நிரந்தர பக்கங்கள்

5/18/2008

துச்சாசனன் அவிழ்த்து போட்ட புடவைகள் என்னாயின?

எனக்கு தெரிந்து இக்கேள்வியை ஒரே ஒருவர்தான் கேட்டு அதை வைத்து கதையும் எழுதியுள்ளார். அவ்ர்தான் எழுத்தாளர் நாடோடி. அவரைப் பற்றி நான் ஏற்கனவே போன ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பதிவு போட்டுள்ளேன். இப்பதிவை அதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.

எங்கே விட்டேன்? துச்சாசனன் அவிழ்த்த புடவைகளிடம் விட்டேன். அவை என்ன ஆயின என்பதை வைத்து நாடோடி ஒரு நாடகம் எழுதியுள்ளார். சமீபத்தில் எழுபதுகளில் வெளிவந்த அதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.

துரோபதையின் வஸ்திரத்தை இழுக்கிறான் துச்சாசனன். அவள் கண்ணனிடம் அடைக்கலம் கேட்க, புடவைகள் விறுவிறு என்று உற்பத்தியாகி துரோபதையை சுற்றுகின்றன. சபையே நடுங்குகிறது. கர்ணனும் துரியனும் தலையை சொறிகின்றனர். துச்சாசனோ வெறிபிடித்தவன் போல புடவையை இழுத்து கொண்டே போகிறான். பீஷ்மர், துரோணர் போன்ற பெரியவர்கள் கையை பிசைகின்றனர். புடவைகள் மலையாய் குவிகின்றன. துச்சாசனன் களைத்து போய் கீழே விழுகிறான். இதுவரை பேச வாய்ப்பு இல்லாத விதுரர் அடுத்த அரைமணிக்கு பேச ஆயத்தம் செய்து கொள்கிறார்.

துச்சாசனன் குழப்பத்துடன் தன் இருக்கைக்கு வருகிறான். அருகில் இருக்கும் துரியனிடம் பேசுகிறான்.

துச்சாசனன்: அண்ணா என்னவோ தெரியவில்லை, ஒரே களைப்பாக இருக்கிறது. மனதுக்கு கலக்கமாகவும் உள்ளது.

துரியன்: இருக்காதா பின்னே. எவ்வளவு பெரிய காரியம் செய்தாய் எனக்காக, சபாஷ். அது இருக்கட்டும் துச்சாசனா, அந்தப் புடவைகளைப் பார்த்தாயா? அடாடா என்ன அழகு அவை? அமர்க்களமான வண்ணத்தில் தலைப்புகள், ஜரிகை வேலைப்பாடுகள். நம்ம அஸ்தினாபுரத்து ஜவுளிக் கடைகளில் இம்மாதிரி புடவைகள் வருவதில்லையே. ஒன்று செய்கிறேன். எல்லா புடவைகளையும் மடிக்க செய்கிறேன். எல்லாவற்றையும் உன் மாளிகைக்கு அனுப்புகிறேன். உன் மனைவி அவற்றை அணிந்து கொள்ளட்டும்.

துச்சாசனன்: வேண்டவே வேண்டாம் அண்ணா, அவற்றைப் பார்த்தாலே மனதில் ஒரு பீதி ஏற்படுகிறது.

துரியன்: சரி அவற்றை விற்று காசாக்கி கஜானாவில் சேர்ப்பித்து விடுவோம். நீ உன் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்து கொள்ளவும். இன்று இரவு உணவு என் வீட்டில்தான். மனைவியுடன் வந்துவிடு. நான் இப்போதைக்கு வர இயலாது. விதுரர் சித்தப்பா உளற ஆரம்பித்துள்ளார். இருந்து கேட்டுவிட்டு வருகிறேன்.

துச்சாசனன் தேர் ஏறி தன் மாளிகைக்கு திரும்புகிறான். மனம் பாரமாக இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. மாளிகையின் வாசல் வெறிச்சோடி கிடக்கிறது. துச்சாசனன் இது எதையும் கவனிக்காமல் உள்ளே சென்று படுக்கையறையில் படுக்கையில் வீழ்கிறான். "யாரங்கே, பழரசம் கொண்டுவா" என்று கத்திவிட்டு கண்ணை மூடுகிறான். சுமார் கால் மணி கழித்து "இந்தாருங்கள் பழரசம், சீக்கிரம் பிடியுங்கள். உள்ளே கொள்ளை வேலை கிடக்கிறது" என்ற கோபமான குரல் வருகிறது. வாரிச்சுருட்டி எழுந்து கொள்கிறான். அவனது மனைவி (அவள் பெயர் துச்சாசனி என்று வைத்து கொள்வோமே) நிற்கிறாள்.

துச்சாசனன்: இதென்ன கூத்து, பணிப்பெண்கள் எங்கே?

துச்சாசனி: எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு வேலையை விட்டு நின்று, ஓடி விட்டார்கள். உங்கள் 'வீரச்செயல்' பற்றிய செய்தி உடனேயே தலைமை பணிப்பெண் வம்பினி மூலம் எல்லோருக்கும் தெரிய வந்து விட்டது.

துச்சாசனன்: இதென்ன சோதனை. என்னை எடுத்து வளர்த்த பாமினி பாட்டி எங்கே?

துச்சாசனி: அவள்தான் எல்லோருக்கும் முன்னால் ஓடினாள்.

துச்சாசனன்: ஒழியட்டும். ஒரே வெறுப்பாக இருக்கிறது. பணியாளர்கள் எங்கே?

துச்சாசனி: நான் அவர்கள் அணைவரையும் வேலையிலிருந்து நீக்கி விட்டேன்.

துச்சாசனன்: ஏன்?

துச்சாசனி: நல்ல கதையா இருக்கே. வேறு பொம்மனாட்டிகளே இல்லாத இந்த மாளிகையில் இத்தனை தடிமாடுகளிடமிருந்து என்ன பாதுகாப்பு எனக்கு? எல்லோரும் எஜமான் வழியே சிறந்தது என்று முடிவெடுத்தால் என் கதி என்ன? எது எப்படியானாலும் தலைமை சமையற்காரன் போக்கிரி முத்துவின் முழியே சரியில்லை.

துச்சாசனன்: இது என்ன தொல்லையாகப் போய் விட்டது? இம்மாதிரி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லையே!

துச்சாசனி: என்ன இருந்தாலும் துரோபதை உங்கள் மன்னி இல்லையா? நீங்கள் நடந்து கொண்டது சரியா?

துச்சாசனன்: அதெல்லாம் அரசியல், உனக்கு புரியாது.

துச்சாசனி: சரி என்னமோ போங்கள். எனக்கு வேலை இருக்கிறது. நாளைக்கு நம் பெண் குழந்தைகளை அழைத்து கொண்டு என் பிறந்தகம் போகிறேன்.

துச்சாசனன் திகைத்து நிற்கிறான். அச்சமயம் துரியனின் ரதசாரதி வேகமாக உள்ளே வருகிறான்.

துச்சாசனன்: அண்ணனிடம் கூறு, இரவு உணவுக்கு மாலையே வந்து விடுகிறேன். அவருடன் பேச வேண்டும்.

சாரதி (சங்கடத்துடன்): ஐயா. இன்று இரவு உணவுக்கு வரவேண்டாம் என கூறத்தான் என்னை அனுப்பினார்.

துச்சாசனன் தலையில் கை வைத்து நிற்கிறான். அவன் மனைவி அவன் பின்னாலிருந்து அவனுக்கு அழகு காட்டிவிட்டு செல்கிறாள்.

சிறிது நேரத்துக்கு பிறகு. துரியனே வருகிறான்.

துரியன்: அருமைத் தம்பி துச்சாசனா, விருந்துக்கு வரவேண்டாம் எனக் கூறியதால் என் மேல் கோபம் இல்லையே?

துச்சாசனன்: இன்று நடப்பதையெல்லாம் பார்த்து தலை சுற்றுகிறது அண்ணா. அது இருக்கட்டும், ஏன் என்னை வரவேண்டாம் என கூறினீர்கள்?

துரியன்: என்ன செய்வது தம்பி. நீ வருகிறாய் என்றதுமே அரண்மனைப் பணிப்பெண்கள் அலற ஆரம்பித்து விட்டனர். வேலையை விட்டுப்போவதாக கூறிவிட்டனர். பானுமதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகவே தற்சமயம் உன்னை வரவிடாமல் தடுக்க சொன்னாள்.

துச்சாசனன்: என்ன செய்வது கடமை தவறாத எனக்கு இக்கதி. முதல் நாளன்றே இப்படி மூச்சு திணறுகிறது. இதற்கு என்ன வழி?

துரியன்: எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்தப் புடவைகள் எண்ணற்ற அளவில் உள்ளன. அவற்றைப் பார்த்தாலே உனக்கு பயம் என்கிறாய். பேசாமல் அவை எல்லாவற்றையும் பணிப்பெண்களுக்கு கொடுத்து விடலாம். அவர்கள் அதை அணிந்து வந்தால் உன்னிடமிருந்து தப்பிக்கலாம் அல்லவா? (சிரிக்கிறான்).

துச்சாசனன் தனக்குள் முணுமுணுக்கிறான், "எல்லாம் நேரந்தேன்"

அதற்குள் துச்சாசனி வெளியே வருகிறாள்.

துச்சாசனி: வணக்கம் மூத்தவரே. அது நல்ல யோசனை. அப்புடவைகள் மிக அமர்க்களமாக இருந்தன என்று தலைமைப் பணிப்பெண் வம்பினி மூலம் அறிந்தேன். இதோ செய்தி அனுப்புகிறேன். புடவைகளை நீங்கள் அனுப்புங்கள். எல்லோரும் புடவைக்காக ஓடி வந்துவிடுவார்கள்.

துரியன்: அப்படியே செய்கிறேன் பெண்ணே. நீயும் இரண்டு புடவைகள் எடுத்து கொள். தேவையானால் அவற்றை அணிந்து அவ்வப்போது பயலை பயமுறுத்து. வரட்டுமா?

பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

  1. பதிவின் தலைப்பு ரொம்ப கொயப்பமா இருக்கே.

    ReplyDelete
  2. இதில் என்ன குழப்பம்? கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதில் பதிவில் தரப்பட்டது அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. /துச்சாசனன் அவிழ்த்து போட்ட புடவைகள் என்னாயின?/
    /இதில் என்ன குழப்பம்/

    துச்சாசனன் அவிழ்த்து போட்ட துரோபதையின் புடவைகள் என்னாயின?

    ம்ஹூம்... இதுவும் தெளிவாயில்லை.

    துச்சாசனனால் உரியப்பட்ட (துரோபதையின்) புடவைகள் என்னவாயின?

    கொஞ்சம் பரவாயில்லை?!

    ReplyDelete
  4. அனல்பறக்கும் கேள்வி பதில்கள்,சிந்தனையை தூண்டும் பொருளாதாரப் பதிவுகள் சமுக நலம் பேணும் வாதங்கள் இவைகளுக்கு இடையே "மகபாரத் கதையில்" "கண்ணா காப்பாற்று"
    என்று கை தூக்கியவுடன் பாஞ்சாலியின் மானத்தை காத்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் பராக்கிரமத்தை யாவரும் அறிவர்.
    துச்சாசனனின் துஷ்டத் தனத்துக்கு பின்னால் என்ன நடந்திருக்காலாம் எனும் "நாடோடி அவர்களின்" கற்பனப் பதிவு இந்த கோடைகால வெப்பத்தை தணிக்கும் .

    ReplyDelete
  5. //"கண்ணா காப்பாற்று"என்று கை தூக்கியவுடன் பாஞ்சாலியின் மானத்தை காத்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் பராக்கிரமத்தை....//
    என் அப்பன் கண்ணனின் கருணை அளவற்றதல்லவா. அதை நாள் முழுக்க கூறிக்கொண்டே இருக்கலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //என் அப்பன் கண்ணனின் கருணை அளவற்றதல்லவா. அதை நாள் முழுக்க கூறிக்கொண்டே இருக்கலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    தாங்கள் ஒருமுறை ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி அன்று( திருநெல்வேலி)தூத்துக்குடி மாவட்டத்தில் தரணி போற்றும் ஜீவ நதியாம் தமிரபரணி புண்ணிய நதிக் கரைகளில் இருபுறமும் உலக நன்மைக்காக அருள் பாலிக்கும் பெருமாளின் நவதிருப்பதி தேசங்களை தரிசித்தால் மேலும் தங்களது ஆற்றல் கூடும்.

    இப் பாதையில் சென்றால் திவ்ய தரிசனம் உறுதி

    1.ஸ்ரீவைகுண்டம்(சூரியன்)-start by 1100 a.m
    2.ஆழ்வார்திருநகரி(வியாழன்)-11.20 a.m
    3.திருக்கோளூர்(செவ்வாய்)-11.40
    4.தென்திருப்பேரை(சுக்கிரன்)-12.00
    5.பெருங்குளம்(சனி)-12.30
    6.இரட்டைதிருப்பதி(ராகு தலம்)-12.50
    7.இரட்டைதிருப்பதி(கேது தலம்)-1.00
    8.திருப்புளியங்குடி(பதன்)-1.20
    9.நத்தம்(நத்தம்)-1.30 p.m

    போன ஆண்டு எனது நண்பர் (ஆழ்வார்திருநகரில் வாழும் வைணவக்குடும்பம்)ஸ்ரீ கோவிந்த ராஜன் அவர்கள் மூலாமாக பெருமாளை
    இத் திருநாளில் திவ்யவமாக சேவிப்பதற்கு அருள்கிட்டிற்று.
    தங்கள் பதிவை பார்த்ததும்

    ReplyDelete
  7. நவதிருப்பதி தரிசனம் செய்துள்ளேன். அது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. தங்கள் பதிவை படித்தேன்.மகிழ்ச்சி.
    நன்றி. அடுத்த சமயம் திருநெல்வேலிக்கும போகும்போது நான்குநேரி வானமாமலை பெருமாளையும்(எண்ணெய் கிணறு விசேஷம்),திருக்குறுங்குடி பெருமாளையும் தரிசனம் செய்யுங்கள். இந்த பெருமாள் திருத்தலங்களெல்லாம் நிர்வாகத்துக்கு பேர்பெற்ற t.v.s. நிறுவனத்தாரால் மிகச் சிறப்பாக பயபக்தியுடன் பராமரிக்கப்படுவது ஒரு சிறப்பு.அதுவும் ஸ்ரீவைகுண்டஏகாதேசி அன்று கூடும் பக்தர் கூட்டத்தை( கிராமத்து மக்கள் ) பார்க்க காணக் கண் கோடி வேண்டும்.
    அவர்கள் எழுப்பும் கோவிந்தா! கோவிந்தா! எனும் கோஷத்தை கேட்கும் போது பக்தி பரவசம் ஆனந்த தாண்டவமாடும்.

    ReplyDelete
  9. மனம் விட்டு சிர்க்க வைத்த பதிவு!!

    ReplyDelete
  10. 1. ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் "தொலைபேசி பேச்சை ஒட்டுக்கேட்டு வெளியுடும் மகாமாத்யம்' பற்றிய தங்கள் கருத்து யாது?

    2.அடுத்து மாட்டப் போவது யார் என்பது அ.தி.மு.க தலைமைமயின் கண் அசைவுக்கு காத்திருப்பதாக செய்திகள் கூறுகிறதே.
    எதிர் கட்சியாய்
    இதே போல் செய்யயும் போது ( எதிர் வழக்குகள் )அவருக்கு செய்த செயல்களை எப்படி மறந்தார்?

    3.பா.ம.க வின் தலவரின் போக்கில் திடீர் மாற்றம் கூட்டணி மாற்றங்கள்
    எற்படுவதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளதே?

    4.தமிழக முதல்வரின் மன வலிக்கு அவரும் ஒரு காரணமா?

    5.பாரளுமன்ற தேர்தலுக்குப் பின் அரசியல் மாற்றம்( ஆட்சி மாற்றம்-மூன்றாம் அணி அல்லது .பா.ஜ.கா.)நடை பெறுமா?சாத்யமா?

    6.கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்புகள்
    ( இரண்டு கட்டங்கள்)இதை உறுதி செய்வது போல் உள்ளதே ( B.J.Pக்கு ஆதரவாக-பத்திரிக்கையாளர் துக்ளக் சோ அவர்களின் கணிப்பும்)

    7.தமிழகத்திலும் மீண்டும் அ.தி.மு.க,பா.ஜ.க,ம.தி.மு.க,விஜயகாந் கட்சி,சரத் கட்சி(ஒரு வேளை ரஜினி சாரின் ரசிகர்கள்)கூட்டணி அமைவது போல் இட்டுகட்டி எழுதப் படுகிரதே இது சாத்யமா?

    8.கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெரிய குறை மக்களுக்கு இல்லாவிட்டாலும்,உணவு மற்றும் சிமெண்ட்,மணல்,இரும்பு ஆகியவைகளின் உச்ச விலையுயர்வு அள்ளிக் கொடுத்த இலவசங்களை இல்லாமல் ஆக்கிவிடும் போலுள்ளதே

    9.அவரது சொந்த பந்தங்களும் மற்றும் சில அரசியல் சகாக்களும் அவரது மன அமைதியை குலைத்து அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடை பெறுமா என வினா வலம் வருகிறதே?

    10.தமிழினத் தலைவர், பாரம்பரியம் மிக்க தேசியத் தலைவர்கள் போல்
    'குணவாளானாக'
    "யார்க்கும் இனியனாய்',
    "யார்க்கும் தோழனாய்",
    "யார்க்கும் வழிகாட்டியாய்"
    "யார்க்கும் தலைவனாய்"
    மாறி கொண்டிருக்கும்
    நல்ல மன மாற்றத்தை
    நடை பெறும்
    செயல்கள் தடுத்து விடும் போல் உள்ளதே

    ReplyDelete
  11. திரவுபதி சேலை என்று சில வருடங்களுக்கு முன் வந்ததே....அது இதுதானோ....

    ReplyDelete
  12. கடைக்காரர் பெயர் டி.துச்சாசனனா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete