2/28/2010

சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா - 27.02.2010 - பகுதி - 1


சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மையும் சேர்ந்து நடத்திய இந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை நியூ உட்லேண்ட்ஸில் நடந்தது. நிகழ்ச்சி பற்றி நான் சாரு நிவேதிதாவின் வலைப்பூவிலிருந்து அறிந்து கொண்டேன். ஏற்பாடு செய்த ஹால் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. திடீரென அழைப்பு உள்ளவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகமும் வந்ததில் நண்பர் ஒருவரிடமிருந்து மனுஷ்யபுத்திரனின் நம்பர் பெற்று அவருக்கு ஃபோன் செய்து அழைப்பு எல்லோருக்குமே என்பதை உறுதி செய்து கொண்டேன்.

எனது கார் உட்லேண்ட்ஸை சென்றடைந்தபோது மணி சரியாக 06.30. நல்ல வேளையாக இடம் இருந்தது. முதல் இரண்டு வரிசைகளுக்கு பின்னால் காமெராக்கள் நிறுவப்பட்டிருந்தன. அவற்றுக்கு பின்னால் உள்ள நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் காமெராக்காரர்களது முதுகுகளை மட்டும் பார்க்க முடிந்தது.

முதலில் சாரு நிவேதிதாவை பார்த்தேன். அவருடன் பேசினேன். அவரது வலைப்பூ வைரஸ் தாக்குதலால் பீடிக்கப்பட்டு பழைய கோப்புகள் அழிக்கப்பட்டதை குறித்தும் கேள்விகள் கேட்டதில் கோப்புகள் நகல் உள்ளதாகவும் சீக்கிரம் வலையேற்றப்படும் என்றும் தெரிவித்தார். பேசாமல் பிளாக்ஸ்பாட் இலவச சேவைக்கு மாறிக்கொள்வதே நலம் என்று கூறிவிட்டு எனது இடத்தில் சென்று அமர்ந்தேன். உடனேயே நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.

அதிஷா, லக்கிலுக், ஓகை, சிமுலேஷன் (இப்பதிவில் உல்ள படங்களை அனுப்பியவர். அவருக்கு நன்றி) ஆகிய வலைப்பதிவர்கள் வந்திருந்தனர்.

முதலில் எல்லோரையும் வரவேற்று பேசியது மனுஷ்யபுத்திரன். சுஜாதாவை தங்களை போன்ற எழுத்தாளர்களின் ஆசான் என அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரது கனவையும் உருவாக்கிய மாபெரும் கலைஞர் அவர். அவரை கொண்டாடும் அளவுக்கு ஒரு எழுத்தாளரை கொண்டாடுவது அபூர்வம். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவரது இருப்பு வந்திருக்கிறது. இன்னும் வலிமை கொண்டு செல்கிறது. சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மையுமாக சேர்ந்து சுஜாதா நினைவு விருதுகளை அளிக்கத் துவங்குவது பற்றியும் கூறினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, இணையம், சிற்றிதழ் ஆகிய தலைப்புகளில் அவை வழங்கப்படும் என்று கூறினார். இவ்வாண்டுக்கான விருதுகளுக்கான பரிந்துரைகள் மார்ச் 31 வரை ஏற்கப்படும் என்றும் அவற்றின் முடிவுகள் சுஜாதாவின் பிறந்த நாளான மே 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிறகு ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர்.

தூர்தர்ஷனின் முன்னாள் டைரக்டர் நடராஜன்
சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனது 40-ஆண்டுகால பரிச்சயத்தை அவர் எடுத்துரைத்தார். பல்வேறு நிலைகளில் அவருடன் உரையாடி இருக்கிறார். அவர் கடவுளின் அரிய படைப்பு. 1998 தான் சான் ஃப்ரான்சிஸ்கோ சென்றபோது அங்கிருந்து அவருடன் தொலைபேசியதாகவும், என்ன புத்தகம் வாங்கலாம் என அவரிடம் கேட்டதாகவும், புகைப்படம் எடுத்தல் பற்றிய ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்ததாகவும், அதை வாங்கி பிறகு ஊருக்கு வந்ததும் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் அதை தந்ததாகவும் கூறினார். ஆனால் சுஜாதாவோ தன்னிடம் ஏற்கனவே அந்த புத்தகம் இருப்பதாகவும், அதை நடராஜன் தனக்காக வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அதை சிபாரிசு செய்ததாகவும் கூறினார்.

அவரது ஒரு தொடர்கதை வாய்மையே சிலசமயம் வெல்லும் என்னும் தலைப்பில் வந்து, பிறகு புத்தகமாகவும் வந்ததாம். அதுவே தூர்தர்ஷனில் வாரத் தொடராக வந்தபோது மாதர் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து, அதை தான் சமாளித்த விதத்தை சுஜாதா சிலாகித்ததையும் குறிப்பிட்டார். மேலும், சுஜாதா எங்கு சென்றாலும் சோபித்தார்.

டைரக்டர் சங்கர்
சிறுவயதிலிருந்தே அவரது புத்தகங்களை படித்து ரசித்திருக்கிறார். அவர் புத்தகங்களை படிக்கும்போது ஒரு படமே பார்ப்பது போலிருக்கும். அப்படி தான் ரசித்த அவரே தனது படங்களுக்கு கதை எழுதுவார் என்பதை அக்காலத்தில் தான் நினைத்தும் பார்த்ததில்லை என கூறினார். இந்தியன் படத்திலிருந்து ஆரம்பித்து தனக்காக படங்களில் பணியாற்றியதை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். சுவையான அவரது வசனங்களுக்கான சில சாம்பிள்கள் தந்தார்.
1. பிற நாடுகளில் கடமையை மீறத்தான் லஞ்சம் வாங்குகின்றனர், ஆனால் இங்கோ கடமையை செய்யவே லஞ்சம்.
2. தப்பிலே ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல அது என்ன பனியன் சைஸா?
3. தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: நான் என்ன போப்பாண்டவரா?
4. அம்பி டிடி.ஆரிடம்: அட்ஜஸ்ட் பண்ணி பண்ணித்தான் நாடே இந்த நிலைமையில் இருக்கு.
5. அன்னியன் நேரு ஸ்டேடியத்தில்: இப்போ நீங்க பார்த்த சீன்கள் நியூஸ் ரீல் இல்லை, நம் நாடு தப்ப விட்ட விஷயங்கள பற்றிய தொகுப்பு.
6. (இந்தியாவில்) எல்லாம் புதுசா வந்துடுச்சு, ஆனா இது மட்டும் (பிச்சை எடுப்பது) அப்படியே (பழசா) இருக்கு.
7. தாடி மீசையுடன் வந்த நாயகனை பார்த்து: என்ன லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்கே.

ஸ்டோரி விவாதங்களில் தான் சொன்ன பல ஐடியாக்களை அவர் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே எழுதியிருந்ததை ப்லமுறை காட்டியுள்ளார். ஒரு சீனுக்கு ஒரு பக்கத்துக்கு மேல் எழுத மாட்டார். சினிமா ஒரு விஷ்வல் மீடியா என்பதை புரிந்தவர்.

எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தினார்.

பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி:
அவர் பேசியதை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஹாலின் அகௌஸ்டிக்கிலும் பிரச்சினை. இருப்பினும் கூர்ந்து கேட்டதில் புரிந்தவற்றில் இருந்து எழுதுபவை:
சுஜாதாவை அவரது தில்லி நாட்களிலிருந்து தெரியும் என்றார். கணையாழி பத்திரிகையில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் அவர் எழுதியதை நினைவு கூர்ந்தார். அவரது பிரசித்திபெர்ற நாவலான நைலான் கயிறு முதலில் குருக்ஷேத்திரம் என்னும் தலைப்பில் சிறுகதையாக வந்ததையும் குறிப்பிட்டார். தான் நாடகங்கள் எழுத அவர் தூண்டுகோலாக இருந்தார் என்றும் சொன்னார். பல வளரும் கவிஞர்களை அடையாளம் காட்டியதையும் சொன்னார். எழுத்தாளர்களை நாம் மறக்கலாகாது என்றும் குறிப்பிட்டார்.

பெண்டாமீடியா சந்திரசேகரன்
1995-லிருந்து அவருடன் பழக்கம். தனது பல அனிமேஷன்களில் அவரது வசனங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அபாரமாக இருந்ததாக கூறினார். ஓப்பன் சோர்ஸ் மர்றும் ப்ரொப்ரைட்டரி மென்பொருட்கள் பற்றி அவருடன் செய்த விவாதஃங்களையும் குறிப்பிட்டார் அவர். தனக்கும் சுஜாதாவுக்கும் ஒரே நாளில் (மே 3) பிறந்த நாள் என குறிப்பிட்டார். தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் புத்தகங்கள் பரிசாக தந்ததாகவும் அவை எல்லாவர்றையும் தான் பாதுகாத்து வருவதாகவும் கூறினார் அவர். தனது வேலை சம்பந்தமாக தான் எடுத்த முடிவுக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் பேச அவர் மட்டும் தனக்கு ஆதரவாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

சிவாஜி படக்கதை என்ன என தன்னை இவர் மட்டுமே கேட்கவில்லை என்று பாராட்டிவிட்டு தனக்கு அப்படத்தின் வெளியீட்டுக்கு சற்று முன்னால் அதன் கதையை கூறியதையும் சொன்னார். அவர் நுழைந்த எந்தத் துறையிலும் வெற்றிகரமாக செயல்பட்டதாக கூறினார்.

ராஜீவ் மேனன்
தனக்கு கண்ணளித்த ஆப்டீஷியன் அவர் என இவர் குறிப்பிட்டார். அவரை தனது நண்பராகவும் தந்தையாகவும் கருதியாகக் கூறினார். விக்ரம் படத்தின்போது அவரோடு ஏற்பட்ட காண்டாக்டுகளை சொன்னார். எல்லா வேலைகளுக்கும் நேரத்தை ஒதுக்கினார் என்பதை மேற்கோள்களுடன் கூறினார். மனதால் எப்போதும் இளமையாக தன்னை உணர்ந்தவர், தான் செய்ய விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்ற அவரால் நேரம் ஒதுக்க முடிந்தது.

அவரது தமிழ் எழுத்துக்களில் ஒரு ரிதம் இருந்தது. எல்லா இளைஞர்களுக்கும் அவருக்கான access உருவானது. கவிஞர் W.H. Auden-னின் வரிகளான no one anywhere wants to be forgotten, not even a man about to be hanged என்னும் அமரத்துவம் பெற்ற வரிகளை “மரணத்தைவிட மோசம் மறக்கப்படுவதே” என்ற வாக்கியத்தில் மிக அழகாக கூறியதை அவர் சிலாகித்தார். ஆனால் சுஜாதைவை அம்மாதிரி யாரும் மறக்க மாட்டார்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் இவ்வளவு பேர் வருவதே அதை நிரூபிக்கிறது. தமிழ் ரசிகர்கள் இருக்கும் வரை அவர் மறக்கப்பட மாட்டார்.

(தொடரும்)

சச்சினுக்கு வேண்டாதவர் அவரை அப்ரைசல் செய்தால்

என் கணினி குரு முகுந்தன் அனுப்பிய மின்னஞ்சலை வைத்து இப்பதிவை இடுகிறேன்.

சச்சின் வேலை செய்யும் கிரிக்கெட் டீம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி என வைத்து கொள்வோம். அதில் ஆண்டுக்கொரு முறை வரும் அப்ரைசல் சமயத்தில் தலைமை நிர்வாகியின் மனைவியின் அண்ணியின் தம்பி பிங்களனுக்கு பிரமோஷன் தருமாறு தலைமை நிர்வாகிக்கு பிரஷர் தரப்படுகிறது. ஆனால் சச்சின் ஒருவர்தான் அதிக தகுதியானவர். அவரை எப்படி கழித்து கட்டலாம் என ஆலோசனை கேட்க, பெர்சனல் ஆஃபீசர் சகுனிக்கு அவர் மனைவி மந்திரை கூறிய ஆலோசனையின்படி எழுதப்பட்ட அப்ரைசல் இதோ.

பெயர்: சச்சின் டெண்டுல்கர் (உயர் சாதியை சேர்ந்தவர் - ஒருவேளை பார்ப்பனராகக் கூட இருக்கலாம்)

கடைசி பிராஜக்ட் ரிசல்டுகள் 200 ரன்கள்/ 147 பந்துகளில்/ 25X4 / 3X6 / 12X2 / 58X1

ஓக்கே, ஓக்கே, நல்லாத்தான் பண்ணியிருக்கே, ஆனாக்க

25 x 4s = 100
3 x 6s = 18
12 x 2s = 24
58 x 1s = 58

அதாவது ஆடின 147 பந்துகளிலே 200 ரன்கள் 98 பந்துகளிலேதான் எடுத்திருக்கே.

ஆக நீ வேஸ்ட் ஆக்கின பந்துகள் 147-98 = 49

ஒவ்வொரு பந்திலேயும் ஒரு ரன் எடுத்திருந்தா கூட இன்னும் 49 விலைமதிப்பற்ற ரன்களை நம்ம டீமுக்காக எடுத்திருக்க முடியும்.

மேலாளரின் கருத்துரை: எதிர்பார்க்கப்பட்டதை மட்டும்தான் செஞ்சிருக்கே. ஆனால் OUTSTANDING எல்லாம் இல்லை. (நம்ம டீமில மீதி யாரும் இந்தளவுக்கு செய்யல்லைங்கறதை நீ சொல்ல அவசியமில்லை. இது அவங்க அப்ரைசல் இல்லை) உனக்கு அளிக்கப்பட்ட கிரேட் C

உனக்கான மேம்பாட்டு பயிற்சி: ஒற்றை ரன்களை எப்படி திருடுவது (STEAL singles) என்பதே.

பிற்சேர்க்கை:

எல்லா 50 ஓவரிலேயும் நீ ஆடினே என்பது கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனாக்க உன்னோட ஜூனியர்களை ஆடவிடாமே நீயே ஆடியது சரியில்லை. அவர்கள் எப்போதுதான் தத்தம் திறமைகளை வாடிக்கையாளருக்கு நிரூபிப்பதாம்? எல்லாமே கூட்டு முயற்சியாகத்தான் இங்கே இருக்க வேண்டும்.

நீ நல்லா செயல்படல்லேன்னு சொல்ல வரவில்லை. ஆனாலும் இன்னும் மேம்பாடு தேவை.

அது சரி, பிங்களனுக்கான அப்ப்ரைசல்? ஏன் தர வேண்டும்? அவன் என்ன சிக்ஸர் அடித்தானா, கேட்ச் பிடித்தானா? அதெல்லாம் இங்கே எதுக்கு? அவனுடை சப்போர்ட் தளம் வேறு யாரிடம் உண்டு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/27/2010

கேரள தொழிலாளர்களை பிச்சைக்காரர்களாக மாற்றிய இடதுசாரி இயக்கம்

ஜெயமோகனின் கடற்கேரளம் தொடரின் மூன்றாம் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்.

“கேரளத்துவிடுதிகளைப்பற்றி எழுதப்போனால் அது இன்னொரு கொடுமை. பொதுவாகவே அங்கே விடுதிவாடகை அதிகம். சாலக்குடியிலேயே வாடகை சென்னையைவிட அதிகம். ஆனால் சேவை என்பதற்கும் கேரள விடுதிகளுக்கும் சம்பந்தமில்லை. காலை ஏழுமணிக்குத்தான் ஊழியர்கள் வருவார்கள். அதற்குப்பிறகே டீ கூட கிடைக்கும். மாலை எட்டுமணிக்கு ஒரு மேனேஜரைத்தவிர எல்லா ஊழியர்களும் போய்விடுவார்கள். விடுதி முழுக்க முழுக்க அதில் குடியிருப்போரின் பொறுப்பிலேயே விடப்படும்.

கேரளத்தில் ஓட்டல்வேலை போன்றவற்றுக்கு ஆள் அதிகம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேலைபார்ப்பதில்லை. ஆகவே எத்தனைபெரிய ஓட்டல் என்றாலும் அழுக்கும் நாற்றமும்தான். சென்னையைப்போல மணிப்பூரில் இருந்தும் மேற்குவங்கத்தில் இருந்தும் ஆள் கொண்டுவந்து வேலைசெய்யவைக்க முயன்றார்கள். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதுவும் நடைபெறவில்லை.

கேரளத்தில் ஓட்டல் பணியாளர் போன்றவர்களின் நடத்தையில் உள்ள ஒரு பாவனை கவனிக்கத்தக்கது. பல தமிழர்கள் இது தமிழர்களிடம் மட்டும் அவர்கள் காட்டுவது என எண்ணுவார்கள். உண்மையில் ‘மேலே’ உள்ள எல்லாரிடமும் கேரள வேலையாள் காட்டும் முகம்தான் இது. கேரளத்தின் இடதுசாரி இயக்கம் அடித்தள உழைப்பாளிகளுக்கு தன்முனைபையும் எதிர்காலக் கனவுகளையும் அளித்தது. அவனை கர்வம் கொண்டவனாக ஆக்கியது. ஆனால் எல்லா உழைப்பும் உழைப்பே என்று சொல்லிக்கொடுக்கவில்லை. அதில் நிலப்பிரபுத்துவ கால மனநிலையே நீடிக்கிறது. சாதாரண வேலைசெய்பவர்களுக்கு கூச்சம் அதிகம். அதிலும் படித்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை”.

“நவமுதலாளித்துவம் எந்த வேலையும் அந்த எல்லைக்குள் மட்டுமே முடிந்துவிடும் ஒன்று என்று வகுத்துள்ளது. வேலைநேரத்தில் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான். அதற்கான விதிகளை கடைப்பிடித்தாகவேண்டும். வேலைநேரம் முடிந்தபின் முதலாலியை தொழிலாளி பெயர் சொல்லி அழைக்கலாம். வேலை ஒருவனின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை. அதுவும் கேரள மனநிலையை வந்தடையவில்லை

விளைவாக கேரள அடித்தள உழைப்பாளி தாழ்வுணர்ச்சி கொண்டவனாக இருக்கிறான். தனக்கு மேலே உள்ளவர்களை வெறுக்கிறான். அவனுடைய தன்னகங்காரம் எப்போதுமே புண்படச்சித்தமாக இருக்கிறது. முன்கூட்டியே தன் அகங்காரத்தை விரித்து ஓர் அரண் ஆக்கிக்கொண்டிருக்கிறான். ‘எந்தா வேண்டே?’ என்று வந்து நிற்கும் சர்வரின் முகபாவனை உடல்மொழி அனைத்திலும் ஓர் அறைகூவல், அலட்சியம் தெரிவது இதனாலேயே. சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலே சொல்வதில்லை, தோளைக் குலுக்குவதுடன் சரி”
.

தொழிலாளிகளின் இந்த விட்டேத்தியான போக்கு இன்னும் அதிக அளவில் மோசமாக கேரளத்தில் இன்னொரு தளத்தில் நடந்து வருகிறது. அது குறித்து நான் இட்ட பின்னூட்டங்களும், ஜெயமோகனின் எதிர்வினைகளும் அதே இடுகையில் வந்துள்ளன.

“கேரளாவில் உள்ள பஸ் டெர்மினஸ்களில் வந்து இறங்கும் பயணிகள் கையில் சிறு பெட்டி இருந்தாலும் அதை சுமக்க ஆள் வைத்தே ஆக வேண்டும் என்றும், அப்படியே பெட்டியின் சொந்தக்காரர் தானே எடுத்து செல்லப்போவதாக சொன்னாலும் கூலியை மட்டும் தந்து விட வேண்டும் என்றும், இதற்கு தலைக்கூலி என்று பெயர் என்றும் படித்த நினைவு இருக்கிறது. இது உண்மையா?

அதே மலையாளத்தார் ஊருக்கு வெளியே வந்த பிறகு இத்தனை உழைப்பாளிகளாக போவது எப்படி? அதுவும் வளைகுடா நாடுகளில் அவர்களை வேலை நிறுத்தங்களை உடைப்பதற்காக அங்குள்ள முதலாளிகள் பயன்படுத்துவதாகவும் கேள்விப்பட்டேன்.

இப்போது வேறு தளத்திற்கு வருகிறேன். எப்போதுமே எல்லோரிடமும் சமமாக நடக்க இயலாது. முரண்டு செய்தால் வேலை போய்விடும், குப்பை போட்டால் ஸ்பாட் அபராதம் வசூலிக்கப்படும் என்றெல்லாம் வைக்கும் இடங்களில்தான் கட்டுப்பாட்டுடன் விஷயங்கள் நகருகின்றன என நினைக்கிறேன்.

இங்கும் சிறிய அளவில் நான் பார்த்த ஒருவிஷயம் என்னவென்றால் வேலைக்காரர்களை மிகவும் கருணையுடன் நடத்துபவர்களைத்தான் அவர்கள் ஏய்க்கிறார்கள். கடுமையாக நடந்து கொள்ளும் முதலாளிகளிடம் ஒழுங்காக வேலை செய்கிறார்கள்.

உங்கள் கருத்து என்ன”?
By Dondu1946 on Feb 27, 2010

“கேரள தொழிற்சங்கம் உருவாக்கிய இரு விஷயங்கள் 1. அட்டிமறி 2 நோக்குகூலி

அட்டிமறி என்பதுதான் நீங்கள் சொல்வது. ஒரு சுமைதூக்கும் தொழிலாளார் சங்கம் அவர்கள் உரிமைகொண்டாடும் இடத்தில் பிறர் எச்சுமையையும் தூக்க அனுமதிக்காது. நாமே தூக்கினால்கூட அதற்கான கூலியை சங்கத்துக்கு கொடுத்துவிடவேண்டும். தலைகூலி என்றும் சொல்லப்படுவதுண்டு. நாலைந்துவருடம் முன்பு திருவனந்தபுரத்தில் ஒரு செங்கல்லுக்கு ஒன்றரை ரூபாய் வீதம் அட்டிமறிக்கூலி போடப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டது. செங்கல்லின் விலை ஒன்றேகால் ரூபாய்.

நோக்கு கூலி என்பது ஒரு துறையில் அத்துறை சார்ந்த சங்கத்தினரை பணிக்கமர்த்தாமல் வேறுவகையில் வேலைசெய்ய வேண்டுமென்றால் அந்தக்கூலியை தொழிலாளர்களுக்கு கொடுத்துவிடுவது. பி எஸ் என் எல் நிறுவனம் எல் என் ட் நிறுவனம் போன்றவை பொக்லைன் வைத்து பணிகளைச் செய்தபோது [நெடுஞ்சாலைகளில் மனிதர்களைக்கொண்டு மெல்லமெல்ல வேலைசெய்ய முடியாது] அந்த வேலைக்கு எவ்வளவு மனித உழைப்பு தேவையென கணக்கிட்டு அந்த பணம் கூலியாக சங்கத்துக்கு அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வந்து அமர்ந்து ஏழுமணி நேரம் வேடிக்கை பார்ப்பார்கள். உணவு இடைவேளையும் எடுத்துக்கொள்வார்கள். இப்படி நோக்குவதற்கான கூலிதான் நோக்கு கூலி. இப்போதும் உள்ளது”.
By ஜெயமோகன் on Feb 27, 2010

“Your comment is awaiting moderation.
//கேரள தொழிற்சங்கம் உருவாக்கிய இரு விஷயங்கள் 1. அட்டிமறி 2 நோக்குகூலி//
ஒரேயடியாக இது ஒரு எல்லை தாண்டிய நிலைகடந்து விட்டது என எண்ணுகிறேன். செய்யாத வேலைக்கு கூலியை அடாவடியாகக் கேட்டு பெறுவது பிச்சையெடுப்பதை விடவும் திருடுவதையும் விட கேவலமல்லவா?

இது குறித்து ஏதேனும் விவாதம் கேரள அறிவுஜீவிகளிடையே நடக்கிறதா?
By Dondu1946 on Feb 27, 2010”


உங்கள் கருத்து என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/24/2010

மின்னஞ்சலில் வந்த மொக்கைகள்

இன்று சில மொக்கைகள் மின்னஞ்சல் வாயிலாக வந்தன. அவற்றில் சிலவற்றை ஏற்கனவே படித்திருக்கலாம். எனக்கு பிடித்திருந்தன. ஏதோ நம்மால் ஆனது இங்கு உங்களுடன் ஷேர் செய்து கொள்கிறேன்.

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார்! மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்டேங்கறான்! சிக்கினா செத்தான்!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி அதுங்களை நடக்க வைக்கிறேன்!!

விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/23/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 23.02.2010

Jo Amalan Rayen Fernando என்னும் காமெடி பீஸ்
கலையுலகில் நடக்கும் உள்குத்துக்கள் பற்றி உண்மைத் தமிழன் இட்ட இப்பதிவு மனதுக்கு இதமாக இருக்கிறது.

சோவின் துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவர் கனைத்துக் கொண்டே “கலைஞர்” என பேச்சை ஆரம்பிக்கும்போதே பார்வையாளர்கள் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விடுகிறோம். அதுவும் கலைஞரது தனது புகழ்ச்சிக்காக தானே எல்லோரையும் ஏற்பாடு செய்து வாரத்துக்கொருதரம் நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வது அதனுள்ளேயே ஒரு காமெடியை வைத்திருக்கிறது. ஏதோ ஒரு முறை புகழலாம், சில முறைகள் புகழலாம் ஆனால் நித்தம் நித்தம் புகழ வேண்டுமென்றால் இப்படி இருப்பவர் காமெடி பீசாகத்தான் இருக்க வேண்டும்.

உண்மை தமிழனின் அப்பதிவில் Jo Amalan Rayen Fernando என்னும் பதிவர் செய்யும் காமெடிகளோ கலைஞரின் காமெடிக்கு எவ்வகையிலும் குறைவானதல்ல என்றுதான் கூற வேண்டும். அவரது ஓப்பனிங் கருத்தை இங்கே சாம்பிளுக்கு தருகிறேன். மீதியை அப்பதிவிலேயே படித்து அவரது காமெடியின் முழுவீச்சை புரிந்து கொள்ளவும்.

“தொழிற்சங்கம் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும்போது ஒவ்வொரு உறுப்பினரும் கலந்த்துதான் தீரவேண்டும். ஏதாவது காரணத்தினால் இயலாதெனின், அதை முறையாகத் தலைவரிடம் சொல்லி விடுப்புக்கேட்டுவிடலாம்.

காரணமே இல்லாமல் வராமலிருப்பது தவறு. எனக்கு கருணானிதியைப்பிடிக்கவில்லை, இச்சஙகத்தினரின் செயல் பிடிக்கவில்லை என்றால் சங்கத்திலிருந்து விலகிக்கொள்ளலாம்.

பாராட்டு விழாவுக்கு வந்தவர்களெல்லாம் கருணாநிதி தங்களுக்குப் பிடிக்குமென வரவைல்லை. பின் ஏன் வந்தார்கள்? பொதுநலம் கருதி. தொழிலாளர்களின்.

தொழிற்சங்கம் மிரட்டத்தான் செய்யும். எல்லாத்தொழிற்சங்கங்களும் இப்படித்தான்.

மிரட்டல் பிடிக்ககவில்லயெனறால் விலகிக்கொள். ஏன் உள்ளேயிருந்துகொண்டே குழி தோண்டுகிறாய்! இதுதான் கேள்வி”.

ஐயா அமலன் ஃபெர்னாண்டோ, தொழிற்சங்கம் எல்லாம் சரிதான். அது தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தும் போராட்டங்களுக்குத்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். தகுதியற்ற ஒருவரை வாரத்துக்கொருமுறை புகழும் நிகழ்ச்சிகள், அதுவும் சங்க நிர்வாகிகளது சுயநலனுக்காக நடத்தப்படுவைக்கு நீங்கள் சொல்வது பொருந்தாது. இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் வெளியில் போ என சொல்வதற்கு சங்கம் அவர்களது அப்பன் வீட்டு சொத்து அல்ல. அஜீத்துக்கு மாஸ் அப்பீல் இருப்பதால்தான் அவரை வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அவரும் ஒன்ஸ் ஃபார் ஆல் இந்த காமெடி விஷயத்தைன் முடித்து கொள்வோம் என்றே வந்தார், பேசினார். அடுத்த முறை அவரை மட்டுமல்ல ரஜினியை அழைக்கும்போதும் அழைப்பை கட்டாயப்படுத்த யோசிப்பார்கள்.

இதில் உள்ளிருந்துகொண்டே யார் குழி தோண்டுகிறார்களாம்? அஜீத்தும் தன்மையாகத்தானே வர இயலாமையை கூறினார். அப்படி நீ வரவில்லை என்றால் நீ காலி என சொல்பவர்களை வேறு எப்படித்தான் எதிர்கொள்வதாம்? அஜீத் நினைத்ததைத்தான் எல்லோரும் நினைக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அவருக்கு அங்கேயே எழுந்த கைத்தட்டல்களே சாட்சி. சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டினார். பூனைக்கு மணி கட்டுவதற்கு அஜீத் தேவைப்பட்டிருக்கிறது அவ்வளவே. நடிகர் சங்க நிர்வாகிகள்தான் சங்கத்துக்கு குழி தோண்டுகின்றனர் என்று கூற வேண்டும்.

ஷாகுல் என்னும் பதிவரின் பின்னூட்டத்தையும் அதற்கு உண்மை தமிழனின் பதிலும் கீழே தருகிறேன்.

[[[ஷாகுல் said...
ஐயா பெர்னாண்டோ அவர்களே!
அஜீத் எப்போ கருனாநிதிய எதிர்ப்பதாகக் கூறினார். சங்க நிர்வாகிகளைப் பற்றிதான் கூறினார். அவர் கூறியது சிலரால் திரிக்கப்பட்டு கருணாநிதியை எதிர்க்கிறார் என கோத்து விடப்பட்டது இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் போல். இது போல திசை திருப்புவதற்க்கென்றே சிலர் அலைகிறார்கள். அதை தொடர்ந்தே கருணாநிதியை சந்திதார். தமிழன் என்று கூறிக் கொள்வோர் மூடிக் கொண்டுதானே இருந்தான். இந்த ரவுடிகளை கேள்வி கேட்க முடியாமல். இந்த சங்க நிர்வாகிகளுகு மானம் ரோஷம் இல்லையென்றால், அதே போல சங்க உறுப்பினர்களிடம் எதிர்ப்பார்த்தால் முடியுமா சார்.]]]

ஷாகுல்.. உங்களுடைய காட்டம் கண்டு எனக்கும் அதிர்ச்சிதான்..

கலைஞரை வாழ்த்துவதற்கு அஜீத்திற்கு மனமில்லை என்று சொல்வதைப் போல் கதையைத் திரித்ததால்தான் அஜீத் கலைஞரை சந்தித்தார்.. அதன் பின்பும் தனி மனிதத் தாக்குதல்கள் தொடர்வதன் பின்னணியைப் பார்த்தால்தான் தாத்தா மேல் சந்தேகம் வருகிறது..!

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரோ என்று..!!!


டோண்டு ராகவனான எனக்கும் அப்படித்தான் படுகிறது. பை தி வே உண்மை தமிழனின் அப்பதிவையும் அதற்கு வந்த நூர்றுக்கும் அதிகமான பின்னூட்டங்களையும் படிப்பதே உசிதம்.

கவிப்பாடகனான அரசன்
கிரேக்க அரசன் ஒருவன் இருந்தானாம். தான் ஒரு பெரிய கவிஞன் மர்றும் பாடகன் என்னும் பிரமை அவனுக்கு. அவன் ஒரு பாட்டை இயற்றி அதை பாடினான். அதை எல்லோரும் கேட்டு கருத்து சொல்ல வேண்டும் என்று வேறு பிடிவாதம் பிடித்தான். அவனது அவையினர் ஆகா நல்ல பாட்டு, நல்ல குரல் என்றெல்லாம் சிலாகித்தார்களாம். அப்போது அவனுக்கு கெட்ட காலம் வந்ததால் அரசவைக்கு உண்மையான கவிஞன் மற்றும் பாடகன் ஒருவன் வந்தானாம். அரசனும் அவனிடம் பாடலை இயர்றியது யார் எனக் கூறாது பாடிக் காட்டினானாம். காதை பொத்திக் கொண்ட அக்கலைஞன் இவ்வளவு கேனத்தனமான வரிகளை யார் எழுதியது என கேட்க, அரசன் துணுக்குறானாம். சுதாரித்து கொண்டு, பாடல் வரிகள் இருக்கட்டும், எனது குரல் எப்படி என கேட்டானாம். அதற்கு அவன் “ஐயா ஜலதோஷம் இருக்கும்போது பாடினால் அப்படித்தான் சுருதியில்லாது இருக்கும் கவலைப்படாதீர்கள்” என கூறினானாம். அரசன் மிகுந்த கோபம் அடைந்து அவனுக்கு பத்தாண்டுகள் சிறையில் கல் உடைக்கும் தண்டனை அளித்தானாம். சிறையில்தான் கலைஞனுக்கு தான் செய்த தவறு புரிந்ததாம்.

பத்தாண்டுகள் கழித்து அவன் விடுதலை ஆனதும் அவனை மீண்டும் அரசவைக்கு வரவழைத்த அரசன் தான் அப்போதுதான் இயற்றியிருந்த இன்னொரு பாடாலை ராகத்துடன் பாடிக் காட்டினானாம். கலைஞன் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து அகல ஆரம்பித்தானாம். அது பற்றி அரசன் அவன் எங்கு செல்கிறான் என கேட்டதற்கு “கல் உடைக்கப் போகிறேன்” என்றானாம்.

இக்கதை திடீரென ஞாபகத்துக்கு வந்தது. ஒரு மாதிரி ஹைப்பர்லிங் என வைத்து கொள்வோமா? பின்னே? வேறு எப்படித்தான் வைத்துக் கொள்வதாம்? நான் சொல்வது புரியறதோ?

கிருபானந்த வாரியார்
மிமிக்ரி கலைஞரகள் மிகவும் விரும்புவது இவரைத்தான், முக்கியமாக இவரது குரலைத்தான். நாயகனில் வரும் “நிலா அது மேகத்தின் மேலே, பலானது ஓடத்தின் மேலே, ஒய்யா ஓஓ ஒய்யா” என்னும் பாடலுக்கு அவரது கருத்துரையாக சொல்லி மயில்சாமி மிமிக்ரி செய்த டேப்பை பல முறை கேட்டிருக்கிறேன். இப்போது கிருபானந்தவாரியாரின் குரலை மனதில் கொள்ளவும்.

“எம்பெருமான் முருகப்பெருமான் வானத்தில் மலைமேலே ஓடத்தில் இருக்கிறான். அவனுடன் கூட இருக்கிறார்கள் வள்ளியும் தெய்வயானையும். அதைத்தான் “நிலா அது மேகத்தின் மேலே, பலானது ஓடத்தின் மேலே” என்று சொகிறார்கள். “ஒய்யா ஓஓ ஒய்யா” என்றால் வேல்முருகா வேல்முருகா என்று பொருள்”.

பலர் அவரிடம் இந்த மிமிக்ரி விஷயங்களை குறித்து கேட்டதற்கு இதனால் மிமிக்ரி கலிஞர்கள் மகிழ்ந்தால் தனக்கும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டார். இது அவரது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் அவ்வளவு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. தேவர் எடுத்த துணைவன், தெய்வம் ஆகிய படங்களில் முக்கிய பாகம் எடுத்து நடித்து வந்த படங்கள் மிகவும் பிரபலமாகி ஹிட் ஆயின. ஆனால் குன்னக்குடி வைத்தியநாதன் தயாரித்த, கிருபானந்தவாரியாரால் திரைக்கதை எழுதப்பட்ட கந்தர் அலங்காரம் என்னும் படம் படுத்து விட்டது. அதற்கு முக்கிய காரணமே திரைக்கதையின் சொதப்பல்களே. அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் அவர் மட்டும்தான். ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? குன்னக்குடி வைத்தியநாதன் தன்னிடம் சொல்லாமலே தன்னை தூரத்திலிருந்து படம் எடுத்து ஏமாற்றி விட்டதாக தனது ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

இன்னொரு முறை அவர் ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றபோது நடந்த ஒரு சந்தர்ப்பம். ரயிலடியில் அவர் இறங்கியபோது ஸ்டேஷனில் ஒருவர் மட்டும்தான் இருந்திருக்கிறார். இவராவது அந்த மனிதரை கேட்டிருக்கலாம், அந்த மனிதராவது இவரிடம் இவர்தான் கிருபானந்தவாரியாரா என கேட்டிருக்கலாம். இருவருமே ஒன்றும் சொல்லாது 15 நிமிடங்கள் கடந்த பிறகு இவராக ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு வண்டி ஏதாவது ஊருக்குள் செல்ல கிடைக்குமா என கேட்க, அப்போது அந்த நபர் தான் அவரை அழைத்து செல்லவே வந்ததாக கூற இருவரும் வண்டியில் சென்றிருக்கின்றனர். சில தூரம் வந்தபிறகு அவருக்கு ஆகாரம் செய்வித்து வரச்சொன்னதாக தன் முதலாளி கூறியதாகவும், அதை தான் மறந்து விட்டதாகவும் அவர் கூறி கிருபானந்தவாரியாரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கிறார். முதலாளியிட்ம் இதை சொல்ல வேண்டாம் எனவும் வேண்டிக் கொண்டுள்ளார்.

ஆனால் கிருபானந்தவாரியாரோ முதலாளியின் வீட்டுக்கு சென்றவுடனேயே அவரிடம் எல்லாவற்றையும் கூறி அவர் அனுப்பித்தவரின் சொதப்பல்கள் பற்றி புகார் செய்திருக்கிறார்.

மேலே நான் எழுதியது எல்லாமே கிருபானந்தவாரியாரே ஒரு பத்திரிகையில் (தினமணி கதிர்?) கட்டுரையாக எழுதியதுதான். நான் கேட்கிறேன், வந்தவருக்குத்தான் அறிவில்லை, இவருக்குமா? ஸ்டேஷனில் ஒரே மனிதர் நிற்கும்போது என்ன ஏது என விசாரித்திருக்க வேண்டாமா? அதை விடுங்கள், தன்னிடம் மன்னிப்பு கேட்டவரை போட்டுத்தந்தது அவரைப் போன்று ஆன்மீக சொற்பொழிவாற்றுபவர்களுக்கு அழகல்ல.

இப்போ கொஞ்சம் லைட் சப்ஜெக்டா பேசுவோம். கிருபானந்தவாரியாரை பர்றி நான் இங்கே எழுத வந்ததற்கு காரணமே ஹைப்பர் லிங்குதான். முதற்கண் எதற்கெடுத்தாலும் அப்பன் முருகனை பேசும் உண்மை தமிழனை படித்த, எதற்கெடுத்தாலும் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை இழுக்கும் டோண்டு ராகவன் ஆகியோரது கூட்டில் கிருபானந்தவாரியார் வராவிட்டால்தான் வியப்பளிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


Read more: http://truetamilans.blogspot.com/2010/02/blog-post_22.html#ixzz0gKKFFjpF

2/19/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 36 & 37)

எபிசோட் - 36 (17.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வழக்கம்போல முதல் சுட்டி மிஸ்ஸிங்.

மைதிலி வசுமதி வீட்டுக்கு வந்து சிங்காரம் சாம்பு சாஸ்திரிகளை மிரட்ட மறுத்துவிட்டான் எனக் கூறுகிறாள். அவன் இல்லாவிட்டால் என்ன காசு விட்டெறிந்தால் இன்னொருவன் வருகிறான் எனக் கூறிவிட்டு ஜாம்பஜார் ஜக்குவின் மகன் ராயப்பேட்டை ருக்மாங்கதன் என்னும் ருக்குவை அறிமுகப்படுத்துகிறாள். ருக்குவிடம் சாம்பு சாஸ்திரிகள் பூஜை செய்வதை காட்டி அவரைத்தான் மிரட்ட வேண்டும் என வசுமதி அடையாளம் காட்டுகிறாள்.

சாம்பு வீட்டில் அவரவர் தத்தம் வேலையில் ஈடுபடுகின்றனர். தான் பிட்சைக்கு போய்விட்டு அப்படியே வேதபாடசாலைக்கு போய் வகுப்பு எடுக்கப்போவதாகக் கூறுகிறான். அதுதான் அவன் எடுக்கப்போகும் முதல் வகுப்பு என்பதால் அவன் எதில் தொடங்கப்போகிறான் என சாம்பு கேட்கிறார். அவன் ரிக்வேதத்தில் துவங்கப் போவதாகக் கூற, அவன் வெற்றிபெற அவர் ஆசீர்வதிக்கிறார்.

இப்படிப்பட்ட சத்புத்திரனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும் என சாம்பு கூற அவர் மனைவிய்யோ அவன் குடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை எனவும், அவனை சாம்புதான் கெடுப்பதாக பேசுகின்றனர் என கூறுகிறாள். கூறுபவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், தனக்கு கவலையில்லை என சாம்பு கூறுகிறார். பிறகு அவர் கோவிலுக்கு புறப்படத் தயாராகும்போது அவர் மகள் ஆர்த்தி அன்றைக்கு அவருக்கான ராசிபலனை படிக்கிறாள். அது சுவாரசியமாக இல்லை.

அவரை ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர் மனைவி கூற, அவரோ நமச்சிவாய என்றிருந்தால் நாள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், எனை நாடிவந்த கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும் என கேட்கிறார்.

ராசிபலனை பற்றி நண்பர் கேட்க பத்திரிகைகளின் வரும் ராசிபலன்கள் ஒட்டுமொத்தமாக கூறப்படுவது அவ்வளவாக நம்பிக்கைக்குரியதில்லை என்றும், ஆனால் சிலர் நம்புகிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனாலும் சில தருணங்களில் நல்லது நடக்கும் என நம்பிக்கை வந்தால் மனதுக்கு தெம்பாகவும் உள்ளது எனக் கூறுகிறார். இது சம்பந்தமாக இல்லஸ்டிரேட்டட் வீக்லியின் ஆசிரியராக குஷ்வந்த் சிங் இருந்தபோது, தானே சிலவாரங்களுக்கு மனதில் தோன்றியதெல்லாம் போட்டு அப்பத்தியை நிரப்பியதாகவும் யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் கூறியது பற்றி முரளி மனோகர் எனக்கு நினைவுபடுத்துகிறான்.

நீலகண்டன் வீட்டுக்கு உமா ஃபோன் போட்டு தன் அன்னை பர்வதத்திடம் பேசுகிறாள். அவள் மாமியார் கவனிப்பதை அறிந்து வீட்டுக்கு வெளியே சென்று செல்லில் தனது அன்னையுடன் பேசுகிறாள். ரமேஷ் தன்னை அசோக்குடன் சம்பந்தப்படுத்தி சந்தேகிப்பதாக அன்னையிடம் கூறுகிறாள். அவளை பொறுமையாக இவ்விஷயத்தை கையாளுமாறு பர்வதம் அறிவுரை கூறுகிறாள். உமாவின் தம்பி ராம்ஜி அத்திம்பேருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என ஆயாசம் அடைகிறான்.

அசோக் மாணவ்ர்களுக்கு வேதபாடம் நடத்துகிறான். திவ்யமான வேதகோஷம், அதை வீடியோவில் பார்ப்பதே சரியாக இருக்கும்.

சாம்புவும் ஆர்த்தியும் கோவிலில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர். விளக்கேற்றி பிரார்த்தனை செய்வதன் தாத்பர்யத்தை சோவின் நண்பர் சோவிடம் கேள்வி கேட்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 37 (18.02.10) சுட்டி - 1 & சுட்டி - 2
தன் நண்பருக்கு பதிலாக சோ அவர்கள் ஒரு நீண்ட விளக்கம் அளிக்கிறார். என்னென்ன விதமான தீபங்கள் எந்தெந்த சந்தர்ப்பங்களுக்காக ஏற்றப்படும், அதில் எரிபொருளாக காராம்பசு நெய் போன்றவர்றை விட வேண்டும், எந்தெந்த மிருகங்களின் பால்லிருந்து தயாரிக்கப்படும் நெய்யை விடக்கூடாது என்பது பற்றியெல்லாம் கூறுகிறார்.

சாம்புவும் ஆர்த்தியும் கோவிலிலிருந்து திரும்பும் வழியில் மைதிலி ஏற்பாடு செய்த ரௌடி ருக்கு அவரை மிரட்டுகிறான். ஆர்த்தியை முன்னால் அனுப்பிவிட்டு சாம்பு அவனுடன் பேசுகிறார். சாம்பு இந்த ஊரைவிட்டே ஓட வேண்டும் எனவும், மறுத்தால் அவர் பெண்ணின் மானத்தை வாங்கப்போவதாகவும் அவன் மிரட்டி சாம்புவுக்கு ஒருவாரம் டயம் தருகிறான்.

(இந்த இடத்தில் ஹாய்ராம் என்னும் பதிவர் இட்ட ஒரு பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.

hayyram said...
டோண்டூ சார், இந்த எங்கே பிராமணன் குழுவினரில் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள். மனைவியை சந்தேகப்படும் கதாபாத்திரம், ஆள்வைத்து அடிக்கும் கேவலமான புத்தி கொண்ட பெண் பாத்திரம் போன்றவையெல்லாம் கதைக்குத் தேவையில்லை என்று. நிகழ் காலத்தில் வர்ணரீதியான பிராமணனாக வாழ முயலும் ஒருவன் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறான். பணமே உலகம் என்றிருக்கும் இந்த காலத்தில் பவதி பிக்ஷாம்தேஹி என யாசித்து ஒருவனால் வாழ முடிகிறதா? என்று ஒரு சேலஞ்சிங் ரீதியாக கதையை நகர்த்தினால் நன்றாக இருக்கும்.

அதை விட்டு வழக்கமான கெட்ட புருஷன், உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற கெட்ட கேரக்டர் கொண்ட வழக்கமான சீரியலாக சோவின் நாடகம் செல்வது அதன் தரத்தைக் குறைக்கிறது. கடுப்படிக்கிறது. இப்போ என்னதான் சொல்ல வர்ரார்ன்னு தினமும் திட்டிக்கொண்டே பார்க்க வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி தங்கள் கருத்து என்னவோ?


எனது பதில்: எனக்கு மட்டும் இந்த காட்சிகள் பிடித்திருக்கின்றனவா என்ன? ஆனால் ஒன்று சொல்வேன். அசோக் செய்வது தற்காலத்தில் இதுவரை யாருமே செய்து பார்த்திராதது. அதை செய்யும்போது அவனை மீண்டும் வீட்டுக்குள் இழுக்கும் அவன் அன்னையின் முயற்சிகள் தோல்வியையே அடையும். ஆனால் அவற்றை ஹேண்டில் செய்வதில் நல்ல ரசனையோடுதான் வெங்கட் காட்சிகள் எடுப்பார் என நினைக்கிறேன். மற்றப்படி ரமேஷின் சந்தேகம் குழந்தைத்தனமானது. அதை உமாவே பார்த்து கொள்வாள். என்ன, பாகவதரை மிரட்டினார்கள் முதலில் இப்போது சாம்பு சாஸ்திரி. அவ்வளவுதான் வசுமதியின் செயலின் எல்லை என வைத்து கொள்ள வேண்டியதுதான். இது வரைக்கும் சோவின் இந்த சீரியலில் எந்தபிரச்சினையும் சவ்வு மாதிரி எபிசோடுகளை இழுக்க அனுமதிக்கப்படவில்லை. இதுவும் கடந்து போகும் என நினக்கிறேன். மற்றப்படி சோவின் குழுவினர் யாரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.

சரி சீரியலுக்கு செல்வோம்.

வீட்டுக்கு திரும்பவரும் சாம்பு மனக்கவலையுடன் இருக்க அவர் மகள் ஆர்த்தி அது பற்றி கேட்கிறாள். அவர் மழுப்பி விடுகிறார்.

மைதிலி வசுமதியிடம் டெலிஃபோன் மூலமாக தனது ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கிறாள். அச்சமயம் சாம்பு அங்கே வந்து நாதனிடம் பேச ஆரம்பிக்கிறார். அவரது முகவாட்டத்தை கவனித்த நாதன் கேள்விகள் கேட்க அவர் ஒன்றுமில்லை எனக்கூறுகிறாள். மைதில் வசுமதியிடம் செல்போனை மைக்கில் போட்டு அங்கு சென்று நாதன் மட்டும் சாம்புவிடமிருந்து பேசுமாறு ஆலோசனை கூறுகிறாள்.

நாதன் அசோக் எப்படி இருக்கிறான் எனக் கேட்க, அவன் வேதபாடசாலையில் கற்பிக்க துவங்குவது பற்றி சாம்பு பெருமையுடன் கூறுகிறார். வர்ண ரீதியான பிராம்மணனாக அவன் மாறுவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன என அவர் கூற, வசுமதி கோபம் அடைகிறாள்.

சாம்பு சாஸ்திரிகள் மனவருத்தம் தீர அவரை வட இந்திய தீர்த்த யாத்திரைக்காக செல்லும்படி ஆலோசனை கூறிவிட்டு நாதனிடம் அவருக்கு 25000 ரூபாய்க்கு செக் தருமாறு பணிக்கிறாள். நாதனுக்கு பழைய ஞாபகம் பிளாஷ்பேக்காக வருகிறது. அவரை வீட்டுக்கு காரில் டிராப் செய்வதை குப்புற விழுந்து தடுத்த அவளா அனாயாசமாக 25000 ரூபாய் தரச்சொல்கிறாள், எது எப்படியோ தர்ம சிந்தனை எப்படி வந்தால் என்ன? செக்கை தந்து விடுகிறார்.

செக்குடன் சாம்பு தன் வீட்டுக்கு மனைவி மகளுடன் இது பற்றி பேசுகிறார். தனக்கு கார் லிஃப்ட் தர மூக்கால் அழுத வசுமதியா இவ்வளவு தாராளமாக பணம் தந்தது என எண்ணிக் குழம்புகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/17/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 34 & 35)

எபிசோட் - 34 (15.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ஏற்கனவே எடுத்த முடிவுக்கேற்ப நாதனும் வசுமதியும் கோவிலில் அன்னதானம் செய்வதற்காக வருகின்றனர். சாப்பாடு பொட்டலங்களாக வினியோகப்படுகிறது. எந்த பிள்ளை வீட்டுக்கு திரும்ப வேண்டுமென அன்னதானம் செய்கிறார்களோ அந்த அசோக் அதே கோவிலில் ஒரு சன்னிதி எதிரில் நின்று தியானம் செய்வது போல பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். இவ்வாறு அவன் விட்டேற்றியாக இருப்பது குறித்து நாதன் கோபப்படுகிறார்.

வசுமதியை தேடிக்கொண்டு அவளது லேடீஸ் கிளப் தோழி மைதிலி அங்கு வருகிறாள். அவள் உள்ளே வருவதை முதலில் பார்க்கும் சிங்காரம் “குசும்பு வருது பாரு” என கிண்டல் செய்கிறான். அன்னதானம் செய்வது நாதனின் ஸ்டேட்டசுக்கு ஏற்றதில்லை என மைதிலி கூறுகிறாள். அன்னதானம் ஒசத்தியான செயல் என நாதன் வாது செய்தாலும் அதை அரைமனதாகத்தான் செய்கிறார். அவருக்கும் மைதிலி சொல்வதுடன் சிறிது ஒப்புதல் இருப்பது போலத்தான் காட்டப்படுகிறது.

அசோக் தியானம் முடிந்து தன் பெற்றோரை பார்க்கிறான். அவர்கள் அன்னதானம் செய்வதை கண்டு சந்தோஷிக்கிறான். “பேஷ் நல்லா பன்ணுங்கோ, புண்ணியம் கிடைக்கும்” என்று கூறிவிட்டு விடை பெறுகிறான். அவன் அவ்வாறு நடந்து கொள்வதற்கும் நாதன் கோபப்படுகிறார்.

அங்கு வரும் ஒரு போட்டோகிராஃபர் அன்னதானத்தை ஃபோட்டோ எடுக்க, இதை லேடீஸ் கிளப்காரர்கள் பார்த்தால் மானம் போகும் என்னும் உணர்வுடன் வசுமதி நாதனை அழைத்து கொண்டு கிளம்புகிறாள்.

வேத பாடசாலையில் அசோக் மாணவர்களுக்கு வடமொழி கற்றுத் தர ஆசைப்படுவதாக முதல்வரிடம் கூற, அவரோ தன்னிடம் இதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே இருப்பதாலும், அவர்களுக்கே சம்பளம் தருவது கடினமாக இருக்க அசோக்கை எவ்வாறு ஏர்று கொள்வது என்ன மறுக்கிறார். அசோக் டான் சம்பளமின்றி வேலை செய்வதாகக் கூற, அவன் ஜீவனத்துக்கு என்ன வழி என கேட்கிறார். அப்போதே தான் பிட்சை எடுத்துத்தான் உண்பதாகவும், கடவுள் புண்ணியத்தில் உணவுக்கு குறையில்லை என்றும் கூறுகிறான். இரண்டு செட் வேட்டி, துண்டு இருந்தால் போதும் என்றும், உறைவிடத்துக்கு சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் தங்குவதாகவும் கூறிவிடுகிறான்.

இப்படி போதும் என்னும் மனத்துடன் இருப்பது சாத்தியமா என சோவின் நண்பர் கேட்க, ஞானிகளுக்கு அது சாத்தியமே என சோ கூறுகிறார். அசோக் ஞானப்பாதையில் செல்கிறான் என்றும் அவர் கூறுகிறார்.

அசோக்கிடம் அவன் ஏதாவது சான்றிதழ்கள் வைத்திருக்கிறானா என முதல்வர் கேட்க, ஒன்றும் இல்லை என அவன் பதிலிறுக்கிறான். தன்வசம் உள்ள பண்டிட்டை வைத்து அவனை பரிசோதிக்கப் போவதாக அவர் கூற, அசோக்கும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான். பண்டிட் முதலில் அன்னத்தை பற்றி ஒரு ஸ்லோகம் கூறி பொருள் கேட்க, விஸ்தாரமான பதிலைத் தருகிறான்.

அன்னம்னா சாப்பாடுதானே அதை என்ன மந்திரம் போல கூறுகிறார்களே என நண்பர் கேட்கிறார். அன்னத்தின் பெருமைகளை சோ விலாவாரியாக பட்டியலிடுகிறார். அட்சயப் பாத்திரத்தை பெற்ற ஆபுத்திரனின் கதையையும் கூறுகிறார். அதே அட்சய பாத்திரம் அமுதசுரபி என்னும் பெயருடன் மணிமேகலை வசம் வருவதையும் விளக்குகிறார்.

பண்டிட் கேட்கும் கேள்விகளுக்கு அசோக் அசராது பதிலளிக்க, அவரே பிரமித்து போகிறார். அந்த நேர்காணலை பல மாணவர்கள் கவனிக்கின்றனர். பிறகு முதல்வரிடம் வரும் பண்டிட் இத்தனை இளைய வயதில் இவ்வளவு ஞானத்தை தான் பார்க்கவில்லை என பிரமிப்புடன் கூறுகிறார். அவனை உதவி டியூட்டராக நியமிக்க தான் எண்ணியிருப்பதை முதல்வர் கூற, அது அந்த பாடசாலையின் பாக்கியம் என பண்டிட் கூறுகிறார். அசோக் சம்பளம் வேண்டாம் என கூறியதை அவர் சொல்ல, அது நிர்வாகம் செய்த புண்ணியம் என பண்டிட் அதே தொனியில் கூறுகிறார்.

வசுமதியுடன் வரும் மைதிலி நாதனின் புதுவீடு பிரமாதமாக இருப்பதாக கூறுகிறாள். அசோக்கை வீட்டுக்கு வரவழைக்க தான் உபாயம் கூறுவதாக அவள் கூற, வசுமதி அதை ஆவலுடன் கேட்கத் தயாராகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 35 (16.02.1010) சுட்டி - 1 & சுட்டி - 2
(சுட்டி - 1 இன்னும் தயாராகவில்லை. இசை தமிழ் வழ்க்கம் போல தாமதம் செய்கிறது)
மைதிலி அப்பக்கம் வந்த சமையற்கார மாமியை அப்பால் அனுப்புகிறாள். பிறகு பேச ஆரம்பிக்கிறாள். நான் ஊகித்ததுதான். அதாவது சாம்பு சாஸ்திரிகளை மிரட்டி ஊரை விட்டு துரத்தினால் அசோக் தானாகவே வீடு வந்து சேருவான் என அவள் கணிக்கிறாள். (ஏற்கனவே பாகவதரிடம் செய்த உத்தி இங்குமா என நினைக்க, சிலருக்கு என்ன பட்டாலும் புத்தி வராது என்னும் எனது எண்ணம் வலுப்படுகிறது).

இந்த பெண்மணி சகுனி போல உபதேசம் செய்கிறாளே என நண்பர் கேட்க, சகுனி முதலில் துரியனுக்கு பாண்டவர்களுடன் சமாதானமாகப் போகுமாறுதான் உபதேசித்ததாகவும்,. அதை துரியன் கேட்காது இருக்கவே தனது நிலையை மார்றிக் கொண்டான் எனவும் சோ கூறுகிறார். சூதாட்டாத்தில்கூட அவன் அதை விஞ்ஞான முறைப்படி ஆடித்தான் ஜெயித்தான் என்றும் தன்னை சூதாட்டத்தில் நிபுணனாக கருதிக் கொண்ட யுதிஷ்டிரர் அவனுடன் ஆடியதுதான் தவறு எனவும் கூறுகிறார். பிறகு யுத்தத்திலும் சகுனி சரியாகவே வீரமாக போரிட்டான் என்றும் சோ கூறுகிறார்.

இதில் நியாய அநியாயம் பார்க்கவியலாது எனக்கூறும் மைதிலி வசுமதி சம்மதித்தால் சாம்பு சாஸ்திரிகளை மிரட்டுவதை மேற்கொள்ளப் போவதாகச் சொல்ல, வசுமதியும் சம்மதிக்கிறாள்.

பாகவதரின் பேரன் அவனுக்கு அவன் அன்னை வாங்கித்தந்த ஸ்கூட்டருடன் வருகிறான். தன் தாத்தா பாட்டியை சவாரிக்கு ஏற்றிச் செல்கிறான். அவர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் இருக்க, அவர்களது மருமகள் ராஜி விட்டேற்றியாக பேசுகிறாள்.

சிங்காரத்தை வரவழைத்த மைதிலி அவன் சாம்பு சாஸ்திரிகளை மிரட்ட வேண்டும் எனக்கூற, அவன் திட்டவட்டமாக மறுக்கிறான். மைதிலி என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லை.

உமாவின் குழந்தையை பார்க்க வரும் அசோக்கை அவமானப்படுத்துகிறான் அவள் கணவன் ரமேஷ். அசோக் குழந்தைக்காக வாங்கி வந்த கவுனையும் துச்சமாகப் பேசி நிராகரிக்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/15/2010

கேணி சந்திப்பு - 14.02.2010

கேணி சந்திப்புகளை ஞாநி அவர்கள் 8 மாதங்களாக நடத்தி வருகிறார். நேற்று ஒன்பதாம் கூட்டம் என அவர் சொன்னார். நான் போக வேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைத்து ஏதோ காரணத்தால் அது தள்ளிபோடப்பட்டுக் கொண்டே வந்தது.

14.02.2010 மதியம் 03.30-க்கு துவங்கும் கூட்டத்தில் ஜெயமோகன் முக்கிய விருந்தாளியாக பேசுவார் என அறிந்ததுமே என் மனதில் அதை புத்தகக் குறி இட்டு வைத்து கொண்டேன். அதே தினம் மாலை 05.30 மணியளவில் கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரனுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. இரண்டுமே கேகே நகரில் நடந்ததால் பிரச்சினை இல்லை. என்ன, ஜெயமோகன் மீட்டிங் மாலை ஆறரைக்குத்தான் முடியும். ஆக கேபிள் சங்கர் நிகழ்ச்சிக்கு நான் ஒரு மணி நேரம் தாமதமாகப் போகப்போவது முதலிலிலேயே வரையறுக்கப்பட்டு விட்டது.

எனது கார் ஞாநியின் வீட்டை அடைந்தபோது மணி சரியாக 03.30. அவர் வீட்டுக்கான வழியை நான் சரவணபவன் ஹோட்டல் அருகில் ஒருவரிடம் அழகிரிசாமி தெரு பற்றி கேட்டதற்கு அவர் 39-ஆம் நம்பர்தானே என திருப்பிக் கேட்டார். ஏற்கனவே யாராவது அவரிடம் கேட்டார்களா என்பதற்கு அவர் நான் இக்கேள்வியை அவரிடம் கேட்கும் 11-வது நபர் என்றார்.

நான் உள்ளே சென்றபோது கேணிக்கருகில் இருந்த நாற்காலிகள் பாதிக்கு மேல் நிரம்பியிருந்தன. சில நிமிடங்களில் ஞாநியும் ஜெயமோகனும் வந்து கூட்டத்தை துவக்கினர். நம்மால் ஏன் விவாதம் செய்ய மிடிவதில்லை என்பது பற்றி ஜெயமோகன் பேசுவார் என ஞாநி குறிப்பிட்டார். அவர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் கேள்வி கேட்கலாம் எனவும் கூறினார்.

முதலில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு விடுகிறேன். நான் கையில் நோட்டு புத்தகம் எதையும் எடுத்து செல்லவில்லை. ஆகவே வழக்கமாக நான் செய்யும் குறிப்புகளை எழுதிக் கொள்வதையும் செய்யவில்லை. இங்கு எழுதப் போவது முற்றிலும் எனது நினைவிலிருந்தே வருபவை. எனவே சில விஷயங்கள் விட்டுப் போகலாம், சரியான வரிசையில் வராது போகலாம். எப்படியும் ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் எழுதப்போகிறார். ஞாநியும் எழுதுவார், ஆனால் அவர் தளத்துள் போவது சில முயற்சிகளை தேவையாக்கும். பார்ப்போம்.

ஜெயமோகன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை என்பதில் இருந்து அவர் துவங்கினார். பழங்காலங்களில் விவாதத்துக்கு புதிதாக வருபவரிடம் அமைப்பாளர்கள் அவர் எந்த சந்தஸ்-ல் பேசப் போகிறார்கள் என கேட்பார்களாம். இந்த இடத்தில் சந்தஸ் என்பதை சொற்களின் அர்த்தத்தை கூறுவதாக புரிந்து கொண்டேன். சில கலைச்சொற்களை எந்த அர்த்தத்தில் பிரயோகம் செய்வது என்பதை definition of terms/concepts என பல அறிவியல் கட்டுரைகளில் முதலிலேயே எழுதி விடுவார்கள் என்பதை நான் மொழிபெயர்ப்பு செய்த ஜெர்மன்/பிரெஞ்சு/ஆங்கில எழுத்துக்களில் பார்த்தவன் என்ற முறையில் ஜெயமோகன் சொன்னது புரிந்தது.

ஒருவர் தன் கருத்தைக் கூறும்போது சில terms of reference வைத்திருப்பார். அதனுள் அவர் கூறியதை மறுப்பதுதான் சரியான விவாதத்துக்கு வழிவகுக்கும். அதை விடுத்து tangential ஆக கேள்விகளை எழுப்புவது திசை திருப்பல்களாகத்தான் இருக்கும். அது குறித்து பல உதாரணங்கள் தந்தார். தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன ஒன்றை திரித்து சிலர் எழுத, அது அப்படியில்லை எனச் சொல்லிச் சொல்லியே தன் நாட்கள் கடப்பதாகவும் அவர் கூறினார். செங்கல் மேல் செங்கல் அடுக்குவதுபோல அவர் விஷயங்களை சொல்லிக் கொண்டே போனார். அவை எல்லாவற்றையும் இங்கே தர இயலவில்லை.
(frame of reference - என்று ஜெயமோகன் சொல்லியதாக சுட்டிக்காட்டிய கிருஷ்ண பிரபுவுக்கு நன்றி. அதை குறிப்பிட்ட பிறகு தான் உபயோகிக்கும் கலை சொற்களை எனத் பொருளில் கூறுகிறார் வாதத்தை வைப்பவர் என்பதையும் தெளிவுபடுத்துவது முக்கியம் என்றும் அவர் உடனேயே கூறியதால் நான் சற்றே குழம்பிவிட்டேன் என நினைக்கிறேன்).

பேச்சுவாக்கில் என்னை உதாரணமாக வைத்து சொன்ன ஒன்று நினைவில் இருக்கிறது. டோண்டு ராகவன் ஒரு விஷயம் பற்றி ஒரு கட்டுரை எழுதினால், அதில் உள்ள விஷயத்தை ஆங்கிலப்படுத்தி கூகளிட்டு பார்த்தால் நூறுக்கும் மேலான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம், அவற்றை பார்த்து டோண்டு ராகவன் தவறாகக் கூறினார் என்பதை கட்டுரையின் கருப்பொருளை பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர் கூட கூறிட இயலும் என அவர் குறிப்பிட்டார். (இதை கேட்டு நான் புன்னகை செய்தேன். ஏனெனில் இதை நான் ஏற்கனவே அனுபவித்தவன்). இவையெல்லாமே பேசியவரின் terms of reference-ஐ அலட்சியம் செய்து வெளியிலிருந்து கேள்வியை கேட்பதால்தான் வருகிறது என்றார். அப்போது விவாதம் குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் அனுபவத்தைத்தான் தருகிறது. ஆகவே நம்மால் விவாதிக்க முடியவில்லை என்பதை நிலைநாட்டினார்.

பிறகு ஞாநி அவர்கள் எழுந்து கேள்விகளை கேட்கலாம் என சொல்ல, முதல் கேள்வியை நான் கேட்டேன். ஜெயமோகனிடம் ஒரு முறை அவர் பதிவுகளில் பின்னூட்டமிட ஏன் ஏற்பாடு இல்லை என கேட்டதற்கு அவர் முக்கால்வசி பின்னூட்டங்கள் வசைகளாக இருப்பதாலேயே அவற்றை தவிர்ப்பதாக அவர் கூறியிருந்தார். அப்போதெல்லாம் அவரிடம் பின்னூட்டங்களை மின்னஞ்சல்களாகத்தான் அனுப்பவியலும். ஆனால் இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் இருக்கிறது. பின்னூட்டங்களும் வருகின்றன. தற்சமயம் ஒரு பதிவில் சராசரியாக வசைகளின் சதவிகிதம் என்ன எனக் கேட்டேன்.

அவர் பதிலில் வசைகளின் சதவிகிதம் என்ன என்பதை அவர் கூறாவிட்டாலும், ஒரு நல்ல பின்னூட்டத்துக்கு மாறாக நான்கு வசைகள் வருவதாக அவர் கூறினார். ஆகவே வசைகளின் சதவிகிதம் 80% என குன்சாக நான் மனத்தில் குறித்து கொண்டேன். தனது பதிவுகளுக்கு வரும் மட்டுறுத்தல்களை தன்னையும் சேர்த்து நான்கு பேர் செய்வதாகவும், உலகில் வேவேறு இடங்களில் அவர்கள் வசிப்பதால் மட்டுறுத்தல் உடனுக்குடன் நடைபெறுவதாகவும் கூறினார். மற்ற மூவரில் ஒருவர் சிறில் அலெக்ஸ். மற்ற இருவர் பெயர்களையும் குறிப்பிட்டார், நான் மறந்து விட்டேன்.

சில குடும்பங்கள் தவிர பெரும்பாலும் விவாதங்கள் குடும்ப அளவிலேயே ஊக்குவிக்கப் படுவதில்லை என ஒருவர் கேள்வியெழுப்ப, அதை ஏற்றார் ஜெயமோகன். ஒரு சிறுவன் எட்டாவது படிக்கும் தருணத்தில்தான் உண்மையிலேயே தனது சுற்றுப்புறத்தை அவதானிக்கிறான், சகமாணவனுடன் அஜீத் பெரியவரா விஜய் பெரியவரா என்பது பற்றி வீவதிப்பதே அவனைப் பொருத்தவரை துவக்கம் என்றும் கூறினார்.

விவாதம் என வரும்போது எதிராளி எவ்வளவு பெரியவர் என்றெல்லாம் பார்த்து கொண்டிருக்க இயலாது என்றார். தான் சுந்தர ராமசாமியுடன் விவதித்தபோது அதையே ஒரு கண்டனத்துக்கிரிய செயலாக சிலர் கருதியதையும் அவர் குறிப்பிட்டார். சுந்தர ராமசாமி எவ்வளவு பெரிய மனிதர், அவருக்கு சமமாக தன்னைக் கருதிக் கொள்வதா என பொருள்படவும் அவரிடம் சிலர் சொன்னதையும் குறிப்பிட்டார்.

ராஜன்குறை (பெயரை சரியாக சொல்லி திருத்தியதற்கு நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்) என்பவர் ஜெயமோகன் அவரது கட்டுரைகளில் ஒரு extreme நிலைக்கு சென்று விடுகிறார். அதை விடுத்து எல்லா பார்வை கோணங்களையும் அவர் எழுத வேண்டும் என தான் கருதுவதாக அவர் சொன்னார். சில உதாரணங்களும் தந்தார். ஜெயமோகனும் அவருக்கு பாயிண்ட் பை பாயிண்ட் பதில்களை கொடுத்தார்.

இன்னும் சில கேள்விகள் வந்தன. நான் ஏற்கனவேயே கூறியபடி நினைவிலிருந்துதான் கூறுகிறேன். ஆகவே எல்லா கேள்விகளையும் இங்கு கவர் செய்ய இயலவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இப்பதிவை பார்க்கும்போது பின்னூட்டமாக தத்தம் கேள்விகளையும் அவற்றுக்கு ஜெயமோகன் அளித்த பதில்களையும் கூறினால் இப்பதிவு முழுமை பெறும்.

பார்வையாளர்களில் ஒருவராக ஞாநியும் ஒரு கேள்வி கேட்டார். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை ஜெயமோகன் குறைத்து மதிப்பிட்டதாக அவர் கூறினார். அதை ஜெயமோகன் மறுத்தார். வைக்கம் போராட்டமே பெரியார் அவர்கள் ஆரம்பித்ததாகவும் அவரே அதை நடத்தியதாகவும் தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரின் பிரச்சாரத்துக்கு பதிலாகவே உண்மையில் நடந்தது என்ன என்பதை தான் எழுதியதாகவும், பெரியாரின் பங்களிப்பை மறைக்கவில்லை என்பதையும் விளக்கினார். தனது கருத்துக்களை மறுத்து தமிழச்சி எழுதியது எல்லாமே பெரியாரை கோட் செய்துதான் வருகிறது. நடுநிலை ஊடகங்களை அடிப்படையாக வைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கேரளாவில் அக்காலக் கட்டத்தில் வந்த விவரங்களை பார்த்தால் திராவிட இயக்கங்கள் கூறும் ரேஞ்சில் பெரியாரின் பங்களிப்பு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதுவும் இந்த விஷயங்கள் தமிழக கல்விக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். மேலும் வைக்கம் பற்றி தான் எழுதியது காந்தியை பற்றிய சில புரிதல் குறைவுகளை களையும் நோக்கம்தான் கொண்டது என்றும், அதில் பெரியார் காந்தி சநாதனவாதிகளிடம் விலைபோய் விட்டார் என கூறியதை மறுக்க முனைந்தபோது பெரியாரின் உண்மையான் பங்களிப்பு இவ்வளவுதான், அதற்கு மேல் இல்லை என காட்டவே அவரைப் பற்றி எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தின்போது நான் எழுந்து நின்று, வைக்கத்துக்கு பிறகு பெரியார் தமிழகத்தில் ஆலயப் பிரவேச போராட்டம் ஒன்றுமே தலைமை தாங்கி நடத்தவில்லை, இரட்டைக் குவளை பிரச்சினைக்கும் எந்த போராட்டமும் நடத்தியதாகத் தெரியவில்லை. அவர் செய்த ஒரே போராட்டம் பிராமணாள் ஹோட்டல் என பெயர்ப்பலகைகளில் இருந்ததி தார் பூசி அழிக்க முயன்றது மட்டுமே என்பதை கூறினேன்.

(அவ்வப்போது பிள்ளையார் பொம்மைகளை உடைப்பது, ராமர் படத்துக்கு செருப்புமாலைகள் போடுவது ஆகிய அவரது மற்ற பொழுதுபோக்கு செயல்களை நான் நேரமின்மை கருதி கூறாமல் விட்டுவிட்டேன், இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்).

கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை உயிரோடு கொளுத்திய பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரைக்கூட கூறாது, அந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்டுகளால் துவக்கப்பட்ட கூலி உயர்வு போராட்டம் என கொச்சை படுத்தினார் என்றும், ஒரு நாயுடுவின் செயலை ஒரு பலீஜா நாயுடு பூசி மொழுகியதாகவும்தான் நான் இதை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

தலித்துகளுக்கு என தனிப்பட்ட முறையில் ஏதும் செய்யவில்லை எனவும், அவர் கவலை எல்லாம் பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் நலன் பற்றி மட்டுமே என நான் குறிப்பிட்டேன். நான் கூறியதற்கு எதிர்வினை இல்லாதது நேற்றைய விவாதப் பொருளுக்குள் அதுவராததால் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றும் நான் கூறிவிடுகிறேன்.

காந்தி அம்பேத்கர், காந்தி பெரியார் ஆகிய விவாதங்கள் போது சம்பந்தப்பட்டவர் இடையே எழுந்த பிரச்சினைகள் தர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே என்றும், அவர்றை ஜெயமோகன் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த பிரச்சினையாக கூறியதாக (காந்தி தர்மத்தின் தரப்பு) ராஜன் துரை மீண்டும் கேள்வியெழுப்ப, அதையும் வாதங்களுடன் மறுத்தார் ஜெயமோகன்.

இவ்வாறே நிகழ்ச்சிகள் சுவாரசியமாக போக மணி ஆறரை ஆனதே உணரமுடியவில்லை. ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10% விற்பனைக் கழிவு உண்டு எனவும் ஞாநி அறிவித்தார். எனக்கும் புத்தகம் வாங்க ஆசைதான். ஆனால் கேபிள் சங்கர் பரிசல்காரன் புத்தக வெளியீட்டுக்கு போக வேண்டியிருந்தது. ஆகவே அங்கு சென்றேன்.

அங்கு சென்று இருவரது புத்தகங்களையும், கூடவே கீழே உள்ள புத்தகக் கடையில் நர்சிம் எழுதிய அய்யனார் கம்மா புத்தகத்தையும் வாங்கினேன். மற்றப்படி நிகழ்ச்சிக்கு வெகு நேரம் கழித்து போனதால் சரியாக கவனிக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பித்திருந்தால் இரு சந்திப்புகளுக்கும் நல்ல முறையில் சென்றிருக்கலாம் என நினைக்கிறேன். இது என் சொந்த கருத்து மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/14/2010

இன்று பிரதோஷம், நாளை வாலண்டைன்ஸ் டே - ஒரு மறு பிரசுரம்

தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்கிறேன்.

உலகமே காதலர்களை காதலிக்கிறது என்று பொருள் வரும் ஆங்கிலச் சொலவடை உண்டு. அவர்களுடன் இந்த தினம் சேர்த்து சொல்லப்படுகிறது.

புனிதர் வேலண்டைன் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாள்தான் காதலிகள்/காதலர்கள் தத்தம் (இது முக்கியமாக அண்டர்லைன் செய்ய வேண்டியது) காதலர்/காதலிக்கு தங்கள் காதலை வலியுறுத்திக் கூறுவர். அன்று வேலண்டைன் கார்டுகள், மிட்டாய்கள் அல்லது தரும ஸ்தாபனங்களுக்கு டொனேஷன் (பெயர் சொல்லாது அளித்தல்) ஆகியவை நடைபெறும். பூக்கள் சர்வ சாதாரணமாக அளிக்கப்படும்.

வேலண்டைன் தினம் என்பது இரண்டு கிறித்துவத் தியாகிகள் நினைவாக வந்தது. இருவரது பெயரும் வேலண்டைன் ஆகும். மத்திய காலம் என அறியப்படும் Middle Ages- ல் இந்த தினம் காதலர்களுக்கு சொந்த தினமாக மாறியது. ஏனெனில் அப்போதுதான் ஷிவால்ரி என்று அழைக்கப்படும் பண்பு வேர் ஊன்றியது. இந்த தினத்தில் வேலண்டைன் என்று அழைக்கப்படும் கடிதங்களை காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர். இப்போதெல்லாம் அக்கடிதம் இதய வடிவத்தில் இறக்கையுடன் கூடிய காதல் கடவுளாம் க்யூப்பிடை வைத்து வருகிறது. 19-ஆம் நூற்றாண்டு வரை கையால் எழுதப்பட்டு வந்த இது, அச்சமயத்தில்தான் அச்சடித்த கார்டுகளில் வர ஆரம்பித்தது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 100 கோடி கார்டுகள் பரிமாறிக் கொள்வதாக நம்பத்தகாத வட்டாரங்கள் (கார்டுகள் விற்பவர்கள்) கூறுகின்றன. கிறிஸ்துமசுக்கு அப்புறம் இவ்வகை கார்டுகள்தான் அதிகம் பாப்புலர் என்றும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன.

உலகமயமாக்கலின் உபயத்தில் இம்மாதிரி கார்டுகள் இந்தியாவிலும் அதிகமாக புழங்குகின்றன. ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பின் நவீனத்துவ பொதுவுடைமைவாதிகள், தமிழ்குடிதாங்கி ஆகியோரைத் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லோராலும் இந்த தேசத்திலும் வரவேற்கப்படுகிறது.

எங்கள் வீட்டில் இது ஆண்டுக்கு 24 முறை கொண்டாடப்படுகிறது. அதை பற்றி நான் இந்தப் பதிவில் கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டுள்ளேன்.

"At 1:29 AM, dondu(#4800161) சொல்வது...
ஒரு பிப்ரவரி -14-ல் என் வீட்டம்மாவுக்கு ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என்று கூறியதற்கு ஒரு நிமிடம் என்னை விழித்துப் பார்த்து விட்டு, இன்னைக்கு பிரதோஷம், கோயிலுக்குப் போகணும் என்று கூறிவிட்டு எங்கள் ஊர் லக்ஷ்மிநரசிம்மர் கோவிலுக்கு விரைந்தார்.

அன்று முதல் எங்கள் வீட்டில் பிரதோஷமெல்லாம் வேலண்டைன் டேயாகவும், vice versa ஆகவும் உருவெடுத்தன".

ஆகவே இன்று பிரதோஷம், வாலண்டைன்ஸ் டே இந்த மாதம் 11-ஆம் தேதியே முடிந்து விட்டது.

பை தி வே டி.பி.ஆர். ஜோசஃப் தம்பதியருக்கு திருமணதின வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/13/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 13.02.2010

பிளாக்கர் விஷயம் ஒன்று புதுசா
தனிப்பட்ட முறையில் நமது பதிவுகளை ஒவ்வொன்றாக காட்சிப்படுத்தும்போது பதிவின் கீழே மூன்று பட்டன்கள் காணப்படும். அவை இடமிருந்து வலமாக முறையே அடுத்த பதிவு, இல்லம் மற்றும் முந்தைய பதிவு ஆகும். இந்த மூன்று பட்டன்களில் எதன் மேல் எலிக்குட்டியை வைத்தாலும் க்ளிக் செய்ய ஏதுவாக கை சின்னம் தெரியும் (காங்கிரஸ் கட்சிச் சின்னத்தைக் கூறவில்லை முரளி மனோகர், நன்றி).

அங்கு க்ளிக் செய்தால் அதது காட்டும் பக்கங்களுக்கு செல்லலாம். ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அதாவது அவ்வாறு கிளிக் செய்து முந்தைய பதிவுக்கு செல்ல முடிந்தது, இல்லத்துக்கும் செல்ல முடிந்தது. ஆனால் அடுத்த பதிவுக்கான பட்டனின் மேல் எலிக்குட்டியை வைத்தால் கை ஒன்றும் தெரியவில்லை. மற்றவர்களது வலைப்பூக்களில் இப்பிரச்சினையை பார்க்கவில்லை. என்னுடையதில் மட்டுமே அது தென்பட்டது.

இது குறித்து ஒரு நாள் பத்ரிக்கு தொலைபேசி கேட்டேன். அவர் எந்த வலைப்பூவில் எல்லா பட்டன்களும் செயலாக இருக்கின்றனவோ அதன் வார்ப்புருவை என்னையும் பாவிக்க சொன்னார். ஆனால் நான் சோம்பலில் அதை செய்யாது விட்டு விட்டேன். ஆனால் என்ன ஆச்சரியம் இன்று பார்த்தால் மேற்சொன்ன மூன்று பட்டன்களும் செயலாக உள்ளன. என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. பிளாக்கர் டெம்பிளேட்டில் ஏதேனும் பிழை இருந்து அதை இப்போது சரி செய்திருப்பார்களா?

வடிவேலு - சிங்கமுத்து விவகாரம்
இவர்கள் ஒருவரை ஒருவர் காலை வாருவது சினிமாவில் பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை வாழ்க்கையில் பார்க்க சகிக்கவில்லை. சிங்கமுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு கூறுகிறார். அவரை நம்பி இவர் நிலம் வாங்கினாராம். சிங்கமுத்து என்ன ரியல் எஸ்டேட்டில் நிபுணரா? அதற்கெனவே பிரத்தியேக தொழில்காரர்கள் இருப்பார்களே. அவர்களை விட்டுவிட்டு தொழில்தகுதி இல்லாதவர்களையெல்லாம் நம்பினால் இப்படித்தான் ஆகும்.

அதை விடுங்கள், அது அவர்கள் சொந்தப் பிரச்சினை. அவர்களே பார்த்து கொள்வார்களாக இருக்கும். ஆனால் காமெடி என்னும் பெயரில் பல எதிர்மறை என்ணங்களை விதைப்பதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உடல் ஊனத்தை கேலி செய்யும் காட்சிகள் கோபத்தையே வரவழைக்கின்றன.

சில தொழில்களை கேவலமாக காமெடி செய்வதும் நடக்கிறது. வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தில் இந்த சீனை கவனியுங்கள். உங்களுக்கே புரியும்.

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - ஜயா ஜேட்லி
எப்படி இருந்த ,மனிதர் இப்படி ஆகிவிட்டார். அல்சீமர் வியாதி யாருக்கும் மரியாதை தருவதில்லை. தாட்சர், ரீகன் வரிசையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் சேர்ந்துள்ளார். ஒரு சமயத்தில் அவரது ஒரு சொல்லில் மும்பை முழுக்க வேலைநிறுத்தம் பந்த் ஆகியவற்றை உருவாக்கியவர். அவருக்கு இப்போதைய நிலைமையா, மனம் கனமாகிறது.

இதுவரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த அவரது உறவுக்கூட்டம் இப்போது வந்து மொய்க்கிறது. 26 ஆண்டுகளாக அவருக்கு துணையாக இருந்த ஜெயா ஜேட்லியை ஓரம் கட்டியுள்ளது. ஜெயா ஜேட்லிக்கு அநியாயம் நடக்கிறது என்று கூறுவதைவிட ஜார்ஜுக்குத்தான் அநியாயம் நடக்கிறது என்பேன் நான்.

என்ன செய்வது, பிணம் கிடக்கும் இடத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் வட்டமிடும், பணம் கிடைக்கும் இடத்தில் சொந்தம் என்னும் பேரில் பணந்தின்னிக் கழுகுகள் வட்டமிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சூரியின் ஜெஸ்டஸ் - ரோஜாக்களின் எழுச்சி - 4

மூன்றாம் அத்தியாயமும் மிகப்பெரியதுதான். ஆகவே அதையும் சில பகுதிகளாக பிரித்தாக வேண்டும். எத்தனை பகுதிகள் வரும் என்பது இப்போதைக்கு இன்னும் தெரியவில்லை.

முதல் அத்தியாயம் இங்கே

இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 4)

ரோஜாக்களின் எழுச்சி - 4
இரவு வருவதற்குள் அண்டைவீட்டார் சுதாரித்து கொண்டனர் போல. அவரவர் தத்தம் செல்பேசிகளுடன் ஆஜர். லோலிட்டா சைரன் ஹெலன் என்னும் பெயருடைய தனது நண்பியுடன் பேசிக்கொண்டிருந்தாள். “அடியே ஹெலன் நான் இன்னிக்கு என்ன பண்ணேன் தெரியுமா”?
“வாழைப்பழத்தோலியில் கால்வைத்து வழுக்கி விழுந்ததில் குண்டியில் பலத்த அடி” ஹெலனின் குரலில் தத்ரூபமாக ஜெஸ்டசின் சில்லு உரக்கக் கத்தியது. அடுத்த முனையில் இருந்த அந்த ஹெலன் வீல் எனக்கத்தினாள், “ஐயையோ நிஜம்மாவாடீ? என்ன ஆச்சு!” சைரன் சொன்னாள்,
“சேச்சே அப்படியெல்லாம் இல்லை, இங்கே யாரோ என்னை வேணும்னே வெறுப்பேத்தறாங்க”.
“ஆனாக்க சைரன், அப்படியே உன் குரல் மாதிரியே இருந்திச்சே”.
“இருக்கலாம் ஆனா நான் அதை சொல்லல்லை”.
உடனே சில்லு தன் வேலையை மறுபடியும் காண்பித்தது, சைரனின் குரலில்
“இல்லே ஹெலன், நான் சொல்லறதை நம்பு. நேரிலேயே வா, குண்டியில அடிப்பட்ட இடத்தை காட்டறேன்”.

சைரன் செல்பேசியை அணைத்து விட்டு உள்ளே ஓடினாள். அவள் அப்பா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கினாள். ஒரு விக்கெட் அவுட். அடுத்து வந்தது அந்த எக்ஸிக்யூட்டிவ் தடியன். யாரிடமோ செல்பேசியில் அறுத்து கொண்டிருந்தான்.
“என்னப்பா பால், பாத்து ரொம்ப நாளாச்சில்ல”

அவனுக்கு உரித்தான சில்லு இப்போது டியூட்டிக்கு வந்தது. “ஏதோ ஒண்ணு ஒங்கிட்ட சரியில்லையப்பா. பாத்து ரொம்ப நாளாச்சா, போய் கண் டாக்டரை பார்க்கறதுதானே. பாக்காம எப்படி இருக்க முடியும்? இல்லேன்னா ரொம்ப தண்ணி போட்டியா”? இன்னொரு அண்டை வீட்டுக்காரனான காலேஜ் பையன் குரலில் அச்சு அசலாக சில்லு பேசியது. எக்ஸிக்யூடிவ் தடியன் ஒரு நிமிடம் திடுக்கிட்டான். பிறகு சுதாரித்து கொண்டான். அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றன. அவனது ராடார் சிக்னல்களை வாங்க தயாராக இருந்தது. ஆனால் சிக்னல்கள்தான் வாங்கப்பட தயாராக இல்லை. திகில் படங்களில் வருவது போன்ற மயான அமைதிதான் நிலவியது.

பிறகு சப்தமாக கதவை சாத்திக் கொண்டு ஜன்னல் திரைக்கு பின்னால் நின்று இரவு விஷன் பைனாக்குலர் மூலம் வெளியே வேவு பார்த்தான். ஒன்றும் கண்ணுக்கு சிக்கவில்லை என்று சொல்லவும் வேண்டுமோ?

பெரிய ஏப்பத்துடன் காலேஜ் நாதாரி தனது செல்பேசியுடன் இப்போது வந்தது.

“அடே வில்லியம் நாயண்ட மோனே, மோனா என்னோட ஆள் அவ கிட்ட வச்சுண்டா நீ க்ளோஸ் மச்சி” என்று கத்தினான். அவனுடைய சில்லு கடமை உணர்ச்சியுடன் செயலுக்கு வந்தது.

“இதபாருடா கம்முனாட்டி, மோனா என்னோட பொண்ணு. அவகிட்ட வாலு, இல்ல வேறு ஏதாச்சயும் ஆட்டினே மவனே ஆட்டறதை வெட்டிடுவேன். என் கையில பல கிரிமினல்ஸ் குழுக்கள் இருக்காங்க. ஜாக்கிரதை,” இது கம்பெனி அதிகாரியின் குரலில்.

காலேஜ் நாதாரி கோபத்துடன் கைப்பிடி சுவர்களை தாண்டி வந்து சுற்றுவட்டாரத்தில் நேரடியாகவே தேடினான். யாரும் சிக்கவில்லை. கம்பெனி அதிகாரியின் வீட்டை கூர்ந்து கவனித்தான். பிறகு தன் வீட்டு பால்கனிக்கு சென்று சுவர் மேல் குறுக்காக உட்கார்ந்தான்.

இப்போது நான்கு சில்லுகளும் தத்தம் கைவரிசைகளை காட்ட ஆரம்பித்தன. ஆந்தை அலறியது, காகம் கரைந்தது, புலி உறுமியது, கழுதை புலி கேனத்தனமாக சிரித்தது, சிங்கம் கர்ஜித்தது, யானை பிளிறியது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஜெஸ்டசின் கிக்கிக்கி சிரிப்பு எதிரொலித்தது.

பிறகு சுற்றுவட்டாரத்தில் இடிபோன்ற மௌனம் நிலவியது. இரவு முழுதும் அது நீடித்தது. அடுத்த நாள் காலை சுற்றிலுமுள்ள வீடுகளில் ரகசிய குரல்களில் பேச்சு கேட்டது. நான் வெளியே வந்தேன். என்னையும் சம்பந்தப்பட்டவர்கள் சந்தேகத்துடன் பார்த்தனர். மொசப் பிடிச்ச நாயின் முகக்களிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு நான் பாட்டுக்கு என் வேலைகளை கவனித்தேன்.

அடுத்த நாள் இரவு வழக்கம்போல எனது நாவலை விரித்து உட்கார்ந்தேன். வாசல் கதவில் லேசாக தட்டும் சப்தம் கேட்டது. யாராக இருக்கும் என அனுமானம் செய்த வண்ணம் கதவைத் திறந்தால் அனுமானம் சரியாக செய்ததை உணர்ந்து கொண்டேன். கம்பெனி அதிகாரி, கூடவே லோலிட்டாவின் தந்தை வந்திருந்தனர். அவர்களுக்கு பின்னால் நன்கு உடையணிந்து, மேக்கப் வாசனாதி திரவியங்களை போட்டுக் கொண்டு வந்திருந்த ஒரு பேரிளம்பெண்ணும் வந்தாள். அவள் செண்ட் நெடி தாங்கவில்லை. கம்பெனி அதிகாரியை பார்த்து என்ன விஷயம் என வினவினேன்.

“அதாவது, மிஸ்டர்..” என்றான்.

“என் பெயர் ரைட்டர்”

“நீங்கள் எழுத்தாளரா”?

“ரெண்டும்தான். என் முழுப்பெயர் வைட் ஹார்ட் ரைட்டர் (Wide Heart Writer). கூட வந்த பேண்மணி தேவையின்றி களுக்கென சிரித்தாள்.

“மிஸ்டர் ரைட்டர், இவங்க பேரு மாலினி. இந்த ஊர் மக்கள் நலக்குழுவின் தலைவி”, என்றான் கம்பெனி அதிகாரி.

“அவங்களைத் தெரியுமே. ஒரு தடவை பாத்துருக்கேன்”

“சாரி ரைட்டர். ஒரு நாசுக்கான விஷயம், ஒங்க வீட்டை சற்றே உள்ளே வந்து பாக்கலாமா. அண்டைவீட்டார்களுக்கிடையே இம்மாதிரி ஒத்துழைப்பு வருவது நல்லதுதானே”. அந்தப் பெண்மணியும் தலையை ஆட்டினாள்.

“அதாவது என் வீட்டை சோதனை போடணும்னு சொல்லறீங்க. சர்ச் வாரண்ட் இருக்கா”? நான் மிருதுவாக அதே சமயம் உறுதியுடன் பேசினேன்.

“சோதனை கீதனைன்னு ஏன் பெரிய வார்த்தைகள் எல்லாம் போடறீங்க. உங்க ஒத்துழைப்பைத்தான் கேக்கறோம். சட்ட மிரட்டல் ஏதும் இல்லை. இதை உறுதி செய்யத்தான் மாலினி மேடமும் வந்திருக்காங்க”.

“அதனால் என்ன சார். எனச்க்கு எல்லாரோட நட்பும் வேணும். உள்ளே வாங்க. ஏதேனும் நாய்குட்டி தொலைஞ்சு போச்சா? அதத்தான் தேடறீங்களா”?

கம்பெனி அதிகாரி மாலினியை நோக்கினான். அவள் தொண்டையை கனைத்து கொண்டு பேசலானாள்.

“ஒங்க கிட்டே சொல்லறதுக்கு என்ன சார். நேத்து ராத்திரி இந்த வட்டாரத்திலே பலத்த சத்தங்கள் கேட்டன. கழுதை காள்காள்னு சத்தம் போடறது, குதிரை கனைக்கிறது, நாய் குலைக்கிறது, யானை பிளிறரது அப்படீன்லாம் கேட்டுது. என்னோட வந்திருக்கற உங்க அண்டைவீட்டுக்காரங்க அந்த சத்தமெல்லாம் உங்க வீட்டுலேருந்துதான் வந்ததுன்னு உறுதியா சொல்லறாங்க, அதனாலத்தான்...”.

“என்னது, இத்தனை சத்தமும் என் வீட்டுலேருந்தா? யானை பிளிறினது கூடவா”?

“ஆமாம்”

“ஏதோ ரெண்டாம் வகுப்பு பாட புத்தகத்துல எழுதியிருக்கா மாதிரியில்ல நீங்க சொல்லறது இருக்கு”. அப்பெண்மணி மரியாதைக்கு சிரித்து வைத்தாள். நான் தொடர்ந்தேன்,

“தாராளமா பாருங்கோ. நல்லா செக் பண்ணுங்கோ. இதை வீடுன்னு சொல்லறதை விட புறாக்கூண்டுன்னுதான் சொல்லணும்”. நல்லா பாருங்கோ. இந்த வீட்டிலேயா கழுதை சிங்கம் புலியெல்லாம் இருக்கு? இருந்தா தாராளமா எடுத்துண்டு போங்கோ.வந்தவர்கள் திகைத்தனர். ஏதாவது மிருகங்களின் கழிவுப்பொருள் கீழே கிடக்கிறதான்னு பார்த்தனர். ஒரு வேளை நான் அதெல்லாம் க்ளீன் செஞ்ச தடயமாவது கிடைக்குமான்னு பாத்தாங்க. ஒண்ணுமே சிக்கவில்லைன்னு சொல்லவும் வேணுமா. இந்த வீட்டுல மனுஷங்களுக்கே இடமில்லை, இதுல மிருகங்களை எங்கேத்தான் வச்சுக்கறது என அப்பெண்மணி முணுமுணுத்தாள்.

மன்னிப்பு கேட்டு திரும்பும் மூடில் இருந்தனர். நான் அவர்களுக்கு காப்பி போட்டுத் தருவதாக ஆஃபர் செய்ய, அதற்கு ஏனோ மறுத்துவிட்டு சென்றனர். போகும்போது லோலிட்டாவின் அப்பா ஒரு கேள்வி கேட்டார்.

“நேத்து ராத்திரி உங்களுக்கு ஏதேனும் சத்தம் கேட்டதா மிஸ்டர் வைட் ஹார்ட்”?

நான் சிரிக்காமல் சொன்னேன். நேத்து மட்டுமா, ரொம்ப நாளாவே நீங்களும் மத்தவங்களும் செல்பேசிலே பேசற சத்தம் கேக்கறது. அது சம்பந்தமா மாலினி மேடத்தை அணுகினேனே. அவங்கதான் அப்போ கண்டுக்கலை”.

“ஆனாக்க மிருகங்களோட சத்தம்”, அவர் விடாமல் கேட்டார்.

“என்னைப் பொருத்தவரைக்கும் எல்லாமே சத்தம்தான். நேத்திக்கு ஒண்ணும் மாறுதலா கேக்கலை” அவர்கள் சென்றதும் கதவை சாத்திக் கொண்டேன்.

காலேஜ் நாதாரி ஏன் வரல்லைன்னு யோசிச்சேன். ஆனா அவன் கொஞ்சம் அதிகம் புத்திசாலி. நாங்க பேசிக்கிட்டிருக்கச்ச என் விட்டின் வெளிப்புற சுவர்களை கூர்ந்து ஆராய்ந்ததில் ஜெஸ்டசின் நாலு சில்லுகளும் அவன் கண்ணில் பட்டன. அவை புதிதாக முளைத்தன என்பதையும் அவன் உணர்ந்தான்.

அண்டை வீட்டாருக்குள் இந்த செய்தி காட்டுத்தீ மாதிரி பரவியது. ஞாயிற்றுக் கிழமை காலை அந்த அதிகாரி அவற்றை கூர்ந்து கவனித்தான். நான் அவனுக்கு காலை வணக்கம் சொன்னேன்.

“இந்த ஸ்வஸ்திகா சில்லுகள் பார்க்க அழகா இருக்கே. சமீபத்தில்தான் வாங்கினீங்களா”

“வாங்கறதாவது. என்னோட நண்பர் எனக்கு பரிசா தந்தார். நகரத்துக்கு வெளியே காட்டு பிரதேசத்தில் இருக்கார். எல்லோரும் அவரை பைத்தியம்னு சொல்லறாங்க. அவருக்கு ஏனோ என்னைப் பிடிச்சு போச்சு. இந்த ஸ்வஸ்திகாக்கள் அதிர்ஷ்டம் கொண்டு வரும்னு சொன்னார்”.

“ஏதேனும் எலெக்ட்ரானிக் சில்லா இருக்குமா? அதுங்களை எப்படி சுவத்துல பொருத்தினீங்க”?

அவன் என்ன சொல்ல வரான்னு புரிஞ்சுது. ஆனாலும் ஒண்ணுமே தெரியாத அஞ்சு வயசு பாப்பா மாதிரி முகத்தை வச்சுண்டு சொன்னேன்.

“அப்படியெல்லாம் இல்லை, அவை வெறும் பிளாஸ்டிக் சில்லுகள்தான். அதை வெறுமனே சுவத்துல வச்சு அழுத்தச் சொன்னார். அம்மாதிரியே செஞ்சேன். சபக்குன்னு ஒட்டிண்டுது”.

“அப்படியா? சுவாரசியமா இருக்கே. நான் அதை வெளியே எடுத்து பார்க்கலாமா”?

“தாராளமா பாருங்க பிரச்சினையேயில்லை”.

ஒரு சில்லை பிடித்து இழுத்தான். கையோடு வந்தது. அதை நுட்பமா ஆராய்ந்தான். எப்படி பார்த்தாலும் அது பிளாஸ்டிக்தான்னு புரிஞ்சுது. திரும்ப சுவத்தில வைத்தான். மறுபடியும் சபக்குனு ஒட்டிக் கொண்டது. தலையை சொரிந்து கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான். ஒரு கப் காப்பி சாப்பிட கூப்பிடேன். மறுத்து விட்டு சென்றான்.

அண்டை வீட்டார்களுக்குள் மந்திராலோசனைகள் தீவிரமாயின. ஒரு மாந்திரீகரை வரவழைக்கலாம்னு லோலிட்டாவின் அப்பா சொன்னதை எல்லோரும் நிராகரித்தனர். திடீரென காலேஜ் நாதாரிக்கு ஒரு ஐடியா வந்தது. அவனுடைய பேனா நண்பன் ஒருத்தன் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தான். அங்கு சினிமா நட்சத்திரங்களின் விசிறிகள் ஒருவருக்கொருவர் இடும் சண்டை பற்றியெல்லாம் எழுதியிருக்கிறான். யாரோ தல அப்படீன்னு ஒரு ஸ்டாராம். இன்னொரு ஸ்டார் பேரு இளைய தளபதியாம். அவங்க போஸ்டர்ல எதிர் தரப்பினர் சாணியடிக்கிறது தமிழகத்தின் கலாச்சாரமாம். இதை பார்த்து காலேஜ் நாதாரி ஒரு காரியம் செய்தான். வறட்டி தட்டறா மாதிரி நாலு சில்லுகள் மேலேயும் சாணியைப் பரப்பினான்.

ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/12/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 32 & 33)

எபிசோட் - 32 (10.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(இசைதமிழ் தளத்தில் இந்த எபிசோட் காட்டப்படவில்லை. ஆகவே முதல் சுட்டி இல்லை).

சாம்பு சாஸ்திரிகள் தான் வெளியே போகப் போவதாக அசோக்கிடம் கூறுகிறார். அவர் மனைவி சனிபிரதோஷத்துக்காக கோவில் போயிருப்பதாகவும் கூறுகிறார். அசோக்கோ தான் கோசாலைக்கு போக எண்ணீயதாகக் கூறுகிறான். மேலே விசாரித்ததில் சாம்பு பக்கத்து கோவிலில் ப்ளே செய்யும் ருத்ரம் சிடி தேய்ந்து போனதால் வேறு புதிதாக வாங்கவே தான் வெளியே செல்ல நினைத்ததாகக் கூற, தானே கோசாலைக்கு சென்று திரும்பும்போது அந்த சிடியை வாங்கி சாம்பு சாஸ்திரிகள் கொடுக்கச் சொன்னதாகக் கூறி கோவிலில் அதை தருவதாக ஆஃபர் செய்ய, சாம்புவும் அவனிடம் சிடிக்கான பணம் தருகிறார்.

ருத்ரம் என்பது வேதத்தின் ஒரு பகுதி, அதையெல்லாம் இப்படி சகட்டுமேனிக்கு எல்லா இடங்களிலும் சிடியாக ப்ளே செய்வது தவறு என சோ கூறுகிறார். காரில் போகும்போது போட்டு கேட்பது, வீட்டில் எல்லா சப்தங்களுடன் சேர்த்து போடுவது போன்ற எதுவுமே செய்யத் தக்கவை இல்லை என்றும் கூறுகிறார். வேதம் என்பதை எழுதவே கூடாது, ஆகவேதான் அதை எழுதாக்கிளவி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர் என்றும் கூறுகிறார். இருப்பினும் இப்போதைய காலகட்டத்தில் அதை காம்ப்ரமைஸ்தான் செய்து கொள்ள வேண்டியுள்ளது எனவும் கூறுகிறார்.

சிடி வாங்க ஆடியோ கடைக்கு வரும் அசோக்கை பிரியா சந்தித்து பேசுகிறாள். வக்கீல் அனந்தராமன் புதிதாக சிந்தித்ததில் தன் பேரனை அசோக்கிடம் அனுப்ப வேண்டாம் என முடிவு செய்ததாக செய்தி சொல்கிறாள். அவனிடம் அவர் மன்னிப்பு கேட்பதாகவும் அவள் சொல்ல, அசோக் அதற்கெல்லாம் தேவை இல்லை என கூறிவிடுகிறான். அவர் வீட்டு வாசல் வரைக்கும் வந்த வேதமாதா இப்போது திரும்பச் செல்வதைத்தான் அவன் உணருகிறான் என்றும் அவன் சொல்கிறான். பிறகு பிரியா அசோக்கின் பெற்றோர்தான் சீனியர் லாயரிடம் பேசி அவர் மனதை மாற்றினார்கள் எனக்கூற, அவரவருக்கு சுய சிந்தனை வேண்டும் என்பதையும் அசோக் சொல்கிறான். வக்கீல் தரப்பிலிருந்து அவனது முயற்சிக்கு சிறு நன்கொடை தர பிரியா முயற்சிக்கும்போது அவன் அதை மிருதுவாக மறுக்கிறான்.

கோவிலில் சாரியார் முதலியாரின் இரு மகள்களையும் பார்க்கிறார். இளையவள் அவரது மருமகள். மூத்தவள் பார்வதி நர்ஸ், அவளுக்கு புற்றுநோய். அவள் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் பற்றி சாரியார் அவளிடம் பேசுகிறார். பார்வதிக்கு மனத்தெம்பு கிடைக்கிறது.

நாதனும் வசுமதியும் வேறுவீட்டுக்கு குடிபோக ஏற்பாடுகள் செய்கின்றனர். ஏன் இந்த முடிவு என சிங்காரம் கேட்க பழைய வீட்டில் வாஸ்து சரியில்லை என வசுமதி கூறுகிறாள்.

அதென்ன வாஸ்து என நண்பர் கேட்க, வாஸ்தோபதி பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவையையும், வாஸ்து புருஷன் பற்றி ஆகமவிதிகள் கூறப்ப்ட்டுள்ளவற்றையும் சோ உதாரணங்களுடன் விளக்குகிறார்.

புது வீட்டுக்கு பால் காய்ச்சி சாப்பிடும் தினத்தை நாதன் தீர்மானிக்கிறார். அதன் பிறகு ஒரு 5-ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி தரவேண்டும் என்றும் தீர்மானிக்கின்றனர். பேச்சு இப்படியெல்லாம் உற்சாகமாகச் சென்றாலும் அசோக்கின் நினைப்பு அவ்வப்போது அவர்களை வாட்டுகிறது.

(தேடுவோம்)

எபிசோட் - 33 (11.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சமையற்கார மாமியிடம் சிங்காரம் பல விஷயங்கள் பற்றி பேசுகிறான். சமையற்கார மாமி அவனிடம் பல விஷயங்கள் பற்றி கேட்க, அவனும் பிடி கொடுக்காமலேயே பேசுகிறான். ஒருவருக்கொருவர் வம்பு பேசுவதில் சளைத்தவர்கள் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நாதன் வீட்டுக்கு பிட்சை கேட்டு ஒரு பெண் பைராகி வருகிறார். அவருடன் வசுமதி பேச்சு கொடுக்கிறாள். நாதனின் முன்னோர்களில் ஒருவர் பைராகிக்கு பிட்சை போட மறுத்ததால், இப்போது நாதனின் மகன் பிட்சை கேட்டு செல்லும்போது பிட்சை மறுக்கப்படுகிறது என அவர் கூற வசுமதி கண்கலங்குகிறாள். அவள் அன்னதானம் செய்வது நலம் என பைராகி கூற வசுமதி அதை ஏற்கிறாள்.

பிறகு இது பற்றி நாதனிடம் பிரஸ்தாபிக்க அவர் முதலில் சீறுகிறார். தான் ஏதேனும் தவறு செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் தயார் எனவும், ஆனால் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கு தான் எப்படி பொறுப்பு என கோபத்துடன் கேட்கிறார். அதானே என சோவின் நண்பர் கேட்க, தாத்தாவின் சொத்துக்கு மட்டும் ஆசை ஆனால் முன்னோர்களின் செயலுக்கு பொறுப்பு இல்லை என்றால் எப்படி என கேலி செய்கிறார். மகாபாரதத்தில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதையும் அவர் உதாரணங்களுடன் கூறுகிறார்.

பிறகு வசுமதி ரொம்பவும் மனம் கலங்குவதால் மனமிளகி அன்னதானம் செய்யலாம், ஆனால் அதை ஏதேனும் கோவிலில் வைத்து செய்து கொள்ளட்டும் என அனுமதி தருகிறார்.

ரமேஷ் உமா வீட்டில் ஏதோ எரியும் வாசனை புலப்பட அவனும், அவன் அன்னையும் எங்கு எரிகிறது என்பதை தேடுகின்றனர். தோட்டத்தில் உமா சில காகிதங்களை எரித்து கொண்டிருக்கிறாள். அவள் என்ன காகிதங்களை எரிக்கிறாள் என ரமேஷும் அவள் அன்னையும் கேட்க அவள் பதில் தர மறுக்கிறாள். ரமேஷாக ஏதேதோ கற்பனையெல்லாம் செய்து கொண்டு அவளையும் அசோக்கையும் சம்பந்தப்படுத்தி அவர்களது காதல் கடிதங்களை எரிக்கிறாளா என்றெல்லாம் கேட்க உமாவின் கோபம் அதிகரிக்கிறது. பிறகு உமாவின் மாமனார் வந்து தங்களாத்துக்கு கடந்த நாட்களில் வந்து சேர்ந்த பல உத்திரக்கிரியை சம்பந்தப்பட்ட தகவல் கார்டுகளைத்தான் அவள் எரிக்கிறாள் என்ற உண்மையை போட்டு உடைக்க ரமேஷ் அசடு வழிகிறான்.

உத்திரக்கிரியை கார்டுகளை அவற்றை பார்த்ததும் எரிக்க வேண்டும் என்பது சாத்திரத்தில் கூறியுள்ளதா என சோவின் நண்பர் கேட்க, இல்லையென்கிறார் சோ. இருப்பினும் அமங்கல விஷயங்கள் அதிகம் கண்ணீல் பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்ற எண்ண ஓட்டமே இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்.

முக்கியமாக எரிக்க வேண்டியது ரமேஷின் இந்த தகாத சந்தேகத்தை என உமா கூறிவிட்டு அப்பால் செல்கிறாள். சந்தேகம் என்பது பெரிய வியாதி அது வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டு சோ அவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக மகாபாரதத்தில் பீஷ்மர் சாந்தி பர்வத்தில் யுதிஷ்டிரருக்கு சொன்ன போதனைகள் சமயத்தில் சொன்ன கதையையும் அவர் கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/10/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 30 & 31)

எபிசோட் - 30 (08.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2

இன்றைக்கான எபிசோட் ஆரம்பமாவதற்கு முன்னமேயே சோ அவர்கள் தான் திருநள்ளாறு பற்றிய விவரங்களை சொல்லும்போது வந்து விழுந்துவிட்ட ஒரு தகவல் பிழையை கூறுகிறார். அதாவது முசுகுந்தனுக்கு இந்திரனால் கொடுக்கப்பட்டவை சிவலிங்கங்கள் அல்லவென்றும், அவை மூர்த்திகளே என்றும் கூறி, இதை சிங்கப்பூரிலிருந்து நிரஞ்சன் நந்தகோபன் என்பவர் தனக்கு சுட்டிக்காட்டியதையும் கூறுகிறார். பிறகு எபிசோட் ஆரம்பிக்கிறது.

தன்னை சந்தேகித்து விசாரிக்கும் போலீஸ்காரரிடம் அசோக் பொறுமையாக விளக்க முற்பட, அங்குவரும் சிங்காரம் நிலையை சரிசெய்கிறான். நீலகண்டன் வீட்டுக்கு வருகிறார் பாகவதர். அவரிடம் மன்னிப்பு கேட்ட அவரிடம் நீலகண்டன் அதெல்லாம் தேவையில்லை எனக்கூறிவிடுகிறார். பிறகு பாகவதர் அதுபற்றி பேசும்போதெல்லாம் அவரை அது பற்றி பேசாது வேறுவிஷயங்களையே நீலகண்டனும் அவர் மனைவியும் பேசி பேச்சை மாற்றுகின்றனர். சிறிது நேரம் கழித்து இதை பாகவதர் குறிப்பிட்டு பிறகு தான் இன்னொரு நாள் சாவகாசமாக வருவதாகக் கூறி விடைபெறுகிறார்.

சாம்புவின் வீட்டுக்கு நாரதர் வேற்று ரூபத்தில் வருகிறார். அவரை பார்க்கும்போதே சாம்பு சாஸ்திரிகளுக்கு மனம் புல்லரிப்பது நன்கு தெரிகிறது. கடவுளுக்கு மனிதன் கடன்பட்டுள்ளான், அதைத் தீர்க்கும் வழியே எல்லோரிடத்திலும் கடவுளை காண்பதேதான் என்று கூறும் நாரதர் அதே போல கடவுளும் மனிதனிடம் கடன்பட்டுள்ளதால் அவதாரங்கள் நிகழ்கின்றன எனவும் கூறுகிறார்.

அப்படியா என சோவின் நண்பர் கேட்க, நாரதர் கூறுவது கவித்துவமாக இருந்தாலும், அவதாரம் என்பது துஷ்ட நிக்கிரகம், சிஷ்ட பரிபாலனம் என்பதற்காகவே என தெளிவுபடுத்துகிறார். (இந்த சீரியலில் இம்மாதிரியாக பல இடங்களில் சோவின் வியாக்கியானம் சீரியலில் சொல்லப்படுவதுடன் லேசாக மாறுபடுகிறது, அதையும் சோ அவர்கள் அவ்வப்போது கூறிவருகிறார் என்பதை இந்த இடத்தில் இப்போதைக்கு சொல்லி வைத்துவிடுகிறேன்). ராமாவதாரத்தின் நோக்கம் ராவண வதம் மட்டுமல்ல என்றும், பிருகுமுனிவர் தனக்கிட்ட சாபம் பலிக்க வேண்டும் என்பதற்காகவும் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தார் எனவும் சோ சுட்டிக்காட்டுகிறார்.

நாரதர் மேலே பேசுகிறார். அசோக் செய்வது தெய்வீக காரியத்துக்குள் வருகிறது என சாம்பு சாஸ்திரிகளுக்கு கோடிகாட்டிவிட்டு அவர் விடைபெற்று செல்கிறார்.

நாரதர் கூறியவை சாம்பு சாஸ்திரிகளுக்கு திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன. அப்போது அங்கு வரும் அசோக் தன்னால் முடிந்த அளவு வேதபடிப்புக்கு பிள்ளைகளை சேர்க்க முயற்சிக்கப் போவதாக சொல்லி அவர் ஆசியை வேண்டுகிறான். ஜெயவிஜயீபவ என சாம்பு சாஸ்திரிகள் ஆசி அளிக்கிறார்.

அசோக் இது சம்பந்தமாக ஒருவர் வீட்டுக்கு சென்று அவர் பிள்ளையை வேதம் படிக்க அனுப்புமாறு கேட்கிறான், அவரும் சற்று யோசிக்கிறார். ஆனால் அவரது மனைவி அது முடியாது என நிர்தாட்சண்யமாகக் கூறிவிடுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 31 (09.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் சமையற்கார மாமி வசுமதியிடம் அசோக் ஒவ்வொரு வீடாகச் சென்று தன்னிடம் வேதம் படிக்க வீட்டுக்கு ஒரு பிள்ளையாக அனுப்புமாறு கேட்பதாக கூறுகிறாள். அப்பக்கம் வரும் நாதனுடன் வசுமதி இது பற்றி விவாதிக்கிறாள். அசோக் செய்வது வேண்டாத வேலை என கோபப்படும் நாதன், முதலில் அவனுக்கே வேதம் முழுசாக தெரியாதென்றும், இருக்கும் நான்கு வேதங்களுடன் கூடவே மேலும் இரு வேதங்கள் உள்ளன என்று கூறுகிறார்.

இது நிஜமா என நண்பர் கேட்க, சோ அவர்கள் இரண்டு மட்டுமல்ல, எண்ணற்ற வேதங்கள் மேற்கொண்டு உள்ளன என்று கூறுகிறார். அது பற்றி சில விவரங்களும் தருகிறார். பரத்வாஜ முனிவர் வேதங்கள் அனைத்தையும் கற்க முயன்று முன்னூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும் வரம் பெற்றதாகவும், அத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்வ் கற்றது கைம்மண்ணளவே என இந்திரன் அவருக்கு எடுத்துரைத்ததாகவும் கூறுகிறார்.

அசோக்கின் இந்த முயற்சி ஆரம்பத்திலிருந்தே தோல்வியைத்தான் தழுவப்போகிறது என்றும், உலகம் பல விஷயங்களில் முன்னேறிவரும்போது அசோக் பின்னோக்கி செல்ல விரும்புகிறான் என்றும் அவர் கூறுகிறார்.

சாம்பு வீட்டுக்கு பிரியா தனது சீனியர் அட்வொகேட் அனந்தராம ஐயரை அழைத்து வருகிறாள். தன் மாமனார் சாம்பு சாஸ்திரிகளிடம் அவரை அறிமுகம் செய்வித்து அவர் அசோக்குடன் பேச விரும்புவதாக கூறுகிறாள். சாம்பு சாஸ்திரிகளும் அசோக்கை வரவழைக்கிறார்.

அசோக் வேதம் கற்று கொடுக்க நினைப்பதை தான் கேள்விப்பட்டதாகவும், அவன் தனது பேரனை மாணவனாக அங்கீகரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறார். அப்பையனின் தாய் தந்தையரின் அனுமதி அதற்கு தேவை என கூறுகிறான் அசோக். அவர்கள் உயிருடன் இல்லையென்றும், ஒரு விமான விபத்தில் இருவருமே இறந்து விட்டனர் என அனந்தராமன் கூறுகிறார்.

இந்த பெரும் சோகம் பையனுக்கு அளிக்கப்பட்டது ஒரு வேளை அவன் ஞான மார்க்கத்தில் வருவதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என அசோக் கூற, blessing in disguise-ஆ என பிரியா கேட்கிறாள்.

ஆதி சங்கரர் மூலம் உலகுக்கு நல்லது செய்தார் கடவுள், நம்மாழ்வாரால் நாலாயிர திவ்யபிரபந்தம் சாத்தியமாயிற்று என அசோக் கூறுகிறான்.

இது பற்றி நண்பர் கேட்க, நம்மாழ்வாரின் பிரபந்தங்கள் ராமானுஜரின் வைணவக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருந்தது என கூறுகிறார். பிறகு பல இடங்களில் சிதறிக்கிடந்த பிரபந்தங்கள் நாதமுனிகளால் ஒருங்கிணைக்கப் பட்டன என்பதையும் கூறுகிறார்.

அசோக் சாத்திரங்களால் மனிதன் கெடமாட்டான் என்றும், அனந்தராமன் தன் பேரனை அழைத்து வருமாறும் கூறுகிறான்.

நாதன் வீட்டுக்கு பிரியாவும் அனந்தராமனும் வந்திருக்கின்றனர். அசோக்கிடம் அனந்தராமனின் பேரன் வேதம் கற்றுக் கொள்ளப்போவதாக அறிந்த நாதனும் வசுமதியும் அவரிடம் அவர் அவ்வாறு செய்யலாகாது என கூறி அதற்கான வாதங்களையும் முன்வைக்கின்றனர். தங்கள் பிள்ளை அசோக் தேவையின்றி ஒரு லட்சியவாதியாக இருந்து மற்றவர்களையும் கெடுக்கிறான் என அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றனர். வக்கீலுக்கு குழப்பம் வருகிறது.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/06/2010

அவுட்சோர்சிங் பற்றி சில எண்ணங்கள்

எனது முந்தையப் பதிவில் பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இட்ட ஒரு பின்னூட்டமே இப்பதிவுக்கு காரணம். அப்பின்னூட்டம் இதோ:

“உதாரணமாக, ஜெயலலிதா காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், வேலை செய்யவில்லை! அப்போது ஒரு விஷயம் தெளிவாகவே புரிந்தது, அரசு இயந்திரம் உருப்படியாக இருக்க வேண்டுமானால், அரசு ஊழியர்கள் வேலை செய்யாமல் இருந்தாலே போதுமேன்றோ, அல்லது இவர்கள் செய்ததாகச் சொல்லிக் கொண்ட வேலைகள் எதுவுமே பைசாப் பெறாதது என்பதை, அந்தப் போராட்டம் அழகாக நிரூபித்தது.

நாலாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்திற்கு எடுக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை வைத்து, நிலைமையை சமாளிக்க முடியும் என்பதை அந்தப் போராட்டம், outsourcing ஐப் பயன்படுத்தினால் இன்னும் என்னென்னவெல்லாம் வெளியே வரும் என்பதையும் நிரூபித்தது.

Outsourcing தேவையான இடத்தில் தேவையான அளவில் பயன்படுத்தினால், மிகப் பெரிய பொருளாதார ஊக்கியாக இருக்கவும் முடியும்! அரசின் ஊதாரித்தனமான சம்பளச் செலவைக் குறைக்கவும் முடியும்!

இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஓடிவருகிறவர்கள், (முதலில் கீழ்க்கண்ட விஷயங்களை அவதானிக்கட்டும்)

முதலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செலவிடும் சம்பளம், சலுகைகளுக்கு ஈடாக வேலை செய்கிறார்களா?

மக்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புக்களை இவர்களால் நிறைவேற்ற முடிகிறதா அல்லது இவர்களால் மக்களுக்கு உபத்திரவம் தான் அதிகமா?

அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருப்பதை விட்டு விட்டு, தங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக இருக்கிறார்களா இல்லையா”?


இரண்டாம் உலக யுத்தம் முடிந்து ஜெர்மனி மீண்டும் பொருளாதார அற்புதத்தை (Wirtschaftswunder) அனுபவித்தபோது, அவர்கள் சந்தித்த முக்கிய பிரச்சினை ஆள்பலக்குறைவுதான். பல புதிய வேலைகள் உருவாயின, சில வேலைகள் உள்ளூர் மக்களால் நிராகரிக்கப்பட்டன. அவர்றை செய்ய ஆட்கள் அவசியம் தேவை. ஆகவே வெளிநாட்டவர்களை உள்ளே விட்டனர்.

அவர்களை விருந்தாளி தொழிலாளர்கள் (Gastarbeiter) என அழைத்தனர். எல்லாம் நல்லபடியாகவே போயிற்று, பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்த வரையில். ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட இரு தலைமுறைகள் புது தொழிலாளர்கள் உள்ளே வந்து விட்டனர். ஜெர்மனியில் இப்போது இருக்கும் பொருளாதார சங்கடத்தில் இந்த வேலையாளிகளை வரவேற்க ரொம்ப பேர் ஆசைப்படுவதில்லை. துருக்கியர்கள், கிழக்கு ஐரோப்பிய நாடினர் ஆகியோர் முக்கியமாக உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டனர்.

இதற்கு மாறாக அமெரிக்கா, மற்றும் மேற்கத்திய நாடுகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலைமைதான் அவுட்சோர்சிங். அதாவது யாரும் அவர்கள் தேசங்களுக்கு செல்ல மாட்டார்கள். வெளிநாட்டு வேலையாளிகள் அவரவர் நாட்டிலேயே இருப்பார்கள், ஆனால் இணையத்தின் உதவியோடு அவர்கள் அந்தந்த நாட்டின் பல வேலைகளை இந்தியாவிலிருந்தே செய்வார்கள். அந்த நாடுகளில் உள்ள பல கம்பெனிகளில் முழு டிபார்ட்மெண்டுகளே காணாமல் போயின. உதாரணமாக விற்பனைக்கு பிந்தைய சேவைகள், மனிதவளத் துறைகள் ஆகியவை.

இப்போது இதுவும் பல அரசியல்வாதிகளின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி பல நாடுகளில் இந்த அவுட்சோர்சிங் விரோதப் போக்கு நிலவுகிறது. அதை தடுக்க வரிவிதிப்பு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர எண்ணுகின்றனர். ஆனால் அவையெல்லாம் சுலபமாக நடக்குமா எனத் தெரியவில்லை. எது எப்படியானாலும், அமெரிக்க ஐரோப்பிய சம்பளங்கள் தந்து உள்ளூர் மக்களை முழுநேர வேலையில் ஈடுபடுத்துவது இனிமேல் பிராக்டிகலாக இருக்குமா எனத் தெரியவில்லை.

நமது நாட்டிலேயே மாஃப்வா போன்ற நிறுவனங்கள் பல கம்பெனிகளுக்கா ஆட்களை வேலைக்கு எடுக்கும் சேவையளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் பெண்ணீன் கல்யாணத்துக்காக முழு சேவைகளையும் ஒப்பந்தத்துக்கு செய்யும் கேட்டரர்ஸ் பெருகிவிட்டனர். எல்லாம் வாழு, வாழவிடு என்னும் பார்வை கோணத்தில்தான் நடக்கின்றன.

நான் செய்யும் வேலையையே எடுத்து கொள்ளுங்கள். முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்து விட்டனர். என்னைப் போன்ற ஃப்ரீலேன்சர்களே அதிகம். இன்று மொழிபெயர்ப்புகள் தேவைப்படலாம், திடீரென தேவைப்படாமல் போகலாம். அப்போது முழுநேர ஊழியர்களை என்ன செய்வது என்ற பிரச்சினை வரும்? நல்ல வேலை தெரிந்தவர்கள் தாராளமாக கிடைக்கும் நிலையில் அவுட்சோர்சிங் செய்வதே புத்திசாலித்தனம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.

நான் ஐ.டி.பி.எல்.-ல் வேலை செய்தபோது எங்கள் உதவி பொது மேலாளர் ஜலானி அவர்கள் பேசாமல் கம்பெனி கார்கள் அத்தனையையும் டிஸ்போஸ் செய்து விட்டு வாடகைக் கார்களை வைத்துக் கொள்ள ஆலோசனை கொடுத்தார். அப்போது வேலையில் இருந்த டிரைவர்களை சும்மா உட்காரவைத்து சம்பளம் கொடுத்தாலும், மொத்தத்தில் கம்பெனி பணம் சேமிக்கும் என்பதை ஒரு பெரிய ஆய்வுமூலம் எடுத்து காட்டினார். பதறிப்போன டிரைவர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். காரணம் என்ன? அதுவரை அவர்கள் ரிப்பேர் செய்யும் காராஜுகளுடன் கமிஷன் ஒப்பந்தம் போட்டு கொண்டு ஒவ்வொரு வண்டியிலும் மாதாமாதம் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பில்லாகும்படி செய்து வந்தது நின்று விடுமே? வெறும் சம்பளத்தை வைத்து சொகுசு வாழ்க்கையெல்லாம் வழமுடியாதே என்பதுதான் அவ்ர்தம் எதிர்ப்புக்கு காரணம்.

ஐ.டி.பி.எல். தொழிலாளர்களின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தது அதன் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது என்பதைக் கூறவும் வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அவுட்சோர்சிங்குல அப்படி என்னத்தான் நடக்குது?

என் கணினி குரு முகுந்தனிடமிருந்து வந்த மின்னஞ்சலை கீழே தருகிறேன். எஞ்ஜாய்!!!!!!!!!!

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பாப்பீங்க?

(நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்).

வெள்ளைக்காரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.

இந்த மாதிரி அமெரிக்காவுல, இங்கிலாந்துல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்யத் தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.

சரி

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants. .... இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், முடியும்னு பதில் சொல்றது இவங்க வேலை.

இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க?

MBA , MS னு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க.

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?

(அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது).

சரி, இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிங்கலேயும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.

இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும் 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?

இங்கதான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.

இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
பண்ணுவோம். அத பாத்துட்டு ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது
வேணும், அது வேணும்னு புலம்ப ஆரம்பிப்பான்.

அப்புறம்? - அப்பா ஆர்வமானார்.

இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு சொல்லுவோம்.

CR- னா?

Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

இதுக்கு அவன் ஒத்துபானா?

ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?

முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.

அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.

அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.

அப்போ இவருக்கு என்னதான் வேலை? - அப்பா குழம்பினார்.

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை.

பாவம்பா

ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.

எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?

ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும்தான் இவரோட வேலை.

நான் உன்னோட அம்மாகிட்ட பண்றது மாதிரி?!

இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.

இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும்தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.

அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத
மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.

ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசாத்தான் இருக்கு. சரி, இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்க்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க

கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.

எப்படி?

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சு நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்.

சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.

அப்புறம்?

ப்ராஜக்ட் முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.

அப்புறம்?

அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு Maintanence and Support. இந்த வேலை வருஷ கணக்கா போகும். ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/05/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 28 & 29)

எபிசோட் - 28 (03.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ரமேஷும் உமாவும் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்குள் சுமுக பாவனை மறைந்து விட்டது. அதைபார்க்கும் அவள் மாமனார் மாமியார் திகைக்கின்றனர். காரிலிருந்து இறங்கியதும் வீட்டிற்குள் உமாவை செல்லவிடாமல அவள் கணவன் ரமேஷ் அவளை அசோக்குடன் பேசியதற்காக டோஸ் விடுகிறான். அவள் சொன்ன சமாதானங்களை அவன் பொருட்படுத்தவில்லை. அசோக்கை தான் இனிமேல் பார்க்காமலோ, போனில்கூட பேசாமலோ, எப்போதும் கணவனையே நினைத்து கொண்டிருந்தோ இருந்தால் அப்போதாவது தான் அவனுக்கு நல்ல மனைவி என ரமேஷ் நினைப்பானா என உமா கேட்கிறாள்.

அப்படித்தான் ஒரு பெண் இருக்க வேண்டுமா என சோவின் நண்பர் கேட்க, ஒரு விதத்தில் பார்த்தால் குடும்பத்தில் அமைதி நிலவ அப்படித்தான் இருக்க வேண்டும் என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது எனவும், வனவாச சமயத்தில் சீதைக்கும் அனசூயை இதைத்தான் வலியுறுத்துகிறார் எனவும் சோ கூறுகிறார்.

இங்கு உமா, அவ்வாறு தான் நடந்து கொண்டாலும் அதையும் நடிப்பு என்றுதான் ரமேஷ் நினைப்பானா என்றும் கேட்டுவிட்டு உள்ளே சொல்கிறாள். என்ன விஷயம் என தாய் கேட்க, ஒன்றும் இல்லை என சொல்லி விட்டு ரமேஷும் உள்ளே செல்கிறான்.

பாகவதர் வீட்டில் அவர் ஆடியோ நாராயணனிடம் ஏமாந்தது குறித்து அவர் மருமகள் ராஜி அவரை போலீசுக்கு அழைத்து சென்று புகார் கொடுத்ததையும், பிறகு பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுத்ததையும் தன் மனைவியிடம் கூறிய பாகவதர், மருமகளை பாம்பென்று தாண்டுவதா அல்லது பழுதையென கருதுவதா என்பது புரியாமல் இருக்க, அவர்களுக்கு பேசுவதற்கு இணையாக உள்ளே ராஜி தன் கணவனுடன் பேசுகிறாள். தன்னை யாரும் வகைபடுத்திவிட முடியாதபடி நடப்பதை தான் வேண்டுமென்றே செய்வதாக கூறுகிறாள்.

கோவிலில் வைத்து நாதன் அசோக்கை சந்திக்கிறார். அன்று அவனது பிறந்த நாள் என்று அவர் கூற, அதனால் என்ன என அவன் கேட்கிறான். இங்கு இது பற்றி கேள்வி கேட்கும் சோவின் நண்பருக்கு, பிறந்த நாள் கொண்டாடுவது என்பது இப்போதெல்லாம் ரிசுவலாக போனது பற்றி சோ கூறுகிறார். என்ன சாதனையும் இதில் இல்லை என்றும், உண்மை கூறப்போனால் ஒவ்வொரு பிறந்த நாளும் நம்மை மரணத்துக்கு அருகாமைக்கே கொண்டு செல்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

வீட்டுக்கு வந்து அவன் அன்னை அவன் பிறந்த நாளுக்காக தயாரித்துள்ள விருந்து சாப்பிட வேண்டும் என நாதன் கூற, அசோக் வர மறுக்கிறான். தான் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் எனவும் கூறுகிறான். அவனுக்காக தான் வாங்கிய வேட்டி உத்தரியத்தை நாதன் அவனுக்கு அளிக்க முற்படுகிறார். அதை அவர் பிறந்த நாள் பரிசாக இல்லாது, ஒரு பிரம்மச்சாரிக்கு தானமாக தந்தால் தான் வாங்கிக் கொள்வதசக அசோக் கூற நாதன் திகைக்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 29 (04.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் தன் பிள்ளை அவனுக்கு எப்படி தானம் என சொல்ல முடியும் என நாதன் திகைக்க, ஒரு நிமிடத்துக்கு தன் அவர் பிள்ளை என்பதை மறக்கும்படி அசோக் கேட்டுக் கொள்ள அவரும் சம்மதிக்கிறார். அசோக் அவரை வணங்கி விட்டு அவர் தரும் தானத்தை பெறுகிறான்.

அப்பா பிள்ளைக்கு தருவது எப்படி தானமாகும் என கேட்கும் தனது நண்பருக்கு சோ தானத்தின் குணங்கள் பற்றி விளக்குகிறார். ஒரு விதத்தில் அசோக் கூறுவது - அதாவது தந்தை பிள்ளைக்கு தானம் தருவது - சாத்திரப்படி பார்த்தால் சரியில்லைதான் என வைத்து கொண்டாலும், தானம் அளிப்பதற்கான சில கட்டுப்பாடுகள் உண்டு என்றும் அதை தனது அப்பா புரிந்து கொள்ள வேண்டும் என அவன் நினைத்திருக்கலாம் எனவும் சோ கூறுகிறார்.

பாகவதர் ஏமாந்தது பற்றிய செய்தி பேப்பரில் வந்திருப்பதை சமையற்கார மாமி வசுமதிக்கு காட்ட, அப்பக்கம் வரும் நாதனும் அதை ஊர்ஜிதம் செய்கிறார். அச்சமயம் அசோக் உள்ளே நுழைகிறான். அவன் நிஜமாகவே நிரந்தரமாக தங்களுடன் இருப்பதற்காகவே வந்து விட்டான் என எண்ணுகிறாள் வசுமதி. ஆனால் அப்படியில்லை என்றும், ஒரு அநாதை ஆசிரமத்துக்காக தான் பழந்துணிகள் கலெக்ட் செய்வதாகவும், அது சம்பந்தமாகவே இங்கும் வந்ததாகவும் அவன் கூறுகிறான்.

வேண்டாவெறுப்பாக அவனிடம் ஒரே ஒரு புடவையை சமையற்கார மாமி மூலமாக கொடுத்தனுப்புகிறாள் வசுமதி. அதை எடுத்துக் கொண்டு கிளம்பும் அவனிடம் சிங்காரம் தானும் துணி தானம் செய்யலாமா என கேட்க, தாராளமாக செய்யலாம் என அசோக்கும் பதிலளிக்கிறான். தன்னிடம் இரண்டு செட் துணிகளை மட்டும் வைத்து கொண்டு மீதியை தானமாக அளிப்பதாக அவன் கூறுகிறான்.

வீட்டை விட்டு வெளியே வரும் வழியில் பாகவதர் உள்ளே வருகிறார். அவர் ஏமாந்த விவரத்தை சிங்காரம் கூற, பாகவதர் வாக்கு தவறியது மிகப்பெரிய குற்றம் என அசோக் மிருதுவாக ஆனால் உறுதியாக அவரிடம் கூறுகிறான். அவரும் பதில் பேச்சு பேசாது ஒத்து கொள்கிறார். தனக்கென சிறிதளவே வைத்து கொண்டு தானம் செய்யும் சிங்காரம் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என இருப்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அசோக் குறிப்பிடுகிறான். பிறகு பாகவதரிடம் விடைபெற்று செல்கிறான்.

அசோக் சொல்வது கேட்கத்தான் நன்றாக இருக்கும் என்றும், இது உண்மையிலேயே சாத்தியமா என சோவின் நண்பர் கேட்க, அது சிரமம்தான் என சோ ஒத்து கொள்கிறார். ஆனால் அதுதான் தேவை என்றும் அவர் கூறுகிறார். ஆசைகளில் மட்டுமல்ல எண்ணங்களுக்கும் ஒரு கணக்கு வேண்டும் எனவும் அதை மீறலாகாது என மகாசுவாமிகள் கூறியிருப்பதையும் அவர் கூறுகிறார்.

உள்ளே வரும் பாகவதரிடம் நாதன் அசோக் பேசியது அதிகப்பிரசங்கம் எனக் கூற, பாகவதர் அவரை மறுத்து அசோக் கூறுவது 100 சதவிகிதம் உண்மை எனவும் தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் எனவும் கூறி கலங்குகிறார். போலீசுக்கு போனதில் தன் மானம் சந்தி சிரித்ததுதான் மிச்சம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அசோக் ஓரிடத்தில் அலைந்து கொண்டிருக்க அவன் தீவிரவாதியாக இருப்பானோ என சந்தேகிக்கும் ஒரு போலீஸ்காரர் அவனை விசாரிக்க துவங்குகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 26 & 27)

எபிசோட் - 26 (01.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி லேட்டாக ஆரம்பிக்கிறது, சில நிமிடங்கள் கழித்து.

நாதன் அலுவலகத்தில் பிரியா, அவளது சீனியர் வக்கீல் அனந்த ராமன், நாதன் ஆகியோரது பேச்சு அசோக்கைப் பற்றி தொடர்கிறது. பிரியா அசோக்கை சிலாகிக்க நாதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவள் சிறுபெண், இதில் உள்ள சங்கடங்கள் புரியாது என அவள் வாயை அடக்கி விடுகிறார். பிறகு அவர் கம்பெனி கேஸ் விஷயமாக வக்கீலுடன் பேசுகிறார்.

அவர் கேஸ் வரும் தினம் நல்ல நாள், ஆகவே வெற்றி நிச்சயம் என்றும் அந்த நாள் பற்றி தன் மாமனாரும் அவ்வாறே கூறுவதாகவும் பிரியா கூறுகிறாள். யார் அவள் மாமனார் என நாதன் கேட்க, அவர் வீட்டில் பூஜைக்கு வரும் சாம்பு சாஸ்திரிகள்தான் அவர் எனக்கூற, பிரியாவின் தந்தையை போலவே அவள் மாமனாரும் நல்ல மனிதர் என நாதன் மனம் மகிழ்கிறார்.

பாகவதரை கோவிலில் ஆடியோ நாராயணன் என்பவர் சந்தித்து அதிக ராயல்டி அவரது ஆடியோ கேசட்டுகளுக்கு தருவதாக ஆசை காட்டி அவர் மனதை மாற்றி விடுகிறார். முதன் முறையாக என் மனதை சங்கடம் செய்த காட்சி இத்தொடரில் இதுதான். இது பற்றி மேலே பேச இஷ்டம் இல்லை. நீலகண்டனிடம் பாகவதர் காண்ட்ராக்டில் கையெழுத்திட மறுத்து விட்டார் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

கோவிலில் பர்வதமும் வசுமதியும் சந்தித்து பேசுகின்றன்றனர். அசோக் பற்றி பேசி வருத்தப்படுகிறாள் வசுமதி. உமாவின் குழந்தைக்கு புண்யாதானம் வைத்திருப்பதாகவும் அதற்கு வசுவும் நாதனும் வரவேண்டும் எனவும் பர்வதம் கேட்டு கொள்கிறாள். அசோக் தனி மரமாக நின்று தனது பரிசோதனையில் ஈடுபடுவது பற்றி நினைத்து வசுமதியின் மனம் பாதிக்கப்படுகிறது.

இங்கு நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து கிளம்பும் சமயம் பார்த்து வசுமதி வீட்டில் இல்லை. சமையற்கார மாமி சாம்புவிடம் அவரது மகள் ஆர்த்திக்கு குருபலன் வந்து விட்டதால் அவளுக்கு கல்யாண வேளை வந்து விட்டது எனக் கூறுகிறாள்.

அதென்ன குரு பலன் என சோவின் நண்பர் கேட்க, அவர் அது சம்பந்தமாக சோதிட விளக்கம் தருகிறார். எனக்கு புரியாததால் நான் எஸ்ஸாகிறேன். சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் க்ளிப்பிங்கை பார்த்து தத்தம் வலைப்பூவில் எழுதினால் இன்னும் ஆதண்டிக்காக இருக்கும் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறேன்.

தனது உறவினர் ஒருவருக்காக சாம்புவின் மகள் ஆர்த்தியை மணம் முடிக்க சமையற்கார மாமி தனது எண்ணத்தை வெளியிடுகிறாள். இதற்குள் வசுவிடமிருந்து போன் வருகிறது. சாம்பு சாஸ்திரிகள் இன்னும் அங்கே இருக்கிறாரா என கேள்வி எழும்ப, சமையற்கார மாமி அவர் எப்போதோ கிளம்பிப் போய் விட்டார் என அனாவசியமாக ஒரு பொய்யை உதிர்த்து விடுகிறாள். தேவையின்றி ஏன் பொய்யுரைக்க வேண்டும் என சாம்பு அவளை கோபிக்கிறார். முதலில் ஆர்த்தியின் ஜாதகத்தை கையில் எடுத்த பிறகுதான் மற்றதெல்லாம் என்று வேறு அவளிடம் விட்டேற்றியாக கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.

திருவள்ளுவரே பொய் சொல்லலாம் எனச்சொல்லவில்லையா என சோவின் நண்பர் கேட்க, வழக்கம்போல திருவள்ளுவரை இங்கு பலரும் தவறுதலாக புரிந்து கொண்டார்கள் என சோ அவரை கலாய்க்க்கிறார்.

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்” என்று சொன்ன திருவள்ளுவர்

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என்றும் கூறியதற்கு உதாரணமாக சோ அவர்கள் ராமாயணத்திலிருந்து ராமரே இரண்டு இடங்களில் பொய்யுரைத்ததை எடுத்து காட்டுகிறார். அவர் வனத்துக்கு தேரில் செல்லும்போது தேரை நிறுத்துமாறு தசரதர் கூவிக்கொண்டே பின்னால் வர, தேரோட்டி சுமந்திரனிடம் காதில் கேட்காதது போல மேலே செல்ல பணிக்கிறார் ராமர்.

வனத்தில் தன்னைப் பார்க்க வரும் பரதனிடம் கைகேயியை திருமணம் செய்து கொள்ளும்போது அவளுக்கு பிறக்கும் மகனுக்கே பட்டம் என தந்தை வாக்களித்ததாக பொய்யுரைக்கிறார் ராமர்.

இரு இடங்களிலும் தன்னை வனத்துக்கு அனுப்பி, பரதனை அரசனாக்கிய தந்தையின் கட்டளை பங்கப்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே உன்னத காரணத்துக்காகவே அவர் அவ்வாறு செய்த்கார் என்பதையும் சோ தெளிவுபடுத்துகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 27 (02.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரியின் மனைவி செல்லம்மாவும் மகள் ஆர்த்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழமையான குடும்ப பிரச்சினைகள் குறித்து பேச்சு செல்கிறது. சிறு பெண்ணுக்குரிய அத்தனை ஆசைகளும் அடங்கிய ஆர்த்திக்கு கழுத்து மட்டும் குறை அவை நிறைவேறவில்லை என்று. பேச்சு வேம்புவின் மகள் ஜயந்தி பற்றியும் திரும்புகிறது. கிருபாவின் குழந்தையும் பேச்சில் அடிபடுகிறது.

நீலகண்டன் நடேச முதலிய்யரை பார்த்து பாகவதர் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிய விவரம் கூற, அவர் வருத்தமும் கோபமும் அடைந்து பேசுகிறார். பாகவதருக்கு அதிக ராயல்டி கொடுப்பதாக ஆசை காட்டிய பார்ட்டியோ அவருக்கு முழுசாக பட்டை நாமம் போட்டு விட்டு எஸ்ஸாகிறான். அவருக்கு அதில் அதிர்ச்சி. அவரது முதல் மகன் சிவராமன், மருமகள் ராஜி, மனைவி மட்டும் இரண்டாம் மகன் மணி ஆகியோர் அவரை ஏமாந்ததற்காக சாடுகின்றனர். அவரும் புத்தி வந்து எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறார். அவரது மருமகள் அவரை அழைத்து கொண்டு போலீசுக்கு போகப்போவதாகக் கூறுகிறாள்.

அசோக் கடற்கரையில் கடலை நோக்கி நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ரமேஷும் உமாவும் அவனை பார்க்கின்றனர். உமா அவனுடன் பேசுவதற்காக வருகிறாள். குழந்தை கிரகணம் தாண்டி பிறந்தது தாங்கள் பகவானுக்கு பிரார்த்தனை செய்து கொண்டதாலேயே என அசோக் கூற, அப்படி செய்திராவிட்டால் அது கிரகணத்தின் போது பிறந்திருக்குமா என உமா கேட்கிறாள். பிரபஞ்சத்தில் லயம் ஒத்திசைவில் இருக்க எல்லாமே முன்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டவை என அசோக் பதிலளிக்கிறான். மேலும் பிரார்த்தனையின் உண்மையான பொருளே ஆண்டவன் செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதுதான் எனவும் அவன் சுட்டிக் காட்டுகிறான்.

குழந்தை பிறந்த வேளை அவள் கணவன் ரமேஷுக்கு கிடைக்க வேண்டிய வேலை உயர்வு கிடைக்காததால் அக்குழந்தை ராசியில்லாதவள் என அவன் கூறுவதாக உமா கூறி வருந்துகிறாள். ஒரு ராசியில்லாத தகப்பனுக்கு பிறந்ததற்காக அக்குழந்தை வருந்தினால் ரமேஷ் என்ன சொல்வான் என அசோக் திரும்பக் கேட்கிறான்.

அப்படியெல்லாம் குழந்தையின் ராசி தகப்பனை பாதிக்குமா என சோவின் நண்பர் கேட்க, அவர் ஒருவனது கெட்ட காலம் ஆரம்பித்தால் அதை குறிக்கும் வண்ணமாக அப்போது பிறக்கும் குழந்தையின் ஜாதகம் அமையலாம். ஆகவே அது ஒரு குறிப்பே, அவனது கெட்ட காலத்துக்கு காரணம் இல்லை என பதிலளிகிறார்.

பிரார்த்தனை செய்யாமல் இருந்திருந்தால் குழந்தை கிரகணத்தின் போது பிறந்திருக்குமா என உமா கேட்டதை நண்பரும் கேட்கிறார். கிரகணத்தின் போது குழந்தை பிறந்தால் பிரச்சினை இல்லை, அந்த நேரத்தில் கருவுறுதல் மட்டும் வேண்டாம் என தான் ஏற்கனவே கூறியதை திரும்பவும் சொல்கிறார் சோ அவர்கள். பிறகு, அவ்வாறு குழந்தை பிறக்க வேண்டுமென்றிருந்தால் பிரார்த்தனையே செய்து கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

பிராமணனாக அசோக் மாறுகிறானா என உமா கேட்க, அவன் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன எனக் கூறுகிறான். எப்போது அங்கீகாரம் கிடைக்கும் எனக் கேட்க, பெர்ஃபக்‌ஷன் வரும்போது என்கிறான். எப்போது பெர்ஃபக்ஷன் வரும் என விடாது உமா கேட்க, அது ஆன்கோயிங் செயல்பாடு, முடிவே கிடையாது என்கிறான். இவ்வாறாக இருக்கும் அவனை தான் ஒரு காலத்தில் தன் தளத்துக்கு இழுக்க முயற்சி செய்தது குறித்து குற்றவுணர்ச்சியுடன் இருப்பதாக அவள் கூற, தானும் அவளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டதாக அவன் கூறுகிறான்.

அவனிடமிருந்து விடை பெற்று கணவனிடம் செல்லும்போது ரமேஷ் ஏற்கனவே காருக்கு போயிருக்கிறான். அங்கு சென்று அவனுடன் வாக்குவாதம் நடக்கிறது. அவனுக்கு அசோக்கை பிடிக்கவில்லை. உமா குழப்பத்தில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது