நிரந்தர பக்கங்கள்

1/29/2009

டோண்டு பதில்கள் - 29.01.2009

போன வாரத்துக்கான பதில்கள் பதிவில் நான் இவ்வாறு எழுதினேன்.
“நான்கு பதிவுகளாக 120 கேள்விகள் கேட்ட அனானியின் கடைசி 20 கேள்விகளுக்கு இப்பதிவில்தான் பதிலளித்தேன். அவரே இப்போது புதிதாக 25 கேள்விகள் கேட்டுள்ளார். ஆகவே அக்கேள்விகளை அடுத்த பதிவுக்கு அனுப்புகிறேன்”.
அதன்படி அந்த 25 கேள்விகள் இப்பதிவை ஆரம்பித்து வைக்கின்றன.

அனானி (21.01.2009 காலை 05.18-க்கு கேட்டவர்):
1. மகா கவி பாரதியார் பக்திநெறியிலிருந்து சித்தர் நெறிக்கு உயர்ந்தார். பின் அவரால் முக்திநெறிக்குள் செல்லமுடியாது தடுத்தது எது?
பதில்: விவேகானந்தர் பற்றி ஒரு நிகழ்வை கூறுவார்கள். தியானம் செய்யும் இன்பத்தை அறிந்துணர்ந்த அவர் தியானத்திலேயே மூழ்க எண்ணியிருக்கிறார். அதை அவர் தனது குரு ராமகிருஷ்ணரிடம் கூற அவர் பதறிப்போய் அவர் அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது, ஏனெனில் அவரால் இந்த சமூகம் உய்ய வேண்டியிருந்தது. அவ்வாறிருக்க அவர் தியானத்தில் மூழ்குவது சுயநலமாகும் என்று அவருக்கு உணர்த்தினார். அதே போலத்தான் பாரதியும். அவர் மகாகவி எல்லாம் சரிதான். ஆனால் அவருக்கும் குடும்பம் என ஒன்று இருந்தது. வேறு கடமைகளும் இருந்தன. அதனாலேயே அவர் வணங்கும் அம்பிகை அவரை முக்திநெறிக்குள் போக விடவில்லை எனக் கருதுகிறேன்.

2. பாரதியார் பணியாற்றிய மதுரை உயர்நிலைப்பள்ளியை மத்திய அரசு நினைவுச் சின்னமாய் மாற்றும் செயலுக்கு மாநில அரசின் பாராமுகம் ஏன்?
பதில்: இது எனக்கு புது செய்தி. அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.

3. நாட்டுடைமை ஆக்கப் பட்ட பாரதியாரின் கவிதை தொகுப்பில், அவரால் எழுதப்படாத சில பிற சேர்க்கைகள் சேர்ககப்பட்டுள்ளன என்ற பாரதியாரின் பேத்தி விஜயபாரதியின் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: இது பற்றி எனது நண்பரிடம் கேட்டேன். அவர் பாரதியாரில் அத்தாரிட்டி. அவர் விசாரித்து கூறுவதாகச் சொன்னார்.

4. நெருங்கிய நண்பர்களாய் இருந்த வ.உ.சி, சிவா ஆகிய இருவரிடம் கடைசி காலத்தில் பாரதியாரின் நட்பின் நெருக்கம் குறைந்து காணப்பட்டதற்கு காரணம்?
பதில்: இது பற்றியும் எனது அதே நண்பரிடம் கேட்டேன். நீங்கள் கேட்டது போல இல்லை என்கிறார். பாரதியார் இறந்ததும் வ.உ.சி. அவர்கள் “நான் கண்ட பாரதி” என்னும் தலைப்பில் புத்தகமே எழுதுகிறார். சிவாவுக்கு தொழுநோய் வந்து விட்டது. வ.உ.சி. மனத்திடம் குன்றிய நிலையில் 6 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு வந்துள்ளார். பாரதியோ அச்சமயம் புதுச்சேரியில். அவருக்கும் ஏகப்பட்ட கவலைகள். எல்லாமாக சேர்ந்து செயல்பட்டன. மன உற்சாகம் என்பது ஒருவரிடம் எப்போதுமே இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. பாரதி இறந்தபிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாழ்ந்த வ.உ.சி.யின் வாழ்க்கை மிகவும் பிரச்சினை நிரம்பியதாக இருந்திருக்கிறது. சன்னது பிடுங்கப்பட்ட நிலையில் அவரால் வக்கீலாக தொழில் செய்ய இயலவில்லை. பிறகு வாலஸ் என்ற நீதிபதியின் உதவியோடு அதை திரும்பப் பெற்றார். தனது ஒரு பிள்ளைக்கு அவர் வாலீஸ்வரன் என்றே பெயர் வைத்ததாகவும் படித்துள்ளேன் (வாலஸ் என நான் தவறுதலாக எழுதியதை சுட்டிக்காட்டிய ஆர்.வி. அவ்ர்களுக்கு நன்றி).

5. பாரதியாரின் புரட்சிக் கருத்துக்களில் ஈர்க்கபட்டு தன் பெயரை பாரதிதாசன் என வைத்துக் கொண்டார் பகுத்தறிவுவாதி புரட்சிக் கவிஞர். தற்கால பகுத்தறிவுத் தலைவர்கள் பாரதியை பாராட்டும் விகிதம் சற்று குறைவாயிருப்பதன் காரணம்?
பதில்: நீங்கள் சொல்லும் socalled பகுத்தறிவுவாதிகள் பெயரில் மட்டும்தான். பாரதியை பாராட்ட அவர்களுக்கு எப்படி மனம் வருமாம். அவர் பார்ப்பனர் ஆயிற்றே.

6. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபோகம் எப்படி?
பதில்: நான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. மறந்து விட்டேன். மேலும் ஒபாமா வென்றதில் எனக்கு மகிழ்ச்சி ஏதும் இல்லை.

7. முன்னாள் அதிபர் புஷ்ஷின் நிர்வாகத்தை விட நல்ல நிர்வாகம் கொடுப்பரா?
பதில்: கொடுத்தால் அமெரிக்காவுக்கு நல்லது. நான் ஏற்கனவே பல முறை கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிக்கன்களையே ஆதரிக்கிறேன்.

8. அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீடகப்படுமா, ஓபாமாவால்?
பதில்: நல்லதையே நினைப்போம். அதுவே நடக்கும் என எதிர்பார்ப்போம்.

9. அவரது கொள்கையால் இந்தியாவுக்கு நன்மை அதிகமா? தீமை அதிகமா?
பதில்: சாதாரணமாக டெமாக்ரட்டிக்குகளால் இந்தியாவுக்கு தொல்லைகளே அதிகம்.

10. அமெரிக்காவை ஆளும் கட்சிகளின் பற்றிய உங்கள் மனநிலையில் மாற்றம் வருமா,ஒரு வேளை ஓபாமா நல்ல நிர்வாகம் செய்தால்?
பதில்: நான் சமீபத்தில் 1900-லிருந்து அமெரிக்காவில் நடந்ததை நினைத்து பார்க்கிறேன். என்னை பொருத்தவரை அமெரிக்காவுக்கு நல்ல நிர்வாகி தேவை. ஒபாமா மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அப்படியே அவர் நல்லது செய்தால் நான் சொன்னது தவறு என நிரூபிக்கப்பட்டால் என்னைவிட அதிக மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யார் இருக்க இயலும்.

11. தமிழக அரசியல் கட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கையில்( ஒரு கோடி) திமுக முன்னணி உண்மையா?
பதில்: இது நிஜமான வளர்ச்சியா அல்லது யானைக்கால் போன்ற வீக்கமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். (கோவி கண்ணன் கூட சொல்லலாம்).

12. சென்னையில் படித்தவர்கள், பாமரர்கள், நடுத்திர வர்க்கம் இவர்கள் மத்தியில் தொடர்ந்து திமுகவுக்கு ஜே ஜே .உங்கள் கருத்து?
பதில்: சாதாரணமாக சென்னை நகரம் திமுகவின் கோட்டை என இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அவ்வளவு எளிதாக கூறிட இயலாது என்றுதான் எனக்கு படுகிறது.

13. அரசு ஊழியர்களதான் தேர்தலில் முக்கிய துருப்புச் சீட்டு என்று அடிப்படையான உண்மை கூட புரிந்து கொள்ளாத கான்வெண்ட் ஜெயலலிதாவைவிட, சாமானிய கலைஞர் சாமர்த்தியசாலிதானே?
பதில்: கலைஞரும் சரி ஜெயலலிதாவும் சரி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் தீவிரவாத மற்றும் புலிகள் எதிர்ப்பு நிலையால் ஜெயலலிதாவின் தகுதி சற்றே அதிகமாக உள்ளது.

14. காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் தீய நோக்கோடு ஜெயலலிதா தெரிந்தே இலங்கை தமிழர் பிரச்சனையில் எதிர் கருத்து தெரிவிக்கிறார் என்ற வீரமணியின் குற்றச்சாட்டு?
பதில்: திமுக கூட்டணியில் ஜெயலலிதா குழப்பம் ஏற்படுத்துவதோ அல்லது அதிமுக கூட்டணியில் கலைஞர் குழப்புவது ஆகிய இரண்டுமே தவிர்க்க முடியாதுதானே. இதில் என்ன தீய நோக்கம் வந்தது? அது இருக்கட்டும், பை சான்ஸ் ஜெ வெற்றி பெற்றால் வீரமணி என்ன சொல்லப் போகிறார் என்பதையும் சுலபமாக ஊகிக்க முடியும்தானே.

15. காங்கிரஸ் ,திமுக, விஜயகாந்த் கூட்டணி (பேச்சுவார்த்தை நடைபெறுகிறது-கலைஞரின் சம்மதமும் ரெடியாம்))அமைக்கும் சமயத்தில்,ஜெயலலிதா மற்ற எல்லாக் கட்சிகளின் துணையோடும் (பாஜகவுடன் மட்டும் ரகசிய உடன்பாடு), ரஜினியின் ஆதரவோடும் நாடளுமன்ற தேர்தலைச் சந்தித்தால்? முடிவு என்னவாகும்?
பதில்: நீங்கள் சொன்ன கன்ஃபிகரேஷன் வந்தால் ஜெயலலிதா பாடு திண்டாட்டமே.

16. கிராமங்களில் இருந்து நகருக்கு வந்து செல்வந்தராய் மாறியுள்ளவர்களில் தனது கிராமத்தை மறக்கமால் அதன் முன்னேற்றதிற்காக பாடுபடுவோரில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்? விளக்குக?
பதில்: இளையராஜா இருக்கிறார் போலிருக்கிறதே.

17. சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால் அதிகம் பயன் பெரும் கிராம(ரியல் எஸ்டேட் விலையேற்றம்) மக்கள் அதனை எதிர்ப்பது ஏன்?
பதில்: இம்மாதிரி நில ஆர்ஜிதம் செய்யும்போது சரியான தொகை சரியான நேரத்தில் கிடைப்பதில் பல தொல்லைகள் உள்ளன. நெய்வேலியிலேயே இந்த பிரச்சினை இன்னும் இருக்கிறது என படித்துள்ளேன்.

18. சென்னைப் புறநகர் விரிவாக்கம் நான்கு திசைகளில் எந்த, எந்த ஊர்வரை சென்றுள்ளது?
பதில்: தெற்கில் மறைமலை நகர், மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் வரை என நினைக்கிறேன். வடக்கே திருவொற்றியூர்? நிச்சயமாகத் தெரிவது கிழக்கேதான், அதாவது வங்காள விரிகுடா.

19. செங்கல்பட்டும் சென்னையும் ஒன்றாய்விடும் போலுள்ளதே?
பதில்: இப்போதே செங்கல்பட்டு வரை நகரக் கட்டணத்தில் பஸ்கள் விடுகிறார்கள் போலிருக்கிறது?

20. மென்பொருள் வணிகத்தில் உருவாகிவரும் தேக்க நிலை, சென்னை அடுத்து உள்ள கிராமங்களில் விஷம் போல் ஏறிய காலிமனை விலையை கட்டுக்குள் கொண்டு வரத் தொடங்கிவிட்டதா?
பதில்: விலை குறைந்தாலும் அந்த விலையைக் கூடத் தர இயலாதவர்களை பொருத்தவரை விலை கட்டுக்குள் இருக்கும் எனக் கூறிட இயலுமா?

21. போலி டோண்டு காலங்கள் போல் இப்போது ஹேக்கர்ஸ் காலம் போலுள்ளதே?
பதில்: ஹேக்கர்ஸ் காலம் காலமாக இருந்தனர், இருக்கின்றனர், இருப்பார்கள். ஒரு போலி டோண்டு இல்லாவிட்டால் என்ன, வேறு யாருக்காவது போலி வரலாம். தீமையுடனான யுத்தத்தில் தளருதல் ஆகாது.

22. கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா என்பது போல் உள்ளதே பதிவுலகில் நடக்கும் சமாச்சாரங்கள்?
பதில்: அவ்வாறு கூறும் அளவுக்கு என்ன ஆகிவிட்டது?

23. பதிவுலகம் டல்லடிப்பதாய் எழும் கருத்து உண்மையா?
இல்லவே இல்லை.

24. தமிழ்மணம், தமிலிஸ் ஒப்பிடுக?
பதில்: என்னைப் பொருத்தவரை தமிழ்மணம் அதிக எளிமையாக உள்ளது. தமிலிஷின் விதிகள் குழப்பமாக உள்ளன. ஒரு வேளை நான் தேவையான முயற்சிகளை எடுக்காதிருப்பதும் எனது இந்த மனப்போக்குக்கு காரணமாக் இருக்கலாம்.

25. உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தைத்தவிர வேறு எந்த தமிழ் திரட்டிகளில் இணைப்பு கொடுத்துள்ளீர்கள்?
பதில்: வேறு எங்கும் தரவில்லை.


தேவராஜ் அர்ஸ்:
1. Is the fall of Mullai theevu end of LTTE?
பதில்: நான் அவ்வாறு கருதவில்லை. உள்நாட்டு கொரில்லா யுத்தம் அதிகரிக்கும் என அஞ்சுகிறேன்.

2. In the non-existence of LTTE can the Srilankan Tamils attain self autonomy?
பதில்: இப்போது இந்திய அரசு இலங்கை அரசை இந்த விஷயத்தில் நிர்ப்பந்திக்க வேண்டும்.

3. Will this fall of Mullai Theevu bring peace to the Srilankan Tamils?
பதில்: புலிகள் அடங்குவது முக்கியம். மற்றவை நடக்க இந்திய அரசும் முனைய வேண்டும்.

4. Why are the Indian Tamils in Srilanka treated as slaves by the Northern Srilankan Tamils?
பதில்: இது துரதிர்ஷ்டவசமானது.


அனானி (27.01.2009 காலை 05.50-க்கு கேட்டவர்):
1. தமிழக அரசு ஊழியர்களுக்கு அரசால் செய்யப்பட்ட புதிய மருத்துவ காப்பீடு திட்டம் சரியானதா?
பதில்: இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. பேப்பர் அளவில் எல்லாமே சரியாக இருப்பது போலத் தோன்றினாலும், நிஜத்துக்கும் அதற்கும் இருக்கும் வேறுபாடுகள் அனேகம் என்று அஞ்சுபவர்கள் உள்ளனர்.

2. அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யாமல் நட்சத்திர தனியாரிடம்.இது நியாயமா?
பதில்: அரசில் உள்ளவர்களுக்கு என்ன தேவையோ யார் அறிவார்?

3. அரசு மருத்துமனை வசதிகளை மேம்படுத்தாமல் தனியாரை ஊக்கப் படுத்துவது மக்களிடம் அரசுத் துறைகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை பாதிக்காதா?
பதில்: என்னமோ அரசு மருத்துவ மனைகள் நம்பிக்கைக்குரியனவாக இருப்பது போல கேள்வி கேட்கிறீர்கள்? என்னைப் பொருத்தவரை சாய்ஸை மக்களிடமே விடுவது நல்லது. ஒரேயடியாக அரசு மருத்துவ மனை என்று மட்டும் இருப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு தவறு அரசு மருத்துவமனைகளே இல்லை என்பதும்.

4. கலைஞர் எது செய்தாலும் நன்மைக்கே என எண்ணும் அரசுத் துறை ஊழியர் எண்ணம் சரியா?
பதில்: அப்படியெல்லாம் எவரும் இன்னுமா நம்புகிறார்கள் (நன்றி, வின்னர் வடிவேலு)?

5. இந்தத் திட்டத்தை ஒர் கோடி மக்களுக்கும் விரிவுபடுத்துவதில் உள் நோக்கம் இருக்கிறதா?
பதில்: ஓட்டுவேட்டை தவிர வேறு என்ன உயர் நோக்கம் இருக்க முடியும்?

6. டீவி, கேஸ், ஒரு ரூபாய் அரிசி, இலவசப்பட்டா, மருத்துவக் காப்பீடு அடுத்து?
பதில்: கலைஞர் கற்பனை வளம் மிக்கவர். வேறு ஏதாவது யோசிப்பவாரக இருக்கும்.

7. 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் திட்டம் தோல்வியா? காரணம்?
பதில்: என் வீட்டமாவைக் கேட்டேன். ஒரே ஒரு முறை கிடைத்ததாகக் கூறினார். இது வெற்றியா தோல்வியா என்பதை இதை வைத்து சொல்ல முடியாது. தமிழகம் முழுதுக்கும் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று, அடக்க விலைக்கு குறைவாக வைத்து விற்கும் எந்த திட்டமும் உருப்படாது.

8. இந்தவருடம் பொங்கல் பரிசுப் பொருள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது போல் ,வருமான வரம்பு பார்க்காமல் இலவச டீவி எல்லோருக்கும் எனும் தகவல் உண்மையா?
பதில்: அவ்வாறு தந்தால் அது அடிமுட்டாள்தனம்.

9. இந்த மக்களை கவரும் ரசவாத வித்தை முன்னால் ஜெ என்ன கூட்டணி அமைத்தாலும் தேறுவாரா?
பதில்: கஷ்டம்தான். அதிலும் ஊழல் விஷயத்தில் கலைஞருக்கும் ஜெவுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை என்பதை எண்ணும்போது கஷ்டம்தான்.

10. தமிழக காங்கிரஸ் என்ன கஜகர்ணம் போட்டாலும் அன்னை சோனியா அவர்களின் கூட்டணி முடிவில் மாற்றமில்லையே? இது எப்படி சாத்யமாகிறது? இதை ஜெ,நரசிம்மராவ் கூட்டணி காலத்தோடு ஒப்பிடவும்? முடிவு அன்று மாதிரி எதிர்மறையாக நடக்க வாய்ப்பு?
பதில்: யூ மீன் இன்னொரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற அமைப்பு? சரித்திரம் திரும்பலாம். ஆனால் அவ்வாறு திரும்பும்போது அது கேலிக் கூத்தாகத்தான் முடியும்.


சேதுராமன்:
1. தமிழ் நாட்டிலே பலர் சொன்னதையும், சிலர் சொல்ல நினைத்ததையும், நேற்று மஹிந்தா ராஜபக்சே உள்ளங்கை நெல்லிக்கனி போல சொல்லியிருக்கிறார்.
மு.க. ஸ்ரீலங்காவுக்குப் போகக் கூட வேண்டாம் உடனே தன்னுடைய கவிதை மடல் மூலம் ஒரு வேண்டுகோள் - புலித்தலைவர் பிரபாகரனை,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரணடையச் சொல்லுவாரா? லக்ஷக்கணக்கான தமிழர்கள் உயிர்களையும், உடைமைகளையும் காப்பது மு.க. கையில்தான் உள்ளது!

பதில்: அவ்வாறு கவிதை எழுதினால் அவருக்கு வோட்டு நிச்சயம் கிடைக்குமா? பிரபாகரனின் ஆட்கள் அவரையும் போட்டு தள்ளிவிட்டால் என்ன செய்வதாம்? கலைஞர் மேல் ஏன் இந்தக் கொலைவெறி ராஜபக்சேவுக்கு?


அனானி (27.01.2009 மாலை 05.59-க்கு கேட்டவர்):
1. பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே வருவதன் காரணம் யாது?
பதில்: பதிவர்கள் அதிகரிப்பு, பதிவுகள் அதிகரிப்பு. எந்தப் பதிவும் ஐந்து நிமிடத்துக்கு மேல் தமிழ்மணத்தின் முகப்பில் நிற்பதில்லை. மேலும் பலருக்கு முதலில் இருந்த ஊக்கம் குறைந்து விட்டது.

2. காவிரிப்பிரச்சனை தற்போதைய நிலை என்ன?
பதில்: ஆழ் உறக்கத்தில் உள்ளது. இப்போதைக்கு பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் மட்டங்கள் திருப்திகரமாக இருப்பதான தோர்றம் இருக்கிறது. வரும் கோடையில் சத்தம் ஆரம்பிக்கலாம்.

3. இராணுவ ஆட்சி இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு எப்போதாவது இருந்ததா? இனி வருமா?
பதில்: 1977-ல் ஒரு சிறு சாத்தியக்கூறு இருந்தது. நல்ல வேளையாக இந்திரா எலெக்‌ஷன் அறிவித்தார். இப்போதைக்கு அது வரும் சாத்தியக்கூறு இல்லை. அப்படியே நிலைமை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

4. நடக்கும் தேர்தல் ஊழல்களை பார்க்கும் போது சில பெரியவர்கள் இராணுவ ஆட்சியை ஆதரிக்கிறார்களே? உங்கள் நிலை என்ன?
பதில்: வாணலிக்கு பயந்து நெருப்பில் குதிக்கும் நிலை போன்றது இராணுவ ஆட்சியை ஆதரிப்பது.

5. தமிழக முதல்வர், பிரதமர் திடீர் உடல் நலக் குறைவு. இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இருவரும் இப்படி? இலங்கை தமிழினத்தின் எதிர்காலம்?
பதில்: அரசியலில் யாருமே இன்றியமையாதவர்கள் இல்லை. இவர்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார்.


அனானி (27.01.2009 மாலை 07.24-க்கு கேட்டவர்):
1) குமுதத்தில் பதலக்கூர் ஸ்ரீனிவாசுலு எழுதிவரும் 'ஒரு நடிகனின் கதை' - வாரிசு நடிகராய் பின் கட்சித்தலைவரானவரைக் குறிக்கிறதா? இந்த வார கதையில் வரும் காமெடி நடிகர் - பெல் நடிகர் தானே ? படம் 16 சம்பந்தப்பட்டதுதானே? முந்தைய வாரத்தில் குறிப்பிடப்பட்ட நடிகை தற்போது அரசியல் கட்சியில் இருப்பவர்தானே?
பதில்: இது ஒரு அசிங்கம் பிடித்தத் தொடர். இது பற்றி கேள்வி வேறு தேவையா? முன்பு நடிகையின் கதையை போட்டவர்கள் இப்போது நடிகனின் கதையை எழுதுகிறார்கள். கஷ்டம்டா சாமி. சரி கேள்வி கேட்டு விட்டீர்கள், என்ன செய்வது வேண்டா வெறுப்பாக குமுதம் இதழைத் தேடி எடுத்து படித்தேன். பெல் நடிகர் போல இல்லையே. வைகைப் புயல் போல அல்லவா இருக்கிறது? அவர்தானே எதிர்வீட்டை வாங்கியுள்ளார்?

2) இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் C.E.O-க்களில் 2-ஆம் இடம் கலாநிதி மாறனாமே? (முகேஷ் அம்பானிக்குப் பிறகு)? அதனால்தான் சன் பிக்சர்ஸ் வெளியீடுகளா? சன் குழுமத்திற்கு யார் ஆடிட்டர்?
பதில்: அடேங்கப்பா அவ்வளவு சம்பளமா? ஆடிட்டர் முதலில் எர்ணஸ்ட் & யங் இருந்ததாக அறிகிறேன். இப்போது யார் என்பதை விசாரித்து பார்க்கிறேன். அது சரி, அதற்காக எல்லாம் படம் எடுப்பார்களா என்ன?

3) லக்கிலுக் எழுதிய புத்தகத்தின் உங்கள் விமர்சனம் எப்போது வரும்?
பதில்: படித்தவுடன் வரும். புத்தகம் வாங்கியதோடு சரி. இன்னும் பிரிக்கக் கூட இல்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும்.


அனானி (28.01.2009 காலை 05.38-க்கு கேட்டவர்):
1. பெரியவர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாய் இருந்த காலம்? எப்படி?
பதில்: அவர் 1987-லிருந்து 1992 வரை ஜனாதிபதியாக இருந்தார். அவர் அக்காலக் கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். அவர்களில் மூவர், வி.பி. சிங், சந்திரசேகர் மற்றும் நரசிம்ம ராவ் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அவரது காலக் கட்டத்தில்தான் முதல் முறையாக மத்திய அரசில் கூட்டணி ஆட்சி வந்தது.

2. தமிழக தொழில் அமைச்சராய் இருந்த போது செய்திட்ட சாதனைகள்?
பதில்: ஜெயமோகன் எழுதுகிறார், “காமராஜ் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர்.வெங்கடராமன் இன்றைய முக்கியமான தொழில்வட்டங்களாகிய கோயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, ஓசூர் ஆகியவற்றின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தார். இந்த மையங்களே இன்றும் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கின்றன. தமிழகம் அதன் பொருளியல் வளர்ச்சிக்காக ஆர்.வெங்கடராமன் அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. குறிப்பாக பின்தங்கிய வரண்ட கிராமப்பகுதியான ஓசூருக்கு அது பெங்களூருக்கு அருகே வருகிறது என்பதனாலேயே அமைந்துள்ள சாதகநிலையை ஊகித்த அவரது செயல் தீர்க்கதரிசனம் மிக்கது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்”.

3. ஜெ.யை அவர்தான் பின்னல் இருந்து இயக்குகிறார் என்பார்களே?
பதில்: நீங்கள் அந்திமழை பதிவைப் பார்த்து அவ்வாறு கூறுகிறீர்களா? எனக்கு இது புது செய்தி. ஆகவே உடனே கருத்து கூறுவதற்கில்லை. ஒரு வேளை கலைஞருக்கும் அவருக்கும் ஆகாது என்பதால் அவர் ஜெயலலிதாவை ஆதரித்து இருக்கக் கூடுமோ என்னவோ. தெரியவில்லை.

4. காஞ்சிமடத்தோடு இவரது தொடர்பு கடைசி காலத்தில் சுமுகமாய் இருந்ததா?
பதில்: இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

5. டெல்லியில் இருந்தபோது பெரியவரை நேரில் சந்ததித்த அனுபவம் ஏதும் உண்டா? இல்லை சென்னை வந்த பிறகாவது?
பதில்: ஒரே ஒரு முறை தில்லியில் எனது உறவினர் வீட்டு திருமணத்து ரிசப்ஷனில் வைத்து பார்த்துள்ளேன். ஆனால் அருகில் சென்று பேச முயலவில்லை. அதில் ஆர்வமுமில்லை.

நவீன பாரதி:
1) மாலன் எழுதிய ‘ஜனகனமன’ படித்திருக்கிறீர்களா?
பதில்: இல்லை.

2) பாகிஸ்தானின் சுதந்திரம் ரத்தம் சிந்தாமல் கிடைத்தது என்ற கூற்று சரியானதா?
பதில்: பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி, சுதந்திரம் அதிக ரத்தம் சிந்தாமல்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு இரு தேசங்களுமே மிக அதிக ரத்தம் சிந்தி விட்டன.

3)அமெரிக்காவில் வாழும் யூதர்களின் ஓட்டுக்காகத்தான் இஸ்ரேலின் காசா பகுதி தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறலாமா?
பதில்: அவ்வளவு சுலபமாக அதை கூறிவிட இயலாது.யூதர்களது லாபி பல முனைகளில் அமெரிக்காவில் செயல்படுகிறது.

4)இலங்கைக்கு ராஜபக்‌ஷே அழைப்பையேற்று செல்லாமல் இருப்பதற்கு கருணாநிதி என்ன காரணம் சொல்லுவார்?
பதில்: என்ன காரணமாக இருந்தாலும் அது நொண்டிக் காரணமாகத்தான் இருக்கும்.

5)ஜெயலலிதா என்ன காரணம் சொல்லுவார்?
பதில்: என்ன காரணமாக இருந்தாலும் அது நொண்டிக் காரணமாகத்தான் இருக்கும்.

6) தங்கள் தந்தையாரின் பத்திரிக்கை நிருபர் அனுபவங்களை பதிவாக எழுதும் எண்ணமுண்டா? சுட்டி தயாராக உள்ளதா?
பதில்: அட, தேவலையே. நல்ல ஐடியாவாக இருக்கே. முயற்சிப்பேன்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

61 comments:

  1. 1.ராஜாஜி ஆட்சி-காமராஜ் ஆட்சி நிறை குறைகளை பட்டியலிடுக?
    2.பகதவச்சலம்-அண்ணா ஆட்சி ஒப்பிடுக?
    3.அண்ணா ஆட்சி-கலைஞர் ஆட்சி வித்தியாசங்கள் என்ன?
    4.கலைஞர் ஆட்சி-mgr ஆட்சி(first term )உங்கள் கருத்து?

    5.கலைஞர் ஆட்சி-mgr ஆட்சி(the second term )உங்கள் கருத்து?

    6.ஜெயலலிதா - கலைஞர் ஆட்சி -செய்த நல்லவைகள் -தீமைமைகள் உங்களின் மதிப்பிடு?
    7.ஸ்டாலின்- அழகிரி யார் மிகச் சரியான அரசியல் வாரீசு கழகத்துக்கு?
    8.தயாநிதி பாய்வதற்கு பதுங்குகிறாரா?
    9.சன் டீவியில் திறைமையான நிர்வாகத்தை பார்க்கும் போது தயாநிதி தமிழக முதல்வராக வந்தால் வரவேற்பீர்களா?
    10.கலைஞர் இப்படியெல்லம் யோசித்து மீண்டும் பேரனை பக்கத்தில் அனுமதித்துள்ளாரா?

    ReplyDelete
  2. இக்கேள்விகள் அடுத்த டோண்டு பதில்களுக்கான பதிவின் வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. Dondu Sir,

    A small correction. V.O. Chidambaram Pillai named his son Waleeswaran, not Wallace to express his gratitude to Judge Wallace.

    ReplyDelete
  4. //1. மகா கவி பாரதியார் பக்திநெறியிலிருந்து சித்தர் நெறிக்கு உயர்ந்தார். பின் அவரால் முக்திநெறிக்குள் செல்லமுடியாது தடுத்தது எது?
    பதில்: விவேகானந்தர் பற்றி ஒரு நிகழ்வை கூறுவார்கள். தியானம் செய்யும் இன்பத்தை அறிந்துணர்ந்த அவர் தியானத்திலேயே மூழ்க எண்ணியிருக்கிறார். அதை அவர் தனது குரு ராமகிருஷ்ணரிடம் கூற அவர் பதறிப்போய் அவர் அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது, ஏனெனில் அவரால் இந்த சமூகம் உய்ய வேண்டியிருந்தது. அவ்வாறிருக்க அவர் தியானத்தில் மூழ்குவது சுயநலமாகும் என்று அவருக்கு உணர்த்தினார். அதே போலத்தான் பாரதியும். அவர் மகாகவி எல்லாம் சரிதான். ஆனால் அவருக்கும் குடும்பம் என ஒன்று இருந்தது. வேறு கடமைகளும் இருந்தன. அதனாலேயே அவர் வணங்கும் அம்பிகை அவரை முக்திநெறிக்குள் போக விடவில்லை எனக் கருதுகிறேன்//

    கோவை ராம்நகர் ஐயப்பா பூஜா சங்கமும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபரும் இணைந்து நடத்திய " எப்போ வருவாரோ" என்ற நிகழ்வில் (11-01-2009) அன்று மரபின் மைந்தன் கலைமாமணி முத்தையா( நமது நம்பிக்கை,ரசனை மாதப் பத்திரிக்கககளின் ஆசிரியர்) அவர்களின் பேச்சிலிருந்து:--

    பாரதியார் பாண்டிச்சேரியிலிருந்த காலத்தில் சில வேண்டாதா போலி சித்தர் சாமிகளோடு தொடர்பு கொண்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதால் பட்டினத்தாரும் ,அருணகிரி நாதரும் கண்ட முக்தி நிலைக்குள் செல்ல முடியவில்லையாம்.

    ReplyDelete
  5. நன்றி ஆர்.வி. அவர்களே. பிழைதிருத்தி விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //8. அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீடகப்படுமா, ஓபாமாவால்?
    பதில்: நல்லதையே நினைப்போம். அதுவே நடக்கும் என எதிர்பார்ப்போம்.//


    கதை வேறு மாதிரியல்லவா போகிறது!

    ReplyDelete
  7. //பாரதியார் பாண்டிச்சேரியிலிருந்த காலத்தில் சில வேண்டாதா போலி சித்தர் சாமிகளோடு தொடர்பு கொண்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதால் பட்டினத்தாரும் ,அருணகிரி நாதரும் கண்ட முக்தி நிலைக்குள் செல்ல முடியவில்லையாம்.//
    ///இது பற்றி எனது நண்பரிடம் கேட்டேன். அவர் பாரதியாரில் அத்தாரிட்டி. அவர் விசாரித்து கூறுவதாகச் சொன்னார்.///

    இது பற்றியும் நண்பரிடம் விளக்கம் கேட்கவும்

    ReplyDelete
  8. நல்ல கேள்வி பதில் பகுதி, சமீபத்தில் நான் படித்து ரசித்தவை போல இருந்தன.

    ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் சிலுக்கலூர்பேட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  9. //அவரால் இந்த சமூகம் உய்ய வேண்டியிருந்தது. அவ்வாறிருக்க அவர் தியானத்தில் மூழ்குவது சுயநலமாகும் //

    அப்படி ஒன்னும் உய்யுன மாதிரி தெரியலையே!
    சாதி சண்டைகளும், மத சண்டைகளும் தான் அதிகமாயிருக்கு,
    இதுல ஆளாளுக்கு நான் தான் விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் ஒருவன்னு கருத்து சொல்ல வந்துட்டானுங்க!

    ReplyDelete
  10. //பாரதியார் பணியாற்றிய மதுரை உயர்நிலைப்பள்ளியை மத்திய அரசு நினைவுச் சின்னமாய் மாற்றும் செயலுக்கு மாநில அரசின் பாராமுகம் ஏன்?//

    ரயில்நிலையத்திலிருந்து சிம்மக்கல் செல்லும் சாலையில் தபால்நிலையம் அருகில் இருக்கிறது.
    வெளியே ஒரு பலகை இருக்கும் பாரதியார் பணியாற்றிய பள்ளி என்று, அதை தவிர வேறொன்றும் இல்லை.
    மதுரையில் இருப்பவர்களுக்கே நிறைய பேருக்கு இது தெரியாது.

    ReplyDelete
  11. //நாட்டுடைமை ஆக்கப் பட்ட பாரதியாரின் கவிதை தொகுப்பில், அவரால் எழுதப்படாத சில பிற சேர்க்கைகள் சேர்ககப்பட்டுள்ளன என்ற பாரதியாரின் பேத்தி விஜயபாரதியின் குற்றச்சாட்டு பற்றி?//

    இருக்குற மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு மதநூல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இருக்குற அரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு சட்டத்தில் மாற்றம்.

    இது மட்டும் கூடாதாக்கும்.

    ReplyDelete
  12. //வாலஸ் என்ற நீதிபதியின் உதவியோடு அதை திரும்பப் பெற்றார். தனது ஒரு பிள்ளைக்கு அவர் வாலீஸ்வரன் என்றே பெயர் வைத்ததாகவும் படித்துள்ளேன்//

    வாலஸ் என்பவர் கண்டிப்பாக ஒரு இந்துவாக இருக்கமுடியாது. வேலை கொடுத்த காரணத்துக்காக பையனுக்கு பெயர் வைத்து புதிதாக ஒரு ஈஸ்வரனை உருவாக்கி விட்டார்.

    இப்போ தெரியுதா எப்படி கடவுள்கள் உருவாகுறாங்கன்னு

    ReplyDelete
  13. ஒபாமா வென்றதில் எனக்கு மகிழ்ச்சி ஏதும் இல்லை.//

    வேறு யாரும் வென்றால் மட்டும் மகிழ்ச்சி எப்படி வரும், எதாவது சம்திங் தருவார்களா

    ReplyDelete
  14. //ஏற்கனவே பல முறை கூறியபடி அமெரிக்காவில் நான் ரிபப்ளிக்கன்களையே ஆதரிக்கிறேன்.//

    நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அந்த கட்சிக்கு எத்தனை கோடி டாலர் நட்டம் என தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  15. //அவரது கொள்கையால் இந்தியாவுக்கு நன்மை அதிகமா? தீமை அதிகமா?
    பதில்: சாதாரணமாக டெமாக்ரட்டிக்குகளால் இந்தியாவுக்கு தொல்லைகளே அதிகம்.//

    ஆமாம், புஷ் பாகிஸ்தானுக்கு பண,ஆயுத உதவி செய்து நம்மை நோண்டி கொண்டே இருக்க செய்தார்,
    இப்போது அது நடக்காமலும் போகலாம்,
    யாரும் நம்மை தொந்தரவு செய்யவிட்டால் நமக்கு எப்படி பொழுது போகும். நம்மை பொழுதை கழிக்கவிடாமல் செய்வது தொல்லை தானே!

    ReplyDelete
  16. //என்னை பொருத்தவரை அமெரிக்காவுக்கு நல்ல நிர்வாகி தேவை. //

    அங்கே போய் செட்டிலாகும் ஆசை இல்லாத போது அது எப்படி போனால் என்ன?
    இந்தியாவை பற்றிய கவலையை விட அமெரிக்காவை பற்றிய கவலையே உங்களுக்கு அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  17. //தமிழக அரசியல் கட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கையில்( ஒரு கோடி) திமுக முன்னணி உண்மையா?//

    ஒரே ஆள் நான்கு கட்சிகளின் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
    எல்லாம் பணநாயகம் தான்

    ReplyDelete
  18. //அங்கே போய் செட்டிலாகும் ஆசை இல்லாத போது அது எப்படி போனால் என்ன?
    இந்தியாவை பற்றிய கவலையை விட அமெரிக்காவை பற்றிய கவலையே உங்களுக்கு அதிகமாக இருக்கிறது.//
    அமெரிக்காவை பற்றிய கவலையை விட இஸ்ரேல் பற்றிய கவலைதான் அதிகம். அமெரிக்காவுக்கு நல்ல நிர்வாகி வேண்டும் என டோண்டு ராகவன் கூறினால் அது இஸ்ரேலுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூறுவான் அவன் என்பதை பி.பி.சி.யிலேயே செய்தியாகப் போடும் ரேஞ்சில் எல்லோருக்கும் தெரியுமே. :))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. //Why are the Indian Tamils in Srilanka treated as slaves by the Northern Srilankan Tamils?
    பதில்: இது துரதிர்ஷ்டவசமானது.//

    அடடா என்ன அக்கறை!
    உத்தாபுரத்தில் ஒரே ஏரியாவில் அடிமை தனம் இருக்கிறது. இன்னும் பல தமிழ்நாட்டில் இன்னும் பல கிராமங்களில் இந்த அடிமைதனம் இருக்கிறது, இதற்கெல்லாம் காரணம் சாதி என்னும் அரக்கன் என்றும் தெரிகிறது.
    ஆனால் உங்களுக்கு யாழ்பான தமிழன் ஏன் கொழும்பு தமிழனை மதிப்பதில்லை என்னும் விசனம்(கவலை) இருக்கிறது

    ReplyDelete
  20. //ஒரேயடியாக அரசு மருத்துவ மனை என்று மட்டும் இருப்பது எவ்வளவு தவறோ, //

    எவ்வளவு தவறு?
    ஒரு ஏழை வைத்தியம் பார்க்கும் இடத்தில் ஒரு பணக்காரனும் வைத்தியம் பார்ப்பதா?
    ஒரு கீழ்சாதிக்காரன் வைத்தியம் பார்க்கும் இடத்தில் ஒரு உயர்சாதிக்காரன் வைத்தியம் பார்ப்பதா?
    இந்த தவறை தவிர தனியார் மருத்துவமனைகளை ஆதரிக்க வேறு எதாவது காரணங்கள் உண்டா?

    ReplyDelete
  21. //வருமான வரம்பு பார்க்காமல் இலவச டீவி எல்லோருக்கும் எனும் தகவல் உண்மையா?
    பதில்: அவ்வாறு தந்தால் அது அடிமுட்டாள்தனம்.//

    வழிமொழிகிறேன்.
    கூடவே இலவச டீவியே அடிமுட்டாள்தனம் என்று சொல்லியிருந்தால் கைதட்டி வழிமொழிந்திருப்பேன்

    ReplyDelete
  22. //பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே வருவதன் காரணம் யாது?//

    பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாத மெத்தனம், தான் பெரிய எழுத்தாழன் என்னும் ஆணவம். தான் ஒரு செலிப்பிரட்டி என்று நினைக்கும் தலைக்கணம்.

    ReplyDelete
  23. //தமிழக முதல்வர், பிரதமர் திடீர் உடல் நலக் குறைவு. இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இருவரும் இப்படி?//

    நல்ல கற்பனை!
    இவர்கள் இருவரும் நல்லா இருந்த காலத்தில் மட்டும் என்னத்த சாதிச்சிட்டாங்களாம்

    ReplyDelete
  24. //ஒரே ஆள் நான்கு கட்சிகளின் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
    எல்லாம் பணநாயகம் தான்//
    அதே போல ஒரே குடும்பத்தில் பலரும் பல கட்சிகளில் இருக்கிறார்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. //கேள்வி கேட்டு விட்டீர்கள், என்ன செய்வது வேண்டா வெறுப்பாக குமுதம் இதழைத் தேடி எடுத்து படித்தேன்.//

    ப்ளேபாய் புத்தகத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதையும் வாங்கி படித்து பதில் சொல்வீர்களா?
    (சும்மா லுலுலாயி)

    ReplyDelete
  26. //புத்தகம் வாங்கியதோடு சரி. இன்னும் பிரிக்கக் கூட இல்லை. //

    உங்களின் உண்மை தன்மையை மதிக்கிறேன்

    ReplyDelete
  27. வாங்கிய புத்தகங்களில் முத்துலிங்கம் எழுதிய ஒரே ஒரு புத்தகம்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுவே இன்னும் முடிந்த பாடில்லை. லக்கிலுக்கின் புத்தகம் வாங்கியதும் அவரிடமிருந்து அதில் ஒரு ஆட்டோகிராஃப் வாங்க வேண்டுமென நினைத்தேன். மனிதர் கண்ணில் படவில்லை. பதிவர் மீட்டிங்கிற்கு கொண்டுபோக மறந்து விட்டேன்.

    எப்படியும் படித்த பிறகு விமரிசனம் நிச்சயம் உண்டு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. //பாரதியார் பணியாற்றிய மதுரை உயர்நிலைப்பள்ளியை மத்திய அரசு நினைவுச் சின்னமாய் மாற்றும் செயலுக்கு மாநில அரசின் பாராமுகம் ஏன்?
    பதில்: இது எனக்கு புது செய்தி. அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.//

    அது சேதுபதி உயர்னிலைப்பள்ளி. இப்பொது, சேதுபதி அரசு உயர்னிலைப்பள்ளி. அரசுடையாக்கப்பட்ட பள்ளி.

    இதற்குமேல் என்ன செய்யவேண்டும்?

    அருங்காட்சியகமாக்க வேண்டுமா?

    தலமையாசிரியரும் மாணாக்கருகளும் பாரதியாரை நினவுகூறும் வகையில் பள்ளியில் விழாக்கள் நடாத்தி வந்தால் போதும்.

    கேள்வி கேட்பதற்கு முன், கொஞசம் homework பண்ணுங்க.

    ReplyDelete
  29. "பாரதியும். அவர் மகாகவி எல்லாம் சரிதான். ஆனால் அவருக்கும் குடும்பம் என ஒன்று இருந்தது. வேறு கடமைகளும் இருந்தன. அதனாலேயே அவர் வணங்கும் அம்பிகை அவரை முக்திநெறிக்குள் போக விடவில்லை எனக் கருதுகிறேன்."

    கருதுங்கள். கருதுங்கள்.

    குடும்பஸ்தர் என்று பார்த்தாலும் பாரதி ஒரு பெரிய பிழையாளர்.

    நிறைய விஷயங்களில் பாரதி ஏற்றுக்கொள்ள முடியாது ஜீவன். A disaster.

    ReplyDelete
  30. "நீங்கள் சொல்லும் socalled பகுத்தறிவுவாதிகள் பெயரில் மட்டும்தான். பாரதியை பாராட்ட அவர்களுக்கு எப்படி மனம் வருமாம். அவர் பார்ப்பனர் ஆயிற்றே. "

    I saw a detailed reply posted by some one to Rajanaayaham hyperlinked by you. He has put thatreply as a separate blog entry.

    Please read that.

    ReplyDelete
  31. "காலம்தான் சொல்ல வேண்டும்"

    அது எத்தனை முறைகள்தான் சொல்லும்.

    திரும்பதிரும்ப சொல்லவேண்டுமா?

    ReplyDelete
  32. சாதாரணமாக சென்னை நகரம் திமுகவின் கோட்டை என இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அவ்வளவு எளிதாக கூறிட இயலாது என்றுதான் எனக்கு படுகிறது.’

    இராகவன் சாரைத்தவிர.

    ReplyDelete
  33. //பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாத மெத்தனம், தான் பெரிய எழுத்தாழன் என்னும் ஆணவம்.//

    வால் நீங்க மட்டும் என்னவாம். என் பல கேள்விகளுக்கு பதில் சொல்லீட்டிங்களா என்ன ? இப்பதான் “ல” சரியாச்சு ஆனா “ள” இப்போ எகிறுது. ”எழுத்தாளன்”
    “ள” சரியாக சொல்லிப் பழக சொற்கள் கீழே.
    பள்ளம்
    குள்ளம்
    வெள்ளம்
    குளம்
    சோளம்
    கோளம்
    பாளம் (பாலம் வேறு)
    வாலில்லாத தம்பி.

    ReplyDelete
  34. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாத மெத்தனம், தான் பெரிய எழுத்தாழன் என்னும் ஆணவம். தான் ஒரு செலிப்பிரட்டி என்று நினைக்கும் தலைக்கணம்//

    நீங்க இப்படியெல்லாம் அவரையே திருப்பி தாக்ககூடாது.

    ReplyDelete
  35. //நீங்க இப்படியெல்லாம் அவரையே திருப்பி தாக்ககூடாது. //

    உங்க பின்னூட்டதுகெல்லாம் இவரு பதிவாவே பதில் சொல்றாரு,
    நான் சொல்லவந்தது வேற முழுசா படிங்க!

    ReplyDelete
  36. Dear Sir,

    Congrats for 3 lakh + 50 K hits :))

    ReplyDelete
  37. 1.பணம் காசு இருப்பவன் ,இல்லாதவன் இருவர்களுக்ககு இடையே என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
    2.வரும் நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணிஅமைக்கமால்,காசு பனம் ஏதும் கொடுக்காமல்,சாதி ஓட்டு பார்க்கமால் இவர்கள் நின்றால்(வெவ்வேறு தொகுதிகளில்) யார் வெற்றிபெறுவார்கள்
    காந்தி,நேரு,இ.காந்தி,காமராஜ்,அண்ணா,mgr
    3.அமெரிக்காவில் பொதுயுடைமை கருத்து புத்தகங்களுக்கு கிராக்கியாமே?
    4.டாலர் எழுச்சி பின் வீழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதி இப்போது நிலைமை என்ன?
    5.ஆன்மீகம் இந்தியாவில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

    ReplyDelete
  38. பதில்களுக்கு மிக்க நன்றி!
    எதிர்பார்த்தது போல் ஜெயலலிதாவிடமிருந்து நழுவலான பதில் வந்து விட்டது. இன்றைய தினமலரில் டவுட் தனபாலு படித்தீர்களா?

    ReplyDelete
  39. \\சாதாரணமாக சென்னை நகரம் திமுகவின் கோட்டை என இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அவ்வளவு எளிதாக கூறிட இயலாது என்றுதான் எனக்கு படுகிறது.’

    இராகவன் சாரைத்தவிர.\\


    அம்மையாரை எப்படியும் மீண்டும் கோட்டைக்கு அனுப்ப ஆசைப்படும் சோ ராமசாமியின் பரம ரசிகர் டோண்டு அல்லவா?

    யார் என்ன திட்டமிட்டாலும் மக்கள் சக்தியின் எனும் பெரும் பேராதரவுடன் நிச்சயக்கப்பட்ட இமாலய வெற்றித் தலைவர், தமிழன்னையின் தலை மகன்,
    தமிழினத்தின் ஒரே தலைவர் ,வாழும் வள்ளுவர், இரண்டாம் ராஜேந்திர சோழன் ,நிகழ்கால தொல்காப்பியன்,உலக மகா கவிஞர் முத்தமிழ் வித்தகர் , செம்மொழிச் செம்மல், இனம் காக்கும் காவல்காரன் ,ஏழைப் பங்களான் சமூகநீதி போராளி ,உலகின் தலை சிறந்த நிர்வாகி , பொருளாதரச் சிற்பி,உலகில் வாழும் 10 கோடி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்,கலங்கரை விளக்கம், ஒளிரும் சூரியன்,பல்கலை ஞானி ,அரசியல் சாணக்கியர் நடமாடும் அர்த்த ஸாஸ்திரம் தன் வாழ்வை தமிழ் சமுதாயத்திற்காக தியாகம் செய்திட்ட தியாகச் செம்மல், நல் வழிகாட்டி, பகைவனுக்கும் அருள் செய்யம் அருட் கொடை சமூக நீதி காப்பாளர் தன் மானத் தலைவர் கலைஞர் அவர்களால் தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் மக்கள் தொண்டுகளை செய்வதற்கு சகுனித் தடைகள் ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் குடில குயுக்திகள் , செய்யும் குள்ள நரி கூனித் தந்திரங்கள் நகரமானால் என்ன கிராமமானல் என்ன

    தமிழ் சமுதாயம் இன்னொருமுறை இந்த கபட சன்யாசிகளிடம் ஏமாற மாட்டார்கள்.

    கலைஞரின் பொற்கால ஆட்சி தொடர்கிறது

    அரசுஊழியர்
    ஆனந்தத்தில்
    இல்லாதவர்க்கு
    ஈசான்போல்
    உதவிகள்
    ஊழியம்
    எல்லாம்
    ஏற்றமுடன்
    ஐயமின்றி
    ஒழுங்குடன்
    ஓங்குபுகழ்
    ஓளவைத்தமிழ்


    காக்கும் கலைஞர் வாழ்க வாழ்க வாழ்கவே

    ReplyDelete
  40. // dondu(#11168674346665545885) said...
    வாங்கிய புத்தகங்களில் முத்துலிங்கம் எழுதிய ஒரே ஒரு புத்தகம்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுவே இன்னும் முடிந்த பாடில்லை. லக்கிலுக்கின் புத்தகம் வாங்கியதும் அவரிடமிருந்து அதில் ஒரு ஆட்டோகிராஃப் வாங்க வேண்டுமென நினைத்தேன். மனிதர் கண்ணில் படவில்லை. பதிவர் மீட்டிங்கிற்கு கொண்டுபோக மறந்து விட்டேன்.//

    அது விளம்பர உலகம் பற்றிய புத்தகமா?

    ReplyDelete
  41. சோ, தினமலர், ஜெ இவர்களே முத்துகுமரன் இறப்பிற்கு காரணம். தமிழர்களை அழித்தே தீருவது என்று இவர்கள எடுத்திருக்கும் முடிவுக்கு தமிழ் மக்களே இனியிம் ஏமாறாதிர்கள். தமிழனை அழிக்க நினைப்பவனை அடித்து துரத்துங்கள்.

    ReplyDelete
  42. 1.அனைத்துக்கட்சி கூட்டம்
    2.இலங்கயில் அமைதி வேண்டி தீர்மானம்
    3.உண்ணா விரதம்
    4.மனிதச் சங்கிலி
    5.டெல்லி பயணம்
    6.சோனியாவிடம் கோரிக்கை
    7.மீண்டும் டெல்லி பயனம்
    8.சோனியாவிடம் நினைவுட்டல்
    9.சட்ட சபை தீர்மானம்.
    10. பெப்ரவரி 3 ?

    காங்கிரசுடன் உறவு முறிவு
    தமிழர் நலம் காக்கும் கட்சிகளோடு மட்டும் மீண்டும் கூட்டனி?
    தலைவரின் பிரதிநிதியின் இலங்கைப் பயணம்
    ஆட்சியை தியாகம் செய்து தேர்தலை சந்திப்பது?
    .???????????

    உதயமாகும்
    தமிழர் கூட்டணி!

    கலைஞர்,திருமாவளவன்.வைகோ,மருத்துவர் ஐயா,கார்த்திக்,நடராஜர்,பாண்டியன் ,சரத்,கல்லுரி மாணவர் அமைப்புகள்,வக்கீல்களின் அமைப்புகள், தமிழ் உணர்வு மருத்துவர்கள்,திரையுலகத்தினர்.............



    அண்ணா நாமம் வாழ்க!

    ReplyDelete
  43. இப்போதெல்லாம் உங்கள் கேள்வி பதில் பகுதியை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்க வைத்து விடுகின்றீர்கள்.
    தேவையான அளவு நக்கலுடன் கருத்துசெறிவும்,புதிய தகவல்களும் மிக்கதாய் இருக்கிறது.
    தொடர்ந்து கலக்குங்கள்.

    ReplyDelete
  44. தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர் கலைஞரின் மென்மையான மனதையும், ராஜ தந்திரத்தையும் புரியாமலும் அவர் தமிழுக்கும்,தமிழ் சமூதாயத்திண் இன்றைய உயர்ந்த நிலைக்கு ஆற்றிய பணிகளையும், செய்திட்ட தியாகங்களையும் சிறிதும் எண்ணாமல் இலங்கைப் பிரச்சனையின் உள்ள அரசாங்கச் சிக்கல் புரியாமல் அவரது ஆதரவாளர்களே உணர்ச்சி வேகத்தில் வசை பாடுவது சரியில்லை.

    குடுமபத்தில் தந்தைப் பாசம் என்பது தமிழர் பண்பாடு கலந்த ஒரு நிகழ்வுதானே!

    அதுவும் மகளின் மிது பாசம் இயற்கைதானே

    ஏதோ சுயநலம் பேணுபவர் எனும் கொடுவாள் கொண்டு தாக்கி ,அவரது உடல் நலக் குறைவைக்கூட கிண்டல் பண்ணுவது நன்றி கொன்ற செயல்.

    வரும் பெப்ரவரி 3 கழகத்தின் செயற்குழு கூடி இலங்கை வாழ் தமிழர் காக்கும் ஒரு சரித்திர முடிவினை எடுக்க தலைவர் கலைஞர் முடிவு செய்துள்ள தகவல்களை நம்புவோம்.

    ஒரு சிலரின் தீய நோக்கத்திற்கு தமிழ்ச் சமூதாயம் பலியாகி விட்டால் தந்தை பெரியாரும்,அண்ணாவும் பெரும் முயற்சி எடுத்து, கொண்டு வந்துள்ள தமிழ் சாதியின் முன்னேற்றம் எனும் கற்பகத்தரு,காமதேனுவை இன்னுமொரு 100 ஆண்டுகளுக்குப் பின்னால் தள்ளப் படும் பேராபத்து நம் தமிழர் தலைவாசலில் காத்துக்கிடக்கு.

    ஜெ. சு.சாமி,இந்து ராம்,இவர்களின் ஊதுகுழல் சோ ஆகியவர்களின் கூட்டுச் சதி புரியாமல் உள்ளவர்கள் பாவம்.


    தமிழனின் வாழ்வு பற்றிய நினைவு இல்லாதவர்கள் கலைஞரை குற்றம் சொன்னால் பரவாயில்லை. அது அவர்களது வாடிக்கை.

    நெருக்கடியான காலத்தில் நெஞ்சுக்கு நீதி தந்தவரை சந்தேகிக்கலாமா?

    பெப்ரவரி 3 நல்லது நடக்கும்

    கலைஞர் தொலைக்காட்சியில் அடிக்கடி சொல்லும் வாசகத்தை நினைவுபடுத்துங்கள் நண்பர்களே


    "தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாக தான் மிதப்பேன் ...அதி நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் , கவிழ்ந்து விட மாட்டேன்".

    ReplyDelete
  45. இளஞ்செழியன்
    கலைஞரை வைத்து காமெடி செய்வதுபோல தோன்றும் எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  46. // dondu(#11168674346665545885) said...
    இளஞ்செழியன்
    கலைஞரை வைத்து காமெடி செய்வதுபோல தோன்றும் எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    .)

    ReplyDelete
  47. உண்மையில் இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள 48 மணி நேர போர் நிறுத்தம் கழகத் தலைவரின் சதானையில்லையா?

    ReplyDelete
  48. //Anonymous said...
    உண்மையில் இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள 48 மணி நேர போர் நிறுத்தம் கழகத் தலைவரின் சதானையில்லையா?//



    கேள்வியென்னவெனில் கலைஞருக்கு 50 வருட அரசியல் அனுபவம் உண்டென்கிறார்கள். ஆனால் இப்படியான வெற்று ஏமாற்று அறிக்கைகளை நம்பக் கூடியவர் யாரேனும் உண்டென்று அவரால் நம்ப முடிகிறதா? அல்லது அட.. நம்ம தலைவராலதான் இலங்கையில் 48 மணிநேரம் போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கிறாங்க என நம்பும் தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்களா... ?

    ReplyDelete
  49. 1.நகைசுவை நடிகர் நாகேசின் படங்களில் தங்கள் மிகவும் ரசித்த படம் எது?காரணம்?பார்த்த ஆண்டு?

    2.கதாநாயகனாய்,காமெடியனாய்,கழுத்தறுக்கும் வில்லனாய்,கண்ணிர் வரவைக்கும் குணச் சித்திர நடிகராய் இவர் போல் யாரும் வருவரோ இனி?

    3.அவரின் நடிப்பில் வெளிநாடு நகைச்சுவை நடிகரின் சாயல் யாருடைதாவது இருந்ததாக சொல்ல முடியுமா?
    4. நகைசுவை நடிகர்கள் பிரபலமாய் இருக்கும் போது தேவை இல்லாத ஏதாவது ஒன்றை செய்து தங்கள் மார்க்கட்டை இழப்பது வாடிக்கையாய் உள்ளதே,ஏன்?விதியா?பணம்,பவுசு தரும் மமதையா?(என்,எஸ் கிருஷ்ணன் தொடங்கி வடிவேலு வரை)

    5.1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள நாகேசுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ கொடுக்கபடதாதற்கு முக்கிய காரணம் என்ன?( அவருக்கு அரசியல் தொடர்பு ஏது கிடையாதே?)

    ReplyDelete
  50. 6.தீக்குளிப்பு போராட்டங்கள் இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் தொடங்கியதா அல்லது சுதந்திரப் போராட்ட காலத்திலே இது உண்டா?

    7.மாணவர் போராட்டத்தால் வளர்ந்த திமுகவுக்கு இலங்கை தமிழர் நலம் காக்க நடக்கும் மாணவர் போராட்டம் கண்டு பயம் காரணமாய் கல்லுரிகளுக்கு விடுமுறை என்று வரும் குற்றச் சாட்டு பற்றி?

    8.விடுதலைபுலிகளுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவி செய்தி உண்மையா?( சைனாவின் ஆதிக்கத்தை ஆசியக் கண்டத்தில் கட்டுபடுத்த)

    9.பெட்ரொல்,டிசல் விலை ஏறும் போதெல்லாம் கட்டணம்,வாடகை ஏற்றும் ஆம்னி பஸ்,ஆட்டோ உரிமையாளர்களின் காரிய மெளனம் .அரசு தலையிடுமா?பகல் கொள்ளைக்கு சாட்சியாய் மாறுமா?

    10.இலங்கை பிரச்சனையில் கருணாநிதியின் சுகவீன காரீய மெளனத்தை, தாக்கி நடத்தப் படும் பலமான எதிர் பிரச்சாரம் அவரது நிச்சயிக்கப் பட்ட கூட்டணி தேர்தல் வெற்றியை பாதிக்குமா?

    ReplyDelete
  51. 11.தமிழ் நாட்டில் ஒரு ரூபாய் அரிசித் திட்டம் இருக்கும் போது அரிசியின் விலை ஏற்றம் நியாயமா?அரசும் கண்டு கொள்ளவில்லையே?கட்சியின் எதிர்காலத்திற்கு இது ஆபத்தில்லையா?
    12.கள் இறக்கும் போராட்டம் வெற்றி பெற்ற பின்னாலும் தொடரவில்லையே? ஏன்?(பாஜக இதை சப்போர்ட் செய்தும்)
    13.கரும்பு விவசாயிகளின் டன்னுக்கு 2000 கோரிக்கை நியாயம் தானே?அரசு தனியாரின் கொள்ளைக்கு துணை போகுவதாய் சொல்லும் செ.நல்லசாமியின்(யாது ஊரே யாவரும் கேளீர் -ஆசிரியர்-அரசலூர்-ஈரோடு மாவட்டம்)குற்றச்சாட்டு பற்றி?
    14.மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறதே, அடுத்த தலைவலி தமிழக முதல்வருக்கு?
    15.மதுரை இளவரசின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ,வளர்ப்பு மகன்(ஜெ-சசி காலம்) திருமண ஆடம்பரங்களை நினைவுபடுத்துகிறதே?அடுத்து ?

    ReplyDelete
  52. 16.ஆற்காட்டார் மின்வெட்டுக்கு 100 % விடுதலை என்கிறாரே? இது எப்படி சாத்யமாகியது?தேர்தல் ஏதும் வருதா?

    17.மதிமுக கொபசெ நாஞ்சில் சம்பத்தின் திருமங்கல தியாகம்( தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்தது) பற்றிய பேச்சை செய்த்தித்தாளில் படித்தீர்களா?

    18.சன் தொலைகாட்சி உருப்படாத திரைப் படங்களை கூட கூடுதக்ல் விலக்கு வாங்கி தனது ஊடக பலத்தாலும் ,குயுக்தி விளம்பரத்தாலும் காசு பார்க்கும் அம்பானி இசம் பற்றி?
    19.அரசு தொலைக்காட்சிக்கு செலவளித்த அரசின் பணம்?அரோகராவா?ஜெயித்தது அழகிரியா?தயாநிதியா?கலைஞரா?குபேர மகாராஜாவா?
    20.ஸ்பெக்டரம் ஊழல் குற்றச் சாட்டு இன்னுமொரு புஸ்வானமா?இடதுகளின் மெளனம் ? காம்பிரமைஸ் ?

    ReplyDelete
  53. 21.அதிமுக தலைவியின் விடுதலைப் புலி மீது தீவிர எதிர்ப்பு வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும் ,சிககலில் இருக்கும் அதிமுகவினர் நிலை?
    22.விஜயகாந்த்தும் இந்த ஒதுங்குவது காங்கிரஸ் கூடணிக்காகவா?
    23.ஒருவேளை கொரில்லாப் போர் முறையில் இலங்கை ரரணுவம் தோற்று பிரபாகரன் வென்றால்?
    24.பணவீக்கம் குறைந்தும் விலவாசி குறைய வில்லையே? இவர்களின் கணக்கு எந்த அடிப்படையில்?
    25.மென்பொருள் துறையில் பலர் சொல்லுவது போல் உள்ள தேக்க நிலையின் உண்மை நிலையென்ன?
    பலுனை ஊதி பெரிசாக்கும் நண்பர்களுக்கு கிடைப்பது என்ன?

    ReplyDelete
  54. தமிழக அரசு அனைத்துப்பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டுள்ளதே ?

    (முத்துக்குமரன் என்பவர் தீ குளித்து இறந்த விவகாரத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கேள்வி.)

    ReplyDelete
  55. இலங்கைபிரச்சனையில் கருணாநிதியின் கரங்கள் காங்கிரஸால் கட்டப்பட்டுள்ளது கண்டு வெகுண்டு பல பதிவர்கள் அவரை நிந்தித்து தொடர் பதிவுகள் பல வருவது பற்றி உங்கள் கருத்தென்ன?
    இந்த விசயத்தில் உங்கள் ஆதரவு யாருக்கு?
    மாணவர் போராட்டம் தீவிரமானால் என்னாகும்?
    பக்தவச்சலனாருக்கு 1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம்
    ஜெயலலிதாவுக்கு 2005 ல் அரசுஊழியர் போராட்டம்.
    கருணாநிதிக்கு 2009 ல் மீண்டும் மாணவர் போராட்டமா?
    வைகோவின் புகழ் மீண்டும் கூடுவதாய் தெரிகிறதா?

    ReplyDelete
  56. //வைகோவின் புகழ் மீண்டும் கூடுவதாய் தெரிகிறதா?//


    ha !ha !ha! ha !

    ReplyDelete
  57. //இந்த விசயத்தில் உங்கள் ஆதரவு யாருக்கு?//


    அப்பாவி இலங்கைத் தமிழருக்கு

    ReplyDelete
  58. இந்தியாவிலிருந்து எங்கும் எந்த மொபைலுக்கும் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி கொண்ட தொலைபேசி அழைப்பு அட்டைகளை இந்திய தொலைபேசித் துறை அறிமுகப்படுத்தப் போகிறது.

    1.ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இதற்கும் ஏதும் தொடர்பு உண்டா?
    வளர்ந்த தொலைபேசி நிறுவனங்களை வெர்சூயல்(ஸ்வான் போன்றவை) ஆபரேட்டர்கள் சூவாக செய்துவிடுவார்களா?
    2எல்லா விலைவாசியும் ஏறும் போது இப்படி போட்டி போட்டு கட்டணக் குறைப்பு கடைசியில் இந்த தொழிலை நசித்துவிடாதா?
    3.செல்பேசி சேவையில் மேலும் மேலும் ஆட்களை அனுமதிப்பது தொடர்கிறதே?சரியா?
    4.தனியார் சேவைதாரர்களும் தங்கள் பங்குக்கு ஒரு கோடி இலவச மொபைல் போன்கள் கொடுத்து கல்க்கப்போறங்க போலுள்ளதே?
    5.அரசு நிறுவனத்தின் வருமானத்தை அரசே குறைக்க முலவது போலிருக்கிறதே?
    6.தந்தையே தன் மகனையே கொல்லும்
    செயலல்லவா?
    7.தனியாருக்கு இப்படி மக்கள் செல்வத்தை தாரைவார்ப்பது பேராபத்தல்லவா?
    8.அரசு நிறுவனம் இல்லாவிட்டால் இந்த பகாசூரர்கள் கட்டணத்தை அநியாயத்துக்கு ஏற்றிவிடமாட்டார்களா?(ஆம்னி பஸ்கார்ர்களே இதற்கு சாட்சி)
    9.வெளிநாட்டு தொலை தொடர்புச் சேவையில்(ஐஎஸ்டி) அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தில்லயா?
    10.பல பயங்கிரவாதச் செயல்களுக்கு தனியார் செல்பேசிகள் பயன்பட்டதை பார்த்தபிறகும் இப்படி செய்வதுவிபரீதம் இல்லையா?யானை தன் தலையில் மண்ணை போடப் போகிறதா?

    ReplyDelete
  59. டோண்டு பதில்கள் பதிவுக்கு எனது கேள்விகள்:

    1. முதலில் ஜெயலலிதாவுடன் நட்பு ரீதியாக சந்திப்பு, பின்பு ஜெயலலிதா ஆதரவு ஆண்டு விழா பேச்சு, அடுத்து ' எங்கே பிராமணன் ' தொலைக்காட்சி தொடர் ஜெயா டிவியில் .
    இந்த மூன்றுக்கும் வியாபார ரீதியான யுக்தி இருப்பது போல எனக்கு தெரிகிறது. உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா? ( சோ அவர்களைப் பற்றித்தான் )

    2. சோ அவர்கள் சுயநலமில்லா அப்பழுக்கற்ற தேசியவாதியா?

    ReplyDelete
  60. டோண்டு பதில்கள் நான் விரும்பி படிக்கும் பதிவு. அது நீங்களும் விரும்பி இடும் பதிவாக இருப்பின், ஒரு suggestion.

    நீங்களும் 'சோ கேள்வி பதில்கள்' போல் சிறந்த கேள்வியை தேர்வுசெய்து குறிப்பிடலாமே.
    சிறந்த கேள்விவுக்கு நீங்கள் பரிசு ஒன்றும் அளிக்கத் தேவையில்லை. இருந்தாலும் சிறந்த கேள்வியை கேட்ட நபருக்கு அது ஒரு சின்ன சந்தோசத்தை அளிக்கும். உங்களது பதிவை தினம் படித்து கேள்வி கேட்பவர்களுக்கு encouraging-ஆக இருக்கும். மேலும் உங்கள் பதிவுக்கு இன்னும் சில கூடுதல் கேள்விகள் வரக்கூடும். அக் கேள்விகள் உங்களின் பாராட்டைப் பெற இன்னும் தரமுள்ளவையாக வரக்கூடும்.

    ReplyDelete
  61. //டோண்டு பதில்கள் நான் விரும்பி படிக்கும் பதிவு. அது நீங்களும் விரும்பி இடும் பதிவாக இருப்பின், ஒரு suggestion.

    நீங்களும் 'சோ கேள்வி பதில்கள்' போல் சிறந்த கேள்வியை தேர்வுசெய்து குறிப்பிடலாமே.
    சிறந்த கேள்விவுக்கு நீங்கள் பரிசு ஒன்றும் அளிக்கத் தேவையில்லை. இருந்தாலும் சிறந்த கேள்வியை கேட்ட நபருக்கு அது ஒரு சின்ன சந்தோசத்தை அளிக்கும். உங்களது பதிவை தினம் படித்து கேள்வி கேட்பவர்களுக்கு encouraging-ஆக இருக்கும். மேலும் உங்கள் பதிவுக்கு இன்னும் சில கூடுதல் கேள்விகள் வரக்கூடும். அக் கேள்விகள் உங்களின் பாராட்டைப் பெற இன்னும் தரமுள்ளவையாக வரக்கூடும்.//



    மிக நல்ல யோசனை.சிறந்த கேள்விக்கு நட்சத்திரம் கொடுக்கலாம் (***).இது கேள்வி பதில் பதிவை மேலும் சுவையாக்கும்.
    நாளைய பதிவிலே(05/02/009)சோதனை அடிப்படையில் முய‌ற்சிக்கலாமே.

    ReplyDelete