4/06/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 06.04.2009

உழைப்புத் திருட்டு:
உண்மைத் தமிழனின் இந்தப் பதிவில் கண்ட ஒரு விஷயம் என்னை இங்கு எழுதத் தூண்டியது. அவர் ஜாப் டைப்பிங் செய்பவர். சும்மா சொல்லப்படாது, மனிதர் நல்ல உழைப்பாளி. விஜய் டீ.வியில் இப்போது ஒளிபரப்பாகிவரும் 'ரோஜாக்கூட்டம்' என்ற தொடரின் கதாசிரியருக்கு பணம் செட்டில் செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள் என கவலைப்பட்டிருந்தார் உண்மைத் தமிழன். அவருக்கு பணம் வராததால் தான் அக்கதாசிரியருக்கு தட்டச்சு செய்து கொடுத்த வேலைக்கும் பணம் வரவில்லை என அவர் போகிற போக்கில் எழுதியுள்ளார். அவருக்கு நான் இட்டப் பின்னூட்டத்தில், கதாசிரியருக்கு பணம் வருவதற்கும் இவர் செய்த வேலைக்கு பணம் வருவதற்கும் சம்பந்தமில்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளேன். கதாசிரியர் சொல்லும் சாக்கு ரொம்ப பழையது. மொழிபெயர்ப்பு ஏஜென்ஸீக்கள் பல இதைத்தான் செய்கின்றன. இந்த விஷயமாக மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் பல பதிவுகள் வந்து விட்டன. ஒட்டுமொத்த கருத்து இதுதான். ஏஜென்சீக்கள் தமது வாடிக்கையாளருடன் போடும் ஒப்பந்தத்துக்கும், அவை மொழிபெயர்ப்பாளர்களுடன் போடும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

இதை சற்றே பிராக்டிகலாகப் பார்க்க வேண்டும். இந்த சாக்கையெல்லாம் நாம் நம்ப ஆரம்பித்தால், தமக்கு பணம் வரவில்லை என மூக்கால் அழும் ஏஜென்சீக்கள் பொய் கூடச் சொல்லலாம். அதை நாம் எப்படி சரிபார்ப்பது? இன்னொரு விஷயம் நமக்கு ஏஜென்சீக்கள் கொடுக்கும் பணத்தைவிட அதிகமாகத்தான் தமது வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன. அதுதான் அவர்கள் பிசினஸே. அவர்கள் அதில் ஏமாந்தால் அது அவர்களது திறமைக்குறைவே. அதற்காகவெல்லாம் அவர்கள் நம்மை ஏமாற்ற இயலாது.

சில ஏஜென்சீக்கள் சோதனை மொழிபெயர்ப்பு என சில பக்கங்கள் தருவார்கள். அதை நாம் இலவசமாக செய்து தர வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஏனெனில் அவர்களது வாடிக்கையாளருக்கு அவர்கள் தரப்பிலிருந்து சோதனை மொழிபெயர்ப்பாக அது அளிக்கப்படுகிறதாம், ஆகவே அவர்களுக்கும் பணம் வராதாம் என்றெல்லாம் கதை விடுவார்கள். நான் அதை எப்போதுமே ஒத்து கொண்டதில்லை. இதே கதையை அவர்கள் ஒரு பிளம்பரிடமோ, பல மருத்துவரிடமோ கூறி சாம்பிளாக ஒரு வேலையை இலவசமாகச் செய்து தருமாறு கூறவியலுமா?

பை தி வே உண்மைத் தமிழன் எனது பின்னூட்டத்திற்கு பதிலளித்துள்ளார். நிஜமாகவே கதாசிரியருக்கு பணம் வரவில்லைதான் என எழுதியுள்ளார். இம்மாதிரியெல்லாம் ஒப்பந்தம் போடாமல் வேலை செய்து ஏமாறுவது, அதன் பலனாக தாம் பணம் தரவேண்டியவர்களுக்கும் பணம் தரவியலாமல் போவது என்றெல்லாம் இருப்பவர்களை losers என்பார்கள். அவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள் லிஸ்டில் வருவார்கள்.

எதற்கும் உண்மைத் தமிழன் வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் பற்றி நான் போட்ட 10 இடுகைகளையும் பார்ப்பது நல்லது.

நேற்றைய பதிவர் சந்திப்பில் இம்மாதிரி உழைப்புத் திருட்டு பற்றிய பல பேச்சுகள் இருந்தன, உதாரணங்களுடன். அவற்றை எல்லாம் போட்டுவிட வேண்டாம் என என்னைக் கேட்டு கொண்டதால் போடவில்லை. அவை ஆஃப் தி ரெகார்ட் விஷயங்களாகி விட்டன. நான் என் பங்குக்கு எனது இந்த அனுபவம் பற்றி கூறினேன்.


எனது பஸ், எனது கார்:
நேற்றைய பதிவுக்கு நான் “எனது” காரில் செல்லாமல் “எனது” பஸ்ஸில்தான் வந்தேன். காரணம் ரிசஷனா என தமாஷாக ஒரு பதிவர் கேட்டார். நானும் அதற்கு பதிலளித்தேன். இங்கு அது பற்றி இன்னும் விரிவாக.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் சென்னையை விட்டு பிரிந்திருந்த சமயத்தில் எனக்கு அடிக்கடி வந்த கனவு பற்றி ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். அது எனது நங்கநல்லூர் வீட்டுக்கு மட்டுமல்ல, சென்னைக்கும் சேர்த்துத்தான். வேலை அதிகமாக இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கால் டாக்சியில்தான் அதிகம் செல்வேன். அதில் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால் நகரத்தின் பல அனுபவங்கள் கிடைக்காமல் போவதுதான். அவற்றில் முக்கியமானது பஸ்களில் செல்வது. ஆகவே கடந்த சில மாதங்களாக எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பஸ்களில் செல்வது என ஆரம்பித்துள்ளேன்.

பஸ்களில் விதவிதமான மனிதர்களைக் காணலாம். அவர்கள் பேசும் டயலாக்குகள் மிகச் சாதாரணமானவை. சமீபத்தில் 1974-ல் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஃபடாபட் ஜயலட்சுமியும் சுஜாதாவும் 29-C பஸ்ஸில் செல்லும்போது பேசிக் கொள்ளும் விஷயங்கள் போலவெல்லாம் சர்வ சாதாரணமாக கேட்கலாம். அதற்காகவெல்லாம் மெனக்கெட்டு ஒட்டுக் கேட்க வேண்டியதில்லை, அவர்களே உரக்கத்தான் பேசுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

R.Gopi said...

//அதற்காகவெல்லாம் மெனக்கெட்டு ஒட்டுக் கேட்க வேண்டியதில்லை, அவர்களே உரக்கத்தான் பேசுவார்கள்.//

***********

அப்படி யாருமே உரக்க பேசவில்லை என்றால், நாம் சிறிது முயற்சி செய்து ஒட்டு கேட்போம்............

dondu(#11168674346665545885) said...

@ஆர்.கோபி
சிங்கம்ல அப்படீன்னு நினைச்சு முயற்சி செய்து மாட்டிக்கிட்டு பிறகு உதை வாங்கினா அசிங்கம்ல!

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

டோண்டு ஸார்...

அந்தக் கதாசிரியர் என்னைவிட பாவப்பட்ட மனிதர்.. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக எனக்குத் தெரியும்..

இது முதல் முறையல்ல.. பல முறை அவருக்காக நான் இது போன்று வேலைகளைச் செய்து கொடுத்துள்ளேன்.. எல்லாம் ஒரு நல்ல எண்ணத்தில்தான்..

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது நல்ல விஷயம்தான்.. ஆனால் அதன் ஊடேயே நம்மால் முடிந்த அளவுக்கு முடியாதவர்களுக்கு உதவி செய்வது நல்ல விஷயம்..

இப்போது அவருக்கான சங்க விதிமுறைகளையும், அணுக வேண்டிய முறைகளையும்கூட நான்தான் அமைத்துக் கொடுத்து முயற்சி செய்து வருகிறேன்..

நமக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று கவியரசர் சும்மா சொல்லவில்லை.. அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்.

உங்களுடைய ஆலோசனைக்கு எனது நன்றிகள்..!

dondu(#11168674346665545885) said...

//இது முதல் முறையல்ல.. பல முறை அவருக்காக நான் இது போன்று வேலைகளைச் செய்து கொடுத்துள்ளேன்.. எல்லாம் ஒரு நல்ல எண்ணத்தில்தான்..//
அப்ப்டியே இருக்கட்டும். உங்களுக்கு ஒரு கேள்வி. இதற்கு முந்தைய முறைகளில் அவருக்கு லேட்டாகவாவது பணம் வந்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் உங்கள் கணக்கை செட்டில் செய்துள்ளாரா?

அம்மாதிரி பல முறைகளும் அக்கதாசிரியர் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர் தனது வேலையை மாற்றுவது நல்லது.

உங்கள் நிலைமையே கடினமாக இருக்கும்போது இம்மாதிரி தர்ம சிந்தனைகள் உங்களுக்கு கட்டி வருமா? யோசியுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அறிவிலி said...

இந்த உழைப்பு திருட்டு என்பது உலகளாவிய விஷயம் போலும். ரிசெஷனில் ரி என்று ஆரம்பிப்பதற்கு முன்பே என் நண்பர்கள் வேலை பார்க்கும் கம்பெனிகள்(சிங்கப்பூரில்) பலவற்றிலும் இந்த வருட இன்க்ரிமெண்ட் கிடையாது, போன வருட லாபத்திற்காக கொடுக்க வேண்டிய போனஸ் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

Anonymous said...

Yes dondu sir your advice to trutamilan is very good
i like that 10 articles its very important each and every ones life.
Thanks,
V.Ramacandran
Singapore

வஜ்ரா said...

அடுத்தவாரக்கேள்வி:

"நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோட் ரோலர் கொண்டு நசுக்கி சாகடித்திருப்பேன்" என்று மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவ் கூறியது Attempt to murder ஆகாதா ?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது