நிரந்தர பக்கங்கள்

11/22/2006

சிக்கன் 65 எப்படி தயாரிப்பது?

எல்லோரும் அவரவர் சக்திக்கேற்ப சமையல் குறிப்புகள் தரும்போது நான் மட்டும் பின் வாங்கலாமா. அதான் ஏற்கனவே ஒரு குறிப்பு கொடுத்தாகி விட்டதே. அதை முன்னூட்டக் கயமை செய்து முன்னே தள்ளிக் கொண்டு வருவதுதான் நான் செய்யப் போவது. அதற்கு முன்னால் எனக்கு சமையல் கலையை சொல்லிக் கொடுத்த திரு. W:P:K: ஐயங்காருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். சமீபத்தில் 1968-ல் எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.

முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.

இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.

மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயைழும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.

அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.

எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.

இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.

இப்போது இப்பதிவுக்குரிய சமையல் குறிப்புக்குப் போவோமா. காலம் சென்ர அந்த ஐயங்கார் ஸ்வாமியின் ஆத்மா என்னை மன்னிக்கட்டும்.

எலிய முறையில் சிக்கன் 65 செய்வது பற்றிய இப்பதிவுதான் எனது இந்த இடுகைக்கு உந்துதல் அளித்தது.

சிக்கன் 65 செய்ய இயற்கையான், எளிய வழியை இப்போது இந்த 60 வயது இளைஞன் டோண்டு ராகவன் கூறுவான்.

1. குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

2. 7 கோழிகளாவது பிடித்துக் கொள்ளவும்.

3. ஒவ்வொரு கோழி அடியிலும் 9-10 முட்டைகளுக்கு குறைவில்லாமல் வைக்கவும்.

4. கோழிகளை இடம் மாற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.

5. சிக்கன் 65 வரும்.

6. மறுபடியும் குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை எடுத்துக் கொள்ளவும்.

7. பழைய ஏழு கோழிகளையே வைத்துக் கொள்ளவும். ஏதாவது கோழி ஆட்சேபம் தெரிவித்தால் அதை எழுத்து ரூபத்தில் தரச் சொல்லவும்.

8. ஆட்சேபம் செய்த கோழிகளுக்கு சமமான எண்ணிக்கையில் மாற்றுக் கோழிகளை கூப்பிட்டுக் கொள்ளவும்.

9. ஆட்சேபம் செய்த கோழிகளை வைத்துக் குழம்பு செய்யவும்.

10. ஒவ்வொரு கோழி அடியிலும் 9-10 முட்டைகளுக்கு குறைவில்லாமல் வைக்கவும்.

11. கோழிகளை இடம் மாற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.

12. அடுத்த பேட்ச் சிக்கன் 65 வரும்.

மேலும் சிக்கன் 65 பேட்சுகள் எவ்வாறு செய்வது என்பதற்கு வழிமுறைகள் 6 முதல் 12 வரை பார்க்கவும். எவ்வளவு பேட்சுகள் தேவையோ அவ்வளவு முறை பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

36 comments:

  1. சாதாரண சிக்கன் 65 கடிக்கலாம்.

    ஆனா நான் சொன்ன சிக்கன் 65 அத்தனையும் கடிக்கறது கஷ்டம். கோழி கொத்திடும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. "How come a vegetarian aiyangar is suddenly interested in chicken 65?"

    எனக்கு மிகப் பரிச்சயமான ஒருவர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால் அவரை நான் நேருக்கு நேர் சந்தித்ததில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. "இந்த clue வைத்து எப்படி கண்டுபிடிக்க முடியும்? நல்ல clue கொடுங்கள்."
    கொடுத்தால் போயிற்று. எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு சிறு கதையிலிருந்து. (தலைப்பு ஞாபகம் இல்லை. சுஜாதாவுக்கே ஞாபகம் இருக்காது என நினைக்கிறேன். தேசிகனைத்தான் கேட்க வேண்டும்.)

    அக்கதைக்கு இப்போது போவோம்.

    ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னைக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரசில் வருகிறார். அப்போது அவர் எதிரில் பிறவிக் குருடர் வந்து உட்காருகிறார். பரிச்சயம் வந்து பேச ஆரம்பிக்கின்றனர். பார்வையற்றவர் சுஜாதா அவர்களிடம் அவர் எங்கு வேலை செய்கிறார் எனக் கேட்க, சுஜாதா பி.இ.எல். எனக் கூறுகிறார். அதில் வேலை செய்யும் எழுத்தாளர் சுஜாதாவைத் தெரியுமா என்று பார்வையற்றவர் ஆவலுடன் கேட்க அதற்கு சுஜாதா அவர்கள் "தெரியும், ஆனால் நேருக்கு நேர் சந்தித்ததில்லை" எனக் கூறுகிறார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. சார்,

    சிக்கனை உயிருடன் சாப்பிடுவதிலிருந்து அதை வளர்த்து, வெட்டி, சுத்தம் செய்து, மசாலா தடவி சமைத்து சாப்பிடும் லெவலுக்கு மனித குலம் முன்னேறி விட்டது...

    நீங்க இன்னும் அதை வளர்த்துகிட்டே இருந்தீங்கன்னா...என்ன அர்த்தம்?

    ReplyDelete
  5. //எனக்கு மிகப் பரிச்சயமான ஒருவர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால் அவரை நான் நேருக்கு நேர் சந்தித்ததில்லை.
    //

    அது நான் தானே

    ReplyDelete
  6. "அது நான் தானே"
    உங்களுக்கு அசைவ உணவு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியுமே!:)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. "சிக்கனை உயிருடன் சாப்பிடுவதிலிருந்து அதை வளர்த்து, வெட்டி, சுத்தம் செய்து, மசாலா தடவி சமைத்து...."
    அதுக்கு முன்னாடி அதை உருவாக்க வாணாமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. டோண்டு ஸார்,

    நீங்கள் சொல்லுவதில் செய்யமுடிவதை செய்துவிடுவது (அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்ளுவது முதல்) என்று முடிவு செய்துகொண்ட நான் தாங்கள் சொன்னபடி சிக்கன் 65 செய்ய கோழிகளை துரத்திப் பிடிக்க கிளம்பினேன். எங்கே போகிறேன் என்பதை கேட்ட நண்பர் சொன்னது:

    "சிக்ஸ் (chiks) பிடிக்க போவதைவிட்டுவிட்டு சிக்கன்களைப் பிடிக்கப்போகவேண்டாம்"

    தாங்கள் சொல்லுவதைக் கேட்பதைவிட அவர்சொல்லுவதை கேட்கவேண்டிய கட்டாயம் இருப்பதால் இருவரையும் பகைத்துக்கொள்ள விரும்பாமல் அலுவலகம்வந்து ஆஃபீஸ் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

    அந்த நண்பர் யார் தெரியுமா? அதற்கான க்ளூவை தாங்கள் ஏற்கனவே கொடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  9. நல்லவேளையாக அரிந்தம் சௌத்ரிக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. இப்படிப்பட்ட போட்டியை அவரால் தாங்கமுடியாது, பாவம்.

    ReplyDelete
  10. "சிக்ஸ் (chiks) பிடிக்க போவதைவிட்டுவிட்டு சிக்கன்களைப் பிடிக்கப்போகவேண்டாம்"

    அதற்கு நீங்கள் மிகவும் அறிந்த ஆனால் நேரில் சந்திக்காத ஒருவர் குறிப்பிட்ட முயல் சேட்டைகளில் தேர்ந்திருக்க வேண்டுமே. :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. அரிந்தம் சவுத்ரிக்கு யாராவது மொழிபெயர்த்து அனுப்புங்கப்பா.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. டோண்டு ஸார்,

    அதற்கு நீங்கள் மிகவும் அறிந்த ஆனால் நேரில் சந்திக்காத ஒருவர் குறிப்பிட்ட முயல் சேட்டைகளில் தேர்ந்திருக்க வேண்டுமே. :)))

    அதில் தேர்ந்தவராக மாற அவருக்கு விருப்பம் இருக்கிறதாம். முயல் சேட்டைகளில் தேர்வது எப்படி? என்பது பற்றி யாராவது எக்ஸ்பர்ட் சொல்லிக்கொடுத்தால் கற்றுத் தேர்ந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறார்.

    வாத்தியார் யாரேனும் உள்ளனரா?

    ReplyDelete
  13. அரிந்தம் சவுத்ரிக்கு யாராவது மொழிபெயர்த்து அனுப்புங்கப்பா.

    Thus saith a translator.

    ReplyDelete
  14. "வாத்தியார் யாரேனும் உள்ளனரா?"
    பெங்களூர் லால்பாக்கில் சுற்றினால் முதலில் தியரியை கற்கலாம். (அதற்கு முன்னால் அடிக்க வந்தால் ஓடுவது பற்றிய பிராக்டிகலில் பயிற்சி பெற வேண்டும்).

    பிறகு என்ன கூட்டு முயற்சிதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. "Thus saith a translator."
    தொழிற்முறை மொழிபெயர்ப்பாளர் அது கூட கூறாவிட்டால் எப்படி? இந்த மொழிபெயர்ப்புக்கு துட்டு கிடைப்பது போக யார் கோடி ரூபாய் கணல்லில் கேஸில் மாட்டுவது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. கணல்லில் கேஸில்

    ???????

    ReplyDelete
  17. கணக்கில் என்று படிக்கவும். கே மற்றும் எல் அருகருகில் இருப்பதால் தட்டச்சுப் பிழை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. விளக்கத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  19. :))))))))))))))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. இங்க என்ன நடக்குதுன்னே எனக்கு வெளங்குலயே?!

    ReplyDelete
  21. "இங்க என்ன நடக்குதுன்னே எனக்கு வெளங்குலயே?!"
    சிக்கன் 65 செய்யும் முறை விவாதிக்கப்படுகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. அதெல்லாம் சரி ஸார்.

    நீங்கள் உருவாக்கிய சிக்கன்கள் எத்தனை?

    அல்லது "முடிந்தவர்கள் சாதிக்கிறார்கள். முடியாதவர்கள் போதிக்கிறார்கள்" என்று ஸாக்ரடீஸ் சொன்னதைப் பின்பற்றுகிறீர்களா?

    ReplyDelete
  23. "அல்லது "முடிந்தவர்கள் சாதிக்கிறார்கள். முடியாதவர்கள் போதிக்கிறார்கள்" என்று ஸாக்ரடீஸ் சொன்னதைப் பின்பற்றுகிறீர்களா?"

    :)))))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. //குறைந்த பட்சமாக 65 கோழி முட்டைகளை //

    அதே 7 கோழிகளின் முட்டைகளா அல்லது வேறு கோழிகளின் முட்டைகளா?

    இதில் ஒரு "சிக்கனும் முட்டையும்" சிக்கல் இருக்கிறதோ?

    ReplyDelete
  25. எண்கள் ஒன்றும் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. 65 முட்டைகள் பெறுவது ஒரு விஷயம், 7 கோழிகள் வேறொரு விஷயம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. ஒரு சந்தேகம்.
    நோபல் பரிசு பெற்ற யாரோ ஒருவர் உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் பொதுவான இலக்கணம் வகுக்க முடியும் என்று கூறியிருக்கிறாராம். அப்படி ஒன்று நடந்தால் "சிக்கன் 65" அல்லது "சிக்கன்கள் 65" - எது சரி?

    சிக்கன் 65தான் சரி என்றால், 65 என்பது அந்த சிக்கனின் பெயரா?

    அப்படியானால் ஒரே ஒரு சிக்கன்தானே செய்ய முடியும்? அந்த ஒரே ஒரு சிக்கன் செய்வதற்கு எதற்கு இத்தனை கோழிகள்?

    (அட, ஒரு சந்தேகம் என்று ஆரம்பித்து பல சந்தேகங்கள் கேட்டுள்ளேன். "பல சந்தேகங்கள்" என்று மாற்றிப் படித்துக்கொள்ளவும்.)

    சிக்கன்கள் 65 என்பது சரியானால் தங்களின் தலைப்பே தப்பு.

    (யாரோ நெற்றிக்கண் திறக்கிறார்கள் போலிருக்கிறது. அஞ்சேன். நக்கீரன் நடந்த மதுரை மண்ணில் பிறந்தவனாக்கும் நான்.)

    அடுத்த சந்தேகம். தமிழும் ஆங்கிலமும் கலந்தடிக்கும்போது எந்த இலக்கணத்தை பின்பற்றவேண்டும்?

    ReplyDelete
  27. மரியாதைக்குரிய டோண்டு சார்,

    தங்களுக்கு பிடித்தமான லாஜிக்கில் ஒரு சந்தேகம். தாங்கள் எந்தவித கடினமும் உணராமல் முக்கால் மணிநேரத்திலேயே சமைத்துவிடுவேன் என்று கூறுகிறீர்கள்.

    முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார்.

    அதன் பின்னால் வரும் பகுதியில் பின்வருமாறு கூறுகிறீர்கள்.

    ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.


    எனவே, முக்கால் மணி நேரத்தில் தயாராகும் உணவு எந்த அளவு ருசியாக இருக்கும் என்பதை முடிவாக எடுத்துக்கொள்ளலாமா? :-) !

    ReplyDelete
  28. ம்யூஸ் அவர்களே,

    Does anyone know what is the correct origin of the recipe name chicken 65? There are many folklore stories about this one. The first story is that the spices must soak for 65 days. The second story is about the Indian soldiers who needed something quick and easy during a war in 1965 and the unanimous choice of the soldiers was to have deep-fried boneless chicken pieces dipped in yogurt and spices - the chicken 65. The third story we know is about someone who used 65 dried red chilies to make the chicken hot. Whatever is the original story, the chicken 65 by any other name would taste as fiery and yummy.

    பார்க்க: http://mydhaba.blogspot.com/2005/12/chicken-65.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. ஏதாவது கோழி ஆட்சேபம் தெரிவித்தால் அதை எழுத்து ரூபத்தில் தரச் சொல்லவும்.

    தாங்கள் அரசாங்கத்தில் வேலை பார்த்தவரோ என்று முதன்முறையாகப் படிப்பவருக்கு சந்தேகம் எழும்.

    ஆட்சேபம் செய்த கோழிகளை வைத்துக் குழம்பு செய்யவும்.

    இப்போது அந்த சந்தேகம் நிரூபணம் ஆகிவிட்டிருக்கும்.

    அதற்கு நிவாரணமாக, அரசாங்க வேலையில் நடைபெற்ற தவறுகளை தாங்கள் தட்டிக்கேட்ட விஷயங்களைப் படிப்பதுதான் தீர்வு. (உதாரணமாக: எலெக்ட்ரிக்கல் ஒயரிங்க் பற்றிய கடிதம்.)

    ReplyDelete
  30. "ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.


    எனவே, முக்கால் மணி நேரத்தில் தயாராகும் உணவு எந்த அளவு ருசியாக இருக்கும் என்பதை முடிவாக எடுத்துக்கொள்ளலாமா? :-) !"

    எல்லாம் பொறாமைதான் காரணம். நான் நன்றாக சமைப்பதை அவர் ஒத்துக் கொள்ள மாட்டார்.:)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. "தாங்கள் அரசாங்கத்தில் வேலை பார்த்தவரோ என்று முதன்முறையாகப் படிப்பவருக்கு சந்தேகம் எழும்."
    உண்மைதானே அது.

    எலெக்ட்ரிகல் வைரிங்க் என்று நீங்கள் குறிப்பிடுவது எச்.ஆர்.சி. ஃப்யூஸ் பற்றி நான் எழுதியதுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. ஆம். ஒயரிங்க் பற்றிய கட்டுரைதான்.

    சிக்கன் 65ன் மூலம் பற்றி நான் வேறு ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஹைதரபாத் நிஜாம்கள் கிழடு தட்டிப்போய் 22வது இளவயது மனைவியோ அல்லது அடிமையோ தயாரித்துத்தரும் சிக்கன் உணவை ஒட்டுப்பல் மூலம் கட்டிக்க முடியாததால், அந்த நிஜாம்களின் சமையற்காரர்கள் அவர்களுக்காக தயாரித்த மென்மையான உணவுதான் அது.

    எப்படியோ போரை முன்னிட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்கள் போல(உம்: இண்டெர்நெட்), அரசர்களின் அறுசுவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் சாமானியர்களின் உபயோகத்திற்கும் வந்து சேர்ந்தது.

    வெள்ளை மாமிசம் என்பதால் மற்ற மாமிசத்தைவிட புரத சத்தும் அதிகம் என்று கேள்விப்படுகிறேன்.

    பிடித்தவர்கள் சாப்பிட்டு உடம்பை தேற்றிக்கொள்ளட்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தபின்னால் நிஜாமின் சமையற்கட்டிலிருந்து இந்த ரகசியத்தை பொதுமக்களிடம் கொண்டு வந்து சேர்த்த ("திருடிய" என்கிற ஒரு வார்த்தைக்குப் பதில் எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஹ்ம்ம்.) அந்த நல்ல உள்ளம் வாழ்க என்று வாழ்த்தவேண்டியது அவர்களது தார்மீகக் கடமை.

    கனடாவிற்கு இந்த கோரிக்கை கேட்கிறதா?

    ReplyDelete
  33. அப்படியே இந்த சிக்கன் 65 சாப்பிடுவது எப்படி ன்னு ஒரு பதிவையும் போட்டுடுங்களேன்.

    ReplyDelete
  34. சிக்கன் 65 எப்படி சாப்பிடுவதா?

    1. வலைப்பதிவர் சந்திப்பை புகாரி ஹோட்டலில் கூட்டவும்.
    2. டட்ச் ட்ரீட் என்பதைத் தெளிவுபடுத்திவிடவும்.
    2. சிக்கன் 65 பிடித்தவர்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம், மற்றவர்கள் வெறும் போண்டாவுடன் திருப்திப் பட்டு கொள்ளட்டும்
    3. சிக்கன் 65 சாப்பிட்ட களைப்பு தீர்வதற்கு ஒரு லைம் ஜூஸ் பிறகு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

    4. அம்புடுத்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete