இதற்கும் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
4. கேள்வி கேட்கவே பணம் வாங்கும் எம்.பி.க்களுக்கிடையில் தனக்களிக்கப்பாட்ட நிதியை இவர் நல்லக் காரியங்களுக்கு செலவழித்து பைசா விடாமல் கணக்கு காட்டுவது. எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதையும் கூறுங்கள்.
5. சமீபத்தில் 1975 என்று நான் எழுதும்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும், எல்லாவற்றையும் நானே அக்காலக் கட்டத்திலேயே நேரில் படித்து அறிந்தவன் என்று.
6. என்னமோ பார்ப்பனர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு என்று கூறுகிறீர்களே. வரும் பொங்கலன்று சென்னையில் இருந்தால் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வாருங்கள், வந்து பாருங்கள். ஒவ்வொரு அரசியல் வியாதியும் லாரி ஏற்பாடு செய்து பிரியாணிப் பொட்டலங்கள் கொடுத்து தங்கள் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் இக்காலத்தில் அது ஒன்றும் இல்லாமலேயே அவர் கூட்டத்துக்குத் திரளும் ஆட்களைப் பாருங்கள். அதில் எல்லா ஜாதியினரும், மதத்தவரும் இருப்பதைப் பார்க்கலாம். அது வரைக்கும் நான் போட்ட இப்பதிவையும் பார்க்கவும். பார்த்துவிட்டு அதையும் அந்த மத்ததில் சேர்த்து பதில் கூறவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
"சமீபகாலமாக பிஜேபி பிரமுகர்கள் ரகசியமாகவோ, நேரடியாகவோ கேமராவை வைத்தால் உச்சகட்ட ஆர்வத்தில் எதையாவது செய்து எசகுபிசகில் சிக்கிவிடுகிறார்கள்"
இதில் என்ன கேலியோ தெரியவில்லை. தான் சேர்ந்த கட்சியானாலும் அவர் கிண்டல் செய்யாமல் விடுவதில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. ஆனால் தன் கட்சித் தலைவரோ, அவர் மகனோ விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று ஒப்புக்கு கூறிக் கொண்டே அவர்கள் செய்வது எல்லாவற்றையும் சப்பைகட்டும் கொ.ப.செ.க்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

சோ தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வதையும் சிலர் விமரிசனம் செய்தனர். நான் கேட்கிறேன் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய முடியும் என்று?

மொத்தமாகக் கூறுகிறேன், அவர் பத்திரிகையை நாகரிகமான முறையில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் செய்கிறார் என்பதை உங்களால் மறுக்க இயலுமா?

அதுதானே முக்கியம். மற்றப்படி அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவுப்படித்தான் நடக்கும்."

முத்து அவர்கள் மேலும் எழுதியது:
"சோ வோட பிளஸ்ஸை பற்றி எழுதறததுக்கு நான் எதற்கு தனிப்பதிவு போடறேன்?. நான் சொன்னது அவரோட மைனஸ்.....

பிளஸ்ஸை பத்தி எனக்கு தெரியாது ..நான் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில தங்கமா இருந்து சமுதாயத்துக்கு நச்சு கலந்தா என்ன பண்ணறது?....

கொலைகாரன் கூட பக்திமான் வேடத்தில் ஏன் சாமியார் வேடத்தில் கூட வரும் காலம் இது.... நேர்மையில்லாத புத்திசாலித்தனம் ஆட்சி செய்யும் நேரம் இது......"
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால் நான் கொடுத்த சோ அவர்கள் பற்றிய ப்ளஸ் பாயிண்டுகளைப் பற்றி அவருக்கு நிஜமாகவே ஒன்றும் தெரியாது என்பதுதான். அது தேவையும் இல்லை என்று வேறு திருவாய் மலர்ந்தருளுகிறார். சந்தடி சாக்கில் சோ அவர்களை கொலைகாரன் ரேஞ்சுக்கு வேறு உயர்த்தியாகி விட்டது. ஒரு சீனியர் வக்கீல் தன் ஜூனியருக்கு கூறிய அட்வைஸ் ஞாபகத்துக்கு வருகிறது. "While arguing before the judge and when your point is weak, thump the table and shout like hell."

கார்த்திக் அவர்கள் எழுதிய இப்பதிவுக்கு மீண்டும் வருவோம்
அப்பதிவில் நான் மேலும் எழுதினேன்.
"சோவை எதிர்த்து பேசியவர்கள் பலர் தாங்கள் முதலில் சோ ஆதரவாளராக இருந்து பிறகு எதிர்ப்பாளராக ஆனவர்கள் எனக் கூறிக்கொண்டனர். அதை சுயபுத்தி வளர்ந்ததற்கு உதாரணமாகக் கூறினர். இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்து ஒருவர், என் நெருங்கிய உறவினர், அதே மாதிரி ஏன் ஆனார் என்பதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் இங்கு கூறுவேன்.

அவர் துக்ளக்குக்கு ஒரு கடிதம் எழுதினார். போர்னோக்ராபி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் அவர் நிலை எடுத்திருந்தார். பேசாமல் தன் நிலையைக் கூறிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யாது தன் தாத்தா கூறியதாக இவ்வாறு எழுதினார். “போர்னொக்ராஃபி என்றெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள், அது பாட்டுக்கு அது மற்றப்படி நாட்டின் productivity-யைப் பார்க்கலாமே, அமெரிக்காவில் எல்லாம் அப்படித்தான் செய்கிறார்கள், என்று என் தாத்தா கூறுவார்” என்று எழுதப் போக சோ அவரைக் கிழித்துவிட்டார். இதில் விஷயம் என்னவென்றால் அந்த நபர் பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்னமேயே அவரது அன்னை வழி மற்றும் தந்தை வழித் தாத்தாக்கள் இருவருமே இறந்து விட்டனர். சோ எழுதுகையில் அவ்வாறு ஒரு தாத்தா இருந்ததையே சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டார். இதைப் பற்றி சோ அவர்கள் துக்ளக்கில் எழுதும்போது so and so ஊரிலிருந்து so and so இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று ஆரம்பித்து அவர் எழுதியதைக் கிழித்தார். கடைசியில் "இது அவருடைய சொந்தக் கருத்தா அல்லது தாத்தாவின் கருத்தா என்பது யோசிக்கத் தகுந்தது" என்று வேறு எழுதி விட்டார். இதைப் படித்த உடனேயே என் உறவினருக்கு எஸ்.டி.டி. கால் போட்டு இது அவர்தானா என்று கேட்க அவர் ஆமாம் என்றார். அதற்குப் பிறகு சோ மேல் மிகக் கோபம் கொண்டார், அவரை இன்றளவும் எதிர்த்து வருகிறார். இங்கும் பலருக்கு இம்மாதிரி காரணங்கள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது."

சொல்ல வேண்டாம் என்றுதான் பார்த்தேன் இருப்பினும் எனக்கு இது சம்பந்தமாக பல தொலைபேசிகள் வந்து விட்ட நிலையில் இதை மேலோட்டமாகக் கூறிவிடுகிறேன். நான் மேலே குறிப்பிட்ட முத்து அவர்களின் பதிவின் இறுதியில் அவர் இப்பதிவை லிங்காகக் கொடுத்துள்ளார். அது முக்கால்வாசி என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் பதிவு, என் ஜாதியை மட்டமான ஜாதி என்று வேறு கூறுகிறது. அதை எழுதியவர் தரம் பற்றி தமிழ்மணத்தில் எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றி இங்கு பேச்சில்லை. அதை தன் பதிவில் லிங்காக வைத்திருக்கும் முத்து அவர்கள் மேல்தான் எனக்கு வருத்தம். வெறுமனே ஒப்புக்கு "என்ன ராசா இப்படி எழுதிவிட்டீர்களே" என்று செல்லமாக திட்டிவிட்டு இணைப்பை தன் பதிவில் வைத்திருக்கும் இவரது பதிவுகளுக்கு வந்து இனி நான் பின்னூட்டம் இடுவதாக இல்லை. ஆகவே அவரது பதிவுகளில் என் பெயரில் போலி டோண்டு என்ற இழி பிறவி வழக்கம் போலப் பின்னூட்டம் இட்டால் அது நான் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். தேவையானால் மீண்டும் வருவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/17/2005

C.P.W.D அனுபவங்கள் - 1

ஜோஸஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.
"கலக்கிட்டீங்க ஜோஸஃப் அவர்களே. என் C.P.W.D. அனுபவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது."

மத்தியப் பொதுப்பணித்துறையில் நான் பத்து ஆண்டுகள் இளநிலை மின் பொறியாளராக இருந்தேன். கடைசி 7 ஆண்டுகள் ஆவடியில் உள்ள மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் போஸ்டிங். கட்டிடங்களுக்கு மின்சார வையரிங் செய்தல், தெரு விளக்கு போடுதல், நிலத்தடி கேபிள் இடுதல் ஆகிய பணிகள். எல்லா வேலைகளையும் ஒப்பந்தப் புள்ளிக்காரர்கள் செய்ய நாங்கள் செய்த வேலைகளை அளந்து அளவை புத்தகத்திலிட்டு, பில்கள் தயார் செய்து மேலே அனுப்ப வேண்டும். செம வேலை. கட்டிடங்கள் பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன. என் மேற்பார்வையில் 10 கட்டிடங்களுக்கு மேல். கேம்பஸ் முழுக்க ஒவ்வொரு கட்டிடமாகச் சுற்ற வேண்டியது.

விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கான பாயின்டுகள் short, medium & long என்று பிரிக்கப்படும். மூன்று மீட்டர்கள் நீளத்துக்கு குறைவானவை ஷார்ட் பாயிண்டுகள், 3-6 வரை மீடியம் மற்றும் 6 மீட்டர்களுக்கு மேல் லாங்க் பாயிண்டுகள். இங்கு நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள இந்த தகவல் அவசியம், ஆகவே கூறினேன்.

120 போலீஸ்காரர்களை தங்க வைக்க வசதி உடைய 7 பேரக்ஸ்கள் கட்ட வேண்டும். அதில் பல ஹால்கள் உண்டு. ஹாலின் நடு வரிசையில் வரும் விளக்குகள் லாங்க் பாயிண்டுகள். அவற்றின் நீளம் 6.35 மீட்டர்கள்.ஆனால் ட்ராயிங்கில் அவை மீடியம் பாயிண்டாகக் குறிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் என்ன அளவு நேரடியாக எடுக்கப்படுகிறதோ அதைத்தான் அளவைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். அந்த முறையில் நான் லாங்க் என்றே அவற்றைக் குறிப்பிட்டேன். திடீரென பொருளாதார நெருக்கடியால் இரண்டு பேரக்ஸ்களுடன் அப்போதைக்கு வேலையை நிறுத்தி விட்டனர். ஆகவே அவற்றுக்கான பில் மட்டும் போட்டு கணக்கை முடிக்க வேண்டியிருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு மீதி ஐந்து பேரக்ஸுகள் கட்டுவதற்கு க்ளியரன்ஸ் வர அவற்றுக்கான வேலைகள் ஆரம்பித்தன. இங்குதான் விதி விளையாடியது. சிவில் தரப்பில் திடீரென ஒவ்வொரு மாடிக்கும் ஒரு அடி உயரத்தைக் குறைத்து விட்டனர். அது எங்களுக்குத் முதலில் தெரியாது. மீதி எல்லாம் ரிபீட் ஆகவே நான் முதல் இரண்டு பேரக்ஸ்கள் போலவே இங்கும் பாயிண்டுகளை வகைப் படுத்தி விட்டேன். ஆனால் இந்த லாங்க் பாயிண்டுகள் நீளம் 30 செ.மீ. அளவில் குறைந்து 6.05-லிருந்து 5.95 வரை வந்து விட்டன. அவற்றை பார்டர்லைன் பாயிண்டுகள் என்போம். சாதாரணமாக மீடியம் என்றே குறிப்பிடுவோம். எனக்கு உயரம் குறைத்த விஷயம் தெரிந்திருந்தால் அவ்வாறே எல்லாவற்றையும் மீடியமாக அளந்திருப்பேன். எல்லாவற்றையும் போட்டு இரண்டு பில்கள் வந்தவுடந்தான் எனக்கு உயரம் குறைந்த விஷயம் தெரிந்தது. இப்போது அளவை புத்தகத்தில் போட்டதை மாற்றவும் முடியாது. அதற்குள் இந்த விஷயத்தை மேலிடத்திற்கு யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

எதிர்ப்பாராத வகையில் இந்த பாயிண்டுகளை செக் செய்ய E.E. அவர்களே வருவதாகக் கூறி விட்டார். எங்கள் A.E. அவர்கள் என்னிடம் இது பற்றிக் கூறி, "என்ன ராகவன், உங்களைக் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே" என்றார். இந்த அழகில் முகத்தில் ஒரு புன்முறுவல் வேறு. எனக்கு எரிச்சலான எரிச்சல். இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் கூறினேன். "ஆமாம் சார், நாம் இருவருமே கஷ்டத்தில் இருக்கிறோம்" என்றேன். ஸ்விட்சை அணைத்தது போல புன்னகை மறைந்தது. "துரதிர்ஷ்டவசமாக நீங்களும் அதே பாயிண்டுகளை செக் செய்து கையெழுத்திட்டிருக்கிறீர்கள்" என்று அவரிடம் அன்புடன் எடுத்துரைத்தேன்.

அப்புறம் என்ன, இ.இ. வந்த போது, இவரே டேப்பைப் பிடித்து சார் 6.12 மீட்டர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூற இ.இ. யும் திரும்பிச் சென்றார். ஆக என் ஞாபகசக்தி என்னைக் காப்பாற்றியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/08/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி - 2

"என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி" என்றத் தலைப்பில் வந்த இந்தப்பதிவு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. இதுவரை அதில் 537 பின்னூட்டங்கள் வந்து விட்டன. அவற்றில் பெரும்பான்மையானவை நான் மற்றப் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களின் நகல்களே. இப்போதைய நிலையில் அது மிகப் பெரிதாகி விட்டது. அதைத் திறந்து மூட நேரம் பிடிக்கிறது. ஆகவே அதே நோக்கத்துடன் இரண்டாம் பதிப்பை இங்கு துவக்குகிறேன்.

அதில் கூறியவற்றை இங்கு மறுபடியும் நகலிடுகிறேன். போலி டோண்டு என்ற இழிபிறவி செய்த லீலைகள் புதியவர்களுக்குத் தெரிய வேண்டாமா?

"அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html

"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிறக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."


கெட்டதிலும் நல்லது என்பது போல அப்பதிவு இட்டதும் எனக்கு அலை அலையாக ஆதரவு பின்னூட்டங்கள் வந்தன. என் கருத்துகளில் ஒப்புதல் இல்லாதவர்களும் எனக்கு ஆதரவு காண்பித்த அதே சமயம் போலி டோண்டுவும் தன் பங்குக்கு வெறுப்பைக் காண்பித்தான். அவனுடைய பின்னூடங்களில் மிக இழிவனவற்றை அழிக்க வேண்டியதாயிற்று. அதுவே ஐம்பதுக்கு மேல் இருக்கும். ஆக கிட்டத்தட்ட 600 பின்னூட்டங்கள் அப்பதிவிற்கு.

இப்போது இந்திய நேரம் காலை 10.23, டிஸம்பர் 8 -ஆம் தேதி. இந்த நிமிஷத்திலிருந்து நான் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களின் நகல் இப்பதிவிலும் இடப்படும். பழைய பதிவுக்கு ஓய்வு. (a well deserved rest!)

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/04/2005

என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை

1971, செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை. என் பார்வைக் கோணத்தையே புரட்டிப் போட்ட அந்த நாள் வழக்கம் போலத்தான் விடிந்தது. விடிகாலை 6 மணிக்கு பம்பாய் மாதுங்காவில் நான் தங்கியிருந்த சரஸ்வதி நிவாஸில் என் ரூம் மேட் குளத்து ஐயர் வழக்கம் போல "டோண்டு" எங்கள் வேலைக்காரனைக் கூப்பிட, நானும் வழக்கம்போல "என்ன" என்று கேட்டு எழ, எல்லாம் வழக்கம் போலவே நடந்தது. (வேலைக்காரனின் பெயரும் டோண்டுதான், அவன் ஒரு மஹாராஷ்ட்ரியன்).

எங்கள் ஃப்ளேட்டில் மொத்தம் பத்து தமிழர்கள் குடியிருந்தோம். இதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே இந்தப் பதிவில் போட்டுள்ளேன். ஆகவே இப்போது வேறு விஷயம் கூறுவேன்.

இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அந்த ஞாயிறு வரை என் நடத்தை எனக்கு அறுவை மன்னன் என்று பெயர் வாங்கித் தந்தது என்றால் மிகையாகாது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் காலங்களில் நான் கூறிய அறுவை ஜோக்குகள் மகாபிரசித்தம். அவற்றில் ஒன்றை நான் இந்தப் பதிவில் கூறியுள்ளேன். இம்மாதிரி நாளொரு வண்ணமும் பொழுதொரு அறுவையாக வாழ்ந்த நான் படிப்படியாக நண்பர்களால் தவிர்க்கப்பட்டேன். எனக்குத்தான் முதலில் அது புரியவில்லை. என்னைப் பார்த்த உடனேயே நண்பர்கள் ஓடுவது எனக்கு ஒரு விதமானப் பெருமை தருவதாகவே நம்பினேன்.

ஜனவரி 1971-ல் பம்பாய்க்கு வந்த நான் வழக்கமான அறுவை ஜோக்ஸ் சொல்ல இங்கும் என் மேல் ஒரு வித விரோத பாவமே உண்டானது. இப்போதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். இருப்பினும் தவறு என் பேரில் இருப்பதாக நினைக்கவேயில்லை. எப்படியிருக்கும்? நான் என்னவோ ரொம்ப பெர்ஃபெக்ட் ஆசாமி என்ற எண்ணத்தில்தானே நான் இருந்தேன். ஆகவே நான் மாறவில்லை.

மறுபடியும் இந்த குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைக்கே வருகிறேன். நிதானமாக எழுந்து பிறகு 11 மணி அளவில் கன்ஸர்ன்ஸுக்கு சாப்பிடச் சென்றேன். வழக்கம் போலத் தனியாகத்தான், ஏனெனில் என் சக அறைவாசிகள் என்னைத் தவிர்த்தனர்.

சாப்பாட்டுப் பந்தியில் ஒருவன் மிகப் பரிச்சயமாகத் தோன்றினான். ஆனால் அவனை நான் அதுவரை பார்த்ததேயில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. இதை பற்றி யோசித்துக் கொண்டே அவன் தன் நண்பர்களுடன் பேசுவதைக் கவனித்தேன். அவன் மட்டுமே அதிகம் பேசினான். மற்ற நண்பர்கள் அவன் பார்வையை தவிர்த்தனர். இவனோ அதைப் பற்றியெல்லா கவலையற்று அறுவை ஜோக்குகளாக அடித்து தன் ஜோக்குகளுக்கு தானே சிரித்துக் கொண்டிருந்தான்.

திடீரேன எனக்கு மின்னல் போல் ஓர் எண்ணம் வந்தது. "அடேடே இவன் என்னைப் போலவே நடந்து கொள்கிறானே" என்று தோன்றியது. அதுவும் அறுவை ஜோக்குகள் கூறும்போது அவன் செய்த முக சேஷ்டைகள் எனக்கு அறுவெறுப்பாக இருந்தன. அவன் கூட வந்த நண்பர்கள் சங்கடத்தில் நெளிந்ததைப் பார்த்ததும் என் நண்பர்கள் பலர் என் நினைவில் வந்தனர். அடடா இது வரை நாமும் இம்மாதிரித்தானே மற்றவரைப் படுத்தினோம் என்று தோன்றியது. அந்த வினாடியிலிருந்து என் வாழ்க்கை முறையே மாறியது.

சாப்பிட்டு முடிந்ததும் அறைக்குத் திரும்ப மனதில்லை. ஆகவே அரோராவில் காலைக் காட்சிக்கு சென்றேன். படம் புதிய பூமி. எம்.ஜி.ஆர். படம். மூளைக்கு வேலையில்லை. ஆகவே நான் பாட்டுக்கு என்னைப் பற்றியச் சிந்தனையில் ஆழ்ந்து போக முடிந்தது.

இது வரை நடந்ததை மாற்ற முடியாதுதான். இனிமேல் எவ்வாறு நடந்து கொள்வது என்பதைத்தானே பார்க்க வேண்டும். என்ன செய்வதென்று உடனே புலப்படாததால் அமைதி காக்க முடிவு செய்தேன். பேச்சைக் குறைத்தேன். கேட்டக் கேள்விக்கு நேரடியான பதில், இடக்கான கேள்விகளுக்கு மௌனமே பதில் என்று இருக்க ஆரம்பித்தேன். இன்னும் அதிகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன், அறையை விட்டால் கன்ஸர்ன்ஸ், அங்கிருந்து அலுவலகம், மாலை துரை லெண்டிங்க் லைப்ரரி, இரவு கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டப் பிறகு திரும்பவும் அறைக்கு செல்வது என்று ஒரு வழக்கம் செய்து கொண்டேன். ஏதாவது பேச நினைத்தால் அதை கூறத்தேவைதானா என்பதை என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டு பல முறை அதைக் கூறாமலேயே விட்டதில் பல தகராறுகள் தவிர்க்கப்பட்டன.

சரியாக ஒரு மாதம் கழித்துத்தான் என் அறை மற்றும் அலுவலக நண்பர்கள் எனக்குள் ஏற்பட்ட மாறுதல்களை உணர ஆரம்பித்தனர். என்ன ஆயிற்று என்று கேட்டவர்களுக்கு புன்னகை மட்டுமே பதிலாக அளித்தேன். மெதுவாக நண்பர்கள் என்னை ஒதுக்காமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் அவர்களைப் பேச விட்டு நான் காது கொடுத்து கேட்டேன். முடிந்தவரை என்னால் ஆன உதவிகள் செய்தேன். தேவையற்று என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவருடன் தர்க்கம் செய்து அவர்கள் முடிவை மாற்றும் என் வழக்கமான முயற்சியை அடியோடு கைவிட்டேன். ஒருவருடைய கருத்தை மற்றவர்கள் மாற்ற இயலாது, அதற்கு தேவையும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் விரோத பாவம் கொண்டவர்களை அலட்சியம் செய்தேன். அது அவர்கள் எடுத்த முடிவு, நான் யார் அதை மாற்ற என்றுதான் எனக்குப் பட்டது. அதனால் ஏற்படும் கால விரயங்களும் இப்போது இல்லை. நான் பேசும்போது எதிராளி கவனிக்கவில்லை என்று தோன்றினால் பேச்சை அப்படியே நிறுத்தி விடுவேன்.

இன்று இப்பதிவை போடும்போது 34 வருடங்களுக்கு முந்தைய அந்த ஞாயிற்றுக் கிழமை இப்போதும் பசுமையாக என் மனக்கண்களின் முன்னே தோன்றுகிறது. ஏன் அந்த தினம் மட்டும் எனக்கு அவ்வாறு நடந்தது? அந்த முகம்தெரியா அறுவை மன்னனுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவன் அல்லவோ என்னை நானே உணரச் செய்தான்?

இன்று வரை அதைப் பற்றி நான் பேசியதோ எழுதியதோ இல்லை. அதை என் மனத்துக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தேன். இப்போது வெளியே எழுதியது மனத்துக்கு நிறைவை தருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/02/2005

மறுபடியும் வெள்ளம்

பார்த்திப ஆண்டில் மழை வரும் என்று எந்த வேளையில் அம்மா கூறினாரோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் மூன்றாம் முறை வெள்ளம். இம்முறை போன தடவையை விட சற்று அதிகமே.

காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. இரவில் வேகம் அதிகரித்தது. அதுவரை ஒரு சமன்பாட்டில் இருந்தவை எல்லாம் அதை இழந்தன. விறு விறுவென்று தண்ணீர் ஏறியிருக்கிறது. இப்போது கட்டிலுக்கு சற்று கீழ் வரை வீடெங்கிலும் தண்ணீர். வீட்டம்மாவையும் பெண்ணையும் அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பியாகி விட்டது. நான் மட்டும் தனியே வீட்டில்.

இவ்வளவு தண்ணீர் காலை நனைக்க பதிவிடுவதும் ஓர் அனுபவம்தானே. இதற்கு முந்தைய பார்த்திப ஆண்டில்தான் பங்குனி மாதம் பிறந்தேன். அந்த வருடம் 1945-46 ல் நல்ல மழை என்று கேள்வி. எனக்கு ஞாபகம் இல்லை.

சென்னையில் பாதுகாப்பாக இருக்கும் நமக்கே இது தாங்கவில்லை என்றால் காவிரிக் கரையில் வாழும் மக்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?

இப்போது மணி இரவு 10.08. மழை அடுத்தப் பாட்டம் ஆரம்பித்து விட்டது. பார்க்கலாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்ன திருவுள்ளம் கொண்டான் என்று. மழை வலுக்கிறது. மேலும் தண்ணீர் விறுவென்று வர ஆரம்பித்து விட்டது. இன்று இரவு சிவ ராத்திரிதான் போலிருக்கிறது.

மெரினா பீச்சில் வேறு சர்வீஸ் சாலை வரை கடல் நீர் வந்ததாமே. இந்த அழகில் கிரிக்கெட் போட்டி வேறு. அறிவுக் கொழுந்துகள்தான் இந்திய கிரிக்கெட் போர்டில் கோலோச்சுகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது