Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

12/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 7

இதற்கு முந்தையப் பதிவை இங்கே பார்க்கலாம்.

நான் போன பதிவில் கூறியதை இங்கு விளக்குகிறேன். அங்கு கூறியது: "இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது."

மேலாண்மை பற்றி எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு அடிநாதம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதாவது வேலையை பங்கிட்டு தருதல். எல்லா வேலையையும் அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்பது போல தலைவனே செய்து கொண்டிருக்க முடியாது. திருவள்ளுவரும் அது பற்றி ஒரு குறள் எழுதியுள்ளார், "இதனை இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று. (குறள் சரியாக எழுதப்படாவிட்டால் தயவுசெய்து யாராவது திருத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்).

இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். அறுபதுகளின் துவக்கம் வரை காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருந்ததென்றால், மத்தியில் பொதுக் குழு, அந்தந்த மாநிலங்களுக்கு தனிக்குழு என்றிருக்கும். தமிழக காங்கிரசுக்கு காமராஜ் அவர்களது அற்புதத் தலைமை வாய்த்திருந்தது. அவரது உச்சக்கட்ட காலத்தில் அதிருப்தியினர் கோஷ்டி என்று அவ்வளவாக இல்லை. ஏனெனில் அம்மாதிரி கோஷ்டிகளை மத்தியக் குழு எப்போதுமே ஆதரித்ததில்லை. அதுவும் நேரு அவர்களிடம் அது நடக்கவே நடக்காது.

இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது 1963-ல் காமராஜ் திட்டம் என்று வந்து பல காங்கிரஸ் மந்திரிகள் கட்சி வேலைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் காமராஜர். ஆனல் அவர் பொருத்தமட்டில் ராஜினாமா அவராகவே செய்தார், ஏனெனில் திட்டத்தையே அவர் பெயரில், அவரை முன்னிருத்தி கொண்டு வந்திருந்தனர். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தில்லிக்கு சென்றார். அவர் கர்மவீரர். எங்கிருப்பினும் தனது தனித்தன்மை இழக்காமல் காரியமாற்றக்கூடியவர். ஆனால் இழப்பு என்னவோ தமிழகத்துக்குத்தான்.

அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானவை. 1964-ல் நேரு மறைந்தார். அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது காமராஜ் அவர்கள் திரைமறைவில் திறமையாகச் செயலாற்றி லால்பஹதூர் சாஸ்திரியை பிரதமராகும் பணியில் தன் பங்காற்றினார். சாஸ்திரி அவர்களும் தன் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை பொய்க்காத வண்ணம் கடமையை செய்தார். அவர் 1966 ஜனவரியில் இறந்தது நாட்டின் துர்பாக்கியமே.

இப்போது இருவர் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவர் மொரார்ஜி தேசாய் இன்னொருவர் இந்திரா காந்தி. மொரார்ஜி அவர்கள் பதவிக்கு வந்தால் தங்கள் கட்டுப்பாட்டில் அவர் இருக்க மாட்டார் என்று எண்ணியவர்களில் காமராஜும் ஒருவர். ஆகவே அவர்கள் ஆதரவு இந்திரா காந்திக்கு என்று ஆனது. அப்போது இந்திரா அவர்கள் மிகுந்த பணிவுடன் நடந்து கொண்டார். அவருக்கு மெழுகு பொம்மை என்று பெயர் உண்டு. அவரை தங்கள் கருத்துக்கேற்ப செயல்பட வைக்கலாம் என்பதே அவரை ஆதரித்த தலைவர்களின் எண்ணம். ஆனால் நடந்ததென்னவோ தலைகீழ். இந்திரா காந்தி அவர்கள் மெதுவாக காமராஜரையும் மற்றவரையும் ஒதுக்க ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக 1967-தேர்தலில் காமராஜ் அவர்கள் தோற்றது இந்திரா காந்திக்கு சாதகமாயிற்று. காமராஜ் அவர்கள் பல வகையில் இந்திரா காந்தியால் அவமானப்படுத்தப்பட்டார். 1969-ல் காங்கிரஸை இந்திரா காந்தி தன் சுயநலனுக்காக இரண்டாக உடைத்தார். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான சஞ்சீவரெட்டியின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

1966-ல் ரூபாயின் மதிப்பை குறைத்தபோதே அதை காமராஜ் எதிர்த்தவர். அதே போல பாங்குகள் நாட்டுடைமையாக்கல், மன்னர்களின் ப்ரீவி பர்ஸ் ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் இந்திரா காந்தி அவர்கள் தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே செய்தவை என்பதிலும் காமராஜ் உறுதியாக இருந்தார்.

தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அப்படியே காமராஜ் அவர்கள் வசமே இருந்தது. 1969-ல் கட்சி உடையாது இருந்திருந்தால் 1971 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, எல்லாமே இறைவன் கையில்தானே. பல ஆண்டுகள் தமிழகத்திலிருந்து விலகி இருந்த காமராஜ் அவர்களுக்கு உண்மை நிலை அவ்வளவாகத் தெரியாது போனது துரதிர்ஷ்டமே.

1971-க்கு பிறகு காமராஜ் நிலைமை இன்னும் மோசமானது. ஆனாலும் மனம் தளராது அவர் பணியாற்றினார். ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனம் வந்ததும்தான் அவர் நிஜமாகவே மனம் நொந்து போனார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அதே ஆண்டு காந்தி ஜெயந்தியன்று அவர் மறைந்தார்.

ஆகவே என்னை பொருத்தவரை 1963-ஆம் ஆண்டை ஒரு சகாப்த்தத்தின் முடிவுக்கான ஆரம்பம் என்றுதான் பார்க்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் பார்க்கீறேன். தமிழகத்தில் 1971-க்கு பிறகு காங்கிரஸ் மிகவும் தேய்ந்து போய் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது. அது இன்றைக்கும் அப்படியே உள்ளது. இதற்கு முழுபொறுப்பு இந்திரா காந்தி அவர்களின் செயல்பாடே ஆகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/09/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6

இதற்கு முந்தைய பதிவு இதோ.

போன பதிவுகளில் சுட்டிய சோ அவர்கள் புத்தகத்தில் குமரி அனந்தன் அவர்கள் எழுதியதிலிருந்து சில தகவல்கள்.

காமராஜ் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் அளித்த MDT 2727 என்ற கார் பல ஆண்டு காலம் உபயோகத்தில் இருந்து வந்திருக்கிறது. மிகுந்த வற்புறுத்தல் பேரிலேயே இக்காரை புது காருக்காக மாற்றிக் கொண்டார். அதன் உரிம எண் கூட 2727தான், ஆனால் வேறு வரிசையில்.

(இந்த சந்தர்ப்பத்தில் சில தலைவர்களின் சில எண்களுக்கான விருப்பத்தைப் பற்றி பல சுவையான செய்திகளை நான், டோண்டு ராகவன், படித்திருக்கிறேன். உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு "ஏழு" ராசியான எண். அவர் கார் நம்பர்கள் எல்லாம் 4777 என்று கூட்டு எண் 7 ஆக இருக்கும். என்ன புது வரிசை பதிவுகள் வந்தாலும் அந்த எண் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும். அவருக்காகவே மராட்டிய மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரை வாங்கினார்கள். அதன் எண் MGR 4777).

மறுபடியும் காமராஜ். 1967-ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவருக்கு முழங்காலில் அடிபட்டது. ஆகவே இனிமேல் வர இருக்கும் தேர்தல்களில் பயன் படுத்துவதற்கு அவருக்காக பல வசதிகளுடன் கூடிய ஒரு வேன் லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு முறை கூட ஏற அவர் மறுத்து விட்டார்.

குமரி அனந்தன் அவர்களது வேதனை நிரம்பிய வரிகள்: "வேனில் ஏறித் தேர்தல் பயணம் செய்வார் என்று எண்ணினோம். ஆனால் அவர் வான் ஏறி தேவருலகு சென்று விட்டார்."

குமரி அனந்தன் அவர்கள் மேலும் கூறுகிறார்.

காமராஜ் அவர்கள் போன இடத்தில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த அமர்ந்து விட்ட பிறகும் அந்த வருவாய்த்துறை அதிகாரி, திரு. ராமதாஸ் என்பவர் நின்று கொண்டேயிருந்தார். அவரும் அமர்ந்தால்தான் தானும் சாப்பிட உட்காரப் போவதாக காமராஜ் அவர்கள் கண்டிப்பாகக் கூறிவிட, அவ்வாறே நடந்தது. இதன் பின்புலன் என்னவென்றால் அந்த ராமதாஸ் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவரை சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என தலைவர் காமராஜ் நினைத்து விட்டார்.

கும்பகோணத்தில் சக்கரவர்த்தி ஐயங்கார் பழைய தியாகி. காமராஜை சந்தித்தால் பாசத்தோடு வேர்க் கடலையை ஒரு காகிதத்தில் சுற்றிய பொட்டலமாகக் கொடுப்பார். காமராஜரும் அதை வாங்கிச் சுவைத்து மிக அன்னியோன்யமாக உரையாடுவார்.

அப்பக்கத்தில் சுற்றுப் பயணம் செய்யும் போது மாலைக்குப் பதிலாகவோ, பிற வகையிலோ தொண்டர்கள் அன்போடு அளிக்கும் பணத்தை வாங்கி சக்கரவர்த்தி ஐயங்காரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறுவார்.

மறுபடியும் டோண்டு ராகவன்.

இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/26/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 5

இதன் முந்தையப் பதிவில் குறிப்பிட்டபடி சோ அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்தே தொடர்கிறேன்.

இக்கால அரசியலை நேரில் கண்டுவரும் நாம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் விரோதம் பாராட்டுவதையும் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஆறுதல் இந்த அநாகரிகப் போக்கு தமிழகத்தில் மட்டும்தான், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அவ்வளவாக இல்லை. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனால் இப்பதிவுக்குத் தேவையானது இவ்வளவுதான்.

தமிழக அரசியலில் காமராஜரும் ராஜாஜியும் இரு துருவங்கள் என்பது தெரிந்ததே. ராஜாஜி அவர்களும் சத்தியமூர்த்தி அவர்களும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். சத்தியமூர்த்தி அவர்களைத் தன் குருவாக எண்ணியவர் காமராஜர் அவர்கள். ஆக ராஜாஜிக்கும் காமராஜருக்கும் கருத்து வேற்றுமைகள் அனேகம். ஆயினும் தனிப்பட்ட முறையில் இருவருமே ஒருவரை ஒருவர் மதித்தனர் என்பதையே இப்பதிவில் வலியுறுத்த விரும்புகிறேன்.

சோ அவர்கள் இது பற்றி குறிப்பிட்டது இதுதான்.

கடுமையான மோதல்கள், அவற்றால் ஏற்பட்ட மனகசப்புகளை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சி ராஜாஜியின் அரசியல் ஞானத்தையும் அவரது அறிவையும் மனதில் நிறுத்தி காமராஜர் அவரை வெகுவாக மதித்தார். ராஜாஜி ஒரு அறிவாளி என்பதை விட அவர் ஒரு மேதாவி என்பதே பொருந்தும். அரசியல் அறிவில் அவரை மிஞ்சக் கூடியவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். நிர்வாகத் திறமையிலும் அவ்வாறே. ஆனால், அறிவாளிகளுக்கெ உரித்தானப் பிடிவாதமும் ராஜாஜியிடம் உண்டு. அவர் ஒரு போதும் தனது கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆகவே வளைந்து கொடுத்து, எதிராளியைத் தட்டி வேலைவாங்குவதில் அவர் அவ்வளவாக ஈடுபாடு செலுத்தவில்லை. ஆனால் காமராஜரோ விட்டுப் பிடித்து காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்.

ஆகவே 1971 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் பழைய காங்கிரஸும் சேர்ந்து கூட்டமைத்ததுதான் அத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமா என்பது சோ அவர்களின் ஐயம். ஆகவே இந்த நிலையிலாவது ராஜாஜியுடனான கூட்டை முறிச்சிக்கலாமே என்ற மெல்லிய எண்ணம். இதை அவர் மெதுவாக காமராஜ் அவர்களிடமே கேட்டு வைக்க, சீறி எழுந்தார் அவர். சோ அவர்களது வார்த்தைகளில்:

"காமராஜின் பெரிய மனது திறந்தது. காமராஜ் என்ற அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டு நின்ற காமராஜ் என்ற மனிதர் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பெருந்தன்மை வார்த்தைகளாக உருவெடுத்து என் முன்னே நர்த்தனமாடியது. 'தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்லெ. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?"

"இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?"

"...காமராஜின் பரந்த உள்ளம் அலைகடல் போல் அங்கு பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல் விமரிசகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித் தலை குனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து, பாவத்தைக் கழுவிக் கொண்டேன்."

1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமசரித்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:

"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

மேலும் இப்புத்தகத்திலிருந்து எடுத்து வரும் பகுதிகளில் பேசுவேன்.

சோ அவர்களது புத்தக விவரம்:
காமராஜை சந்தித்தேன்
அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
நான்காம் பதிப்பு மார்ச் 2002.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4

இதன் முந்தையப் பதிவு இங்கே.

காமராஜ் அவர்களைப் பற்றி மேலே பதிவுகள் போட ஏதுவாக நூலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நான் கைதவறுதலாக என் வீட்டில் எங்கோ வைத்திருந்த “காமராஜை சந்தித்தேன்” என்னும் புத்தகம் – சோ அவர்கள் எழுதியது – கைக்குக் கிட்டியது. இது போதுமே அடுத்த சில பதிவுகள் போட, ஆகவே இப்போதே இந்த வேலையை தொடர்கிறேன்.

சோ அவர்கள் காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். அவரைப் போலவே நேர்மை, நாணயம் மிக்கவர். நேர்மையான ஒருவரைக் குறித்து இன்னொரு நேர்மையானவர் எழுதும் போதுதான் உண்மையான செய்திகள் வரும் என்பது பதிப்பகத்தாரின் கருத்து. எனது கருத்தும் அதுவே.

காமராஜர் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிப் பழகியவர் சோ அவர்கள். ஆனால் அவர்களது முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

அறுபதுகளின் ஆரம்பம். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் அப்போது. சோ குழுவின் நாடகம் “பால மந்திர்”க்காக சென்னை ஆர்.ஆர். சபாவில் நடந்து கொண்டிருந்தது. நாடகத்தின் பெயர் இப்புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும் அது “சம்பவாமி யுகே யுகே” என்னும் விஷயத்தை நான் வேறொரு இடத்தில் படித்துள்ளேன். கிருஷ்ண பரமாத்மாவே அவதரித்து இந்தியாவில் ஊழலை ஒழிக்க முயலுவதாகவும், அதில் அவர் தோல்வியடைவதாகவும் எழுதப்பட்ட கிண்டல் நாடகம் அது. அந்த நாடகத்துக்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு எப்படியோ சமாளித்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாடகத்துக்கு காமராஜ் அவர்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருக்கிறார். யார் அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் என்ன போட்டுக் கொடுத்தார்களோ, அது பற்றி மேடையிலேயே சோவுக்கும் அவருக்குமிடையில் வாத-பிரதிவாதம் எழுந்து, காமராஜ் அவர்கள் மேடையை விட்டு நீங்கினார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி வருத்தப்பட்டு சோ அவர்கள் பலமுறை பிறகு வெவ்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளார். (என்னால் சோ அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது, அவர் இடத்தில் நானும் அவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் – அடேய் அடங்குடா டோண்டு ராகவா) ஆனாலும் சோ அவர்கள் உண்மையாகவே வருத்தப்பட்டிருக்கிறார். காமராஜ் அவர்களோ இந்த நிகழ்ச்சியைப் பற்றி பிறகு சோ அவர்களிடம் பிரஸ்தாபிக்கவேயில்லை. அதில்தான் அவரது பெருந்தன்மை வெளிப்படுகிறது. நடந்ததை மறைக்காமல் எழுதியதில் சோ அவர்களும் பெருந்தன்மையில் குறைவில்லாதவர் என்பதைக் காட்டுகிறது. (அடேய் டோண்டு!!! சாரி, பாஸ், நான் விடு ஜூட்).

கோணலாக முடிந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சோ அவர்கள் காமராஜரை 1968-ல் சந்தித்திருக்கிறார். பிறகு 1971-ல், பொதுத் தேர்தல்களுக்குப் பிறகுதான் அடுத்த சந்திப்பு. அதன் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள்தான் இப்புத்தகத்தில் வருகின்றன. இதில் சோ அவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். தான் கேட்டறிந்த ஒரு விஷயம் தவிர புத்தகத்தில் வருவன எல்லாம் அவரே நேரில் கண்டறிந்தவை என்று கூறியுள்ளார்.

கேட்டறிந்த விஷயம் சோ அவர்கள் தனது சித்தப்பாவிடமிருந்து கேட்டது. ரிசர்வ் பேங்க் எதிரே உள்ள சப்வேயை பற்றி. அது பற்றி சிறிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று. அதில் சோவினுடைய சித்தப்பாவும் ரயில்வேயின் சார்பில் கலந்து கொண்டார். சப்வே பற்றிய டெக்னிகல் விவரங்களைக் கூற வேண்டிய பொறுப்பு அவருக்கு. ஆங்கிலத்தில் கூறினால் காமராஜ் அவர்களுக்கு புரியுமோ புரியாதோ என்ற எண்ணத்தில் தட்டுத் தடுமாறித் தமிழில் அவற்றைக் கூற முயன்றிருக்கிறார். காமராஜ் அவர்கள் அவரை ஆங்கிலத்திலேயே கூறுமாறு பணித்து, எங்காவது சந்தேகம் ஏற்பட்டால் தான் கேள்வி கேட்டுக்கொள்வதாகக் கூற மீட்டிங் தொடர்ந்திருக்கிறது. அதே மாதிரி கூர்மையாக கவனித்து தேவையான விளக்கங்களையும் காமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அப்போது மத்திய அரசு சார்பில் வந்திருந்த ரயில்வே ராஜாங்க மந்திரி திட்டத்துக்கு அதிகச் செலவாகும் ஆகவே அதைக் கைவிட வேண்டும் என்று பொருள்படக் கூற, காமராஜ் அவர்கள் ஆவேசத்துடன் “சப்வே வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை எப்படி நிறைவேற்றுவது” என்று மட்டும் பார்த்தால் போதும் என்றும், இது பற்றி பிரதம மந்திரியிடம் தாமே பேசப் போவதாகக் கூறி மீட்டிங்கை சரியான திசையில் போக வைத்திருக்கிறார்.

இதில் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.
1. தனக்கு ஆங்கிலம் புரியாது என்ற நினைப்பில் செயல்பட்ட அதிகாரியைக் கடுமையாகப் பேசாது அவரை ஆங்கிலத்திலேயே பேச ஊக்குவித்தப் பெருந்தன்மை,
2. தனக்குப் புரியாத இடத்தில் தயங்காது கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட போலித்தனம் கலக்காத எளிமை,
3. முட்டுக்கட்டை போட முயன்ற மத்திய மந்திரியை சமாளித்து, மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் துடிப்பு,
4. பிரதம மந்திரியிடம் பேசுவேன் என்று கூறிய தன்னம்பிக்கை, அதாவது பிரதம மந்திரியை சம்மதிக்கச் செய்ய முடியும் என்ற நிச்சயமும் இதில் அடங்கும்,
5. சப்வேயை கட்டி முடித்த சாதனை.

காமராஜருடன் சோ நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது 1971 தேர்தலுக்கு முந்தைய மற்றும் அடுத்தக் காலக் கட்டம்தான். அது அடுத்தப் பதிவுகளில். அவற்றில் வரும் எல்லாமே சோ அவர்கள் கண்டறிந்தவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த பதிவு போடுவதற்காக இணையத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்கு இந்த அருமையான இடுகை கிடைத்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் நான் காமராஜ் அவர்களைப் பற்றிப் போடும் பதிவுக்காக கண்ணதாசனின் இந்த கவிதையானப் பாடலைப் பற்றிய இடுகையை உபயோகப்படுத்த அனுமதி கோரி பெற்றேன். நிலா அவர்களுக்கு என் நன்றி.

முதலில் இந்த இடுகையில் கண்ட பொருளை பதிவுக்கு மேலோட்டமாகத்தான் உபயோகிக்க எண்ணினேன். பிறகு அருமையான இந்த இடுகையில் எதை எடுக்க, எதை விட என்று மயங்கியதால், இப்பதிவையே அதற்கு அர்ப்பணிக்கிறேன். மேலும் இத்தொடரின் தலைப்பின் வரியும் நான் முதல் பகுதியில் கூறியபடி கண்ணதாசன் பாடல்தானே. இப்போது இடுகைக்குப் போவோமா? இப்பாடல் ஒரு வரிசையில் வருவதால் சில முன்குறிப்புகள் மற்றும் பின் குறிப்புகள் உள்ளன. அவற்றைத் தவிர்த்து இடுகையைத் தருகிறேன். காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன். தலைப்பைக் கூட மாற்றியிருக்கிறேன்.

"நான் தெரிவு செய்த பாடல் டி.எம்.எஸ்., சுசீலா குரலில் ஒலித்த "அந்த சிவகாமி மகனிடமும் சேதி சொல்லடி" எனும் பாடலாகும். இதற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது இந்த பாடல் பிறந்ததன் பின்னணியாகும்.காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் பிரிந்த காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர், அவரை மனதில் நிறுத்தி எழுதிய பாடலாம். அதாவது காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமியாகும். அத்தோடு அழகான காதல் வரிகள் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

காதலனின் பிரிவால் காதலி வருந்துகிறாள். அவனை எண்ணி மிகவும் மனம் நொந்து போகிறாள். அங்கே பிறக்கிறது அந்த அழகிய தமிழ்ப்பாடல்:

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?

தோழியின் மூலம் தன் காதலனுக்குச் சேதி அனுப்புகிறாளாம். தன் தலைவனிடம் போய்த் தன்னை மணமுடிக்க நாள் குறிக்கும்படிக் கூறுகிறாள். அது மட்டுமா?

மயிலின் தோகை எவ்வளவு அழகானது? அதன் வர்ணங்கள் உயிர் பெறுவது அந்தத் தோகை விரிக்கப்படும் போதே. ஆனால் அந்த மயில் தனது முழு அழகையும் தன் தலைவனான அந்த முருகப் பெருமான், வேலன், அவனுக்கு முன்னால் தானே காட்சிக்கு வைக்கும், அவனில்லா விட்டால் எப்படி அங்கே தோகையின் அழகு பெருமை பெறும்? அதே போலத் தன் தலைவனின் முன்னால் மட்டுமே மலரும் தன் அழகிற்கு, மயிலின் தோகையை ஒப்பிடுகிறாள் அந்தத் தலைவி.

தொடருகிறாள் காதல் வேதனையில் துவளும் தலைவி,

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணெனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

அவளுடைய விழிகள் பூ விழிகள் தானே, அவை மலர்வது எதற்காக? அவளது தலைவன் அவைகளைக் கோர்த்து மாலையாய் அணிந்து கொள்வதற்கே, அது மட்டுமா? கண் விழிகள் மலர்கள் என்றால் அவைகளைத் தாங்கி நிற்கும் கன்னங்கள் வேறென்ன சோலைதானே!

தன்மீது உள்ள காதலினால் உருகும் காதலியின் நிலையறிந்து காதலன் மனதில் உருவாகும் பாடல் வரிகள்

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலப் பரப்புக்களிலே உயர்ந்ததாம் மலையின் உச்சியில் பிறந்த சந்தனம், அதனடியில் வாழும் மனிதனின் மார்புக்குத் தானே சொந்தமாகிறது. அத்தகைய உயரிய இதயத்தைக் கொண்ட அவன் காதலியின் இதயம் தனக்கே சொந்தம் என்று பெருமையில் பூரிக்கிறான் தலைவன்.

தலைவனின் பதில் கேட்டுப் பூரித்த மங்கையவள் மனதில் ஒரு சிறு சந்தேகம், தனது இதயத்தை மலையின் உச்சிக்கும், தன்னை அதன் அடிவாரத்தில் இருக்கும் மனிதனுக்கும் ஒப்பிட்ட அந்தத் தலைவனின் நிலை உயர்ந்து வசதி பெருகி விட்டால், ஒருவேளை தன்னை மறந்து விடுவானோ?தாம் நெருங்கி விட்டால் தமக்குள் இருக்கும் அந்தஸ்து பேதமே தம்மைப் பிரித்து விடுமோ? துடிக்கும் இதயத்துடன் வினவுகிறாள்!

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ?

திடுக்கிட்டு விட்டான் அவன்! என்ன சந்தேகம் வந்து விட்டதோ தலைவிக்கு, தனது காதலின் மீது? அறுதியாகக் கூறுகிறான் தலைவன்

காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது! மாறாது இறைவன் ஆணை

கண்னுக்குத் தெரியாமல் காவல் இருக்கும் அந்த அனைவருக்கும் பொதுவான இறைவனைத் துணைக்கு அழைக்கிறான்.

மகிழ்ச்சியுடனே அவளும் இணைகிறாள்

என்றும் மாறாது! மாறாது! இறைவன் ஆணை

திரும்பவும் அவளுக்குத் தீர்மானமாகச் சொல்கிறான்.

இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேர நாள் பார்ப்பதேனடி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகையில்லாமல் வேலன் ஏதடி?

மிகவும் துணிச்சலாக மனதோடு சேர்ந்து விட்ட நீ என்னுடன் சேர்வதற்கு நாள் பார்க்க வேண்டுமா என்ன? என்னுடன் சேர்ந்து நின்றால் பிறகென்ன பிரிவு எனக் காதலன் எனும் அதிகாரத் தோரணையில் காதலிக்கு ஆறுதலளிக்கிறான்."

மேலும் சில தகவல்கள் இப்பாடலைப் பற்றி.

இப்பாடல் வந்த படம் "பட்டினத்தில் பூதம்", சமீபத்தில் அறுபதுகளில் வந்தது (1966?). ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜாவர் சீத்தாராமன் (ஜீபூம்பா) ஆகியோர் நடித்தது. நேயர் விருப்ப நிகழ்ச்சிகள் விடாமல் கேட்கப்பட்டப் பாடல். அறுபதுகள் சினிமாப்பாடல்களின் பொற்காலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 3

இந்த வரிசையில் முந்தையப் பதிவு இதோ.

நமச்சிவாயம் அவர்களது புத்தகத்தில் நான் குமுதம் தொடராகப் படித்ததிலிருந்து சில நிகழ்ச்சிகள் விட்டுப் போனதாகத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, உள்ளூர் தாதா ஒருவனால் துரத்தப்பட்ட ஒருவன் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள, அந்த இடம் காமராஜ் அவர்களுக்கும் தெரியும். ஆயினும் தன்னை மிரட்டிக் கேட்ட தாதாவின் ஆட்களிடம் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று தைரியமாகச் சாதித்து ஒளிந்து கொண்டவரின் உயிரைக் காப்பாற்றினார். ஒரு வேளை நமச்சிவாயம் வேறு ஏதாவது புத்தகம் காமராஜரைப் பற்றி எழுதியதிலிருந்து நான் அதைப் படித்தேனா அல்லது, இப்புத்தகத்துக்கு ஏதேனும் தொடர்ச்சி உண்டா என்பது புரியவில்லை. ஏனெனில் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகான நிகழ்ச்சிகள் காணப்படவில்லை.

அதாவது காமராஜ் அவர்களது 18-ஆம் வயதுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் இப்புத்தகத்தில் இல்லை. இருந்தாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு பல ஆதாரங்கள் இப்புத்தகத்திலேயே காணப்படுகின்றன. முக்கியமாக மதிய உணவுத் திட்டத்திற்கான ஆதார நிகழ்ச்சியை நான் போன பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இப்புத்தகம் அக்காலக் கட்டத்தில் தமிழகம் இருந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அக்கால விலைவாசிகளைப் பார்த்து சுபிட்சமாக வாழ்ந்தார்கள் என்று எடை போடலாகாது. ரூபாய்க்கு 8 படி (10.2 கிலோ) அரிசி விற்றது என்று கூறுவார்கள். ஆனால் ஒரு ஆழாக்கு (8 ஆழாக்கு ஒரு படி, அதாவது 1400 கிராம்) அரிசி வாங்கக் கூட பணம் கையில் இருக்காது. சம்பளம் கூட 15-20 ரூபாய் அளவில்தான் இருக்கும். இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் காமராஜ் அவர்கள் சார்ந்த நாடார் குலத்தினர் தங்களை சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்ட கதையை விளக்கத்தான். பணவசதி இருந்தவர்கள் ஒவ்வொரு பிடி அரிசியாக தானம் செய்து சொந்தப் பள்ளிக்கூடம் ஏற்படுத்திக் கொண்டனர். அதுதான் பிடியரிசிப் பள்ளி என்று அறியப்பட்ட, 1885-ல் துவக்கப்பட்ட க்ஷத்திரிய வித்தியாசாலையாகும்.

இந்தப் பள்ளியைத் துவங்க விருது நகர் வியாபாரிகள் தங்களது வியாபார மகமைப் பணத்தைக் கொடுத்துப் பெரிதும் உதவினர். மகமைப் பணத்தோடு ஊர்கூடித் தேர் இழுக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டுப் பெண்மணிகளும் பள்ளி நிலை பெற வேளைதோறும் வித்திட்டு உதவினர்.

பள்ளிக்கூடச் செலவுக்காக ஒவ்வொரு நாளும் வேளையும் சமையல் செய்ய உலையில் அரிசி போடும்போது முதலில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு பானையில் போட்டு சேமித்தனர். இதை எல்லா வீட்டிலும் செய்தனர். சிறு துளி பெருவெள்ளமாகி மூட்டை மூட்டையாக அரிசி சேர்ந்தது. மலையென ஓங்கி உயர்ந்த அரிசி மூட்டைகள் விற்கப்பட்டன. பள்ளிச் செலவுக்கு பணம் கிடைத்தது. அதாவது தன் கையே தனக்குதவி என்று முனைப்புடன் செயல்பட்டால் என்னென்ன செய்யலாம் என்பதைக் குறிப்பிடவே இங்கே இதை கூறுகிறேன்.

பிடி அரிசியின் மகிமை பெரிது. மிகமிகப் பெரிது. இந்தப் பள்ளியில்தான் காமராஜ் படித்தார். ஆறாம் வகுப்பு வரை அப்பள்ளியில் அவர் பெற்ற அனுபவங்கள் அவரைப் புடம் போட்டன.

அப்போதே அவர் நடப்பு அரசியல்களை பற்றி தன் நண்பர்களுடன் விவாதிப்பார். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. அது பற்றி விவாதங்கள் நடந்து வந்த தருணத்தில் ஒரு சடு குடு போட்டி நடந்தது. ஒரு முரட்டுப் பையன் தன்னை வெள்ளைக்காரன் என்று பீற்றிக் கொண்டு போட்டிக்கு வந்ததற்காகவே அவர் அவனது எதிர்க் கட்சியில் சேர்ந்து அவனைப் புரட்டி எடுத்து விட்டார். நல்ல உழைப்பாளியாதலால் உரம் பாய்ந்த உடல்.

ஒருமுறை ஜல்லிக்கட்டு காளையின் கொம்புகளால் தாக்கப்பட்டு உயிரை இழக்க இருந்த ஒரு எட்டு வயது சிறுவனை தனது சமயோசித புத்தியால் காப்பாறினார் காமராஜ் அவர்கள். சிறுவனை அப்படியே கீழே தள்ளி, தான் அவன் மேல் படுத்துக் கொண்டு அவனைக் காளையின் பார்வையிலிருந்து மறைத்தார். அந்த சில நொடிகளுக்கு தனது உயிரையே பணயம் வைத்தார்.

அதே போல எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெருவியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவனை அறுவறுப்பின்றி தொட்டுத் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தவர் காமராஜ் அவர்கள். அதுவும் அக்காலக் கட்டத்தில் பெருவியாதி என்றால் எல்லோருமே அலறுவர். நமது காமராஜரிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை.

நமச்சிவாயம் அவர்கள் காமராஜ் அவர்களது அறிமுகத்தைப் பெற்றது ஒரு சுவையான கதை. 1957-தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசி முடித்து அடுத்தக் கூட்டத்துக்கு செல்ல இருந்தவர் முன்னால் இவர் தயங்கி நின்றிருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட காமராஜரிடம் தான் அடுத்த மீட்டிங்கிற்கும் கவரேஜுக்காக வரவேண்டியிருக்கும் என்று மென்று விழுங்கியபடி கூற, காமராஜர் அவரை எல்லா மீட்டிங்கிற்கும் தனது காரிலேயே அழைத்துச் செல்ல என்று ஆரம்பித்து நமச்சிவாயத்தை கடைசியில் காமராஜ் அவர்களின் பாஸ்வெல் ஆக்கி விட்டது. வாழ்க்கையில் இம்மாதிரி பல பெரிய விஷயங்களுக்கு அடிப்படையாக சாதாரண நிகழ்ச்சியே அமைந்து விடுவதை இங்கே கூறத்தான் வேண்டும்.

அடுத்தப் பதிவில் நான் சமீபத்தில் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் காமராஜ் அவர்களைப் பற்றி கேட்டதையும் படித்ததையும் பற்றிக் கூறுவேன். சோ அவர்கள் கூட காமராஜருடன் நெருங்கிப் பழகியவர். அவர் எழுதிய புத்தகம் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இப்போது தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. அது கிடைத்தவுடன் அதிலிருந்து வேறு எழுத வேண்டும். பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/07/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 2

இப்பதிவின் வரிசையின் முதல் பதிவு

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். காமராஜ் அவர்கள் படிக்காதவர் என்று அவரை எதிர்ப்பவர்களும், படிக்காத மேதை என்று அவரை ஆதரிப்பவர்களும் கூறுவார்கள். விஷயம் அவ்வளவு எளிதல்ல. காமராஜ் அவர்கள் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்தவர். நல்ல மதிப்பெண்களும் பெற்றவர். அவர் சமூகத்தில் அக்காலக் கட்டத்தில் அரசு வேலைக்கெல்லாம் ரொம்ப அடிபோடாது சொந்த வியாபாரம் செய்வதுதான் வழமையான நடைமுறை. அதன் அடிப்படையில் அவர் தனது தந்தையின் கடையை கவனிப்பதற்காக வீட்டுப் பெரியவர்கள் கூறியதன் பேரில் படிப்பை அத்துடன் முடித்துக் கொண்டவர். ஆகவே அவருக்கு ஆங்கிலம் நன்கு படிக்க வரும். பிறகு வாழ்க்கை என்னும் பள்ளியில் படித்து ஏட்டுப் படிப்பு படித்தவர்களை விட அறிவில் சிறந்து விளங்கியவர். அதிகம் படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையே தனது நிர்வாகத் திறனால் திணற அடித்தவர்.

காமராஜரை பற்றிய இப்பதிவின் வரிசைக்கு துணையாக நான் கொண்ட புத்தகம் திரு.நமச்சிவாயம் அவர்கள் எழுதியது. அவரை காமராஜரின் பாஸ்வெல் என்று கூறுவார்கள். (பாஸ்வெல் பிரபல ஆங்கிலமொழி எழுத்தாளரான சாமுவேல் ஜான்ஸனின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்). காமராஜ் அவர்கள் தனது செயல்பாடுகளின் உச்சக் கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது அப்புத்தகம்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக பல நிகழ்ச்சிகள் காமராஜ் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தன. அவற்றில் என் மனதைக் கவர்ந்தவற்றிலிருந்து ஒன்றை இதோ தருவேன்.

காமராஜ் அவர்கள் இரண்டாவது வகுப்பில் படித்தபோது அவருடன் படித்தவர் ரோசல்பட்டி பெருமாள். மதிய உணவுக்காக வீடுக்கு செல்லமுடியாத தூரத்தில் வீடு. ஏதேனும் சாப்பிடக் கொண்டுவருவதுதான். அதுவும் முடியாதுபோனால் தண்ணீர் குடித்து பசியாற்றிக் கொள்ள வேண்டியதுதான். காமராஜ் அவர்களின் உயிர்த்தோழனுக்கு இந்த நிலை. காமராஜ் இது பற்றி அறிந்ததும் தனது வீட்டாரிடம் தான் இனிமேல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வரமுடியாது என்றும் ஆகவே சாப்பாடு கட்டிக் கொடுக்குமாறு கேட்டு அதன்படியே பெற்றுவந்து தன் தோழனுடன் சேர்ந்து மதிய உணவு உண்ணுவது வழக்கமாயிற்று.

ஒரு நாள் பேரன் சாப்பிடும் அழகைப் பார்க்க பாட்டி வர உண்மை அறிகிறார். காமராஜ் பெருமாளின் கஷ்டத்தை எடுத்துக் கூறுகிறார்.

இப்போது புத்தகத்திலிருந்தே கோட் செய்கிறேன்.

"மகிழ்ச்சி! பெருமை! பெருமிதம்! ஒன்றும் பிடிபடவில்லை பாட்டிக்கு!

பேரனை நெருக்கமாகத் தழுவியபடியே, கீழே பழைய இடத்திலேயே உட்கார வைக்கிறாள்! தானும் எதிரில் சப்பணமிட்டு அமர்கிறார்!

சரி, சரி, அதுக்கென்ன? உங்களுக்கு - இரண்டு பேருக்குமே நானே ஊட்டி விடுகிறேனே!"

பிறகு காமராஜ் அம்மாவிடம் இது பற்றி எதுவும் கூறவேண்டாமென கேட்டுக் கொள்ள, ஓண்ணும் பயப்படவேண்டாம், அம்மாவிடம் மட்டும் அல்ல எல்லோரிடமும் கூறலாம் என்று கூறி பாட்டி சிறுவர்கள் இருவருக்கும் ஆளுக்கு காலணா கொடுத்து விட்டுப் புறப்படுகிறார்.

பாட்டியின் உருக்கப் பரவசப் பாசப் பெருமையைக் கண்டு, கேட்டு, உணர்ந்த இரண்டு சிறுவர்களுக்கும் மெய்சிலிர்க்கிறது.

வாஞ்சையோடு, மீண்டும் ஒருமுறை சிறுவர்களைப் பார்த்து முறுவலித்தபடி வீட்டுக்கு விரைகிறார் பாட்டி. பாட்டியின் பெருமித நடை! உணர்த்துவது என்ன? பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்பும் செல்லப் பேரன் காமராஜ்!

இந்த இளம் வயதிலேயே என்ன ஈவு இரக்கம்? அவரது மதிய உணவு திட்டத்துக்கு இதுவும் ஒரு முன்னோடிதானே.

இவ்வரிசைப் பதிவுகள் மேலும் தொடரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/05/2006

பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் - 1

சமீபத்தில் 1978-ல் சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "என்னைப் போல் ஒருவன்" படம் வெளியானது. மூலக்கதை "Scapegoat" by Daphne du Maurier. அதே கருவில் அறுபதுகளிலேயே ஏ.வி.எம். ராஜன் இரட்டை வேடங்களில் நடித்த "தரிசனம்" படம் வந்து விட்டது. இப்பதிவு அப்படத்தைப் பற்றியதல்ல.

சிவாஜியின் இப்படத்தில் ஒரு துள்ளும் நடையில் அருமையான பாட்டு ஒன்று. அது இவ்வாறு ஆரம்பிக்கிறது:

"தங்கங்களே, நாளைத் தலைவர்களே,
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்"

அப்பாடலில் என்னைக் கவர்ந்த அடுத்த வரிகள் இதோ:
"நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள்
பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்"

(இப்பாடல் வரிகள் சரியாக அமைய வேண்டும் என்பதற்காகவே பல்லவி புகழ் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு போன் செய்து கேட்டதற்கு மிக அன்புடன் மேலே குறிப்பிட்ட என்னைக் கவர்ந்த அவ்விருவரிகளை ராகத்துடன் பாடிக் காட்டினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பிறகு முதலில் விட்டுப்போன இரண்டு வரிகளையும் அன்புடன் எடுத்துக் காட்டினார். அவற்றையும் இணைத்து விட்டேன்).

காந்தியையும் நேருவையும் பெயர் சொல்லி சுட்டிய கவிஞர் (கண்ணதாசன்?) இரண்டாம் வரியில் பெயரிடாமலேயே விட்டாலும் தமிழருக்கு உடனே புரியுமாறுதான் எழுதியிருக்கிறார். அந்தப் பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் காமராஜரை பற்றி ஒரு பதிவுகள் வரிசை போட வேண்டும் என்று பலகாலம் எண்ணி வந்தேன்.

மாமனிதர் ராஜாஜி அவர்களைப் பற்றி 5 பதிவுகள் போடுவதற்கு கல்கி அலுவலகத்தில் இரண்டு முழுதினங்கள் கழிக்க வேண்டியாதாயிற்று. ஆனால் காமராஜ் அவர்களைப் பற்றி எழுத நான் தேடியது ஒரே ஒரு புத்தகமே. அதுதான் பத்திரிகையாளர் மு.நமசிவாயம் அவர்கள் எழுதிய "காமராஜ் வரலாறு". இது குமுதத்தில் தொடராக வந்தபோது நான் படித்திருக்கிறேன்.

அந்த புத்தகத்தில் காமராஜ் அவர்களின் இளையபருவ நிகழ்ச்சிகள் விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன. எங்கு தேடியும் கிடைக்காத இப்புத்தகம் நேற்று திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைத்தது. "நற்றுணை ஆவது நமச்சிவாயவே" என்று முணுமுணுத்துக் கொண்டே புத்தகத்தை எடுத்து வந்து விட்டேன். இப்போது சாவகாசமாக அடுத்து வரும் தினங்களில் பதிவு போட உத்தேசம்.

1952-லிருந்து 1969- பிப்ரவரி வரை நான்கு சிறந்த நபர்கள் முதலமைச்சர்களாக இருந்தது தமிழகத்தின் பாக்கியமே. இவர்களில் ராஜாஜி அவர்களை பற்றி எழுதியாகி விட்டது. இப்போது காமராஜ் அவர்களைப் பற்றி.

1954-ல் காமராஜ் அவர்கள் முதல்வராக வந்தப்போது அவர் அதிகம் படிக்காதவர் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. ஆனால் வாழ்க்கை என்னும் பள்ளியில் கற்று புடமிடப்பட்டவர் என்பது காலப் போக்கில்தான் தெரிய வந்தது. கூர்ந்த, அதே சமயம் தூரப் பார்வையும் ஒருங்கே அமைந்தவர் காமராஜ் அவர்கள். ஒவ்வொரு மந்திரிசபையும் ஜம்போ சைஸில் இருந்த காலத்தில் எட்டே எட்டு பேரை வைத்துக் கொண்டு அவர் சித்து விளையாட்டு காட்டினார். அவர் இருந்தவரை தமிழக காங்கிரஸ் என்றால் அது காமராஜைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் என்பதுதான் நிஜம்.

இவ்வரிசையின் அடுத்த பதிவுகளிலிருந்து திரு நமச்சிவாயத்தின் நூல் பெரிதும் உபயோகப்படுத்தப்படும். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக. அவரது புத்தகம் தவிர சமீபத்தில் 1960களில் நடந்த நிகழ்ச்சிகளும் எனது ஞாபகத்திலிருந்து சேர்க்கப்படும். விட்டுப் போகும் விஷயங்களை வாசகர்கள் நிறைவு செய்வார்கள் என நம்புகிறேன் - முக்கியமாக டண்டணக்கா அவர்கள்!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது