நிரந்தர பக்கங்கள்

10/30/2006

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?

சமீபத்தில் 1970-ல் நான் திருவிளையாடல் படம் பார்த்த போது யோசித்த சில விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா?

உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.

இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.

ஆனால் கேனத்தனமாக அரசன் புலவர்களிடம் போய்க் கேட்டு வைத்தான். பாருங்கள், "இதனை இவனால் முடிக்கும் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது போல வரும் குறளை மன்னன் மறந்திருப்பானோ?

எது எப்படியோ, புலவர்களிடம் கேட்டு அவர்கள் விழிக்க, தண்டோரா போடச் செய்து தருமி வந்து புலம்பி, சிவபெருமான் மண்டபத்தில் இருந்து கொண்டு எழுதித் தந்ததை கொண்டு போய் கொடுத்து, சிவபெருமானிடம் மீண்டு வந்து, "உதைக்காம விட்டாங்களே" என்று அல்ப திருப்திப்பட்டு என்றெல்லாம் கதை போகிறது.

என்னமோ சொற்குற்றம் பரவாயில்லையாம், பொருள் குற்றம்தான் தவறு என்று கூறி, இருப்பதிலேயே பெரிய பொருள் குற்றம் செய்கிறார் நக்கீரர், ஏனெனில் அவர் ப்ளஸ் டூ படிக்கவில்லை.

இப்போது இக்கதையை நான் கீழ்க்கண்டவாறு மாற்றுகிறேன்.

சிவபெருமான்: ஆக, உயர்குல மாதரின் கூந்தலில் கூட இயற்கைமணம் இல்லையா?
நக்கீரன்: இல்லை
சிவபெருமான்: தேவலோகப் பெண்டிர்கள்?
நக்கீரன்: இல்லை, நான் வணங்கும் பார்வதி தேவியிடமும் இல்லை
சிவபெருமான்: நக்கீரா இப்போது என்னைப் பார்.
நக்கீரன்: நீர் முக்கண் முதல்வனே ஆனாலும் குற்றம் குற்றமே.

அடுத்த சீன் பொற்றாமரைக் குளத்தருகில்.
பாண்டிய மன்னன்: சொக்கேசரே என்ன இது விளையாட்டு.
சிவபெருமான்: ஷண்பகப் பாண்டியனே, உமது நக்கீரன் தேவலோகப் பெண்டிர் கூந்தல் கூட இயற்கை மணம் கொண்டதில்லை என்று கூறுகிறான். அவன் என்ன நேரில் பார்த்தானா? நேரில் பார்த்தவனான என்னிடமே இவ்வாறு விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது. சரி உனக்காக நக்கீரனை பிழைக்கச் செய்கிறேன்.
நக்கீரன்: மன்னிக்க வேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த தமிழில் பிழை இருக்கலாகாது என்பதால்தான் வாது புரிந்தேன்.
சிவபெருமான்: அதற்காக விதண்டாவாதம் செய்தால் எப்படி? நீர் ஏதேனும் தேவலோக மங்கையரைக் கண்டீரா? நான் கண்டவன். என்னிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே முறை? இல்லையென்றால் உமது புலமைச் சக்தியால் பார்வதி தேவியிடமே பிரார்த்தித்து அவரை வரச் செய்து அவரைக் கேட்பதுதானே முறை. இல்லாமல் அனுமானத்தில் பேசினால் எப்படி?
பாண்டியன்: (தலையைப் பிய்த்துக் கொண்டு) ஐயோ கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா இல்லையா?
சிவபெருமான்: அது தெய்வ ரகசியம் பாண்டியனே.
பாண்டியன்: பிறகு எப்போதுதான் தெரிந்து கொள்வது?
சிவபெருமான்: பல நூறாண்டுகள் கழித்து தமிழ்மணத்தில் டோண்டு ராகவன் என்பவர் பதிவிடுவார். பிழைத்துக் கிடந்தால் அப்போது படித்து தெரிந்து கொள்.

இப்போது டோண்டு ராகவன் பேசுகிறேன்:
ஷண்பகப் பாண்டியனே பதிவு போட்டு விட்டேன். முடிந்தால் படித்துக் கொள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

  1. ஐயோ, ஐயோ, ஐயோ. செத்தான் ஷண்பகப் பாண்டியன் (இதுவரை உயிருடன் இருந்திருந்தால்)

    முகம்மது யூனுஸ்

    ReplyDelete
  2. டோண்டு சார் எங்கேயோ போயிட்டீங்க.
    கிருஷ்ணன்

    ReplyDelete
  3. நன்றி ஹாரி பாட்டர் மற்றும் செர்வாண்டஸ்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. இளைஞர் டோண்டுவிடம் இருந்து ஒரு ஜாலி பதிவு! ஜமாயுங்கள்!

    ReplyDelete
  5. நீங்க்கள் ரசித்தீர்கள். ஷண்பகப் பாண்டியன் (அதாங்க முத்துராமன்) ரசிப்பாரா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. கப்பு என்பதற்குப் பதிலாக வாசனை என்று எழுதிவிட்டீர்களா?

    பட்டினத்தார் முதலான சித்தர்கள் அதைவிட மோசமாக சொல்லுகிறார்கள்.

    இப்போது மீண்டும் கேள்வி பிறக்கிறது.

    நாத்தமா? வாசனையா?

    ReplyDelete
  7. பழந்தமிழில் நாற்றம் என்றால் வாசனை என்றுதான் பொருள். மறுபடி கூறுகிறேன், உடல் இச்சையுடன் ஆணும் பெண்ணும் நெருங்கும்போது கப்பு எல்லாம் தெரியாது. பட்டினத்தார் எல்லாம் படிக்கும் வயது உங்களுக்கில்லை. நீங்கள் மணம் புரிந்து வாழ வேண்டியவர்.

    லால் பாக்கில் முயல் விளையாட்டு விளையாடுபவர்கள் நான் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள். :))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. 'தேவர்' குலப்பெண்களுக்கா? பாத்துங்க, எதாவது சாதிக்கலவரம் ஆரம்பிச்சுரப்போறாங்க ;D சண்டியர்னு பேர் வச்சு கமலஹாச ஐயங்கார் பட்ட பாடு போதாதா?

    சரி, அது என்ன முயல் விளையாட்டு? விளக்கி ஒரு தனி பதிவு போடவும்.

    ReplyDelete
  9. "'தேவர்' குலப்பெண்களுக்கா? பாத்துங்க, எதாவது சாதிக்கலவரம் ஆரம்பிச்சுரப்போறாங்க.."
    :))))))))
    நீங்கள் சொல்வதும் உண்மையே. எதற்கு வம்பு? தேவலோகப் பெண்டிர் என்று மாற்றி விட்டேன்.

    எப்படா இந்த டோண்டு ராகவன் எழுதும் ஏதேனும் ஒரு வரியை இடம் பொருள் தெரியாது (out of context) எடுத்தெடுத்து தனிப்பதிவு போடுவோம் என்று ஒரு கோஷ்டியே அலைந்து கொண்டிருக்கிறது.

    விவேக் ஒரு படத்தில் ரேடியோ ஆடிஷனுக்காக வருகிறார். அவர் கூடவே இன்னொரு பெண்ணும் அதே நோக்கத்தில். அப்பெண் படிக்கும் போது "ஆச்சியை நாங்கள் கைப்பற்றுவது உறுதி" என்று அப்பெண் ஆணித்தரமாகத் தவறான உச்சரிப்பில் படிக்கும்போது, விவேக் "என்னது ஆச்சியையா? அடப்பாவிங்களா காரக்குடி பக்கம் இதை யாராவது கேட்டாங்கனா கலவரமே வெடிச்சுடும்டா" என்று புலம்புவது இங்கு ஞாபகத்துக்கு வருகிறது. அவர் குரலையும் நினைவில் கொள்வது அவசியம்.

    முயல் விளையாட்டு தெரியாது? என்னுடைய பெங்களூர் சந்திப்பைப் பற்றிய பதிவில் தமிழ்நாட்டு வினோத் துவா ம்யூஸ் அளித்தப் பின்னூட்டத்தில் முதல் தடவையாக முயல் சேட்டை என்ற வார்த்தையைக் கண்டேன். அவர் எழுதுகிறார்:

    "அந்த சிறிய குன்று பல லக்ஷம் வருடங்களுக்கு முந்தையது என்று பக்கத்தில் வைத்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் போர்ட் அறிவிக்கிறது. தமிழ் தோன்றி, மண் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியதாக இருக்கும். பள்ளியில் டார்வினை மனனம் செய்த ஞாபகத்தில் இதை உறுதிசெய்ய பக்கத்தில் த்ராவிட அல்லது தமிழ் குரங்கு ஏதேனும் இருக்குமா என்று தேடினேன். இரண்டாக இரண்டாக உட்கார்ந்துகொண்டு முயல் சேட்டை செய்பவர்கள்தான் இருந்தார்கள். அவர்களிடம்போய் கேட்டால்
    "ஜோடிதொந்தரவஷ்டகஷ்டக" தோஷம்வரும் என்று கருடபுராணம் படித்துவிட்டு அன்னியன் அல்லது சுஜாதா சொல்லியிருப்பதால் வேறு பக்கம் திரும்பினேன். (தமிழ் இலக்கிய ஞானிகள் பலருக்கு சுஜாதாவே ஒரு அன்னியன்தான்.)"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. அடடா! ஒரு தாமாஸன பதிவு.

    ReplyDelete
  11. "அடடா! ஒரு தமாஷான பதிவு."

    நன்றி தர்ஷன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. "ஐயோ, ஐயோ, ஐயோ. செத்தான் ஷண்பகப் பாண்டியன் (இதுவரை உயிருடன் இருந்திருந்தால்)"

    மிகச் சிறந்த பின்னூட்டம் ஹாரி பாட்டர்.

    தங்கம்மா

    ReplyDelete
  13. kelvi ...pengal koondalil eyarkayiley MANNAM unda enabathu thaan

    pengal koondalin "NATRAM" pathi ALLA!!

    ReplyDelete
  14. //kelvi ...pengal koondalil eyarkayiley MANNAM unda enabathu thaan, pengal koondalin "NATRAM" pathi ALLA!!//
    நாற்றம் என்றால் மணம் என்னும் பொருளும் உண்டு. அது இருக்கட்டும். நாந்தான் எழுதினேனே, "ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.
    இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை".

    இவ்வளவு டெஃபினிஷன் கொடுத்தும் புரியவில்லை என்றால் என்ன செய்வது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. இதில் இவ்வளவு விஷயங்கள் உண்டா?

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

    ReplyDelete
  16. அப்படித்தான் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் அவர்களே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. காத்திருப்போம் டோண்டு சார், ஒருநாள் ஷெண்பகப் பாண்டியன் இப்பதிவுக்கு வந்து பின்னூட்டுவார் பாருங்கள்:)))!

    ReplyDelete