நிரந்தர பக்கங்கள்

4/18/2006

முரட்டு வைத்தியம் - 1

பின் நோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிகின்றன, பல விஷயங்கள் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளன என்று. அவற்றில் ஒன்று நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் தேர்வில் மூன்று பாடங்களில் ஃபெயில் ஆனது.

வருடம் 1965. ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட வருடம். எங்களில் பலரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது அப்போராட்டம். ஜனவரி 25-ல் ஆரம்பித்த அது மார்ச் 15-ஆம் தேதிவாக்கில் ஒரு நிச்சயமற்ற முடிவுக்கு வந்தது. சாதாரணமாக இந்தக் காலக் கட்டம் கல்வியாண்டில் முக்கியப் பங்கு வகிக்கும். காலேஜ் இல்லாமல் போய் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றினோம். அவ்வருடப் பல்கலைக் கழகத் தேர்வுகள் மே மாத நடுவில் நடத்தப் பட்டன.

எங்களுக்கு மொத்தம் 10 பேப்பர்கள். ஒன்றில் தோல்வியடைந்தாலும் ஒரு வருடம் வீட்டில் உட்கார நேரிடும். நான் கணக்கு, பௌதிகம் மற்றும் ரசாயனத்தில் ஃபெயில். ஒரு வருடம் காலி. அது வரை தேர்வில் தோல்வியென்பதையே அறியாத எனக்கு இத்தோல்வி பயங்கர அதிர்ச்சியை அளித்தது.

ஊர் சுற்றியக் காலங்களில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு வெறுப்பில் இனிமேல் கோர்ஸ் முடியும் வரை திரைப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். என்னால் முடியாது என்று என் நண்பர்கள் என்னை வெறுப்பேற்ற என் வெறி அதிகமாயிற்று. 1969 ஜூலை வரை ஒரு படமும் பார்க்காமல் இருந்தேன். கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")

என் அப்பாவே என்னிடம் அம்மாதிரியெல்லாம் சபதம் செய்ய அவசியமில்லை என்று கூறினாலும் நான் பிடிவாதமாக இதை சாதித்தேன். எது எப்படியானாலும் இது எனக்கு ஒரு வித நிறைவை அளித்தது. பிற்காலத்தில் பல விஷயங்களுக்குப் போராடியிருந்தாலும் என்னுடைய இந்த முதல் போராட்டம் என் மனதில் இப்போதும் நிலைத்து நிற்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்று கூறுகிறது. மற்றப் போராட்டங்களைப் பற்றி பிறகு கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

  1. பாஸ் பண்ணின பிறகு தான் படம் எண்டு நானும் உங்களைப்போல முடிவு பண்ணின் எண்டால்.. .. சும்மா போங்கோ.. என்ர வாழ்க்கையில இனி படமே பாக்க முடியாது..

    ReplyDelete
  2. எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, நான் அந்த 4 வருடங்களை எப்படி படமே பார்க்காமல் கழிக்க முடிந்தது என்று. 19 வயதில் நான் முரடனாகத்தான் இருந்திருக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. வைராக்கியம்னு ஒன்னு வேணுமே! வாழ்க்கையின் பல வெற்றிகள் இந்த மாதிரி வைராக்கியத்தோடு இருப்பது தான். சினிமா பார்க்காம இருந்துதான் வெற்றி அடைய வேண்டுமென்பதில்லை! நான் ஒரு தடவை சினிமா பார்க்கமல் இருந்து லீவில் ரிவிஷன் டெஸ்ட்ல் படித்து அதிகம் மதிப்பெண் பெறவில்லை. ஆக இனி ரிவிஷன், பப்ளிக் எக்ஸாம் முன்பு எப்படியும் சினிமா பார்த்தால் தான் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என நம்பி வைராக்கியத்தோடு பரீட்சைக்கு முன் எப்படியும் இரண்டு மூன்று படங்கலை பார்த்து எழுதி தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றேன். இதை என்ன சொல்லுகிறீர்கள்?

    ReplyDelete
  4. வாருங்கள் வெளிக்ண்ட நாதர் அவர்களே. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

    அப்படித்தான் நான் என்னுடைய முதல் ஜெர்மன் தேர்வை எழுதுவதற்கு முன்னால் (மாலை 6.30க்கு தேர்வு) பாமா விஜயம் மேடினி ஷோ பார்த்து விட்டு சென்றேன் (நவம்பர் 1969). எல்லோரும் பாடப் புத்தகங்களை வைத்து உருப் போட்டுக் கொண்டிருக்கையில் நான் மேக்ஸ் ம்யுல்லர் பவன் நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு ஜெர்மன் செய்திப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தேன். இஸ்ரேல் பிரதமர் கோல்ட மையருக்கு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் சக மாணவன் ஒருவனிடம் நான் புலம்ப அவன் டென்ஷனாகி "இத்தப் போய் எந்த மயிருக்குன்னு எங்கிட்டப் பேசற" என்று செந்தமிழில் எகிற ஆரம்பித்தான்.

    அதன் பிறகு தேர்வு நடந்து முடிந்தது. நான் முதலாவதாக வந்து ஸ்காலர்ஷிப் பெற்று பிறகு காலணா கூட ஃபீஸ் கட்டாது ஜெர்மன் பாஷை கற்றேன்.

    அதிலிருந்து ஜெர்மன்/பிரெஞ்சு பரீட்சைகளுக்கு முன்னால் ஏதேனும் படம் பார்த்து விட்டுத்தான் பரீட்சை ஹாலுக்கெ செல்வேன்.

    இதற்கு என்ன கூறுகிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. நன்றி வெங்கடேஷ் ஷர்மா அவர்களே.

    அதே நேரத்தில், எனக்கு பின்னூட்டமிட்டவர்களை அவன் செந்தமிழில் திட்டுவான் என்பதை அறிந்தும் எனக்கு கருத்து எழுதி அனுப்புபவர்களின் ஒத்துழைப்பு என் மனபலத்தை அதிகரிக்கிறது என்பதை இந்த இடத்தில் மிக்க நன்றியோடு கூறிக் கொள்வேன்.

    அன்புடன்,
    டோடு ராகவன்

    ReplyDelete
  6. I thought that you would say this as " சமீபத்தில் 1965ல்".

    ஆமா இல்ல? போட்டிருக்க வேண்டும்தான். விட்டுப் போய்விட்டது. அக்காலக் கட்டமும் நேற்று நடந்தது போலவே பசுமையாக இருக்கிறது. அந்த நான்கு வருடங்களில் பல நல்ல திரைப்படங்கள் வந்தன. பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தேன். ஏனெனில் எனக்கு சினிமா பார்ப்பதென்றால் உயிர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. டோண்டு ஐயா, இந்த மாதிரி சின்ன சின்னதாய் வைராக்கியம் செய்துதான் நம் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் முன்னேறி பெரும் வெற்றிகளை பெறுகின்றனர்.

    இந்த மாதிரி செய்த சின்ன சின்ன தியாகங்களைப் பற்றியும் எழுதுங்கள்.

    அன்புடன்

    கால்கரி சிவா

    பி.கு. என் படத்தை மாற்றி என் கிளியின் படத்தை போட்டுள்ளேன். குழம்ப வேண்டாம்

    ReplyDelete
  8. நன்றி கால்கரி சிவா அவர்களே. நீங்கள் படத்தை மாற்றியதும் அக்கிளி உங்கள் வளர்ப்புக் கிளி என்பதையும் ஏற்கனவே அறிவேன்.

    சிறு சிறு நிர்ணயங்கள் செய்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதும் ஒரு நல்ல வழியே. நம்மால் அவற்றை நிறைவேற்ற முடிகிறபோது நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்பதை நம்மாலேயே உணர முடியும்.

    இன்னும் எழுதுவேன். அதனால்தானே முரட்டு வைத்தியம் - 1 என்று தலைப்பு கொடுத்துள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. நன்றி யாத்திரீகன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. அன்றைய சூழலில் உங்களின் "சினிமா பார்க்காத" வைராக்கியம் வெற்றி பெற்றிருக்கலாம், இன்று அது சாத்தியமில்லாத ஒன்று

    ReplyDelete
  11. தெரியவில்லை நர்மீனா அவர்களே. ஆனால் என் வாழ்நாளில் அதற்குப் பின்னாலும் பல முறை வைராக்கியத்துடன் செயல்பட்டிருக்கிறேன், இப்போது கூட கடந்த ஓராண்டாக ஒரு விஷயத்தில் தீவிரமாக இருக்கிறேன்.

    முடியுமா முடியாதா என்றெல்லாம் யோசிப்பதை விட முடிய வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. எங்க அய்யா கூட சிகப்பு ரோசா என்று ஒரு படம் பார்த்துவிட்டு எங்க வீட்டுல ஒரு பத்து வருடம் யாரயும் படம் பாக்க விடல...என்ன வயிராக்கியமோ...உங்க பதிவ பார்த்து எனக்கு அந்த நிகழ்ச்சி நியாபகம் வந்திட்டது...

    ReplyDelete
  13. உங்க வீட்டு பக்கத்துலேயே வெற்றிவேல், வேலன் தியேட்டர்கள் இருக்கிறதே? அங்கே கூட படம் பார்க்க மாட்டிங்களா? நான் ஸ்கூல் படிக்கிறப்ப (நேரு ஸ்கூல்) எப்பவும் அந்த தியேட்டர்ல தான் கிடப்பேன்...

    ReplyDelete
  14. "எங்க அய்யா கூட சிகப்பு ரோசா என்று ஒரு படம் பார்த்துவிட்டு எங்க வீட்டுல ஒரு பத்து வருடம் யாரயும் படம் பாக்க விடல..."

    This is three much.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. லக்கி லுக் அவர்களே.
    1. நான் சொல்லும் நிகழ்ச்சி 1965 ஜூலையில் ஆரம்பித்து 1969-ல் முடிவடைந்தது.
    2. அப்போது நான் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தேன்.
    3. நங்கநல்லூரில் ரங்கா தியேட்டர் 1972-ல்தான் துவங்கியது. அதுதான் இப்போது வேலன், வெற்றிவேலாக உருமாறியுள்ளது.

    மற்றப்படி உங்கள் கேள்வியில் பொருட்குற்றம் ஏதும் இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. நானும் பல வருடங்களாக தூக்கத்தைக் குறைக்க வேண்டும் என முயற்சி செய்கிறேன். தொடர்ந்து குறைவாகத் தூங்கினால் அதுவே பழகிவிடுமென்று நண்பர் ஒருவர் சொன்னதை நடைமுறைப்படுத்தி நஷ்டப்பட்டதுதான் மிச்சம். 8 மணி நேரங்களுக்குக் குறைந்தால் செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்கின்றன. முரட்டு வைத்தியம் இதில் நஷ்டத்தையே விளைவிக்கிறது.

    சில சமயங்களில் தூங்குவது 9 மணி நேரங்கள். ஆனால் அன்று முழுவதும் உற்சாகமாகவும், திறமையாகவும் வேலை நடைபெறுகிறது.

    6 மணி நேரங்கள் மட்டும் தூங்க முடிந்தால் பல காரியங்களை செய்யலாம் என்கிற நப்பாசை இன்னும் விடவில்லை. என்னுடைய நண்பர்கள் பலர் 4 அல்லது 5 மணி நேரங்களே உறங்குகிறார்கள். அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை.

    உங்களது முரட்டு வைத்தியம் இதில் உபயோகப்படுமா ? அல்லது ஏதேனும் லேகியம் ஏதேனும் இதற்காக இருக்கிறதா? :-)

    நான் சற்று ஸீரியஸாகவே இதைக் கேட்கிறேன்.

    ReplyDelete
  17. நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் ம்யூஸ் அவர்களே. இப்போது அதே தேவைக்கான முரட்டு வைத்தியத்தையே நான் இப்போது கடை பிடித்து வருகிறேன். அது பின்வருமாறு:

    இரவு சீக்கிரமே (10 மணியளவில்) தூங்கப் போகவும். என் விஷயத்தில் நான் என் உள் மனதுக்கு ஆணையிடுவேன், இரவு 2 மணிக்கு எழுப்பி விடும்படி. அதுவும் மரியாதையாக அவ்வாறே செய்து விடும். பிறகென்ன, ஆனந்தமாக வேலையைத் துவங்க வேண்டியதுதானே. 4 மணி தூங்கினது புத்துணர்ச்சியை அளிக்குமே. எனக்கு பலிக்கும் முறை இது. நீங்களும் முயற்சி செய்யலாம்.

    முக்கியமாக, கண்ணைச் சுழற்றும்போது வேலை செய்தால் தவறுதான் வரும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. ////நங்கநல்லூரில் ரங்கா தியேட்டர் 1972-ல்தான் துவங்கியது. அதுதான் இப்போது வேலன், வெற்றிவேலாக உருமாறியுள்ளது.////

    அந்தக் காலக்கட்டத்தில் என் பெற்றோருக்கு கூட திருமணம் ஆகவில்லை...

    உங்கள் அனுபவத்துக்கு முன் நான் எல்லாம் தவழும் குழந்தை....

    ReplyDelete
  19. Welcome back Lucky look.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  20. //இப்போது கூட கடந்த ஓராண்டாக ஒரு விஷயத்தில் தீவிரமாக இருக்கிறேன். //
    :)(:-%$#7 :):)

    ReplyDelete
  21. கொழுவி அவர்களே உங்கள் எழுத்துருவைப் படிக்க இயலவில்லை. ஆனாலும் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அது சரியே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. 10இலிருந்து 2 வரை. இதையும் முயற்சி செய்து பார்த்து விடுகிறேன். பகல் முழுக்க தெளிவுடன் இருக்க முடியுமா? அல்லது மதியம் சிறிது நேரம் nap செய்ய வேண்டி வருமா?

    மனதிற்குக் கட்டளையிட்டு குறித்த நேரத்தில் எழுவதை ஸ்வாமி யோஹானந்தரின் (ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் ஸிஷ்யர்) புத்தகம் ஒன்றில் படித்து விட்டு அதை வெற்றிகரமாக என்னால் செய்ய முடிந்தது.

    நீங்கள் சொல்வதையும் என்னால் செய்ய முடியுமானால். ஆஹா...... நினைத்தாலே ஸந்தோஷமாக இருக்கிறது. இது மட்டும் வெற்றிகரமாக நடந்து விட்டால், உங்களுக்கு..........என்ன செய்யலாம்? குறைந்த பக்ஷம் ஒரு கோயிலாவது கட்ட வேண்டும்.

    ReplyDelete
  23. "பகல் முழுக்க தெளிவுடன் இருக்க முடியுமா? அல்லது மதியம் சிறிது நேரம் nap செய்ய வேண்டி வருமா?"

    கோழித் தூக்கம் போட்டாலும் அப்போதும் ஆழ்மனத்திற்கு அரை மணி கழித்து எழுப்பும்படி ஆணை கொடுக்கவும். அப்படி எழுந்த உடனே முகத்தை சோப் போட்டுக் கழுவினால் புத்துணர்ச்சி தானாகவே வரும்.

    வேலைகளை சிறு சிறு துண்டுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டால், ஒரு துண்டு முடிந்ததும் அதை லிஸ்டில் டிக் செய்து விடலாம். அதுவே ஒரு திருப்தியைக் கொடுக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. அலாரம் உபயோகப்படுத்தலாமா?

    ReplyDelete
  25. அலாரம் உபயோகிக்கலாம், ஆனால் அது ரொம்ப இரண்டாம்பட்சத் தேர்வுதான். அலாரம் எழுப்பும்போது எரிச்சல் வரலாம். அதை பட்டென்று தலையில் தட்டி விட்டு மேலே தூங்கியும் விடலாம். இதெல்லாம் தேவையா?

    அதே நேரம் ஆழ்மனது உங்களை எழுப்பிவிட்டப் பிறகு மணி என்ன என்பதைப் பார்த்துக் கொள்ள கடிகாரம் இருத்தல் அவசியம்.

    புதிதாக முயற்சி செய்யும்போது நேரடியாகவே ஆழ்மனதின் துணை நாடுவது நலம்.

    முரட்டு வைத்தியம் - 4 க்குத் தேவையான மெட்டீரியல்கள் கொடுத்து விட்டீர்கள். சமீபத்தில் 1968-ல் தண்ணீர் பஞ்சம் சமயத்தின்போது நான் செய்த இன்னொரு பரிசோதனை இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. மிக்க நன்றி.

    இரவு சாப்பாடு நன்கு ஜீரணமான பின் தூங்கப் போனால் என் உடம்பு தூங்கும் நேரமும் குறைகிறது. இந்த குறைந்த அளவு தூக்கத்திற்காக சாப்பாட்டிலும் நீங்கள் கட்டுப்பாடாய் உள்ளீர்கள் எனத் தோன்றுகிறது. சரிதானா?

    என்னால் வேலை நாட்களில் பகலில் தூங்க முடியாது. வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். பகலில் தூங்கவும் விருப்பமில்லை.

    பி.கு: ரொம்பவும் படுத்துகிறேனோ? இன்றிலிருந்து முயற்சியை ஆரம்பிக்க உத்தேஸம். அதனால்தான் உங்களை இப்படிப் போட்டு தொந்திரவு செய்கிறேன்.

    ReplyDelete
  27. இரவுச் சாப்பாட்டுக்கும் தூங்கப் போவதற்கும் இடையில் குறைந்தது 3 மணி நேரம் இடைவெளி வேண்டும். ஜைனர்கள் சாயந்திரம் விளக்கு வைக்கும் முன்னர் சாப்பிட்டு விடுவது ஒரு நல்ல பழக்கம்.

    மாலை டிபனைத் தவிர்த்தல் நலம். அல்லது அதை பிற்பகல் 3 மணியளவில் வைத்துக் கொள்ளலாம். ஒரேயடியாக விட்டுவிடுவது உத்தமம். அப்போது 7 மணிக்கு நன்றாகப் பசிக்கும். சாப்பிட்ட பிறகு ஏதேனும் எளிய வேலைகளை செய்யலாம். 10 மணியளவில் படுக்கைக்கு போகலாம், ஆழ்மனதுக்கு கொடுத்த உத்தரவுப்படி இரவு 2 மணிக்கு விழிக்கலாம்.

    என்ன, வீட்டில் கேட்பார்கள், என்னவாயிற்று என்று. அவர்களை சமாளிப்பது சிறிது கடினம்தான்.

    உங்கள் முயற்சிக்கு என் ஆசிகள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. வருடம் 1965. ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட வருடம். எங்களில் பலரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது அப்போராட்டம்//

    நல்ல வேளை நான் அப்போது போர்டிங் பள்ளியில் இருந்தேன். அதனுடைய தாக்கத்தில் இருந்து தப்பித்தேன். என்னுடைய மூத்த சகோதரர்களுடைய பட்டப் படிப்பும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")//

    அடடா எத்தனை சூப்பர் படம் அது. அதற்கப்புறமும் வெளிவந்தபோது மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிய படம் அது.

    ReplyDelete
  29. பார் மகளே பார் சில நாட்களுக்கு முன்னால் டி.வி.யிலும் போட்டார்கள். பாட்டுக்கள் மிக அருமை. கதை முடிச்சுகள் அவிழ்வது மிக இயல்பாக லாஜிகலாக இருந்தன.

    "அறிமுகம்: சோ" என்று டைட்டில்ஸில் வருமே, ஞாபகம் இருக்கிறதா? கதை வசனம் கூட சோ அவர்களே என்றுதான் ஞாபகம்.

    இதே படம் ஹிந்தியிலும் வந்தது. ஆனால் இக்கதையில் பெண்குழந்தைகளுக்கு பதிலாக ஆண்குழந்தைகள். ராஜ் கபூர் மற்றும் மெஹ்மூத். படத்தின் பெயர் மறந்து விட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. "அறிமுகம்: சோ" என்று டைட்டில்ஸில் வருமே, ஞாபகம் இருக்கிறதா? கதை வசனம் கூட சோ அவர்களே என்றுதான் ஞாபகம்.//

    அப்படியா? சோவுக்கு அப்படியெல்லாம் எழுத வருமா என்ன?

    நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் என்ற பாடல் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது..

    தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
    தாயின் வாழ்வு முடிந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை..

    யாருமில்லை எனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே ஓடிவிட்டாய் என் மகளே

    என்ன அருமையான வரிகள்..?

    டி.எம்.எஸ்சின் உச்சரிப்பும் அதற்கு ஈடு கொடுத்து நடிகர் திலகத்தின் வாயசைப்பும் உணர்ச்சி பொங்கும் முக பாவனைகளும்.. இப்பல்லாம் எங்க வருது அந்த மாதிரி படமும், கதையும்.. ஹூம்..

    ReplyDelete
  31. பார் மகளே பார் முதலில் பெற்றால்தான் பிள்ளையா என்ற பெயரில் நாடகமாக இடப்பட்டது. சோ அதே மெக்கானிக் ரோலில் நடித்திருந்தார். கதை வசனம் அவருடையது என்றுதான் கேள்வி.

    நாடகத்தைப் பார்த்த சிவாஜி அவர்கள் அதை படமாக்க ஆவல் கொண்டார். சோ அவர்களையும் அதே ரோலில் தக்க வைத்துக் கொண்டார் என்றுதான் ஞாபகம்.

    பை தி வே, சோ அவர்களின் எங்கே பிராமணன் என்ற புத்தகத்தையோ அவருடைய ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தையோ படித்தால் உங்களுக்கு அவரது எழுத்து ஆற்றல் குறித்து எவ்விதச் சந்தேகமும் வராது என்பதை நிச்சயமாகக் கூறுவேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. hats off dondu by chance i opened ur blog in one of link in desigan valaipoo. Now i am regularly reading ur blog. like ur vairagyam i had an experience. my father promised a wrist watch on passing my BSc in I class but failed to give a new one instead offered a second hand watch used by my brother. I took a vow not to wear watch till date , now i am 57, i never wear watch. my friends tried their best and even presented watch for my wedding and h;ave received so many watches at my workplace. I use to distribute all to near and dear. Similarly my villpover helped me to face many challenges in my carrier and nov i am in a senior management position.

    ReplyDelete