நிரந்தர பக்கங்கள்

8/21/2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். விவகாரம்

உமாசங்கர் நேர்மையான அதிகாரி என டோண்டு ராகவன் சொல்லித்தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. அது வெள்ளிடைமலை.

அப்படிப்பட்டவரை, “தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டார்” எனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

ஒரு விஜயகாந்த் படத்தில் அவர் ஐ.ஏ.எஸ். ஆக வருவார், நேர்மையான அதிகாரியாக இருப்பார். படத்தின் பெயர் மறந்து விட்டது, யாராவது சொல்லுங்கப்பூ. நிற்க.

விஜயகாந்த்துக்கு அப்படத்தில் நடந்தவைக்குக் குறையாத அளவுக்கு உமாசங்கருக்கு நடந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.

ஆனால் அரசு அவர் மேல் எழுப்பிய குற்றச்சாட்டும் சீரியசானதே. அது உண்மை என கோர்ட் ஏற்றுக் கொண்டால், உமாசங்கர் அவர்களின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடுமே. இது பற்றி யோசித்ததில் எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றன.

குறிப்பிட்ட அந்தச் சான்றிதழை எப்போது கொடுத்தாராம்? கண்டிப்பாக 20 ஆண்டுகளுக்கும் முன்னால்தான் இருக்க வேண்டும். அப்போதே அதை ஏன் பார்க்கவில்லையாம்? இன்னொரு விஷயமும் உண்டு. இம்மாதிரி விஷயங்களைக் கையில் எடுக்க காலவரம்பு என ஒன்று இருக்க வேண்டுமே. அது இந்தக் கேசில் கண்டிப்பாக தாண்டப்பட்டிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆகவே இந்தக் குற்றச்சாட்டே காலாவதியானது எனவும் நினைக்கிறேன்.

எதற்கும் இருக்கட்டும் என வழக்கறிஞர் பதிவர் நண்பர் சுந்தரராஜனுக்கு ஃபோன் போட்டு கேட்டேன். அவரால் சட்டென பதில் கூற முடியவில்லை. இம்மாதிரியான மத்திய அரசு சேவை விதிகளையே கையாளும் எக்ஸ்பர்ட் வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களிடமிருந்து கேட்டுச் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு பாரதிராஜா படத்தில் சரிதா லட்சுமி பொய் சர்டிஃபிகேட் கொடுத்து கோட்டாவில் பதவி பெறுவார். அப்படத்தைப் பார்த்ததில்லை. பெயரும் மறந்து விட்டது. (கதாநாயகி நடிகையின் சரியான பெயரைக் குறிப்பிட்டு, படத்தின் பெயரையும் ‘ஒரே ஒரு கிராமத்திலே” எனக்கூறிய கோபிக்கு நன்றி) 

சட்டம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை உமாசங்கரின் கேஸ் தோற்றது என்றால் நீதிக்குத்தான் அவமானம். அரசியல் ஊழலுக்கு ஏற்றமாகிவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

  1. \\ஒரு பாரதிராஜா படத்தில் சரிதா பொய் சர்டிஃபிகேட் கொடுத்து கோட்டாவில் பதவி பெறுவார். அப்படத்தைப் பார்த்ததில்லை. பெயரும் மறந்து விட்டது.\\

    லக்ஷ்மி நடித்து 'ஒரே ஒரு கிராமத்திலே' என்ற படமும் உள்ளது. லக்ஷ்மி, பொய் சொல்லி சிவில் சர்வீஸ் வேலை வாங்குவார். முழுக் கதையும் நினைவில்லை.

    ReplyDelete
  2. Vijayakanth's movie is TamizhSelvan

    ReplyDelete
  3. உமாசங்கர் என்னதான் நேர்மையான அதிகாரியாக இருந்தாலும், சாதிக்கு அப்பாற்பட்டு எல்லோருக்காகவும் அவர் பாடுபட்டிருந்தாலும் - கடைசியில் சாதி தான் இப்போது அவருக்கு துணை நிற்கிறது. நீதி கேட்கிறது.

    சாதிதவிர மற்றவை எதுவும் துணை வராதது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    ReplyDelete
  4. விஜயகாந்த் நடித்த அந்தப் படம் "செந்தமிழ் செல்வன்"

    ReplyDelete
  5. IAS உமா சங்கரும் சலுகைகள் குறித்த சிந்தனையும் (
    http://www.virutcham.com/?p=3505)

    ReplyDelete
  6. //கடைசியில் சாதி தான் இப்போது அவருக்கு துணை நிற்கிறது. நீதி கேட்கிறது.//--அந்த சாதிதான் அவரை இன்று கவுத்து விட்டிருக்கிறது.

    //சாதிதவிர மற்றவை எதுவும் துணை வராதது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா?//---அவருக்கு பிரச்சினை வந்ததே அந்த சாதியால்தானே... சாதி என்று ஒன்று மட்டும் அவரிடம் இல்லாமல் இருந்திருந்தால்... ஒரு பிரச்சினையும் இல்லையே.

    எனவே, 'நாம் சாதியற்ற ஒரு மதத்திற்கு மாறினால் என்ன' என்ற முடிவை அந்தக்கால அகண்ட பாரத இந்தியாவில் எடுத்தவர்கள் அப்போதைய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நாற்பது சதம் பேர்...

    அவர்கள் எல்லாம் இன்றைய இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இலங்கையிலுமாக கிட்டத்தட்ட நாற்பது கோடி பேர்களாக இன்று சாதியற்ற சமூகமாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  7. ஆமாம். ராஜாத்தி அம்மாள் இரண்டு தரம் உமா சங்கரை வீட்டுக்கு வரச்சொல்லி கான்டிரக்ட் விஷயமாகப் பேசினாரே அதை உமாசங்கர் செய்திருந்தால் இவரும் கொஞ்சம் கல்லா கட்டியிருக்கலாமே. குறைந்த பட்சம் தினகரன் என் பெரியப்பா என்றாவது சொல்லியிருந்தால் பெரிய இடத்து உதவி கிடைத்திருக்கும்.- சோணகிரி

    ReplyDelete
  8. டோண்டு சார்! உமா சங்கருக்கு ஆதரவாக வினவு தளம் கட்டுரை ஒன்றும் போடவில்லை போல இருக்கிறதே! அல்லது ஏதாவது மூலையில் எழுதி இருக்கிறார்களா? கவனித்தீர்களா?

    ReplyDelete
  9. @hayyram

    வினவிலும் அவர் பற்றி வந்துள்ளது, ஒரு மாதத்துக்கு முன்பேயே.

    பார்க்க: http://www.vinavu.com/2010/07/22/umashankar-savukku/

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. விஜயகாந்த் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்த அந்த படம் “தமிழ் செல்வன்”.. டைரக்‌ஷன் பாரதிராஜா....

    ReplyDelete
  11. 1. நேர்மையான அதிகாரி என்றால் எந்த விதத்தில்?!

    2. 20 வருடமாகட்டும் 200 வருடமாகட்டும். தவறு என்று செய்திருந்தாலும் தவறு தானே? இன்னமும் சொல்லப்போனால் ஆரம்பத்திலேயே இப்படி கோல்மால் செய்தவரை (ஒருவேளை செய்திருந்தால்) எப்படி நேர்மையானவர் என்று ஒப்புக் கொள்கிறீர்கள்?

    3. குற்றம் இல்லையென்றால் கோர்ட்டில் நிருபிக்கட்டுமே. யார் வேண்டாம் என்று சொன்னது.

    4. சுடுகாட்டு ஊழல் வழக்கில் கடைசி இரண்டு தடவையாக கோர்ட்டுக்கு வரவில்லையாம். அதும் ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் கோர்ட்டுக்கு வராததற்கு காரணம் கூட சொல்லவில்லையாம்.

    இது தான் ஒரு ‘நேர்மையான’ அதிகாரி நம் நீதித் துறைக்கு கொடுக்கும் லட்சியம்.

    இதுவே இவர் பதவியில் இருந்த போது இவரது கீழதிகாரி இவர் சொன்னதை அலட்சியப்படுத்தியிருந்தால் என்ன காரணம் என்று சொல்வதற்காவது அவகாசம் கொடுத்திருந்திருப்பாரா?!

    ReplyDelete
  12. கவலை இல்ல.. விஜயகாந்த் அடுத்த முதல்வரா வருவாரு.. உமா சங்கரு கேஸ தீர்த்து வைப்பாறு..

    என்றும் ஜாதி வெறியுடன்,
    குருள்

    ReplyDelete
  13. //வினவிலும் அவர் பற்றி வந்துள்ளது,// இப்போது படித்துவிட்டேன். தகவலுக்கு நன்றி டோண்டு சார். நீங்க ரொம்பவே அப்டேட்டா இருக்கீங்க.

    ReplyDelete
  14. ஹிந்து மதத்திலிருந்து புறமதம் தழுவிய பட்டியல் சாதியினருக்கு எஸ்.சி. சலுகைகள் கிடையா என்பதே சட்டம்.
    இந்தச் சட்டத்தின் முனையை முறிப்பதற்காக, ஜோசஃப் கிருஷ்ணமூர்த்தி ஜே. கிருஷ்ணமூர்த்தி என்றும் ராபர்ட் சரவணன், ஆர். சரவணன் என்றும் முகமூடி அணிந்து பதவியும், பதவி உயர்வும் பெற்று இந்திய அரசுப் பணியிலும், மாநில அரசுப் பணியிலும் உள்ளவர்கள் ஏராளம்! ஏராளம். பல நாயுடுமார்கள் தங்களைக் காட்டுநாயக்கர் என்று பொய் சொல்லி பட்டியல் பழங்குடிச் சான்றிதழ் பெற்றுப் பதவி வகிப்பதும் நமது மாநிலச் சமூகநீதி!
    பொய்ச் சான்றிதழ் தந்து பதவி வகிப்பவர்களைப் பிடிக்கத் தனி சி.பி.ஐயே வேண்டியிருக்கும்.
    இதுதான் உண்மை.

    ReplyDelete
  15. Anonymous said...

    // //பல நாயுடுமார்கள் தங்களைக் காட்டுநாயக்கர் என்று பொய் சொல்லி பட்டியல் பழங்குடிச் சான்றிதழ் பெற்றுப் பதவி வகிப்பதும் நமது மாநிலச் சமூகநீதி!// //

    காட்டு நாயக்கர் என்று நாயுடு வகுப்பினர் கூறுவதையும், மதம் மாறியோரையும் ஒப்பிடுவது தவறு. இது ஒரு சாதி மற்றொரு சாதியின் பெயரைப் பயன்படுத்தும் குற்றச்செயல். சாதி மாறும் உரிமை எவருக்கும் இல்லை. அது பிறப்பால் வருவது. ஆனால், மதம் அப்படி அல்ல. மதம் நம்பிக்கை மற்றும் மனசாட்சியை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பிற்கும் அதற்கும் தொடர்பேதுமில்லை.

    மதம் மாறுவதால், சாதி தானாக மாறிவிடாது. அரசியல் அமைப்பின் பிரிவு 25 எந்த மதத்தையும் தழுவ முழு உரிமை அளித்துள்ளது. மதம் மாறுவதால் சாதி அடிப்படையிலான உரிமைகள் இல்லை என்பது இதற்கு எதிரானது. அது "மத சுதந்திரத்தை" மறுக்கும் செயல்.

    சில தலைமுறைகளுக்கு முன்பு மதம் மாறியோர், இப்போது திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பினால் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ன? மதத்தையும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் இணைத்து குழப்புவது ஒரு பார்ப்பனச் சதி. இந்து மதத்தை காப்பாற்றும் ஒரு கேவலமான தந்திரம்.

    ReplyDelete
  16. "குறிப்பிட்ட அந்தச் சான்றிதழை எப்போது கொடுத்தாராம்? கண்டிப்பாக 20 ஆண்டுகளுக்கும் முன்னால்தான் இருக்க வேண்டும். அப்போதே அதை ஏன் பார்க்கவில்லையாம்? இன்னொரு விஷயமும் உண்டு. இம்மாதிரி விஷயங்களைக் கையில் எடுக்க காலவரம்பு என ஒன்று இருக்க வேண்டுமே. அது இந்தக் கேசில் கண்டிப்பாக தாண்டப்பட்டிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆகவே இந்தக் குற்றச்சாட்டே காலாவதியானது எனவும் நினைக்கிறேன்"


    எனக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது. ஆனால் பொதுவாக சிவில் கேஸ்கள்/ குற்றங்களுக்கு ஒரு கால வரம்பு இருக்கு. கிரிமனல் கேஸ்களுக்கு காலவரம்பு இல்லை.

    உதாரமாக சில கொலை கேஸ்கள் 40-50-60 வருடங்கள் பின்பு கூட புதிய தடயங்கள் கிடைத்ததால், மறுபரிசீலனை செய்யப்பட்டு, சிலர் நீதி முன் நிறுத்தர்ப்பட்டு, சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

    ஆனால் ஒருவர் “பொய்” சர்டிபிகேட் , அதாவது கிருத்துவன் இல்லை, இந்துதான் என சர்டிபிகேட் கொடுத்தால் எந்த பாகுபாடில் வரும் என தெரியவில்லை. மேலும் ஒருவர் “இந்து இல்லை” என இந்தியாவில் நிரூபிப்பது ரொம்ப கஷ்டம்.

    ஆமாம், ஒருவர் ஒன்றுக்கு மேல் பெண்டாட்டிகளை வைத்திருந்தால், குற்றம் என கேள்விப்பட்டேன். சில பிரபலங்கள் அப்படி கூட செய்கின்றனரா?

    ReplyDelete
  17. /சில தலைமுறைகளுக்கு முன்பு மதம் மாறியோர், இப்போது திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பினால் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ன? மதத்தையும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் இணைத்து குழப்புவது ஒரு பார்ப்பனச் சதி. இந்து மதத்தை காப்பாற்றும் ஒரு கேவலமான தந்திரம்./

    ippodhu idhai seivadhu yaar?

    ReplyDelete
  18. ஒரு மனைவிக்கு மேல் ஒரு ஹிந்துவுக்கு இருந்தால் அது சட்டப்படி குற்றம் தான். ஆனால் அது "non cognizable offence" என்ற பகுதியில் வருவதால் முதலில் மணந்த மனைவி புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் நாட்டின் தலைமை அமைச்சரே ஒரு தடவைக்குமேல் மணம செய்துகொண்டவர்தானே!

    ReplyDelete
  19. Offences with punishment of less than 3 years are called non-cognizable, they are bailable and police can not arrest without warrant.

    Offences with punishment of more than three years are called cognizable, they are non bailable and police can arrest without warrant.

    ReplyDelete
  20. உமாசங்கரின் அப்பா, ஒரு ஹிந்து-தலித்(SC),

    அம்மா ஒரு கிறிஸ்துவ-தலித் (BC)

    பள்ளிகூடத்தில் கிறிஸ்துவ-தலித் (BC) என்று குடுத்து விட்டார்கள்.
    பின் அவர் ஹிந்து கோவிலில் தன் தந்தையின் ஹிந்து- மததுக்கு மாறி விட்டார்- (SC)

    அப்போதே இந்த விசியத்தை UPSC -க்கு சொல்லி விட்டார், இதை UPSC அங்கீகரித்து-ஏற்று கொண்டு விட்டது !!!

    -tsekar

    ReplyDelete
  21. ///சாதிதவிர மற்றவை எதுவும் துணை வராதது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா? ///
    அய்யா அருள்... ஸ்பெக்டிரம் ஊழலில் பாதிக்கப் பட்டால் அய்யகோ அவர் தலித் என்பதும்.. அதுவே இவர்கள் குடும்ப சண்டையில் நடந்த ஊழலை வெளியே கொண்டு வந்தால் தலித்தானாலும் போடு கேசை என்பதை நீங்கள் யோசித்ததுண்டா....?

    ReplyDelete
  22. /மதம் மாறுவதால், சாதி தானாக மாறிவிடாது. அரசியல் அமைப்பின் பிரிவு 25 எந்த மதத்தையும் தழுவ முழு உரிமை அளித்துள்ளது. மதம் மாறுவதால் சாதி அடிப்படையிலான உரிமைகள் இல்லை என்பது இதற்கு எதிரானது. அது "மத சுதந்திரத்தை" மறுக்கும் செயல்.

    சில தலைமுறைகளுக்கு முன்பு மதம் மாறியோர், இப்போது திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பினால் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ன? மதத்தையும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் இணைத்து குழப்புவது ஒரு பார்ப்பனச் சதி. இந்து மதத்தை காப்பாற்றும் ஒரு கேவலமான தந்திரம். /

    Who is doing this now? Whom are you blaming? Why do'nt you answer?

    ReplyDelete