10/24/2012

பெங்களூர் விஜயம்

வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.10.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.

27 மாலை மற்றும் 28 காலை மற்றும் மாலை என் அண்ணன் மகள் திருமண விழாவில் இருப்பேன். மற்ற நேரங்களில் HAL II Stage-ல் உள்ள என் மைத்துனன் ராமானுஜம் வீட்டில்தான் இருப்பேன். வெளியில் அலையும் உத்தேசம் ஏதும் இல்லை.

பெங்களூர் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் நான் பெங்களூரில் இருக்கும்போது தொலை பேசலாம், முடிந்தால் நேரில் சந்தித்தும் பேசலாம்.

என் செல்பேசி எண்: 09884012948
ராமானுஜத்தின் லாண்ட்லைன் எண்கள்: 25285043, 25287122

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்மயி விவகாரம்

இது பற்றி பலரும் பதிவு போட்டுள்ள நிலையில் நான் என்ன கூறப்போகிறேன்? எல்லாமே ஏற்கனவே பார்த்தது போன்ற ஃபீலிங்கையே உருவாக்கியுள்ளன. இதை déjà vu என்று கூறுவார்கள்.

போலி டோண்டு என்னை பீடித்தபோது நான் அவன் யார் என்பதை வெளிப்படையாகக் கூறாது தவிர்த்ததை பலர் குறை கூறினர். இன்னும் சிலர் நேராக சைபர் கிரைமுக்கு போக வேண்டியதுதானே என்றும் கூறினர். ஆனால் அதற்கான சமயம் இன்னும் வரவில்லை என நான் கூறியதை கேலி செய்தனர். 

விஷயம் என்னவென்றால் சாதாரண் நபர் போலீசுக்கு போனால் அதுவும் சைபர் போலீசுக்கு போனால் ஒன்றும் நடபதில்லை என்பதே என் அனுபவம். முதலில் கம்ப்ளைண்ட் எடுக்கவே அலைகழித்தனர். சிடி போலீஸ் சிபிசிஐடியை கை காட்டியது. அங்குள்ள டிஎஸ்பியோ தான் என்ன செய்ய முடியும் என சலிப்பைக் காட்டினார். ஆக உற்சாகமான அனுபவமாக இலை.

எனது யுக்தி வேறுமாதிரி இருந்தது. போலி டோண்டு எதிர்பார்த்தது போல நான் முடங்காமல் போனதே அவனை எரிச்சலூட்டி மேலும் தாக்குதல்களை நிகழ்த்த வைத்தது. அதில் பலர் அடிபட்டார்கள். அவற்றில் ஒருவருக்கு தமிழக அரசு மந்திரி ஒருவரின் பி.ஏ.வை தெரிந்திருந்தது. அவரை வைத்து மூவ் செய்து கடைசியில் போலியை வேருடன் அறுத்தார்கள். 

ஆனால் சின்மயிக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்தான் செலிப்ரிடி ஆயிற்றே. அவராகவே மூவ் செய்து கைதுகளை நடத்தி வைக்க முடிந்தது. இப்போ கையா முய்யா என அக்யூஸ்டுகளின் தோழர்கள் குதிக்கிறார்கள். 

சின்மயி விவகாரத்திலும் போலி டோண்டு விவகாரத்திலும் காமனாக என்ன இருந்தது என்பதை பார்த்தால் அதுதான் பார்ப்பன வெறுப்பு. சின்மயி பாப்பாத்தி, டோண்டு பாப்பான். போதாதா தாக்குதல்கள் நிகழ்த்த? இதை நான் மிகைபடுத்தவென்று கூறவில்லை. எனது பல பதிவுகளில் விவாதங்கள் வருமோது எனக்கு போலி டோண்டுதான் சரி என வன்மத்துடன் கூறியவர்களும் உண்டு. 

அதிலொருவர் எழுதினார், “போலி டோண்டு இருந்த காலத்தில் அனைவருமே அவனை எதிர்த்து கொண்டு தான் இருந்தார்கள், அந்த நேரத்தில் அப்பிராணி பட்டம் வாங்கி பலரது இரக்கத்தை சம்பாரித்து ப்ளாக்கில் மொக்கை போட்டு கொண்டிருந்தார் டோண்டு!” (தான் யார் பக்கம் என்பதை இங்கு தெளிவாகவே காட்டி விட்டார்)..

இப்போது கூட போலி டோண்டுவுக்காக பிரலாபிப்பவர்களது மோட்டிவேஷன்களில் முக்கியமானது பார்ப்பன வெறுப்பே.

என்ன செய்வது, I will have to call a spade a spade.

அன்புடன்,
டோண்டு ராகவன் 



10/20/2012

மொழிபெயர்ப்பாளர்கள் ஒத்துழைப்பதிலையாம், திருவாய் மலர்கிறார் சாரு

சாரு எழுதியதிலிருந்து சில வரிகள்:
என்னுடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் புலம்பல் கட்டுரைகளைப் படித்து நீங்கள் சலிப்படைந்திருக்கலாம்.  அப்படி சலிப்படைந்திருந்தால் இந்த வார்த்தைக்கு மேல் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை நான் மிகுந்த மன உளைச்சலில் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு மன உளைச்சலை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை.  எப்படியென்றால், மகாநதி என்ற சொல்லுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய Mekong நதி லாவோஸையும் தாய்லாந்தையும் பிரித்துக் கொண்டு ஓடுகிறது; ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது மெக்கோங்.  நான் தாய்லாந்துக் கரையில் நண்பரோடு அமர்ந்து கறுப்புத் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்;  அற்புதமான பேரமைதி கொண்டிருந்த காலை நேரம்.  பட்சிகளின் சப்தம் கூட எப்போதோதான் கேட்டுக் கொண்டிருந்தது.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகு கொண்ட அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருக்கும் என் மொழிபெயர்ப்பாளர் நண்பரோடு கடும் விவாதம் செய்து கொண்டிருந்தேன்.  2013-ஆம் ஆண்டில் ஏஷியன் மேன் புக்கர் விருதுக்கு என் புத்தகம் ஒன்று அனுப்பப்படாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கத்திக் கொண்டிருந்தேன்.  24 மணி நேரம் கொண்ட உங்கள் ஒரு நாளில் எனக்காக ஒரு மணி நேரம் தினமும் செலவு செய்ய முடியாதா என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். இண்டர்நேஷனல் காலில் இருபது நிமிடம் பேசினேன்.  நண்பர் அலுப்புடன் “நேரில் வாருங்கள்; பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

ஆமாம் சாரு என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறார்? அதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை கேட்க வேண்டும்? மொழிபெயர்ப்பாளருக்கு என்ன தொகை தருவார்? முழுக்க முழுக்க ஓசியில்தான் எதிர்பார்க்கிறார் என்பது எனது துணிபு. இது பற்றி அவரிடம் நேரிடையாகவே கேட்டதற்கு அவர் மழுப்பலாகத்தன் பதிலளித்தார்.

நானும் பார்த்து விட்டேன். இப்படித்தான் எழுத்தாளர் சமுத்திரம் அவர்கள் என்னை அவரது அடுக்குமல்லி நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுக, நான் எனது ரேட்டைக் கூறினேன். தான் வெறுமனே 5000 ரூபாய்தான் தர முடியும் என அவர் தெளிவகவே கூறினார். அதற்கு 4 பங்குக்கு மேல் எனது விலை இருக்கும். ஆகவே அதை நான் ரிஜெக்ட் செய்தேன்.

இவராவது பரவாயில்லை, 5000 ரூபாய் தருவதாகக் கூறினார். ஆனால் சாரு? அவர்தான் ஓசிகளுக்கு அலைபவர் ஆயிற்றே. அப்புறம் என்ன மயித்துக்கு தார்மீகக் கோபம் எல்லாம் பட வேண்டும்? இதைத்தான் அதிகாரப் இச்சை என்பார்கள்.

சாருவின் மொழி பெயர்ப்பாளர்களுக்கு எனது அனுதாபங்கள். அடிமாட்டு விலைக்கு க்றவை மாட்டை எதிர்பார்க்கும் இவர்களுக்கு இடமே தரலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன் . 

10/15/2012

பெண்ணாசை அடங்கியது

ஒரு ஆணுக்கு மூன்று ஆசைகள் உண்டு அவை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. இப்பதிவு இடையில் உள்ள பெண்ணாசை பற்றியது.

முதலில் நான் இட்ட “சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்” என்னும் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.

அப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.

ஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.

இன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்?

ஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.

விடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில "அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூற்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து "என்னடா புத்தகம், காண்பி" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.

நான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.

இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.

மேலே குறிப்பிட்ட போர்னோகிராஃபி ரசனை கூட பெண்ணாசையால் உருவானதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொழுது போகவில்லையென்றால் பலான சைட்டுகள் பார்க்கவெல்லாம் வசதி வந்துள்ளது. எல்லாவற்றையும் செய்து வைத்தேன் என்பதை ஒளிவு மறைவின்றியே கூறுவேன்.

இப்போது இதையெல்லாம் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், மேலே சொன்னவை இப்போது நிகழ்காலத்தில் கடந்த சில மாதங்களாய் இல்லவேயில்லை. நானும் முதலில் இதை உணரவில்லை. இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பலான சைட்டில் கதை ஒன்றை படித்தபோது வாந்திதான் எடுக்க வந்தது.

பிறகுதான் என்னையே இன்னும் தீவிரமாக ஆராய்ந்தேன். காரில் செல்லும்போது தெருவில் செல்லும் கவர்ச்சியான பெண்களை பார்த்து உணர்ச்சி ஒன்றும் வரவில்லை. ஒரு பெண் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் மார்பகங்கள் விம்மி எழுந்த வன்ணம் இருந்தன. ஐயோ பாவம் அவளுக்கு என்லர்ஜ்ட் இதயம் போலிருக்கிறதே என்ற பரிதாபம்தான் வந்தது.

சந்தேகப்பட்டு கூகளில் தேடியதில் இப்பக்கம் கிடைத்தது. ஆக நான் அவதானித்தது மருத்துவ உண்மைதான்.

இதில் எனது மன்நிலை என்ன? ஒரு நிம்மதிதான் ஏற்பட்டது. அடேடே கேன்சரில் இந்த நல்ல பக்க விளைவு உண்டா? இப்பெண்ணாசையால் விரயமாகும் நேரம் பற்றி இனி கவலையில்லை. அவ்வாசை போனது எனக்கு நிம்மதியாகவே இருக்கிறது.இணையத்தில் பலான சைட்டுகளை இனி தேடிப் போகவும் வேண்டாம், வைரஸ் அபாயத்துக்கு உட்படவும் வேண்டாம்.

இளம் வயதில் உள்ளவர்களுக்கு தாம்பத்திய பிரச்சினைகள் வரும்தான், ஆனால் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. ஆகவே எனக்கு அக்கவலைகள் இல்லை.

பார்ப்போம் மேலே என்ன நடக்கிறது என்.

அதற்காகவெல்லாம் நான் முன்னால் எழுதிய பலான பதிவுகளை எடுக்க வேண்டுமா என்ன? அவ்வாறு செய்பவன் டோண்டு ராகவன் இல்லை.

அவன் என்ன நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறமின்றி இருப்பவனா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்






”காஞ்சியும் காமாட்சியும்” - பதிவர் பால ஹனுமானுடைய அற்புதமான இடுகை

காஞ்சிப் பெரியவாள் நிகழ்த்திய அற்புதம் பற்றி இடுகை ஒன்றை பதிவர் பால ஹனுமான் வெளியிட்டுள்ளார். அதை இங்கு மீண்டும் இடுகிறேன், அவரது அனுமதியை ஆண்டிசிபேட் செய்து. 

இப்போது ஓவர் டு பால்ஹனுமான்
தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது். பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்!

அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

மீண்டும் டோண்டு ராகவன். வரும் தலைமுறைகளில் இம்மாதிரி ஒரு மனிதன் நிஜ்மாகவே ரத்தமும் சதையுமாக இப்பூவுலகில் வளைய வந்திருப்பாரா என சந்தேகப்படுவார்கள் என ஐன்ஸ்டைன் மகத்ம காந்தியை சொன்னது காஞ்சிப் பெரியவாளுக்கும் நிச்சயம் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் சேர்க்கை:
பாலஹனுமானுடைய அப்பதிவில் பின்னூட்டம் இட்டு அனுமதி கேட்டேன். ஆனால் அப்பின்னூட்டதை போட வேர்ட்ப்ரெஸ் அழும்பு செய்கிறது. லாகின் செய்து வா என்கிறது.நானும் என்னென்னவோ எல்லாம் செய்தும் ஒன்றும் காரியத்துக்காகவில்லை.  ஆகவே பாலஹனுமான் மன்னிக்க வேண்டுகிறேன்.

10/12/2012

மனதை கொள்ளை கொள்ளும் 7 C

சில நாட்கள் முன்வரை நான் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணியை ஆவலுடன் எதிர்நோக்கி வந்தவன். அந்த எதிர்பார்ப்பு இப்போது இரவு 8 மணிக்கு சென்று விட்டது. என்ன செய்வது, சீரியல் 7 C-ன் நேரத்தை மாற்றி விட்டார்களே.

இம்மாதிரியான நேர்மறை என்ணங்களுடன் கூடிய சீரியலை நான் அரிதாகவே பார்க்கிறேன். ஒரு நல்லாசிரியர் தன் மாணவர்களை எவ்வாறு கரையேற்றுகிறார் என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

கவனக் குறைவு பிரச்சினைக்ளுடன் கூடிய குழந்தைகளை இந்த எபிசோடில் டீல் செய்திருக்கிறார்கள். அக்குறையுடன் இருக்கும் குழந்தைக்கு த்னது கவன விருத்தியை பார்த்து முகத்தில் வரும் பெருமிதம், பிரமிப்பு ஆகியவற்றை அந்த மாணவராக நடித்தவர் அழகாகக் காட்டியுள்ளார்.

அற்புதம் என்னும் சொல்லைத் தவிர கூற வேறு வார்த்தைகளே இல்லை


7C Part 2 by khajal

எவ்வளவு கச்சிதமாக விஷயத்தைக் கையாண்டுள்ளார்கள்!! இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஒவ்வொரு சீனும் ஒரு காவியம். முக்கியமாக ஆசிரியர் ஸ்டாலின் மேல் அப்பெண் சிவகாமி வைத்திருக்கும் காதல், அதை வெளிப்படுத்தும் முறை ஆகியவை கவிதைகள் என்றால் மிகையாகாது.

சோவின் எங்கே பிராமணன் சீரியலைப் பார்க்கவே ஜெயா டிவிக்கு சென்றது போல இந்தச் சீரியலை பார்க்க மட்டுமே விஜய் டீவிக்கு செல்கிறேன் என்றால் மிகையாகாது.

7C சீரியலை விஜய் டீவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி முதல் 8.30 வரை காணலாம்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/09/2012

புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்

கேன்சருடன் வாழ்தல்
நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நிமிஷம்” என என் பின்னால் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு 20 வயது இளைஞன் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தான்.

என்ன விஷயம் எனக் கேட்க, அவன் தயக்கத்துடன் கேட்டான், “சில மாசங்கள் முன்னாடி உங்களை பார்த்தபோது உங்கள் தலைமுடியெல்லாம் கொட்டி விட்டது. இப்போது என்னவென்றால் மறுபடியும் வளர்கிறது. என்ன ஆயில் போட்டீர்க்ள்”? எனக் கேட்டான். ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்து விட்டு சொன்னேன், “இம்மாதிரி முடி மீண்டும் வளரும் நிலை யாருக்குமே வேண்டாமப்பனே” எனக்கூறி விளக்கியதும் அவன் தலை குனிந்த வண்ணம் சென்றான்.

அவனிடம் கூறாதது இம்முறையில் முடி வளர எனது செலவு ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் என்பதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுகளாக சலூனுக்கு செல்லாததில் கிட்டத்தட்ட 600 ரூபாய் மிச்சம் என்பது தனி.  

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த பேண்ட் சட்டைகள் இப்போது பொருந்துவதும் தமாஷாக உள்ளது.

கேன்சரின் பின்விளைவுகள்
ஆறு கீமோதெரப்பி அமர்வுகளில் தலைமுடி கொட்டி, புருவங்களும் அவுட். மண்டையோட்டுத் தோற்றம். கதிர்விச்சு சிகிச்சைகள் 33 அமர்வுகளினால் காலில் புண்.

வசூல்ராஜாவில் கமல் கூறுவதுபோல பசியின்மையின் கொடுமையுடன், உணவு என்றாலே வாந்தி வ்ரும் உணர்வு வந்தது இன்னொரு கொடுமை. இதயம் சற்றே பெரிதாகியதில் மூச்சிரைப்பு, சற்று நடந்தாலே.

இவ்வள்வு கொடுமைகள் நடுவிலும் நல்லது என்னவென்றால், எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வந்ததுதான். ஒரு ஜெர்மன்காரருக்கு துபாஷியாகச் சென்றேன். என்னைப் பார்த்ததுமே ஜெர்மன்காரர் என்ன உடம்புக்கு எனக் கேட்க எனது வாடிக்கையாளரிடம் கூடக் கூறாது அவரிடம் கேன்சர் பற்றிக் கூற அவர் அப்படியே என்னை அணைத்தவாறு, சென்றார். வேகமாக நடக்கும் அவர் எனது ஸ்பீடில் நடந்தார்.

எங்கொப்புராணை கூறுகிறேன், மொழிபெயர்ப்பு வேலைகளை எனக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்த எனது உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே அருள். வேலை செய்யும்போது கேன்சரின் எண்ணமே வருவதில்லை.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கெட்டப் பழக்கங்கள் ஏதும் இல்லாமலிருந்தால் அது வரும் சாத்தியக்கூறுகள் குறைவு மட்டுமே. மற்றப்படி அப்படியும் வரலாம் எனக்கு வந்தது போல.

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு வினையாகவே முடிந்தது. கெட்டதிலும் நல்லது நடந்தது மகரநெடுங்குழைகாத்னின் பேரருளே.

இமயமாக எனது மதிப்பில் உயர்ந்த என் வீட்டம்மா
சத்தியமாகச் சொல்கிறேன், நிலைமை நேர்மாறாக இருந்திருந்தால் நான் அத்தனை தைரியத்துடன் இருந்திருக்க மாட்டேன். ஒரு தாய் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதுபோல அவர் என்னைப் பார்த்துக் கொள்வதால்தான் இப்பதிவையெல்லாம் போட முடிகிறது. பூர்வ ஜன்ம புண்ணியம்தான்.

மனச்சமாதானங்கள்
சிகிச்சைகள் நடக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் கழித்துத்தான் எனக்கு வந்தது கேன்சரா எனக் கேட்கும் மனவுறுதியே எனக்கு வந்தது. அதுவரை எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணம்தான் வந்தது. அண்ணாசாலையில் உள்ள ராய் மெமொரியல் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். பச்சிளங்குழந்தைக்குமா கேன்சர்?

பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்


 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது