நிரந்தர பக்கங்கள்

6/24/2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 24.06.2007

இந்த சந்திப்புக்கு வரமுடியுமா என்று இன்று காலை வரை எனக்கு நிச்சயமாகத் தெரியாததால் நான் வருவது பற்றி எங்கும் பின்னூட்டம் இடவில்லை. கடைசியாக காலை 10 மணிக்கு எனது மொழிபெயர்ப்பு வேலைகளில் சற்று ஓய்வு எடுக்க முடியும் என்பது தெரிந்தது.

எனது கார் வித்லோகா புத்தகக் கடைக்கு வந்த போது மணி சரியாக நாலரை. கடை பூட்டியிருந்தது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பக்கத்தில் இருந்த மாடிப்படியில் ஏறிப் பார்த்தேன், ஒரு வேளை அங்கு ஏதாவது ஹால் இருக்குமா என்று. இல்லை. சற்றே யோசனையுடன் கீழிறங்கி வாசல் பக்கம் வந்தால் எதிரே பாலபாரதி, பொன்ஸ் மற்றும் இகாரஸ் பிரகாஷ் வந்தனர். பிறகு கடையைத் திறந்து உள்ளே சென்றோம். சிறிது நேரத்தில் விருவிருவென்று பதிவர்கள் வர ஆரம்பித்தனர்.

வந்தவர்கள் லிஸ்ட் சிவஞானம்ஜி பதிவில் பார்க்கலாம்.

சந்திப்பு ஆரம்பிக்கும் முன்னால் புத்தகக் கடையில் சுற்றிப்பார்த்ததில் நம்ம ஜோசஃப் சார் அவர்களின் புத்தகம் ஒன்று கிடைத்தது. உடனடியாக அதை வாங்கி விட்டேன். "சந்தோஷமா கடன் வாங்குங்க" என்று அவர் அதில் கூறுகிறார்.

பிறகு சந்திப்பு ஆரம்பமாயிற்று. மா.சிவகுமார் அவர்கள் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடத்தப்படவிருக்கும் பதிவர் பட்டறை பற்றி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வந்திருந்தார். அதில் unconference என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் தமிழாக்கத்தை நானும் அவரும் இன்னும் சிலரும் அலசி கடைசியில் முறைசாரா சந்திப்பு என்று ஒரு யோசனை வந்தது. வேறு யோசனைகளையும் எதிர்ப்பார்க்கிறேன்.

பிறகு இந்த சந்திப்பில் முழுக்க முழுக்க அந்தப் பட்டறையில் என்ன செய்யலாம் என ஒவ்வொருவரும் ஆலோசனை கூறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்பட்டறைக்கு கூடுதல் புரவலர் சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறை. அத்துறையின் மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும். கூடவே பதிவர்கள் வேறு. ஆக 100-லிருந்து 150 வரை எதிர்ப்பார்ப்பு. பாலராஜன் கீதா எல்லா கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களையும் கூப்பிடலாம் என்று கூற இகாரஸ் பிரகாஷ் அவர்கள் அதற்கு அரங்கத்தில் இடப் பற்றாக்குறை என்பதை சுட்டிக் காட்டினார். அவ்வாறு அழைப்பை விரிவுபடுத்துவதை அடுத்தப் பட்டறைக்கு வைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரமூர்த்தி அவர்கள் பட்டறைக்கு வருபவர்க்கு ஏதேனு சான்றிதழ் மாதிரி தந்தால் நன்றாக இருக்கும் அன அபிப்பிராயப்பட்டார். இகாரஸ் இந்த யோசனையை குறித்து கொண்டார். இலக்கு பார்வையாளர்களை தீர்மானிக்க வேண்டும் என்று ஒருவர் (கப்பிப்பயல்?) கூற இன்னொருவர் (வெட்டிப் பயல்?) மாணவர்களை விட நாம் குறிவைக்க வேண்டியது மென்பொருள் நிபுணர்களே என்றார். அதற்கான மின்னஞ்சல் அனுப்பும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டது. (இந்த இருவர் பெயரில் குழப்பம், ஒரு வேளை மாற்றிச் சொல்கிறேனா என்று தோன்றுகிறது. தவறிருந்தால் பின்னூட்டத்தில் கூறவும்).

அருள்குமார் அவர்கள் யாஹூ குழுக்களில் உள்ளவர்களையும் இழுக்கலாம் என்றார். கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றுக்கு விஷயதானம் செய்ய பலர் விரும்பலாம். அவர்களில் பலருக்கு தமிழில் தட்டச்ச முடியும் என்பதே தெரிந்திருக்காது என்பதுதான் நிஜம். என்ன பிரசண்ட் செய்வது என்பதன் பொருளடக்கத்தை நிச்சயித்து கொள்வது முதல்படி, பிறகு அதை பலருக்கு அனுப்புவது இரண்டாம் படி என்பதை சுட்டிக் காட்டினார். தமிழி அவர்கள் பலருக்கு வெப்சைட் மற்றும் வலைப்பூ நடுவில் உள்ள வேறுபாடு தெரியவில்லை என கருத்து கூறினார். தில்லியிலிருந்து வந்த முத்துலட்சுமி அவர்கள் தான் எப்படி வலைப்பூவில் ஆர்வம் எடுத்துக் கொண்டார் என்பதை விளக்கினார்.

பத்ரி அவர்கள் பிரிண்ட் மீடியாவிலிருந்து ஒலி ஊடகத்துக்கு செல்லத் தருணம் வந்து விட்டது எனக் கூறினார். சாதாரணமாக தமிழ் எழுதுவதில் தகராறு இருப்பவர்கள் ஆடியோ உபயோகிப்பத்து நலம் என்றும் கூறினார். உதாரணர்த்துக்கு உள்ளூர் செய்திகள் க்ளிப்பிங்குகள் தயாரிக்கலாம் எனக் கூறினார். சுந்தரமூர்த்தி அவர்கள் இத்தருணத்தில் ஒரேயடியான நீளமான பதிவுகள் இன்றி பத்து நிமிட செக்மெண்டாக இருப்பது நலம் எனக் கூறினார். செல்பேசியை உபயோகித்து ஃபோட்டோக்களை எடுக்கும்போதே பதிவில் போடுவது சுலபமான தொழில் நுட்பம் என பத்ரி அவர்கள் கூற்றினார். அவ்வாறே நம்ம ஓசை செல்லா அவர்களும் செய்வதாக நான் கூறினேன். இதைப் பற்றியெல்லாம் பட்டறையின் இரண்டாம் அமர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை வைக்கப்பட்டது. இந்த அமர்வுக்கு செல்லா முக்கியமாக வரவேண்டும் என நான் கருத்து தெரிவித்தேன்.

முக்கியமாக தாய்மொழியில் எழுதுவது என்பதே ஒரு இன்பம் என்பதை மற்றவருக்கு உணர்த்த வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்தேன்.

இப்போது மாசிவகுமார் அவர்கள் மூன்றாம் அமர்வைப் பற்றி பேச ஆரம்பித்தார். பல பதிவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் திறமைகளை ஒருவலைப்பின்னல் போல வைத்து பல அரிய செயல்கள் புரியலாம் எனக் கூறினார். இது சம்பந்தமாக் ஒரு விக்கி பக்கம் திறக்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. ஆர்வம் உள்ளவர்கள் அப்பக்கத்தில் தங்கள் பங்களிப்பு பற்றி எழுதலாம் என்றும் கூறப்பட்டது.

இதற்குள் மணி ஆறை நெருங்க நான் இன்னொரு முக்கிய சந்திப்புக்காக கிளம்ப வேண்டியதாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

  1. pathivar santhippu seythikali munthi thanta dondu sir kku OH

    ReplyDelete
  2. நன்றி ஹமீத் அப்துல்லா அவர்களே. அவ்வப்போது சிறு குழுக்கள் தானாகவே உருவாகி தங்களுக்குள்ளேயே டிஸ்கஸ் செய்ததை போட இயலவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை பூர்த்தி செய்வர் என எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. கப்பிபயல் இருப்பது உருகுவேயில், வெட்டிபயல் இருப்பது பாஸ்டனில். பெயரை மாற்றி சொல்லிவிட்டீர்கள் போல் தெரிகிறதே?

    ReplyDelete
  4. பாஸ்டனில் ஒருவர் இருபது தெரியும். இன்னொருவர் உருகுவே நாட்டிலா இருக்கிறார்? அது தெரியாமல் போய் விட்டதே. லத்தீன அமெரிக்க நாடுகளைப் பற்றி அவரிடம் கேட்டிருக்கலாமே.

    மற்றப்படி அவர்கள் இருவரில் யார் என்ன சொன்னார் என்பதில் சிறு குழப்பம் என்பதையும் குறிப்பிட்டேனே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இவர்கள் இருவரும் பதிவர் சந்திப்புக்கு வந்தார்களா டோண்டு சார்? அதை தான் கேட்டேன்

    ReplyDelete
  6. //இவர்கள் இருவரும் பதிவர் சந்திப்புக்கு வந்தார்களா டோண்டு சார்? அதை தான் கேட்டேன்//

    வந்தனர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. என்னுடைய புத்தகத்தை வாங்கியதுடன் அதைப் பற்றி உங்களுடைய பதிவிலும் எழுதி விளம்பரம் தந்ததற்கு மிக்க நன்றி ராகவன் சார்.

    என்னுடைய எழுத்தையும் ஒருவழியாக சரி செய்து வெளியிட்ட பதிப்பகத்தாருக்குத்தான் வாழ்த்து சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  8. உங்களுக்கு நூறு ஆயுசு ஜோசஃப் சார். இப்போதுதான் உங்கள் திரும்பிப் பார்க்கீறேன் பதிவை பார்த்து விட்டு உங்களுக்கு பின்னூட்டம் போடுவதற்காக இருந்த போது இப்பின்னூட்டத்தை நீங்கள் இடுகிறீர்கள்.

    இந்த சந்திப்புக்கு சென்றதில் முக்கிய நல்ல விஷயமாக நான் கருதுவதில் இப்புத்தகத்தை வாங்க முடிந்ததும் உண்டு.

    ஆங்கிலத்தில் பார்த்தது என்றாலும் அதை அந்தரத்தில் விட்டது போல் இதையும் விடமாட்டீர்கள் என நம்புகிறேன். :))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. நிகழ்ச்சிகளை இரு அமர்வுகளாக நடத்தலாம். ஒன்று ஏற்கனவே தமிழில் வலைப்பதிவுகளை எழுதிவருபவர்களுக்காக. மற்றொன்று பலரை வலைப்பதிவுகளுக்கு ஈர்க்க.

    வலைப்பதிவுகளில் எழுதி வருபவர்களது நிகழ்ச்சியை ஒரு introspectionஆக வைத்துக் கொள்ளலாம். அது கீழ்க்கணட கேள்விகளை ஆராயலாம்:
    1.வலைப்பதிவுகளுக்கு வருபவர்கள் காணாமல் போவதேன்? ஆரம்ப வசீகரம் உலர்ந்து போக என்ன காரணம்?
    2.வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் frivolusஆக, flippant ஆக இருப்பதாக தமிழ் இணையத்தில் புழங்கும் சிலரிடம் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. அந்த அபிப்பிராயம் காரணமாக அவர்கள் அவற்றைப் பொருட்படுத்துவது இல்லை. இதை மேம்படுத்த ஏதேனும் யோசனைகள் உண்டா?
    3.துறை சார்ந்த பதிவுகளை, கூட்டாகவோ, தனியாகவோ அதிகப்படுத்த முடியுமா? புதிய துறைகளைப் பற்றி யோசிக்க முடியுமா?

    4.தொழில்நுட்ப மேம்பாடுகள்/சிக்கல்கள்

    புதிதாக வலைப் பதிவுக்கு ஈர்க்க நிகழ்ச்சிகளை ஒரு செயலரங்கம் போல அமைக்கலாம். தமிழில் எழுதுவது, வலைப்பதிவு துவங்குவது, பின்னூட்டம் இடுவது போன்ற பயிற்சிகளை செயலரங்கில் மேற்கொள்ளலாம். அதனால் பங்குபெறுவோர் எண்ணிக்கையை அதிகம் இல்லாமல் மட்டுப்படுத்திக் கொண்டு, பயிலரங்க நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

    யோசியுங்கள்

    அன்புடன்
    மாலன்

    ReplyDelete
  10. DBR SIr,I think, u can change ur photo which is different from the one seen in KUMUDAM.[WHen I comment in ur blog, it is not get pupblished, I dont know the reason.THat is why I comment here]

    ReplyDelete
  11. //1.வலைப்பதிவுகளுக்கு வருபவர்கள் காணாமல் போவதேன்? ஆரம்ப வசீகரம் உலர்ந்து போக என்ன காரணம்?
    2.வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் frivolusஆக, flippant ஆக இருப்பதாக தமிழ் இணையத்தில் புழங்கும் சிலரிடம் ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. அந்த அபிப்பிராயம் காரணமாக அவர்கள் அவற்றைப் பொருட்படுத்துவது இல்லை. இதை மேம்படுத்த ஏதேனும் யோசனைகள் உண்டா?//
    1.என்னைப் பொருத்தவரை தமிழில் எழுத முடிந்ததே பெரிய அதிசயம். தட்டச்சிடுவதற்கு இருந்த தடைகள் கதிரவனைக் கண்ட பனி போல் விலகியதும் என்க்கு ஆனந்தம் அளித்தது. கூடவே நான் பதிவுகள் போடப் போட எனது தமிழும் கூர்மையடைந்தது. ஆகவே என்னைப் பொருத்தவரை ஆரம்ப உற்சாகம் அப்படியே உள்ளது.
    அதே சமயம் நம்மை நாமே ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு எதிர்ப்புகளுக்கு ரொம்ப கோபமெல்லாம் பட்டுவிடக்கூடாது. தொட்டற்சிணுங்கியாகவும் இருக்கக் கூடாது. என்னவோ யாரோ முட்டாள்தனமாக பேசியதற்கெல்லாம் பதிவிடுவதை நிறுத்தக் கூடாது. இருப்பதை வைத்துக் கொண்டு சமாளித்து வாழ்வதே புத்திசாலித்தனம். போட வேண்டிய சண்டைகளையெல்லாம் உள்ளிருந்து கொண்டே போட்டால் ஆயிற்று.
    2.உங்கள் யோசனைகள் செயல்படுத்தத் தக்கவையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. அன்புள்ள சிவா,
    ஜோசஃப் சார் பதிவில் பின்னூட்டமிடுவதில் பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லையே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. // தொட்டற்சிணுங்கியாகவும் இருக்கக் கூடாது. என்னவோ யாரோ முட்டாள்தனமாக பேசியதற்கெல்லாம் பதிவிடுவதை நிறுத்தக் கூடாது. இருப்பதை வைத்துக் கொண்டு சமாளித்து வாழ்வதே புத்திசாலித்தனம். //

    ரொம்பத் தேவையான அறிவுரைதான். மாலனுக்கு! :)))

    ReplyDelete
  14. Whenver I try it is not published in BLOGS.
    May be problem might in my brower or our Company network. Now I read your blog in a Internet Cafe.

    ReplyDelete
  15. Here too I tried 2/3 times, then only it became successful.It gave same page which require password to enter eventhough I entered correctly.

    ReplyDelete
  16. A suggestion is afoot that you have gone to the meeting uninvited. Kindly clarify.

    Concerned Friend

    ReplyDelete
  17. //A suggestion is afoot that you have gone to the meeting uninvited. Kindly clarify.//

    நீங்கள் கூறுவது புரிகிறது. இருந்தாலும் புதிதாகச் சிலரை சந்திக்கவே சென்றேன், சென்ஷி, உண்மைத் தமிழன் மற்றும் அபி அப்பா. ஆனால் அவர்கள் வரவில்லை. அதனால் என்ன, சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவற்றைப் பற்றித்தான் இப்பதிவு. இது எல்லோருக்கும் பொது அழைப்பாக இருந்ததால் சென்றேன்.

    பலருக்கு என் வருகை பிடிக்கவில்லை என்பது தெரியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் லட்சியம் செய்யவில்லை ஏனெனில் எனக்கும் அவர்களைப் பிடிக்காது. ஆகவே சரிக்கு சரியாகி விட்டது. நமக்கு நம்ம காரியம் முக்கியம். முடிந்ததும் நகர்ந்துவிட வேண்டும். அவ்வளவுதான்.

    டீ யாருடைய ஏற்பாடு என்று தெரியாததால் அதை எடுத்துக் கொள்ளாது பைய நகர்ந்து விட்டேன். அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து விட்டேன். ஆகவே ஒரு குழப்பமுமில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. Dear Siva,

    I don't think that I understand your problem.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  19. வலைபதிவர்கள் சந்திப்புக்கு நீங்க சென்றீர்கள் என்பது மகிழ்வான விசயம்தான்.

    இருள் கவிழ்ந்து இருக்கும் உறவுகளில்
    இனிமேல் ஒளிபெறலாம் எனும்
    நம்பிக்கை தெரிகிறது

    ReplyDelete
  20. //டீ யாருடைய ஏற்பாடு என்று தெரியாததால் அதை எடுத்துக் கொள்ளாது பைய நகர்ந்து விட்டேன். அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து விட்டேன். ஆகவே ஒரு குழப்பமுமில்லை.//

    இதற்கு நீங்கள் போகாமலேயே இருந்திருக்கலாம்..

    ஒரு சிங்கிள் டீ.. 3 ரூபாய் இருக்கும். அதைக் குடித்தால் உங்களுக்கு கவுரவ குறைச்சல் வரும் என்றால் எதற்கு நீங்கள் சென்றீர்கள்?

    அழைப்பு விடுத்தவர்கள்தானே டீக்கும் ஏற்பாடு செய்திருப்பார்கள்? அழைப்பை ஏற்றுக் கொண்டு டீயை புறக்கணிப்பு செய்தது..

    சிரிப்புதான் வருகிறது..

    (என்னை பார்க்க நினைத்தமைக்கு நன்றிகள்)

    ReplyDelete
  21. //அழைப்பு விடுத்தவர்கள்தானே டீக்கும் ஏற்பாடு செய்திருப்பார்கள்? அழைப்பை ஏற்றுக் கொண்டு டீயை புறக்கணிப்பு செய்தது..
    சிரிப்புதான் வருகிறது.. //

    புரியாமல் நடிப்பவர்களுக்கு புரியவைப்பது வீண்வேலை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. //புரியாமல் நடிப்பவர்களுக்கு புரியவைப்பது வீண்வேலை.//

    நிஜமாகவே புரியல ஸார்.. 3 ரூபாயில் என்ன கடன்பட்டுவிடுவோம் என்று நினைத்தீர்கள்..? பிறகு எதற்கு வலைப்பதிவர்கள் சந்திப்பு.. எதற்கு வலைப்பதிவு.. அதற்கு எதிர்பார்க்கும் கமெண்ட்ஸ்கள்..? சுற்றம் சூழத்தானே கூட்டம். தனிப்பட்ட கோபத்தைக் காட்டத்தான் எழுத்து இருக்கிறதே.. பின் எதற்கு சின்னப்புள்ளைத்தனமா 'பைய நழுவல்'..?

    ReplyDelete
  23. நான் விளக்கம் தந்தேன் செந்தழல் ரவியும் தந்தார். எப்போது? யோசியுங்கள்.

    நான் டீயை எடுத்திருந்தால் அதைப் பற்றி எழுத பலர் காத்திருக்கின்றனர். இப்போது அப்படியெல்லாம் இல்லை எனக் கூறினாலும் அதுதான் உண்மை.

    எதற்கு வம்பு?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. ஓ.. இதுதான் மேட்டரா? இப்பத்தான் எனக்கும் ஞாபகத்துக்கு வருது.. சரி விடுங்க.. இளரத்தங்கள் இப்ப அப்படித்தான் சூடா இருக்கும்.. முதிரும்போது 'தோழர்'களுக்கும் புரியும்.. நிச்சயம் வருத்தப்படுவார்கள்..

    ReplyDelete
  25. மேலே பின்னூட்டங்கள் போட்டிருப்பது போலி. தயவுசெய்து நீக்குங்கள்.

    ReplyDelete
  26. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    மேலே பின்னூட்டங்கள் போட்டிருப்பது போலி. தயவுசெய்து நீக்குங்கள்.//

    நீர்தான் போலி (http://www.blogger.com/profile/04330845515232444148). டோண்டு ராகவனிடமே எலிக்குட்டி விளையாட்டா? (கருணாநிதியின் குரலில் படிக்கவும்)

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. 5:32க்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி பரதேசி. தயவுசெய்து நீக்குங்கள்.

    ReplyDelete
  28. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    5:32க்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி பரதேசி. தயவுசெய்து நீக்குங்கள்.//
    நான் அவனில்லை என்று கூறும் நீர்தான் அவன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. //நான் அவனில்லை என்று கூறும் நீர்தான் அவன்.//

    you have given some clue. but we cannot understood who is that culprit. if you know his name put limelight on his name.

    ReplyDelete
  30. டோண்டு எப்படி போலி டோண்டுவால் புகழடைந்தார் என்பதை பார்த்த உண்மைதமிழனுக்கும் போலி ஆசை வந்தது. உண்மைதமிழனே போலியை உருவாக்கி போலிவிளம்பரம் தேடிகொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  31. ஒருவேலை டோண்டுவே தான் போலி உண்மைதமிழனா.

    ReplyDelete
  32. //முதிரும்போது 'தோழர்'களுக்கும் புரியும்.. நிச்சயம் வருத்தப்படுவார்கள்..//

    பாவம் அவுங்க சந்தோசமா இருப்பாங்க. நல்ல வார்த்தை சொல்லி அவுங்க இன்பத்தை கெடுக்க வேண்டாம்.

    ReplyDelete
  33. முதிரும்போது என்று சொன்னவுடன் இது ஏன் எனக்கு நியாபகம் வருதுன்னு தெரியல.
    இந்த சில்லறை தோழர்களுடன் முதிர்ந்த பதிவர்கள் எதுக்காக தொடர்பு வைத்துள்ளனர்் என்பதுதான் புரியவில்லை.

    ReplyDelete
  34. //இந்த சில்லறை தோழர்களுடன் முதிர்ந்த பதிவர்கள் எதுக்காக தொடர்பு வைத்துள்ளனர்் என்பதுதான் புரியவில்லை.//
    அதெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்குத்தான். டோண்டு சார் அவரே அடிக்கடி சொல்றாப்போல சமீபத்தில் 1946-லேத்தானே பிறந்தார்? :)

    ஞானசேகரன்

    ReplyDelete
  35. //டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.//

    நீங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கூடவா தெரியல

    ReplyDelete