3/30/2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 30.03.2008

என் கார் காந்தி சிலையை அடைந்தபோது மணி 5.45 போல் ஆகிவிட்டது. என்னை அங்கு இறக்கிவிட்டு என் வீட்டம்மாவும் மகளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை நோக்கி சென்றனர். அவர்களை கோவிலிலிருந்து நேரே அடையாறு சென்று எனது மச்சினி வீட்டில் காத்திருக்கும்படி கூறிவிட்டு, ரோடை கிராஸ் செய்து வந்தால் சட்டென்று யாரும் கண்ணில் படவில்லை. மணலுக்கு இறங்கும் படிக்கட்டுக்கு வந்ததும் செல்லை கையில் எடுத்தேன் அதியமானை கூப்பிட. எதேச்சையாக திரும்பினால் ஒரு கோணாமாணாவென்று வளைந்து ஒரு மாதிரியான வட்டக் குளத்தை சுற்றி காலை தொங்கப்போட்டு அதியமான் உட்பட பலர் அமர்ந்திருந்தனர். தண்ணியில்லா குளம். உண்மைத் தமிழன் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.

பிளாக் செய்வதை தன் சுய இச்சையால் நிறுத்தி, டென்ஷனில் இருந்து விடுபட்டவராக மா.சிவகுமார் காட்சியளித்தார். நான் போனபோது சுண்டல் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நான் அங்கு போன சமயம் என் கண்களில் பட்ட பதிவர்கள் (மேலே சொன்னவர்களை தவிர்த்து) வினையூக்கி, சந்தோஷ், பாலபாரதி, ஜ்யோவ்ராம் சுந்தர், குப்புசாமி செல்லமுத்து,பைத்தியக்காரன்,ஆடுமாடு,நித்யகுமாரன்,கடலையூர் செல்வம், ஊற்று,முரளிக்கண்ணன்,
ஜேகே,வெங்கட்ரமணன், NHM புகழ் நாகராஜன், சௌந்தரராஜன்,நந்தா, பாரி, லக்கிலுக், ஆகியோர். முழு லிஸ்ட் கைவசம் இல்லை. பாலபாரதி அவர்கள் பிறகு மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாக வாக்களித்தார். வினையூக்கி அவர்களின் பதிவிலிருந்து சில பெயர்களை பெற முடிந்தது. அவருக்கு நன்றி.

பதிவர் சந்திப்பின் முக்கிய நோக்கமே குசும்பன் மற்றும் அபி அப்பாவை சந்திப்பதாகும். குசும்பன் வரும் 16-ஆம் தேதி திருவாரூரில் நடத்தப்பட இருக்கும் தனது திருமணத்துக்கான அழைப்பிதழ்களை எல்லோருக்கும் தந்தார். திருமணம் செய்யவிருக்கும் இன்னொரு பதிவர் சுகுணா திவாகர். ஷர்ட்டை பேண்டுக்குள் உள்ளிட்டு வந்தது குறித்து சிலர் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அந்தப் பக்கம் போன ஒரு ஃபிகரும் அவரை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு சென்றதை நான் பார்த்தேன்.

NHM எழுதியை பற்றி வலையில் வந்த அவதூறு பற்றி பேச்சு வந்தது. பாலபாரதி அது பற்றி போட்ட டெக்னிகல் பதிவை நான் சிலாகித்து பேசிவிட்டு, அவரா ஒரு காலத்தில் தனது பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைக் கூட அழிக்கத் தெரியாமல் திகைத்தார் என்ற ஆச்சரியக் கேள்வியை எழுப்பினேன். அவரும் அச்சமயத்தில் தனக்கு விஷயஞானம் இல்லையென்றும் பிறகு கற்று கொண்டதாகவும் கூறினார். பரவாயில்லை எங்கிருந்து எந்த நிலைக்கு இவ்வளவு துரிதமாக உயர்ந்தார் என எண்ணி மேலும் வியப்படைந்தேன்.

இப்போது மா.சிவகுமார் வந்து அருகில் அமர்ந்தார். நான் சற்று இளைத்திருப்பதாகக் கூறினார். உடலைக் குறைக்கும் முயற்சியில் இருக்கும் எனக்கு இது ஒரு டானிக் போல அமைந்தது. தமிழ் - 99 விசைப்பலகை ஒட்டிகளை விநியோகம் செய்வதற்காக எடுத்தார். நானும் வாங்கலாமா என யோசித்து பிறகு வேண்டாம் என விட்டேன், ஏனெனில் எனது விசைப்பலகை ஜெர்மன் விசைப்பலகை. இந்த ஒட்டிகளால் எனக்கு குழப்பம் ஏற்படும் சாத்தியக்கூறு இருந்தது.

இதற்குள் ஈரோடிலிருந்து வால்பையனின் ஃபோன் அழைப்பு வந்தது. பதிவர் மீட்டிங்க் நல்லபடியாக போகிறதா எனக் கேட்க, அவருக்கு பதிலளித்து விட்டு அவருடன் உண்மைத்தமிழன், லக்கிலுக் மற்றும் அதியமானைப் பேசவைத்தேன். சற்று நேரத்தில் பதிவர் ஆதிஷா (நான் இளம் பெண்ணை எதிர்ப்பார்த்தால் ஒரு ஆண் வந்து எண்ணத்தில் மண்ணையள்ளி போட்டார்), அபி அப்பா ஆகியோர் வந்தனர். இதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டதில் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்பது புலப்படவில்லை. முதன்முறையாக நான் சந்திக்கும் ஒரு பதிவர் என்னுடன் எனது பதிவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பெயர் மறந்து விட்டது, அவர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பதிவில் எழுதி விடுவேன்.

NHM உருவாக்கிய நாகராஜன் என்னிடம் வந்து அதில் உள்ள சில பிழைகளை கூடிய சீக்கிரம் சரி செய்து விடுவதாகக் கூறினார். பிரச்சினை என்னவென்றால் எனது டிஃபால்ட் அமைவை இந்த மென்பொருள் ஜெர்மனிலிருந்து அமெரிக்க ஆங்கிலத்துக்கு தன்னிச்சையாக மாற்றுவதேயாகும். நான் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அடிக்க ஏதுவாக ஜெர்மன் விசைப்பலகை வைத்திருக்கிறேன். ஆகவே ஜெர்மனில் தட்டச்சு செய்ய NHM மென்பொருள் அப்ளிகேஷனிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம். இன்னொரு பிரச்சினை நான் பாட்டுக்கு பரணரில் அடித்து கொண்டிருக்க கோப்பு தானாகவே லதா எழுத்துருவை உள்ளிட ஆரம்பிக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டு ஏரியல் யூனிகோட் எம்.எஸ்-ஐ தேர்ந்தெடுத்து ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது. மேலும், வாடிக்கையாளருக்கு ஏரியல் யூனிகோட் எம்.எஸ் எழுத்துரு கோப்பை அனுப்ப இயலவில்லை ஏனெனில் கோப்பின் அளவு 20 மெகாபைட்டுக்கும் மேலாம். கிழிந்தது கிருஷ்ணகிரி என்று எண்ணினேன். பிறகு NHM அமைவுகளில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றியும் அன்புடன் நாகராஜன் அவர்கள் எடுத்து கூறினார்.

முதலில் மா.சிவகுமார் விடை பெற்று சென்றார். பிறகு குழுக்களாகப் பிரிந்து பேச்சுகள் நடந்தன. உலகமயமாக்கலை அதியமான் ஆதரிக்க அவரைச் சுற்றி பலர் அவரை எதிர்க்க அவர் அபிமன்யு போல போராடிக் கொண்டிருந்தார். நானும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கி பேசினேன். மோடியின் குஜராத், மோடி ஆகியோர் பற்றியும் பேச்சு சென்றது. எல்லா பதிவரும் அவரவரது வழமையான நிலைகளிலேயே இருந்து வாதாடினாலும் விவாதங்கள் எல்லாமே தோழமை சூழலில்தான் நடந்தன. மிகுந்திருக்கும் பதிவர்கள் இரு குழுவாகப் பிரிந்து ஒன்று தீர்த்த யாத்திரைக்கு புறப்பட, இன்னொன்று அருகே இருந்த டீக்கடைக்கு விரைந்தது. நான் இரண்டாவது குழுவில் இருந்தேன், ஏனெனில் தீர்த்த யாத்திரைக்கு சென்றால் வீடு திரும்ப நேரமாகும் என்பதே. ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழில்தான் அதிக சேனல்கள் இருப்பது பற்றியும் பேச்சு வந்தது. ஒவ்வொரு சேனலும் தனது வெற்றிக்காக எப்படியெல்லாம் பாடுபட வேண்டியுள்ளது என்பது பற்றியும் பேச்சு வந்தது. டீக்கடையில் ஆளுக்கு ஒரு கேக் ஒரு டீ. காசு கொடுக்க நான் முயன்றபோது பாலபாரதி என்னை முந்தி கொண்டார். அவரை முந்திக் கொண்டு ஓகை பணம் தந்தார்.

அதற்குள் மணி ஒன்பதாயிற்று. ஒவ்வொருவராக விடை பெற ஆரம்பித்தனர். நானும் பஸ் ஸ்டேண்டை நோக்கி நகர, பஸ் கிடைக்கும் வழியாக இல்லை. நல்ல வேளையாக அப்பக்கம் எனது ஆயிரக்கணக்கான கார்களுக்குள் ஒரு கார் வந்து நிற்க அதில் ஏறி அடையாறு சென்றேன். அங்கு மச்சினி வீட்டில் என் மனைவியும் மகளும் நான் ஒரிஜினலாக எடுத்து வந்த காருடன் காத்திருந்தனர். வீட்டுக்கு வரும்போது சரியாக மணி பத்து.

31.03.2008 09:43 hrs.- க்கு சேர்க்கப்பட்டது
சந்திப்புக்கு வந்தவர்களின் முழு பட்டியல், பாலபாரதி அனுப்பியது:
1.லக்கி 2.டோண்டுராகவன் 3.ஜேகே 4.சந்தோஷ் 5.வினையூக்கி 6.ஆடுமாடு 7.பைத்தியக்காரன்
8.நந்தா 9.முரளிக்கண்ணன் 10.உண்மைத் தமிழன் 11.சுகுணாதிவாகர் 12.வரவணை 13.ஓகை நடராஜன் 14.வெங்கட்ராமணன் 15.நாகராஜ்(NHM) 16.நித்தியகுமாரன் 17.ஊற்று 18.குப்புசாமி செல்லமுத்து 19.ஆழியூரான் 20.அதிஷா(இருவர்) 21.மா.சி 22. சவுந்தரராஜன் 23.அதியமான்
24.மரபூரார் 25.செல்வம் 26.பாரி(தமிழ்குரல்) 27.குசும்பன் 28.பாலபாரதி 29.அபிஅப்பா
30. ஜ்வ்ராம் சுந்தர்.
ஃபோட்டோக்களையும் பாலபாரதி அனுப்பினார். அவற்றைக் காண இங்கே சொடுக்கவும்.

நன்றி பாலபாரதி அவர்களே. அவற்றை எடுத்த குப்புசாமி அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கால் திருடன், அரைத்திருடன் - மதன காமராஜன் கதைகள்

இப்போதெல்லாம் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள், மதன காமராஜன் கதைகள் ஆகியவை அதிகம் காணக் கிடைப்பதில்லை. சிறு வயதில் என் அன்னை, பாட்டி ஆகியோர் இக்கதைகளைக் கூறியுள்ளனர். பிற்காலத்தில் அவற்றை நேரடியாக படிக்க நேர்கையில் அவர்கள் ரொம்பவும் சென்சார் செய்தே கதைகளைக் கூறியதை அறிந்தேன். அது பற்றியல்ல இப்பதிவு. அதில் ரசித்த கதைகளில் ஒன்றைத் தருவது மட்டுமே இப்பதிவின் நோக்கம்.

ஒரே ஒரு ஊரில் கொட்டாப்புளி என்னும் திருடன் இருந்தான். அவன் கன்னம் வைத்து திருடுவதில் சமர்த்தன். எப்படிப்பட்ட பாதுகாப்பிருந்தாலும் கன்னமிட்டு வீட்டினுள் சென்று திருடுவதில் சமர்த்தன். நன்றாக மாறுவேடமும் அணிவான். ஒரு தடவை நல்ல உபன்யாசகன் போல வேடமணிந்து உள்ளூர் வசந்த மண்டபத்தில் தங்கி பஜனைகள் செய்து வந்தான். கூடவே அவனது பிள்ளை மஹரிஷி வேஷம் அணிந்து அவனுக்கு துணையாக இருந்தான். தினமும் ஊரடங்கியதும் ஏதாவது ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்து அதில் கன்னமிட்டு அப்பனும் மகனும் கொள்ளையடிப்பர். பிறகு அடுத்த நாள் காலை ஒன்றுமே நடவாதது போல வசந்த மண்டபத்தில் பஜனை செய்ய வந்துவிடுவர்.

அப்படித்தான் ஒரு நாள் இரவு அப்பனும் பிள்ளையும் கன்னமிட ஒரு வீட்டுக்கு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அந்த வீடு இந்த ஜோடி மேல் சந்தேகம் கொண்டிருந்த கதிரவன் என்பவரது வீடு. அவர் மாடியிலிருந்து இந்த ஜோடி தன் வீட்டை நோக்கி வருவதை நிலா வெளிச்சத்தில் கண்டு கொண்டார். அவர்கள் கையில் கன்னக்கோல் வேறு இருந்தது. கதிரவன் தனது பணப்பெட்டி அறையில் ஒளிந்து கொண்டார். இங்கு கொட்டாப்புளி வழக்கம்போல கன்னமிட்டு சுவரில் துளை இட்டான். கன்னமிடும் கொள்ளைக்காரர்களது வழக்கத்துக்கேற்ப தனது இருகால்களையும் முதலில் உள்ளே நுழைத்தான். பிறகு உடலை உள்ளே நுழைத்தான். தலையைத் தவிர மீதி எல்லா பாகங்களும் உள்ளே வந்து விட்டன. இதற்கெனவே காத்திருந்த கதிரவன் அந்த உடலின் இருகால்களிலும் கடப்பாரையால் இரண்டு போடுபோட்டு அவற்றை உடைத்தார். பிறகு உடம்பின் மீது பெரியபெட்டிகளை வைத்து அடுக்கினார். பிறகு சாவகாசமாக கதவைத் திறந்து காவலாளிகளைக் கூப்பிட்ட வண்ணம் வீட்டின் வெளியே வந்தார். நிலைமை கைமீறியதை அறிந்த மகரிஷி சட்டென்று தந்தையின் தலையை கத்தியால் வெட்டி எடுத்து அங்கிருந்து தன் வீட்டுக்கு ஓடிவிட்டான். ஆக திருடனது முண்டம் மட்டும் அகப்பட்டு கொண்டது. ஆனால் தலையில்லாததால் அடையாளம் காண இயலவில்லை.

வழக்கு அரசனிடம் வந்தது. கதிரவன் ஒரு ஆலோசனை கூறினார். அதாவது முண்டத்தை ஒரு கைவண்டியில் போட்டு ஊர் முழுக்க ஊர்வலம் விட வேண்டும். அதைப் பார்த்து யார் அழுகிறார்களோ, அவர்களே திருடனின் உறவினர்கள். அவ்வாறே அரசனும் ஆணையிட முண்டத்தை ஊர் முழுக்க ஊர்வலம் கொண்டு வந்தார்கள். மகரிஷி தன் அன்னையிடம் உடலைப் பார்த்து அவள் அழுதால் காரியம் கெட்டுப் போகும் என எச்சரிக்க, அவளோ அழாமல் இருக்க முடியாது என்று கூறிவிட்டாள். ஆகவே மகரிஷி ஒரு காரியம் செய்தான்.

ஊர்வலம் இவர்கள் இருக்கும் தெருவுக்கு வந்த சமயம் மகரிஷி தன் வீட்டுக்கு முன்னால் இருந்த மரத்தில் ஊர்வலத்தைப் பார்க்கும் கும்பல்களில் ஒருவனாக அமர்ந்திருந்தான். கைவண்டி வீட்டுக்கருகே வரும் சமயம் பார்த்து தொப்பென்று கீழே விழுவது போல விழுந்தான். அவன் அம்மா அதை பார்த்து குய்யோ முறையோ என ஒப்பாரி வைத்தாள். கைவண்டி வீட்டைக் கடந்ததையும் கவனிக்காது பையன் மேல் விழுந்து அழுதாள்.

ஆக அரசனின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கதிரவனிடம் அரசன் இதுபற்றி கேட்க, அவரும் தன்மகனுக்காக அழுத அப்பெண்மணியும், கீழே விழுந்த அந்த மகனுமே முண்டத்தின் மனைவி மற்றும் மகனாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்.

மீதிக்கதை? அது கிடக்கட்டும் இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.

அலிபாபா கதையில் மார்ஜியானா ஊரில் எல்லா வீட்டு கதவுகளிலும் + குறி இட்டதும் இது போன்ற யுக்தியே.

மொக்கை போட்டு கொஞ்ச நாட்கள் ஆயின. ஆகவே இந்த மொக்கை

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/28/2008

டோண்டு பதில்கள் - 28.03.2008

பாலா:
1. சாதி வெறி பிடித்து அலையும் உயர் சாதி திராவிடர்கள்,ஆயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளாக அரசு,மற்றும் நில புலன்,வியாபாரம் என்று எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்தார்கள்.இருந்தும் கூட தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்வது அரசியலுக்காகவா அல்லது இந்த மூஞ்சிகள் உண்மையிலேயே மிகவும் கீழ்த்தரமான,அறிவே இல்லாத காட்டுமிரண்டி கும்பலா?
பதில்: உண்மையிலேயே வெட்கக்கேடுதான். வன்கொடுமைகள் எல்லாம் இன்னும் செய்து கொண்டு, அதே சமயம் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனக் கூறிக் கொண்டு பல சலுகைகளையும் கேட்பவர்கள் அனேகம். கூர்ந்து பார்த்தால் வலங்கையினர் இடங்கையினர் என்றெல்லாம் பாகுபாடு கொண்டு பல நூற்றாண்டுகளாகவே சாதிக் கொடுமை செய்திருக்கிறார்கள். பிரபஞ்சன் அவர்களது 'மானுடம் வெல்லும்' புதினத்தில் இவை நன்றாகக் கையாளப்பட்டுள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை என்னும் பிரெஞ்சு <> தமிழ் மொழிபெயர்ப்பாளரது (துபாஷ்) நாட்குறிப்பில் அக்காலக் கட்டத்தில் நேரடியாகக் குறிக்கப்பட்ட குறிப்புகள் சுவாரசியமாகவே உள்ளன. அப்புத்தகத்தை இப்போது மறுவாசிப்பு செய்து வருகிறேன். சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்.

வால்பையன்
அரசியல் கேள்விகள்
1.இடது சாரி, வலது சாரிகளுக்கு உள்ள வேறுபாடு என்ன? அவர்களின் முக்கிய கொள்கைகள் என்ன?
பதில்: "இடதுசாரிகள்" என்றால் சோஷலிச சிந்தனைக்காரர்கள் என்றும் "வலதுசாரிகள்" என்பவர்கள் கன்சர்வேடிவ்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
விக்கிபீடியாவில் அவை இவ்வாறு கூறப்படுகின்றன.
இடது சாரியினர்
வலது சாரியினர்
1789-ல் பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் தேசீய பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் இடப்பக்கத்திலும் பிரபுக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் வலப்புறத்திலும் அமர்ந்தனர். ஆகவே அவர்கள் முறையே இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என்றும் அறியப்பட்டனர். இந்தியாவில் சாதாரணமாக ஆளும் கட்சிகள் வலப்புறத்திலும் எதிர்க்கட்சிகள் இடப்புறத்திலும் அமர்வர். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் வலதுசாரிகளே. என்ன தலை சுற்றுகிறதா?

2.முந்தைய ஜெ ஆட்சி, இப்போதைய கருணாநிதி ஆட்சி, வேறுபாடு என்ன?
பதில்: ஊழல், பத்திரிகைகளை பயமுறுத்துவது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஒரு வேறுபாடும் இல்லை. ஒரே ஒரு வேறுபாடு தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதின் அணுகுமுறையில் மட்டும் உள்ளது. அதில் ஜெயலலிதா கலைஞரை விட ரொம்பவுமே அதிகச் சிறப்பாகவே செயல்படுகிறார்.

3.குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?
பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))

மொக்கை கேள்விகள்
1.அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?
தமிழ் வலைப்பூக்களில் வரும் தலைப்புகள் மாதிரி வைக்கலாமே. என்ன, சற்றே படிப்பவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும்.
நான் அம்மாதிரி வைத்த சில தலைப்புகள்: 'சோவும் மோடியும்' 'எம்ஜிஆருக்கும் எனக்கும் என்ன பிரச்சினை'? 'நபியில்லாமல் டோண்டு இல்லை', 'சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்', 'கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்','நான் அமெரிக்க ஆதரவாளன்','கள்ளா வா புலியைக் குத்து' 'டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா,' 'மச்சமச்சினியே,'ஆகியவை.
2.உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா? சின்ன வயதில் எந்த பைக் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
நான் ஓட்டிய டூ வீலர்கள் எல்லாம் சைக்கிள்களே. ஸ்கூட்டரோ பைக்கோ ஓட்டத் தெரியவே தெரியாது. ஒரே முறை ஸ்கூட்டர் ஓட்டிய அனுபவம் உண்டு. அது பற்றியும் எழுதியுள்ளேன்.

3.கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டா அல்லது பணம் காய்க்கும் விளையாட்டா?
பதில்: பணம் காய்க்கும் விளையாட்டாக மாறிப் போனதால் ஜெண்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் தகுதியை அது இழந்து விட்டது.

எல்.எல்.தாசு:
1. 16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..
கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீட்சிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள். அதே பத்திரிகையில் 8 ஆம் பக்கத்தில் ...
கோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை. பிறகு ஏன் பிரச்சினை?

பதில்: முதலில் கூறியது சோவின் தலையங்கம், இரண்டாவது இதயா என்பவரது ரிப்போர்ட். இருப்பினும் இரண்டிற்கும் நடுவில் ஒரு முரண்பாடும இல்லை. தேவாரம், திருவாசகத்தை தீட்சிதர்களே கனகசபையில் பாடுகிறார்கள், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிலும் கல்யாணம் ஆன தீட்சிதர்களுக்குத்தான் அந்த உரிமை. கிராப் வைத்துள்ள தீட்சிதர்களுக்கும் அனுமதி இல்லை. மற்றப்படி பக்தர்கள் (தீட்சிதர் அல்லாதவர்கள் என்றுதான் இங்கு பொருள் கொள்ளவேண்டும்) கனகசபை தவிர மீதி எல்லா இடங்களிலிருந்தும் பாடலாம். கனகசபையில் ஆறுமுகசாமியை பாடவைத்தது அரசின் அடாவடிச் செயல். இவ்வாறு செயல்படும் அரசு இசுலாமியர் ஒருவர் மசூதிகளில் தமிழில் பாடுவேன் என்றால் அக்கோரிக்கையை நிறைவேற்றுமா? அவ்வாறே பாடிய பலர் தேவார வார்த்தைகள் தெரியாது பேப்பர் வைத்து பாடியதையும் வார்த்தைகளை முழுங்கியதையும் பற்றி கூடத்தான் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அரசு நடந்து வருகிறது. அந்த அரசை நடத்துபவர் ஹிந்து என்றால் திருடன் என்று கூறினார். அப்படியானால் அவரும் ஹிந்துதானே என்று மட்டும் கேட்டு நிறுத்துகிறேன். பகுத்தறிவாளர்கள் மேலே கூறட்டும்

சர்வேசன்:
1. இந்த கேள்விகளில் எத்தனை மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது. எத்தனை, தனக்குத்-தானே அடிப்படையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது? :)
பதில்:
உண்மையான பதில் இது வரைக்கும் எல்லா கேள்விகளுமே மற்றவர் கேட்டதுதான் என்பதே. ஆகவேதான் வரப்போகும் வாரத்துக்கான கேள்விகள் முதலிலேயே வெளியிடப்படுகின்றன. உங்களது இக்கேள்வியும் அப்படித்தான். கூறுபவர்களுக்கு என்ன, விட்டால் சர்வேசன்தான் டோண்டு என்றும் கூறலாம். அதியமான் டோண்டு ராகவனே என்று ஒரு கோஷ்டி கூறிக்கொண்டு திரிந்தது. என்ன ஆயிற்று?

எல்.எல். தாசு:
1) சில மேல்நாட்டு பெயர்களை தமிழ் சிறப்பெழுத்து 'ழ'வுடன் தொடங்குகிறார்களே. அது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகும்?
பதில்: Jeanne, Jean, Janvier முதலிய பெயர்களை ழான்ன், ழான், ழான்வியே என்றெல்லாம் உச்சரிப்பார்கள். அதிலும் முதலில் இருக்கும் எழுத்தின் ஒலி 'ழ'வும் 'ஜ'வும் கலந்த ஒலி. அதை நாம் வடிவுக்கு கொண்டுவர இயலாததால்தான் வெறுமனே ழ போடுவோம்.
இப்படித்தான் சாதாரணமாக Hoechst என்னும் பெயரை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு அந்த கம்பெனியே விளம்பரம் செய்தது. ஏனெனில் ஒவ்வொருத்தர் அதை ஹோக்கஸ்ட், ஹோச்சஸ்ட் என்றெல்லாம் உச்சரித்து பிராணனை வாங்கினார்கள். 'ஆகவே ஐயா சாமி ஹெக்ஸ்ட்' என்றாவது கூறுங்கள் என்று கெஞ்ச வேண்டியதாயிற்று. மற்றப்படி அவ்வார்த்தையின் உச்சரிப்பை தமிழில் எழுதுவது கடினம். இருந்தாலும் முயற்சிக்கிறேன். Hoechst-ல் வரும் oe-ஐ o என்று உச்சரித்து அப்படியே e-ஐயும் சேர்த்து கூற வேண்டும். என் போன்ற கூட்டாளிகள் ஒரு நிமிடமும் தயங்காமல் கூற இயலும். சுமாராக ஹோயிக்ஸ்ட் என்பது போல வரும். நான் அக்கம்பெனிக்கு சென்றபோது அக்கம்பெனி நிர்வாகி ஒருவரிடம் (அவர் ஜெர்மானியர்) நான் அவ்வாறே உச்சரிக்க, அருகில் இருந்த இந்திய அதிகாரி என்னை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு திருத்தி மேலே குறிப்பிட்ட கம்பெனி விளம்பரத்தைப் பற்றியும் கூறினார். நான் அதற்கு மேலே சொன்ன ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு விதிகளை பற்றி பேசி அவர் கூறியதுபோல சொல்ல ஏலாது என்று மறுத்துவிட, ஜெர்மானியர் நான் கூறியதை இந்திய அதிகாரியிடம் உறுதி செய்தார். அது சரி, Hoechst அல்லது Höchst என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அது Hoch Höher Höchst (High Higher Highest) என்று வரும் டிக்ரீஸ் ஆஃப் கம்பேரிசனில் வருகிறது.
இன்னொரு விஷயம், நீங்கள் கூறுவதுபோல ழான்ன் என்றெல்லாம் உச்சரிப்பதோ எழுதுவதோ மொழிபெயர்ப்பு அல்ல, அது ஒரு மொழி சொல்லை உச்சரிப்பது பற்றிய விஷயம். தமிழில் ழான்ன் என்று எழுதுவதை Transliteration என்று கூற வேண்டும்.
2) ஒவ்வொரு பெயர்சொல்லையும் அதன் உரிமையாளர் உச்சரிப்பது போல் உச்சரிக்கவேண்டும் . உ.தா திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிக்கேன் என அவன் உச்சரிக்க முடியாமல் சொன்னான். ஆனால் நாம் ஏன் 'இங்லீஷ்' என்ற பெயர்சொல்லை ஆங்கிலம் என மொழிபெயர்த்துள்ளோம்.
இதற்கு ஒரு பெரிய பாரம்பரியமே உண்டு. இங்லீஷை ஆங்லே என்று பிரெஞ்சுக்காரரும், இங்லேஸ என்று இத்தாலியரும் கூறுவர். அதாவது வேற்றுமொழிச் சொல்லை இன்னொருவர் தம் தாய்மொழியில் கூறும்போதோ எழுதும்போதோ அந்த தாய்மொழியின் விதிகளுக்குட்படுத்துதால் உலகளாவிய செயல். நான் போய் ஜெர்மன் மொழியை உங்களிடம் டாய்ட்ச் என்று கூறினால், 'வந்துட்டாண்டா அல்டி மயிராண்டி, இவனுக்கு ஜெர்மன் தெரியுங்கறதை சொல்லறதை எப்போத்தான் நிறுத்தப் போறானோ' என்று நீங்கள் நினைத்தால் நான் உங்களிடம் தவறு காண இயலாது. (விஷயம் என்னவென்றால் சமீபத்தில் 1969-ல் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தபோது அவ்வாறு கூற நான் சொன்ன அதே நீதிக்கதையை கூறி உதை வாங்கிய என் நண்பன் ஆர்.எஸ். ராமநாதன் அப்படித்தான் சொன்னான்). அதே போலத்தான் ம்யூனிக்கை ம்யுன்ஷன் என்று கூறுவதும். ஆனால் Hoechst-ஐ மட்டும் சரியாகத்தான் உச்சரிப்பேன். ஏன்? அதுதான் டோண்டு ராகவனின் முரண்பாடு. அதேபோல Volkswagen-ஐ வோக்ஸ்வாகன் என்று கூற மாட்டேன் ஃபோக்ஸ்வாகென் என்றுதான் கூறுவேன் (மக்கள் கார்). ஓக்கே?
Triplicane என்றதும் எனது இந்தப் பதிவின் பின்னூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது. CPWD-ல் பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு: Please find herewith enclosed in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும். இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith enclosed in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று என்னை யாருமே கேட்கவில்லை. பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட கிளர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், "சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன். அது ஒரு தமாஷ் காலம்.

செந்தழல் ரவி:
1. இதுவரை வாழ்க்கையில் எதையாவது சாதித்ததாக எண்ணுகிறீர்களா? அப்படி என்றால் அதில் முதலில் நிற்கும் சாதனை எது?
பதில்: ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையிலிருந்து ஓய்வு பெறுவது என்பது டென்ஷனை வரவழிக்கும் விஷயமே. அது பற்றி நான் இப்பதிவிலும் எழுதியுள்ளேன். இப்போது சுயமாக மொழிபெயர்ப்பு வேலைகள் எடுத்து செய்வதால் அந்த ஓய்வு என்பது என் வாழ்க்கையில் இப்போதைக்கு இல்லை. அதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய சாதனை.
கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டும். கடைசி மொழிபெயர்ப்பை அதன் பில்லுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு தட்டச்சு பலகை மீது விழுந்து பிராணன் போவதுதான் என்னைப் பொருத்தவரை உயர்ந்த சாவு. சங்கராபரணம் சங்கர சாஸ்திரிகள் பாடல் மேடையில் உயிர் விட்டது இன்றும் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது.
2. தமிழ் சமுதாயத்துக்கு இதுவரையில் நீங்கள் செய்த பெரிய தொண்டு என்ன? தானம் தருமம் செய்வதில் ஆர்வம் உண்டா?
பதில்: ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லைதான். தான தர்மம் செய்வதில் ஆர்வமேல்லாம் இதுவரை இல்லை.
3. இளமைப்பருவத்தில் காதலித்ததுண்டா? யாரை? அந்த கதையை சொல்லமுடியுமா?
பதில்: சமீபத்தில் 1953-லிருந்து நான் எனக்காக நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது 7 அவளுக்கு 4. பிறகு 21 ஆண்டுகள் கழித்து அவளையே கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மறுபடியும் அவளைத் திருமணம் புரிந்து கொண்டேன். எங்கள் பக்கத்தில் அதை சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) என்பார்கள்.
4. மோடியை நேரில் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?
சென்னைக்கு வந்தால் அவருக்காக மொழிபெயர்க்கும் வாய்ப்பை கேட்பேன். அதுவும் துக்ளக் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் குருமூர்த்தி அவர்கள் மோடிக்கு மொழிபெயர்ப்பை செய்ததைப் பார்த்ததும் இதுதான் தோன்றியது. குருமூர்த்தி அவரிடம் ஆங்கிலத்தில்தான் பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் அவரிடம் ஹிந்தியில் பேசியிருந்திருப்பேன்.
5. தமிழ்மணத்தில் எழுத வரவில்லை என்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?
பதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. அதில் எழுதுவது என்ற எண்ணமே உண்மைக்கு புறம்பானது. நான் எழுதும் பதிவுகள் அதனால் திரட்டப்படுகின்றன அவ்வளவே.
6. கொலைவெறியோடு பின்னூட்டம் போட்டுத்திரியும் பாலா என்பவர் யார்?
பதில்: தெரியாது.

அனானி (விக்ரம் பெயரில் வந்தவர்)
1) பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர் நீங்கள் ஆரம்பித்தால் என்ன?
பதில்: அவ்வளவு அறிவு எனக்கில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
2) www.dondu.com தளம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?
பதில்: இல்லை.
3) உங்களை திராவிடம் பேசுபவர்கள் அடிக்கடி கருத்து தாக்குதல் நடத்துவது ஏன்? அப்படி என்ன செய்துவிட்டீர்கள்?
பதில்: சாதாரணமாக பார்ப்பனர்கள் தாக்கப்பட்டால் பதில் கூறாது நகர்ந்து விடுவார்கள். தங்களைப் பார்த்து பயந்துதான் அவ்வாறு செல்கிறார்கள் என்று இவர்களும் சந்தோஷப்பட்டு கொள்வார்கள். முதன் முறையாக நான் வந்து 'ஆ ஊ என்றால் பாப்பானை குறை சொன்னால் இந்த பாப்பான் வந்து கேட்பான்' என்று நான் எதிர்த்து நிற்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அருண்
1. 'சோ' அவர்களுக்கு பிறகு துக்ளக் நாளேடு எப்படி இருக்கும். நானும் சோ வின் விசிறி தான். அதனால் தான் கவலையோடு இந்த கேள்வியை கேட்கிறேன்?
பதில்: கல்கி போனப்புறமும் கல்கி இருக்கிறதே. துக்ளக்குக்கும் யாராவது வராது போய்விடுவார்களா என்ன?
2. நீங்கள் ஏன் நல்ல ஆங்கில புதினங்களை தமிழில் மொழி பெயர்க்க கூடாது? பணம் அதிகமாக வராது என்பது மட்டும்தான் காரணமா?
பதில்: அதிகமாக வராதா? ஒருவரும் என்னை கமிஷன் செய்யாமல் நான் பாட்டுக்கு ஆங்கில புதினங்களை மொழிபெயர்த்தால் பணம் வரவே வராது ஐயா. அப்படியே பணம் வந்தாலும் கொஞ்சமாகத்தான் வரும் என்பது பற்றி எனது ஜெயா டி.வி. பேட்டியிலேயே இது பற்றி பேசியுள்ளேன். இது முதல் பகுதி. மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.

அனானி (24.03.2008-ல் கேள்வி கேட்டவர்)
1. பெண்களைக் கவருவது எப்படி?
பதில்: சமீபத்தில் 1954-ல் வந்த மிஸ்ஸியம்மா படத்தில் எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் வாயசைக்க ஏ.எம். ராஜா பாடுவதையே இங்கு பதிலாக வைக்கிறேன்.
முடியும் என்றால் படியாது
படியும் என்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்.

அலுக்குக் குலுக்கி ஒதுங்கி நின்றால்
அருகில் ஓடி வாரும் என்றே
வலியப் பேசி வாரும் என்றால்
வந்த வழியைப் பாரும்- என்றே
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்.

Indian
1. நேபாள மக்களின் உரிமைக்காக சமீபத்துல பொங்கியெழுந்து சென்னையில் போராட்டம் நடத்தின அசுரன், தியாகு, ஸ்டாலின் வகையறாக்கள் திபெத் விவகாரத்துல கள்ள மவுனம் சாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (என்னதான் 'முதலாளித்துவ' சீனாவை எதிர்க்கிறோம் என்று பீலா விட்டாலும் பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சே)?
பதில்: 1962-ல் இந்தியாதான் சீனாவைத் தாக்கியது என்று கூறும் புண்ணியவான்கள் வேறு எப்படி ரியேக்ட் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள்? இந்த அழகில் அமெரிக்கா இதை பற்றி பேச ஆட்சேபம் தெரிவிப்பது இதே கம்யூனிஸ்டுகள்தான்.

வேல்பாண்டி:
1. பெரியாரின் பூணூல் அறுப்பு மற்றும் கொண்டை அறுப்பு போராட்டத்துக்கு பிராமணர்கள் எவ்விதம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்?
பதில்: பெரியாரின் இச்செயல்பாடுகளெல்லாம் தனியாக மாட்டிக் கொண்ட சில நோஞ்சான் பார்ப்பனர்களிடம்தாம் நடந்தது. மற்றப்படி ரொம்ப பரவியதாக நினைவில்லை. யாருக்காவது இதற்கு மாற்று கருத்து இருந்தால் கூறலாம். நானும் தெரிந்து கொள்வேன்.
2. காஞ்சி சங்கர மட கொலை வழக்கில் உங்கள் "தீர்ப்பு" எப்படி இருக்கும்?
பதில்: கேஸ் விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. ஆகவே கருத்து கூறுவதற்கில்லை.
3. காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...
பதில்: நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.
4. அப்துல் கலாம் - பிரதீபா பட்டீல் ஒப்பிடுக.
பதில்: இதை விட அப்துல் கலாமை யாராவது அவமானப்படுத்த இயலுமா?

எம்.கண்ணன், பாங்காக்
1. 108 திவ்யதேசங்களில் எத்தனை திவ்யதேசங்களுக்குச் சென்றுள்ளீர்கள் ? தரிசனம் செய்துள்ளீர்கள் ? ஏதாவது இண்டரஸ்டிங் அனுபவம்?
பதில்: கிட்டத்தட்ட 90 திவ்யதேசங்கள் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் தென்திருப்பேரை. என் வீட்டம்மா என்னை விட அதிகம் பார்த்திருப்பார். மலை நாட்டு திருப்பதிகள், நைமிசாரண்யம், முக்திநாத் ஆகிய தலங்களைப் பார்க்க வேண்டும்.
2. நரசிம்மம் என்பதை ந்ருசிம் 'ந்' எழுத்தில் துவங்குகிறார்களே சிலர்? ஏன்? (சமஸ்கிருதம் மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்)
பதில்: நரசிம்மஹ, நாரசிம்மஹ, ந்ருசிம்மஹ ஆகிய மூன்று முறைகளிலும் இப்பெயரைக் கூறலாம். எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான். சுலோகங்களில் வரும்போது யாப்பு, சந்தி, எதுகை, மாத்திரை ஆகிய தேவைகளுக்கேற்ப வெர்ஷன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆக வடமொழியின் இலக்கணத் தேவைகளே இதற்கு காரணம் என்றெல்லாம் என்னிடம் கூறியவர் சென்னை பல்கலைக்கழக வைஷ்ணவத் துறையின் தலைவர் டாக்டர் வி.கே.எஸ்.என். ராகவன் அவர்கள்.
3. எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள் ? சுவையான அனுபவம்?
(இதுவரை செல்லவில்லையெனில் - எந்த நாடுகளுக்குச் செல்ல விருப்பம்? ஏன்)

பதில்: பாஸ்போர்ட்டே இல்லாத நிலையில் எங்கு போவது? அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு பயணங்களில் மோகம் ஒன்றும் இல்லை. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்றிருப்பதே சுகமாக இருக்கிறது. அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ எந்த நாடாக இருந்தாலும் அங்கு தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அது ஒன்றும் விரும்பத்தக்கதாக இல்லை.
அப்படியும் நான் போக வேண்டும் என்று விரும்பும் நாடு ஒன்றே ஒன்றுதான். அதுதான் இஸ்ரேல். இஸ்ரவேலர்களிடம் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை ஒரு பூர்வ ஜன்ம பந்தமாகவே பார்க்கிறேன்.
4. வாழ்க்கையில் இன்னும் அடையவேண்டிய லட்சியம் ஏதாவது உண்டா?
பதில்: மொழிபெயர்ப்பு துறையில் செய்ய வேண்டியவை ஏராளம்.
5. விவேக்- வடிவேலுக்குப் பிறகு யாரும் பெரிய நகைச்சுவை நடிகர்கள் வரவில்லையே ஏன்?
பதில்: வருவார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார்கள்.

அனானி1 (26.03.08 அன்று கேட்டவர்)
1. ப்ளாக்கர்களில் மிக அருமையாக எழுதக்கூடியவர் என்று யார் யாரை கருதுகிறீர்கள்?
பதில்: மா.சிவக்குமார், பத்ரி, ஜெயமோகன், பா.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், என்றென்றும் அன்புடன் பாலா
2. dogma என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?
பதில்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலியில் கொடுக்கப்பட்ட பொருள்கள்: உறுதிக் கோட்பாடு, வறட்டியம். மொண்டித்தனம் என்றும் கூறலாம். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று கூறுவதையும் இதில் சேர்க்கலாம்.

Vajra
1. வலைப்பதிவுகளால் தமிழ் ஊடகத்திற்கு என்ன நன்மை?
பதில்: பலருக்கு எழுத வாய்ப்பளிக்கிறது. ஆகவே புதிய எழுத்தாளர்கள் வருபவார்கள். அதுதான் நன்மை.
2. ஆங்கில வலைப்பதிவுகள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களை அடைவது போல், தமிழ் வலைப்பதிவுகள் இருப்பதில்லையே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: இப்போதைக்கு இல்லைதான். ஆனால் பின்னால் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை உண்டு.
3. அச்சு ஊடகங்கள் அதிகப்படியான left of centre கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருப்பதாக என் எண்ணம்? தங்கள் கருத்து?
பதில்:
என் கருத்தும் அதுவேதான். எல்லோரையும் பணக்காரர்களாக ஆக்குவதை விட எல்லோரையும் ஏழைகளாக ஆக்குவது எளிது என்ற சோஷலிச கோட்பாடே பணக்காரர்களை பார்த்து பொறாமைப்பட மட்டும் ஊக்குவிக்கிறது. ஜெமினி வாசன் எடுத்த படங்களில் ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்ற கருப்பு வெளுப்பு சிந்தனைதான் மேலோங்கி நிற்கும். ஆனால் வாசன் பெரிய பணக்காரரே, அதுவும் இம்மாதிரியான படங்கள் எடுத்தே அவர் மேலும் பணக்காரர் ஆனார். அதே லாஜிக்கால்தான் அச்சு ஊடகங்கள் இடது சாரி சிந்தனைகளில் உள்ளன.

அனானி2 (26.03.2008 அன்று கேட்டவர்)
(கடலோர பகுதிகளிலும், கடற்கரைகளிலும் பொது மக்களை எச்சரிக்க (Public Address System) எதுவும் நிறுவபடாமலே இருக்கும்போது, ஹைதிராபாத்தில் ஒரு காலி பில்டிங்கை திறந்துவைத்துவிட்டு சுனாமி எச்சரிக்கை சிஸ்டெம் நிருவிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டு திரிகிறது இந்திய அரசு).
கேள்விகளுக்கு வருகிறேன்..
1. இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் எப்போது நிறுவப்படும் ? (உண்மையான எச்சரிக்கை செய்யும் சிஸ்டமாக இருக்க வேண்டும், பொது மக்களை உடனடியாக எச்சரிக்கை செய்யும் அளவுக்கு திறன் இருக்க வேண்டும்)
பதில்: அம்மாதிரி எச்சரிக்கை அளிக்கும் ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? கண்டிப்பாக கடலே இல்லாத ஹைதராபாத்தில் காலிக் கட்டிடமெல்லாம் இதில் சேராது. வேறு எப்படி இருக்க வேண்டும்?
ஒரு சிறு கற்பனை செய்வோமா? பூகம்பம் 7 ரிக்டர்களுக்கு மேல் போனால், சுனாமி வரும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. கடைசியாக வந்த சுனாமி நிலநடுக்கம் வந்த ஓரிரு மணி நேரத்தில் வந்தது. அப்போதும் தகவல் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் எச்சரிக்கையை சீரியசாக எடுத்து துடியாகச் செயல்பட வேண்டிய யாருமே டியூட்டியில் இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலைமைதான்.
ஆகவே இதற்காக எச்சரிக்கை மையம் ஒன்றை 24 மணி நேர வேலையாக நிறுவ வேண்டும். கடற்கரைகளில் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் எப்போதும் மின்சார விநியோகம் தடைபடாது இருக்க வேண்டும். சாத்தியக் கூறு விதிகள்படி சுனாமி வரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் பல ஆயிரங்கள் என்ற கணக்கில் இருக்கும். அப்படியே எல்லாம் அமைத்தாலும் யார் அதையெல்லாம் மானிட்டர் செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா? கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா?
2. இப்படி பொது மக்கள் நலன் பற்றி கவலைபடாமல் இருக்கும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்/ விஞ்யானிகளுக்கு சம்பளத்தை குறைக்காமல் ஏன் உயர்த்த வேண்டும்?
பதில்: சுனாமி எச்சரிக்கை போன்றவை பலரது ஒருங்கிணைந்த செயலாக்கத்தால்தான் வரும். அதில் தனிப்பட்ட யார்மீதும் பொறுப்பை நிர்ணயிக்க இயலாது. ஆகவே நீங்கள் நினைப்பது கற்பனைக்கு நன்றாக இருப்பினும் நிஜமாகும் சாத்தியக்கூறு குறைவுதான்.

அனானி (Competition is Liberty என்னும் பெயரில்)
1. When will the Monopoly of The Hindu end?
ஹிந்துவின் பலம் சென்னையில் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும். நல்ல போட்டி வந்தால் மோனாபிளி நிலைமை மாறிவிடும். அது வரை இழுபறிதான்.
அனானி (26.03.08 அன்று கேள்வி கேட்டவர்)
1. என்ன சார், லக்கிலுக் பதிவை தமிழ்மணத்தை விட்டு தூக்கியிருக்கிறார்கள். நீங்க ஒண்ணுமே சொல்லலையே? உங்களுக்கு ஜெயா டிவி சிடி எல்லாம் கொடுத்த நண்பர் ஆச்சே?
பதில்: அவர் திரும்ப வரவேண்டும் என்று விரும்புவதாலும், நான் ஏதாவது இப்போது கூறப்போக அவ்வாறு நடக்காமல் போகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாலும், இப்போதைக்கு அது பற்றி பேசப்போவதில்லை. எப்படியும் வரும் ஞாயிறன்று அவரை மெரினா கடற்கரை பதிவர் சந்திப்பில் பார்க்கத்தான் போகிறேன். அப்போது நேரில் சில விஷயங்களை வாய்ப்பு கிடைத்தால் அவருடன் விவாதிக்க ஆசை. பிறகு பார்க்கலாம்.

அடுத்த வாரத்துக்கான கேள்விகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/21/2008

டோண்டு பதில்கள் - 21.03.2008

பாலா:
1)சிங்கப்பூர் கருத்து கந்தசாமியோ அல்லது அவரது தெலுங்கு மாமியார் பார்ட்டியான டி பி ஸி டி. அய்யாவோ தான் போலி டோண்டு/வி க/மூர்த்தி என்ற திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டால் உங்கள் முதல் எண்ணம் என்னவாக இருக்கும்?
பதில்: கோ.வி கண்ணன் கண்டிப்பாக மூர்த்தி இல்லை, ஆனால் அவனுக்காக ரொம்பவுமே வக்காலத்து வாங்கியவர். அவரைப் பற்றி நான் எழுதியதில் எந்த மாற்றமும் இல்லை.
மற்றப்படி டி.பி.சி.டி. க்கு அடிப்படை நாகரிகமே இல்லை, அவர் எழுதிய ஒரு பதிவில் அவர் எழுதியதன் காண்டக்ஸ்ட் புரியவில்லை, சற்று சுட்டி தரவும் என்று சாதாரணமாக கூறியதற்கே, புரியவில்லை என்றால் முட்டிக் கொள்ளுங்கள் என்று அன்பாக கூறும் அளவுக்கு எழுதுபவர். இவர் மூர்த்தி என்றால் ஆச்சரியம் எதுவும் எனக்கு இருக்காதுதான். அவ்வளவு தேவையற்ற காழ்ப்பு என்னைப் பற்றி.

2) இந்தியாவைப் பொருத்தவரை,கீழே தரப்பட்டவகைகளில் மிகவும் மோசமான தீவிரவாத குழு எது?
LeT,JeI,HUJI,SEMI,SIMI,JeM போன்ற இஸ்லாமிய தீவிரவாத கும்பலா?
பெ தி க,தி க,தி மு க போன்ற காட்டுகூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் காட்டுமிராண்டி கும்பலா? அல்லது, ம க இ க போன்ற வெறி பிடித்து அலையும் பொறிக்கி கம்யூனிஸ்ட்(நக்சல்) கும்பலா?

பதில்: இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல்கள் எல்லாமே உலகத்துக்கே அபாயம். இந்தியாவுக்கும்தான்.

புபட்டியன்:
1. வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு கமல் பொருத்தமாகவே இருக்க மாட்டார். அவர் அந்த பாத்திரத்தின் தன்மையை கெடுப்பார்.. அதோடு "இப்போதைய" என்பதற்கு அர்த்தம் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் அல்ல...
"இப்போதைய" என்பதற்கு அர்த்தம், "சூர்யா, விக்ரம், பரத், அஜித், ஆர்யா, விஜய், விஷால்... etc." யார் உங்கள் சாய்ஸ்?

பதில்: கமல் இன்னும் ஃபீல்டில்தான் உள்ளார். விக்ரம் மற்றும் சூர்யாவும் பொருத்தமானவர்களே.

வஜ்ரா:
சமீபத்தில் சென்னை லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியை போலீஸ் அடித்து நொறுக்கியதும், அதை எந்த முக்கிய தொலைக்கட்சி ஊடகத்திலும் காட்டாமல் மூடி மறைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: வெட்கக்கேடு. தேவையின்றி இசுலாமியர் ஓட்டுக்காக செய்யும் மலிவான ஸ்டண்ட் அது. சரஸ்வதி தேவியை நிர்வாணமாக வரைந்தவனுக்கெல்லாம் பாதுகாப்பு. நாடு எங்கே போகிறது?

அனானி1:
1. நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
பதில்: பெயரைச் சொல்லிவிட்டு முதலில் தொலைபேசுங்கள். பிறகு பார்ப்போம்.

அனானி2:
1. இந்த பார்ப்பன‍=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்?
பதில்: இந்த சண்டை போடவில்லை என்றால் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் எப்படி தொடர்ந்து வன்கொடுமை செய்வதாம்? ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு.

2. எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?
இரண்டாவது கேள்விக்கு லக்கிலுக்கும் பதில் அளிக்கலாம்!!!

பதில்: தேசீயக் கட்சிகள் பலம் பெற்று வருவதுதான் சரியாக இருக்கும். பி.ஜே.பி.யும் சரி காங்கிரசும் சரி திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் வரை தமிழ்மக்களுக்கு இந்த டகால்டி பற்றி புரிந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. TINA (There is no alternative) factor இருக்கும் வரை கஷ்டமே. மற்றப்படி திராவிடத் தலைவர்களின் டகால்டி வேலைகள் தெரியாமல் இல்லை. எனது முந்தைய கேள்விகள் பதிவில் ஒரு அநானியின் பின்னூட்டம் இங்கே பொருத்தமாக இருக்கும்.
//திராவிடக்கட்சிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவரும் சாதாரண தொண்டனின் இப்போதைய நிலை என்ன? அதன் தலைவர்களின் இன்றைய நிலை என்ன? நாற்பது வருடங்களுக்கு முன்னர் முத்துவேல் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், துரைமுருகன் இவர்களின் நிலை என்னவாக இருந்தது? விலைமாதுவிடம் சென்றுவிட்டு காசு கொடுக்காமல் வந்தவர்கள் யார்? கவிஞர் கண்ணதாசன் புட்டுப் புட்டு வைத்த உண்மைகளை நீங்கள் படிக்கவில்லையா? ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெட்கமில்லாமல் உண்டியல் வைத்து ஏழைத்தொண்டனின் கோவணத்தையும் அதில் போடச்செய்த தலைவர்களை இன்னமும் உங்களைப் போன்றவர்கள் நம்புவது வேதனையாக இருக்கிறது.//

சுழியம்:
ஏதேனும் ஒரு பதிலை தேர்ந்தெடுக்கவும்:
தன் கை பலமாக இருக்கும்போது பெரிய வஸ்தாது போல பூச்சாண்டி காட்டுவதும், தன் கை பலமாக இல்லாதபோது பொய் சொல்லுவதும், குழைந்து நடு நடுங்கி புகழாரம் சூட்டுவதும் யாருடைய செயல்?
1. கோழைகள் 2. சுயமரியாதை இல்லாதவர்கள் 3. புல்லுருவிகள் 4. அற்பர்கள்
5. திராவிட மாயையில் மயங்கியவர்கள் 6. வன்முறைக்கு அஞ்சுபவர்கள் 7. மானம் போனாலும், தர்மம் அழிந்தாலும், உலகில் நன்மை அழிந்தாலும், தானும் தன் குடும்பமும் உயிர் பிழைப்பதும், சுகங்களை அனுபவிப்பதுமே முக்கியம் என நினைப்பவர்கள் 8. பாலஸ்தீனியர்கள்
9. இஸ்ரேலியர்கள் 10. தமிழ் நாட்டில் சாதி வெறியினால் அதிகாரம் செய்யும் கழகக் கண்மணிகள்

பதில்: டார்வினின் இருப்பியல் தத்துவத்தை உணர்ந்து செயல்படுபவர்கள். உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் போய் ஆபத்தை தேடுபவன் முட்டாள். இன்று பதுங்கி உன்னைக் காப்பாற்றிக் கொண்டால், மறுபடியும் ஒரு நாள் சண்டையிட உயிர் இருக்கும் என்பதை உணர வேண்டும். ஆக, நீங்கள் கொடுத்த ஆப்ஷனிலிருந்து தெரிவு செய்ய இயலவில்லை.

சரவணன்:
ஒரு கோரிக்கை: அனானியாக வரும் கேள்விகளைத் தவிர்க்கவும். குறைந்தபட்சம் blogger கணக்கு இல்லாததால் அனானியாக வருபவர்கள் பெயர் குறிப்பிட வேண்டும் என்று கூறுங்கள்.
விளக்கம்: இப்போதைக்கு கருத்துதான் முக்கியம். மற்றப்படி வசை கேள்விகள் அனுமதிக்கப்படாது. அதை செய்ய என்னால் இயலும் என்று தெளிவாக இருப்பதால் பிரச்சினை இல்லை.

கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)
பதில்: கோத்ரா படுகொலை நடந்த அன்று ஹிந்துவில் செய்தி வந்தது. நானும் செய்தித்தாளில் தேடிப் பார்த்தேன். யாரும் அதை கண்டிக்கவில்லை. முக்கியமாக மதசார்பற்ற வியாதிகள் கள்ள மௌனம் சாதித்தனர். அப்போதே ஹிந்துவுக்கு மின்னஞ்சல் மூலம் ஆசிரியர் கடிதம் இது பற்றி அனுப்பினேன். இக்கொலைக்கு வாய் மூடி இருப்பவர்கள் அதற்கு எதிர்வினை வரும்போது எப்படியெல்லாம் பேசுவார்கள் என்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன். கடைசியில் அப்படித்தான் நடந்தது. எந்தக் கட்சி பதவியில் இருந்திருந்தாலும் கலவரம் நடந்திருக்கும். அதற்கு மோடிதான் பொறுப்பு என்று கூறுவது அரசியல் பிரசாரமே. அதை வைத்து 2002 தேர்தலிலேயே வேணமட்டும் பிரசாரம் செய்து விட்டனர். தலைமை தேர்தல் ஆணையரும் தனது நடவடிக்கைகளால் காங்கிரசுக்கு ஆதரவாக நடந்து பார்த்து விட்டார். ஆனாலும் மோடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜெயித்து ஐந்து ஆண்டுகள் அற்புத ஆட்சியைத் தந்தாரா இல்லையா? இப்போதையத் தேர்தலிலும் அவருக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட கூறமுடியவில்லை என்பதுதானே நிஜம். இம்மாதிரி ஒரு முதன் மந்திரியை நாம் கடந்த 40 ஆண்டுகளில் எப்போதாவது பார்த்திருக்கிறோமா? மோடி கொலை செய்தார் என்றால் ராஜீவ் 1984-ல் செய்ததென்ன? அவருக்கும் நாலில் மூன்று அறுதிப் பெரும்பான்மை தந்தார்கள். அவர் நாட்டை எப்படியெல்லாம் சோஷலிச மாயையில் வைத்து குட்டிச்சுவராக்கினார் என்பதையும் பார்த்தீர்கள்தானே. இம்முறை மோடிக்கு இசுலாமியரும் ஓட்டு போட்டனர். கடந்த ஐந்தாண்டுகளும் தீவிரவாதிகள் தாக்குதலோ, மதக்கலவரமோ ஒன்று கூட இல்லை. இதெல்லாம் முக்கியமில்லையா?
மேலும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இறந்த உதயகுமாரன், மதுரையில் தலைவரின் பிள்ளை நடத்திய ருத்ர தாண்டவத்தில் கொல்லப்பட்ட உயிர்கள், அதே போல தர்மபுரியில் அதிமுக ரௌடிகளால் பஸ்சில் உயிருடன் எரிக்கப்பட்ட மூன்று பெண்கள் என்றெல்லாம் அக்கிரம் செய்வித்து விட்டு வெட்கமின்றி ஆட்சி செய்யும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மோடி எவ்வளவோ மேல்.

எம்.கண்ணன், பாங்காக் - இந்த வாரக் கேள்விகள். கேள்விகளை இப்போது வெளியிடவேண்டாம். உங்கள் பதில்கள் வெளியாகும் போது வெளியிட்டால் நன்று.

1. வரும் நாடாளுமன்ற (அ) சட்டம்ன்ற தேர்தலில் உங்களை பிரச்சாரம் செய்ய கூப்பிட்டால் (தினக்கூலியும், பாட்டாவும் கொடுத்துதான்) எந்தக் கட்சிக்கு பிரச்சாரம் செய்வீர்கள் ? ஏன் ?
அ) திமுக ஆ) அதிமுக இ) தேமுதிக ஈ) பா.ஜ.க உ) காங்கிரஸ் ஊ) சமத்துவக் கட்சி எ) சோ ஆதரவு தரும் கட்சி ஏ) இன்னும் 10 ஆண்டுகளுக்கான உங்கள் பணத்தேவைகளை எந்தக் கட்சி பூர்த்தி செய்கிறதோ அந்தக் கட்சி?

பதில்: எந்தக் கட்சிக்குமே பிரசாரம் செய்வதாக இல்லை. எனது மொழிபெயர்ப்பு வேலையே தலைக்கு மேல் இருக்கும்போது இதெல்லாம் தவையேயில்லை.
2. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் பிறகு தமிழக அரசியல் எப்படி இருக்கும்?
பதில்: காலம் வரும்போது நிலைமையும் தானாகவே மாறும். இப்போது எப்படி ப்ரொஜக்ட் செய்து பார்ப்பதாம்?

3. சானியா மிர்சாவை மீடியாக்கள் இவ்வளவு கொண்டாடுவது எதற்காக? அவரது திறமைக்காகவா ? இல்லை அவரது கவர்ச்சியான உருவத்திற்காகவா?
பதில்: திறமைக்கு திறமை, கவர்ச்சிக்கு கவர்ச்சி. இரண்டுமே சேர்ந்து இருந்தால் வேண்டாம் என்றா கூறப்போகிறார்கள்? எது எப்படியானாலும் சானியா மிர்சா இந்திய டென்னிசுக்கு ஒரு வரப்பிரசாதம். அந்த இளம்பெண் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

4. குமுதத்தில் பாலகுமாரன் - எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம் என சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இது நடக்கும் என்று தோன்றவில்லை. கவர்ச்சி என்பது பாதி மூடிய நிலையில் வருவதே. முழுதும் திறந்தால் அது போய் விடும். டாப்லெஸ் பார்களில் ஜொள்ளுவிட்டு பார்ப்பது புதிதாக வருபவர்களே. பிறகு இரண்டே நாட்களில் பழகிப் போய் தத்தம் வேலையைப் பார்க்கின்றனர்.

5. நங்கநல்லூரில் தற்போதையை ரியல் எஸ்டேட் நிலவரம் எப்படி ? 900- 1000 சதுரடி flat எவ்வளவு விலை. ? தண்ணீர் பிரச்னை உண்டா?
பதில்: ஃபிளாட் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறும் என கேட்டறிந்தேன். ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) ஐம்பது லட்சத்துக்குக்ம் மேல் கேட்கிறார்கள். தண்ணீர் பிரச்சினை சில பாக்கெட்டுகளில் அதிகம் உண்டு.

வஜ்ரா:
1. இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான, திபத்தியர் கலாச்சாரத்தை அழிக்கும் சீனா பற்றி நம் உள் நாட்டு தேச துரோகிக் கும்பலின் (CPIM, CPM, CPIML) கருத்து என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஏதேனும் சொல்லுங்கள். அதே விஷயத்தை, "தி ஹிண்டு" எவ்வாறு அணுகுகிறது என்பது பற்றியும் சொல்லுங்கள் ஐயா.
கம்யூனிஸ்டுகளின் தேசதுரோக சிந்தனை சரித்திர பிரசித்தி பெற்றதாயிற்றே. 1941 வரை இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பேசி பிரிட்டனை எதிர்த்தவர்கள் ஸ்டாலின் சோவியத் யூனியன் மீது படையெடுத்ததுமே பால்மாறி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தேசபக்தர்களை காட்டிக் கொடுத்தவர்கள். 19620-ல் சீன ஆக்கிரமிப்பு போது சீனாவை கண்டிக்க ஒரு பகுதி மறுத்து, CPM ஆக மாறியது மறந்து விடுமா என்ன? இப்போது கூட 1962-ல் ஆக்கிரமிப்பு செய்தது இந்தியாதான் என்று பேசித் திரியும் கம்யூனிஸ்டுகள் உள்ளனரே. ஹிந்து பத்திரிகை வெறுமனே காக்டயில் கம்யூனிசம் பேசுகிறது.

எஸ். குமார் (ஆங்கிலத்தில் இட்ட கேள்வி அவர் விருப்பப்படி தமிழாக்கம் செய்யப்படுகிறது)
1. நாங்கள் கர்நாடக மாநிலத்தில் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். தமிழக அரசோ நடுவண் அரசோ அம்மாதிரி திருமணங்களுக்காக பணம் பரிசாக அளிக்கின்றனவா? அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
பதில்: இது பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எதற்கும் இங்கு போய் பார்க்கவும்

இந்த வாரத்துக்கான கேள்வி பதில்கள் இவ்வளவுதான். அடுத்த வாரத்துக்கான கேள்விகளை இப்பதிவின் பின்னூட்டத்தில் கேளுங்கள். வழக்கம் போல கேள்விகள் வர வர அவை அடுத்த வாரத்துக்கான வரவு பதிவில் சேர்க்கப்பட்டு விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/16/2008

கந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தி எடுத்த கதை

அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொன்ன கதை இது. ஒரு ஊரில் கந்தசாமி என்பவர் முந்தைய இரவு ஒரு பார்ட்டியில் வர்ஜா வர்ஜமில்லாமல் மொக்கிய மொக்கினால் அடுத்த நாள் காலை அஜீர்ணத்தால் வாந்தி எடுத்தாராம். இதுதான் நடந்த விஷயம். இதை ஒருவர் இன்னொருவருக்கு கூற, அந்த இன்னொருவர் வேறொருவருக்கு கூற விஷயம் எவ்வாறு மாறுகிறது என்பதைத்தான் அண்ணா அவர்கள் சுவைபட கூறினார்.

ஒருவர் இன்னொருவரிடம்: அண்ணே விஷயம் தெரியுமா, நேத்திக்கு கண்டதைத் தின்னதாலே நம்ம கந்தசாமி அண்ணன் வாந்தி எடுத்தாராம்.
இன்னொருவர் மூன்றாமவரிடம்: அண்ணே கந்தசாமி அண்ணன் குடம் குடமா வாந்தி எடுத்தாராம். ட்ரிப்ஸெல்லாம் வச்சிருக்காங்களாம்.
மூன்றாமர் நான்காமவரிடம்: ட்ரிப்ஸுல இருக்கிற கந்தசாமி அவுட்டாயிடுவார் என்னு பேசிக்கிறாங்க. மறுபடியும் கருப்பா வாந்தி எடுத்தாராம்.
நான்காமவர் ஐந்தாமவரிடம். கந்தசாமி காக்கா நிறத்துல கருப்பா வாந்தி எடுத்தாராம்.
அதற்குள் நம்ம கந்தசாமி குணமடைந்து வெளியில் வர இந்த ஐந்தாமவர் கந்தசாமி யார் என்று தெரியாததால் அவரிடமே போய்: அண்ணே நம்ம பேட்டை ரவுடி கந்தசாமி காக்கா காக்காயா வாந்தி எடுத்தாராம்.
ஐந்தாமவருக்கு நல்ல உதை கிடைத்தது.

அண்ணா சொன்ன கதையில் நானும் சிறிது மசாலா சேர்த்தேன் என்பதைக் கூறிடவும் வேண்டுமோ. இதே மாதிரி சமீபத்தில் 1969-ல் வந்த இரு கோடுகள் படத்தில் கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ஜெமினி கணேசனுக்கும் கலெக்டர் சவுகார் ஜானகிக்கும் (அவர்கள் ஏற்கனவே கணவன் மனைவி என்பதை தெரியாது) கள்ள உறவு கற்பித்து நாகேஷ் கதை ஆரம்பித்து வைக்க அது காது மூக்கு எல்லாம் வைத்து, படிப்படியாக டெவலப் ஆகி நாகேஷிடமே திரும்பிவர ஒரே கலாட்டாவாக ஆகும். ஆனால் இதே காட்சி இதன் ஹிந்தி ரீமேக்கில் இன்னும் அற்புதமாகக் கையாளப்பட்டது. படம் சஞ்சோக், அமிதாப் பச்சன், மாலா சின்ஹா (கலெக்டர்) மற்றும் அருணா இரானி (ஜயந்தியின் ரோல்). தமிழில் ஆடியோ வந்தால் ஹிந்தியில் வீடியோ துணைக்கு வந்தது.

காட்சிகளை விவரிக்க ஜானி வாக்கர் (நாகேஷ் ரோல்) ஆரம்பிக்கிறார். ஒவ்வொருத்தர் மசாலா சேர்த்து கூறுவதும் ஒவ்வொரு காட்சியாக விரிகிறது.
முதல் காட்சி: கோவிலில் அருணா இரானியும் அமிதாப்பும் ஒரு பக்கம் வர, எதிரில் மாலா சின்ஹாவும் அவர் மகனும் வருகின்றனர். போகிற போக்கில் மாலா சின்ஹாவும் அமிதாப்பும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் பார்க்கின்றனர்.
இரண்டாம் காட்சி: அப்படி பார்க்கும்போது நின்று காதல் ததும்பும் பார்வையை வீசுகின்றனர்.
மூன்றாம் காட்சி: ஒரு கணம் பிரிய மனமின்றி தயங்குகின்றனர். அமிதாப்பை அருணா இரானி இழுத்து செல்ல, மாலா சின்ஹாவை அவர் மகன் இழுத்து செல்கிறான்.
நான்காம் காட்சி: மாலா சின்ஹா தன் மகனது கையை உதற, அமிதாப் அருணா இரானியின் கையை உதற, அமிதாப்பும் மாலா சின்ஹாவும் கோவில் பிரகாரத்திலேயே கைகோத்து நடனம் ஆடுகின்றனர்.
நான்காம் காட்சியின் வர்ணனை ஜானிவாக்கரிடமே கூறப்படுகிறது.

இதெல்லாம் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? நண்பர் சந்திரசேகர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலே அதற்கு காரணம்.

அதிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கே தருகிறேன்.
ராமாயணங்கள் எத்தனை உள்ளன? 300? 3000? இக்கேள்வி பல ராமாயணங்களின் முடிவில் கேட்கப்படுகிறது. அதற்கு பதிலாக சில கதைகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இது.

ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்க, அவரது மோதிரம் நழுவி தரையில் ஒரு ஓட்டையில் விழுந்து விடுகிறது. அதைத் தேடி அனுமார் அந்த ஓட்டை வழியாக கீழே செல்கிறார். அனுமார் அந்தண்டை போனதும் ராமரிடம் வசிஷ்டரும் பிரும்மாவும் வந்து அவரது அவதார காரியம் முடிந்தது என்றும் அவர் வைகுந்தம் திரும்ப வேண்டும் என்று கூற, அவரும் சரயு நதியில் இறங்கி முழுகுகிறார். இது தெரியாத அனுமன் கீழுலகத்து ராஜாவை சென்று சந்திக்க, அவர் என்ன விஷயம் என்று கேட்கிறார். அனுமனும் நடந்ததை கூறி ராமரின் மோதிரத்தை தருமாறு கேட்கிறார். அரசனோ ஒரு தட்டில் குவியலாக இருந்த ஆயிரக்கணக்கான மோதிரங்களை காட்டி அதிலிருந்து ராமரின் மோதிரத்தை எடுத்து கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால் இதனால் பயன் இராது என்றும் அவரது ராமர் ஏற்கனவே வைகுந்தம் சென்றுவிட்டதையும் கூறுகிறார். விஷயம் இதுதான். ராமாவதாரம் பல இடங்களில், பல காலகட்டங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ராமரது மோதிரம் இப்படித்தான் விழுமாம். அதுதான் அவதார முடிவின் அடையாளமாம்.

ஆக ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. எனவே பல வெர்ஷன்களில் இவ்வளவு மாறுதல்கள். ஒரு சாதாரண வாந்தியெடுத்த விவகாரமே அது பற்றி ரிபோர்ட் செய்கையில் இவ்வளவு மாறுதல்களையடையும் போது ராமாயணத்து வெர்ஷன்களை பற்றி கூறவும் வேண்டுமோ.
ராமாயணம் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தாலே தலை சுற்றும். வியட்நாமிய, பாலி, வங்கள, காம்போஜ, சீன, குஜராத்தி, ஜாவானீஸ், கன்னடம், காஷ்மீர, லாவோசிய, மலாய், மராட்டி, ஒரியா, பிராக்கிருதம், வடமொழி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய்லாந்து, திபேத்திய மற்றும் ஐரோப்பிய மொழிகள். கடந்த பல நூற்றாண்டுகளில் ஒரே மொழியேலேயே கூட பல வெர்ஷன்கள் வந்து விட்டன. பிறகு பல கிளை மற்றும் உபகதைகள் வேறு.

ஒவ்வொரு முறையும் ராமாயணம் வெவேறு வகையாக கூறப்பட்டு வருகிறது. கூறுதல் என்னும் கிரியை வேண்டுமேன்றே உபயோகிக்கிறேன். ஏனெனில் செவிவழியாகத்தான் ராமாயணம் பரவியது. இதில் எது ஒரிஜினல்? யாருக்கு தெரியும்? வால்மீகியின் ராமாயணம் பழமை வாய்ந்தது என்பதால் அதற்கு தனி இடமும் பெயரும் உண்டுதான். ஆனால் பல வேறு ராமாயணங்கள் வால்மீகி இல்லாத வெர்ஷன்களிலிருந்தே வந்திருக்கின்றன.

சில வெர்ஷன்களில் சீதை ராவணனின் மகள் (மனோஹரின் இலங்கேஸ்வரன் நாடகம்). சிலவற்ரில் அனுமன் சம்சாரி. சில இடங்களில் ராமர் மனிதர் மட்டுமே, வேறு இடங்களில் ராவணன் நல்லவர். என்ன தலை சுற்றுகிறதா? கந்தசாமியின் கதையே மேல் என்று தோன்றுகிறதா?

பை தி வே, இன்றுதான் சன் டீவியில் ராமாயணம் தமிழாக்கத்தை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். அதை ஹிந்தி மூலத்தில் காண ஆசை. எங்கு எப்போது ஒளிபரப்பப்படுகிறது என்று யாரேனும் தகவல் தந்தால் தன்யனாவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/15/2008

பத்திரிகைகளும் காப்பிரைட் சட்டமும்

பேராசியர் கல்கி அவர்கள் இறந்ததும் ஆனந்த விகடனில் "கல்கி வளர்த்த தமிழ்" என்ற தொடரில் அவர் ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்த காலக்கட்டத்தில் அவர் எழுதி விகடனில் வெளிவந்த கதை கட்டுரைகளை வெளியிட்டு நிறைய காசு பார்த்தது. அதிலிருந்து கல்கி அவர்களின் வாரிசான கி.ராஜேந்திரனுக்கு ஏதும் பணம் தந்ததாகத் தெரியவில்லை. அப்போதெல்லாம் அப்படித்தான். விகடனில் வெளியாகும் எல்லா பிரசுரங்களுக்கும் காப்பிரைட் தன்னிடம்தான் உள்ளது என அது அறிவிப்பே செய்ததாக ஞாபகம். உண்மையான காப்பிரைட் விதிகளை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.

எனக்கு தெரிந்தவரை கதையோ, கட்டுரையோ அதை எழுதியவருக்குத்தான் காப்பிரைட் என்றுதான் சட்டம் சொல்கிறது. இதைக்கூட சாவி அவர்கள் அப்போதைய விகடன் ஆசிரியரிடம் கூறவேண்டியிருந்தது. அவரது "வாஷிங்டனில் திருமணம்" என்னும் நகைச்சுவைத் தொடரின நாடகமாக்க உரிமையை சாவியைக் கேட்காமலேயே யாருக்கோ விற்று விட்டதாம் விகடன். சாவி சட்டத்தை எடுத்துக் கூறியதும், விகடன் ஆசிரியருக்கு சங்கடமாகி விட்டதாம். விற்றுவிட்டேனே என்ன செய்வது என்று கையைப் பிசைய, அதை மட்டும் சாவி விட்டு கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் சாவி அவர்களே எழுதி நான் படித்துள்ளேன்.

இப்போது இதையெல்லாம் கூற என்ன காரணம்? இந்த வாரத்து விகடனில் சமீபத்தில் 1981-82 காலக்கட்டத்தில் ஆனந்த விகடனில் வந்த சுஜாதா அவர்களின் கிரிக்கெட் பற்றிய நகைச்சுவைக் கட்டுரையை சுஜாதா சுவடுகள் என்ற வரிசையில் மீண்டும் வெளியிட்டது. இது ஒரு வரிசையாக வரும்போல தோன்றுகிறது. இதற்கான சன்மானத்தை விகடன் மீண்டும் சுஜாதா அவர்களது வாரிசுகளுக்கு தர வேண்டியிருக்கும். தருகிறதா என்பதுதான் கேள்வி. தருகிறது என்றால் மகிழ்ச்சியே. எனது இந்த புரிதல் சரிதானா என்பதை யாராவது வழக்கறிஞர் நண்பர்கள் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

கல்கியில் "மத்யமர்" என்ற வரிசையில் வந்த பல கதைகள் பிறகு குங்குமத்தில் மீண்டும் வந்தன. ஆனால் அப்போது சுஜாதா அவ்ர்கள் உயிருடன் இருந்தார், ஆகவே அவரே அதை பார்த்து கொண்டிருப்பார். ஆனால் இப்போது விஷயம் வேறு. ஆகவே இப்பதிவு.

பத்திரிகை உலகில் வேறுவகையிலும் மோசடிகள் நடக்கின்றன. இது பற்றி நான் ஏற்கனவே போட்ட பதிவிலிருந்து:

"பல மாத நாவல்கள் வெளி வருகின்றன.அவற்றில் கணிசமானவை ஏற்கனவே பத்திரிகைகளில் தொடர்கதையாக வெளி வந்தவையே. ஆனால் சம்பந்தப்பட்ட மாத நாவலில் அதை பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். தலைப்பை வேறு மாற்றி விடுவார்கள்.

இந்தப் பழக்கத்துக்கு ஒரு மோசமான உதாரணம் திரு. சாவி அவர்கள். அவருடைய தொடர் கதை "ஓ" மாத நாவலாக உருவான போது "அன்னியனுடன் ஒரு நாள்" என்றப் பெயரில் வந்தது. நல்ல வேளையாக நான் அதை வாங்கி ஏமாறவில்லை. ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் கதை தொண்ணூறுகளில் வேறு பெயரில் வந்தது. இந்த முறை ஏமாந்தேன். ஆனால் முதல் பாரா படிக்கும் போதே ஏற்கனவே படித்த கதை என்றுத் தெரிந்துப் போயிற்று. சாவியின் இம்முயற்சிகள் எல்லாம் அவருடைய சொந்தமான மோனா பப்ளிகேஷனில் வெளியாயின. ஆகவே அவர் பொறுப்பு இதில் இரட்டிப்பு ஆகிறது.

சாவியின் எழுத்துக்கள் மட்டும் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுத்தப் பட்டன என்றுக் கூற முடியாது. பால குமாரன், ராஜேஷ் குமார் ஆகியவர்கள் புத்தகங்களும் இம்மாதிரியான முயற்சிகளிலிருந்துத் தப்பவில்லை.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் அவசர அவ்சரமாய் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வண்டி ஏறுகிறோம். வண்டி கிளம்பிய பிறகு ஏமாந்தது தெரிந்து ஙே என்று விழிக்கிறோம்.

ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படி பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தைரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது"?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/14/2008

டோண்டு பதில்கள் - 14.03.2008

இந்த ஐடியா கொடுத்த பெயர் குறிப்பிட விரும்பாத நண்பருக்கு நன்றி. அவருக்கு எக்ஸ் என்று பெயர் வைத்து அவர் இட்ட கேள்விகளுடனேயே ஆரம்பிக்கிறேன்.

1. டோன்டு பால் ரூ.1.50 குறைப்பாம்? நீங்க எப்ப பால் வியாபாரம் பண்ண ஆரம்பித்தீர்கள்?
பதில்: பால் வியாபாரம் செய்வதற்கு திறமை தேவை, அதுவும் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களிடம் வேலை வாங்கி என்றெல்லாம் திறமைகள் தேவைப்படும். அடியேனிடம் அவை பூஜ்யம். மற்றப்படி திறத்தகவுப் பால் விலை அதிகரித்துத்தானே உள்ளது? குறையவில்லையே.

2. கால் டாக்ஸிகளுக்கு துட்டு கொடுத்து எப்படி கட்டுபடியாகிறது?
பதில்: மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக வாடிக்கையாளர் அலுவலகம் செல்ல நேரிடும்போது கால் டாக்ஸி கட்டணங்களை அவர்கள் ஏற்கிறார்கள். மற்றப்படி சொந்த விஷயங்களுக்கு குடும்பத்தினருடன் செல்வதற்கு கால் டாக்ஸிக்களே சிறந்தவை. இதில் முக்கியம் நேரம் சேமிப்பாவதே. அவ்வாறு சேமிக்கும் ஒவ்வொரு மணியும் எனக்கு காசு, ஏனெனில் மொழிபெயர்ப்புக்கு அதை உபயோகித்து கால் டாக்சியின் கட்டணங்களுக்கு மேலேயும் பொருள் ஈட்ட இயலும். ஆகவே சொந்தமாக கார் வாங்கத் தேவையில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

3. உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா?
பதில்: படிப்பதில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனவமைதியை தந்துள்ளது. மற்றப்படி அவர்களிடம் பிரச்சினை பற்றி குன்ஸாகக் கூறியுள்ளேன்.

4. பல எழுத்தாளர்களையும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் தாங்கள் பா.ராகவன் ஐயங்காருடன் இன்னும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவில்லையா ? அவரும் உங்க ஏரியாதானே?
பதில்: பா.ராகவன் ஏற்கனவே என் நண்பர். முதன் முறையாக அவரை நான் 2005 புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். "நிலமெல்லாம் ரத்தம்" தொடரை ஆரம்பித்திருந்தார் / ஆரம்பிக்கவிருந்தார். நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் என்பதை அவரிடம் கூறி, அவர் எழுத்துக்களின் விமரிசனம் என்னிடமிருந்து பறந்து வரும் எனவும் கூறியிருந்தேன்.

5. ஐயங்கார்கள் ஏன் ஐயர்களை கூட சேர்ப்பதில்லை ? (ஒரு அளவிற்கு மேல் நெருங்க விடமாட்டார்கள்)
பதில்: அப்படியெல்லாம் இல்லை. இப்போது பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் சந்திக்கும் பார்ப்பன வெறுப்பு இருக்கும் இந்த நிலையில் ஐயர்கள், ஐயங்கார்கள், மார்த்துவர்கள் ஆகியோர் ஒரே அணியாக இருத்தல் அவசியம்.

Dondu Fan
ஆங்கிலத்தில் வந்த கேள்விகளை அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழாக்கியுள்ளேன்:

1. தமிழ் வலைப்பூக்களில் நாகரிகமான நடத்தையை நிறுவுவதில் தமிழ் மணம் இன்னும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமா?
பதில்: தமிழ்மணம் வெறும் திரட்டிதான் என்பதை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். அதே சமயம் தமிழ்மணத்தாரும் சும்மா இல்லை. பின்னூட்ட மட்டுறுத்தலை சரியான நேரத்தில் கட்டாயமாக்கி, வலைப்பூக்களின் தரத்தைக் காத்தார்கள். இப்போது அது கட்டாயம் இல்லை என்றாலும், மட்டுறுத்தலின் பயன் அறிந்த வலைப்பதிவர் தத்தம் பதிவுகளில் அந்த ஏற்பாட்டைத் தொடர்கின்றனர். அதே போல தரக்குறைவான வலைப்பூக்களை நடுநிலை தவறாது நீக்குவதிலும் எந்தப் பின்வாங்கலும் இல்லை. இதைவிட சிறப்பாக ஒரு திரட்டி எப்படி நடந்து கொள்ள இயலும்?

2. தற்சமயம் நீங்கள் படிக்கும் புத்தகம் எது?
பதில்: இப்போதுதான் The Great Indian Novel என்னும் ஆங்கிலப் புத்தகத்தை இரண்டாம் முறையாக படித்து முடித்தேன். நிரம்ப சிந்தனைகளை தூண்டிய புத்தகம் அது. ஆசிரியர் சஷி தாரூர்? அவரைத்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு செக்ரெடரி ஜெனெரலாக இந்தியாவின் சார்பில் சிபாரிசு செய்தார்கள் என அறிகிறேன்.

3. பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு மிக அதிகப் பொருத்தமாக இருப்பது யார்?
பதில்: ஒரு காலத்தில் நான் இந்த ரோலுக்காக கற்பனை செய்தது ஜெமினி கணேசனை. ஆனால் அச்சமயம் எம்.ஜி.ஆர். இந்த ரோலுக்கு வரப்போவதாக ஒரு பயங்கர வதந்தி வந்தது. நல்ல வேளை அது உண்மையாகவில்லை. இக்காலத்திய நடிகர்களில் கமலஹாசனை விட்டால் வேறு யார் அதை செய்ய இயலும்?

வால்பையன்:
1. பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?
பதில்: இதற்கு பதில் லக்கிக்குத்தான் தெரியும். நானே அதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மற்றபடி லக்கிலுக் நல்ல நண்பர். எனது ஜெயா டி.வி. பேட்டியை சி.டி.யில் எடுத்து எனக்கு தந்து உதவினார். அவருக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகுக.

சரவணன்:
1. டோண்டு என்றால் என்ன அர்த்தம்?
பதில்: என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இக்கேள்விக்கான பதிலில்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும். நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது.
2. தென் திருப்பேரை எங்க இருக்கு?
பதில்: திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குதான் என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறான். நவ திருப்பதிகளுள் இது ஒன்று.
3. Ed McBain நாவல்கள் படித்ததுண்டா?
பதில்: இல்லை
4. Georges Simenon படித்ததுண்டா?
பதில்: Inspector Maigret பாத்திரத்தை உருவாக்கியவர்தானே. ஒன்றே ஒன்று சமீபத்தில் 1976-ல் ஃபிரெஞ்சில் படித்துள்ளேன். அவரது ஒரு நாவல் Le train என்று நினைக்கிறேன். அதன் திரையாக்கத்தை பார்த்துள்ளேன்.

5. மிருதுவான இசையா, மென்மையான இசையா: எது சரி?
பதில்: இரண்டுமே ஒன்றுதானே. மிருது என்பது வடமொழி சார்ந்த சொல், மென்மை என்பது தூய தமிழ்ச்சொல்.

6. Blog எழுத வராமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
பதில்: என்ன செய்திருப்பேன். என்பதை விட என்ன செய்திருக்க மாட்டேன் என்பதைக் கூறுவது எளிது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதைத் துவக்கியிருக்க மாட்டேன். ஆகவே மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸ்-ல் பிளாட்டினம் உறுப்பினராக ஆகியிருக்க முடியாது. ஜெயா டி.வி.யில் என்னை பேட்டி கண்டிருக்க மாட்டார்கள் (உண்மைத் தமிழனுக்கு நன்றி). திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலையில் பங்கெடுத்திருக்க மாட்டேன்.
7. Aki Kaurismäki படங்கள் பார்த்ததுண்டா? (யாருங்க அவரு:-))
பதில்: இல்லை. நிஜமாகவே கேட்கிறேன், யாருங்க அவரு?

தீவு:
1. உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?
பதில்: ஐயையோ, இல்லவே இல்லை.

எஸ்.சி. சுந்தர்:
1. எனது பதிவுற்கு நல்ல புனைபெயர் கொடுக்கவேண்டுகிறேன்.
பதில்: புதுவெள்ளம் அல்லது புத்துணர்ச்சி

சுழியம்:
1. தாங்கள் தவறுகளை தைரியமாக எதிர்க்கும் நேரங்களும், ஜாக்கிரதையாக ஜகா வாங்கும் நேரங்களும் எவை?
பதில்: இதற்கு பதில் ரொம்ப சுலபம். தர்மமும் நம்பக்கம் இருந்து, நம் கையும் ஓங்கியிருந்தால் தைரியமாக எதிர்ப்போம், கை தாழ்ந்திருந்தால் அடக்கி வாசிப்போம். ஜகா வாங்குவது என்றும் சொல்லலாம். புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றும் கூறிக்கொள்ளலாம். சொல்லிவிட்டு போவோமே, காசா பணமா? செய்ய நிஜமாகவே கஷ்டமான காரியம் தர்மம் நம்பக்கம் இல்லாதிருந்து, ஆனால் நம் கை ஓங்கியிருந்தால் அதை துர் உபயோகம் செய்யாது அடக்கி வாசிப்பதுதான். அதற்கு தேவை அதர்மம் செய்வதிலிருந்து தடுக்கும் நாண உணர்ச்சி.

வால் இல்லாத பையன்:
1. போலி டோண்டு மூர்த்தி திடீரென்று உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: எப்படிப்பட்ட விரோதியாயினும் வீடு தேடிவருபவரை வரவேற்கத்தான் வேண்டும். பிறகு விவாதம், மற்றும் வார்த்தைகளால் கும்முவது இருக்கவே இருக்கின்றன. திரும்பிப் பார்த்ததில் மூர்த்தியுடன் எனக்கு எந்த குறிப்பிட்ட விஷயத்தில் மன வேறுபாடு எந்தத் தருணத்தில் வந்தது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். அதை அச்சமயம் பெரிதாக நினைக்காதது என் தவறுதான். அதை சரிசெய்தால் போயிற்று.
2. தாங்கள் விரும்பும் வேலை பொறியாளர் அல்லது மொழி பெயர்பாளர் . விளக்கதுடன் பதில்.
பதில்: இதே கேள்வியை என்னிடம் ஐ.டி.பி.எல். வேலைக்கான நேர்க்காணலில் கேட்டனர். அப்போது கூறிய பதிலேதான் இப்போதும். நான் மொழிபெயர்ப்பாளனாகவே இருக்க விரும்புவேன். ஏனெனில் இது முழுக்க முழுக்க நானே செய்ய வேண்டிய வேலை. அதன் மூலம் வரும் வாழ்வும் தாழ்வும் என் கையிலேதான் உள்ளது. ஆனால் பொறியாளர் வேலை அப்படியில்லை. அதில் ஒரு பகுதியாகத்தான் நான் இருப்பேன். எல்லாமே எனது கட்டுபாட்டுக்குள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மேலே கூறிய பால் வியாபாரம் பற்றிய கேள்விக்கான பதிலில் கூறியதுபோல பலருக்கு வேலை கொடுத்து, அவர்களிடம் வேலை வாங்கி என்றெல்லாம் திறமைகள் தேவைப்படும். அடியேனிடம் அவை பூஜ்யம்.
3. உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?
பதில்: ஆரவாரப் பேய்களெல்லாம்- டோண்டுவின் யோம்கிப்பூர்.

அரவிந்தன்:
டோண்டு ராகவன் - காண்டு ராஜேந்திரன்; ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்க
பதில்: 1) டோண்டு ராகவன் ஒரிஜினல், காண்டு கஜேந்திரன் லக்கிலுக்கின் கற்பனை (லக்கிலுக் என் நண்பர் என்பதை மறுபடியும் கூறுகிறேன். ஓசைப்படாது உதவிகள் பல செய்தவர்), 2) டோண்டு ராகவன் இளைஞன், காண்டு கஜேந்திரன் கெழவன், 3) டோண்டு ராகவன் சண்டைக்கு அஞ்சாதவன், காண்டு கஜேந்திரன் மசோகிஸ்டாகக் கருதப்படுபவன், 4) டோண்டு ராகவனுக்கு நண்பர்கள் உண்டு, காண்டு கஜேந்திரனுக்கு இல்லை, 5) டோண்டு ராகவனின் இஷ்ட தெய்வம் மகரநெடுங்குழைகாதன், காண்டு கஜேந்திரனுக்கு தகர நெடுங்குழைகாதன் என்பது லக்கிலுக்கின் துணிபு், 6) டோண்டு ராகவனுக்கு சோ பிடிக்கும், காண்டு கஜேந்திரன் விரும்புவது சுண்டக்கஞ்சி என்பது லக்கிலுக்கின் கூற்று.

இப்பதிவுக்கான பின்னூட்டமாக நீங்கள் அடுத்தப் பதிவில் வரக்கூடிய கேள்விகளை கேட்கலாம். வழக்கம்போல இப்பதிவின் கருத்துக்களையும் பின்னூட்டமாகவும் கூறலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/13/2008

இளைஞன் டோண்டு ராகவனை கேள்விகள் கேட்போமா?

தனது பெயர் / பின்னூட்டம் வெளியிட வேண்டாம் எனக் கேட்டு கொண்டு ஒரு நண்பர் அனுப்பிய பின்னூட்டத்தின் ஒரு பகுதி இது.

"நீங்கள் ஏன் "டோண்டு பதில்கள் - தேதி" என ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதிவு போடக்கூடாது ? புதன் வரை வரும் கேள்விகளை (பின்னூட்டத்தில் / மெயிலில்) உங்கள் இஷ்டத்திற்கு ஏற்ப தேர்வு செய்து நல்லபடி Formatting செய்து வெளியிட்டால் உங்கள் பதிவு மேலும் அதிருமில்ல.

துக்ளக்கில், குமுதத்தில், விகடனில் என எல்லா பத்திரிக்கையிலும் முதலில் பெரும்பாலான வாசகர்கள் படிப்பது கேள்வி-பதில் பகுதிதான். அதுவும் உங்கள் நகைச்சுவை ததும்பும் பதில்கள் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும்.

வாரத்திற்கு ஒரு பதிவாக வந்தால் நல்லது, அதிகபட்சம் 10 கேள்விகள் (ஒரு பதிவிற்கு)
கேள்விகள் அரசியல், சினிமா, தமிழ், எழுத்து, வாழ்வியல் என எதைப் பற்றியும் இருக்கலாம். உதாரணத்திற்கு குமுதத்தில் வரும் பாலகுமாரன் பதில்கள், முன்னர் வந்த வைரமுத்து பதில்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆன மாதிரி, டோண்டு பதில்களும் நிச்சயம் உங்கள் பதிவிற்கு சூப்பர் ஹிட்களை பெற்றுத்தரும். மேலும் வலையுலகிலும் இது யாரும் இன்னும் முயற்சிக்காத ஒன்று.

பதிவுத் தலைப்புகள் டோண்டு பதில்கள் - 14-மார்ச் 2008 ; டோண்டு பதில்கள் 21-மார்ச் 2008 என்று வரலாம்.

சிறந்த கேள்விக்கு நட்சத்திர குறியிடலாம் அல்லது ஏதேனும் இணைய இலவச பரிசு (சுட்டிதான்) அளிக்கலாம். டோண்டு பதில்கள் என ஒரு Brand உருவாக்கலாம்.

வாழ்த்துக்கள்

இதோ சில கேள்விகள்

1. டோன்டு பால் ரூ.1.50குறைப்பாம் ? நீங்க எப்ப பால் வியாபாரம் பண்ண ஆரம்பித்தீர்கள் ?

2. கால் டாக்ஸிகளுக்கு துட்டு கொடுத்து எப்படி கட்டுபடியாகிறது ?

3. உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா ?

4. பல எழுத்தாளர்களையும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் தாங்கள் பா.ராகவன் ஐயங்காருடன் இன்னும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவில்லையா ? அவரும் உங்க ஏரியாதானே ?

5. ஐயங்கார்கள் ஏன் ஐயர்களை கூட சேர்ப்பதில்லை ? (ஒரு அளவிற்கு மேல் நெருங்க விடமாட்டார்கள்)"

இப்போது டோண்டு ராகவன். எனக்கு இது சரியாக வருமா எனத் தெரியவில்லை. ஏற்கனவே பதிவர் சுபமூகா அவர்களும் நானும் செய்து பார்த்ததுதான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏதேனும் கேள்விகள் உண்டா? இப்பதிவின் பின்னூட்டமாக அவற்றை வைக்கலாம். வசை / மற்ற பதிவரை மட்டம் தட்டும் கேள்விகள் ஆகியவை மட்டுறுத்தி தவிர்க்கப்படும். நாளை மீண்டும் வருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/12/2008

இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குறு நாவல் படித்தேன். ஆசிரியர் பெயரைக் கவனிக்கவில்லை. அது போலவே நாவலின் தலைப்பையும் கவனிக்கவில்லை. ஆனால் பிளாட் மட்டும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து அதில் பல நாட்கள் தூக்கம் தொலைத்தேன். அதன் பிளாட் பின்வருமாறு.

கதாநாயகனின் தாய் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனம் பேதலிக்கிறாள். அதற்கு ஒரு சோக பின்னணி உண்டு. திருவாங்கூர் மன்னர் (ரவிவர்மாவோ ஸ்வாதி திருநாளோ) தனக்கு எதிராக சதி செய்த பல உயர்குலத்தவரை கழுவேற்றி, அவர்களது மனைவிகளை செம்படவர்களுக்கு தர அந்த குல ஸ்த்ரீக்கள் தற்கொலை செய்ய, அந்த வம்சத்து பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் மனம் பேதலிக்க என கதை போகிறது.

இது இரா. முருகன் அவர்கள் எழுதியது என பலகாலம் நினைத்து கொண்டிருந்தேன். பிறகு அவரிடமே இது பற்றி கேட்டபோது இது ஜெயமோகன் அவர்கள் வேறு பெயரில் எழுதியது என்றார். ஆக அது ஒன்றுதான் நான் படித்த ஒரே ஜெயமோகன் புத்தகம். மற்றப்படி அவரைப் பற்றி பல செய்திகள், பல வம்புகள். ஜெயமோகன் அவர்களுக்கு மின்னஞ்சலிட்டு அது பற்றி கேட்க, அவர் அக்கதையின் தலைப்பு அம்மன் மரம் என்றும், அதை தன் அண்ணாவின் பெயரில் எழுதினதாகவும் கூறினார்.

திடீரென ஒரு நாள் எதேச்சையாக அவரது வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. அடேங்கப்பா, மனிதர் என்னமாதிரி எழுதுகிறார்! ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஃப்ரான்ஸ்வா கவன்னா (François Cavanna) எனது அபிமான எழுத்தாளர். மனிதரிடம் ஃபிரெஞ்சு மொழி அப்படி விளையாடும். அதே ஆளுமையை ஜெயமோகனின் தமிழில் பார்க்கிறேன். பல சுவைகளில் எழுதுகிறார். அவற்றில் என்னைக் கவர்ந்தது நகைச்சுவையே. அதற்கெனவே தனி லேபல் வேறு வைத்திருக்கிறார். அதிலிருந்து நான் ரசித்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதுதான் இப்பதிவு. சும்மா சொல்லப்படாது. தேர்ந்தெடுப்பதில் எதை எடுக்க எதை விட என்று நான் திண்டாடியது நிஜம். எல்லாவற்றையும் எடுக்க ஆசைதான், ஆனால் அது நடக்கும் காரியமா? எது எப்படியானாலும் இம்மாதிரி பல சாய்ஸ்கள் கொடுத்து என்னை அலைய விட்டீர்களே, இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?

1. தமிழாசான் ஏசுஞானமரியதாசன் யாப்பிலக்கணம் சொல்லித் தந்த முறை
//தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு.
“லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… சிரிக்கப்பட்ட மோரைகளை பாரு…ஏலே உனக்க அம்மைக்க ஆமக்கன் இஞ்ச துணியில்லாம நிக்கானேலே? வாய மூடுங்கலேநாறப்பயக்கலே… வெவரமும் கூறும்கெட்ட இந்த ஊருல என்னைய வேலைக்குப்போட்ட தாயளிய மொதல்ல போயி மண்டையில அடிக்கணும்…காலையில எந்திரிச்சு வந்திருதானுக வாயையும் களுவாம…” என்று ஏசுஞானமரியதாசன் முன்னுரைவழங்கிவிட்டு நேராக பாடத்திற்குள் புகுந்தார்.
“ஓரோ பயக்களும் கண்டிப்பாட்டு யாப்பு அறிஞ்சிருக்கணும்…” என்றார் ஏசுஞானமரியதாசன். “ஓம் சார்!” என்றான் தங்கச்சன். “என்னலே ஓமு?” “சார் சொன்னது உள்ளதாக்கும்” ஏசுஞானமரியதாசன் தலைசரித்து அவனைப்பார்த்தபின் “என்னத்துக்கு?” “நாளைய தலைமுறைக்கு சார்!” தங்கச்சன் எஸ்எ·ப்ஐ உறுப்பினர். சகாவு ஹேமச்சந்திரன் நாயராலேயே பெயர்சொல்லி அழைக்கபப்படும் தகுதி கொண்டவன். “இரிடே தங்கச்சா…அப்பம் சங்கதி அதாக்கும். நாளைய தலைமுறையை உருவாக்குததுக்கு யாப்பு அத்தியாவிசியமாக்கும்.கேட்டுதால மயிராண்டிமாரே…இருந்து பாக்கானுக பாரு…இவனுக கண்ணைக்கண்டாலே எனக்கு ஒருமாதிரி கேறிவருதே…”
அடுத்த சொல்லாக “அசை” என்று எழுதியதுமே நான் அதை என் நோட்டில் அவசரமாக எழுதினேன். “…ஆகா எளுதிப்போட்டாம்லே…கரடிக்க மகன் எளுதிப்போட்டாம்லே..என்னலே எளுதினே… ?” “அசை” “அசைண்ணா என்னலே அர்த்தம்?” “துணிகாயப்போடுத கயிறு சார்” “அய்யட, உடுத்தா வேட்டி கிளிச்சா கௌபீனம்னு சொல்லுத மாதிரி…. வந்து சேருதானுக…ஏல மலையாளத்து மயிரான்லாம் வந்து தமிளு படிக்கல்லேண்ணு இஞ்ச எவன்லே கேட்டான்? இங்கிணயுள்ளவன் படிச்ச தமிளுக்கே நாடு நாறிட்டு கெடக்கு… ஏலே அசைண்ணா….”
“மாடு அச போடுகது சார்” என்றான் ஸ்டீபன். வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஏசுஞானமரியதாசன் ஸ்டீபனை உற்றுபார்த்து சில நிமிடங்கள் நின்ற பின் மென்மையான குரலில் “லே மக்கா, உனக்க அப்பன் ஞானதாஸ¤ கள்ளுக்கடையிலவடைண்ணு நெனைச்சு வேதக்கண்ணுக்க மூக்குபொடிக்குப்பிய எடுத்துக் கடிச்சவனாக்கும். நீ அதைச் சொல்லல்லேண்ணாத்தான் நான் நிண்ணு பாக்கணும். வித்தில உள்ளதுல்லா கொத்துல நிக்கும்?…” பெருமூச்சுவிட்டு “ஆரும் தோக்குக்கு உள்ள கேறி வெடி வைச்ச வேண்டாம். பூர்வஜென்ம பாவத்தினாலே ஒருத்தன் இஞ்ச கெடந்து மூச்சறுக்குத எளவ கேட்டு மனசிலாக்கிப் படிச்சாப்போரும்…” என்றபின் “அசைண்ணா வார்த்தைக்க ஒரு துண்டாக்கும்.இப்பம் இந்த ஆயிரங்காலட்டய நாம நாலஞ்சா வெட்டினாக்க ஓரோ துண்டும் ஒத்தைக்கு ஊர்ந்து போவும்லலே, அதைமாதிரி ஒரு வார்த்தைய நாம வெட்டினாக்கதனியாட்டுபோற துண்டுகளாக்கும் அசைண்ணு சொல்லுதது…”
எனக்கு பளீரென்று மின்னியது. ஏசுஞானமரியதாசன் “… ஆனா போற போக்குல பீடிக்கடையில தடம் போயில நறுக்குதது மாதிரி போட்டு வெட்டப்பிடாது. அதுக்கொரு கணக்கு இருக்கு. அந்தக் கணக்கயெல்லாம் அந்தக்காலத்திலசோலிமயிருகெட்ட பண்டிதனுங்க தேமா புளிமாண்ணு வாயி புளிச்சா மாங்கா புளிச்சாண்ணு தெரியாம எளுதி வச்சிருக்கானுக. அத இப்பம் உங்ககிட்ட சொன்னா அதவச்சுகிட்டு புதிசாட்டு நாலஞ்சு கெட்டவார்த்தைய உருட்டி வைப்பிய…அதனால நான் ஒரு கணக்காட்டு சொல்லுதேன்…லே சாம்ராஜு அங்க என்னலே முளிக்கே…முளி செரியில்லியே..”
சட்டென்று ஒரே வகுப்பில் பாடல்களை அசைபிரிக்கும் கணக்கை இலகுவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார் ஏசுஞானமரியதாசன். அந்த ஒரு மணிநேரத்தில் கற்ற கணக்கு இந்தநாள் வரை செய்யுட்களைப் படிப்பதற்கு கை கொடுக்கிறது. யாப்பை முதலில் அசைபிரிக்கக் கற்றுக்கொடுத்தபடி தொடங்கவேண்டும் என்பது பழைய கவிராய மரபின் வழிமுறை. அசைபிரிக்கத் தெரிந்ததுமே பழந்தமிழ்பாடல்கள் பிசுக்கு நீக்கப்பட்ட கண்ணாடி வழியாகத் தெரிவதுபோலத் தெளிவடைகின்றன.கண்ணில் பட்ட அனைத்துச் சொற்சேர்க்கைகளையும் பாடல்களையும் அசைபிரிக்க ஆரம்பித்தோம். ‘ஐந்து கரத்தனை யானைமுகத்தனை’ முதல் ‘சும்மா இருந்தா அம்மைதாலி அறுப்பேன்..’ போன்ற நாட்டுப்புற இலக்கியங்கள் வரை//.

நாட்டியப் "பேர்வழி" பத்மினியைப் பற்றி:
//(சைதன்யாவிடம்) நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல? பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…”
”போப்பா. அதுக்குண்ணு நாட்டியப்பேர்வழி மாதிரி கைல சொப்பு வச்சுக்கிட்டு ஆட்டிட்டே வரணுமா?” என்று சொல்லி தொற்றி ஜன்னல்மேல் ஏற நான் அவளைப்பிடித்து உட்காரவைத்து விசாரிக்கத்தலைப்பட்டேன். ”அதென்னதுடீ நாட்டியப்பேர்வழி?”
”அஜிதான் சொன்னான்….அந்த மாமிக்கு அப்டி ஒரு பேரு உண்டுண்ணுட்டு” ”எந்தமாமி?” ”புருவத்திலே கசவு ஒட்டி வச்சுகிட்டு அதை ஆட்டி ஆட்டி கண்ணெமைய இப்டி படபடாண்ணு மூடிமூடி பேசுவாங்களே? வாயி கூட சின்னதா டப்பி மாதிரி இருக்குமே…”
எனக்குப் பிடிகிடைக்கவில்லை ”ஆருடீ?” அவள் கண்களை நாகப்பழம் போல உருட்டி ” மூஞ்சியிலே செவப்பா பெயிண்டு அடிச்சிருப்பாங்களே? மூக்குத்தியும் போட்டிருப்பாங்க…தோளை இப்டி பயில்வான் மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க…” சைதன்யா செய்யுள் தெரியாமல் பெஞ்சுமேலேறி நிற்க நேரிட்ட முகபாவனைகளைக் காட்டி சட்டென்று தெளிந்து ”ஆ! அவுங்க பத்துமணிக்கு…இல்ல..அவங்க பேரு வந்து பத்துமணி…இல்ல அது அஜி சொல்றது. அவுங்கே…–”
நாட்டியப்பேரொளி பத்மினி என்னுடைய அப்பாவின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்கள் என்று அவரது பாலியநண்பர் நாராயணன் போற்றி சொன்னார். அப்பாவுக்கு நாயர் ஸ்திரீகளை மட்டுமே கனவுக்கன்னிகளாக ஏற்க முடியும். பத்மினிக்குப் பின்னால் அவர் கனவு காண்பது குறைந்துவிட்டாலும் ஒரே ஒருமுறை அப்பு அண்ணனிடம் அம்பிகா படத்தைக் காட்டி ”ஆருடே இது?” என்று கேட்டார். நாயர்தான் என்றும் உறுதிசெய்துகொண்டார்.
ஆகவே நான் பள்ளி நாட்களிலேயே பத்மினியை ஒரு சித்தி அந்தஸ்து கொடுத்துத்தான் வைத்திருந்தேன். கறுப்புவெள்ளைப் படமொன்றில் அவர்களின் குட்டைப்பாவாடை குடையாகச் சுழன்றெழுந்தபோது தலைகுனிந்து மேப்புறத்து பகவதியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தேன்.’நீலவண்ண கண்ணா வாடா’ என்று அவர்கள், பக்கத்துவீட்டிலிருந்து தூக்கிக் கொண்டுவரப்பட்டமையால் திருதிருவென விழிக்கும் குண்டுக் குழந்தையை கொஞ்சியபடி, பாடும் பாட்டைப் பார்த்து மனமுருகியும் இருக்கிறேன்.
அப்படியானால் சைதன்யாவுக்கு பாட்டி முறைதானே?”..அப்டில்லாம் சொல்லப்பிடாது…அவுங்கள பத்மினிப் பாட்டீண்ணுதான் சொல்லணும்… என்ன?” .”அப்ப நாட்டியப்பேர்வழிண்ணு அஜி சொல்றான்?” என்று புருவத்தைச் சுளித்தாள். பொறுமையை சேமித்து ”அப்டீல்லாம் சொல்லப்படாது பாப்பா. அவங்க எவ்ளவு கஷ்டப்பட்டு டான்ஸெல்லாம் ஆடறாங்க… பத்மினிப்பாட்டீண்ணுதான் சொல்லணும்” பத்மினி நாயர்தானே, ஏன் அம்மச்சி என்றே சொல்லிவிடக்கூடாது? ஆனால் அஜிதனை அப்படிச் சொல்லவைப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். அவனுக்கு பத்மினி என்றாலே சிரிப்பு. சிவாஜியுடன் அவர் சேர்ந்து நிற்பதைக் கண்டாலே அவன் வயிறு அதிரும்.
”செக்கச் சிவந்திருக்கும் முகத்தில்ல்ல்ல் புளிரசமும்…” என்று பாடி அறுபது பாகை சாய்ந்து முகத்தில் விரல்களை சரசரவென பரவ விட்டு புருவத்தை நெளிந்தாடச் செய்து ஆடிக்காட்டினான். எனக்கே தாங்க முடியவில்லை. முன்கோபக்காரரான அப்பா இருந்திருந்தால் உடனே குடையை எடுத்துக் கொண்டு நிரந்தரமாக வீட்டைவிட்டுக் கிளம்பி சென்றிருப்பார்– குடை இல்லாமல் அப்பா எங்கும் போவதில்லை.//

தன் மனைவி, குழந்தைகள் சகிதம் அவர் தனது வேட்டகத்துக்கு சென்ற அனுபவம்
//பேருந்து கிளம்பியதும் மலரும் நினைவுகள். ”திருச்சியிலே ஹாஸ்டலிலே இருந்து கெளம்பறப்ப நான் ·போன் பண்ணுவேன்…அப்பல்லாம் செல் கெடையாதுல்ல? போன் பண்றப்பவே எங்கம்மா ஒரே சத்தமா பேசுவாங்க. பாப்பா பத்திரமா வா பத்திரமா வான்னு ஒரு பத்துவாட்டி சொல்லுவாங்க…”
மெல்லமெல்ல பேருந்தின் வேகத்துக்கு ஏற்ப உள்ளே ஆள் மாறிக் கோண்டிருப்பதை நான் அறிவென். அங்கே இறங்கியதும் நான் பார்த்து பழகியிராத புதிய பெண் ஒருத்தி பஸ்ஸை விட்டு இறங்கி ”என்னங்க… பாத்து எறங்குங்க…அஜி அப்பா பைய வாங்கிக்கோ”.சட்டென்று என்னை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான், பழகிவிட்டது. ”கெளம்பறது வரைக்கும் இவங்களுக்கு லீவு கெடைக்குமாண்ணு ஒரே டென்ஷன்பா… அம்மா நல்லாஇருக்கியா? ஏன் எளைச்சு போயிட்டே?”
அதைப்புரிந்துகொள்ளலாம், பயணம் முழுக்க ஒருகணம் கூட கண்விழிக்காமல் வந்த சைதன்யா மாறியிருப்பதை அறிவது திகிலூட்டும் அனுபவம். ”பாத்தி..எனக்கூ இங்க அரிக்குது பாத்தீ..இவேன் எம்மேல சாஞ்சு கனமா இருந்தான் தெரீமா?” பதினொருவயது கைக்குழந்தையின் மழலை. ”இங்கியா பாப்பா? பாட்டி தடவி விடுவேனாம்…எஞ்செல்லக்குட்டி நல்லா தூங்கிச்சா? எங்க பாப்பா நல்ல எச்சி மணமா இருக்கே…ம்ம்ம்” ”அப்பா இவ ஏம்பா இப்டி மாறியிருக்கா?”என்று சகிக்க முடியாமல் அஜிதன் என் தோளைப்பிடிக்க ”விடுடா…லேடீஸ்லாம் அப்டித்தான்”
ஆனால் வீட்டுக்குள் சென்று சேர்வதற்குள் அருண்மொழியும் மாறி மழலைபேச ஆரம்பிப்பதை என்னாலும் தாங்க முடியாது. ”ஆபீஸ்லே ஒரே வே…லைம்மா…எப்ப பா…த்தாலும் ஒரே மா…திரி….போ”. இரு பாப்பாக்களும் மாறி மாறி கொஞ்சுகின்றன. பெரிய பாப்பா ”அம்மா காபிய இங்க கொண்டாயேன். காலு வலிக்குது…” சின்ன பாப்பா ”பாத்தீ எனக்கு காப்பி வேணாம். ஆர்லிக்ஸ் குதுப்பியா?”. ”அப்டியே சாப்பிடுவேன்னு சொல்லுடீ போடி…நாயி நாயி, மழலை பேசுறா பாரு…”. ”போடா அப்டித்தான் பேசுவேன்.உங்கிட்டயா பேசறேன்? பாத்தீ அடிக்கான்…”. ”அஜீ பாப்பாவ அடிக்காதே அவ கொழைந்தைதானே?”. ”அப்பா நான் இப்பவே இந்த வீட்ட விட்டு போறேன்.இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க முடியாது”. ”டேய் விடுடா. லேடீஸ்லாம் அந்த மாதிரித்தான்…எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகணும்? இப்பவே பழகிக்கோ” ”போப்பா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்..”
வந்து அரைமணிநேரத்துக்குள் நான் என்னையறியாமலேயே கடும்சினமும் கொல்வேலும் கொண்ட கொற்றவனாக உருமாறியிருப்பதை அரைமணிநேரம் கழித்துத்தான் உணர்வேன்.”அஜீ இந்த லுங்கியக் கொண்டாந்து உங்கப்பாவுக்கு குடு…இருங்க இந்தா காப்பி கொண்டறேன்…கோவிச்சுக்காதீங்க…” உள்ளே குரல்கள் ”காலைல எந்திரிச்சா உடனே காப்பி வேணும். இலெலெண்ணா சிங்கம்புலி கணக்கா நிப்பாங்க… காலம்பற நான் ஓடுற ஓட்டத்துக்கு என்ன பண்றது, எட்டு கையா இருக்கு?”
எங்கள் வீட்டில் நானேதான் எழுந்து முகம் கழுவி பாலில்லா டீ போட்டு குடிப்பேன். ”எப்டியும் அடுப்பு பத்தவச்சு டீ போட்டாச்சுல்ல? அப்டியே எனக்கும் ஒண்ணு போட்டா என்ன?”.ஆகவே அதையும் போட்டு தர ”சக்கரை அளவா போட எண்ணைக்குத்தான் கத்துக்குவியோ?” என்று சொல்லி குடிப்பாள். இங்கே பால்கனக்கும் காபிதான். ”சும்மா இரு. பாலில்லா டீண்ணா எங்கம்மா தரித்திரம்ணு நெனைச்சுக்கபோறாங்க. இங்க அதெல்லாம் யாரும் குடிக்கமாட்டாங்க. ஏற்கனவே எங்கம்மா மலையாளத்தாளுங்க கஞ்சித்தண்ணிய குடிக்கிறாங்கன்னு கேவலமா நெனைச்சிட்டிருக்கு…”//

அவர் நண்பர் இசைவிமரிசகர் பற்றி எழுதியதில் நான் ரசித்த பத்திகள்
//இசைவிமரிசகர் காதலித்து மணம்புரிந்துகொண்டவர். மலரினும் மெல்லிய உணர்வுகள் கொண்டவர். ஜெஸ்ஸியைக் கண்டதுமே நேரில் போய் முகத்தைப்பார்த்து 'பச்சை மலையாளத்தில்' "நான் உன்னை கட்ட விரும்புகிறேன். நீ ரெடி என்றால் நாளைக்குச் சொல்' என்று மயிலறகு போல மிருதுவாக காதலை தெரிவிக்க அவர் பதறியடித்து லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. அவரது அறைத்தோழி "ஆசாமி பெரிய மீசை வைச்சு ஆறடி உயரமா இருந்தானா?" என்று கேட்க இவர் "ஆமாம் "என்று கண்கலங்க "பயமே வேண்டாம். இதெல்லாம் ஹென்பெக்டாகவே டிசைன் பண்ணி மேலேருந்து கீழே அனுப்பப்பட்ட உயிர்கள். கழுத்தில் ஒரு சங்கிலி போட்டு சோபா காலில் கட்டிப்போடலாம் "என்று அனுபவசாலி சொல்லியதாகவும் மறுநாளே காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
//மனைவியடிமைகளாக இருப்பவர்களை இசைவிமரிசகர் கடுமையாக விமரிசனம் செய்வது வழக்கம். காரணம் அவர்களின் சகல ரகசியங்களும் இவருக்கு ஐயம் திரிபறத் தெரியும். செல் சிணுங்கியதுமே முதல் ஒலித்துளிக்குள்ளாகவே பாய்ந்து எடுத்து பதற்றத்தில் நாலைந்து பித்தான்களை அழுத்தி காதில் வைத்து அறைமூலைக்கு ஓடி ஒருகையால் செல் வாயை மூடி சற்றே பவ்யமாகக் குனிந்து பரிதாபமாக "ஆ ஜெஸ்ஸி" என்று இவர் சொல்லும்போது பார்க்கும் எவருக்கும் நெக்குருகும். பின்னர் எல்லா சொற்களும் சமாதானங்கள், சாக்குகள், அசட்டுச்சிரிப்புகள். இசைவிமரிசகர் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுவதில் ஆர்வமுள்ளவர். பேசிமுடித்து வரும்போது இவரில் தெரியும் விடுதலை உணர்வு ஆன்மீகமானது.//
//இசைவிமரிசகர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இவர் அமர்ந்து எழுதும் நாற்காலி சற்று பெரிதாகையால் அறைக்கதவை திறக்க முடியவில்லை என அறிந்ததும் அதை வேலைக்காரிக்குக் கொடுத்துவிட்டு உடனே போய் சிறிய ஒன்றை வாங்கிவந்து போட்டு அதில் கால்மடக்கி அமரவே முடியவில்லை என்று கண்டு, வேலைக்காரிக்குக் கொடுத்தது போலவே வேறு ஒன்றை அதே நிறத்தில் அதே வடிவில் வாங்கி வந்து போட்டுக் கொண்டு வேலைக்காரியால் விசித்திரமாகப் பார்க்கப்பட்டவர்.//

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வப்போது சமய சந்தர்ப்பம் தெரியாமல் யாரோ எதையோ எங்கேயோ சொல்லப் போக எனக்கு அவரது நகைச்சுவை எழுத்துக்கள் ஹைப்பர் லிங்காக நினைவுக்கு வர சிரிப்பை அடக்குவது கஷ்டமாகப் போக, இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

உலகை வெறுத்த சாமியார்

ஒரே ஒரு ஊரில் நமோநமஹ என்று அழைக்கப்படும் ஒரு சம்சாரி இருந்தாராம். எல்லோரிடமும் ஏதாவது கருத்து கூறிக்கொண்டே இருப்பாராம். யாராவது தான் சொன்னதைக் கேட்காவிட்டால் சன்னியாசம் கொள்வேன் எனச் சொல்லுவாராம். போவது போல போக்கு காட்டுவாராம், ஐயோ போகாதே என்று யாரையாவது விட்டுச் சொல்ல ஏற்பாடு செய்வாராம்.

புலி வருது கதையாகி விட்டது. இம்முறை எல்லோரும் அவரைப் போட்டு மாத்து மாத்தென்று மாத்தியதில் மூச்சு முட்டி சன்னியாசம் கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றாராம். ஆனால் முன்ஜாக்கிரதையாக அடுத்த ஆண்டு வந்து விடுவதாகவும் கூறினாராம்.

ஆனால் அந்தோ, இம்முறை நடந்தது வேறு. இத்தனைக்கும் அவர்மேல் அக்கறை கொண்ட தெலுங்குக்காரர் அம்மாதிரியெல்லாம் ரொம்ப பிகு செய்ய வேண்டாம், உங்களைப் போலவே ஓசையிட்டு சென்றவர்கள் கூட அசடுவழிய தானாகவே திரும்ப வேண்டியதாயிற்று வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று கூட கூறிப் பார்த்தாராம். ஆனால் அந்தோ அதை லேட்டாகத்தான் உணர்ந்தாராம். யாருமே இம்முறை அவரைத் திரும்ப வருமாறு அழைக்கவில்லையாம்.

ஆகவே இம்முறை வீட்டருகே வர, அவரது வீட்டம்மா எங்கு வந்தீர்கள் எனக் கண்ணாலேயே கேட்க, "ஹி ஹி ஒண்ணுமில்லை, போன வருஷம் சில பேர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லல்லைன்னு இப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது, பதில் சொல்லலாம்னு வந்தேன்" என்றாராம்.

எப்படியோ வந்தால் சரி, பலருக்கு தமாஷா பொழுது போகும். என்ன நான் சொல்றது?

(சமீபத்தில் 1964-ல் அம்புலிமா பத்திரிகையில் "போலி சந்நியாசி" என்ற தலைப்பில் படித்தக் கதை).

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/11/2008

The great Indian novel - 4

பகுதி - 3
பகுதி - 2
பகுதி - 1

சற்று நேரம் முன்னால்தான் புத்தகத்தை இரண்டாம் முறையாக முழுக்க படித்து முடித்தேன்.

விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடங்குகிறேன்.
வியாசரின் பாரதத்தில் வியாசர் விநாயகரிடம் கதையைக் கூறக்கூற அவர் எழுதியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இங்கும் அப்படித்தான். ஆனால் என்ன, இங்கு வி.வி.ஜி அடிக்கடி ஸ்டெனோ கணபதியிடம தன் எண்ணங்களைக் கூறி கதையைக் கோர்வைப்படுத்துவது அதிகம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் கணபதி பேசுவது இதில் வரவில்லை. வி.வி.ஜி மட்டுமே பேசுகிறார். மற்றப்படி மூல நூலை நான் குறிப்பிடாது வெறுமனே கதையைக் கூறிச் சென்றால் அது சஷி தாரூரின் The great Indian novel என்று வைத்து கொள்ளவும்.

பிரிட்டிஷ் ரெசிடண்ட் சர். ரிச்சர்ட் தனது உதவியாளரிடம் கங்காஜியின் நடவடிக்கை குறித்து புலம்புகிறார். அவரது உதவியாளர் ஹீஸ்லாப் (Heaslop) கூறுவது என்னவென்றால், அஸ்தினாபுரத்தின் இளவரசர் பதவியை சத்யவதியின் வாரிசுகளுக்காக விட்டு கொடுத்திருந்தாலும், அதன் காப்பாளர் (regent) பதவியிலிருந்து அவர் எப்போதுமே முறைப்படி ராஜினாமா செய்யவில்லை, ஆகவே அவரது நடவடிக்கைக்காக (மோதிஹரி என்னும் ஊரில் விவசாயிகளுக்காக போராடியது) அஸ்தினாபுரத்தை ஆங்கிலேயர் கைப்பற்றலாம் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க அஸ்தினாபுரத்துக்கு திரும்பவும் வருகிறார் வி.வி.ஜி.

திருதிராஷ்டிரர் காந்தாரியின் மணவாழ்க்கை நன்றாகவே தொடங்குகிறது. காந்தாரி தன் கணவன் பார்க்கவியலாத உலகம் தனக்குத் தேவையில்லை என தன் கண்களை துணியால் கட்டிக் கொள்கிறாள். வியாசர் கூறிய 100 பிள்ளைகளுக்கு பதில் ஒரே ஒரு பெண் பிரிய துரியோதனி பிறந்ததையும் போன பதிவிலே கூறியாகி விட்டது. பாண்டுவின் கஷ்டத்தையும் அதே பதிவில் கூறியாகி விட்டது. ஆனால் பாண்டுவுக்கோ வாரிசுகள் வேண்டும். ஏனெனில் வாரிசு இல்லாத அரசுகளை பிரிட்டிஷார் தம்வசப்படுத்திக் கொள்வது அக்காலத்தின் கட்டாயம். ஆக, பாண்டு தன் மனைவிகளிடம் வேறு யாரிடமிருந்தாவது பிள்ளைகளை பெற்றுத் தர கேட்டு கொள்கிறார். உடனே குந்தி தான் திருமணத்துக்கு முன்னமே Hyperion Helios (கதிரவன்) என்ற வேற்று நாட்டான் ஒருவனுடன் சினேகம் ஏற்பட்டு ஒரு குழந்தையைப் பெற்றதாகவும், அபவாதத்துக்கு பயந்து அதை ஆற்றில் கூடையில் வைத்து அனுப்பியதாகவும், தேடினால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வாரிசாக நியமிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறாள். ஆனால் பாண்டு ஒத்து கொள்ளவில்லை.

ஆகவே குந்தி, தர்மா (ஒரு இளம் நீதிபதி), அரண்மனைக் காவல்படைத் தலைவன் மேஜர் வாயு மற்றும் தேவேந்திர யோகி ஆகியோருடன் சேர்ந்து முறையே யுதிஷ்டிரர், வீரபீமன் மற்றும் அர்ஜுனை பெற்றெடுக்கிறாள். அதற்குள் தாவு தீர, இதற்கு மேல் முடியாது என்று கூறிவிட, மாத்ரி தான் மட்டும் எவ்வகையில் குறைந்தவள் என்று அச்வின் மற்றும் அஷ்வின் என்னும் இரட்டை சகோதரர்களுடன் சேர்ந்து நகுல சகாதேவர்களை பெற்றெடுக்கிறாள்.

இதுவரை வந்த பாத்திரங்கள் இந்திய சரித்திரத்தில் யார் யார் என்பதை ஒரு முறை பார்த்தல் சவுகரியமாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல வேத வியாசர் ராஜாஜி. (பிறகு அவரே சஞ்சீவ ரெட்டியாகவும் ஆச்சாரிய கிருபளானியாகவும் வருவது பின்னால் வரும் அத்தியாயங்களில்). கங்காஜிதான் காந்திஜி, திருதிராஷ்டிரர் நேருஜி, காந்தாரி கமலா நேரு, பிரிய துரியோதனி இந்திரா காந்தி (அவருக்கு பிரியதர்சினி என்றும் பெயர் உண்டு). பாண்டு சுபாஷ் சந்திர போஸ். விதுரர் சுபாஷ் சந்திர போஸ். யுதிஷ்டிரர் மொரார்ஜி தேசாய், பீமன் இந்திய சேனை, அர்ஜுனன் இந்திய பத்திரிகை உலகம், நகுலன் சிவில் சர்வீஸ், சகாதேவன் வெளிநாட்டு சேவை, அம்பா (சிகண்டி) நாதுராம் கோட்ஸே.

அஸ்தினாபுரத்தை ஆங்கிலேயர் அபகரிக்கின்றனர். அதன் மக்கள் தெருக்களில் கூடி பேசுகின்றனர். "Bibighar" தோட்டத்தில் அவர்கள் கூடுகின்றனர். கங்காஜி அங்கு வந்து மக்களை சந்திப்பதாக வதந்தி. அங்கு ஆங்கிலேய கர்னல் ருட்யார்ட் மக்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தி பலரைக் கொல்விக்கிறான். (இங்கு சஷி தாரூர் இரண்டு நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் தருகிறார். அவத் ராஜ்ஜியத்தை 1857-ல் அபகரித்தது, ஜாலியன் வாலாபாக் படுகொலை அதற்கு ஐம்பது ஆண்டுகள் பிறகு. ஆனால் இதையெல்லாம் ரொம்ப கண்டுக் கொள்ளக்கூடாது). கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்படுகின்றனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம்.

அதற்கு பிறகு, கர்னல் ருட்யார்டுக்கு 2.5 லட்சம் பவுண்டு அளவில் பென்ஷன்/நிதித்திரட்டல். பெயரிடப்படாத நோபல் பரிசு பெற்ற கவிஞர் தனது சர் பட்டத்தைத் துறக்கிறார் (ரவீந்திரநாத் டாகுர்). ருட்யார்டை கொல்ல முனைந்த தேச பக்தர்கள் தவறுதலாக ருட்யார்ட்டுக்கு பதிலாக கிப்ளிங் என்பவரைக் கொல்கின்றனர்.

விதுரர் சிவில் சர்வீசிலிருந்து ராஜினாமா செய்ய முன்வருகிறார். ஆனால் கங்காஜி மற்றும் திருதிராஷ்டிரர் அவரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கின்றனர். இப்போது அஸ்தினாபுர அரசக் குடும்பம் கௌரவர்கள் கட்சியில் (காங்கிரஸ்) ஈடுபடுகின்றனர். திருதிராஷ்டிரர் அதன் தலைவர், பாண்டு எல்லா மட்டத்து மக்களிடமும் கலந்து கட்சியை வளர்க்கிறார்.

கல்கத்தா அருகே சணல் ஆலையிருக்கும் பட்ஜ் பட்ஜ் என்னும் இடத்தில் தொற்றுநோய் பரவ, தொழிலாளர்களுக்கு கங்காஜியின் வெளிநாட்டு சிஷ்யை சாராபென் சணல் ஆலையின் மேலாளரான தனது சகோதரரிடம் பேசி போனஸ் தரச் செய்கிறார். பிறகு தொற்றுநோய் நின்றதும் போனஸ் நிறுத்தப்பட, கங்காஜி போராடி அதை மீட்டு தருகிறார்.

இப்போது பான்டுவுக்கும் திருதிராஷ்டிரருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இருவருமே கௌரவர் கட்சிக்குள்ளேயே இருந்தாலும் பாண்டு தீவிரவாதி, திருதிராஷ்டிரர் மிதவாதி. கங்காஜி வெள்ளைக்கார அரசால் கூட்டப்பட்ட வட்ட மேஜை மகாநாட்டுக்கு செல்கிறார். பாலக்காட்டிலிருந்து வந்த ஒரு கவுரவ கட்சி நிர்வாகி மஹாதேவ மேனன். மாங்காய்கள் மேல் விதிக்கப்படும் வரி சம்பந்தமாக ஏதேனும் கங்காஜி செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொள்ள கங்காஜி மாங்காய் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கிறார். பாண்டு இதை எதிர்த்து கௌரவர் கட்சியிலிருந்து தள்ளி நிற்கிறார். சில நூறு மைல்கள் கடந்து ஒரு தோட்டத்தில் காந்திஜி மாங்காய் பறிக்கிறார். அடுத்த நாள் கைது செய்யப்படுகிறார்.

இதனால் நாடு முழுதும் போராட்டம் ஆரம்பிக்கிறது. சவுராஸா என்னும் இடத்தில் போராட்டம் வன்முறை பாதையை எடுத்து இரு போலீஸார் கொல்லப்படுகின்றனர். உடனே கங்காஜி போராட்டத்தை கை விடுகிறார். வைஸ்ராயைப் பார்க்க செல்லும் கங்காஜி அவருக்கு ஆட்டுப்பாலின் மகத்துவத்தை விளக்குகிறார்.

காந்தி திரைப்படத்தைப் பார்த்த எல்லோருக்கும் மேலே சொன்ன காட்சிகள் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் என்ன, பல தனித்தனி நிகழ்ச்சிகளை கலந்து கிச்சடியாக்குகிறார் சஷி தாரூர். படிப்பவர்கள் கவனத்துடன் இல்லையென்றால் டரியல் ஆவார்கள்.

மிகுதியை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

புது பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை?

எனது நடேசன் பூங்கா சந்திப்பு பதிவில் ஐ.டி.க்காரர்களை சாடி வந்த பின்னூட்டங்களும் சரி, ஐடிக்காரர்களைச் சாடி வந்த மற்றப் பலபதிவுகளும் சரி ஒன்றை அடிப்படையாக கொண்டுள்ளன. அதுதான் பொறாமை. இம்மாதிரி எரிச்சல் சரித்திரத்தில் பல முறை நடந்துள்ளது,. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பலர் அரசு காண்ட்ராக்ட்கள் எடுத்து பெறும் பணம் குவித்தனர். அதே சமயம் வேறு பலர் நகரங்களில் தத்தம் வீடுகளை காலி செய்து கொண்டு கிராமங்களுக்கு விரைந்தனர். யுத்தத்துக்குப் பிறகு புதுப்பணக்காரர்களைப் பார்த்து மற்றவர் வயிறெரிந்தனர்.

அதற்கு முன்பாக கடல்கடந்து பணம் சம்பாதித்து வந்தவர்களைப் பார்த்து உள்ளூர்க்காரர்கள் மனம் வெதும்பினர். கேரளாவிலிருந்து பல ஏழை இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு எழுபதுகளில் செல்ல ஆரம்பித்து, உள்ளூருக்கு பணம் அனுப்பி கேரளாவில் பல கிராமங்களில் அலங்கார பங்களா கட்டியதில் உள்ளூர் நிலச்சுவான்தார்கள் கோபம் அடைந்ததைப் பற்றி அக்காலக் கட்டங்களில் வேணது படித்தாயிற்று. இதில் சாதிப் பிரச்சினை வேறு.

1995 முதல் 2002 வரை இருந்த டாட்.காம் கம்பெனிகளின் ஆதிக்கம் இருந்தபோது பலர் பணக்காரர்கள் ஆயினர். அவர்களில் பலர் அதற்கப்புறம் உடனடியாக ஏழைகளும் ஆயினர். அதைப் பார்த்து நன்றாக வேண்டும் இவர்களுக்கு என்று பார்வையாளர்கள் பலர் கெக்கலி கொட்டவும் தவறவில்லை. அதற்கப்புறம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கணினித்துறை சார்ந்தவருக்கு இருண்ட தினங்களே. எனக்கு தெரிந்து ஒரு இளைஞன் எம்.சி.ஏ. படித்து முடித்தவன் மாதம் ஆயிரம ரூபாய் வேலைக்கும் செல்லத் தயாராக இருந்தான். அதன்பிறகு நல்ல நிலைமை வந்தது. ஆக நான் கூறுவது இதுதான். பல ரிஸ்குகள் எடுத்து காரியம் செய்பவனைப் பார்த்து முதலில் கேலி செய்யும் உலகம். பிறகு அவன் வெற்றியடைந்தது பார்த்து வயிறெரியும்.

இப்போதே பாருங்களேன். விப்ரோவில் சம்பள வெட்டுக்கள், டி.சி.எஸ்.சில் ஆள்குறைப்பு என்றெல்லாம் எகத்தாளப் பதிவுகள் வர ஆரம்பித்து விட்டன. ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறான் ஒருவன் எனக் கண்டு கொண்டால், ஒரு ரூபாய்க்கு தரும் மாங்காய்பத்தைகூட அவனைப் பொருத்தவரை இரண்டு ரூபாய் விலைக்குத்தான் தரப்படுகிறது.

இது இந்தியாவுக்கு மட்டும்தான் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் புதுப்பணக்காரர்களை
nouveaux riches என்று பெயரிட்டு, அவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவது எல்லா பழைய பணக்காரர்களுக்கும் வழக்கம்தான். அதிலும் தன் வீட்டில் வேலைக்காரனாக இருந்து விட்டு, பிறகு வெளியில் பெருத்த அளவில் பொருள் ஈட்டி சொந்த ஊருக்கு வந்து மிகப்பெரிய பணக்காரனாக நடமாடுபவரைக் கண்டால் பழைய எஜமானனுக்கு பற்றிக் கொண்டு வரும். இது பற்றி இப்பக்கத்தில் பார்க்கலாம்.
ஆனால் ஒன்று இது தவிர்க்க முடியாதுதான். ஐடிக்காரர்கள் இதை உணர்ந்து கொண்டு தங்களைப் பார்த்து வயிறெரிபவர்களை புறம் தள்ளிச் செல்வதே சரியான செயல்பாடாக இருக்கும். அதே சமயம் பணத்தையும் ஜாக்கிரதையாக சேமித்து வைத்து கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் நிலையற்ற வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் கிரெடிட் கார்டு தருகிறேன் பேர்வழி என்று பல வங்கிகள் தலையில் மிளகாய் அரைக்க அலைகின்றன. சுயக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் கடன் வலையில் விழவேண்டியிருக்கும். பிறகு அனுதாபம் காட்டக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களைக் கண்டு அவ்வளவு பொறாமை. இந்தப் பொறாமையில் பழைய பணக்காரர்களுடன் சேர்ந்து, புதுப் பணக்காரர்கள் முதலில் ஏழைகளாக இருந்தபோது கூடவே இருந்து இன்னும் ஏழைகளாகவே இருப்பவர்களும் பொறாமைத் தீயில் வேகின்றனர். ஆகவே ஜாக்கிரதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/09/2008

நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்திப்பு - 09.03.2008

இந்த சந்திப்பு சம்பந்தமாக நடந்த பலவிஷயங்கள் சுவாரசியமானவை.

முதற்கண் இது பற்றி நான் அறிவிப்பு செய்த பதிவு ரொம்ப ஷார்ட் நோட்டீஸ் ஆக ஆகிவிட்டது என நினைக்கிறேன். மேலும் நேற்று எல்லே ராம் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. தான் திடீரென பங்களூர் செல்ல நேர்ந்ததால் தன்னால் வர இயலவில்லை எனக் கூறினார். அவருக்காகவும் பாரதீய நவீன இளவரசன் என்னும் தோஹாவிலிருந்து வந்த பதிவருக்காவும்தான் நான் இந்த சந்திப்பையே ஏற்பாடு செய்தேன். அதிலும் தோஹா பதிவர் நாளைக்கு ஊர் செல்கிறார். ஆகவே மீட்டிங்கை தள்ளிப் போட இயலவில்லை.

இன்னொரு விஷயம் இந்த சந்திப்பு நடக்கும் முன்னரே அது பற்றி பதிவை நம்ம செந்தழல் ரவி போட்டு விட்டார். அதில் சில தூள் வரிகள் உதாரணத்துக்கு:
//என்னுடைய வாடகைக்காரை நடேசன் பூங்கா வாசலில் நிறுத்திய நேரம் சரியாக மணி 6:00..அதியமான் ஏற்கனவே வந்து காத்திருந்தார்...அங்கே வாசலில் நின்று எலந்தப்பழம் விற்றுக்கொண்டிருந்த நன்பரை, வலைப்பதிவு மீட்டிங் உள்ளே நடப்பதாகவும் அதில் வந்து கலந்துகொள்ளுமாறும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்.//

//உண்மைத்தமிழன் எண்ட்ரி...!!! சார், பக்கத்துல தான் வீடு...நான் டீ சாப்பிட வந்தேன்...
டோண்டு: நோ...இந்த பக்கம் க்ராஸ் பண்ணா உட்கார்ந்து தான் ஆகனும்...நீங்க போக விடமாட்டேன்...பக்கத்துலேயே சிக்கன் பிரியாணி ஸ்டால் இருக்கு...அதுல சிக்கன் பிரியாணி வாங்கித்தரேன்...இருங்க...
உண்மைத்தமிழன்: சார்...நான் வெஜிட்டேரியன்...
டோண்டு: ஆமாம், நீங்க தான் சொல்றீங்களே..."நான் வெஜிட்டேரியன்னு.." அப்ப நீங்க என்.வி தானே...எப்படி மொக்கை போட்டேன் பார்த்தீங்களா ?
உண்மைத்தமிழன் : தாங்கலை...ஆளை விடுங்க...
(அதியமான் வாக்கிங் பாத்தில் இருந்து தும்பைப்பூ நிற வேட்டியணிந்த ஒருவரை பிடித்து இழுத்து வருகிறார்)
டோண்டு: வாங்க சிவஞானம்ஜி. எப்படியோ மீட்டிங் வந்துட்டீங்க...தாங்ஸ்...உங்களுக்கு டட்ச் ட்ரீட்ல 5% டிஸ்கவுண்ட் தரேன் ஓக்கே ?
சிவஞானம்ஜி: யோவ் நான் வாங்கிங் வந்தேன்யா...
அதியமான்: அதெல்லாம் ஒத்துக்கமுடியாது...வலைப்பதிவு வெச்சிருக்கீங்க இல்லையா ? அப்போ நடேசன் பார்க் ஏன் வந்தீங்க ? நீங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டுத்தான் ஆகணும்.//

மாலை நாலு மணிக்கு கார் வரச்சொல்லியிருந்தேன். அதற்கு சற்று முன்னால் பாரதீய நவீன இளவரசனிடமிருந்தும் சுகுணா திவாகரிடமிருந்தும் ஃபோன் அழைப்புகள் வந்தன. மீட்டிங்கிற்கு வருவதை உறுதி செய்தனர். எனது கார் கிண்டி அருகில் வரும்போது ஓகை அவர்கள் ஃபோன் செய்தார். அவரும் மீட்டிங்கிற்கு வருவதாகக் கூறினார். அடையார் அருகே வரும்போது அதியமானிடமிருந்து ஃபோன். அவர் ஏற்கனவே நடேசன் பூங்காவுக்கு வந்து விட்டதாகக் கூற, என்னை அறியாமல் புன்முறுவல் செய்தேன் (செந்தழல் ரவி மேலே எழுதியது ஞாபகத்துக்கு வந்ததே அதற்கு காரணம்). என் கார் நடேசன் பூங்காவுக்கு வந்த போது மணி சரியாக மாலை ஐந்தரை மணி. என்னை அங்கே டிராப் செய்து விட்டு என் குடும்பத்தினர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு விரைந்தனர். அதியமானும் நானும் ஒரு நல்ல வட்ட பெஞ்சாகப் பார்த்து இடம் பிடித்தோம்.

மாசிவக்குமாருக்கு திடீரென வேலை வந்து விட்டதால் அவரால் வர இயலவில்லை என அதியமான் கூறினார். சற்று நேரத்தில் பாரதீய நவீன இளவரசன் வந்தார். அவரையும் அதியமானையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தேன். அவர் தோஹாவில் பணி புரிகிறார். அவருடன் சந்திப்பு சுஜாதா அஞ்சலி கூட்டத்தன்று நாரதகான சபா கேண்டீனில் வைத்து நடந்தது. மனிதர் சுவாரசியமான பல தகவல்களை அளித்தார். பிறகு ஓகையும் கடைசியில் சுகுணா திவாகரும் வந்தனர். சுகுணா திவாகர் டயட்டிங்கில் இருந்து உடம்பை ட்ரிம்மாக வைத்து ஸ்மார்ட்டாக இருந்தார். இதற்கிடையில் வேர்க்கடலை விற்றுக் கொண்டு வந்த ஒரு குட்டி வியாபாரியிடம் கடலை வாங்கினோம்.

இப்போது பேச்சு பல விஷயங்களைத் தொட ஆரம்பித்தது. பாரதீய நவீன இளவரசன் தோஹா, சவூதி அரேபியா ஆகிய இடங்களில் தினசரி வாழ்க்கையைப் பற்றி பல அரிய விஷயங்களைக் கூறினார். கரூரில் தனது குடும்பத்தினர் தி.க. வில் பங்கேற்று செயல் புரிந்ததை அதியமான் சுவையாகக் கூறினார். தானும் கருப்பு சட்டை போடிருந்ததாகவும் கூறினார்.

சவுதி அரேபியாவில் தலை வெட்டும் தண்டனை பொது மக்கள் முன்னால் நடைபெறப்போவதை அரபி சேனல்களில் கீழே ரன்னிங் டெக்ஸ்டாக வரும் என்றும், விஷயம் தெரிந்தவர்கள் போய்ப் பார்ப்பார்கள் என்றும் பாரதீய நவீன இளவரசன் கூறினார். அரபி தெரியாமல் இருப்பதில் இப்படி ஒரு அனுகூலம் என நினைத்து கொண்டேன். ஏனெனில் அப்படிப் பார்ர்க்க போனால் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டுமாம். முகத்தை திருப்பிக் கொண்டாலோ, கண்ணை மூடிக் கொண்டாலோ அதனால் மேலும் தொல்லையாம்.

ஸ்ரீலங்கா நிலைமை பற்றியும் பேசினோம். அதில் உள்ள இந்தியத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் இசுலாமியர் ஆகியோரது அணுகு முறைகளில் இருந்த வேறுபாடுகள் பற்றியும் பேசினோம். பங்களூரில் ஐ.டி. கம்பெனிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் பேச நேர்ந்தது. ஐ.டி. கம்பெனியருக்கு நல்ல சம்பளம் கிடைத்தால் என்ன தவறு, அவர்கள் அதை செலவழிக்க, பலருக்கு வேலை கிடைக்கிறது என்பதை அதியமான் துல்லியமாக விளக்கினார். ராவ் என்பவர் தன்னால் முன்பு போல ஹாய்யாக சென்று கறிகாய் வாங்க இயலாத ஆற்றாமையால் அவ்வாறு ஐ.டி. கம்பெனிகள் பற்றி கருத்து தெரிவித்தார் என தமாஷாகக் கூற, சிரிப்பு எழுந்தது.

வெறுமனே எழுத்தை நம்பி தமிழ்நாட்டில் வாழ இயலாத என்ற ஆதங்கத்தை எழுப்பினார் பாரதீய நவீன இளவரசன். அது சற்று கடினமே என்று நான் கூறினேன். வேறு ஏதாவது வேலையை கையில் வைத்து கொண்டு, வயிற்றுப் பாட்டைப் பார்த்த பிறகு வேண்டுமானால் எழுத்தை பார்ப்பது நலம் என்பது எனது கருத்து.

சுஜாதா அவர்களிக்கு தான் எழுதிய அஞ்சலி ஆங்கிலத்தில் வந்ததன் காரணத்தை ஓகை அவர்கள் கூறினார். அவர் பொன்னியின் செல்வன் குழுவில் எல்லோருக்கும் புரிவதற்காக ஆங்கிலத்தில் எழுதியதாகவும் வார்த்தைகள் தாமே வந்து விழுந்தன என்றும் கூறினார். அது அவர் வலைப்பூவிலும் வந்துள்ளது. பொன்னியின் செல்வன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, அதில் எழுதி வந்து கொண்டிருந்த, திடீரென காலம் சென்ற பதிவர் கார்த்திகேயன் அவர்கள் வைத்திருந்த விஜயநகரம் என்ற வலைப்பூவை அவரது அன்னை தொடர்ச்சியாக நடத்துவது பற்றியும் பேச்சு வந்தது. அந்த விஜயநகரம் வலைப்பூ நான் தமிழ் இணையத்துக்கு வந்தப் புதிதில் பார்த்தது. அவர் அகால மரணம் அடைந்தது பற்றியும் படித்துள்ளேன். அந்த வலைப்பூவை அவர் அன்னை எடுத்து நடத்துவது பற்றிக் கேட்டு ஆச்சரியமாக இருக்கிறது.

மாலை 6.45 அளவில் மா.சிவக்குமாரிடமிருந்து ஃபோன் வந்தது. சந்திப்பு நல்லபடியாகப் போகிறதா என விசாரித்தார். பிறகு சுகுணா திவாகரிடம் ஃபோன் கொடுக்க அவரும் மாசிவகுமாரிடம் பேசினார். அடுத்த ஃபோன் உண்மைத் தமிழனிடமிருந்து வந்தது. பாரதீய நவீன இளவரசனிடம் ஃபோனைக் கொடுத்து அவருடன் பேசச் செய்தேன். ”அஞ்சாதே” என்னும் படத்துக்கு உண்மைத் தமிழன் எழுதிய விமரிசனம் நன்றாக இருந்தது என அவர் பாராட்டினார்.

கிட்டத்தட்ட 7.30 மணிக்கு ரத்னா கஃபே செல்லலாம் எனத் தீர்மானித்தபோது திடீரென பேச்சு தி.நகர் பஸ் டெர்மினஸ் அருகே உள்ள பார்-கம் ரெஸ்டாரண்டுக்கு செல்லலாமா என டைவர்ட் ஆனது. முதலில் பாரதீய நவீன இளவரசன் தயங்கினார். பிறகு ஒத்து கொண்டார். கிளம்பலாம் என தீர்மானித்து எழுந்தபோது, என் வீட்டம்மாவிடமிருந்து ஃபோன். கார் நடேசன் பூங்காவை நெருங்குவதாகவும் நான் உடனே கேட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார். நான் வேண்டுமானால் இருந்து விட்டு டிரெயினில் வீட்டுக்கு வந்து கொள்கிறேன், அவர்கள் மட்டும் காரில் நங்கநல்லூர் செல்லலாம் என முனகியவாறு கூறிய யோசனையை அவர் உறுதியாக நிராகரித்தார். ஆக மற்ற நால்வரும் பார் செல்ல, நான் மட்டும் கார் செல்ல வேண்டியதாயிற்று.

சுகுணா திவாகரிடம் அவரது வரவிருக்கும் திருமணத்துக்கான வாழ்த்தைக் கூறி, சென்னையிலும் ஒரு ரிசப்ஷன் வைக்குமாறு கூறினேன். செய்வார் என நம்புகிறேன். இந்த மாதக்கடைசியில் இரு துபாய பதிவர்கள் வரவிருப்பதால் இன்னொரு மீட்டிங் நடக்கும்போலத் தெரிகிறது. பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/06/2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

அன்புள்ள சகவலைப்பதிவர்களே,

திடீரெனத் தோன்றியது. நான் வலைப்பதிவர்கள் மீட்டிங் கூப்பிட்டு 13 மாதங்கள் ஆகப்போகிறது. வெளியூர்/வெளிநாட்டிலிருந்து சில பதிவர்கள் வந்திருக்கின்றனர். அவர்களை எல்லாம் சந்திக்கும் சாக்கில் ஒரு மீட்டிங் கூப்பிடலாம் என்று உத்தேசித்துள்ளேன். ஆகவே இப்பதிவு.

வரும் ஞாயிறன்று (09.03.2008) சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் மாலை 5.30 மணியளவில் சந்திக்கலாம் என எண்ணியுள்ளேன். வர விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டத்திலோ அல்லது எனது மொபைல் தொலைபேசியிலோ (9884012948- இது சென்னை எண்) அதை கூறலாம்.

சிறிது நேரம் பேசிவிட்டு, கடைசியில் அருகில் இருக்கும் ரத்னா கஃபேயில் சிற்றுண்டி. டோண்டு கூப்பிடும் சந்திப்புகளில் வழமையாக வருவது போல இங்கும் ரத்னா கஃபேயில் டட்ச் முறைப்படி செலவுகள் சமமாகப் பங்கிட்டு கொள்ளப்படும். மீட்டிங்கிற்கு வந்து விட்டு ரத்னா கஃபேக்கு வராதவர்கள் இந்த டட்ச் முறையில் வரமாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

சந்திப்பில் பேச என்று ஒரு விஷயமும் இப்போதைக்கு இல்லை. வெறுமனே தோழமைக்கான சந்திப்பு. என்ன பேசுவது என்பது அப்போது சமயசந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி முடிவு செய்யப்படும். இன்னொரு விஷயம், வலைப்பதிவுகளை வெறுமனே படிப்பவர்களும் வரலாம் வலைப்பதிவுகளில் அக்கறை இருக்க வேண்டும் அவ்வளவே.

இது பற்றி நான் சில பதிவர்களிடம் பேசினேன். அவர்கள் பாரதீய இளவரசன், எல்லே ராம் மற்றும் அதியமான். வால்பையன் ஊரில் இல்லை. அவர் வரும் ஞாயிறன்று சென்னை வந்தால் வருவதாகக் கூறினார்.

என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் தயவில் எல்லாமே நல்லபடியாக முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு ராகவன் போடும் மொக்கை

எனக்கு வந்த மின்னஞ்சலை என்னால் இயன்ற அளவு தமிழில் மாற்றித் தருகிறேன். அலுவலகத்தில் சாதாரணமாகப் பேசும் வரிகளுக்குள் நடுவே படித்தால் என்ன ஆகும்?
அதன் ஆங்கில மூலத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
அலுவலக மொழி .... ... இது எப்படி இருக்கு? ........ .

1."நாம அதை கண்டிப்பா செய்வோம்"
"நீதாண்டா அதை செய்யப் போறே சோம்பேறி"

2."ரொம்ப நல்லா வேலை செஞ்சீங்க"
"இதோ இன்னும் அதிக வேலைகள் உன் தலையில்தான், இளிச்சவாயா"

3."நாங்க அந்த வேலையைத்தான் பாத்திட்டிருக்கோம்"
"இன்னும் அதை பாக்கவே ஆரம்பிக்கவில்லை ஐயா தொந்திரவு பண்ணாம போய்ச்சேர் அப்பேன்"

4."நாளைக்கு முதல் வேலையா இதுதான்"
"இன்னிக்கு எப்படியும் அதை செய்யறதா இல்லை, அதாவது நாளை வரைக்கும் இதான் நிலைமை, ஹி ஹி!"

5."விவாதம் செய்வோம், தீர்மானிப்போம் - மற்றவர் கருத்து எனக்கு முக்கியம்"
"நான் ஏற்கனவே முடிவு செஞ்சாச்சு, நீ என்ன செய்யணும்னு நான் அப்புறம் சொல்றேன்டா வெண்ணை".

6."தகவல் பரிமாற்றம் செய்வதில் சற்றே பின்னடைவு"
"நாங்க பொய் சொன்னோம்"

7."எல்லோரும் சேர்ந்து மீட்டிங் போட்டு பேசுவோம்"
"இப்போ பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை (தமிழ்மணம் பாக்கணும்)"

8."எங்களால் இதை கண்டிப்பாக செய்ய முடியும்"
"எங்களால் இதை நேரத்துக்கு செய்ய இயலவில்லை"

9."நாங்க சரியான பாதையிலேதான் போயிட்டிருக்கோம் ஆனாக்க டெட்லைனை கொஞ்சம் தளர்த்தணும்"
"சொதப்பிட்டோம் வாத்தியாரே, சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க முடியாது."

10."சிறு கருத்து வேறுபாடு"
"குடுமிப்பிடி சண்டை போட்டோம்"

11."என்னென்ன வேலைகளெல்லாம் செய்யணும்னு லிஸ்ட் போடவும். உனக்கு நான் எப்படி உதவலாம்னு பார்க்கிறேன்"
"நீயே ஏதாவது பாத்து செய்யப்பா, என்னைத் தொந்திரவு பண்ணாதே, ஆளை விடு"

12."முன்னாலேயே இதை நீ எனக்கு சொல்லியிருக்கணும்"
"அப்படியே சொல்லியிருந்தாலும் ஒண்ணும் கழட்டியிருக்க முடியாதுங்கறது வேற விஷயம்!"

13."இந்தப் பிரச்சினையின் முக்கிய காரணத்தைக் கண்டு பிடிப்போம்"
"நீ எங்க கோட்டை விட்டேங்கறதை நான் அப்புறம் சொல்லறேன், வெண்ரு"

14."குடும்பம்தான் முக்கியம், உன்னுடைய லீவை சாங்ஷன் செய்யறேன். வேலை பாதிக்காமல் இருக்கும்படி மட்டும் பார்த்து கொள்ளவும்,"
"இந்த வேலையை முடிக்காமல் வெளியே போனால் காலை ஒடச்சுடுவேன், படவா"

15."நாம் ஒரு குழுவா செயல்படணும்,"
"சொதப்பிட்டேன், அதுக்கான தர்ம அடியில் எல்லோருக்கும் பங்கு"

16."இது ஒரு நல்ல கேள்விதான் நீ கேட்டது"
"அதப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதுடா டோமரு"

17."All the Best"
"உனக்கு சங்குதாண்டி"

ஆங்கில மொக்கையை தமிழில் மொக்கியது,

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது