2/28/2007

எழுத்தாளர் நாடோடி - my favorite humor writer -1

சமீபத்தில் 1946-ல் பிறந்த நான் சிறு வயதில் ஆனந்த விகடன் மற்றும் கல்கி மட்டும் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன். குமுதம் அவ்வப்போது திருட்டுத்தனமாக படிப்பதுண்டு. அப்போது பல எழுத்தாள ஜாம்பவான்கள் உண்டு. அவர்களில் நாடோடியும் ஒருவர். இப்பதிவு அவரைப் பற்றித்தான். இது பகுதி 1. பக்தி 3 வரைக்கும் அவரைப் பற்றி எழுதும் உத்தேசம்.

கூகளில் தேடினால் அவரைப் பற்றி அதிகம் கிடைக்கவில்லை. ஆகவே ஐம்பதுகள், அறுபதுகளில் பிரபலமாக இருந்த அவரைப் பற்றி என் நினைவுகளிலிருந்துதான் எழுத வேண்டும். அவர் அக்காலத்தில் எழுதியவற்றைப் பார்த்தால் இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது அவர் செயலாக இருந்திருந்தால் சுவையான வலைப்பதிவுகள் தந்திருப்பார். தன் மனைவி சரசு, மகள் அனு என்னும் அனுராதா, தம்பி அரட்டைக் கல்லி பாலு, அடுத்த வீட்டு அண்ணாசாமி ஐயர் ஆகியவர்கள் அவரது கட்டுரைகளில் அதிகம் வலம் வருபவர்கள்.

அவரது எழுத்துகள் ஆச்சரியம் அளிப்பதற்கு காரணமே தற்காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவை இருப்பதேயாகும். அவர் தனது மனோரதம் என்னும் தேரிலேறி நினைத்த இடங்களுக்கெல்லாம் போய் வருவார். அவர் அதிகம் செல்லும் இடம் அதிசயபுரி என்னும் ஊராகும். அப்போது சிறுவனாக இருந்த நான் அது ஒரு உண்மையான இடம் என்றெண்ணியிருந்திருக்கிறேன். இப்போதுதான் புரிகிறது. அவர் நம் நாட்டைத்தான், அதுவும் தமிழ்நாட்டைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்று.

ஒரு சமயம் திடீரென எல்லோரிடமிருந்தும் அவரவர் பணம் காணாமல் போய் விடும். முதலில் எல்லோரும் திகைக்கின்றனர். என்ன செய்வது, வேலைக்கு போக வேண்டுமே?திருதிருவென விழித்து கொண்டு பஸ் ஸ்டேண்ட், மின்ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு வருவார்கள். அங்கும் நிலைமை இன்னும் மோசம். அங்கு வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் உள்ள பணம் எல்லாமே மாயமாக மறைந்திருக்கும். பிறகு அவரவர் வேலை செய்யும் கம்பெனி முதலாளிகள் மூலம் விவரம் அறிந்து எல்லா சேவைகளையும் அளித்து அதற்கான பண விவரங்களை அளித்து, மாதக் கடைசியில் அவற்றுக்கு ஈடான வேறு சேவை பெறுவார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு அட்டை கொடுக்கப்பட்டு அவர் மேற்கொண்ட விவகாரங்களின் தகவல் அதில் பொறிக்கப்பட்டு என்றெல்லாம் நாடோடி அவர்களின் கற்பனை போகும். இப்போது அதை படிக்கும்போதே உங்களுக்கு அந்த அட்டையை பற்றிய ஒரு ஐடியா வந்திருக்கும்தானே? நீங்கள் நினைப்பது சரியே. க்ரெடிட் கார்டுதான் அது. ஆனால் இது சம்பந்தப்பட்ட அக்கட்டுரை 1950-களிலேயே வந்து விட்டது.

அதே போல நாட்டில் எல்லோருக்கும் சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் (1955 விலைவாசி கணக்கில்) என்று அதிசயபுரியின் மந்திரி நிர்ணயிக்க, அது விளைவிக்கும் கூத்து பற்றி படிப்பவரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார் நாடோடி. படிப்பவர்தான் சிரித்தனர். அனுபவித்தவர்? பணம் மட்டும் இருந்தது. வியாபாரிகளும் பணத்தை பார்த்ததும் உல்லாசமாக செலவழிக்க ஆரம்பித்தனர். உற்பத்தி குறைந்தது. விலைகள் விஷம்போல ஏறின. சம்பளம் மறுபடியும் உயார்த்தப்பட்டன. Too much money chasing too little goods என்ற நிலை உண்டாயிற்று. விளைவு? Inflation எனப்படும் பணவீக்கம்.

நாராயணன் என்னும் எழுத்தாளர் ரொம்ப ஏழை. அடித்து பிடித்து வைகுந்தம் போய் அந்த சாட்சாத் நாராயணனையே கேட்கிறார், தான் ஏன் வறுமையுடன் பிறந்தோம் என. முதலில் கடவுள் நாராயணனுக்கு இவர் சொல்வது விளங்கவில்லை. பிறகு ஞான திருஷ்டியை உபயோகித்து எழுத்தாள நாராயணன் பூலோகத்திலிருந்து வந்திருப்பதாக உணர்கிறார். அது எப்போதோ அழிந்து விட்டதாக இத்தனை நாள் அவர் நினைத்து கொண்டிருந்திருக்கிறார். இருந்தாலும் அது பற்றி பிறகு நாரதரை கேட்டுக் கொள்வோம் என சுதாரித்து கொண்டு எழுத்தாளரை பார்த்து "இங்கே பார்" என விரலை அசைக்கிறார். எழுத்தாளர் நாராயணன் முன்னால் பரம தரித்திரரான வெங்கட்ராம ஐயர் தோன்றுகிறார். எழுத்தாளரிடம் வெங்கட்ராம ஐயர் அழமாட்டாக் குறையாகக் சொல்கிகிறார்.

"ஐயா, நீங்கள் எழுதிய நாவல் "ஏழை படும்பாடு" என்னும் கதையில் நாயகன் நான். என் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார். பிச்சையெடுத்து படித்து வேலைக்கு போய் என் தம்பி தங்கைகளை முன்னுக்கு கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோரும் நன்றி மறந்து என்னுடைய பணத்தை கொள்ளையடித்தனர். கடைசியில் நான் காச நோய் கண்டு இருமி இருமி உயிரை விட்டேன். எனக்கு ஏன் இத்தனை கஷ்டம் கொடுத்தீர்கள்" என சோகமாகக் கேட்கிறார். எழுத்தாள நாராயணன் அவர் மேல் எரிந்து விழுகிறார். இதென்ன எழவாப் போச்சு. உம்மேல் எனக்கு என்ன விரோதமா? ஏதோ கற்பனையில் ஒரு பாத்திரம் படைத்தேன். ஏழைக்கு உன் பெயரை வைத்து தொலைத்தேன். இல்லையென்றால் அண்ணாசாமி ஐயர் என்று கூட பெயரை வைத்திருக்க முடியும். ஆனால் அவர் வந்து கேட்பாரே, நடக்கும் காரியமாகப் பேசும் ஐயா" என்கிறார். வெங்கட்ராம ஐயர் மறைய கடவுள் நாராயணன் மறுபடியும் வருகிறார். "என்ன ஸ்வாமி, புரிந்ததா? நீங்கள் வெங்கட்ராம ஐயருக்கு சொன்னது உமக்கும் பொருந்தும். போய் வாரும் ஐயா" எனக் கூறுகிறார்.

இவ்வாறாக நாடோடி அவர்கள் வாழ்க்கையே அபத்த களஞ்சியம், இதில் பாவம் புண்ணியம் எல்லாம் அவரவர் மனநிலைக்குட்பட்டதே என்ற இருப்பியல் தத்துவத்தை சில வார்த்தைகளில் புரிய வைக்கிறார். உலகே மாயம் என்றும் கூறலாம்.

ஐம்பதுகளின் நடுவில் நாடோடி மறுபடி அதிசயபுரிக்கு மனோரதத்தில் ஏறி பயணிக்கிறார். தெருவில் பலர் நடக்கின்றனர். சிலர் கால்களில் பெரிய குண்டு கட்டப்பட்டுள்ளது. ஏன் என்று புரியாமல் விழிக்கிறார் நாடோடி. அங்கு அப்பக்கமாக வந்தவர் விளக்குகிறார். குண்டு கட்டப்பட்டிருப்பவர்கள் வேகமாக நடப்பவர்கள். மெதுவாக நடப்பவர்களுக்கு அவர்களைப் பார்த்து தாழ்வுணர்ச்சி ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்களையும் மெதுவாக நடக்கச் செய்யும் முயற்சி இது என முழங்குகிறார் வந்தவர். "ஏன் மெதுவாகப் போகிறவர்களை வேகமாகச் செல்லலாமே" என்றபோது வந்தவர் இருகோடுகள் தத்துவத்தை விளக்குகிறார். புரியாதவர்கள் சமீபத்தில் 1969-ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள் படத்தில் ஜயந்தி கூறும் விளக்கத்தை கேட்டுக் கொள்க. அதே லாஜிக்படி அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளுக்கு பக்கங்கள் கட்டுப்பாடு. எல்லா நல்ல எழுத்தாளர்களும் அதிக சன்மானத்துக்கு ஆசைப்பட்டு அங்கு போவதால் அந்த சன்மானங்களுக்கு அதிக வரி என்றெல்லாம் அரசு தூள் பண்ணுகிறது.

இப்போது ஒரு சிறு டைவர்ஷன்.

இதில் இன்னொரு அபத்தமான தமாஷ் என்னவென்றால், 1970-களில் தமிழகத்தில் நிலவிய பயங்கர மின்சக்தி தட்டுப்பாட்டைக் குறித்து மேலே கூறப்பட்ட கட்டுரை வெளியான ஆனந்த விகடனிலேயே வெளியிடப்பட்ட ஒரு தலையங்கம்தான்.

அதன் சாரம் பின்வருமாறு. மின்சக்தி கிடைக்காது பல நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன. ஆனால் சில நிறுவனங்களோ ஜெனெரேட்டிங் செட்கள் போட்டு தாங்களாகவே மின் உற்பத்தி செய்து பொருள்களை உற்பத்தி செய்து லாபம் அடிக்கின்றனர். இதனால் அவ்வாறு ஜெனெரேட்டிங் செட்கள் இல்லாதவர் மனத்துயரம் அடைகின்றனர். ஏழைகளுக்கு ஆதரவான அரசு தாய்மை உணர்வோடு செயல்பட்டு, அந்த செட்களை பறிமுதல் செய்து, ஒரு பொது இடத்தில் நிறுவி மின்சாரத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.

மறுபடியும் நாடோடி அவர்களின் இக்கட்டுரைக்கே வருவோம்.

என்ன நடக்கிறதென்றால், வேகமாகச் செல்பவர்கள் அவர்கள் நலம் விரும்பும் நண்பர்களால் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆகவே அவர்கள் வேண்டுமென்றே மெதுவாக நடக்கின்றனர்.குண்டு மாட்டப்படாமல் தப்பிக்கின்றனர். இதனால் உண்டாகும் வேறு பொருளாதார விளைவுகள் என்றெல்லாம் கட்டுரை அமர்க்களமாகப் போகிறது.

ஏன் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக நாடோடியின் இக்கட்டுரை எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

குரல்கள் said...

//1946-ல் பிறந்த நான் சிறு வயதில் ஆனந்த விகடன் மற்றும் கல்கி மட்டும் படித்து உள்வாங்கிக்//

அய்யே... அதுல 'உள்வாங்க' என்ன எழவு தான் இருக்கு?

இல்ல... இந்த 'உள்வாங்குதல்' "சொக்கிப்" போய் உள்வாங்குதல் போன்றதா? ;)


//ஐம்பதுகளின் நடுவில் நாடோடி மறுபடி அதிசயபுரிக்கு மனோரதத்தில் ஏறி பயணிக்கிறார். தெருவில் பலர் நடக்கின்றனர். சிலர் கால்களில் பெரிய குண்டு கட்டப்பட்டுள்ளது. ஏன் என்று புரியாமல் விழிக்கிறார் நாடோடி. அங்கு அப்பக்கமாக வந்தவர் விளக்குகிறார். குண்டு கட்டப்பட்டிருப்பவர்கள் வேகமாக நடப்பவர்கள். மெதுவாக நடப்பவர்களுக்கு அவர்களைப் பார்த்து தாழ்வுணர்ச்சி ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்களையும் மெதுவாக நடக்கச் செய்யும் முயற்சி இது என முழங்குகிறார்//

நாடோடிக்கு பதில் சொன்னவர் முழுதாக சொல்லவில்லை. குண்டு கட்டியவர்களெல்லாம் அது நாள் வரை குண்டு கட்டாதவர்களுக்கு சேர வேண்டிய சாப்பாட்டையெல்லாம் பிடுங்கித் தின்றவர்களாம்.. அதனால் தான் அவர்களால் மெதுவாக நடக்கும்படி ஆகிவிட்டதாம்.. இந்த கேப்மாறித்தனத்தை ( நன்றி-இ.வ) லேட்டாக கண்டுனர்ந்த குண்டு கட்டாதவர்கள், இந்த கயமையை செய்தவர்கள் காலிலெல்லாம் குண்டு கட்டிவிட்டார்களாம்..

இது ஐம்பதுகளில் நடந்தது என்று நாடோடி சொன்னது உண்மையே... இப்போது என்னாவானது தெரியுமா?

குண்டு கட்டியவர்கள் இனிமேல் தங்கள் திருட்டுத்தனம் எப்படி திருட்டுத்தனம் செய்தாலும் மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்று தெரிந்து கொண்டதால் - வலைப்பதிவு எழுத வந்து - நங்கநல்லூரில் உட்கார்ந்து கொண்டு - மகர நெடுங்குழைக்காதன் அருளை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம் இல்லாதவனை வேண்டினால் என்னதான் கிடைக்கும்!

கதை எப்டி இருக்கு மாமு :))))

Anonymous said...

வழமையாக, மொக்கை.

Anonymous said...

"குண்டு கட்டியவர்களெல்லாம அது நாள் வரை குண்டு கட்டாதவர்களுக்கு சேர வேண்டிய சாப்பாட்டையெல்லாம் பிடுங்கித் தின்றவர்களாம்."

அப்ப குண்டு கட்டாதவர்களெல்லாம் நெரிய சாப்பாடு சேத்து வேச்சிறுந்தாங்களோ.

Anonymous said...

//கதை எப்டி இருக்கு மாமு :))))

உன் கதை படு கேவலமாக இருக்கு மாமே போயி சோறு ஆக்கு

நல்ல பதிவு டோண்டு அய்யா

Anonymous said...

அட பாவி, முழுசா வளர்ந்து மூன்று இலைவிட முன்னாடி குமுதம் திருட்டுத்தனமாக பார்த்தது சரி. அந்தக் காலத்தில எட்டு முழச் சேலையில தானே நடிகைகளின் படங்களைப் போட்டுத் தொலைச்சிருப்பாங்க. அதில திருட்டுத்தனமாக பாக்க என்ன கண்றாவி
இருந்தது? சொல்லித் தொலையுங சார்! மண்டை வெடிக்குது!

புள்ளிராஜா

Anonymous said...

"என்ன நடக்கிறதென்றால், வேகமாகச் செல்பவர்கள் அவர்கள் நலம் விரும்பும் நண்பர்களால் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆகவே அவர்கள் வேண்டுமென்றே மெதுவாக நடக்கின்றனர்.குண்டு மாட்டப்படாமல் தப்பிக்கின்றனர். இதனால் உண்டாகும் வேறு பொருளாதார விளைவுகள் என்றெல்லாம் கட்டுரை அமர்க்களமாகப் போகிறது."

ஏன் பல நாடுகள் மூன்றாம் நிலையாகவே இருக்கின்றன என்று யோசித்து கோண்டு இருந்தேன். விடை கிடைத்தது, நன்றி டோண்டு ஐய்யா!

தலைவர்
வேர்ல்டு எகனாமிக் ஃபோரம்

dondu(#11168674346665545885) said...

எழுபதுகள் ஆரம்ப காலத்தில் இந்தியாவில் வரிவிகிதம் மிகவும் அதிகம். ஒரு ஆண்டில் பத்து லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அப்போது இருந்த வரிவிகிதப்படி பார்த்தால் அவருக்கு மிஞ்சுவது வெறும் 35,000 ரூபாய்கள் மட்டுமே. இதை அப்போதைய பிரதம மந்திரி பெருமையாக வேறு பீற்றிக் கொண்டார்.

இது இரு விளைவுகளை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் வரி ஏய்ப்புக்கள். கருப்புப் பணம் பெருகியது. மறு பக்கம் பலர் கஷ்டப்படுவானேன், பணம் ஈட்டி அதை அரசுக்கு அழுவானேன் என்று எண்ணி சும்மா இருந்தனர். அதனால் அரசுக்கு என்ன இழப்புகள் என்பதை ரூபாய் பைசாவில் அளவிட முயன்றால் தலையே சுற்றும்.

மனித இயறகை புரியாது சீர்திருத்தம் என்னும் பெயரில் விளையாடியது அரசு.

விளைவு, 1991-ல் நாட்டின் தங்க இருப்பையே அடகு வைக்க நேர்ந்தது. அதே மாதிரி, தனி நபர் பொருளாதாரத்தை ஒடுக்கிய சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் திவாலாகி உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன.

நாடோடி அக்கட்டுரை மூலம் கூற வந்தது அதுதான். வாழ்க்கை என்றால் அதில் போட்டியிருந்தே தீரும். அரசின் வேலை போட்டியின் உள்ளே புகுந்து வலிமையுள்ளவர்களை ஒடுக்குவது இல்லை.

இதைத்தான் ராஜாஜி அவர்களும் கூறினார். அந்த தீர்க்கதரிசி ஐம்பதுகளிலேயே நிலைமை பார்த்து கூறியது 90-களில்தான் ஜனங்களுக்கு புரிந்தது. இப்போதுதான் அரசுக்கு புத்தி வந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<---- நாடோடி அக்கட்டுரை மூலம் கூற வந்தது அதுதான். வாழ்க்கை என்றால் அதில் போட்டியிருந்தே தீரும்.---->
இப்படிச் தெளிவாச் சொன்னால்தானெ புரியும்

dondu(#11168674346665545885) said...

//இப்படி தெளிவாச் சொன்னால்தானெ புரியும்//
:))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

'தாரளமயமாக்கல் ' என்றால் என்றால் என்ன ?

' தனியார்மயமாக்கல், தாரளமயமாக்கல் , உலகமயமாக்கல்' ‍‍ இவை பற்றிய தெளிவான, சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் 'தாரளமயமாக்கல்' பற்றி புரிந்து கொள்வோம்.

சுதந்திரம் வந்த புதிதில். 1950களில், பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின் முக்கிய‌ அம்ச‌ம் 'திட்ட‌மிட‌ல்' (centralised planning ) ; அதாவ‌து நாட்டிலுள்ள‌ இய‌ற்கை ம‌ற்றும் ம‌னித‌ வ‌ள‌ங்க‌ளை எவ்வாறு உப‌யோக‌ப் ப‌டுத்த‌ வேண்டும் என்று ம‌த்திய‌ அர‌சு ம‌ட்டுமே 'திட்ட‌ க‌மிச‌மன்' மூல‌ம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார‌ கொள்கைக‌ளுக்கு நேர் எதிரான‌ சித்தாந்த‌ம். பொதுத் துறை நிறுவ‌ன‌ங்க‌ளுகே முக்கிய‌த்துவ‌ம். த‌னியார்க‌ள் ப‌ல‌ முக்கிய‌ துறைக‌ளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்ப‌த்தி) நுழைய‌ த‌டை. ஏற்க‌ன‌வே இருக்கும் துறைக‌ளில் தொழிலை விரிவுப‌டுத்த‌ , குறைக்க‌ ப‌ல‌ ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள். உற்ப‌த்தியை பெருக்க‌ த‌டைக‌ள் ப‌ல‌.

இக்க‌ட்டுப்பாடுக‌ளை (controls and licenses) அம‌ல்ப‌டுத்த‌ ஒரு மிக‌ப் ப‌ல‌மான‌ , பூத‌க‌ர‌மான‌ அர‌சு எந்திர‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ அந்த‌ எந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து. ஒரு தொழில‌திப‌ர் ஒரு புதிய‌ தொழிற்சாலையை நிறுவ‌ வேண்டுமானால் ப‌ல‌ அதிகாரிக‌ளின் த‌ய‌வும் , 'க‌ருணையும்', அர‌சிய‌ல்வாதிக‌ளின் (பெரும்பாலும் காங்கிர‌சஸ் அமைச்ச‌ர்க‌ள் ம‌ற்றும் த‌லைவ‌ர்க‌ள்) 'ஆத‌ர‌வும்' தேவையாக‌ இருந்த‌து. தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வ‌ள‌வே ப‌ர‌வாயில்லை.

உதராணமாக கோவை மதுக்கரை ப‌குதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை. சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும்
பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! ' Concentration of economic power ' என்ற ஒரு மூடத்தனமான சிந்தனை
நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான‌ தட்டுப்பாடுகள் , பதுக்கல், கள்ளமார்க்கட், லஞ்சம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல் செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 க்ச்ளில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் பொன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!

Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும், மிகப்பெரிய அளவில் 'வளரக்கூடாது'. இதற்கான அளவுகோள்கள் மாஇன் அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி, தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.

இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். பணக்கார் மீது மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ' செலவு' செய்யவதாக சொல்லப்பட்டது.
அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 85 % ஆனது. விளைவு வரி எய்ப்பு, கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான விலைவாசி உய்ர்வும், வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.

1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான‌ சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி, சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.

விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி, மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமமே அன்னிய செலாவணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.

இந்த 'தாரளமயமாக்களை' செய்யாமல் இருந்திருதால் இன்னேரம் நாடே திவாலகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னும் அதிகரித்திருக்கும்...

ஜீவி said...

//"ஐயா, நீங்கள் எழுதிய நாவல் "ஏழை படும்பாடு" என்னும் கதையில் நாயகன் நான்.//

இதைப்படித்த பொழுது ஜாவர் சீதாராமன் நடித்த "ஏழைபடும்பாடு" திரைப்படம் (அவருக்கு 'ஜாவர்'என்கிற பட்டம் கொடுத்தது இந்தப்படம் தானே) மற்றும் நாகையா எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். டேவிட் காபர் பீல்ட் கூட.
நகைச்சுவை எழுத்தாளர் நாடோடியை நன்கு நினைவு கொண்டுள்ளீர்கள். அவர் எல்லோருக்கும் முன்னோடி.

Anonymous said...

இந்த எழுத்தாளர் நாடோடியின் புத்தகங்கள் தற்போது எங்கே கிடைக்கும்.

எந்த பதிப்பகமாவது வெளியிடுகிறதா?

dondu(#11168674346665545885) said...

அல்லயன்ஸ் பப்ளிகேஷனில் கிடைக்கும் என நினைக்கிறேன். தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது