Showing posts with label யாழ்தேவி நட்சத்திரம். Show all posts
Showing posts with label யாழ்தேவி நட்சத்திரம். Show all posts

3/08/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.03.2010

யாழ்தேவி நட்சத்திர வாரம் பங்குனி முதல் வாரம்
இப்போது ஒரு குழப்பமுமில்லாது பங்குனி முதல் வாரம் என ஈழக்கணக்குப்படி எழுதி விட்டேன். அதே போல எந்த ஆங்கில நாட்காட்டி தேதியையும் என்னால் ஈழநாட்காட்டிக்கு மாற்றவியலும். ஆனால் அதெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் எனது இந்தப் பதிவுக்கு பின்னால்தான் வந்தது. ஒரு பிறப்பு சான்றிதழை ஈழத்தமிழ்லிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தபோது தமிழ் பெயரில் மாதங்களை குறிப்பிட்டதால் எனக்கு சரியான ஆங்கில தேதி மாற்றத்துக்காக ஈழ சகோதரகளை நாட வேண்டியிருந்தது. ஆகவே அப்பதிவை இட்டேன். சும்மா சொல்லக்க்கூடாது, உடனேயே உதவியும் வழங்கினார்கள் பல ஈழப் பதிவர்கள். அவர்கட்கு மீண்டும் இங்கு எனது நன்றி.

தாய்மொழி தரும் உற்சாகம்
எனது இப்பதிவில் குறிப்பிட்டது போல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முடிந்ததில் தமிழ்வலைப்பூவை பாவிப்பது ஒரு முக்கிய பங்கு வகித்தது/வகிக்கிறது என்றால் மிகையாகாது. தாய்மொழியில் எழுதுவதால் வாக்கிய கட்டமைப்பு தானாகவே வருகிறது. எண்ணங்களை மட்டும் கோர்வையாக்கிக் கொண்டால் போதும். இப்போது ஜெர்மனிலிருந்து மற்றும் பிரெஞ்சிலிருந்தும் கூட தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது அம்மாதிரியான வேலைகள் பெரும்பாலும் சுவிஸ், கனடா, அமெரிக்கா நாட்டு அரசு துறைகளிலிருந்தே வருகின்றன. அவை முக்கியமாக அந்தந்த நாடுகளுக்கு அகதிகளாக போய் சேர்ந்து பிறகு அன்னாட்டு குடிமக்களாக மாறும் ஈழத் தமிழருக்காகவே. அதனால் ஓரிரு வேலைகளை அனுப்பியவர்கள் ஈழத்தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டனர். அப்போது, நான் அவர்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறினேன். அதாவது, ஈழத்தமிழில் இருந்தால் என்னால் அதை உள்வாங்க முடியும். ஆங்கிலத்துக்கோ, பிரெஞ்சுக்கோ அல்லது ஜெர்மனுக்கோ மொழிபெயர்க்க இயலும். ஆனால் அதற்காக நான் ஈழத்தமிழில் எழுதுவது என்பது என்னால் முடியாத காரியம் என்றே குறிப்பிட்டு விடுவேன். என்னுடையது தமிழ்நாட்டு தமிழ்தான் என தெளிவுபடுத்திவிடுவேன். எனது இப்பதிவில் நான் குறிப்பிட்ட ஈழவாலிபர் தெனாலி படத்தில் மிகவும் சிலாகிக்கப்பட்ட ஈழத்தமிழில் பல பிழைகள் இருந்ததாக கூறினார். அம்மாதிரி நானும் முயற்சி செய்து மொழிபெயர்ப்பில் குறை வருதல் கூடவே கூடாது என்பதாலேயே நானும் அம்மாதிரியான வேலைகளை தவிர்த்து விடுவேன்.

இதே போல சிலசமயம் பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்க கனேடிய ஃபிரெஞ்சை பயன்படுத்த வேண்டும் என்ற தருணத்தில் இதே நிலைப்பாட்டை எடுத்தேன். எது நம்மால் முடியும், எது முடியாது என்பதில் தெளிவாக இருப்பது வேறு யாருக்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ, மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகவும் அவசியமே.

நித்தியானந்தர் விவகாரம்
இப்போது மெதுவாக பேச ஆரம்பித்திருக்கிறார் நித்யானந்தர். அவர் அவ்வாறு செய்து மக்களை கன்வின்ஸ் செய்கிறார் என வைத்து கொண்டால், அதற்கான கிரெடிட் முழுக்க முழுக்க அவரை எதிர்த்து செயல்பட்ட எல்லோருக்கும் போய் சேரும். அந்த அளவுக்கு அவர்கள் மிகைப்பட செயல்பட்டனர். சன் டிவி குழுமத்தினர் அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகளை போட்டனர். நக்கீரன் குழுமமோ இன்னும் அதிக போர்னோகிராஃபியை உள்ளடக்கிய சிடிக்களை பார்க்க நாக்கூசாமல் பணம் கேட்டது. ஒரு தருணத்தில் இவர்கள் எல்லோருமே ரொம்பத்தான் அலட்டுகிறார்கள் என்னும் எண்ணம் தோன்றிவிட்டது. மேலும் சன் டிவி குழுமத்துக்கும் நித்யானந்தர் ஆஸ்ரமத்துக்கும் இடையில் உள்ள ரியல் எஸ்டேட் பிரச்சினைதான் அக்குழுமம் இவ்வளவு அலட்டலுக்கு காரணம் என்பதும் புரிய ஆரம்பித்து விட்டது. அப்படியெல்லாம் இல்லை என சன் டிவி நிர்வாகம் விட்ட ஸ்டேட்மெண்ட் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்னும் ரேஞ்சில் பார்க்கப்படுகிறது. அதுவும் அழகிரி விவகாரத்தில் அது அடித்த பல்டிகளுக்கு பிறகு அதன் நம்பகத்தன்மை அரோகரா ஆகி விட்டது.

நித்யானந்தருக்கு இங்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. மற்றவருக்கு செய்யும் உபதேசத்தை தானே பின்பற்றாவிட்டால் இப்படித்தான் ஏற்படும் எனப்தைத்தான் நான் எனது நித்யானந்தரும் பெரியாரும் இடுகையில் ஏற்கனவேயே எடுத்து காட்டியிருக்கிறேனே.

யாழ்தேவிக்கு என் நன்றி
முதலில் என்னை யாழ்தேவி நட்சத்திரபதிவராக இருக்க சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. உடனே சுதாரித்து கொண்டு அதை ஏற்றேன். தமிழ்நாட்டு பதிவர்களிடமிருந்து முதல் நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் கௌரவம் அளித்த செயல். அதற்காக யாழ்தேவிக்கு என் நன்றி. ஈழபிரச்சினையில் என் கருத்து ஈழத்தவர் பலருக்கு ஒப்புதல் இல்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும் என்னை தேர்ந்தெடுத்தது அவர்கள் பெருந்தன்மை. அதற்கு தலை வணங்குகிறேன். இன்று தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எனக்கு கொடுத்த அன்பான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/06/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 44 & 45)

எபிசோட் - 44 (03.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக நாதன் வசுமதியிட்ம் அவள் தனது கம்பெனி எம்.டி. போஸ்டுக்கு ஒருவரை சிபாரிசு செய்தது பற்றி கேட்கிறார். அவளும் தனது சித்தியின் பிள்ளை பிச்சுமணிக்காக சிபாரிசு செய்ததாகக் கூறுகிறாள். அதை தான் ஏற்பதற்கில்லை என்றும் உமாவின் கணவன் ரமேஷுக்குத்தான் அந்த வேலை எனவும் கூறிவிடுகிறார். தான் என்ன சொல்லியும் எடுபடாத நிலையில் வசுமதி உமாவின் அம்மாவுக்கு ஃபோன் செய்து அவளது மாப்பிள்ளைக்கு தன்னுடைய சிபாரிசில்தான் நாதன் கம்பெனியில் வேலை கிடைத்தது எனக்கூறி தனது கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்கிறாள். மனைவியின் சாதுர்யத்தை கண்டு நாதன் வியக்கிறார்.

நீலகண்டனும் பர்வதமும் நாதன் வீட்டுக்கு வந்து ஸ்வீட் தருகின்றனர். அவர்கள் பையன் ராம்ஜிக்கு வேலை உயர்வு கிடைத்ததால் என காரணம் வேறு சொல்கின்றனர். நீலகண்டனுக்கு தன் மகனை குறித்து பெருமை பெற விஷயங்கள் இருக்கும் அதே தருணத்தில் தன்னால் அசோக்கை குறித்து பெருமையடித்து கொள்ள முடியவில்லையே என நாதன் வருந்துகிறார். நீலகண்டன் அவரை தேற்ற முயன்று தோல்வியடைகிறார்.

அப்போது வேம்பு சாஸ்திரிகளின் சம்பந்தி சிகாமணி முதலியாரின் தந்தை நாதனைப் பார்க்க வருகிறார். அவரிடம் அவர்தான் அசோக்கின் தந்தையா எனக்கேட்க, நாதனோ அசோக் தன்னுடைய பிள்ளை என அவரை திருத்துகிறார். வந்தவரோ விடாப்பிடியாக இந்தத் தருணத்தில் நாதன் அசோக்குடைய தந்தை என்ற அறிமுகம்தான் அதிக மகத்துவம் வாய்ந்தது எனக்கூறுகிறார். பிறகு அசோக் தன்னுடன் பேசி தனது மரணபயத்தை அடியோடு போக்கியதாக கூறுகிறார். அசோக் அந்தண்டை சென்ற பிறகே அவர் நசிகேதசின் கதையை படித்ததாகவும், எல்லோரையும் தேடி எமன் வர, இந்தப்பிள்ளை மட்டும் எமனைத் தேடி சென்றது குறித்த கடோபநிஷத் கதை பற்றியும் பேசுகிறார். அப்படிப்பட்ட சத்புத்திரனை பெற்ற நாதன் வசுமதி தம்பதியினர் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும் என கூறி, அவர்களுக்காக தான் செய்த அர்ச்சனையின் பிரசாதத்தையும் நாதனிடம் கொடுத்து செல்கிறார். நமக்கு அருகாமையில் இருப்பதன் பெருமை நமக்குத் தெரிவதில்லை என பூடகமாக கூறுகிறார் நீலகண்டன். இருப்பினும் நாதனுக்கும் வசுமதிக்கும் மனம் சமாதானமடையவில்லை.

சாரியாரும் அசோக்கும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அசோக் பிட்சை கிடைக்காது பசி மயக்கத்தில் விழுந்த விஷயம் பற்றி பேசுகிறார் அவர். அவனுக்கு எங்கிருந்தோ வந்த சன்னியாசி பிட்சை அளித்து சென்றதை வேதபாடசாலையின் பிரின்சிபால் தன்னிடம் சிலர் அசோக் ஒரு தெய்வப்பிறவி என்றும் மற்றும் சிலர் வெறும் தற்செயல் என்றும் குறிப்பிட்டதை குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் துறந்து தியாகம் செய்து, கடவுளிடமே விட்ட அவனுக்கு கீதையில் கண்ணபிரான் சொன்னதுபோல அனுக்கிரகம் கிடைத்தது எனவும் அவர் கூறுகிறார்.

எல்லாத்தையும் தியாகம் செய்யறதுன்னா சும்மா இருக்கணும்னு அர்த்தமா என சோவின் நண்பர் கேட்க, அப்படியில்லை என சோ விளக்குகிறார். அதாவது, காரியம் செய் பலனை எதிர்ப்பாராதே. அது தானாகவே வந்தடையும். ஆக, கிருஷ்ணர் சொன்னது செயலின்றி இருப்பதல்ல என்பதையும் விளக்குகிறார்.

தான் சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் தங்குவதால் அவருக்கு சங்கடங்களே அதிகம் ஏற்படுவதாகவும், ஆகவே தான் வேதபாடசாலையிலேயே தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்திருப்பதாகவும், அவர்களும் சம்மதித்து விட்டதாகவும் கூறுகிறான். சாரியார் அவன் தன் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் எனக்கூற, அசோக் அது வேண்டாம் என கூறிவிடுகிறான். அவனுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் அவன் தன்னை வந்து பார்க்கலாம் என்று அவர் கடைசியாக சொல்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 45 (04.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிங்காரம் திடீரென எதேச்சையாக தன் மகனை வண்டி இழுப்பவனாக பார்த்து திடுக்கிடுகிறான். அவனை தன்னுடன் வருமாறு எவ்வளவோ கேட்டுக் கொண்டும் பையன் அவனுடன் வரமறுத்து விடுகிறான். அவனுக்கு பணம் தர முற்படும்போதும் அதை ஏற்க மறுத்து விடுகிறான். சிங்காரம் திகைத்து போய் நிற்கிறான்.

சாம்பு சாஸ்திரிகள் என்ன சொல்லியும் கேட்காமல் அசோக் தான் வேதபாடசாலையிலேயே தங்கிக் கொள்வதாக கூறி விட்டு தன் பொருட்களை எடுத்து செல்கிறான். சாம்பு சாஸ்திரிகள் தன் வீட்டாரிடம் தனக்கு வந்த அச்சுறுத்தல்கள் பற்றி அவனிடம் யாரேனும் கூறினார்களா என கேட்க இல்லை என்கிறாள். பின்னே அவன் எப்படி அதை புரிந்து கொண்டான் என வியந்து ஒரு வேளை எண்ண அலைகள் ஏதேனும் இதில் செயல்பட்டிருக்குமா என்றெல்லாம் யோசிக்கப்படுகிறது. அப்போ அசோக் ஒரு ஞானியா என ஆர்த்தி கேட்க, ஒருவன் ஞானியா இல்லையா என்பதை மற்றவர்கள் அறிவதற்கே அவர்களுக்கும் ஞானம் வேண்டும் என சாம்பு விடையளிக்கிறார்.

நல்ல ட்ரிக் சார் என கிண்டலடிக்கிறார் சோவின் நண்பர். “யாராவது இந்த மாதிரி கேள்வி கேட்டா இப்படி பதிலச் சொல்லி சமாளிச்சுக்கலாம் போலிருக்கு. எனக்கு ஞானம் இருக்கு சார், எனக்கு விளக்கிச் சொல்லுங்கோ” என ஆவலுடன் கேட்கிறார். “எப்போ ஒருத்தன் தனக்கு ஞானம் இருக்குன்னு சொல்லிக்கிறானோ, அப்பவே அவன் முழுக்க அவுட் ஆயிடறான். உண்மையான ஞானி எப்போதுமே ஞானத்தை தேடுபவனாகவே தன்னைச் சொல்லிக் கொள்கிறான்” என்கிறார் சோ. உண்மையா சொல்லணும்னா தனக்குமே அத்தகுதி இல்லையென்றும், இருப்பினும் தனது அசட்டு தைரியத்தால் அதற்கான விளக்கம் தர முயற்சிப்பதாகவும் அவர் கூறி விட்டு மேலே பேசுகிறார்.

பலனுக்கான எவ்வித ஆசையுமின்றி காரியம் செய்பவன் எவனோ, செயலில் செயலின்மையையும் செயலின்மையில் செயலையும் யார் காணுகிறானோ, அவனே ஞானி என தயாநந்த சரஸ்வதிகள் மகாப்பெரியவா சொன்னதாக கூறியிருப்பதை சோ இங்கே குறிப்பிடுகிறார்.

சாம்புவின் மனைவி அசோக் தங்களாத்தில் இருந்தது பாந்தமாக இருந்தது என்றும் அவன் இப்போது போவதில் என்னமோ பறிபோனது போல உணர்வதாகவும் கூறுகிறாள். அதே உணர்வுகள்தானே நாதனையும் அவர் மனைவியையும் ஆட்டி படைக்கும் என சாம்பு எடுத்து காட்டுகிறார். பிறகு எல்லோரும் தத்தம் வேலைகளை கவனிக்க செல்கின்றனர்.

ஆர்த்தியும் அவள் அன்னையும் தெருவில் வந்து கொண்டிருக்கும் வேளையில் ஆர்த்தி பக்கத்தில்தானே அண்ணா வீடு இருக்கிறது, போய் மன்னியைப் பார்க்கலாம் என கூற, முதலில் அவள் அன்னை மறுக்கிறாள். ஆனால் ஆர்த்தி தான் பிரியாவிடம் வீட்டில் நடந்தது பற்றி கூற நேர்ந்ததை சொல்ல, முதலில் அவளை அதற்காக கடிந்து கொண்ட அவள் அன்னை பிறகு ஆர்த்தியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் பிரியாவை பார்க்க செல்கிறாள். மாமியாரை சந்தோஷமாக வரவேற்கிறாள் பிரியா. அவளிடம் வீட்டில் நடந்தது பற்றி பேச, அவளோ ஆர்த்தி தைரியமாக போய் பேசியதாலேயே எல்லா உண்மைகளும் வெளியே வந்தது என்கிறாள். வசுமதி மாமி பொல்லாதவள் என மாமியார் கூற, மருமகளோ வசுமதியை தூண்டிவிட்ட மைதிலி மகாதீசல் என்று கூறுகிறாள். வக்கீலான தன்னை மாட்டு பெண்ணாக வைத்து கொண்டு இனிமேல் தன் மாமியார் எதற்கும் கவலைப்படக் கூடாது என்று கூறி எதுவானாலும் தன்னிடம் வந்து கூறுமாறு சொல்ல அவள் மாமியாரும் சம்மதிக்கிறாள்.

வேதபாடசாலைக்கு நாதனும் வசுமதியும் காரில் வருகின்றனர். அவர்கள்தான் அசோக்கின் பெற்றோர் என அறிந்து கொண்டதும் வடமொழி கற்பிக்கும் பண்டிட் அசோக்கை பெருமையாகப் பேசி அவனைப் பெற்றதற்கு அவர்கள் புண்ணீயம் செய்திருக்க வேண்டும் என்று கூற, அதை ஒத்துக் கொள்ளாத முகபாவத்தோடு நாதனும் வசுமதியும் நிற்கின்றனர். அசோக் அவர்கள் வந்தது குறித்து அறிந்து அவர்களை பார்க்க வருகிறான். அவனை தங்கள் வீட்டுக்கே வருமாறும், அங்கிருந்து கொண்டே வேதபாடசாலைக்கும் அவன் போகலாம் என்றும் அவர்கள் மிகவும் வற்புறுத்த அவனோ பிரின்சிபாலை பார்த்து பேசுகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறான். என்னமோ அவன் தங்களுடன் வர ஒப்புக் கொண்டுவிட்ட எண்ணத்தில் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியில் ஆழ்கின்றனர்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/05/2010

நித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள்

இப்பதிவு முதலில் போடும்போது நிரம்ப ஆத்திரமான பின்னூட்டங்கள் வரும் என அஞ்சினேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பதில் சிறு ஆறுதல். வலைப்பதிவில் சிறிது மெச்சூரிடி வந்து விட்டது எனத் தோன்றுகிறது.

வந்த எதிர்வினைகளை பார்த்ததில் ஜெயமோகனின் கட்டுரைகள நிதானமாக வாதங்களை முன்வைக்கின்றன. அவர் கூறியது போல:

நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.

முதலில் அந்தச் செய்தி ஓர் எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது. ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.


உண்மைதமிழன் கூறிய ஒன்று என்னையும் பாதித்தது. அதாவது ரஞ்சிதாவின் பெயரை இத்தனை நாறடித்திருக்க வேண்டுமா என்பது. ஆனால் இப்போது வரும் செய்திகள் அவருக்கும் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதற்கும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகவே அவசரப்பட்டு இப்போது எந்த முடிவுக்கும் போக இஷ்டப்படவில்லை.

சாரு சொல்வது போல அவரது யோக வகுப்புகளால் நிஜமாகவே பலன் அடைந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எது எப்படியானாலும் அவரும் ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருவருமே மனம் ஒப்பி இருந்திருக்கின்றனர். அதை சட்டப்படி என்ன குற்றம் எனக் கூறுவது? ஆகவே அவர் மேல் முதல் தகவல் அறிக்கை என்பதே ஓவராகத்தான் எனக்கு படுகிறது. இதுவும் காலப்போக்கில் அதன் பெர்ஸ்பெக்டிவில் வரும் என விட்டு விட வேண்டியதுதான். (சாருவின் சுட்டி தரலாமென்றால், மனிதர் க்ஷணச்சித்தம், க்ஷணப்பித்தம் என பதிவுகளை போடுவதும் நீக்குவதுமாக இருக்கிறார். நான் அந்த ஆட்டத்துக்கெல்லாம் தயாராக இல்லை).

பதிவர்கள் கிருஷ்ணமூர்த்தியும் ஆர்வியும் மேலும் சிலரும் பெரியாரை இங்கு ஏன் இழுக்கவேண்டும் என கேட்டிருக்கிறார்கள். ஊராருக்கு ஒரு உபதேசம், தனக்கு மட்டும் வேறு நியாயம் என்ற வகையில்தான் ரெலெவன்சி வருகிறது. அதுவும் பெரியாரின் திருமணத்தால் வந்த எதிர்வினைகள் மிகவும் அதிகமே. அதற்கே சப்பைகட்டு கட்டினர்/இன்னும் கட்டுகின்றனர், அதே போல நித்யானந்தரின் விஷயமும் ஆகலாம் என்ற எனது யூகத்தைத்தான் எழுதினேன். இதில் எந்த தவற்றையும் நான் காணவில்லை.

இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். மற்றவர்களது அந்தரங்க விவகாரங்களில் அளவுக்கு மீறி நுழைகிற விஷயம்தான் மனத்தை உறுத்துகிறது. காதலர் தினத்தன்று சிவசேனா/பஜ்ரங்தள் செய்த அத்துமீறல்கள், சினிமாவுக்கு பெண்கள் போகவே கூடாது என ஒரு கிராமத்தில் ஃபத்வா கொடுத்த ஒரு ஜமாத்து (பல் ஆண்டுகளுக்கு முன்னால் படித்ததால் சுட்டி தரவியலவில்லை, ஆனாலும் இன்னமும் சவுதி அரேபியாவில் ஒரு பெண் உறவினர் அல்லாதவருடன் வெளியே தனியே வருவதை கண்ணில் விளக்கென்ணெய் விட்டு கண்காணிக்கின்றனர், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கசையடியும் தருகின்றனர்) ஆகியவையும் கண்டிக்கப்படவேண்டியவையே.

கம்யூனிஸ்டுகள் மட்டும் லேசுப்பட்டவர்களா? ராஜ்மோகன் உண்ணித்தான் ஜெயலட்சுமி விவகாரத்தை பார்க்கலாமே.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவரான ராஜ்மோகன் உண்ணித்தான் என்பவர் ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் கேரளத்தில் மலைப்புறம் மாவட்டத்தில் மஞ்சேரி என்ற இடத்திற்கு தன்னுடைய கட்சிக்கொடியுள்ள காரில் மாலை ஏழரை மணிக்கு வந்தார். அங்கே அவர் அஷ்ர·ப் என்ற தொழிலதிபரின் ஊருக்கு வெளியே உள்ள வாடகை வீட்டுக்குச் சென்றார். அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் தொண்டர்களும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான பி.டி.பி யின் ஊழியர்களும் [இரு கட்சிகளும் கேரளத்தில் கூட்டணியாகச் செயல்படுகின்றன] அந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள்.

உண்ணித்தானும் ஜெயலட்சுமியும் வெளியே இழுத்து போடப்பட்டு தாக்கப்பட்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்கள் வந்து கும்பல் அவர்களை இழுத்து அலைக்கழிப்பதையும் அடிப்பதையும் ஜெயலட்சுமி அழுவதையும் நேரடி ஒளிபரப்பினார்கள். போலீஸ் வந்து இருவரையும் கைதுசெய்தது. ஆரம்பத்தில் இதில் சட்டவிரோதமாக எதுவுமே தென்படவில்லை என்று போலிஸ் சொன்னாலும்கூட மார்க்ஸிஸ்ட் கட்சியின் கட்டாயத்தால் ‘ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி உண்ணித்தான் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்கு போட்டது. மறுநாள் போலீஸ் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜராக்கியது. நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது.

ராஜ்மோகன் உண்ணித்தான் சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை என்று பரவலாகச் சொல்கிறார்கள் ஒருவர் தனக்குப்பிடித்த ஒரு பெண்ணுடன் தனியாக இருந்தால், அந்த இருவரும் வயதுவந்தவர்களாக இருந்து பரஸ்பர சம்மதத்துடன் அந்த உறவு நடந்திருந்தால், அதில் சட்டபூர்வமாகத் தவறேதும் இல்லை. அந்த உறவை கண்டிக்க வேண்டியவர், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியவர் அவரது மனைவிமட்டுமே. அது ஒரு குடும்பகுற்றமே ஒழிய சமூகக் குற்றமல்ல. அந்தரங்க உறவுகளில் தலையிட்டு ஆள்கூட்டம் நடுவே ஒரு பெண்ணை இழுத்தடித்து அவமானப்படுத்த யாருக்கு உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்கள்.

இந்நிலையில் உண்ணித்தானின் மனைவியின் கருத்து முக்கியமானதாக ஆகியது. அவர் எதிர்வினையாற்றவேண்டும் என்று கம்யூனிஸ்டுக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அவரது மனைவி தன்னுடைய குடும்பவிவகாரத்தில் எவரும் தலையிடவேண்டியதில்லை, இது ஒரு எதிர்கட்சிச் சதி என தனக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுக் கட்சியையும் பி.டிபியையும் கடுமையாகத் தாக்கிவந்தவர் உண்ணித்தான். அதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டார் என்றார்.

ஆத்திரமடைந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் உண்ணித்தானின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மனைவியை தாக்கினார்கள். தாக்கப்பட்ட உண்ணித்தானின் மனைவி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு போலீசுக்குச் செல்வதற்குள் கம்யூனிஸ்டுக் கட்சியினர் போலீஸில் உண்ணித்தானின் மனைவி அவரிடம் பேசப்போன தங்களை தாக்கியதாக புகார்கொடுக்கவே போலீஸ் புகார்கொடுக்க வந்த உண்ணித்தானின் மனைவியையே கைது செய்து உட்கார வைத்து வழக்குபதிவுசெய்தார்கள்.

மலையாள எழுத்தாளர் சகரியா இதுபற்றி பேசும்போது ‘ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டால் அது கிரிமினல் குற்றமா என்ன?’ என்று கேட்டார். ”ஒழுக்கம் நிபந்தனையாக இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். அது அத்தனைபேரையும் கட்டுப்படுத்தட்டும். ஆனால் ஒரு தனிநபரின் வீட்டை சட்டவிரோதமாகச் சூழ்ந்து கொண்டு அவரையும் அவர் தோழியையும் வெளியே இழுத்துப்போட்டு அடிப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது? கும்பல்களா ஒழுக்கத்தைக் கண்காணிப்பது?”
என்று கேட்டார்”. அதற்காக அவர் தாக்கவும்பட்டார்.

இம்மாதிரியான மாரல் போலிசிங்கால்தான் கம்யூனிஸ்டு தலைவர் வரதராஜனும் உயிரை விட்டார். நித்தியானந்தருக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. மற்றவர்களது எதிர்பார்ப்பையெல்லாம் வளர்த்தால் இப்படித்தான் முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/04/2010

நித்யானந்தரும் பெரியாரும்

எல்லா பதிவர்களும் நித்யானந்தரை பற்றி எழுதிவிட்ட இந்த நிலையில் நானும் எழுதாவிட்டால் என்னை நாடுகடத்தி விடுவார்கள் என்று நம்பத்தகாத வட்டங்கள் தெரிவித்ததால் நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.

நேற்று காலை “எனது காரில்” ஒரு வாடிக்கையாளரின் அலுவலகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். டிரைவர் நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகள் சன் டிவியில் ஒளிபரப்பபட்ட விஷயத்தை சொல்லி தான் ஜன்மசாபல்யம் அடைந்ததை கூறினார். ஐயோ வடை போச்சே, நான் பார்க்கவில்லையே என ஃபீலிங்ஸ் ஆன என்னிடம் அவர் “என்ன சார், நீங்கள்தான் இணையத்தில் மறுபடியும் பார்க்கலாமே” என நினைவுபடுத்தினார். ஆகவே வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாக கணினியை ஆன்செய்து சம்பந்தப்பட்ட சன் செய்தியை வரவழைத்து பார்த்தேன். அதற்கு முந்தைய நாள் இரவில் காட்டிய காட்சிகள் இன்னும் விரிவானவை என்பதையும் அறிந்தேன்.

இப்போது நடந்ததை ஒரு பெர்ஸ்பெக்டிவில் பேசலாமா. பாலியல் காட்சிகள் மேஜர் ஆன ஒரு ஆணும் பென்ணும் இசைந்து செய்த சரசங்களே. அதை வீட்யோ எடுத்தவர் நல்ல நோக்கத்துக்காக செய்திருப்பார் என கூறவியலாது. ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கலாம். நித்தியானந்தர் சாதாரண மனிதனாக இருந்தால் சன் டிவி மீது வழக்கு கூட போடலாம், தனது பிரைவசியை பங்கப்படுத்தியதற்காக, ஆனால் அவர் ஊரறிந்த சாமியார், புலனடக்கம் பற்றி மணிக்கணக்கில் பேசியவர், அவரை பலர் பகவான் ரேஞ்சுக்கு உயர்த்தியவர்கள் என்பதெல்லாவற்றையும் பார்க்கும்போது மக்களது கோபத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என இருப்பவரை பார்ப்பது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. ஒரு படத்தில் சாமியார் ஒருவர் எல்லோருக்கும் நல்லதையே செய்யும்படி அறிவுறை கூறுவார். பிறகு அவரே அப்படி நடந்து கொள்ளவில்லை என வரும்போது அவர் சொல்வார், “ஏம்பா என்னை பார்க்கறே, நான் சொன்னதைப் பார். நல்லவைன்னு ,மனசுக்கு பட்டா செஞ்சுட்டு போ. நான் அதை செய்கிறேன் அல்லது செய்யைல்லை என ஏன் பார்க்கிறாய்”? என்று கேட்பார். தர்க்க சாத்திரத்தின்படி அவர் சொன்னது சரிதான். ஆனாலும் அதை மனது கேட்பதில்லை.

சமீபத்தில் 1949-ல் பெரியார் மணியம்மையை திருமணம் செய்தபோது அமர்க்களம் நிகழ்ந்து திராவிட கழகமே இரண்டாக உடைந்தது. அது ஏன்? நான் இப்பதிவில் குறிப்பிட்டது போல அது அவரது தனிப்பட்ட விவகாரம். இருந்தாலும் எதிர்ப்புகளும் பலமாகவே இருந்தன. ஏன்?
பெரியாருக்கு வயது எழுபதுக்கும் மேல், மணியம்மையாரோ வயதில் அவரை விட மிகவும் இளையவர். அவருக்கு பணிவிடை செய்து வந்தவர். அவரை அப்பா எனவும் அழைத்தவர். மேலும் அதே காலகட்டத்தில் பொருந்தா திருமணங்களுக்கு எதிராக திராவிட கழகம் பெரியாரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அம்மாதிரி திருமணங்கள் நடக்கும் இடத்திலேயே போய் கலாட்டாக்களும் நடத்தப்பட்டன. அப்படிப்பட்ட பெரியார் தானே இம்மாதிரி செய்ததுதான் எல்லோரையும் திக்குமுக்காட செய்தது.

இந்தத் திருமணத்தைக் குறித்து ஆய்ந்த ம.வெங்கடேசன் எழுதுகிறார்:

சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்

ஈவேராவின் இரண்டாவது திருமணம் 9-7-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈவேராவின் வயது 72. மணியம்மைக்கு 26.

தன்னைவிட 46 ஆண்டுகள் இளைய பெண்ணை மணக்குமுன் திருமணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஈவேரா சொல்வது என்ன தெரியுமா?

''மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே சொல்லலாம்.''
(குடியரசு 3-6-1928)

அது மட்டுமல்ல 1940-ல் ஈவேராவின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாதுரை எழுதிய ஒரு தலையங்கத்தில் ''தாத்தா கட்ட இருந்த தாலி'' என்ற தலைப்புக் கொடுத்து எங்கோ வடதேசத்தில் நடந்த ஒரு திருமணத்தைக் குறித்து சொல்வது:

"தொந்திசரிய மயிரே வெளிர நிறைதந்தமனைய உடலே படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளுமதவேட்கைக் கணையாலே தாக்கப்பட்டுக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். வயது 72. ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டி, பேரன் பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்த இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன் கல்யாணம் செய்து கொள்ளலாமே"

என்று தொடங்கி இந்தப் பொருந்தாத் திருமணத்தை நீண்டதொரு தலையங்கத்தில் பொதுவாய்ப் பார்ப்பனர்களைச் சாடக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாய் அண்ணா எழுதியதைப் பிரசுரித்து மகிழ்ந்த ஈவேரா அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே இப்படித் திருமணம் செய்து கொண்டதுதான் பெரிய
புரட்சி!

இந்தத் திருமணத்தை ஏற்காமல் அண்ணா வெளியேறியது மட்டுமல்ல. அப்போது ஈவேராவின் மிக நெருக்கமான இராம.அரங்கண்ணல் ஒரு காரியம் செய்தார். அதை அவரே சொல்லக் கேட்போம்.

"பழைய குடியரசு ஏடுகளில் இருந்து பெரியாரின் பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத் திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது 'ஒரு இளம்பெண்னை வயதானவர் கட்டிக் கொள்வது சரியல்ல' என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து 'தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் இலட்சியம் - பெரியாரின் பேருரை' என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டுக் கம்போசிங்குக்குக் கொடுத்தேன்.
அதுவும் உடன் வெளிவந்தது. பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது பெரியார் கடுங்கோபத்தில் இருந்தார். என்னைப் பார்த்து 'பெருமாள் வீட்டுச் சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க' என்று சொன்னார். நான் பதில் பேசாமல் வெளியேறினேன்.
(நூல்: இராம அரங்கண்ணலின் நினைவலைகள்)

இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில் பேசினார் அண்ணா. அவர் திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு மடலின் கடைசியில் இப்படிச் சொல்கிறார்:

"அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர கேட்போர் காது குளிரக் கூறுவதும் அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும் பெருமையும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும் இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப்
பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்.

'கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு' என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே. 'ஊருக்குத்தானய்யா உபதேசம்' என்று இடித்துரைக்கிறார்களே.

'எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒருகாலை வீட்டிலும், ஒரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை' என்றெல்லாம் பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி
தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.

வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப் படுகிறோம் தனிமையிலே!

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு காரசாரமாக, எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்!

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும் கொள்கையையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டுமக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்து விட்டார்.

இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான் சாதாரணமானதென்று சொல்ல முடியும்?

நூற்றுக் கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ தாத்தாவைப் பார், வணக்கம் சொல்லு!' என்று கூறுவர். கேட்டோம் களித்தோம்.

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மனியம்மையைக் காட்டி 'தாத்தா பெண்ணு' என்று கூறுவர்.
இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம். பனிவிடை செய்துவந்த பாவையுடன்.

சரியா முறையா என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி.என்.அண்ணாதுரை"

ஆனால் இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் இப்போதேல்லாம் பெரியார் செய்ததற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் அனேகம். மனிதன்மனம் விசித்திரமானது. நம்ப விரும்புவதை ஏதேனும் செய்தாவது, தலையை கொடுத்தாவது நம்பும். அதே போல நித்தியானந்தருக்கும் சப்பைகட்டு கட்ட வருவார்களாக இருக்கும். அவரைப் பொருத்தவரை இதுவும் கடந்துபோகுமாக இருக்கும்.

என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன

3/03/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 42 & 43)

யாழ்தேவி நண்பர்களுக்கு சில வார்த்தைகள்:

சோவின் எங்கே பிராமணன் சீரியல் பொதுவான மெகாசீரியல்களின் அபத்தங்களின் நிழல்கூட அதன் மேல்படாது எடுக்கப்பட்டு வருகிறது. இக்கதை சமீபத்தில் எழுபதுகளில் தொடர் கதையாக துக்ளக்கில் வந்தபோதும் சரி, பிறகு போன ஆண்டு சீரியலின் முதல் பகுதி 103 எபிசோடுகளாக வந்த போதும் சரி, இப்போது இரண்டாம் பகுதி 41 எபிசோடுகள் முடிந்து இந்த இடுகை இங்கு விவரிக்கும் 42 மற்றும் 43-ஆம் எபிசோடுகள் வரைக்கும் ஒரு திசைதிருப்பலும் இல்லாது, கதையின் மூல நோக்கத்தை பார்வை இலக்கிலிருந்து தப்பவிடாமல் இருந்து வருகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் எங்கே பிராமணன் ஒரிஜினலுடன் சோவின் இன்னொரு நாடகமான சாத்திரம் சொன்னதில்லையும் அழகாக சேர்த்து கோர்க்கப்பட்டது, முத்தும் பவழமும் ஒரே மாலையில் சேர்ந்தது போல.

இப்போது பதிவுக்கு போவோம்.

எபிசோட் - 42 (01.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இசைதமிழில் ஏதோ தகராறு போலிருக்கிறது. முதல் சுட்டி பாதி எபிசோடாகத்தான் காட்டுவதாக தெரிகிறது. தேதியும் தவறுதலாக 01.03.2010 க்கு பதிலாக 18.03.2010 எனக் காட்டுகிறது.

உமாவும் ரமேஷும் நீலகண்டன் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். குழந்தையை அழைத்து வரவில்லையே என அவர்கள் குறைபடுகிறார்கள். பிறகு நீலகண்டனும் பர்வதமும் பென்ணையும் மாப்பிள்ளையையும் அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் சௌக்கியம் குறித்து வினவுகிறார்கள். அவர்கள் சென்றபின்னால் உமாவுக்கும் ரமேஷுக்கும் இடையில் இருந்த பிரச்சினை பற்றி பேசுகிறார்கள். அதுவரை அவர்கள் இருவரும் இது பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அது ஏன் என்பதற்கு பதிலாக மற்றவருக்கு சங்கடம் வேண்டாமே என இவ்விருவருமே இருந்துவிட்டனர் என்பது தெரிய வருகிறது. தாங்கள் மனமொத்த தம்பதியராக இருப்பதற்கு இது அறிகுறி என்றும், எல்லா பிறவிகளிலும் தாங்கள் இப்படித்தான் இருப்போம் என பர்வதம் கூற, தனக்கு கதிமோட்சமே கிட்டாதா என நீலகண்டன் வருந்துவது போல நடிக்கிறார்.

நாதன் வீட்டில் பூஜை செய்ய வந்த சாம்பு சாஸ்திரிகள் அவரிடம் தான் பெற்ற காசோலையை திரும்பத் தந்து விடுகிறார். மேலும் அடுத்த நாளிலிருந்து பூஜை செய்ய வேம்பு சாஸ்திரிகளை ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். நாதன் முதலில் வருந்தினாலும் பிறகு வேறுவழியின்றி சமாதானம் அடைகிறார். வசுமதியோ சாம்புவிடம் மேலும் கடுமையான வார்த்தைகளை உதிர்க்கிறாள்.

சாம்பு ஏன் இவ்வாறு பிடிவாதமாக நாதன் வீட்டுக்கு இன்மேல் வர மறுக்க வேண்டும் என சோவின் நண்ப்ர் கேட்கிறார். மனக்கசப்பு என ஏற்பட்டுவிட்ட பிறகு அதே இடத்தில் இருக்காது அப்பால் நகர்ந்துவிடுவதே உசிதம் எனக் கூறும் சோ இதை வலியுறுத்தும் வண்ணம் மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு செய்த உபதேசத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். பிரம்மதத்தன் என்னும் அரசன், அவன் அரண்மனையில் வளர்ந்த பூஜினி என்னும் பேசும் குருவி, அதன் குஞ்சு, அது பிறந்த அதே நாளில் பிறந்த அரசகுமாரன் ஆகியோரின் கதையும் கூறப்படுகிறது. அரசகுமாரன் குருவிக்குஞ்சின் கழுத்தை நெறித்து கொல்ல, குருவி அவன் இரு கண்களையும் பிடுங்கிப் போட்டது. பின்னால் வந்து விசாரணை செய்த அரசன், தன் மகனின் குற்றத்தை ஏற்று குருவியை தண்டிக்காது விடுகிறான். ஆனால் குருவி அங்கிருக்காது அப்பால் செல்கிறது. அதை தடுத்து பேசிய அரசனிடம், இத்தனை விஷயங்கள் நடந்தபிறகு இனிமேல் முன்னைப்ப்போல சகஜமாக இருத்தல் ஆகாது எனக்கூறிவிடுகிறது.

சாம்புவும் அதையே நாதனிடம் கூறுகிறார், அதாவது இத்தனை ரசாபாசமான நிகழ்வுகளுக்கு பிறகு தன்னால் அவர் வீட்டுக்கு வரவியலாது எனக்கூறி விட்டு செல்கிறார். செல்பவர் பின்னாலேயே சென்று வசுமதி இன்னும் தூஷனையாக பேசுகிறாள்.

வேம்புவின் சம்பந்தி முதலியார் அசோக்கை பார்த்து பேசுகிறார். தனது தந்தை வயதானதால் மரணபயத்துடன் இருப்பதாகக் கூறுகிறார். அசோக் அவருடன் அவர் வீட்டிற்குள் சென்று முதலியாரின் தந்தையுடன் பேசுகிறான். அவரிடம் மரணம் பற்றி விளக்கி அவரது பயத்தைப் போக்குகிறான். வீடியோவில் பார்த்து ரசிக்க வேண்டிய கட்டம் இது. ஆகவே இங்கு அது பற்றி மேலே எழுதவில்லை.

(தேடுவோம்)

எபிசோட் - 43 (02.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
உமா ரமேஷ் வீட்டில் ரமேஷ் தான் அப்போது பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டதாகவும் நாதனின் கம்பெனியில் ஜி.எம். பதவிக்கு அப்ப்ளை செய்திருப்பதாகவும், இன்னொரு கேண்டிடேட் நல்ல வி.ஐ.பி. சிபாரிசோடு வந்திருப்பதாகவும் தனக்காக உமா நாதனிடம் பேச வேண்டும் என கேட்டு கொள்கிறான். முதலில் உமா மறுக்கிறாள். அவள் அசோக் விஷயத்தில் செய்த உதவிக்கு நாதன் அவளுக்கு கடமைபட்டுள்ளதாக ரமேஷ் கூற, தான் அசோக் விஷயத்தில் செய்தது எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து இல்லை எனக்கூறி அவள் மீண்டும் மறுக்கிறாள். ஆனால் ரமேஷ் மேலும் வற்புறுத்த, ஒத்து கொள்கிறாள்.

பிட்சை ஏதும் கிடைக்காததால் அசோக் அன்று காலை பட்டினி. இருப்பினும் வேதபாடம் எடுக்க ஆஜராகிறான். பசி களைப்பில் மயங்கிவிழ, மாணவர்கள் பிரின்சிபாலை அழைத்து வருகின்றனர். அவர் அங்கு வரும் வழியில் நாரதர் சன்னியாசி ரூபத்தில் வந்து அவரை வழிமறிக்கிறார். பிட்சையின் பெருமையை கூறுகிறார். சிவபெருமானின் கருணை பற்றியும் கூறுகிறார். தன் கண்ணின் அழகில் பெருமை கொண்டிருந்த கன்ணப்பரை தானே அவரது அக்கண்களை தானம் கொடுக்க வைத்து சிவனருள் பெறச்செய்ததை கூறுகிறார்.

கண்ணப்பனாருக்கு அவ்வாறு தன் கண்பற்றி அபிப்பிராயம் இருந்ததா என சோவின் நண்பர் கேட்க, அப்படியெல்லாம் இல்லை எனவும், சில சமயம் கதையில் சுவை சேர்க்க இம்மாதிரி சேர்க்கைகளை பௌராணிகர்கள் செய்து விடுகிறார்கள் எனவும் சோ கூறுகிறார். கண்ணப்பரின் இயற்பெயர் திண்ணன். திடீரென சென்ற இடத்தில் சிவலிங்கத்தை பார்த்து அவனறியாமல் அங்கேயே நிற்கிறான். பிறகு சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியது போல,

போதுவர் மீண்டுசெல்வர்; புல்லுவர்; மீளப்போவர்; காதலினோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாப் போல்வர்; "நாதனே அமுது செய்ய நல்லமெல்லிறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேனென்பார்;

எனக்கூறி சென்று பிறகு மாமிசம், காட்டுப்பூ, அபிஷேகத்துக்காக வாய்க்குள் நீரை வைத்துக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் உமிழ்ந்து சுத்தம் செய்கிறான். பிறகு மாமிச உணவை ஊட்ட சிவபெருமானும் அதை உண்கிறார். பிறகு அவனை சோதிக்க தனது ஒருகண்ணீல் உதிரம் வடியச்செய்து அவன் தனது ஒரு கண்ணை பிடுங்கி சிவலிங்கத்தில் பொருத்தச் செய்கிறார். ரத்தப்போக்கு நிற்கிறது. ஆனால் இன்னொரு கண்ணிலிருந்தும் உதிரம் பெருக தனது இரண்டாம் கன்ணையும் பிடுங்க எத்தனிக்கும்போது சிவபெருமானே பிரத்தியட்சமாகி “கண்ணப்பா நில்” என தடுத்தாட்கொள்கிறார். ஆகவே சீரியலில் சொன்ன விஷயம் வெறுமனே சுவைக்காக கூறியது என சோ விளக்குகிறார். அதனால் என்ன அதுவும் சுவையாக இருந்தது என முரளிமனோகர் எனக்கு தெரிவிக்கிறான்.

நாரதர் தன்கையில் இருந்த பிட்சையை பிரின்சிபாலிடம் கொடுத்து அசோக்குக்கு தரச்சொல்கிறார். பிரின்சிபாலும் அவ்வாறே செய்ய, அசோக்கின் உள்ளுணர்வு அதை அவனுக்கு அளித்த சாமியார் எனக் கூறிவிடுகிறது. கடற்கரையில் வைத்து அவன் சந்தித்த அதே சாமியார்தான் என்பதை தெளிவாக அறிகிறான்.

நாதன் கம்பெனிக்கு உமா வந்து ரமேஷ் வேலை பற்றி பேசுகிறாள். நாதனும் ரமேஷின் தகுதியை அறிந்து அவளுக்கு வாக்கு தருகிறார். ஆனால் இன்னொரு கேண்டிடேட்டுக்கு வி.ஐ.பி.யின் சிபாரிசு இருப்பதாக நாதனின் உதவியாளர் கூற, யார் அந்த வி.ஐ.பி. என விசாரிக்க அது நாதனின் மனைவிதான் எனத் தெரிய வருகிறது.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/02/2010

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 1

நான் ஏற்கனவே யாழ்தேவி தளமேலாளருக்கு சொன்னபடி, வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் என நான் கடந்த 35 ஆண்டுகளாக கண்டறிந்தவற்றை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த 10 பதிவுகள் வந்த சமயம் யாழ்தேவியே இல்லை. ஆகவே அதன் பயனாளர்களுக்காக இந்த மீள்பதிப்புகள். முதலில் பகுதி- 1.

1975-லிருந்து நான் மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்து வருகிறேன். விடாமல் நாம் வேலைகள் பெற நம்மிடம் வாடிக்கையாளரை எப்படி அணுகுவது என்பது பற்றியத் தெளிவான கருத்துகள் இருக்க வேண்டும். அவை இருந்தாலே பாதி காரியம் முடிந்த மாதிரித்தான்.

1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.

2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் என்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பதுத தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்றுக கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.

3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.

4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு பீலாவாகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொரு பதிவில் கூறுவேன்.

5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்திய கூறுகள் உள்ளன. அவை பற்றிப் பிறகு.

7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.

8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.

மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்துக் கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை. தில்லியில் இருந்தபோதும் எனக்கு வெற்றி கிடைத்து வந்தது.

இஃது எத்தனை பகுதிகளாக வரும் என்பதோ, விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக வருமோ அல்லது விட்டு விட்டு வருமோ என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. சோ, சுஜாதா, பெரியார், பார்ப்பனீயம், இஸ்ரேல், ஹைப்பர் லிங்குகள் ஆகியவையுங்கூட நடுவில் தேவைக்கேற்ப வரலாம் என்பதையும் கூறி விடுகிறேன். (அவ்வாறே வந்தும் விட்டன).

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா - 27.02.2010 - பகுதி - 2

முதல் பகுதி இங்கே.
கவிஞர் ஞானக்கூத்தன்
மனுஷ்யபுத்திரன் தன்னை இக்கூட்டத்திற்கு வருமாறு அழைத்தபோது மற்ற பங்கேற்பாளர்கள் யார் யார் என தெரிந்ததும் இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசவியலுமா என தயங்கினதாக குறிப்பிட்டார்.

சுஜாதாவை 1965 முதல் தெரியும் எனக்குறிப்பிட்டார். அவரது இயற்பெயரும் ரங்கராஜன்தான் எனக்குறிப்பிட்டவர் சுப்பிரமணியம், ரங்கராஜன் ஆகிய பெயர்கள் ரொம்பவும் அதிகமாகவே தமிழகத்தில் இருப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அக்காலகட்டங்களில் உட்லேன்ட்ஸ் டிரைவ் இன்னில் வைத்து சுஜாதா, இவர் இன்னும் பலர் அடிக்கடி சந்தித்து பேசுவதை குறிப்பிட்டார். பிரெஞ்சு எழுத்தாளர் Jean Paul Sartre காஃபீ ஷாப்பில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடுவதை விரும்பியதையும் குறிப்பிட்டார். அச்சமயங்களில் சந்த்தித்த மற்றவர்களில் மாலன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு ஆகியோரை குறிப்பிட்ட அப்போதே அவர்கள் எல்லாம் தத்தம் ஈடுபாடுகளில் பெரிய ஆட்களாக வரும் சாத்தியக்கூற்றை சுஜாதா கணித்ததாக கூறினார்.

சுஜாதா ஆசிரியராக சிலகாலம் செயல்பட்ட குமுதம் கவிதை போட்டியில் தான் நடுவராக பங்காற்றி கவிஞர் தாமரையையும் இன்னொரு கவிஞரையும் தேர்ந்தெடுத்து இருவருக்குமே பரிசளிக்க சிபாரிசு செய்ததையும் நினைவு கூர்ந்தார். சுஜாதாவுடன் அதிக அளவில் பழகிய கவிஞன் தானாகத்தான் இருப்பார் என்பதையும் குறிப்பிட்டார். சுஜாதா மனுஷ்யபுத்திரனை அடையாளம் கண்டு, அவரை முதலில் பலருக்கு தன் எழுத்துக்கள் வாயிலாக அறிமுகப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.

திருமலை
இந்த மேடையில் தனக்கு பேச வாய்ப்பு கிடைத்ததற்கான ஒரே தகுதி தான் சுஜாதாவின் தம்பி என்பது மட்டுமே என அவர் ஆரம்பத்திலேயே வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.

தனது அண்ணா ஒரு பன்முக ஆளுமை என குறிப்பிட்டார். பல துறைகளில் செயல்பட்டாவர். அதே சமயம் ஒவ்வொன்றிலுமே சிறப்பாக செயல்பட்டவர். நேர மேலாண்மையை நன்கறிந்து கடைபிடித்தவர். இவ்வளவு திறமை வாய்ந்தவரை மருத்துவத்தால் காப்பாற்ற இயலாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார். எந்த கலைஞனையும் அவர் இறந்தபிறகுதான் புகழ்வது என்ற நிலை மாறி அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கௌரவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

டைரக்டர் வசந்த்
தனது புனைப்பெயர்தான் வசந்த் எனக்கூறிவிட்டு, அப்பெயர் கணேஷின் தோழன் வசந்த் ஏற்படுத்திய பாதிப்பாலேயே தனக்கு வந்தது எனக்கூறினார். தனக்கு சுஜாதா மேல் காதல் என குறிப்பிட்டு, பிறகு தான் அவரை சந்தித்த தருணங்களை விளக்கினார். முதல் சந்திப்பு பற்றி அப்புறம் கூறுவதாக சொல்லிவிட்டு அடுத்த சந்திப்புகள் பற்றி பேச ஆரம்பித்தார்.

தனது அன்னைக்கு படித்து காட்டவே முதலில் சுஜாதா நாவல்களை வாசிக்க ஆரம்பித்தவர் அவர் மேலே காதலாகி போனதை குறிப்பிட்டார். இரண்டாம் சந்திப்பு சாவி ஆஃபீசில் வைத்து நடந்ததாக சொன்னார். “யார் உள்ளே இருக்கிறார் தெரியுமா” என அவரிடம் கேட்கப்பட, அவர் கேஷுவலாக என்ன சுஜாதா இருப்பது போல பில்ட் அப் தருகிறாயா எனக் கேட்க, ஆம் சுஜாதாதான் என பதில் வந்த போது திக்குமுக்காடி போனதையும் சொன்னார். உள்ளே எட்டிப் பார்த்தல் பலர் (சுஜாதா உட்பட) புகைத்து கொண்டிருந்த சிகரெட் புகையால் அவரை சரியாக பார்க்க இயலவில்லை.

மூன்றாம் சந்திப்பில் பங்களூருவில். அப்போதுதான் சுஜாதாவின் கையெழுத்தை பார்த்ததாகவும், ஒன்றுமே புரியாத இடியாப்பச் சிக்கலாய் இருந்தது என்றும் குறிப்பிட்டார். பிறகு நான்காம் சந்திப்பும் பெங்களூருவில் வைத்துத்தான் நடந்தது, “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் கன்னட வெர்ஷனின் படப்பிடிப்பின்போது. அப்போது 45 நாட்கள் பெங்களூருவில்தான் இருந்தாலும் படப்பிட்டின் பிசி ஷெட்யூலால அவரை கடைசி நாள்தான் சந்தித்து பேச முடிந்தது என்றும் கூறினார்.

கடைசியாக முதல் மீட்டிங்கிற்கு வந்தார். அப்போது என்ன நடந்தது என்று பார்த்தால் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறிவிட்டார். தன்னை ஒருவர் சுஜாதாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததுமே, அப்படியா சரி எனக்கூறிவிட்டு அவர் நகர்ந்து விட்டதாகவும், தனக்கு மிகுந்த ஏமாற்றம் என்றும் அவர் கூறினார்.

எழுத்தாளர் தேவிமைந்தன்
எதையும் சான்சுக்கு வைக்காமல் இவர் சில முழுத்தாள்களில் எழுதிக் கொண்டு வந்து படித்து விட்டார். ஆகவே தயக்கம் ஏதும் இன்றி பேச்சு வந்தது.

சுஜாதாவுடன் தனக்கு வந்த தொடர்புகளை பட்டியலிட்டார். அவரது கற்றதும் பெற்றதும் தொடர் விகடனில் வந்தது பற்றி குறிப்பிட்டார். ஏன், எதற்கு, எப்படி என்னும் தலைப்பில் அவர் நடத்திய கேள்வி பதில்கள் சீரியல்கள் மிக நன்றாக இருந்தன. பதில்கள் சிந்தனையை தூண்டுவதாக இருந்தன.

கார்ட்டூனிஸ்ட் மதன்
சுஜாதா எழுதிய புத்தகங்களின் லிஸ்ட் மிக உயரமானது.

ஜூனியர் விகடன் ஆரம்பித்த போது அதில் இணையாசிரியராக தான் நியமிக்கப்பட்டதாக மதன் கூறினார். அச்சமயம் அதில் கதை எதுவும் வேண்டாம் என முடிவெடுத்தையும் அவர் கூறினார். அப்போது சுஜாதாவின் கேள்விபதில்கள் அதில் வர ஆரம்பித்த பின்னணியையும் கூறினார். ஒரு சமயம் சுஜாதாவின் பதில்கள் பெங்களூருவிலிருந்து வர தாமதமாக தானே 3 கேள்விகளுக்கு பதில் எழுதியதையும், அதை சுஜாதா பாராட்டியதையும் குறிப்பிட்டார்.

தான் இப்போது நாடக இயக்கம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதில் பல விஷயங்களில் நாடகம் போட போட்டி வைத்தபோது பெரும்பாலானோர் சுஜாதாவின் கதைகளையே தேர்ந்தெடுத்ததையும் கூறினார். அதனால் தனக்கு வந்த துயரம் மகிழ்ச்சி இரண்டையுமே சுவைஒயாக விளக்கினார்.

இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஹால் மெல்லிசை நிகழ்ச்சி நடத்தவே லாயக்கு என்றும், அடுத்த முறை நல்ல அகௌஸ்டிக் உள்ள ஹாலை தேர்ந்தெடுக்க வேண்டும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சென்னையில் பல நூலகங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அவற்றில் சுஜாதாவின் நூல்களுக்காக பிரத்தியேக இடம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நடிகர் பார்த்திபன்
தாமதமாக வந்ததற்காக முதற்கண் மன்னிப்பு கேட்டு கொண்டார். சுஜாதாவை தான் தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதாக குறிப்பிட்டார். அவரது அறக்கட்டளைக்காக தன்னல் இயன்ற அளவு உதவி செய்வதாக கூறினார்.

மணி எட்டை தாண்டிய நிலையில் கூட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அடுத்த ஹாலில் எல்லோருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிப்பு வர, அங்கு விரைந்தேன். சும்மா சொல்லப்படாது, நல்ல கல்யாண சமையல்.

எல்லோரும் சுஜாதாவுடனான தத்தம் தொடர்பை கூறிவிட்டார்கள். டோண்டு ராகவனான என்னால் ஆனது, இங்கே சில வரிகள்.

அறுபதுகளில் சில கதைகள் என் மனதைக் கவர்ந்தன. அவற்றில் ஒன்றுதான் "ஒரு கதையில் இரு கிளைக்கதைகள்". ஒரு கிளைக்கதை சரித்திரக்கதை, இன்னொன்று தற்காலக் கதை. இரண்டாவதில் வந்த கதாநாயகனை அவன் காதலிக்கும் பெண் நிராகரிக்கிறாள். முதல் கதையில் வந்த ராஜகுமாரி தனது முறைமாப்பிள்ளையை துரத்தி விட்டு பல்லக்கில் செல்கிறாள். திடீரென ஒரு உருவம் வந்து நிற்கிறது. பல்லக்கின் திரையை விலக்குகிறது. ராஜகுமாரி "யார் அது" என்று கேட்க, "ராஜகுமாரி, நான் பக்கத்துக் கதையில் நிராகரிக்கப்பட்டவன்" என்று கூறுகிறது. அவனை பல்லக்கில் ஏற்றிக் கொள்கிறாள் ராஜகுமாரி, பயணம் தொடர்கிறது. சர்ரியலிசம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அக்கதையைப் படித்ததுமே என் மனதைக் கொள்ளை கொண்டது அது. எழுத்தாளர் பெயரை அப்போது கவனிக்கவில்லை.

அதே போல இன்னொரு கதை, தலைப்பு மறந்து விட்டது, ஆனால் கடைசி வரி ஞாபகத்தில் இருக்கிறது. "இஞ்சினியர்கள் நாசமாப் போக". ஹோட்டலில் ஒரு பெண்ணின் நெக்லஸைத் திருட திட்டம் போடுகிறான் ஒரு இளைஞன். விளக்கையெல்லாம் அணைக்க ஏற்பாடு செய்து விட்டு, நெக்லஸையும் வெற்றிகரமாக பறித்து ஓடுகிறான். ஆனால் திடீரென மீண்டும் விளக்குகள் எரிகின்றன. கதையிலிருந்து சில வரிகள்: "நான் கோழிக்குஞ்சு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆறடி உருவமும் மிகுந்த அகலமும் கொண்ட தர்வான் கைகளை விரித்து கொண்டு வந்து, என்னை தடுத்து, தமிழ் சினிமாவில் அப்பா மகனை அணைத்துச் செல்வது போல தூக்கிச் செல்கிறான்". விஷயம் என்னவென்றால், எமெர்ஜென்சி ஜெனெரேட்டர் தானாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதனால்தான் "இஞ்சினியர்கள் நாசமாப் போக". இக்கதையின் எழுத்தாளர் பெயரையும் அச்சமயம் கவனிக்கவில்லை.

சமீபத்தில் 1971 ஜனவரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தேன். அப்போதெல்லாம் ரயில் வண்டிகளில் மூன்று வகுப்புகள் உண்டு. பிறகுதான் இரண்டாம் வகுப்பு நீக்கப்பெற்று, அப்போதைய மூன்றாம் வகுப்பு இப்போதைய இரண்டாம் வகுப்பாயிற்று. கம்பார்ட்மெண்டில் ஒரே கூட்டம். நால்வர் அமர வேண்டிய பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் இருந்தவரை எங்கோ பார்த்த உணர்வு. அப்போது ஐ.ஓ.பி. மீனம்பாக்கம் கிளையின் மேனேஜர் திரு. கோபு அவர்களது முகஜாடை இருந்தது, ஆனால் அவர் இல்லை. ஆகவே அவரிடம் அவர் கோபு அவர்களது சகோதரரா எனக்கேட்க, அவர் அதை மறுத்து தான் எழுத்தாளர் சுஜாதா என்றார். எனக்கு ஒரே சந்தோஷம்.

அவரது நைலான் கயிறு நாவலிலிருந்து எனக்கு பிடித்த வரிகளை கோட் செய்த போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அந்த ரயில் பயணத்தின்போது திடீரென நான் மேலே சொன்ன கதைகள் ஞாபகத்துக்கு வர, ஒரு வேளை அவர்தான் அவற்றை எழுதியதோ எனக்கேட்க, அவரும் ஆமோதித்தார். ஆக, ஒரு நல்ல கதை எழுத்தாளர் யார் என்றே தெரியாத நிலையிலும் நினைவில் நிற்கும் என்பது நிரூபணம் ஆயிற்று.

அவரது ”ரத்தம் ஒரே நிறம்” என்ற கதை அக்காலக் கட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி நான் எழுதிய பதிவில் எனது அனுமானங்கள் சிலவற்றை வைத்திருந்தேன். அவற்றை சரி பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதே போல கணேஷும் வசந்தும் ஒருவரே என்பது பற்றியும் கன்ஃபர்ம் செய்து கொள்ள முடியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/01/2010

புது மொழிபெயர்ப்பு அனுபவம்

யாழ்தேவி நட்சத்திர பதிவராக இது எனது இரண்டாவது பதிவு. ஏற்கனவேயே இட்ட பதிவுதான். ஆயினும் இச்சந்தர்ப்பத்துக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. யாழ்தேவியில் இது திரட்டப்படுவது முதல் முறையாக.

ஈழம் பற்றிய எனது சிந்தனைகள் பல ஈழசகோதரர்களுக்கு பிடிக்காது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியை பதிவு செய்தபோது எனது மனதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரம்தான் தெரிந்தது. நேரிடையாக பாதிக்கப்பட்டவரை கண்டதும் எனது தர்க்கங்கள் எங்கோ ஒளிந்தன. இப்போது பதிவுக்கு போகிறேன்.

இன்று (ஈழ நாட்காட்டியின்படி புரட்டாசி 3, 2007) காலை ஒரு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் பிறந்த நாள்) நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது செல்பேசி திடீரென soulful ரிங் ஓசையை எழுப்பியது. எடுத்து கேட்டால் இலங்கைத் தமிழில் ஒருவர் பேசினார். அவருக்கு ஸ்விட்சர்லேந்திலிருந்து ஒரு ஆவணம் வந்திருக்கிறது என்றார். என்ன மொழி என்று கேட்க, தெரியாதென்றார் (அந்த நாட்டில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன், கூடவே இத்தாலிய மொழியும் உண்டு. நான்காம் மொழி சிறிய அளவினரே பேசும் மொழி). நேரே வீட்டுக்கே வரச்சொன்னேன். பிற்பகல் 3 மணிக்கு கையில் ஆவணத்துடன் வந்தார். இளம்வயதுக்காரர், சுமார் 25 வயதிருக்கும். கூடவே அவர் மனைவி, கையில் பொம்மை போல் ஒரு குட்டிப் பெண் குழந்தை. 11 மாதம் இருக்கும்.

ஆவணத்தை பார்த்தேன். சுவிஸ் ஜெர்மன் மொழியில் இருந்தது. 6 பக்கங்கள், மிக நெருக்கமாக தட்டச்சிடப்பட்டிருந்தது. பார்த்த உடனேயே கூறி விட்டேன். இது நிறைய வேலை எடுக்கும், எனக்கு நேரமே இல்லையென்று. அத்துடன் சாதாரணமாக கதை முடிந்திருக்கும். நான் வீட்டுக்கு வரும் வாடிக்கையாளர் யாரையும் சாதாரணமாக தேவைக்கதிகமாக காக்க வைப்பதில்லை. சட்டு புட்டென்று பேசி அனுப்பிவிடுவேன். வந்தவர் சற்றே தயங்கினார். மென்று விழுங்கினார். சாதாரணமாக அதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டார். ஆவணத்தைப் பார்த்தேன். பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். அவர் ஸ்விட்சர்லாந்திற்கு அகதியாக வர விண்ணப்பித்திருந்தார். அவருடை கேஸ் விவரம் இருந்தது. என்னையறியாமலேயே படிக்க ஆரம்பித்தேன்.

இவர் வட இலங்கையில் வசிப்பவர். அவரது பிராந்தியத்தில் அவரால் பாதுகாப்பாக இருக்க இயலவில்லை. அவரது அன்னை துப்பாக்கி குண்டால் அடிப்பட்டவர். என்றெல்லாம் அதில் இருந்தது. தங்களுக்கே உரித்தான நேர்த்தியுடன் ஸ்விஸ் ஜெர்மனில் அவை விவரிக்கப்பட்டிருந்தன. இப்போதுதான் என்னை அறியாமலேயே நான் இதுவரை செய்யாததைச் செய்தேன்.

அவரிடம், பேசாமல் என்ன இருக்கிறது இதில் என்பதை வேகமாகப் படித்து கூறுகிறேன் என சொல்ல. அவரும் ஒத்துக் கொண்டார். அவருடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டுவிட்டு அவரது விண்ணப்பத்தை பைசல் செய்யும் வாக்கியங்கள் வந்தன.

இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை என்றாலும், ஸ்விஸ் சட்டத்தின் பலான, பலான பிரிவு, உப-பிரிவு ஆகியவற்றின்படி அவருக்கு அடைக்கலம் அளிக்க ஏலாது என திட்டவட்டமாக எழுதப்பட்டிருந்தது. அதை அவரிடம் கூறிவிட்டு மேலே பார்த்தால், அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது. அதை அவரிடம் கூறினேன். அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகுந்த ஏமாற்றம். அவர்களது முகத்திலேயே அது தெரிந்தது. அந்த 11 மாதக் குழந்தை இஃதொன்றும் அறியாது என் வீட்டம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. இதிலேயே கிட்டத்த ஒரு மணி நேரம் போய்விட்டது. அவர்களுக்கு என் வீட்டம்மா டீ மற்றும் ஸ்நேக்ஸ் கொண்டு வந்தார் அவர். மிகுந்த கூச்சத்துடன் எடுத்து கொண்டனர்.

கடைசியில் அவர்கள் கிளம்பினர். அவர் தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து எனக்கு எவ்வளவு தரவேண்டும் எனக் கேட்டார். இப்போது டோண்டு ராகவன் இதுவரை செய்யாத இன்னொரு காரியம் செய்தான். "பணமா, மூச்" என்றான். அது என்னையறியாமலேயே வந்தது. வாடிக்கையாளரை அணுகும் முறைகளைப் பற்றி பத்து பதிவுகள் போட்டு, வசூல் எல்லாம் எப்படி உறுதியாக செய்ய வேண்டும் என பல இடங்களில் கூறிவரும் அவன் இங்கு இவ்வாறு நடந்து கொண்டான். அவர் விடவில்லை. கிட்டத்தட்ட உங்களது நேரம் ஒரு மணி எடுத்துக் கொண்டேன், ஏதேனும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஒரு வார்த்தை பேசாது கைகூப்பினேன் (தொண்டை அடைத்ததால் ஒன்றும் பேச இயலவில்லை). போய் விட்டார்கள். சிறிது நேரம் அப்படியே பிரமித்துப் போய் அமர்ந்திருந்தேன். நாம் எல்லாம் பத்திரமாக தாய்நாட்டில் இருக்கும்போது இம்மாதிரி நாடுவிட்டு நாடு வந்து கஷ்டப்படுபவர்களின் துயரம் என்னை மிகவும் பாதித்தது.

சற்று நேரம் கழித்து அப்பக்கம் வந்த என் வீட்டம்மா கேட்டார், "ஏன் அழுகிறீர்கள்" என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக டோண்டு ராகவன்

ஞாயிறு காலை (28.02.2010) 11.30 மணியளவில் திடீரென வந்த மின்னஞ்சலை முதலில் பாருங்கள்.

அன்பின் திரு.டோண்டு ராகவன்,
உங்களை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக நாளைமுதல் அறிவிக்க விரும்புகிறோம்.உங்களால் பங்காற்ற முடியுமா?
ஒரு அனுபவம் உள்ள இந்தியத்தமிழனின் பார்வையில் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் அவர்களின் நிலை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையான தமிழகத்தின் ஈழம்சாரந்த அரசியல் செல்வாக்கு வேறுபல இலங்கை தொடர்பான உங்களின் அனுபவங்கள் பார்வைகள் இலக்கிய வட்டங்கள் இலங்கை இந்திய சாதீய ஒப்பீடுகள் போன்ற விறுவிறுப்பான சார்புகளின் உங்களின் கருத்துக்களை கட்டுரைகள் ஊhடக பகிர்ந்துகொள்ள முடியுமா?

உங்கள் அனுபத்தையும் அறிவையும் நாங்கள் மதிக்கிறோம்.யாழ்தேவி இலங்கைப்பதிவர்கள் இந்தியப்பதிவர்கள் என வேறுபடுத்துவதில்லை.ஆனால் இலங்கை சார்ந்த பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.யாழ்தேவியில் நட்சத்திரமாக இடம்பெறப்போகும் முதலாவது இந்தியப்பதிவர் நீங்கள்தான்.உங்களால் சிறப்பாக பங்காற்றமுடியும் என்று நம்புகிறோம்.தயவுசெய்து அன்பான அழைப்பாக இதை ஏற்றுக்கொள்ளவும்.(பதிவர்களை இந்தத்தலைப்புகளில் எழுதச்சொல்வது தூண்டுவது நல்லதல்ல.ஆனால் உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம்)

என்றும் அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள்


அவர்களுக்கு உடனேயே நான் அனுப்பிய பதில்:
அன்புள்ள தளமேலாளருக்கு,

உங்கள் மின்னஞ்சலுக்கு மிக நன்றி. நிச்சயமாகவே இது எனக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்தான். ஏற்று கொள்கிறேன்.

ஆனால், ஈழம்சார்ந்த அரசியல் பற்றி எனது கருத்துக்கள் அங்குள்ள பலருக்கு பிடிக்காமல் போகலாம். மேலும் எல்லா பதிவுகளுமே ஈழசம்பந்தமாக இருக்காது. நான் சோவின் எங்கே பிராமணன் சீரியலுக்கான மதிப்பீடுகளை எல்லா எபிசோடுகளுக்கும் செய்து வருகிறேன். அவையும் பதிவுகளாக வரும். அவற்றுடன் ஜெஸ்டஸ் என்னும் ஆங்கில நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பும் வரும்.

கூடவே இருக்கவே இருக்கின்றன, எனது மொழி பெயர்ப்பு சம்பந்தமான பதிவுகள். அவற்றில் பல ஏற்கனவே இடப்பட்டவை ஆனால் அவை மறுபதிப்புகளாக வரும். ஏனெனில் இவை எதுவுமே யாழ்தேவியால் முன்னால் திரட்டப்படவில்லை. மற்றப்படி, மொக்கைகள் இல்லாமல் டோண்டு ராகவனா? அவையும் வரும்? இஸ்ரேல்? நிச்சயமாக.

ஆக, எல்லாம் கலந்து வரும். ஆனால் ஈழ சம்பந்தப்பட்ட எனது புரிதல் பதிவுகளும் நிச்சயம் அவற்றுடன் சேர்ந்து வரும்.

புரிதலுக்கு மிக்க நன்றி.


இதுதான் நடந்தது. எனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு எனது நட்சத்திர வாரம் இன்றிலிருந்து துவங்கியுள்ளது. இது வரும் என்னும் நம்பிக்கையில் இந்த முதல் பதிவை நேற்றே இட்டு இன்று காலை 10 மணிக்கு மேல் வருமாறு அமைவை வைத்தேன். இப்போது இப்பதிவு.

யாழ்தேவி நிர்வாகிகளுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது