நிரந்தர பக்கங்கள்

8/08/2005

தமிழகப் பள்ளிகளில் தமிழின் நிலை

ராமதாஸ், அன்புமணி, கருணாநிதி ஆகியோரை சிறிது நேரத்துக்கு மறப்போம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.

முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.

இன்னுமொரு காரணம் மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.

இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.

தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.

மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.

இப்போது என் மனதுக்கு தோன்றியதை எழுதி விட்டேன். பின்னால் வேறு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தால் அவற்றையும் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

  1. அன்புள்ள டோண்டு,

    இந்த மதிப்பெண் கிடைக்காத காரணம் மட்டுமே ரொம்ப முக்கியமா இருக்கு. தப்பும் தவறுமா
    'ஃப்ரெஞ்ச்' படிச்சுட்டு நிறைய மார்க் வாங்கிகிட்டு இருக்காங்க நம்ம மாமாவோட பேரன்கள்.

    //தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும். //

    சரியாச் சொல்லிட்டீங்க.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  2. ஆஹா! உங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் விதத்தில் ஒரு பதிவு வழங்கியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. //முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே.//

    அனேகமான தமிழ் நூல்கள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வருகிறது என நினைக்கிறேன். இந்நிலையில் யாழ் பல்கலைகளகத்தில் மட்டும் பட்டதாரிகள் தமிழிலே படித்து வெளியேருகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.இது எப்படி சாத்தியம்?

    (அல்லது நான் கேள்விப்பட்டவை முற்றிலும் தவரானதா?)

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. நன்றி ஜோ மற்றும் துளசி அவர்களே. முக்கியமாக ஜோவுக்கு கூறுவேன், இப்பதிவு நீங்கள் பாலா அவர்களிடம் குழலியின் பதிவில் கேட்ட கேள்விகளுக்காகவே போட்டேன்.

    தர்சன் அவர்களே, பாடநூல்கள் தமிழில் போதுமான அளவு இல்லையென்றுதான் கேள்விப்பட்டேன். எல்லா பாடங்களிலும் கிடைக்கின்றனவா?

    அது உண்மையாக இருந்தால் நான் கூறியது தவறு என்பதில் வருத்தம் இல்லை. அவை இருக்கின்றன என்ற சந்தோஷமே போதும்.

    மேலும், யார் என்ன கூறினாலும் தமிழை அழிக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. டோண்டு அய்யா, உங்கள் காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் தமிழ் வழிக்கல்வியில் தான் +2 வரைப்படித்தேன், இயற்பியல்,வேதியியல்,கணிதம் என அத்தனை புத்தகங்களும் எமக்கு தமிழிலேயே கிடைத்ததன, மேலும் EMR என்ற ஒரு vocational பிரிவு +2 வில் உண்டு என் நண்பர்கள் சிலர் அந்த பிரிவில் படித்தனர், அவர்களுக்கு தமிழிலேயே அந்த துறைக்கான புத்தகம் கிடைத்தது, மேலும் பல்தொழில்நுட்பக்கல்லூரி (பாலிடெகினிக்)யில் தமிழ் வழிக்கல்வி உள்ளது, அங்கும் தமிழில் பாலிடெக்னிக் பாடத்திட்டத்திற்கான பொறியியல் புத்தகங்கள் தமிழில் கிடைக்கின்றன, முடிந்தால் சுரஜாஸ் பதிப்பகத்தினரின் பாலிடெக்னிக் பாட புத்தகங்களை சற்று பாருங்கள், அது மட்டுமின்றி எனக்கு தெரிந்து இயற்பியல்,வேதியியல் இளங்களை தமிழ் வழியிலும் நடத்தப்படுகின்றன,

    ஆனால் ஒரு உண்மை ஒத்துக்கொள்ளப்பட வேண்டும் +2 விற்கு மேல் உள்ள படிப்புகளில் ஆங்கிலப்புத்தகங்கள் இருக்கும் அளவிற்கு தமிழ்ப்புத்தகங்கள் இல்லை.

    அதே சமயம் +2 வரை தமிழில் எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மை, குறைந்தது ஒரு மொழிப்பாடமாக தமிழைப்படிக்க முடியாமல் இருக்க விருப்பமின்மை காரணமாக இருக்க முடியுமே தவிர புத்தகங்கள் இல்லை என்பது காரணமாக இருக்காது என எண்ணுகின்றேன்.

    //தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும். //
    இது உண்மை அய்யா, ஆனால் எனக்குத்தெரிந்து தமிழ் மதிப்பெண்கள் பற்றி யாரும் அவ்வளவாக கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனாலும் தற்போது 190/200 க்கு மேல் என மதிப்பெண்கள் போட ஆரம்பித்துள்ளனர்.

    ஒரு க், ஒரு அரைப்புள்ளி விட்டிருந்தாலும் அரை மதிப்பெண் ஒரு மதிப்பெண்கள் குறைப்பதில் தமிழாசிரியர்களெல்லாம் நக்கீரர்களே.

    நன்றி

    ReplyDelete
  7. நான்தான் ஏற்கனவே கூறினேனே. எங்கள் பள்ளியிலும் SSLC வரைக்கும் தமிழ் மீடியம்தான். நான் பொறியியல் எடுத்துக்கொண்டதால் ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதாயிற்று.

    இப்போதும் புத்தகங்கள் வருகின்றனவா? ஆம் என்றால் மகிழ்ச்சியே. என்னைப் பொருத்தவரைக்கும் தமிழில் படித்தது நல்லப் பயனையே அளித்தது எனலாம். இப்போது ஆறு மொழிகள் எனக்குத் தெரியும். என்ன குறைந்து விட்டேன்?

    இருப்பினும் தற்கால நிலையையும் பார்க்க வேண்டியுள்ளது. சரியோ தவறோ தமிழ் மீடியக் கல்வி அரசுப் பள்ளிகளில் அதிகம் மையம் கொண்டுள்ளன. கணினி சம்பந்தமாக தமிழில் பாடப் புத்தகங்கள் உண்டா என்று தெரியவில்லை.

    இவ்வளவு எழுதிய பிறகு எனக்கு மறுபடியும் கல்வி பயிலும் ஆசை வந்து விட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //சரியோ தவறோ தமிழ் மீடியக் கல்வி அரசுப் பள்ளிகளில் அதிகம் மையம் கொண்டுள்ளன.//
    இது ஓரளவிற்கு உண்மைதான், எனினும் பெரு நகரங்களன்றி நகரங்களில் இன்றும் எனக்குத்தெரிந்தவரை கிறித்துவ மிஷினரி பள்ளிகளின் மூலம் தமிழ் வழிக்கல்வி சிறப்பாகவே உள்ளது.

    //கணினி சம்பந்தமாக தமிழில் பாடப் புத்தகங்கள் உண்டா என்று தெரியவில்லை. //
    தற்போது +2 வரை கணிணி புத்தகங்கள் தமிழில் உள்ளன, ஆனால் தமிழில் கணிணி புத்தகங்கள் மிக மிக குறைவே

    ஒன்று கூற மறந்துவிட்டேன், இன்னமும் பெங்களூரில் குறைந்தது ஒரு மொழிப்பாடமாகவாவது கன்னடம் படித்தே ஆகவேண்டும், அரசு வேலைக்கு செல்ல கன்னடம் தெரிந்தே ஆக வேண்டும்,நவோதயா பள்ளிகளில் மட்டும் விதிவிலக்கு, அங்கே கன்னடம் கட்டாயம் இல்லை.

    சிங்கப்பூரில் அவரவர் தாய் மொழி கட்டாயப்பாடம், அதில் அவர்கள் தேர்ச்சியுற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடியும் (தற்போது இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது என எண்ணுகின்றேன்), இத்தனைக்கும் சிங்கப்பூரில் பொது தொடர்பு மொழி ஆங்கிலம், அதிகாரத்துவ மொழிகள் தமிழ்,சீனம்,ஆங்கிலம், மற்றும் மலாய்.

    ReplyDelete
  9. "ஒன்று கூற மறந்துவிட்டேன், இன்னமும் பெங்களூரில் குறைந்தது ஒரு மொழிப்பாடமாகவாவது கன்னடம் படித்தே ஆகவேண்டும், அரசு வேலைக்கு செல்ல கன்னடம் தெரிந்தே ஆக வேண்டும்"

    அரசு வேலை பற்றியெல்லாம் தெரியாது ஆனால் கன்னடமே படிக்காமல் பள்ளி படிப்பை கர்னாடகாவில் முடிக்க இயலும். இப்போதுதான் பெங்களூரில் வசிக்கும் என் மைத்துனனை கேட்டு தெரிந்து கொண்டேன். ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. யில் படிப்பவர்கள் ஹிந்தி, வடமொழி, பிரென்ஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளின் துணையுடன் கன்னடத்தைத் தவிர்க்க இயலும். மாநில போர்ட் பள்ளிகளில்தான் கன்னடம் கட்டாயமாம்.

    இதே நிலை ஆந்திராவிலும் என்று ஹைதராபாத்தில் வசிக்கும் என் நண்பரிடமிருந்து கேட்டு அறிந்தேன். அங்கும் தெலுங்கை தவிர்ப்பது முடியாத காரியம் அல்ல.

    இப்பிரச்சினையில் இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். அகில இந்திய மாற்றல்களுக்கு உட்படுவர்கள் தங்கள் குழந்தைகளை ஹிந்தி படிக்கத்தான் விடுகின்றனர்.

    மற்றப்படி அந்தந்த மாநிலங்களில் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளை படிப்பது ப்ராக்டிகலாகப் பார்த்தால் வேறு வழியில்லாமல் செய்வது போலத்தான் தோன்றுகிறது. தில்லியில் நான் இருந்த போது ஆங்கில மீடியம் படிப்பது கௌரவத்துக்குரியதாகக் கருதப்பட்டது. இப்போதும் அதே நிலைதான்.

    இதை கருப்பு வெள்ளை என்ற ரீதியில் பார்க்க இயலாது. ]2 வகுப்பு வரை தமிழில் படித்து விட்டு வரும் மாணவன் பொறியியல் எடுத்துக்கொண்டால் அவனுக்கு கடினம்தானே. ஆகவே இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாணவனும் அவன் பெற்றோருமே முடிவு எடுக்க வேண்டும்.

    அவர்களிடம் போய் தமிழ் மீடியத்தில் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் என்று அறிவுரை கூறும் தலைவர்கள் மட்டும் ஏதேதோ காரணங்கள் சொல்லி ஆங்கில மீடியத்தில் தங்கள் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கும்போது எரிச்சல் வருவதைத் தடுக்க முடியாதுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. DRaj அவர்களே,

    நீங்கள் கூறியது உண்மையாக இருப்பின் மிக்க மகிழ்ச்சியே. ஆனால் இன்னும் சில குருட்டு தொண்டர்கள் இருக்கிறார்களே. வை.கோ. மீது கொலைப் பழியை மு.க. அவர்கள் சுமத்தியதற்கே தீக்குளித்து உயிர் துறந்தார் ஒரு தொண்டர். ஆனால் இன்று அதே வை.கோவும் மு.க.வும் ஒன்றாகச் சேர்ந்து குலாவுகிறார்கள். செத்தவரை கூமுட்டையாகத்தானே இந்தத் தலைவர்கள் கருதுகிறார்கள் என்பது இதனால் புலப்படுகிறது?

    பொருள் ஈட்டும் குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் குடும்பங்கள் இம்மாதிரி வெறித்தனமான பக்தியால் ஏராளமாக உருவாகின்றன. சிறிது நேரம் முதலைக் கண்ணீர் வடித்து விட்டு தலைவர்கள் தங்கள் சோலிகளை கவனிக்கப் போய் விடுகின்றனர்.

    ஆகவே இம்மாதிரித் தொண்டர்களுக்காகவாவது நாம் அடிக்கடி குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

    தலைவர்கள் உருவாக்கும் போராட்டங்களால் முன்னேற்றம் பெற்று பெரிய வேலைகளுக்கு செல்லும் தொண்டர்கள் வேண்டுமானால் அவ்வப்போது தங்கள் நன்றிக் கடனை எழுத்தில் காட்டட்டுமே. யார் வேண்டாம் என்கிறது? இந்தத் தலைவர்களுக்கும் அதுவே அதிகம்தான்.

    ஆகவே மறுபடி கூறுவேன். தொண்டர்களே! தலைவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணருங்கள். ஆகவே நீங்களும் அவர்களை உங்கள் நலனுக்கு பாதகம் வரா வண்ணம் பின் பற்றுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எது நலமான படிப்பு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக கடை பிடிப்பதையே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. "தலைவர் சொன்னதால் பிள்ளையை தமிழ் வழி கல்விக்கு அனுப்பினால் இல்லத்தரசியின் "அர்ச்சனையை" அனுபவிக்க நேரிடும். தொண்டர்களால் இந்த சோதனையை சமாளிக்கமுடியுமென்று தொன்றவில்லை ;)"

    100% சரிதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. >> ஒரு உண்மை ஒத்துக்கொள்ளப்பட >>வேண்டும் +2 விற்கு மேல் உள்ள >>படிப்புகளில் ஆங்கிலப்புத்தகங்கள் >>இருக்கும் அளவிற்கு தமிழ்ப்புத்தகங்கள் >>இல்லை.

    ipoludhu irukum kanipori padipirkaana aarvathirkum, melnaatirku sendru panam pannum ennamum tamizh padipai edukaathatharku oru kaaranaam..

    mattondraaga naan karudhuvadhu.. perum thozhihnutpa paadangaluku tamilil poriyiyal paada noolgal unda (Electronics,Mechanical,Aeronaugtical...etc).. Idhil sila paada noolgal kidaipathaal periya vishayamilai.. adhu indha kaalathil... evalavu thooram practical life-il velaiyil , merpadipil payan padukindradhu ?!

    yaaravadhu vilakuvaargala ?

    >>அதே சமயம் +2 வரை தமிழில் எல்லா >>புத்தகங்களும் கிடைக்கின்றன என்பதும் >>மறுக்கமுடியாத உண்மை,


    குறைந்தது ஒரு மொழிப்பாடமாக தமிழைப்படிக்க முடியாமல் இருக்க விருப்பமின்மை காரணமாக இருக்க முடியுமே தவிர புத்தகங்கள் இல்லை என்பது காரணமாக இருக்காது என எண்ணுகின்றேன்.

    ReplyDelete
  13. டோண்டு ஐயா,
    நானும் கூட +2 வரை தமிழ் வழியில் தான் படித்தேன் . கணிதம் ,இயற்பியல் ,வேதியியல் ,வணிகவியல் அனைத்தும் தமிழில் தான் படித்தேன் .அதனால் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை .ஆங்கிலத்தில் பெரிய புலமை இல்லையெனினும் என் வேலைக்கு தேவையான சராசரி அளவைவிட அதிகமாவே பெற்றிருக்கிறேன் (அனுபவம் மூலமாக) .

    ReplyDelete
  14. "குறைந்தது ஒரு மொழிப்பாடமாக தமிழைப்படிக்க முடியாமல் இருக்க விருப்பமின்மை காரணமாக இருக்க முடியுமே தவிர புத்தகங்கள் இல்லை என்பது காரணமாக இருக்காது என எண்ணுகின்றேன்."

    அந்த விருப்பமின்மைக்கும் நல்லக் காரணங்கள் உண்டு. அதாவது பெற்றொர் அகில இந்திய அளவில் பணி மாற்றங்களுக்கு உட்படுபவராக இருந்தால் பிள்ளைகளை வேற்று மாநிலங்களில் படிக்க வைப்பது கடினமாகி விடும். ஆகவே பலர் ஹிந்தியைத் தேர்ந்தெடுத்து விடுகின்றனர்.

    மதிப்பெண் போடுவதில் கஞ்சத்தனம் செய்யும் தமிழாசிரியர்களும் ஒரு காரணமே. அதைக் காரணம் காட்டி வடமொழியைத் தேர்வு செய்கின்றனர்.

    ஜோ அவர்களே, நாம் இருவரும் ஒன்றையே கூறுகிறோம். நாம் தமிழ் மீடியமில் படித்து முன்னேறியவர்கள்.
    ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

    நம்முடையது முடிந்து போன கேஸ். ஆனால் படிப்பைத் துவங்கும் மாணவன் ஒருவனின் பெற்றொர்ர்கள் என்ன செய்வார்கள் என நினைக்கிறீர்கள்? தங்கள் பிள்ளையின் எதிர்க்காலம் வளம்பெறும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கத்தானே விரும்புவார்கள். அதில் அவர்கள் தமிழ் வேண்டாம் என முடிவு செய்தால் அது அவர்கள் விருப்பம். வெளியாட்களாகிய நாமோ அல்லது ஆஷாடபூதி அரசியல்வாதிகளோ அதில் தலையிட ஒரு உரிமையும் பெற்றிருக்கவில்லை அவ்வளவுதான்.

    அதே ஆஷாடபூதி தலைவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளை தமிழ் மீடியத்தில் படிக்க வைப்பதில்லை.

    ஆகவேதான் தொண்டர்களுக்கு கூறுவேன் தலைவரைப் போல நல்ல தந்தையாக இருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete