நிரந்தர பக்கங்கள்

10/02/2006

Jom Kippur - டோண்டு ராகவனுடையது

இன்று யோம் கிப்பூர் என்று அழைக்கப்படும் நாள், யூதர்களுக்கு முக்கியமான நாள். தாங்கள் செய்த தவறுகள் மற்றும் சக மனிதர்களுக்கு இழைத்த அநீதிகள் ஆகியவற்றுக்காக யூதர்கள் மன்னிப்பு கேட்கும் நாள்.

இஸ்ரவேலர்கள் சந்திர நாட்காட்டியை உபயோகிப்பதால் அதன் தேதி முன்னே பின்னே வரும். சமீபத்தில் 1973-ல் இது அக்டோபர் 6 அன்று வந்தது. அன்றுதான் எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கினர். 20 நாள் நடந்த இந்த யுத்தத்தைப் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. வஜ்ரா அவர்கள் பதிவு, அதில் தரப்படும் சுட்டிகள் இது பற்றி மிகத் தெளிவாக விஷயங்கள் தருகின்றன.

இப்போது என்னுடைய யோம் கிப்பூருக்கு வருவோம்.

நேற்று எனக்கு நான் மிகவும் மதிக்கும் பதிவரிடமிருந்து இந்த மெயில் வந்தது. அதை அனுப்பும் முன்னால் என்னுடன் chatßl தொடர்பு கொண்டு மெயில் அனுப்பப் போவதையும் கூறினார். இப்போதைக்கு அவர் பெயரை இங்கு போடப் போவதில்லை. போடவே மாட்டேன் என்றும் கூறப்போவதில்லை. இப்போது அவருடைய மெயில் அப்படியே நகலெடுத்து:

"உங்களுடைய அனுபவம், அறிவு, துணிச்சல் போன்றவற்றை மதிப்பவர்களில் நானும்
ஒருவன். உங்கள் கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றுடன் ஒத்துப் போகா
விட்டாலும் உங்களுடைய எழுதும் பாணி, உங்கள் எழுத்திலிருந்து தெரியும்
அனுபவ உண்மைகளுக்காக உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.

நீங்கள் மாதம் தோறும் சென்னையில் ஏற்பாடு செய்யும் வலைப்பதிவர் கூட்டங்கள், வெளியூர் போனாலும் சக பதிவர்களைச் சந்திக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைவருக்கும் பயனளிக்கும் நற்செயல்கள்.

ஆனால் உங்கள் அனுபவத்தை, பணிகளை எல்லோரும் இயல்பாக பயன்படுத்துவதற்கு
இருக்கும் சில இடையூறுகள் நம் எல்லோருக்கும் தெரியும்.

சில சூழ்நிலைகளால் போலிகளின் நாகரீகமற்ற எதிர்ப்புகளால் நீங்கள் மிக சிரமத்துக்கு ஆளாகினீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். பெரு முயற்சி எடுத்து உங்களைத் தற்காத்துக் கொள்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த மிரட்டல்களால் சலித்துப் போய் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்கும், உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த மிரட்டல்களைச் செயல்படுத்தும் முகமாக போலிகள் உருவாக்கியுள்ள தளங்களின் பாதிப்பும் விரும்பத்தக்கவை இல்லை.

இந்த நிலையில் தமிழ் வலைப்பதிவு உலகுக்கு நீங்கள் ஒரு உதவி செய்தால் நான் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.

'என்னுடைய கருத்துக்களில் சில பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அதைச் சொல்லும் விதம் சிலருக்குக் கோபத்தை மூட்டியிருக்கலாம். அதனால், ஒரு தவறும் செய்யாத பலர் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இன்னும் ஒரு தீ வளையத்துக்குள்ளேயே உலாவும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

போலி நண்பர்களுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவர்களது மனம் எந்த வகையிலாவது என்னால் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நான் எனது மனதில் படும் கருத்துக்களை வழக்கம் போல வெளிப்படையாகச் சொல்லி
வருவேன். யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் என்னிடம் கேட்டால் எனது பக்க நியாயங்களை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

பிறர் பெயரில் உருவாக்கியுள்ள ஆபாசப் பதிவுகள், சக பதிவர்களுக்கு அனுப்பும் ஆபாசப் பின்னூட்டங்களை முற்றிலும் அழித்து தமிழ் வலை உலகை மேம்படுத்த வேண்டுகிறேன்.'

இப்படி ஒரு பதிவை போட்டால் நீங்கள் பல நூறு மக்களின் அன்பையும் மதிப்பையும் ஈட்டிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது."

மறுபடியும் டோண்டு ராகவன்.

நானும் இது சம்பந்தமாக சில நாட்களாக யோசித்து வருகிறேன். இவருடைய மெயில் ஒரு ட்ரிக்கராக வந்தது.

இந்தப் பாராவை மட்டும் சற்றே மாற்றுகிறேன். ஏனெனில் என்னால் போலி டோண்டுவின் மனம் புண்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

"போலி டோண்டுவுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவரது மனம் என்னால் புண்பட்டதற்காக என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்."

நான் போலி டோண்டுவுக்கு மேலே கூற விரும்புவது. நாம் இருவரும் நமது நிலைகளை தெளிவாகவே பல தருணங்களில் வெளிப்படுத்தி விட்டோம். இனிமேல் வெளிப்படுத்துவதற்கு வேறு விஷயங்கள் இல்லை என்று தோன்றுகிறது. நமது சண்டையில் collateral damage சற்று அதிகமாகவே வந்து விட்டது. அதற்கு நாம் இருவருமே காரணம். என் தரப்பு பங்களிப்பிற்காக சக வலைப்பதிவாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை விட நீங்கள் வயதில் இளையவர். இருப்பினும் உங்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

நானும் உங்களை மனப்பூர்வமாக மன்னிக்கிறேன்.

உங்களது எதிர்வினை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலேயே இப்பதிவைப் போட்டுள்ளேன். உங்கள் பெயரை இப்போதும் வெளியிட மாட்டேன். முதலில் வெளியிட மறுத்தது போர் யுக்தி. ஆனால் இப்போது மறுப்பது சமாதான யுக்தி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

63 comments:

  1. டோண்டு,

    மிகவும் நல்ல முடிவு.

    நண்பர் போலியாரும் இதை வரவேற்பார் என்ற நம்பிக்கை வருகிறது.

    வீணாக ஒருத்தருக்கொருத்தர் எதிர்ப்பைக் காமிச்சு, மனக்கசப்பை வளர்த்துக்கிட்டுப்
    போறதாலெ யாருக்கு என்ன லாபம்?

    எப்படியோ வலை உலகத்துலே ஒரு ஆரோக்கியமான சூழல் அமைய நேர்ந்தால்
    ரொம்ப மகிழ்ச்சிதான்.


    மன்னிப்பு கேக்கவும், மன்னிக்கவும் பெரிய மனசு வேணும். அது உங்க ரெண்டு பேருக்கும்
    இயற்கையிலெ இருக்கு.

    வாழ்த்து(க்)கள் உங்க ரெண்டு பேருக்கும்.

    ReplyDelete
  2. நன்றி துளசி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. சார்,

    கிரேட் ஓர்க்..ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தி உள்ளீர்கள். போலியார் இதை
    சரியான முறையில் எடுத்துக்கொண்டு சூழலை ஆரோக்கியமாக்க உதவ வேண்டும்
    என்று இதன் மூலம் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி முத்து அவர்களே,

    சில நாட்களாகவே இதற்கு முடிவுகட்ட எண்ணி வந்தேன். நேற்று இரவு வஜ்ரா அவர்கள் chat-ல் வந்து யோம் கிப்பூரைப் பற்றிப் பேசும்போதே இன்னொரு பதிவரும் chat-ல் வந்தார். அவர் கொடுத்த உந்துதல், இன்றைய யோம் கிப்பூர் மற்றும் தேசப் பிதாவின் பிறந்த நாள் எல்லாம் சேர்ந்து வர, இதையே சூசகமாக நினைத்து பதிவு போட்டு விட்டேன். எதிர் வினை நன்றாகவே இருக்கும் என நம்புவோம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. டோண்டு அவர்கட்கு,
    ஒருவருக்கு ஒருவர் சேற்றை வாரி வீசுவதனால் ஒன்றுமே நன்மையில்லை, நம்மிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் பொதுவாக நாம் தமிழர்கள்தான்,
    இது ஒரு நல்ல முடிவு, இது உங்களின் தெளிவான இதயசுத்தியான முடிவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இதை போலி டோண்டுவும் புரிந்து கொள்வாராக, தங்கள் பணி தொடரட்டும்
    நன்றி

    * தவறுதலாக இந்தப் பின்னுட்டம் வேறொரு பதிவில் இடம் பெற்றுவிட்டது மன்னிக்கவும்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!

    காந்தி தினம் அன்று காந்திகிரி செய்வது மிக்க மகிழ்ச்சி (முடிந்தால் லகே ரஹோ முன்னா பாய் பார்க்க)

    போலியின் இ மெயில் கொடுத்தால் எல்லாரும் ஒரு 'Get well soon' கார்டு போடுகிறோம் :O)

    ReplyDelete
  7. "* தவறுதலாக இந்தப் பின்னுட்டம் வேறொரு பதிவில் இடம் பெற்றுவிட்டது மன்னிக்கவும்"
    அதனால் என்ன, அப்பதிவும் இற்றைப்படுமல்லவா?

    பின்னூட்டத்திற்கு நன்றி, யாரோ அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. நன்றி ஃப்ளெமிங்கோ அவர்களே. போலி டோண்டு கண்டிப்பாக இந்தப் பதிவை இதற்குள் பார்த்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. டோண்டு அவர்களே,

    வலை உலக ஆரோக்யம் வளர,
    கம்பீரமாய் தொடருங்கள் உங்கள் பணியை.

    உங்களை மிகவும் மதிக்கும்,

    பாலா

    ReplyDelete
  10. நன்றி பாலா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. சார்
    இது நல்ல முயற்சி வரவேற்கிறேன் எங்கள் பெரியவர்கள் சொல்வார்கள் விட்டுக்கொடுத்தால் சொத்து நமக்கு என்பர் அவ்வளவுதான் சுமுகமாகிவிடவேண்டியது தான்.

    ReplyDelete
  12. நன்றி என்னார் அவர்களே,

    நல்லதே நடக்கும் என நம்புவோம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. நல்ல நாளிலே நல்ல தீர்மானம்,வாழ்த்துக்கள்-இருவர்ருக்கும்.
    லியோ சுரேஷ்
    துபாய்

    ReplyDelete
  14. நன்றி லியோ அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. போட்டுத் தாக்குங்க...!

    என் வலைப்பூவிலிருந்து கீழே உள்ள லிங் ஐ சொடுக்கியதில் jom kippur பதிவுக்குச் சென்றது. நானும் சுவாரஸ்யமாக படிக்க ஆரம்பிக்க...திடீர் என்று கெட்ட வார்தைகள் நடுவில் வந்தது...!! என்னடா இது..என்று profileல் பார்த்தால் அது போலியுடையது...

    போலி திருந்தியபாடில்லை.

    யோம்கிப்பூர் அன்று மனிதர்களிடம் தான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியும்.

    Flemingo கூறுவது போல் Get well soon கார்டு அனுப்பலாம் தான்...அதெல்லாம் மண்டையில் ஏறுமா?

    ReplyDelete
  16. "போலி திருந்தியபாடில்லை."
    துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் கூறுவது உண்மைதான். எல்லாவித எதிர்வினைகளையும் எதிர்பார்த்ததால் எனக்கு ஒன்றும் அதிர்ச்சி இல்லை.

    நான் சொன்னது சொன்னதுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. மிக நல்ல முடிவு டோண்டு சார். மிகவும் பெருந்தன்மையோடு எடுத்திருக்கும் முடிவு. தமிழ் வலையுலகம் இணக்கமானதொரு திசையில் பயணிக்க உங்களாலான உதவியைச் செய்திருக்கிறீர்கள். இப்பதிவின் வாயிலாக திரு.போலியிடம் நானும் கேட்டுக் கொள்வது, தமிழ் வலையுலகம் ஆரோக்கியமான முறையில் இயங்க உங்களது ஒத்துழைப்பையும் தரவேண்டும். கருத்துகளை கருத்தால் எதிர்கொள்வதே மனிதத்தன்மையாக இருக்கும். இம்முயற்சி வெற்றி பெற உங்கள் பங்களிப்பையும் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

    நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
    இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்

    ReplyDelete
  18. நன்றி முத்துக்குமரன் அவர்களே,

    "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
    இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்"

    ஆமென், my dear angry young man.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. டொண்டு அண்ணா!
    "மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோவில்"-ஏன் ? நம் உள்ளங்களும் அப்படி ஆகக் கூடாது.எல்லோருமே எல்லாவற்றையும் மறப்போம்;மன்னிப்போம்.
    இந்த ஆரோக்கியமான முடிவை; வெகுவாகப் பாராட்டி மகிழ்கிறேன்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  20. ""மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோவில்"-ஏன் ? நம் உள்ளங்களும் அப்படி ஆகக் கூடாது"

    கண்டிப்பாக ஆகலாமே,

    நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. ///நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
    இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் ////

    Great Step !!!! I Appriciate Your Post...Sorry I dont Have Tamil here...

    ReplyDelete
  22. நன்றி செந்தழில் ரவி அவர்களே. ஆங்கிலமோ தமிழோ பின்னூட்டம்தான் முக்கியம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. கண்டுக்காமல் இருப்பது அடுத்த ஸ்டெப்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. நல்ல முடிவு ..இந்தப் போலியால் நான் அது சார்ந்த பதிவுகளைப் படிக்காமலே இருந்தேன் ..ஒரு நல்ல நாளில் நல்ல முடிவு ..

    ReplyDelete
  25. நன்றி கூத்தாடி அவர்களே,

    "உங்களது எதிர்வினை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலேயே இப்பதிவைப் போட்டுள்ளேன்."
    இப்போது தெரிந்து விட்டது. போலி எதிர்மறையாக பதிவிட்டிருக்கிறார். இருப்பினும் நான் கூறியது கூறியதுதான். ஆனால் என்ன, ஜாகிரதையாக நடந்து கொள்வேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. இன்றுமுதல் வெள்ளைக்கொடி வேந்தே என்று அழைக்கலாமா ?

    ReplyDelete
  27. வாருங்கள் செந்தழல் ரவி அவர்களே,

    நான் வெள்ளைக் கொடி காட்டியது கண்டிப்பாக இம்ஸை அரசன் ஸ்டைலில் அல்ல. பலமான நிலையில் இருந்து கொண்டே, இனிமேல் எதிரியுடன் மோதுவதில் அர்த்தம் இல்லை என்று அவனிடம் கூறும் வெள்ளைக் கொடி இது.

    I will never lower my guard as I do not have any illusions.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. டோண்டு,

    ஆரோக்கியமான விஷயம். போலியார் புரிந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  29. நன்றி ராஜா வனஜ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. //
    நண்பரின் கடிதமும் போலியாரின் பதிலும்
    போலியார் அவர்களுக்கு,

    தங்களை எதிர்த்து அல்ல இம்மின்மடல்.

    டோண்டு அவர்களின் பதிவில் தான் இதுவரை பதிவு செய்த சர்ச்சைக்குரிய விஷயங்களுக்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து இருக்கும் இந்த வேளையில் எதற்காக இப்படி ஒரு எதிர்வினைப் பதிவு என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

    நல்லதொரு சூழ்நிலை நிலவ வேண்டுமென்றுதானே எல்லாரும் விரும்புகின்றனர். சண்டைகளின்றி சமாதானம் கோரும் அத்தகைய பதிவுக்கு ஏன் இப்படியொரு பதில்?

    அவரிடம் சொன்னால் கேட்கவா போகிறார் என்ற எண்ணத்திலிருந்த என்னையும் அவரது பதிவு வியப்பிற்குள்ளாக்கியது. அட! நல்ல சூழ்நிலை உருவாகும் போலிருக்கிறதே என்று எண்ணும் வேளையில் இப்படியொரு எதிர்வினைப் பதிவு தேவையா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    நன்றி.
    =============================================================

    பதில்
    ===================================================================

    அன்புள்ள நண்பரே,

    இது ஆரோக்கியமான சூழல்தான். அவரின் இந்த மன மாற்றத்தினைத்தான் நம்முடைய போலியார் கழகமும் நண்பர்களும் விரும்பினார்கள். தங்களுக்கு முன்பே நான்கு பேர் இதேபோல கடிதம் எழுதினார்கள். அவர்களுக்கும் தனித்தனியாக பதில் எழுதிப் போட்டு இருக்கிறேன்.

    ஆபாசம் இல்லாத நல்ல ஆரோக்கியமான விவாதங்களை எழுதுவதற்காக நம்முடைய இயக்கம் புது வலைப்பதிவு ஒன்றினை ஏற்படுத்தி இருப்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். போலியார் குழுப் பதிவான அதற்கு கட்டுரைகளை எழுத பலரும் முன்வந்துள்ளனர். ஆலோசனைகள் தந்தூள்ளனர்.

    உண்மையில் டோண்டுவின் மன்னிப்பினை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். டோண்டுவை நாங்கள் மன்னித்தோம்.

    ஆனால் ஏற்கெனவே முத்து(தமிழினி)யால் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தை தோலி அடைந்தது. தோல்வி அடைய முக்கிய காரணம் மாயவரத்தான் என்னும் கி.ரமேஷ்குமார் மட்டுமே. ஆனால் இந்த முறை நான் மற்றும் நண்பர்கள் அமைதியாகப் போனாலும் டோண்டுவை சீண்டி விட்டு குளிர்காய நினைப்பது வஜ்ரா சங்கர், ம்யூஸ், ஜயராமன், கால்கரி சிவா ஆகியோர். ராபின் என்ற பெயரில் எழுதுபவன்கூட டோண்டுக்கு மிக வேண்டியவன். டோண்டுக்கு தெரியாமல் எதுவுமே நடக்க வாய்ப்பு இல்லை.

    எங்கள் இயக்கம் டோண்டுவை முழுமையாக மன்னிக்க வேண்டுமானால் டோண்டு தான் ஒரு வடகலை அய்யங்கார் என்றும் அந்த ஜாதியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று சொன்னதை வாபஸ் பெற வேண்டும். அந்த சொல்லுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி எழுதிய வார்த்தைகளை அழிக்க வேண்டும். போலிப் பிரச்னை என்று சொல்லிக்கொண்டு எழுதிய பல பதிவுகளை அழிக்க வேண்டும்.

    நடுவராக நீங்களே இருந்து செயலாற்றுங்கள். இந்த பிரச்னையின் தீவிரத்தில் முழுமையாக பங்கேற்று இருக்கும் அந்நியன் என்ற வெங்கட் ரமணியாலேயே பிரச்னை வளர்கிறது. எனவே அந்நியன் அடங்க வேண்டும்.

    இதுவெல்லாம் செயலுக்கு வந்தால் நாங்கள் முழுமையாக மன்னிக்கிறோம். போலி மற்றும் ஆபாச பதிவுகளை அழிக்கிறோம். ஒருவேளை இந்த கண்டிசன்களுக்கு டோண்டு ஒப்புக் கொள்ளாவிட்டால் எங்களின் அடுத்த அதிரடி தாக்குதல் மிகவும் பலமாக இருக்கும். மரண அடியாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம்!

    அன்புடன்,
    போலியார்.

    //

    இது போலியனின் புதிய நிலை... இதில் என் பெயர் சம்பந்தப் பட்டிருப்பதால் இதை இங்கே பின்னூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
  31. இதே கடிதம் நாமக்கல் சிபி அவர்களிடமிருந்தும் வந்தது. அதற்கு நான் அளித்த பதில் இதோ:

    "சிபி அவர்களுக்கு,

    நன்றி. போலி டோண்டுவின் கண்டிஷன்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல. நான் யுத்தத்தை நிறுத்தலாம் எனச் சொன்னது பயத்தால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    யுத்தம்தான் என்றால் அதற்கும் தயார்.


    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. மிரட்டி என்ன காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறான் போலி. இது கதைக்குதவாத நிலை. நான் உங்களைத் தூண்டிவிடவில்லை.

    உங்களிடம் இப்படிச் சொல்பவன் நாளை குழலியிடம் பா.ம.க ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டதால் போலி குழலி அவதாரம் எடுக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? (ஒரு உதாரணமே). எல்லோருக்கும் அவரவர் கருத்து சொலும் உரிமையை வழங்குவது யார். போலி டோண்டு வா?

    இன்று இவனை support செய்பவர்கள் நாளை அவர்களுக்கே அப்பு வைக்கப்படும் போது கூட உணருவார்களா என்பது சந்தேகமே.

    There is no way one can negotiate with this man. He is totally sick. He should be banished for eternity.

    ReplyDelete
  33. "இன்று இவனை support செய்பவர்கள் நாளை அவர்களுக்கே ஆப்பு வைக்கப்படும் போது கூட உணருவார்களா என்பது சந்தேகமே."

    :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. மனித மனங்களிடம் பேசினால் பயனுண்டு. மனமே மலமாகிப் போன ஒருவனுடன் பேச எத்தனித்தால்?
    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இவன் மற்றவர்களுக்கு கொடுக்கும் வசைமொழிகளெல்லாம், அவன் வீட்டு மக்களுக்கே திரும்பக் கிடைக்கும் ஒரு காலம் வரும். (அவர்களுக்கு தெய்வம் அப்படி ஒரு நிலைமையைக் கொடுக்காதிருக்க ப்ரார்த்திப்போம்) - அன்றும் இவன் தன் தவறை உணர்வது சந்தேகமே. இவனுக்கும் வயோதிகம் என்று ஒன்று வரும். அப்பொழுது மற்றவர் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் வரும். இவனைச் சுற்றி இப்போது இருந்து கொண்டு தூண்டிவிடும் காக்காய் கூட்டம் அப்போது இருக்காது. தன் தேவைகளைக் கூட தன்னால் பூர்த்தி செய்யமுடியாத அந்த நிலைமையில் இன்று இவன் செய்யும் காரியங்கள் நினைவில் வரும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். மலம் உடலில் தங்கினால் வியாதி. இவன் தமிழ் மணத்தின் வியாதி. ஆரம்பத்தில் வெற்றி பெற்றது போன்று கொக்கரித்தாலும், முற்றிலும் அழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
  35. பின்னூட்டத்துக்கு நன்றி கிருஷ்ணா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. இந்த இழி பிறவி போலிக்கு தகுந்த முடிவு விரைவில் கிடைக்க போகிறது.
    டோண்டு சார், நீங்க ஏன் அந்த கேவலமான பிறவியிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும்? நீங்கள் செய்தது தவறு.

    ReplyDelete
  37. பின்னூட்டத்துக்கு நன்றி வேட்டையன் அவர்களே. சமாதான முயற்சி செய்ததற்காக வருந்தவில்லை. அந்த முயற்சியும் பலவீன நிலையில் செய்யவில்லை.

    இப்போதும் கூறுகிறேன். ஒரு கண்டிஷனும் இன்றி யுத்தத்தை முடித்துக் கொள்ளலாம்.

    ஆடும் முறை போலியுடையது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. டோண்டு ஐயா, அந்த மன நோயாளி பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேன். ஆனால், அது பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவேயில்லை.

    http://towardsmoon.blogspot.com/2006/10/against-cybercrime.html

    ReplyDelete
  39. தட்டிக் கேட்பவன் அவர்களே,

    உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டு விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. திரு. டோண்டு அவர்களே,

    எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது....போலி யாரென்றும் தெரியாது. ஆனால் மிக மோசமான மனிதன், அவனது வசவுகள் எனக்கும் வந்தது...(உங்கள் பதிவில் பின்னுட்டம் இட்டதற்காக).....அவனிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டு நீங்கள் மேலும் உயர்ந்துவிட்டீர்கள், ஆனால் அவன் கீழ்தரமான கோரிக்கைகளால் இன்னும் கிழே இறங்குகிறான்.

    ReplyDelete
  41. நன்றி மௌல்ஸ் அவர்களே.

    சமாதான முயற்சி வெற்றி பெறும் இன்னும் நம்புகிறேன்.

    இருப்பினும் வருவது எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன். அதற்கான மனோபலத்தை என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எனக்குத் தருவான் என்பது நிச்சயம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. வணக்கம் சார்.

    உங்கள் பதிவைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பின்னூட்டங்களைப் பார்த்தவுடனேயே அந்த மகிழ்ச்சி பறந்துப் போனது....

    சமாதான ஒப்பந்தத்துக்கு வர நினைத்த உங்கள் உள்ளத்துக்கு ஒரு சபாஷ் கொடுக்கும் அதே வேளையில் உங்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பவர்களின் பின்னூட்டங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் சமாதான உடன்படிக்கையை நீங்களே அழித்துக் கொள்கிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது......

    இது அட்வைஸ் அல்ல.... என் மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன்.... தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்....

    ReplyDelete
  43. "இது அட்வைஸ் அல்ல.... என் மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன்.... தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்...."

    தவறெல்லாம் ஒன்றும் இல்லை. பின்னூட்டத்திற்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. டோண்டு அவர்களே,
    உங்களின் சாதியம் என்ற பெருமை தேவைதானா?

    எப்படி நீங்கள் உங்கள் பிறப்பின் அடிப்படையில் கிடைத்த சாதியால் உங்களை உயர்வாக எண்ண முடிகிறது?

    உண்மையிலேயே தவறாகத் தெரியவில்லையா?

    உங்களை உயர்த்திய அதே பிராமணீயம்தான் மற்ற ஒரு மக்களைத் தாழ்த்துகிறது என்று தெரியவில்லையா?

    இங்கே பிராமணீயம் எப்படி வேறூன்றி ஒரு பள்ளனும் பறையனும் சாதியால் அடித்துக் கொள்ளும் அளவுக்கு புரையோடிப் போய் இருக்கிறது தெரியுமா?

    பிராமணீயம் உங்களைப் போன்ற அய்யங்கார்களிடம் மட்டும் இல்லை....தேவர்,கவுண்டர்,பிள்ளை,வன்னியர்,வாண்டையார் போன்ற ஆதிக்க சாதியிடமும் ..தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயும் புரையோடிப்போய் கிடக்கிறது.

    எப்படி உங்களால் சாதிய அடையாளங்களால் உயர்வாக எண்ண முடிகிறது...? புரியவே இல்லை.

    உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு ஒரு போலி மிரட்டித்தானா இது எல்லாம் தெரிய வேண்டும்?

    நீங்கள் போலியின் மிரட்டலை விட்டுவிடுங்கள்.அல்லது அது உங்களுக்கும் போலிக்கும் நடக்கும் போர் அதை எப்படி வேண்டுமானாலும் எதிர் கொள்ளுங்கள்.

    ஆனால், சுயமாக ஒரு முறை உங்களின் எல்லா அடையாளங்களையும் அழித்துவிடு ஒரு மனிதனாக நீங்கள் ஒரு நாள் ஒரு சேரியில் ஒரு பொழுதைக் கழித்துப் பாருங்கள்.

    அம்மா,அப்பா யார் என்றே தெரியாமல் எண்ணற்ற அனாதை இல்லங்களில் வளர்ந்து வரும் பிறப்பால் சாதி/மத அடையாளம் கிடைக்கப் பெறாத குழந்தைகளுடன் ஒரு பொழுதைக் கழியுங்கள். உலகம் என்னவென்று தெரியவரும்.

    அப்படியே சாதி/மத உணர்வுகள் இல்லாமல் வாழமுடியாது என்றால் அதை காமம் போல் நான்கு சுவத்துக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.இலைமறையாய் இருந்த சாதி/மத உணர்வுகள் உங்களின் வருகைக்குப்பின்னரே தமிழ் வலைப்பதிவில் தெருவிற்கு வந்து இப்படி ஆகிவிட்டது என்பது வருத்தமான உண்மை. :-((((

    David Gardener
    Graham Wood
    Thomas Barber
    Craig Shoemaker எல்லாம் தொழில் முறை காரணமாக வந்த Last Name களே.

    இவர்கள் யாரும் தனது Last Name சொல்வதற்கு வெட்கப்படுவது கிடையாது. ஆனால் ஒரு தொழிலை அதைச் செய்வதற்காக கேவலப்படுத்தியதும் ஒரு சாரரை உயர்தியதும் பிராமணீயம்.இந்தியாவில் அதைப் பின்பற்றுபவன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டும்.எப்படி அய்யா பெருமை கொள்ள முடிகிறது உங்களால்?

    டோண்டு அய்யங்கார் என்பதற்குப்பதில் டோண்டு இராகவன் மொழிபெயர்ப்பாளர் என்ற புதிய Last Name உடன் புது வாழ்க்கை தொடங்குங்கள்.அதே சமயம் குப்பை பொறுக்குபவர்களையும் சக மனிதனாக respect them who they are and what they are doing.

    ரொம்ப நாளாக சொல்ல நினைத்தது...சொல்லியாகிவிட்டது. இனி உங்கள்பாடு போலி பாடு ...ஜூட் :-)))

    ReplyDelete
  45. நான் எந்த சூழ்நிலையில் எனது சாதியை கூறிக் கொள்ள நேர்ந்தது என்பதை பலமுறை கூறியாகி விட்டது. எந்த சமயத்திலும் மற்ற சாதிகள் மட்டம் என நான் கூறீயதே கிடையாது.

    ஆக, நான் கூறியது கூறியதுதான். அதை இப்போது திருப்பி எடுத்துக் கொள்ள முடியாது. வில்லிலிருந்து புறப்பட்ட பாணம் திரும்பப் பெறும் திறன் எனக்கில்லை.

    போலியாரை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    டொண்டு ராகவன்

    ReplyDelete
  46. <--
    எங்கள் இயக்கம் டோண்டுவை -->
    போலியார் என்பது ஒரு தனினபர் என்று இவ்வளவு நாளும் நினைத்துக்கொன்டிருந்தேன்.

    ReplyDelete
  47. டோண்டு சார்,

    இந்த பெருந்தன்மையான செயல் மூலம் உங்களது மதிப்பை பல படிகள் உயர்த்திக் கொண்டு விட்டீர்கள்.

    நான் ஏற்கனவே சொன்னது போல நாகரீகமான முறையில் விவாதம் நடைபெறும் போது பெரும்பாலான கருத்துக்களில் (இஸ்ரேல், முஸ்லீம்கள், பொதுவுடமை, சமூக விஷயங்கள்) நான் உங்கள் கருத்துக்களுக்கு எதிராகவே இருப்பேன். அப்படி ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் களமாக தமிழ் வலைப்பதிவு உலகம் இன்னும் சிறப்பு பெறும் என்று நம்புவோம்.

    உங்களுக்குத் தெரிந்த போலி வலைப்பதிவுகளை அழித்து விடுவது நீங்கள் உடனடியாகச் செய்யக் கூடியது. சாதி விஷயத்திலும், நீங்கள் எந்தச் சூழலில் சாதியைக் குறிப்பிட்டு எழுத நேர்ந்தது என்பதை விளக்கியிருந்தீர்கள். அதையே மேற்கோளிட்டு, சாதியை பறை சாற்றும் நோக்கம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடலாமே.

    மீண்டும் நன்றியும் வணக்கங்களும்,

    அன்புடன்,


    மா சிவகுமார்

    ReplyDelete
  48. "உங்களுக்குத் தெரிந்த போலி வலைப்பதிவுகளை அழித்து விடுவது நீங்கள் உடனடியாகச் செய்யக் கூடியது."
    ???

    நான் ஒன்றும் போலிப் பதிவுகள் இடவில்லையே? என் பெயரில்தானே பதிவுகள் போடுகிறேன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  49. //நான் ஒன்றும் போலிப் பதிவுகள் இடவில்லையே? //

    மன்னிக்கவும்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  50. Due to heavy workload (only) I'm not able to come to tamil blog world nowadays.

    I'll be back soon again with the SAME SPEED.

    ReplyDelete
  51. சீக்கிரம் வாருங்கள் மாயவரத்தாரே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  52. மிக உயர்ந்த செயல் இது.
    நல்லது நடக்க முருகனை வேண்டுகிறேன்.

    முருகனருள் முன்னிற்கும்.

    ReplyDelete
  53. //டோண்டுவை சீண்டி விட்டு குளிர்காய நினைப்பது வஜ்ரா சங்கர், ம்யூஸ், ஜயராமன், கால்கரி சிவா ஆகியோர். ராபின் என்ற பெயரில் எழுதுபவன்கூட டோண்டுக்கு மிக வேண்டியவன்//

    இதில் நான் எங்கு வந்தேன். இந்த பதிவிற்கு நான் பின்னூட்டம் கூட போடவில்லை.

    டோண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவு என்னை உயர்த்தி விட்டதற்கு நன்றி.

    நான் யார் மீதும் கருத்துகளை திணிப்பதில்லை யாரும் என் மேல் கருத்துகளை திணிக்க முடியாது.

    என் பெயர் தேவையில்லாத இடத்தில் வருவதை நான் கண்டிக்கவில்லை கண்டுகொள்கிறேன் அவ்வளவுதான்

    ReplyDelete
  54. கால்கரி சிவா அவர்களே,

    டோண்டு என்றால் அவனுக்கு சப்போர்ட் செய்ய என்று டீஃபால்டாக சிலர் ஆதரவு தருவார்கள் என அனுமானம் செய்து விடுகின்றனர். அதன் வெளிப்பாடே இதையெல்லாம் கண்டுக்கப்படாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  55. நன்றி எஸ்.கே. அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. "டோண்டுவை சீண்டி விட்டு குளிர்காய நினைப்பது வஜ்ரா சங்கர், ம்யூஸ், ஜயராமன், கால்கரி சிவா ஆகியோர். "

    நான் இந்த ப்ரச்சினையில் ஒரு முடிவு வரும்வரை விலகி இருப்பது என்று இருந்தேன். ஏனெனில், மதிப்பிற்குரிய டோண்டு அவர்களின் அனுபவத்திற்கும், வயதிற்கும் அவரிடம் அறிவுரை கேட்கும் நிலையில்தான் நான் இருக்கிறேனே ஒழிந்து, எங்கள் சொற்படி நடக்க அவர் குழந்தை இல்லை. தற்போது ஏறத்தாழ ஒரு முடிவிற்கு இந்த ப்ரச்சினை வந்துவிட்டதால் என் கருத்துக்களை பதிவிடுகிறேன்.

    1. இந்த சண்டையால் இருதரப்பாரும் தவறானமுறையில் ப்ரபலமானது தவிர, மற்றவர்களும் புண்பட்டதுதான் விளைவு. இருவருமே தேர்ந்த எழுத்தாளர்கள். இந்த சண்டை போடுவதைவிட பல உபயோகமான விஷயங்களை நாகரீகமாக முறையில் வெளிப்படுத்துவதில் பயன்பட்டிருக்கவேண்டிய ஷக்திகளை வீணாய் தாக்குவதற்கும், தற்காத்துக்கொள்வதற்கும் செலவிட்டுவந்தனர். இந்தச் சூழ்நிலையில், மதிப்பிற்குரிய டோண்டு அவர்கள் "நிபந்தனையற்ற" மன்னிப்பு கேட்டார். ப்ரதிபலனாய் விளைந்தது நியாயமில்லாத நிபந்தனைகள். ஸமாதானத்திற்கான ஆவல் துளிக்கூட இல்லை.

    2. இந்த நிபந்தனைகளையும், அவற்றின் அர்த்தமில்லா சுழல்வாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஏற்றுக்கொண்டாலும், போலியார் இதை தன்னுடைய வெற்றியாக நினைத்துக்கொண்டு வேறு ஒருவருக்கு டோண்டுவிற்கு இழைத்த கொடுமைகளை செய்ய ஆரம்பிப்பார் என்றே தோன்றுகின்றது.

    3. போலியாரின் மன உளைச்சலை பயன்படுத்தி அவரை அம்பெய்யும் மனித பாராஸைட்டுக்களுக்கு இந்த ஸமாதானம் வேம்பு. போலியாரின் நலனை கருதாது அவரை ஒரு ஸைக்கலாஜிக்கல் வெப்பனாகப் பயன்படுத்தும் இவர்கள், போலியாரின் மனவேதனைகளை அதிகரிக்கவே செய்வர். அவரின் அழிவிற்கே இது இட்டுச் சென்றாலும் இவர்கள் கவலைப்படப்போவதில்லை. இதைப் புரிந்துகொள்ளும் அளவு சித்தத் தெளிவு போலியாருக்கு இருப்பின் தப்பிப் பிழைக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும். இறையிடம் வேண்டுவது தவிர வேறு செயல் என்னிடம் இப்போது இல்லை.

    4. இதற்கு சாத்தியமாகக்கூடிய தீர்வு, இருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒருவரை ஒருவர் தாக்காமல் இருப்பதுதான். இருவரும் தங்களது கருத்துக்களை விட்டுவிடவேண்டிய அவஸியமில்லை (அது நடக்கவும்போவதில்லை.) இந்த முயற்சியின் மூலம் ஒருவருட வேதனைகளை இருதரப்பாரும் சிறிது சிறிதாக மறக்கலாம். அடுத்த நிலைக்கு சமாதான முயற்சியை எடுத்துச் செல்ல இது உதவும்.

    இந்த முதல் படிநிலைக்கு இருவரும் ஒத்துக்கொள்கிறீர்களா?

    ReplyDelete
  57. நீங்கள் கூறியது முற்றிலும் சரி ம்யூஸ் அவர்களே. பார்க்கலாம் மேலே என்ன நடக்கிறது என்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  58. டோண்டு சார்,

    தங்களது பக்குவப்பட்ட, அனுபவ முதிர்ச்சியை தங்களது இந்த முடிவில் காண முடிகிறது. பலருக்கும் முன்னோடியான சிறப்பான செயல்.

    எதிர் தரப்பில் இருப்பவர் தன்னைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்வோருக்கு தம் திறனை மீண்டும் முழுமையாக அர்ப்பணித்துச் சமர்ப்பிக்காமல் தமிழ்மணத்தை ஆரோக்யமான, விஷயம், தகவல்கள் செறிந்த தமிழ் இணைய தளமாக்க ஆக்கம் செய்ய உடனடியாகவோ காலப்போக்கில் விரைந்து விழைய எல்லாம் வல்ல தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் புரியவேண்டும்.
    அனைத்த்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ். இணையத்தில்-தமிழ்மணத்தில்-வலைப் பதிவுகளில் தமிழ் நல்லபடியாக ஆரோக்கியமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  59. நன்றி ஹரிஹரன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  60. டோண்டு சார் சில நாட்களாக வலைப் பதிவுகளின் பக்கம் வரவில்லை. இன்று தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். நல்ல முடிவு.

    இந்த முயற்சி எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் இன்னும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன்.

    இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறை ஆற்றல் துணை நிற்கட்டும்.

    நீங்கள் கொஞ்சம் இறங்கி வந்துள்ளீர்கள் உங்கள் வயதுக்கு உரிய முதிர்ச்சியை அது காட்டுகிறது. உங்களின் இந்த முதிர்ச்சி துணை கொண்டு மேலும் கொஞ்சம் இறங்கி வந்து இந்தப் பிரச்சனைக்கு முழு முடிவு கொண்டு வருமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  61. மியூஸ், சரியாக சொன்னீர்கள்...ஏற்ப்பார்களா இருவரும் ?

    ReplyDelete
  62. செந்தழல் ரவி மற்றும் குமரன் எண்ணம் அவர்களே,

    இதுவரை எதிர்த்தரப்பில் எதிர்வினை அவ்வளவு பாசிடிவாக இல்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  63. "These fellows are incorrigible. they are not going to change. why do you want to make 'peace' with them??!!"
    என் நலனில் அக்கறை கொண்ட பல நண்பர்கள் கூறினார்கள். நானும் சண்டையை முடிக்கும் மூடில் இருந்தேன்/இருக்கிறேன். பலவீனமான நிலையில் இருந்து கொண்டு இந்த ஆஃபர் தரவில்லை. ஏற்கனவே இந்தப் பதிவு பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி விட்டது. எது என்ன என்பதும் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து விட்டது. அந்த நல்ல விளைவுகளே கணிசமானவை.

    மற்றப்படி போலியார் தனது 'இயக்கத்தவரை' பற்றிக் கூறுவது எல்லாவற்றையும் அப்படியே face value-வில் எடுத்துக் கொள்ளாத்கீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete