9/08/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.09.2009

கதைகள் மிஸ்ஸிங் பத்திரிகைகளில்
முன்பெல்லாம் பத்திரிகைகளில் பல சிறுகதைகள் வரும். தொடர்கதைகள் வரும். அவற்றுக்காகவே பத்திரிகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே சினிமா துணுக்குகளாகவே பக்கங்களை நிரப்புகின்றன. விகடன், குமுதம், குங்குமம் என்று எதை பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இதில் என்ன சோகம் என்றால் கதைகளை ரொம்பவுமே பின்னால் தள்ளி விட்டார்கள். தொடர்கதைகள் கிட்டத்தட்ட இல்லை என்னும் அளவுக்கே போய் விட்டன.

இன்னும் கதைகளை போட்டு வரும் கல்கி, மங்கையர் மலர் ஆகிய பத்திரிகைகள் சற்றே நம்பிக்கை அளிக்கின்றன. உதாரணத்துக்கு சில கதைகளைப் பார்ப்போம்.

மங்கையர் மலர் செப்டம்பர் 2009 இதழ் பக்கம் 44-ஆம் பக்கத்தில் வருகிறது “வேம்பு மாமியும் வேப்பமரமும்” என்னும் கதை. பத்மா என்பவரால் ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதை போட்டியில் அளிக்கப்பட்டு, இரண்டாம் பரிசு பெற்ற கதை இது. ஒரு குடியிருப்பு காலனியில் கப்பும் கிளையுமாக நின்று கொண்டிருக்கும் வேப்ப மரத்தை அது இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி காலனி மேனேஜ்மெண்ட் அதை வெட்ட ஏற்பாடு செய்கிறது. அம்மரம் வேம்பு அம்மாள் முதலில் அந்த காலனி இருந்த இடத்தில் இருந்த தோப்பு வீட்டை சேர்ந்தது. பிற்காலத்தில் பில்டருக்கு இடத்தைக் கொடுத்து தோப்பு காலனியாக உருவாகியுள்ளது. வேம்பு அம்மாளுக்கு அந்த மரம் என்றால் உயிர். காலனி குழந்தைகளுக்க்ம் மற்ற பெண்களுக்கும்தான்.

ஆனாலும் வணிக நோக்கங்கள் காலனி அசோசியேஷனில் மேலோங்கி அம்மரம் இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி நல்ல விலைக்கு விற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கதை அம்மரம் வெட்டப்படும் நாளிலிருந்து ஆரம்பிக்கிறது. மரத்தின் கீழ் கிளாசுக்காக கூடும் குழந்தைகள் முகத்தில் உற்சாகம் இல்லை. திடீரென காlaனி செக்ரட்டரியின் மனைவி தன் குழந்தையை அழைத்து கொண்டு மாமியிடம் வருகிறார். குழந்தைக்கு அம்மை வார்த்திருக்கிறது என மாமி டயாக்னெஸ் செய்கிறார். இச்செய்தி காலனி முழுக்கப் பரவி வேப்ப மரத்தை வெட்டுவது தெய்வக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மரத்தை சுற்றி அணைத்து நிற்கிறார்கள். பெண்கள் அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கின்றனர். காலனி வேப்ப மரத்தை வெட்ட வேண்டிய கம்பெனியின் மின்சார அரம் பழுதுபடுகிறது. இப்போது காலனி அசோசியேஷனும் யோசிக்க ஆரம்பிக்கிறது. அவரவர் வீட்டிலேயே அசோசியேஷன் உறுப்பினர்களுக்கு பிரஷர் வருகிறது. கடைசியில் மரத்தை வெட்ட வேண்டாமென தீர்மானிக்கின்றனர்.

கதையின் கிளைமாக்ஸாக குழந்தையின் முகத்தில் அதன் அன்னையே ஊதுவத்தியால் சூடுவைத்திருக்கிறாள் என வாசகருக்கு மட்டும் சொல்லப்படுகிறது. நல்ல விஷயம் நடக்க இம்மாதிரியும் செய்ய வேண்டியிருக்கிறது. மனதுக்கு நிறைவை அளித்த கதை இது. இம்மாதிரி யுக்தி பற்றி ஏற்கனவேயே நான் ஒரு கதை படித்துள்ளேன். அதையே சற்று மாற்றி இக்கதையிலும் கடைசியில் சொல்கிறார்கள். ஊமைத்துரையை கும்பினியாரிடமிருந்து இவ்வாறுதான் காப்பாற்றியதாக கதையில் அதிகப்படியாக செய்தி வருகிறது.

அறுபதுகளில் இன்னொரு கதை வந்தது. முருகன் கோவில் குளத்தை தூர்க்க சில சதி நடக்க, தர்மகர்த்தா தன் கோவில் குளத்தை முருகனே காப்பான் என சூளுரைக்கிறார். அதற்கேற்ப ஊரில் பெரிய தீவிபத்து ஏற்பட குளத்து நீர் இருந்ததால்தான் தீயை அணைக்க முடிந்தது என கதை போகிறது.

இதெல்லாம் மூட நம்பிக்கை என சில அறிவாளிகள் கூறட்டும். நான் அந்த அறிவாளிகளுள் ஒருவனாக இருக்க விரும்பவில்லை என்பதை மட்டும் மனச்சந்துஷ்டியுடன் கூறி வைக்கிறேன்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்தல்
என் அத்தையின் கணவர் திடீரென இறக்க அத்தையும் அவரது ஐந்து குழந்தைகளும் சென்னையில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் குடிபுகுந்தனர். என் வயதுடைய ஸ்ரீதர் மற்றும் என் அக்காவின் வயதுக்கு ஈடான அவன் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஸ்ரீதர் என்னுடமன் 4 மாதம் சிறியவன். ஆனால் ஒரு வகுப்பு அதிகமாக படித்தான் (நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்குத் தாவியிருக்கிறான்). அவனை என் பள்ளியில்தான் தெலுங்கு மீடியம் கிளாசில் சேர்த்தார்கள். (அவன் தந்தை இறந்த சமயம் அவர் ஆந்திராவில் பத்தாண்டுகளாக போஸ்டிங்கில் இருந்தார்).

எல்லோரிடமும் அவன் எனது சொந்த தம்பி என சும்மா கூறிவைத்தேன். அது பிறகு பல சங்கடங்களை வரவழைத்தது. முதலில் என் எட்டாம் வகுப்பு உபாத்தியாயர் ஜயராம ஐயங்காரிடம் மாட்டிக் கொண்டேன். அவர் ஸ்ரீதரிடம் “உனக்கும் ராகவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம்” என எதார்த்தமாகக் கேட்டு வைக்க, அந்த உண்மை விளம்பி 4 மாதம் என்றான். வாத்தியார் தான் குடித்துக் கொண்டிருந்த காப்பியை துப்பி அவருக்கு புரைக்கேறிவிட்டது. பிறகு நான் ஒருவாறு சமாளித்து “இல்லை, சார், ஒரு வயது 4 மாதங்கள்” எனக் கூறி சமாளித்தேன்.

ஸ்ரீதரின் வகுப்பாசிரியர் எவெரெஸ்ட் அவர்கள் (அவரது உண்மைப் பெயர் தெரியாது, விசு அவர்கள் மன்னிப்பார் என நினைக்கிறேன்) இன்னும் டீப்பாக சென்றார். “ஆக உன் தந்தை ஆர். நரசிம்மன் இவனுக்கு தந்தை அல்லவா”? எனக்கேட்டார். நான் ஆமாம் எனச் சொல்லி வைக்க, பிறகு அவன் என்ன் அவரை தனது கார்டியனாக ஃபார்மில் குறிப்பிட்டுல்ளான் என ஒரு கூக்ளியை வீசினார். அசருவேனா நான், என் அத்தைக்கு பிள்ளைக் குழந்தை இல்லாததால் அவன் குழந்தையாக இருக்கும்போதே ஸ்வீகாரம் கொடுத்து விட்டார்கள் என ஒரு சிக்ஸர் அடித்தேன். நல்ல வேளையாக மேலே கேள்விகள் வரவில்லை. நான் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டும்வரை மனதில் லேசாக உதறல்தான்.

மொழி பெயர்ப்பாளர் தேவைப்படும் இடம்
சமீபத்தில் 1975-ஆம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மன் துபாஷியாக சென்றேன். ஒரு லெதர் கம்பெனிக்கு ஜெர்மானியர் ஒருவர் வந்திருந்தார். அவர் வந்தவுடனேயே கூறிவிட்டார். அதாகப்பட்டது தான் ஆங்கிலத்தில் பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆகவே நான் அவருக்கு பக்கத்தில் இருந்தால் போதும், தேவையானால் என் சேவையைப் பெறுவேன் என்றார்.

கடைசியில் எல்லாவற்றையும் பார்த்தபிறகு தனது வணிக ப்ரபோசலை வைத்தார். முழுக்க ஜெர்மனில் பேசிவிட்டு, என்னிடம் அதை கவனமாக மொழிபெயர்க்குமாறு கூறினார். நான் செய்வதை கூர்ந்து கவனிக்கவும் செய்தார். பிறகு அவர் என்னிடம் ஜெர்மனில் பேசும்போது, பண விஷயத்தில் தாய் மொழிதான் பத்திரமானது என்றார்.

பணவிஷயம் மட்டும்தானா, வேறு சந்தர்ப்பங்களிலும் தெரியாத மொழியை பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது. இப்படித்தான் கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஒருவன் ஒரு பெண்ணுக்கு தனது காதலை தெரிவிக்கிறார். அப்பெண் ஜாக்கிரதையாக மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அவனோடு பேசத் தயாரில்லை என்கிறாள்.



பிரசித்தி பெற்ற ஆங்கில இதழ் Punch பலரும் படித்திருக்கலாம். அதில் ஒரு கார்ட்டூன். பாரிசில் ஒரு ஹோட்டலில் ஆங்கிலேய தம்பதியினர் உட்கார்ந்திருக்கின்றனர். “உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், பிரெஞ்சில் சாப்பாடு ஆர்டர் செய்யக்கூடாதுன்னு” என்று கூறி மனைவி கணவன் குமட்டில் குத்துகிறாள். அவர்களை நோக்கி ஒரு டிராலியில் அப்போதுதான் சமைத்த யானையின் தலையை வைத்து சர்வர் அவர்களை நோக்கி டிராலியைத் தள்ளிக்கொண்டு வருகிறான்.

அதே போல ஒரு ஜோக் அறுபதுகளில் ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்காக வந்தது. தமிழ்த் தம்பதியர் ஹோட்டலில் தலையில் கைவைத்தபடி இருக்க, டேபிளில் அலார்ம் கடிகாரம், அரிக்கன் லைட், சோப் பெட்டி ஆகியவை இருக்கின்றன. “அடப்பாவி மனுஷா எத்தனை முறை சொன்னேன் ஹிந்தியில் ஆர்டர் செய்யாதீங்கன்னு” என்று என மனைவி கோபிக்கிறாள்.

தேன்நிலவு படம் ஷூட்டிங்கிற்கு போன டைரக்டர் ஸ்ரீதரின் அசிஸ்டண்ட் ஒருத்தார் ஐந்தடி உயரத்துக்கு ஒரு மரக்கட்டை வாங்கப் போய் கிட்டத்தத்தட்ட உதை வாங்கிய கதையை ஸ்ரீதர் எழுதியுள்ளார். கட்டை என்றால் லக்கடி என்பர்கள். பாஞ்ச் ஃபுட் லக்கடி (ஐந்தடி நீளக் கட்டை) என்பதற்கு அந்த அசிஸ்டண்ட் “பாஞ்ச் ஃபுட் லட்கி (ஐந்தடி உயரம் உள்ள பெண்) எனக் கேட்டுத் தொலைத்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

குப்பன்.யாஹூ said...

றைக்கு உள்ள அவசர உலகத்தில் சிறுகதை தொடர்கதை எல்லாம் படிக்க எங்கே பொறுமை உள்ளது.

எனக்கே ஆச்சரியமாக உள்ளது நானா பொறுமையாக சுஜாதாவின் ஆ , பாலகுமாரனின் தாயுமானவன் போன்ற தொடர் கதைகளை படித்தேன் என்று.

இப்போது எல்லாம் குமுதம், விகடன் கூட மொத்தமாய் எல்லா பக்கங்களும் படிக்க பொறுமை இல்லை. நன்றி நெட் எடிசன்.

விகடனில் சின்ன வெளிச்சம், குமுதத்தில் ஒ பக்கங்கள் அவ்வளவுதான் படிப்பது.

வால்பையன் said...

//இதெல்லாம் மூட நம்பிக்கை என சில அறிவாளிகள் கூறட்டும்.//

தற்செயல், யதார்த்தம் என்ற வார்த்தைகள் கூட இருக்கிறது!
அறிவாளியாய் இருக்க எனக்கும் விருப்பமில்லை!

Sethu Raman said...

கேள்விகள்

1. ஆட்டோ, டாக்சி ட்ரைவர்கள் மாதிரி
ப்ளேன் ட்ரைவர்கள் வேலை
நிறுத்தம் செய்யலாமா?
2. ஆந்திராவில் முதல்வர் பதவிக்கு
ஜகன் ரெட்டி தகுதியானவரா? ஆந்திரா
அன்பழகன் ரோசையாவுக்கு ஒரு
சான்ஸ் கொடுக்க வேண்டாமா?
3. வாரப் பத்திரிகைகளுக்கு, கதைகள்
அவசியமா - ஸ்ரேயா முதல் ஸ்ருதி
வரை 'திறந்த வெளி' போஸ் கொடுத்து
விற்பனையைப் பெருக்கும்போது?
4. தி.மு.க. எப்போதுமே ஜனநாயகப்
பண்புகளை மதிக்கும் என்ற மு.க.
வின் பேச்சு பற்றி உங்கள்
அபிப்பிராயம் என்ன?

கிருஷ்ண மூர்த்தி S said...

மாத நாவல் என்று வர ஆரம்பித்த பிறகு, பத்திரிகைகளில், தொடர் கதைகளுக்கான மவுசு, மாத நாவல் எழுத ஆரம்பித்தவர்களுடைய சரக்கு இரண்டுமே தீர்ந்து போய்விட்ட மாதிரித் தெரிந்தாலும், தொடர்கதை தொடர்கிற ஊடகம் மட்டும் மாறி விட்டது, சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டே போகிற மெகா சீரியல்களாக,டீவீக்களில் உலா வர ஆரம்பித்து விட்டது!

வாசகர்களைத் தொடர்ந்து இழந்து வரும் அச்சு ஊடகங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள டீவீகள் எப்படி சினிமாவை மட்டுமே நம்பியிருக்கின்றனவோ, அதே மாதிரி சினிமா நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களாலேயே பாலன்ஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த மாதிரித் தொய்வான நேரத்தில் தான், கல்கி மாதிரிக் கொஞ்சம் வாசகர்களைக் கட்டிப்போடுகிற வித்தை தெரிந்த எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள்!

வஜ்ரா said...

//
கட்டை என்றால் லக்கடி என்பர்கள். பாஞ்ச் ஃபுட் லக்கடி (ஐந்தடி நீளக் கட்டை) என்பதற்கு அந்த அசிஸ்டண்ட் “பாஞ்ச் ஃபுட் லட்கி (ஐந்தடி உயரம் உள்ள பெண்) எனக் கேட்டுத் தொலைத்திருக்கிறார்.
//

ரெண்டுமே "கட்டை" தான் என்பது இந்திகாரர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

Unknown said...

//கதைகள் மிஸ்ஸிங் பத்திரிகைகளில்//

காரணம் -1.புற்றீசலாக தொலைக்காட்சிகள் வரவு
2.தலை முறை மாற்றம்
3.இண்டர்நெட்4.அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வராமை 5.குறுந்தகடுகளின் வளர்ச்சி

geethappriyan said...

அருமையான பதிவு சார்.
எப்படி இவ்வளவு நேரம் எடுத்து ஒவ்வொரு பதிவும் எழ்ஹுதுகிறீர்கள்?

Unknown said...

குமுதம் மாதம் மூன்று முறை அட்டைப்படகதையுடன் வரும்.ரயில் நிலையத்தில் முதல்நாளே கிடைக்கும் என என் மாமா என்னை அனுப்புவார்.அங்கேயே உக்காந்து மொத்த கதைகளையும் படிச்சுட்டுதான் வீட்டுக்கு வருவேன்.சாவியின்,வாஷிங்டனில் thirumanam,போடோமாக் நதியில் சாஸ்திரியின் துணி துவைத்தல் எல்லாம் படிக்கும்போது பேரானந்தம்.இப்போ சீரியல்கள்,சானல்கள்,நெட்டு,சிடி,என்று வேகமாக பார்க்கும்,படிக்கும்,பாட்டு கேக்கும் வசதிகள் வந்ததும் புயச்தகம் எல்லாம் வாங்குவதில்லை.தந்தி,மலர்,ஹிண்டு,குமுதம் நிறுத்தவில்லை.யாராவது அந்த பேப்பரில் இந்த செய்தியை பாத்தியா-ன்னு கேக்குறப்போ வேணுமே-ன்னு வாங்கறேன்.நெட்டில அதிக நேரம் போவுது.இரண்டு ராகவனும் படிப்பேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது