இதற்கு முந்தையப் பதிவை இங்கே பார்க்கலாம்.
நான் போன பதிவில் கூறியதை இங்கு விளக்குகிறேன். அங்கு கூறியது: "இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது."
மேலாண்மை பற்றி எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு அடிநாதம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதாவது வேலையை பங்கிட்டு தருதல். எல்லா வேலையையும் அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்பது போல தலைவனே செய்து கொண்டிருக்க முடியாது. திருவள்ளுவரும் அது பற்றி ஒரு குறள் எழுதியுள்ளார், "இதனை இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று. (குறள் சரியாக எழுதப்படாவிட்டால் தயவுசெய்து யாராவது திருத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்).
இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். அறுபதுகளின் துவக்கம் வரை காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருந்ததென்றால், மத்தியில் பொதுக் குழு, அந்தந்த மாநிலங்களுக்கு தனிக்குழு என்றிருக்கும். தமிழக காங்கிரசுக்கு காமராஜ் அவர்களது அற்புதத் தலைமை வாய்த்திருந்தது. அவரது உச்சக்கட்ட காலத்தில் அதிருப்தியினர் கோஷ்டி என்று அவ்வளவாக இல்லை. ஏனெனில் அம்மாதிரி கோஷ்டிகளை மத்தியக் குழு எப்போதுமே ஆதரித்ததில்லை. அதுவும் நேரு அவர்களிடம் அது நடக்கவே நடக்காது.
இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது 1963-ல் காமராஜ் திட்டம் என்று வந்து பல காங்கிரஸ் மந்திரிகள் கட்சி வேலைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் காமராஜர். ஆனல் அவர் பொருத்தமட்டில் ராஜினாமா அவராகவே செய்தார், ஏனெனில் திட்டத்தையே அவர் பெயரில், அவரை முன்னிருத்தி கொண்டு வந்திருந்தனர். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தில்லிக்கு சென்றார். அவர் கர்மவீரர். எங்கிருப்பினும் தனது தனித்தன்மை இழக்காமல் காரியமாற்றக்கூடியவர். ஆனால் இழப்பு என்னவோ தமிழகத்துக்குத்தான்.
அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானவை. 1964-ல் நேரு மறைந்தார். அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது காமராஜ் அவர்கள் திரைமறைவில் திறமையாகச் செயலாற்றி லால்பஹதூர் சாஸ்திரியை பிரதமராகும் பணியில் தன் பங்காற்றினார். சாஸ்திரி அவர்களும் தன் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை பொய்க்காத வண்ணம் கடமையை செய்தார். அவர் 1966 ஜனவரியில் இறந்தது நாட்டின் துர்பாக்கியமே.
இப்போது இருவர் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவர் மொரார்ஜி தேசாய் இன்னொருவர் இந்திரா காந்தி. மொரார்ஜி அவர்கள் பதவிக்கு வந்தால் தங்கள் கட்டுப்பாட்டில் அவர் இருக்க மாட்டார் என்று எண்ணியவர்களில் காமராஜும் ஒருவர். ஆகவே அவர்கள் ஆதரவு இந்திரா காந்திக்கு என்று ஆனது. அப்போது இந்திரா அவர்கள் மிகுந்த பணிவுடன் நடந்து கொண்டார். அவருக்கு மெழுகு பொம்மை என்று பெயர் உண்டு. அவரை தங்கள் கருத்துக்கேற்ப செயல்பட வைக்கலாம் என்பதே அவரை ஆதரித்த தலைவர்களின் எண்ணம். ஆனால் நடந்ததென்னவோ தலைகீழ். இந்திரா காந்தி அவர்கள் மெதுவாக காமராஜரையும் மற்றவரையும் ஒதுக்க ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக 1967-தேர்தலில் காமராஜ் அவர்கள் தோற்றது இந்திரா காந்திக்கு சாதகமாயிற்று. காமராஜ் அவர்கள் பல வகையில் இந்திரா காந்தியால் அவமானப்படுத்தப்பட்டார். 1969-ல் காங்கிரஸை இந்திரா காந்தி தன் சுயநலனுக்காக இரண்டாக உடைத்தார். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான சஞ்சீவரெட்டியின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.
1966-ல் ரூபாயின் மதிப்பை குறைத்தபோதே அதை காமராஜ் எதிர்த்தவர். அதே போல பாங்குகள் நாட்டுடைமையாக்கல், மன்னர்களின் ப்ரீவி பர்ஸ் ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் இந்திரா காந்தி அவர்கள் தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே செய்தவை என்பதிலும் காமராஜ் உறுதியாக இருந்தார்.
தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அப்படியே காமராஜ் அவர்கள் வசமே இருந்தது. 1969-ல் கட்சி உடையாது இருந்திருந்தால் 1971 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, எல்லாமே இறைவன் கையில்தானே. பல ஆண்டுகள் தமிழகத்திலிருந்து விலகி இருந்த காமராஜ் அவர்களுக்கு உண்மை நிலை அவ்வளவாகத் தெரியாது போனது துரதிர்ஷ்டமே.
1971-க்கு பிறகு காமராஜ் நிலைமை இன்னும் மோசமானது. ஆனாலும் மனம் தளராது அவர் பணியாற்றினார். ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனம் வந்ததும்தான் அவர் நிஜமாகவே மனம் நொந்து போனார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அதே ஆண்டு காந்தி ஜெயந்தியன்று அவர் மறைந்தார்.
ஆகவே என்னை பொருத்தவரை 1963-ஆம் ஆண்டை ஒரு சகாப்த்தத்தின் முடிவுக்கான ஆரம்பம் என்றுதான் பார்க்கிறேன்.
இன்னொரு விஷயத்தையும் பார்க்கீறேன். தமிழகத்தில் 1971-க்கு பிறகு காங்கிரஸ் மிகவும் தேய்ந்து போய் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது. அது இன்றைக்கும் அப்படியே உள்ளது. இதற்கு முழுபொறுப்பு இந்திரா காந்தி அவர்களின் செயல்பாடே ஆகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ் விக்கி தூரன் விருது விழா இன்று…
-
தமிழ்விக்கி ஒரு வெற்றிப்பயணம் தமிழ்விக்கி தூரன் விருது- முதல் அறிவிப்பு
தமிழ் விக்கி தூரன் விருதுவிழா சென்ற ஆண்டு தமிழ்விக்கி-தூரன் விருது விழா
-2025 தமிழ்...
5 hours ago
