1/30/2008

அப்பாடா, வீடியோக்களை கடைசியாக வலையிலேற்றி விட்டேன்

நான் இந்தப்பதிவு போட்ட பின்னர் பலர் பேட்டியை வலையில் ஏற்றுமாறு கேட்டு கொண்டனர். நண்பர் லக்கிலுக் தயவால் முழு பேட்டியின் சிடி கிடைத்தது. இப்போதுதான் எனது தேடல் ஆரம்பமாயிற்று. முதலில் சிடியை கணினியில் பொருத்தி போடுவதில் கூட தகராறுதான். ஏனெனில் நான் சிடி விஷயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. லக்கிலுக்தான் எந்த கோப்பை திறந்து எந்த ஒளிபரப்பு சாதனம் உபயோகிக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டு சென்றார். அவருக்கு எனது முதற்கண் நன்றி.

ஆனால் முழு பேட்டியையும் அப்படியே வலையில் ஏற்றுவது என்பது ஒரு கடினமான பிரச்சினை. 33 நிமிடத்தற்கும் மேலாக டேப் ஓடுவதால் ஒரேயடியாக ஏற்ற இயலாது. மேலும் .dat-லிருந்து Mpeg ஃபார்மேட்டிற்கு வேறு மாற்ற வேண்டியிருந்தது. டேப்பை வேறு ஒவ்வொரு பாகமும் சுமார் 9 நிமிடங்களுக்கு மிகாமல் நான்கு பாகமாக மாற்ற வேண்டியிருந்தது. நிறைய பேரை கேட்டு பார்த்தேன். நான் கேட்டவர்களில் யாருக்கும் இதில் அனுபவம் இல்லை. ஆகவே கூகளாண்டவரே துணை என தஞ்சமடைந்தேன்.

dat-லிருந்து எம்பெக் வடிவுக்கு மாற்ற நான் கண்டறிந்த நிரல்தான் எக்ஸ் வீடியோ கன்வர்டர் (X video converter). அதை தரவிறக்கி கணினியில் நிறுவ முடிந்தது. அதை வைத்து முதலில் கோப்பின் வடிவமைப்பை மாற்றினேன். பிறகு எழுந்த வேலைதான் வீடியோவை பிரிப்பது. இதற்காக கூகளில் தேடி கண்டு பிடித்தது Videosplitter. அதை நிறுவ முயலும்போது வைரஸ் இருப்பதை ஏவிஜி வைரஸ் பாதுகாப்பு காட்டி கொடுத்தது. சரியென்று அந்த நிரலை குப்பைக் கூடையில் போட்டேன். பிறகு என் கணினி குரு முகுந்தன் தந்த ஆலோசனையின்படி Videocutter என்ற நிரலை தரவிறக்கி நிறுவினேன். அதை வைத்துத்தான் வீடியோவை நான்காகப் பிரித்தேன். இப்போது அவற்றை பார்க்க இங்கே சுட்டவும்.

இன்று (30.01.2008) காலை முதல் இதே வேலையாகத்தான் இருக்க வேண்டியிருந்தது. இவ்வரிகளை எழுதும் இக்கணம் கூட வேலை இன்னும் முடியவடையவில்லை. இப்போதைக்கு மூன்று பாகங்கள் ஏற்றப்பட்டு விட்டன. நான்காவது பாகம் 48% அளவில் ஏறி விட்டது. இன்னும் 52% ஏறவேண்டியிருக்கிறது. (மாலை 04.51 மணி நிலவரம்).

இந்த வீடியோக்களை பார்க்கும்போது முதலில் விட்டு விட்டு வரும். கணினிக்கு கோப்பு இறங்கி அது பிராட்காஸ்ட் செய்யப்படுகிறது. இது ஒரே நேரத்தில் அரக்க பரக்க நடப்பதால் இந்த சிக்கல். ஆகவே ஒன்று செய்யுங்கள். எனது சுட்டியை ஒரு தனி ஜன்னலில் திறக்குமாறு செய்யவும் (right click + open in new window or shift+left click simultaneously). ப்ளே போட்டு ஒரு வினாடி கழித்து pause பட்டனை க்ளிக்கவும். பிறகு சற்று நேரத்துக்கு ஜன்னலை மினிமைஸ் செய்து விட்டு வேறு பக்கங்களைப் பார்க்கவும். சில நிமிடங்கள் கழித்து இந்த ஜன்னலுக்கு திரும்ப வந்தால். கணிசமான அளவு டௌன்லோட் ஆகியிருக்கும். அப்போது ப்ளே பட்டனை அழுத்தினால் விடாது பார்க்கலாம்/கேட்கலாம். அதே போல நான்கு பாகங்களுக்கும் செய்யவும்.

இதற்காக நான் செய்த முயற்சிகள் பல விஷயங்களை எனக்கு கற்று தந்தன. ஜாண் ஏறினால் முழம் சறுக்கியது. வீடியோ ஸ்ப்ளிட்டரை தரவிறக்கி விட்டு பிறகு குப்பைக் கூடையில் போட வேண்டியதாயிற்று. பல MB-க்கள் அளவில் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும் எனது முயற்சிகளை விடவில்லை. இவ்வாறு உழைப்பது மனதுக்கு உற்சாகத்தையே தருகிறது.

வாழ்க்கை அற்புதமயமானது.

நான்கு பகுதிகளும் ஒன்றன் பின் ஒன்றாய் கீழே.

பகுதி-1


பகுதி-2


பகுதி-3


பகுதி-4


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/24/2008

ஜெயா டிவி காலை மலர் 25.01.2008 காலை 07.30 மணிக்கு

ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து படப்பிடிப்பும் நடந்தது. அது ஒளிபரப்பாகும் தினத்தை ஒரு நாள் முன்னராக கூறுவதாகச் சொல்லியிருந்தார்கள்.

அது 25.01.2008(நாளை) காலை 07.30 மணிக்கு காட்டப்படும் என்று எனக்கு செய்தி வந்துள்ளது. நேரமிருப்பின் பார்க்கவும். முக்கால் மணி நேர நிகழ்ச்சி, அதாவது காலை 07.30 முதல் 08.15 வரை என அறிகிறேன்.

இதற்காக எனக்கு முன்கூட்டியே வாழ்த்து அளித்த லக்கிலுக்குக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பேட்டி ஒளிபரப்பப்பட்ட பின்னால் சேர்த்தது
பேட்டிக்கான படபிடிப்பு போன சனிக்கிழமை நடந்தது. அதற்கு முந்தைய நாள் திடீரென நண்பர் உண்மைத் தமிழனிடமிருந்து ஃபோன் வந்தது. அன்று இரவு எட்டு மணி அளவில் நான் ஜெயா டி.வி. தயாரிப்பாளர் ஒருவரை ஃபோனில் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே அவருடன் பேசியதில் அவர் என்னை அடுத்த நாள் காலை பத்தரை மணியளவில் அவரை ஜெயா டிவி அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு கூறினார். பிறகு பேசும்போது மீட்டிங் பிற்பகல் ஒன்றரை மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒன்றரை மணிக்கு சென்றால் சற்று நேரம் பேசினார்கள். என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்று ஆலோசனை செய்தோம். பேட்டி கண்டவர் சுமார் 14 கேள்விகள் போல இருக்கும், ஒரு கேள்விக்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை பேச இயலுமா என்று கேட்டார். நான் விட்டால் பேசிக் கொண்டே போவேன் என்றும் அவர்தான் என்னை நிறுத்த வேண்டியிருகும் என்று பாதி தமாஷாகவும் பாதி சீரியசாகவும் சொன்னேன். பிறகு சரி ஷூட்டிங்கிற்கு செல்லலாம் என்றார். நான் இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்ப்பார்க்கவில்லை. அதாவது இன்னொரு நாள் வரச்சொல்லுவார் என எண்ணினேன். A pleasant surprise.

மிக சுருக்கமாக நான் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதெற்கெல்லாம் இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் தந்தனர். அகில இந்திய ரேடியோவில் ஃஃபிரெஞ்சு ஒலிபரப்பு செய்திருந்ததால் அவற்றை சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது.

பேட்டி கண்டவர்கள் இதில் ரொம்ப பயிற்சி பெற்றவர்கள். ஆகவே அவர்களது நடவடிக்கைகளில் பிசிறில்லை. சுமார் 40 நிமிட நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 50 - 60 நிமிடங்களுக்கு ஷூட் செய்து எடிட்டிங் செய்துள்ளனர். கேட்ட கேள்விகளுக்கு தெரிந்த அளவில் பதிலளித்தேன். மொழிபெயர்ப்பு துறை என்பதே என் மூச்சு என்றாகிவிட்ட நிலையில் பதிலளிப்பதில் தயக்கமே ஏற்படவில்லை.

டென்ஷன் என்பதே துளிக்கூட இல்லாத ஷூட்டிங்காக அமைந்ததில் எங்கள் எல்லோருக்கும் திருப்தி. நான் சொன்ன பல விஷயங்கள் ஏற்கனவே நான் என் பதிவுகளில் பலமுறை கூறியவைதான். சகவலைப்பதிவினர் பல முறை அவற்றை படித்திருப்பார்கள்தான். ஆனாலும் அவையே பெரிய ஆடியன்ஸை சென்று அடைவது மகிழ்ச்சியைத் தருகிறது.
25.01.2008 12:53 PM

1/16/2008

துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் - 3



மோடி மற்றும் சோ அவர்கள் போட்டோவை நகலெடுத்து ஒட்டுவதற்கு அனுமதியளித்த இட்லிவடைக்கு என் மனமார்ந்த நன்றி.


பகுதி 1
பகுதி 2

மோடி அவர்கள் கரகோஷங்களுக்கு இடையில் மேடைக்கு வந்த போது மணி சுமார் 08:20. அவர் குஜராத்தியில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பேசக் கூடியவர் என்பதை அறிவேன். ஹிந்தி கூட பரவாயில்லையாகத்தான் இருந்திருக்கும். ஆனால் வேறு வழியின்றி சென்னையில் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. அவரது உச்சரிப்பு முதலில் பிடிபடவில்லை. பிறகு பழகியது. அதுவும் நல்லதுக்குத்தான். அவரது பேச்சு பெற்ற வரவேற்பு முழுக்க முழுக்க அதன் உள்ளடக்கத்துக்குத்தான். மொழி மற்றும் வார்த்தை விளையாட்டுகளுக்கு இல்லை என்பதே முதல் சிறப்பு.

வணக்கம் என்று மழலைத் தமிழில் ஆரம்பிக்க பலத்த கைத்தட்டல். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்ற அடுத்த மழலைத் தமிழ் வாக்கியம் இன்னும் அதிக கரகோஷத்தை தந்தது. இது வரை ஒன்றும் புதியதாக இல்லை. ஏனெனில் இவ்வாறு பேசுவது எல்லா வட இந்திய தலைவர்களுமே. பிறகு ஆரம்பித்தாரையா ஆங்கிலத்தில்.

துக்ளக்கின் இந்த கூட்டத்தில் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று சம்பிரதாயமாக ஆரம்பித்தார். தான் சோ அவர்களுக்கு விசிறி என்று கூறினார். சோ அவர்களை பற்றி தான் அவசர நிலை காலத்திலிருந்து அறிவேன் என்றார். அச்சமயம் அவர் ஜனநாயகத்துக்காக பாடுபட்டதையும் குறிப்பிட்டார் அவர். அவரது துக்ளக் இதழ்களில் வரும் இரண்டு கழுதைகள் பற்றியும் குறிப்பிட்டார் அவர். ஒரே சிரிப்பு. சோவை தான் எப்போதுமே அட்மைர் செய்திருப்பதாக கூறினார். முக்கியமாக இம்மாதிரி வாசகர்களுடன் வருடா வருடம் சந்திப்பு வைத்து அவர்களையும் பேசவிட்டு பிறகு பதிலும் கூறுவது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார் அவர். அதற்கு மிகுந்த தைரியம் வேண்டும் என்றும் அதை ஒரு உண்மையான ஜனநாயகவாதிதான் செய்ய முடியும் என்றும், சோ அவர்கள் உண்மையான ஜனநாயகவாதி என்றும் கூறினார் அவர். தான் சோ அவர்களை சல்யூட் செய்ய வந்துள்ளதாகவும் கூறினார்.

பிரதம மந்திரி அவர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து ஒரு நாள் கூட லீவ் எடுத்ததில்லை என தான் படித்ததாக கூறினார். தான் முதன் மந்திரி ஆன நாளிலிருந்து 15 நிமிடம் கூட ஓய்வு எடுக்கவில்லை என கூறினார். ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகாரத்துக்காக அங்கு வரவில்லை, சேவை செய்யவே வந்துள்ளார் என்பதை உணர வேண்டும். பொறுப்புகள் அதிகம் ஆகின்றன. மக்கள் தன்மேல் வைத்துள்ள நம்பிக்கை குலையா வண்ணம் அவர்களது விருப்பங்கள் செயல்படும் வகையில் கடமை ஆற்றிட வேண்டும் என்றார். அதை சரியாக செய்வதில் தனது முழுமுயற்சியும் இருக்கும் என்றும் கூறினார் அவர். சரியான திசையில் தன் பயணம் இருக்கும் என்றார்.

தன் மேல் ஒரு ஊழல் புகாரும் வரவில்லை என்று சோ அவர்கள் கூறியதை குறிப்பிட்டு, ஒரே ஒரு புகார் வந்தது என்று குறிப்பிட்டார். அப்புகார் 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, அதாவது சர்தார் வல்லபாய் படேல் தினத்தின்போது எழுப்பப்பட்டது என்றார் அவர். அந்த தினத்தில் பேசியவர்கள் சர்தார் படேலின் பெயரை 10 தடவைகள் உச்சரித்தனர் என்றால். மோடியின் பெயரை 200 முறை உச்சரித்தனர் என்றார். அவர்கள் மோடிக்கு எதிராக கூறிய ஊழல் புகார் என்னவென்றால் மோடியிடம் 250 ஜோடி உடைகள் உள்ளனவாம். துக்ளக் மீட்டிங்கில் மோடி அவர்கள் சிரிக்காமல் அதை கூற, பார்வையாளர்கள் சிரிப்பு அரங்கத்தை நிறைத்தது. சாதாரணமாக 250 கோடி ரூபாய்கள் ஸ்விஸ் பேங்கில் உள்ளன என்றுதான் கூறுவார்கள். இங்கு என்னவோ 250 ஜோடி உடைகளாம். அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் தான் மக்களிடம் தன்னிடம் நிஜமாகவே 250 ஜோடி உடைகள் இருக்கின்றன என்றும் அதற்காக மக்கள் தன்னை மன்னிப்பார்களா என்று மக்களிடமே கேட்ட போது, மன்னிப்பதாக மக்கள் உரக்கவே கூறியுள்ளனர். அதன் பிறகு வேறு எந்த ஊழல் புகாரும் இல்லை என்றார் அவர்.

மரணத்தின் வியாபாரி என்று தன்னைப் பற்றி கூறியதையும் மீறி மூன்றாம் முறை தன்னை பதவியில் அமர்த்திய மக்களுக்கு நன்றி கூறினார் அவர். பிறகு தனது நிர்வாக அனுபவங்களை பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

சாதாரணமாக மக்கள் இந்த நாட்டை பற்றி பேசும்போது நாடே குட்டிச்சுவராகப் போகிறது என்று அவநம்பிக்கையுடன் பேசுவதை அவர் கண்டித்தார். அதே அரசு இயந்திரம், சட்டங்கள் ஆகியவற்றை வைத்து நிறையவே சாதிக்க முடியும் என்பதை தன்னால் உறுதியாக கூறமுடியும் என்றார் அவர். என்ன அதையெல்லாம் செய்வதற்கான முனைப்பாடு இருக்க வேண்டும் அவ்வளவே.

பிறகு தனது பின்புலனைப் பற்றி பேசினார் அவர். தான் பிறந்த ஊர் பிந்தங்கிய பகுதியை சேர்ந்த இடம். சாதாரன பள்ளியில் படிப்பு. ஆங்கிலம் படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் கடவுள் அருளால் இன்று எல்லார் முன்னாலும் இந்த நிலையை அடைய முடிந்தது. ஒருவரிடம் தைரியம், தெளிவான கண்ணோட்டம், நல்லது செய்யும் விருப்பம் ஆகியவை இருந்தால் அவரால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார் அவர்.

தான் முதல்வராக பொறுப்பேற்றதும் தனது அறையில் செக்ரட்டரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஒரு முதல்வரின் அறைக்கு அவர் இதற்கு முன்னால் சென்றதே இல்லையாம். தான் இதற்கு முன்னால் எந்த பதவியையும் அலங்கரித்ததில்லை. பல்ளியில் கூட மாணவர் தலைவன் என்றெல்லாம் ஒரு பதவியும் இல்லை. ஆக இதுதான் முதல் தடவை என்று விளக்கினார் அவர். அதுவரை கட்சிப்பணியில்தான் இருந்திருக்கிறார்.

அந்த மீட்டிங்கில் அவரிடம் குஜராத்தின் அப்போதைய நிலை பற்றி கூறப்பட்டது. கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம் இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49 விழுக்காட்டில் இருந்தனர். நிலையை மாற்ற வேண்டும் என்று இவர் முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை விடுபவர்களது விழுக்காடு 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது என அவர் கூறியபோது கரகோஷம் எழுந்தது. அடுத்த இரு ஆண்டுகளில் அதை பூஜ்யமாக ஆக்குவதே நோக்கம் என்று கூறினார். செய்து விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது. மோடி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும் அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன் அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில் இறங்கியுள்ளது எனக் கூறினார் மோடி.

தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது. நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது? ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார்.

அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிந்ததும் மோடியை பேட்டி கண்ட ஒரு பத்திரிகையாளர் மோடி அவர்கள் கம்யூனல் பிரச்சினையை கிளப்பி ஜெயித்ததாகக் கூற, மோடி அவரிடம் தனது எல்லா எலெக்‌ஷன் பேச்சுக்களும் பதிவு செய்யப்பட்டு எலெக்‌ஷன் கமிஷனிடம்தான் உள்ளன. அவற்றை போட்டு பார்த்து ஏதேனும் ஒரு இடத்தில் தான் அம்மாதிரி செய்ததாக நிருப்பிக்க இயலுமா என பத்திரிகைக்காரரை கேட்க அவர் பின்வாங்கியுள்ளார். இப்போது மோடி அவர்கள் துக்ளக் மீட்டிங்கில் பார்வையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது தான் தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசினால் தன்னை மதவாதி என்று கூறிட முடியுமா என்று கேட்க பார்வையாளர்கள் ஒரே குரலில் ”இல்லை” என குரல் தந்தனர்.

மதசார்பின்மை என்ற சொல் வருடங்கள் செல்ல செல்ல 5 வருடங்களுக்கு ஒரு முறை எம்மாதிரி மாறி வந்திருக்கிறது என்பதை மோடி அவர்கள் விவரித்தார். முதலில் அது மத ஒற்றுமையை குறிப்பிட்டது. பிறகு சிறுபான்மையினருக்கு அநுதாபம் என மாறியது, பிறகு சிறுபான்மையினர் கூறுவதையேல்லாம் செய்வது என்றாயிற்று. ஆனால் மோடி அவர்களை பொருத்தவரை மதசார்பின்மை பரம ஏழைகளையும் முன்னேற்றுவதாகத்தான் இருக்க வேண்டும் என தான் புரிந்து வைத்திருப்பதாக கூறியபோது பலத்த கரகோஷம் எழுந்தது. ஒரு மகாநாட்டில் நாட்டின் செல்வங்களுக்கு முதல் உரிமை இசுலாமியருக்கே என பிரதம மந்திரி குறிப்பிட்டபோது தான் ஆட்சேபணை எழுப்பினதாக கூறினார். அது என்ன இசுலாமியர்கள் என்று கூறுவது? ஏழைகள் என்று கூறவும் என்று சொன்னதாக கூறினார். இம்மாதிரி மனநிலையுடன் இருக்கும் பிரதம மந்திரிக்கு மதசார்பின்மை பற்றி பேச ஒரு அருகதையும் கிடையாது அவரிடமே தான் கூறியதாக மோடி சொன்னார்.

மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது என்றார். முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே. காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை.

மோடி அவர்கள் இப்போது இன்னொரு விஷயத்தை தொட்டார். மோடி இப்படி, மோடி அப்படி என்றெல்லாம் கூறிப் பார்த்து பப்பு வேகவில்லை என தெரிந்து கொண்ட ஊடகங்கள் குஜராத்தியினரே சரியில்லை என கூறத் துவங்கியுள்ளனர் என்பதை கூறினார். தமிழகத்தின் நல்லவேளை தான் இங்கு முதன் மந்திரி இல்லை. அப்படியிருந்திருந்தால் தமிழக மக்களை பற்றி அவதூறு ஆரம்பித்திருக்க வேண்டும் என்று மோடி சொன்னபோது அரங்கில் சிரிப்பு. அப்படியே இருந்தாலும் பரவாயில்லையே, மோடி மாதிரி ஒரு முதல்வர் நமக்கில்லையே என்று எனக்குள் எண்ணம் எழுந்தது.

சந்திரபாபு நாயுடு வெற்றியடையாததற்கு காரணம் அவரது அபிவிருத்தி திட்டங்கள் எல்லோரையும் போய் சேரவில்லை என்று சோ சொன்னதையே மோடியும் உறுதி செய்தார். அபிவிருத்தி திட்டங்களில் மக்களின் முழு ஈடுபாடு என்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் ஆட்சி செலுத்தும்போது அடுத்த தேர்தலையெல்லா நினைக்கலாகாது. அரசு மட்டும் செலுத்தினாலே போதும் என்றும் கூறினார். குஜராத்தில் நடப்பது தொடர வேண்டும், முழு நாட்டுக்கே அது கிரியா ஊக்கியாக அது இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை அவர் வெளிப்படுத்தினார். குஜராத்தில் அவரது வெற்றிக்கு காரணங்கள் குறைந்த அளவு அரசு இயந்திரம், மிகப் பரவலான ஆட்சி செலுத்தல் ஆகியவையே.

குஜராத் பூகம்பம் பற்றியும் பேசினார். அம்மாதிரியான பூகம்பம் வந்தால் வளர்ந்த நாடுகளிலேயே மீண்டும் புனர்வாழ்வு வர 7 ஆண்டுகளுக்கு மேல் பிடித்திருக்கும். ஆனால் குஜராத்திலோ மூன்றே ஆண்டுகளில் அது சாத்தியமாயிற்று என்றார். அவர் பதவிக்கு வந்த போது பல கூட்டுறவு வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக நொடித்தன. தனது அரசு எடுத்த நடவடிக்கைகளால் அவை சரி செய்யப்பட்டு பல விஷயங்களில் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளையும் மிஞ்சியுள்ளன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அவர். அகலப்பட்டை இணைய இணைப்பு ஒவ்வொரு கிராமத்துக்கும் வரும் நிலை உள்ளது என்றும் கூறினார். அதன் தரம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள இணைப்பின் தரத்துக்கு குறையாமல் இருக்கும் என்றார். தமிழக மக்களை குஜராத்துக்கு நேரடியாக வந்து பார்த்து தான் கூறியதன் உண்மையை கண்டுணரச் சொன்னார்.

இந்த கூட்டத்துக்கு அழைத்தற்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

சோ அவர்கள் வழக்கமான நன்றி அறிவிப்பை செய்த பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது. கூட்டம் முடிவுக்கு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/15/2008

துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் - 2

முந்தைய பதிவு இதோ.
ஒரே பதிவாக போட இயலவில்லை. நீண்ட நோட்டு புத்தகத்தில் 23 பக்கங்களுக்கு குறிப்பு எடுத்திருந்தேன். கீழே சப்பணம் போட்டு உட்கார கஷ்டப்பட்டேன். பல போஸ்களில் நெளிய வேண்டியதாயிற்று. இருந்தாலும் நல்ல பலன் கிடைத்ததால் வருந்தவில்லை.

சோ அவர்கள் பேச வந்தபோதுபார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மிகத் துல்லியமாக உணர முடிந்தது. முதலில் லோக்சபா தேர்தல் வரும் சாத்தியக்கூறை பற்றி பேசினார். இப்போதைக்கு அது வராது என்ற கருத்தை தெரிவித்தார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு பல சாதகமான விஷயங்களைக் கொண்டிருந்தது என்றார். அது இல்லாது அணுசக்தியிலிருந்து மின்சாரம் செய்யும் திறனை நாம் முழு அளவில் அடைய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்றார். ஆகவே அதை கைவிடுவது நமக்குத்தான் பாதிப்பு என்ற கருத்தையும் வெளியிட்டார். போன ஆண்டு மீட்டிங் போது பாஜக அரசு இருந்திருந்தாலும் இந்த ஒப்பந்தத்தை போட்டிருக்கும் என்று தான் அப்போது கூறியதை அத்வானி அவர்கள் ஒத்து கொள்ளாது பேசினாலும் தனது கருத்து அப்படியே உள்ளது எனவும் கூறினார்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் என்பதாலேயே இதை எதிர்ப்பது முட்டாள்தனம் என்றார். சீனாவுடன் என்றால் இடதுசாரிகள் வரவேற்றிருப்பார்கள் என கிண்டலுடன் கூறினார். அவர்தம் இரட்டை நிலைபாடுகளையும் சாடினார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் ஒரு வேளை பாராளுமன்றத்துக்கு இடைதேர்தல் வந்திருக்கும் என்றும், ஆக அது வராமல் போனதற்கு காரணம் மோடி அவர்களே என்று கைதட்டல்களிடையே கூறினார். இடதுசாரிகள் போட்டு படுத்தினதில் மன்மோஹன் சிங்கே ஒரு தருணத்தில் பொறுமை இழந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு ஆர்வமுடன் இல்லை என்றார் அவர். பங்களூர், ஹைதராபாத், லக்னோ என்றெல்லாம் அது பரவுவதை அவர் கவலையுடன் குறிப்பிட்டார். அதை கட்டுப்படுத்த தவறுவதையும் குறிப்பிட்டார். பார்லிமெண்டை தாக்கின வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அக்ஸருக்கு மன்னிப்பு என்ற ஆபத்தான விஷயத்தையும் தொட்டார். POTA சட்டத்தை விலக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார். அதனால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் அதை இன்னும் கடுமையாக்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார். அதை செய்யாது அதை கைவிட்டால் அதே வாதத்தை இந்தியன் குற்றச் சட்டத்துக்கு விரோதமாகவும் உபயோகிக்கலாம் என்றார்.

காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இசுலாமியருக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்ப்பது அந்த மதத்தவருக்கு அவமானம் செய்வதாகும் எனக் கூறினார். இதுதான் உண்மையான மதவாதம் என்றார் அவர். பெரும்பான்மையான இசுலாமியர் அமைதி விரும்புபவர்களாக இருக்கும்போது அவர்களை தீவிரவாதிகளுடன் குழப்பி கொள்வது காங்கிரசே என்றார். ஆனால் பாஜக அவ்வாறு செய்வது இல்லை. தீவிரவாதி என்றால் தீவிரவாதிதான். அவன் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் அடையாளம் காணப்படுவது என்பது துரதிர்ஷ்டவசமானது என்றார் சோ அவர்கள். விடுதலைப்புலிகள் பெரும்பாலானோர் இந்துக்களே, அதையே நக்ஸலைட்டுகளுக்கும் கூறலாம்.

சச்சார் கமிட்டி பற்றியும் பேசினார். சாதாரணமாக் மார்வாரிகளைப் போல இசுலாமியர் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துவதாலேயே படிப்பில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை என்றும், புது தலைமுறையில் அது மாறி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

பிறகு தஸ்லீமா விவகாரத்தையும் கையில் எடுத்தார். தஸ்லீமா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பவர்கள் எஃப்.எம். ஹுசேன் என்ன செய்தாலும் சரி என்று ஏன் போக வேண்டும் என்று கேட்டு விட்டு, அதற்கு காரணம் முன்னவர் இசுலாமியரை தாக்க பின்னவரோ இந்து கடவுளரை அவமானப்படுத்தினார் என்பதே என்றார். அதே நேரத்தில் யாரும் யாருடைய மத நம்பிக்கையயும் புண்படுத்த கூடாது ஆகவே தஸ்லீமா செய்ததும் தவறுதான், அதே சமயம் ஹுசேன் செய்ததும் மிகத் தவறுதான் என்றும் அதை பூசிமெழுகுவது சரியில்லை என்றும் குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கம் மற்றும் கேரளம் தவிர்த்து வேறு எங்கும் கேப்பிடலிசம் இருக்கக் கூடாது என்ற நிலை எடுப்பதை நையாண்டி செய்தார். க்வாட்ரோக்கி விவகாரத்தில் கோட்டை விட்டதற்கு காங்கிரசை சாடினார். காங்கிரஸ் நிர்வாகம் மொத்தத்தில் மோசம் என்றார்.

பிறகு பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வாய்ப்புகளை பட்டியலிட்டார். இரு கட்சிகளுமே கஷ்டமான நிலையையே எதிர்நோக்குகின்றன என்றார் அவர். பாஜக போன லோக்சபா தேர்தலில் தோற்றதற்கு காரணமே சரியான கூட்டணிகள் அமையாது போனதே காரணம் என்றார். எது எப்படியாயினும் மூன்றாம் அணி கேலிக்கூத்து என்றார். பிறகு பொதுவாக எந்த கட்சிக்குமே தலைமை பலமானதாக அமைய வேண்டும் என்றார். அந்த வகையில் தலைக்குத்தலை நாட்டாமை செய்யக்கூடாது என்றும் கூறினார். சம்பந்தப்பட்ட தலைவர்கள் செய்வது நியாயமோ அநியாயமோ அது வேறு விஷயம் ஆனால் ஒரு கட்சி வளர பலமான தலைமை அவசியம் என்பதை அவர் குறிப்பிட்டார். அதற்கு தலைவரின் தனிப்பட்ட பலம் மிக அவசியம் என்றும் கூறினார். அதை வைத்துத்தான் ஓட்டே அளிக்கிறார்கள். தேர்தல் அறிக்கைகளை கட்சிக்காரர்களே மதிப்பதில்லை. இந்த நிலைபாட்டுக்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டது இந்திரா காந்தி, மார்க்கரெட் தாட்சர் ஆகியோரை. சரியோ தவறோ ஒரு வலிமையான தலைமை அவசியம் தேவை என்பதே அது. அதே முறையில் மாநிலங்களில் உள்ள வல்மையான தலைமைகளை இந்திரா காந்தி அவர்கள் தனது சுயநலத்துக்காக மட்டம் தட்டியதாலேயே (கர்நாடகா நிஜலிங்கப்பா, தமிழ்நாடு காமராஜ், ஆந்திரா சஞ்சீவ ரெட்டி) காங்கிரஸ் பல மாநிலங்களில் மரண அடி வாங்கியது என்பதையும் அவர் நினைவூட்டினார். அந்த சூழ்நிலையில் மோடி மாதிரி ஒரு தலைவர் எல்லா மாநிலங்களுக்கும் தேவை என்றார். மோடி நிச்சயமாக பிரதம மந்திரியாகும் தகுதி பெற்றவர். ஏனெனில் அவருக்காக இந்திய பத்திரிகைகள், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் அவ்வளவு உழைத்துள்ளார்கள் என கிண்டலோடு குறிப்பிட்டார். ஒரே சிரிப்பு.

இந்த நேரத்தில் ஒன்றை கூறியாக வேண்டும். அவ்வப்போது குருமூர்த்தியையும் மோடியையும் கேமரா காட்டியது. குருமூர்த்தியின் உதடுகள் அசைவிலிருந்தும் அப்போது தமிழில் சொல்லப்பட்டதை வைத்தும் அவர் மோடியிடம் எப்படி மொழி பெயர்த்து கூறுகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. என்னை விட்டிருந்தால் நான் ஹிந்தியிலேயே நேரடியாக மொழிபெயர்த்து கூறியிருப்பேன். இந்த அழகில் எனக்கு மோடி, குருமூர்த்தி சோ ஆகிய மூவரையும் நன்றாக தெரியும். என்ன, அவர்களுக்கு என்னைத் தெரியாது அவ்வளவே.

பாஜகவை பொருத்தவரை விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை ரொம்ப ஆட விடக்கூடாது அவ்வளவே என்பதையும் சோ அவர்கள் குறிப்பிட்டார். குஜராத் கலவரங்கள் குறித்து பேசுகையில் சோ அவர்கள் முதலில் கோத்ரா ரயில் எரிப்புக்கு என்னென்னவோ சப்பைகட்டு முதல் நாளில் கட்டினார்கள் என்றார். கரசேவைக்காரர்கள் உள்ளூர் மக்களை எரிச்சல் மூட்டினார்கள் என்றெல்லாம் கூட கூறினார்கள். அதை கண்டு கோபமடைந்த சிலர் கலவரம் துவங்க முதல் நாள் அன்றே மோடி அவர்கள் ராணுவத்தை அழைத்து விட்டார் என்பதையும் நினைவூட்டினார். துப்பாக்கி சூட்டில் பல ஹிந்துக்கள் இறந்தனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார். பிறகு அவசரம் அவசரமாக அரைகுறை விசாரணை வைத்து கோத்ரா ரயில் பயணிகள் தங்களுக்கு தாங்களாகவே நெருப்பு வைத்து கொண்டனர் என்றும் கூறத் தலைப்பட்டனர். டெஹல்கா விஷயத்தில் அது எப்போதுமே காங்கிரசுக்கு எதிராக எதையும் கண்டு பிடிக்கக்கூட முயல்வதில்லை என்று சற்றே யோசனையுடமன் சோ அவர்கள் கூற, அரங்கில் மீண்டும் சிரிப்பு. மொத்தத்தில் டெஹெல்கா விவகாரமே புனைந்து கூறப்பட்ட ஒன்று என்றும், அது நம்பத் தகுந்ததல்ல என்றும் கூறி விட்டார். (இப்போது டோண்டு ராகவன் உள்ளே வருகிறான். டெஹல்கா டேப் உண்மை கூறுகிறது என்று வாதத்துக்கு வைத்து கொள்வோம். அப்படியானால் ஏன் கைதுகள் இல்லை? ஏனெனில் அவை கோர்ட்டில் நிற்காது என்று அர்த்தமா? அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் என்று இருந்தால் அவர்களை தப்பிக்க விடும் உத்தியா இது? பை தி வே டெஹல்கா ஏன் சீக்கியக் கொலைகளை பற்றி துப்பறிய முயல்வதில்லை? டோண்டு ராகவ்ன் இப்போது வெளியேறுகிறான். மீண்டும் சோ.) மோடி ஜெயலலிதா வீட்டில் நடந்த விருந்து நல்ல விளைவுகளைத் தரும் என எதிர்ப்பார்ப்பதாக சோ கூறினார்.

தமிழ்நாடு விஷயத்துக்கு வந்தார் சோ. கழகம் ஒரு குடும்பம் என்பது இப்போதுதான் நன்றாக புரிகிறது என்று கூற கொல்லென சிரிப்பு. ஏன் ஸ்டாலினுக்கு முடிசூட்டவில்லை என்பதற்கும் விளக்கம் அளித்தார் சோ. அதாவது குடும்பத் தலைவர் தனது கடைசி காலம் வரை சொத்து தன் கையில் இருக்கும்படித்தான் பார்த்து கொள்வார். இங்கு சொத்து பதவியே. அதே சமயம் இவ்வளவு குடும்ப அங்கத்தினர்களை உலவ விடுவது ஆபத்தில்தான் முடியும் என்றும் கூறினார். சென்னை சங்கமம் என்ற கூச்சல் அரங்கத்திலிருந்து எழுந்தது. அது பரவாயில்லை ஆனால் அதை செய்யும் காஸ்பர் புலி ஆதரவாளர் என்பதுதான் கவலை தருகிறது என்று கூறினார். மத்திய அரசு இதை அவதானிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யுமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் கூறினார் அவர். தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் புலிகள் அதிகம் தைரியம் பெற்றுள்ளனர் என்பதையும் சோ அவர்கள் குறிப்பிட்டார். இம்மாதிரி ஜெயலலிதாவின் ஆட்சியில் நடக்காது என்பதையும் கூறினார் அவர்.

மீனவர்கள் கொலை விஷயத்தில் முதலில் ஸ்ரீலங்கா அரசுதான் குற்றவாளி என நினைத்து சவுண்ட் விட்டவர்கள் அது புலிகளின் வேலை என்றறிந்ததும் வாயை மூடிக் கொண்டனர் என்றும் கூறினார். புலியின் மரணத்துக்கு கவிதை அஞ்சலி செய்கிறார் முதல்வர் என்பதையும் சாடினார் அவர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கூலிப்படை மூலம் கொலை செய்விக்கும் கலாச்சாரம் ஆகியவற்றையும் சோ குறிப்பிட்டார். இந்த அழகில் கலைஞர் குடும்ப நெருக்கடி. டில்லி, சென்னை, மதுரை மற்றும் சங்கமம்.எல்லா குடும்பங்களுக்கும் அது பொருந்தும். நடுவில் ராமதாஸ் அவர்கள் படுத்தல் வேறு. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்க வேண்டியது, பிறகு பின்வாங்க வேண்டியது. எதிலும் தெளிவு இல்லை. நிறைய பணம் இருப்பதாக ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியது, பிறகு மைய அரசிடம் நிதி கேட்பது. இந்து மதத்தை மட்டம் தட்டுவது. ராமர் குடிகாரர். துளசி ராமாயணத்தின்படி சீதைக்கு ராமர் அண்ணா. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

பிறகு கிரிக்கெட் பற்றி கேட்க, பக்னருக்கு கண் அவுட்டாகி விட்டது எனத் தோன்றுகிறது என்றார் அவர். ஆனாலும் 8 தண்ட அவுட்டுகள் நிஜமாகவே ரிகார்ட் என்றார் அவர். அதே சமயம் ஹர்பஜன் சிங்கும் ரொம்ப அலம்பல் செய்தார் என்றார் சோ. அசிங்கமான காரியங்களில் ஆஸ்திரேலியரை காப்பி அடிப்பது நல்லதில்லை. ஏனெனில் அவர்கள் இதில் நிபுணர்கள் என்றார். டூரை கேன்சல் செய்ய பயமுறுத்துவதும் தவறு என்றார் சோ.

பிறகு மோடியை பற்றி பேச ஆரம்பித்தார். தேர்தலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஒருவரும் அவர் மேல் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற இயலவில்லை என்று அவர் சொன்ன போது கரகோஷம் எழுந்தது. இந்த அழகில் அவர் காங்கிரஸை போல எந்த மலிவு உத்தியிலும் இறங்கவில்லை. ஓசி டிவி எல்லாம் தருவதாகக் கூறவில்லை. இந்தியாவிலேயே முதன் முறையாக ஆட்சியிலிருக்கும் முதன் மந்திரிக்கு எதிராக ஒரு ஊழல் புகார் கூட கூறமுடியவில்லை என்பது பெருமைக்குரியது என்றார் அவர். தேர்தலில் 50சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டிக்கெட் தரவில்லை. பாஜக அதிருப்தியாளர்கள் வேறு அவருக்கு எதிராக இருந்தனர். ஆனால் அவர்கள் அன்னிக்கு rebels இன்னிக்கு regrets என்றார் அவர்.

குஜராத்தில் நடந்த பொருளாதார முன்னேற்றங்களை அவர் பட்டியலிட்டார். 500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன. 50 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு முதலீடு. ஒரு லட்சம் சிறு அணைகள். 100 விழுக்காடு கிராமப்புற மின்சாரம். அதுவும் நம்ம ஆர்க்காட் வீராசாமி மின்சாரம் போல எப்போதாவது வருவதில்லை, 24 மணி நேரமும் உண்டு. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்ற வெள்ளை யானை திட்டத்தை மாற்றினார் அவர். விவசாயிகளிடம் எடுத்து கூறினார், அதாவது இலவச மின்சாரம் எப்போதாவதுதான் ஒரு தினத்தில் வரும், ஆனால் கட்டண மின்சாரம் 24 மணி நேரமும் வரும் என்பதை விவசாயிகள் ஏற்று கொண்டனர். சிலர் மின்சாரம் திருடியபோது தாட்சண்யம் காட்டாது 1,20,000 இணைப்புகளை துண்டித்தார். இந்த தில் இதுவரை எந்த முதல்வருக்கு இருந்தது என்று சோ கேட்ட கேள்விக்கு கரகோஷமே இல்லை என்று பதில் அளித்தது.

இத்தருணத்தில் சில விஷயங்களில் சில வினைகள் எதிர்ப்பார்க்கப் படுகின்ரன என்பதையும் சோ நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அவை, பெண்ணுரிமை (அதுவும் மனைவிக்கு மட்டிமே, சகோதரிக்கோ அன்னைக்கோ இல்லை), தமிழ், சிறுபான்மை, விவசாயிகள்.

மீண்டும் மோடி பற்றி பேசுகையில் பூகம்ப நிவாரண வேலைகளை எல்லோருமே பாராட்டினர் என்பதையும் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட மனிதர் இங்கு இந்த மீட்டிங்குக்கு வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி விட்டு, ஒரு குண்டை போட்டார் சோ அவர்கள். சோனியா சொன்ன மோடி merchant of death என்பதை தானும் ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டு பார்வையாளர்களின் திகைப்பை அலட்சியம் செய்து மேலே கூறினார்:

Yes, I now invite this merchant of death:

- to corruption,
- to terrorism,
- to nepotism,
- to official lethargy,
- to bureaucratic negligence,
- to poverty and ignorance,
- to the doctrine of despair

to come and address this meeting.

இடி போன்ற முழக்கத்துடன் கைதட்டல். மோடி அவர்கள் அரங்கத்துக்கு வந்தார். ஜெயகோஷம் அரங்கத்திலும் வெளியிலும். மணி மாலை 08.20. சோ மற்றும் மோடி என்னும் இருமாமனிதர்கள் மேடையில். மோடி அவர்கள் பேச ஆரம்பித்தார்.

அது அடுத்த பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் - 1

இந்த ஆண்டு கூட்டத்துக்கு மோடி அவர்களும் வருவதாக இருந்ததால் சற்று தயக்கம் இருந்தது. ரொம்ப கெடுபிடி இருக்குமோ எனத் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் பயப்படுவது ஹிந்து நிருபரின் மகனுக்கு அழகா எனத் துணிந்து சென்றேன். ஒரே ஒரு வேலை செய்தேன். செல்பேசி எடுத்து செல்லவில்லை. மீட்டிங் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரங்கத்துக்கு சென்றபோது மாலை 04:40. பெரிய கியூ 4 அல்லது ஐந்து வளைவாக நின்றது. பத்து இடங்களில் பரிசோதனை செய்தனர். உள்ளே நுழையும்போது மணி மாலை 05:50. அரங்கம் நிரம்பியதால் வெளியே போன ஆண்டு போல லாபியில் இரண்டு ஸ்க்ரீன்கள் தயார் செய்திருந்தனர். ஒன்றின் முன்னால் உட்கார்ந்து கொண்டேன், தரையில். என் பக்கத்தில் இருப்பவர் என்னைப் பார்த்ததுமே கேட்டார் "நீங்கள் டோண்டு ராகவன்தானே" என்று. ஒரு நிமிடம் விழித்த நான் அடையாளம் கண்டு கொண்டேன். நம்ம வி.எஸ்.கே. சார்தான். அமெரிக்காவில் மருத்துவம் ப்ராக்டீஸ் செய்கிறார். ஒரு பிளாக்கர் மீட்டிங்கில் சந்தித்திருந்தேன் (இட்லிவடை ஸ்கூப் படங்கள் எடுத்த பதிவர் மீட்டிங்). நிரந்தரமாக சோவின் ஹேர்ஸ்டைலை மேற்கொண்டுவிட்டார்.

சற்றே தமிழ்மணம் விஷயங்கள் பேசினோம். பிறகு வேறு விஷயங்கள் பேசினோம். சரியாக மாலை 06:30 க்கு சோ ஸ்க்ரீனில் வந்து மோடி அவர்கள் வர சற்றே தாமதம் ஆவதால் ஐந்து நிமிடங்கள் கழித்து மீட்டிங் துவங்கும் என்றார். அதே போல ஐந்து நிமிடங்களில் மோடியும் வந்தார். அரங்கமெங்கும் கரகோஷம். வெளியிலும்தான். சோவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அரங்கில் முதல் வரிசையில் அமர்ந்தார். குருமூர்த்தி அவர்கள் அவர் பக்கத்தில் அமர்ந்து எனது வேலையை செய்ய தயாராக இருந்தார்.

மோடி அவர்களுடன் சில பா.ஜ.க. பிரமுகர்களும் வந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், லலிதா குமாரமங்கலம், திருநாவுக்கரசர் ஆகியோர்.

வழ்க்கம்போல ஒரு பீடிகையும் இன்றி சோ அவர்களின் கணீர் பேச்சு துவங்கியது. முதற்கண் மோடி அவர்களது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து மீட்டிங்கிற்கு நல்ல பொது மக்கள் தொடர்பு சேவை செய்த இயக்கங்களுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டார். அரங்கிலும் வெளியிலும் ஒரே சிரிப்பு. பிறகு போலீசுக்கும் நன்றி தெரிவித்தார். அவர்கள் இவரிடம் இன்விடேஷன் லிஸ்ட், பாஸ் கொடுக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எல்லாவற்றையும் கேட்டார்களாம். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்றதும் டென்ஷனாகி விட்டார்களாம். தாங்கள் எதைத்தான் செக் செய்வது என்று முதலில் குழப்பம் இருந்தாலும் சுதாரித்து கொண்டு தம் வேலையை திறம்படச் செய்ததற்காக அவர்களுக்கு சோ பாராட்டு தெரிவித்தார். பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் தான் புக் செய்த ஹாலை வாபஸ் வாங்காது செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். காமராஜ் அவர்கள் ஜனசங்குடன் 1971 தேர்தலில் கூட்டணி வைத்து கொண்டதையும் அவர் நினைவூட்டினார்.

இந்த ஹால் கொடுக்க மாட்டேன் என்று காங்கிரஸ் கூறினால் என்ன செய்வது என்று யோசிக்க இடம் வைக்காது எஸ்.வி.சேகர் அவர்கள் இன்று தான் நாரதகான சபாவில் நடத்த இருந்த தனது நாடகத்தை நிறுத்தி இவருக்கு அதை விட்டுத் தருவதாகக் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்தார் சோ அவர்கள். பிறகு பத்திரிகையில் தன்னுடன் பணிபுரிபவர்கள் மற்றும் வாசகர்களுக்கும் நன்றி கூறிவிட்டு வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவாசகர்களை சுருக்கமாகப் பேச அழைக்கும் முன்னால் தனது சகபாடிகளை அறிமுகம் செய்வித்தார். அவர்கள் உதயசங்கர், சிங்காரம், சத்யா, மதலை, பர்கத் அலி, சுவாமிநாதன், ரமேஷ், இதயா, ஷண்முகம், வசந்தன் பெருமாள், விஜயகோபால், ராமு, ஸ்ரீகாந்த், குமார், ராஜு, சுமதி, குருமூர்த்தி ஆகியோர்.

பிறகு வாசகர்கள் பேச்சு ஆரம்பித்தது.

அனந்தராமன் என்பவர் பேசினார். பாஜக, அஇஅதிமுக ஆகியவற்றின் கூட்டணி வாய்ப்புகள், கலைஞர் அவர்கள் மதுவிலக்கை நிறைவேற்றாததன் காரணங்கள், மோடி அவர்களின் வெற்றி ரகசியம், இடைதேர்தலும் கம்யூனிஸ்டுகளும் பற்றியும் சோ அவர்கள் கருத்து கூறுமாறு கேட்டு கொண்டார். சோ அவர்கள் தன் பதிலில் பாஜக அதிமுக கூட்டணி பற்றி தான் என்ன சொல்ல இருக்கிறது. மதியம்தான் மோடி அவர்கள் ஜயலலிதா வீட்டில் பகல் உணவு அருந்தினார், ஏதாவது நடக்கும் என நம்புவோம் எனக் கூறினார். கூட்டணி வாய்ப்புகள் உண்டு என தனது கருத்தையும் கூறினார். ஏனெனில் மூன்றாவது அணி காலணாவுக்கு பிரயோசனம் இல்லை என்றும் கூறினார். மதுவிலக்கு பற்றி பேசும்போது அது பிராக்டிகல் இல்லை என தான் கருதுவதையும் வெளிப்படுத்தினார். இடைதேர்தல் என்றால் கம்யூனிஸ்டுகளுக்கும் உதறல் ஆனால் காங்கிரசுக்கு அதிக உதறல் என்பதை புரிந்த்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் மிரட்டுவதாக சோ அவர்கள் கூறினார்.

பிறகு பேசியது பூபால் என்பவர். அவரது கேள்விகள், கலைஞர் கனிமொழி மத்திய காபினெட்டில் பதவி பெறுவாரா? மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது பற்றி கருத்து?
முக அவர்களுக்கு பிறகு திமுக பிளவுபட்டால் பாஜக நல்ல நிலைக்கு தன்னை கொண்டுவர இயலுமா? துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்குகளுக்கு ஏன் ஹிந்து, எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிமன் ஆசிரியர்களை அழைப்பதில்லை? இவற்றுக்கு சோ அவர்கள் அளித்த பதில்கள்: கனிமொழி கலைஞரா? ஒத்து கொள்வதிற்கில்லை. முதலமைச்சரின் மகள் என்றால் என்ன வேண்டுமானாலும் கூறிவிடுவதா, தான்கூட கவிதை எழுதியிருப்பதாகவும் தன்னை அதற்காக கலைஞர் என்று கூறிவிட முடியுமா என்று கேட்டபோது, அரங்கத்திலும் வெளியிலும் சிரிப்பு. அவர் காபினெட் மந்திரி ஆவாரா என்பதற்கு மன்மோஹன் சிங்காலேயே கூட பதிலளிக்க இயலாது. பாவம் அவர். யாராவது கனிமொழி மந்திரியாவார் என்றால் சரி என்று சொல்லிவிட்டு போகிறார். ரொம்ப நல்லவர் அவர் என்று கூறும்போது சிரிப்பலைகள். மோடிக்கு அமெரிக்க விசா தராததால் இழப்பு அமெரிக்காவுக்குத்தானே தவிர மோடிக்கு அல்ல என்று கூறியபோது ஒரே கரகோஷம். இந்த விசா மறுப்பு நம்மவராலேயே பொய் பிரசாரத்தால் வந்தது என்றும் தெளிவுபடுத்தினார். பாஜக தன்னை முன்னுறுத்தி கொள்ள இயலும், ஆனால் அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். அதை இப்போதிலிருந்தே செய்தல் நலம். மற்ற பத்திரிகையாளர்களை அழைப்பது பற்றிய கேள்விக்கு தான் ஏற்கனவே அக்பர், அருண் ஷூரி ஆகியவர்களை அழைத்திருப்பதை நினைவுபடுத்தினார். உள்ளூர் பத்திரிகை ஆசிரியர்களுக்கு தர்மசங்கடமான நிலைதர வேண்டாம் என்பதாலேயே அவர்களை அழைப்பதிலை என்றும் கூறினார்.

பிறகு தசரதன் என்னும் வாசகர் பேசினார். அவரது கேள்விகள்: கூட்டணிக்குள் பாமகவின் செயல்பாடு, மோடி அரசை போல பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் சந்திரபாபு நாயுசடு அரசு ஏன் வெற்றி பெறவில்லை, நந்திக்ராமால் ஏதேனும் விளைவுகள் உண்டா, ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலை ஆகியவற்றை பற்றி கேட்டார். சோ அவர்களது பதில் சுருக்கமாக. ஜெயலலிதா அவர்கள் எடுத்து கொள்ளும் விஷயங்கள் வெறுமனே வார்டுகள் பிரச்சினைகளாக உள்ளன. மயிலை சித்திரக்குளம் பகுதி போன்ற இடங்களை பற்றி மட்டும் பேசுகிறார். அதனால் சித்திரகுளம் ஓட்டுகள் கிடைக்கலாம் அவ்வளவே. ஆனால் ராமதாசோ எல்லாவற்றையும் பற்றி பேசுகிறார். ஆட்சியாளர்கள் முன்னே செல்லவும் முடியாது பின்னே செல்லும் வழியின்றியும் செயல்படுகிறார். இதுவும் ஓவரே. ஜெயலலிதா இதை நகல் செய்யும்படி ஒன்றும் இல்லை. ராமதாஸ் அவர்களது செயல்பாடு கூட இருந்து கழுத்தை அறுத்தலுக்கு ஒப்பானது. இதில் போற்றும்படி ஒன்றும் இல்லை. நாயுடு வெற்றியடையாததற்கு காரணம் அவரது அபிவிருத்தி திட்டங்கள் எல்லோரையும் போய் சேரவில்லை, ஆனால் மோடி அவர்களோ எல்லோருக்கும் முன்னேற்ற திட்டங்கள் தந்தார். இலங்கைக்கான தீர்வு சமஷ்டி முறை அரசே. தான் 1971-லேயே அங்கு ஒரு மீட்டிங்கில் இதைக்கூறி தனி ஈழம் வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது கோபப்பட்ட ஒருவர் (அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தவர்) சில ஆண்டுகள் கழித்து அவரிடம் வந்து தானும் இப்போது அதை உணருவதாகவும் கூறியதை சோ அவர்கள் எடுத்துரைத்தார். யாழ் நகரை சுடுகாட்டாக ஆக்கிவிட்டனர். ச்ர்லங்கா அரசு சரியாகச் செயல்படவில்லை. ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்கும், ஆனால் அப்படி நடந்தால் தங்களது முக்கியத்துவம் போய் விடும் என்று எண்ணி புலிகள் எல்லாவற்றையும் கெடுத்தனர் என்றும் சோ கூறினார்.

இப்போது பேச வந்த வாசகர் சுரேஷ்மபாபு. அவர் தொட்ட விஷயங்கள் நெல்லையில் நடந்த இளைஞரணி திருப்பு முனையா, தேவகௌடா விஷயம், மன்மோஹன் சிங் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிடுதல் ஆகியவை. சோ அவர்கள் லாலு அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு மன்மோஹன் சிங்கை தாழ்த்தக்கூடாது என்றார் (அரங்கத்தில் சிரிப்பு). திறமை வாய்ந்த மன்மோஹன் சிங் இப்போது வெத்துவேட்டாக ஆக்கப்பட்டு விட்டார். அது அவர் தவறல்ல. தேவகௌடா பயங்கர கேலிக்கூத்து. ஆனால் அதே சமயம் பாஜகவும் சரியாக செயல்படவில்லை. மாயாவதியிடம் ஏமாந்ததுமே சுதாரித்திருக்க வேண்டும். அல்லது முதலில் கௌடா அழுகுனி ஆட்டம் ஆடியபோதாவது சுதாரித்திருக்க வேண்டும். அவர்களது நல்ல நேரம் ஆட்சி அமைக்க இயலவில்லை, இல்லாவிடில் கௌடாவும் குமாரசாமியும் இன்னும் நாற அடித்திருப்பார்கள். பாஜகவுக்கு ஆதரவு கர்நாடகாவில் அதிகரித்துள்ளது. அதனாலேயே தேர்தல் கமிஷன் இப்போது தேர்தலை கொண்டு வராது என அவர் அபிப்பிராயப்பட்டார். தேர்தல் கமிஷன் தன்னிச்சையான அமைப்பு என்று கூறும்போது அரங்கத்தில் சிரிப்பு, கைதட்டல். நெல்லையில் என்ன திருப்புமுனை வேண்டியிருக்கிறது. எல்லாமே வட்டமாகத்தான் செயல்படுகிறது. இதில் ஏது திருப்புமுனை என்று தன் கையால் காற்றில் ஒரு சுழி செய்தார்.

வாசகர் எழிலரசு அடுத்து வந்தார். அவர் தொட்ட விஷயங்கள்: விஜயகாந்த் வாய்ப்பு, ஜெயலலிதாவுடன் கூட்டணி வாய்ப்பு, இளைஞர்களுக்காக சோ அவர்கள் ஒரு ஊக்கத்தொடர் எழுத வேண்டும். சோ அவர்களது பதில்கள்: விஜயகாந்த் தனியாக வெற்றி பெற இயலாது. பல இடங்களில் மூன்றாவதாக வரலாம், பல இடங்களில் டிபாசிட் போகலாம். திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டி பறிக்கலாம். அதிமுக, பாஜக மற்றும் விஜயகாந்த் ஒரே கூட்டணியில் வந்தால் நல்ல வெற்றி வாய்ப்பு. ஆனால் அது உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி. விஜயகாந்த தனக்கு இருக்கும் ஆதரவை அதிகமாக மதிப்பிடுகிறார். தனக்கு வரும் கூட்டங்களைப் பார்த்து விஜயகாந்த் மலைக்கக் கூடாது என்றார். தனக்கும் 1971-ல் இதற்கு மேல் கூட்டம் வந்தது என்றும் ஆனால் பலன் ஏதும் இல்லை என்றும் கூறினார். நெல்லை ஜபமணிக்காக தான் பேசிய மீட்டிங்குகளில் கூட்டம் அதிகம், ஆனால் ஜபமணி தோற்றார் என்றும் கூறினார். ஊக்கத் தொடர் பற்றி அவர் சொன்னது என் காதில் விழவில்லை.

இப்போது பேசியது சுவாமிநாதன் என்னும் வாசகர். அவர் கேட்ட கேள்விகள் வாஜ்பேயிக்கு பாரதரத்னா அளிப்பது, வரும் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் வாய்ப்பு ஆகியவை பற்றியது. பாரதரத்னா கோரிக்கை நியாயமானது, ஆனால் கேட்ட முறை சரியில்லை. இப்போது எல்லோருக்குமே கேட்க ஆரம்பித்து விட்டனர். விட்டால் தேவகௌடாவுக்கும் கேட்பார்கள் என்றபோது ஒரே சிரிப்பு, கைதட்டல். ஆனால் இம்மாதிரி விருதுகளுக்கு பொருள் ஒன்றும் இல்லை. தானும் விருது அளிக்கும் கமிட்டியில் உறுப்பினராக இருந்ததாகவும், விசாரித்தபோது இதனால் பிரயோசனம் ஏதும் இல்லையென்றும், ரயில் ரிசர்வேஷனில் கூட முன்னுரிமை கிடைக்காதென்றும் கூறினார். குடியரசுத் தலைவர் கையால் வாங்கிய பெருமை வேண்டுமானால் கிடைக்கும். போயும் போயும் வாஜ்பேயி அவர்கள் பிரதீபா பாட்டில் கையில் வாங்க வேண்டுமா என்று கேட்டு நிறுத்தியதும் மீண்டும் அவுட் சிரிப்பு எழுந்தது. ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, எங்கேயிருந்துதான் இந்த அம்மையாரை தேடி பிடித்தார்களோ என்று அங்கலாய்த்தார் சோ. பேசாமல் கான்ஷிராமுக்கு பாரத்ரத்னா கொடுக்கலாம், அவர் உயிருடன் இல்லாததால் அவருக்கு தனிப்பட்ட முறையில் கேவலம் வந்துவிடப்போவதில்லை. பிறகு பாஜகாவுக்கு ஆதரவு மாநிலங்களை பட்டியலிட்டார் அவர். முக்கியமாக பல மாநிலங்களில் பாஜக நல்ல கூட்டணிகளை தேட வேண்டும் என்றும் கூறினார். நரேந்திர மோடி அவர்களுக்கு இசுலாமியரும் வோட்டளித்தனர். சிறுபான்மையினர் சாதாரணமாக வெற்றி பெறும் கட்சிக்கே ஓட்டளிப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். இதை மனதில் பாஜக வைக்க வேண்டும். பார்ப்பனர்களை பற்றிப் பேசும்போது கலைஞர் அவர்கள் சிறுபான்மையினர் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் அதுவே இசுலாமியர்கள் விஷயத்தில் பிளேட்டையே மாற்றுகிறார் என்றதும் அரங்கத்தில் சிரிப்பு. அது அவரது வழமையான இரட்டை நிலை என்று முத்தாய்ப்பாஜகக் கூறியதும் கைதட்டல்.

அடுத்து பேசியது ஜி. நடராஜன் என்னும் வாசகர். அவர் கேட்ட கேள்விகள் இந்தியா சீனா உறவு, நேப்பாள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தொட்டன. சோ அதற்கு கூறியது: சீனா எப்போதுமே நம்பத்தகுந்ததல்ல. நேப்பாளிலோ மாவோயிஸ்டுகள் என்ன செய்தாலும் அதற்கு எதிராகப் போவதே நலம். இங்கு பூனை, எலி, வேடன் கதையைக் கூறினார். சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தில் அது வருகிறது.

கடைசியாகப் பேசிய வாசகர் கோவிந்தராஜுலு. அவர் கேட்டது இலவச டிவி பற்றியது. அதில் தவறே இல்லை என்றும் டிவி நல்ல விலைக்கு விற்று பணம் பண்ணலாம் என்று சோ சிரிக்காமல் கூற அரங்கில் ஒரே சிரிப்பு. இரண்டு ஏக்கர் நிலம் என்பது கையளவு நிலம் ஆகிவிட்ட நிலையில் அரசு டிவியைத்தான் நம்ப வேண்டியுள்ளது.

பிறகு சோ அவர்கள் பேசினார்.

அது அடுத்த பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/13/2008

- 1 + 1 = 0

தலைப்பை அப்புறம் நியாயப்படுத்துகிறேன்.

பஞ்சதந்திரம் படத்தில் ஜயராமின் பையனுக்கு இதயத்தில் ஓட்டை. பையனோ நல்ல தீனிப்பிரியன். ரகசியமாக இட்டலிகளாக உள்ளே தள்ளுவான். பிறகு இவன் நிரம்ப சாப்பிட்டதால் அந்த ஓட்டை தானே அடைந்து விட்டதாக பார்வையாளர்கள் காதில் பத்து முழம் பூ சுற்றுவார்கள்.

இன்னொரு படத்தில் - பெயர் மறந்து விட்டது - ராமராஜன், வினுச்சக்கரவர்த்தி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்தது. சர்க்கரை வியாதியால் இறந்து கொண்டிருக்கும் ஒரு பணக்காரரின் 20 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன ஊமைப் பேரனாக கவுண்டமணி செந்திலின் தூண்டுதலால் ஆக்ட் கொடுப்பார். கிழவருக்கு நிறைய மிட்டாய் கொடுப்பார் செந்தில், அப்படியாவது சீக்கிரம் கிழவர் உயிர் போகட்டும் என்று. ஆனால் அந்தோ அடுத்த நாளைக்கு வந்து அவரைப் பார்த்த மருத்துவர் அவருக்கு விஷமெனக் கருதப்பட்ட சர்க்கரை மிட்டாய் அவர் உடலில் ஏற்கனவே இருந்த சர்க்கரை விஷத்தை முறியடித்தது என்று கூறி பார்வையாளர்கள் காதில் இன்னும் சில முழங்கள் பூ சுற்றுவார். ஆகவே கிழவர் பூரண குணம் அடைய என்று கதை போகும். இங்கு நான் குறிப்பிட நினைப்பது கிழவர் குணமடைந்ததே. கவுண்டமணி அப்புறம் உதை வாங்குவஹ்டெல்லாம் இங்கே தேவையில்லாத விஷயம்.

இப்போது எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன். எனக்கு 26 வயதில் கிட்டப்பார்வைக்கான கண்ணாடி போட வேண்டியிருந்தது. மைனஸ் 1 என்று கூறப்பட்டது. கண்ணாடியுடன் காலம் கழித்தேன். பிறகு 42 வயதில் ஏதாவது படிக்க வேண்டுமானால் கண்ணாடியை நீக்கி படிக்க வேண்டியிருந்தது. என்னவென்று கேட்டால் வெள்ளெழுத்து என்று கூறினார்கள். அதற்கும் கண்ணாடிக்கு பரிசோதனை செய்து கொண்டு பைஃபோகல் கண்ணாடி போட்டேன். ப்ளஸ் ஒன்று. ஆனால் படிக்கும் போது அது இல்லாமலும் படிக்க முடிந்தது. இப்போது அந்த கண்ணாடி கூட தொலைந்து விட்டது. பிறகு வெறுமனே கிட்டப்பார்வைக்கு மட்டும் கண்ணாடி போட்டேன். இப்போது அதுவும் இல்லை.

இது பற்றி எனது நண்பரிடம் கேட்டேன். அவர் கண்மருத்துவர். அவர் ஒன்று கூறினார். அதாவது எனது கிட்டப்பார்வை கோளாறும் தூரப்பார்வை கோளாறும் ஒன்றையொன்று கேன்சல் செய்து விட்டன என்று. எப்பவாவது அபூர்வமாக இம்மாதிரி நடப்பது உண்டு என்றும் கூறினார் அவர். யாராவது இதை கன்ஃபர்ம் செய்ய இயலுமா?

அல்லது - 1 + 1 = 0 என்பது இங்கும் பொருந்துமா?

என்ன தலைப்பை நியாயப்படுத்தி விட்டேனா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/12/2008

முரட்டு வைத்தியம் - 5

சமீபத்தில் 1985- மே மாதத்தில் நடந்த என் மச்சினி கல்யாணம் வீடியோ கவரேஜ் செய்யப்பட்டது. எங்கள் குடும்பத்தில் முதல்முறையாக வீடியோ கவரேஜ். வீடியோ வந்ததும் எல்லோரும் போட்டு பார்த்தனர், என்னைத் தவிர. நான் அச்சமயம் வீட்டில் இல்லை. பிறகு டில்லி திரும்ப சென்று விட்டேன். மறுபடியும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்பவும் வந்தேன். அப்போதுதான் அந்த வீடியோ பார்த்தேன். அதில் மகா கோரமான குண்டன் ஒருவனைக் கண்டு யாராக இருக்கும் என திகைப்புடன் பார்க்க, நீதான் அது என்று என் தங்கை கூறினாள். பயங்கர ஷாக் எனக்கு. 39 வயதில் இவ்வளவு பருமனா என்ற திகைப்பு. அடுத்த ஆண்டு 40 முடியப் போகிறது. எல்லா சுகவீனங்களும் வருமே என்ற பயம் வேறு.

டில்லி திரும்பியதும் மருத்துவரை பார்த்ததில் அவரும் எனது பயத்தை உறுதி செய்தார். தினசரி வேகமாக நடக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறே நடக்க ஆரம்பித்தேன். தினசரி 90 நிமிடங்கள், காலையில் 45 நிம்டங்கள் மாலையில் 45 நிமிடங்கள். குளிர்க்காலம் ஆதலால் டில்லியில் நண்பகலில் கூட நடக்கலாம். ஆனால் மெதுவாக ஊர்ந்த நடை சரிப்படாது என்று மருத்துவர் கூறியதை முதலிலேயே உணர்ந்தேன். எங்கள் ஐ.டி.பி.எல். வளாகத்தில் இரண்டு முறை சுற்றினால் 3 கிலோ மீட்டர் போல வரும். நடை என்னமோ தலைதெறிக்கும் வேகத்தில்தான்.

பிறகு எங்கு சென்றாலும் நடை என்று மாறிற்று. காலையில் நடை. பிறகு வீட்டிலிருந்து எங்கள் கம்பெனி பஸ் வரும் இடம் மூன்றரை கிலோ மீட்டர். அதற்கு நடை. மாலை அதே இடத்திலிருந்து வீட்டுக்கு நடை. மதியம் ஐ.டி.பி.எல்.-ல் நடை என்றெல்லாம் அமர்க்களம்தான். இன்னொரு விஷயமும் செய்தேன். அதுதான் டிபனை அடியோடு நிறுத்தியது. காலையில் ஒரு கப் காப்பி, மதியம் வீட்டிலிருந்து எடுத்து சென்ற 4 இட்லிகள்/ஒரு கப் தயிர் சாதம், ஐ.டி.பி.எல். கேண்ட்டீனில் காலை, மாலை இரண்டு கப் டீ, இரவு உணவு என்று வழக்கம் ஆயிற்று. ஆக, உடற் பயிற்சி கூடவே சாப்பாடு குறைப்பு என இருமுனைத் தாக்குதல். முதலில் பெல்ட் லூஸ் ஆனதில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. பிறகு ஒரே தூரத்தை கடக்க எடுத்து கொண்ட நேரம் குறைய ஆரம்பித்தது எனது வேகம் அதிகரித்ததைக் காட்டியது. ஆனால் தினமும் என்னைப் பார்த்து வந்த மற்றவர்கள் கண்ணுக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அக்டோபரில் ஆரம்பித்த செயல்பாட்டின் பலன் அடுத்த மார்ச்சில்தான் மற்றவர்களுக்கு புலப்பட்டது. அன்றைய தினம் ஞாபகத்தில் உள்ளது. திடீரென என் சக அதிகாரி Bargava என் தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார். மற்றவர்களும்தான். பகலில் ஐ.டி.பி.எல். வளாகத்தில் நான் வெறிபிடித்த வேகத்தில் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். எனது எடை முதலில் 90கிலோகிராம். அது இப்போது 74 ஆயிற்று. முதலில் ஒரு மணி நேரத்தில் ஆறு கிலோமீட்டர் நடக்க முடிந்தது. அதுவே மணிக்கு எட்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்தது.

1986 ஏப்ரல் 4-ஆம் தேதி எனக்கு பிறந்த நாள். 40 வயது பூர்த்தி ஆயிற்று. மருத்துவரை பார்த்ததில் அவருக்கும் மகிழ்ச்சி. எனது வாழ்நாளை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அதிகரித்துள்ளேன் என மதிப்பிட்டார். ரத்த அழுத்தம் ஒரு இளைஞனது ரத்த அழுத்தம் போல உள்ளது என்றும் கூறினார். அந்த மே மாதம் சென்னை சென்ற போது எல்லோருக்கும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதே மாதம் எனது மைத்துனன் திருமண வீடியோவில் என்னை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு திருமணங்களும் சரியாக ஒரு ஆண்டு இடைவெளியில். எனது முரட்டு வைத்தியம் ஆரம்பித்தது அக்டோபர் 1985-ல்.

எனது முரட்டு வைத்தியம் மூன்றாம் பதிவில் குறிப்பிட்ட சைக்கிள் ஓட்டியதும் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகாது.

இத்தருணத்தில் இன்னும் சில விஷயங்களைக் கூறவேண்டும. டிசம்பர் 1985-ல் டைம் பத்திரிகையில் உடல் பருமனை குறைப்பது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் என்னென்ன செய்ய வேண்டும் என்று 1, 2 3 என்று எண்ணிட்டு எழுதியிருந்தார்கள். அப்படியே நான் என்னையறியாமலேயே செய்து வந்திருக்கிறேன். முதலில் நான் கன்சல்ட் செய்த மருத்துவர் இதில் ஒரு சிறிய தவறு செய்தார். அதாவது வேகமாக நடக்க வேண்டும், அதுவும் மணிக்கு ஐந்து மைல் என்று (அதாவது மணிக்கு 8 கிலோமீட்டர்). இது பருமனாக இருப்பவர்களுக்கு சாத்தியமே இல்லை. ஆகவே பலர் அதைரியமடைந்து முயற்சியை ஆரம்பத்திலேயே கைவிடுகின்றனர். நான் எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன். சம்பந்தப்பட்டவடர் மூச்சு திணறாமல் எவ்வளவு வேகமாக விடாது செல்ல முடியுமோ அந்த வேகத்தில் நடந்தால் போதும். பிறகு உடல் எடை குறையக் குறைய வேகம் தானாகவே அதிகரிக்கும். மருத்துவர் சொன்ன வேகத்தை அடைய நான் 16 கிலோகிராமுக்கு மேல எடை குறைக்க வேண்டியிருந்தது.

இதில் முக்கிய விஷயம் எடை மற்றும் வேகத்தை பெருக்கி வரும் அளவுதான். இதை momentum = mass x velocity என்று குறிப்பிடுவார்கள். இதை ஏனோ யாரும் வெளிப்படையாக எழுதுவதில்லை. உதாரணத்துக்கு நான் மேலே குறிப்பிட்ட டைம் பத்திரிகை கட்டுரையில் ஒரு மணி நேரம் நடந்தால் 300 கலோரிகள் செலவழியும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவு எந்த எடைக்கு பொருந்தும் என்று எங்குமே கூறவில்லை. 90 கிலோ எடையள்ள ஒருவனும் 74 கிலோ எடையுடைய மற்றவனும் ஒரு மணி நேரம் ஒரே வேகத்தில் நடந்தால் ஒரே அளவு கலோரிகள் செலவழியாது. அதற்கு குறைந்த எடையுடையவன் அதிக வேகத்தில் நடக்க வேண்டும். ஆகவே நான் கூறுவது அதிகப் பொருத்தம் உடையது. அவரவர் தங்கள் அதிகப் பட்ச வேகத்தில் மூச்சு திணறாமல் நடந்தாலே உடல் மீதி விஷயங்களைப் பார்த்து கொள்ளும்.

இந்த குறைந்த எடையை அடுத்த 6 ஆண்டுகளுக்கு தக்க வைத்து கொள்ள முடிந்தது. பிறகு எனது செயல்பாட்டில் சுணக்கம் வர, எடையும் மெதுவாகக் கூட ஆரம்பித்தது. அதுவும் 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றதும் சைக்கிள் விடுவதும் நின்றது. என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தும் எனக்கு் அதைச் செய்யும மனவுறுதி இல்லாது போயிற்று. இப்போதுதான் போன அக்டோபரிலிருந்து மறுபடி இந்த முரட்டு வைத்தியத்தை ஆரம்பித்துள்ளேன். முதலில் ஒரு கிலோமீட்டர் கடக்க 11 நிமிடங்கள் ஆயின. இன்று 8 நிமிடங்கள் 50 வினாடிகள். காலை 50 நிமிடங்கள் மாலை 50 நிமிடங்கள். இன்னும் எடை பார்க்கவில்லை. கால்சட்டை லூஸ் ஆக ஆரம்பித்துள்ளது.

சென்னை வந்ததும் இதை பல முறை ஆரம்பித்து பாதியில் விட்ட நான் இப்போது என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறேன். சாதாரணமாக சில தினங்கள் வரிசையாக மழை பெய்து எனது உறுதியைக் குலைக்கும். இம்முறை அதையும் மீறியுள்ளேன். கையில் கடிகாரம் இல்லாது, செல்பேசி எடுத்து கொள்ளாது, பணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துகொண்டு கொட்டும் மழையில் பலமுறை சென்று விட்டேன். உடலுக்கு ஒரு கெடுதலும் வரவில்லை. ஆக, மழையால் வேலை கெட்டது என்று இனிமேல் இருக்காது. இதில் என்ன வேடிக்கை என்றால் போடா ஜாட்டான் என மழையை ஒதுக்கியது மேலும் உற்சாகத்தையே அளிக்கிறது. நம் கட்டுப்பாட்டிலேயே எல்லா விஷயங்களும் உள்ளன என்ற எண்ணமே மகிழ்ச்சியை வரவழைக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன் நான் செய்த இந்த முரட்டு வைத்தியத்தின் பயன் எனது சோம்பேறித்தனத்தால் மறைந்ததால் அதுபற்றி இதுவரை பதிவிடவில்லை. இப்பதிவைக் கூட இத்தருணத்தில் போடுவதா வேண்டாமா என பலமுறை யோசித்தேன். சரி போட்டுவிடுவோம் என்னதான் நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்ற எண்ணம். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்னும் நிலையில் இந்த நிர்ப்பந்தமும் துணை செய்யும் என நம்புகிறேன்.

மீதி தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/11/2008

சொகுசு என்று கருதப்பட்டவை இப்போது அத்தியாவசியத் தேவைகளாயின

நண்பர் ஜயகமல் அனுப்பிய இந்த மின்னஞ்சல் எனது இப்பதிவுக்கு அடிப்படையாயிற்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சில விளம்பரங்கள் அடிக்கடி வரும். எல்லாவற்றிலும் ஒரே கேரக்டர்தான் முக்கிய ரோல் செய்வார். அவர் ஒரு பிசினஸ் பேர்வழி. ஒரு டெம்போவில் அவர் தன் ஆட்களுடன் போய்க் கொண்டே இருப்பார். செல்போனில் வாடிக்கையாளர்கள் கேட்க கேட்க தனது ஒவ்வொரு ஆளாக டிராப் செய்து கொண்டு போவார். நிஜமாகவே ட்ராப்தான் அது. ஒவ்வொரு ஆளும் விதவிதமாக குட்டிக்கரணம் அடித்து வெளியே குதிப்பான்.

அதே மனிதர் இன்னொரு முறை தன் வண்டியில் இருந்து செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது வாடிக்கையாளர் அடுத்த நாள் தன் வீட்டில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யாவிட்டால் காரியமே கெட்டுவிடும் என்று கூற, அப்போது போய்க் கொண்டிருந்த ஒரு தண்ணீர் லாரியை (பட்டு வாட்டர் வொர்க்ஸ்) "மே ஐ ஸ்பீக் டு பட்டு" என்று செல்பேசியில் கேட்டு கொண்டே மடக்குவார். தண்ணீர் லாரி டிரைவரிடம் போனை கொடுத்து அவர் முதலாளியிடம் இருந்து ஆர்டர் பெற்று தந்து தண்ணீரை தனது வாடிக்கையாளர் வீட்டுக்கு திருப்புவார். என்ன செல்பேசி நிறுவனம் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் மிகவும் ரசித்த விளம்பரங்கள். அதே மனிதர் இன்னொரு விளம்பரத்தில் சலூனில் இருந்தபடி செல்பேசியை உபயோகித்து சரக்கை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றுவார்.
இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆயிற்று?
அதில்தான் உலகமயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காலத்தில் டெலிஃபோன் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்ற எண்ணம் இருந்தது. 1997-ல் வி.டி.ஐ.எஸ். வந்த போது கூட டெலிஃபோன் வைத்திருப்பவர்கள் வருமான வரி ரிடர்ன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சட்டமே போட்டார். ஆனால் இப்போது? ரொம்ப பேசினால் பி.எஸ்.என்.எல். டெலிபோனே வேண்டாம் எனத் திருப்பித்தந்து விடுகிறார்கள்.
இந்த செல்பேசியைப் பற்றி ஜயககமல் அவர்கள் அனுப்பிய இந்த மின்னஞ்சல் பேசுகிறது. அதன் சுட்டி இதோ. எதற்கும் இருக்கட்டும் என்று கட்டுரையையும் இங்கே வழ்க்கம்போல முழுசாக நகலெடுத்து ஒட்டுகிறேன்.

Kanika Datta: The mass penetration of `luxury` goods
New Delhi January 10, 2008
The housing colony in which I live thoughtfully provides its residents with a thick yellow pages directory every month free of cost. This is a hugely useful B2C (business to customer) service. The publication make its revenues by getting local businesses — everything from local restaurants to contractors, beauty parlours, flower delivery services and water tankers — to advertise at extremely nominal rates.

A cursory look at the inserts for household repair services is interesting. The bulk of the advertisements came from score of single-proprietor businesses that rejoice in such names as "Pintoo Plumber", "Mohan Glass Works", "Jolly Electrician," "Husain Painter" and so on. Their insertions are basic: the name followed by a mobile number in large boxed type.

Pintoo plumber, who was summoned for a tank-cleaning operation, turned out to be a young man from Orissa who lived in one of nearby villages-turned-semi-cities that dot Delhi. He arrived on a recently acquired bicycle and was armed with the most rudimentary of tools. His most high-tech equipment was a battered mobile phone.

Yet this one phone had transformed his life. Before he set up his own business — such as it is — he worked for a malik who routinely cheated him and kept him in eternal penury. Now, thanks to capital investment in a mobile phone and a small expense on a pre-paid card and a yellow-page ad, this former agricultural labourer was able to become an entrepreneur in his own right.

Despite being mostly unlettered, this self-taught plumber had enough business sense to understand that there was no need to add an address or advertising hype to his yellow-page insertion. That would, he explained, reduce the print size and, therefore, his chances of rising above the clutter — the same challenge that gives marketing managers of consumer goods companies sleepless nights.

Like him, there are thousands of stories of how the telecom revolution, in which competition has driven down tariffs, has helped transform the lives of ordinary people in big and small ways. But this is not the sole point of this piece. The wider point is that telecom has demonstrated — despite the constant and fiercely competitive squabbles among the giant telecom operators — how even a small improvement in the enabling environment can make a difference to the livelihoods of ordinary people.

The combination of an improving and liberalised business environment and better purchasing power is amply demonstrated in the Auto Expo that opened in the capital yesterday. This year's event has been rescued from the somnolence that had descended on this annual event chiefly because of the launch of two small cars from two Indian auto giants — Tata Motors and Bajaj Auto.

Much has been said about Tata Motors' incredibly priced Rs 1 lakh small car. The point to note, however, is that the car is targeted not just at car-buyers but at helping two-wheeler owners drive up the value chain.

This is also patently the focus of Bajaj Auto's joint offering with Renault and Nissan. Rajiv Bajaj, chief of the country's second-largest two-wheeler maker, was careful to stress the mileage his car would promise, a key concern of any owner of a low-priced car.

Contrast this with the days when the only small car available was the Maruti 800, that too, produced by a cosseted government-owned company and attracting a long waiting list for those who declined the heavy charms of Hindustan Motors' Ambassador or Premier Automobiles' Padmini.

Contrast this, too, with auto-makers' moves when the industry was partially liberalised, first, in the eighties and later and more permanently in the nineties.

In those days, the initial launches were all so-called "luxury cars" aimed at the upper middle class and the rich — the doomed Standard 2000, built on a defunct Rover design, in the eighties and the equally ill-fated Daewoo Cielo.

Until the Matiz and Santro hit the scene and provided Maruti's small-car monopoly with some competition, this was largely the market on which car makers focused.

Today, the fact that many more auto companies — Ford, General Motors and Honda among them — are also thinking small now is a reflection of a new emerging purchasing power as more and more people reap the benefits of economic growth and are able to afford middle class lifestyles.

The remarkable point is that all this has been achieved in one of the world's worst enabling environments for business. Imagine how small, itinerant businessmen would grow if their access to power, water and petty approvals to set up organised businesses improved. And imagine what this would do to purchasing power in the world's second-most populous country.

ஆக ஒன்று புரிகிறது. உலகமயமாக்கலை பற்றி யார் என்ன கூறினாலும் பலருக்கு அது நம்ப முடியாத அளவில் முன்னேற்றம் தந்துள்ளது என்பது நிஜம். அதனால்தான் நானும் சென்னைக்கு வரமுடிந்தது என்பது பற்றி எனது இப்பதிவிலேயே எழுதியுள்ளேன். பொருளாதாரத்தை கட்டுப்பாடுகளிலிருந்து நீக்கி அனைவருக்கும் முன்னேற வாய்ப்பளித்தால் எல்லோருமே நலமாக இருப்பார்கள் என்று மாமனிதர் ராஜாஜி கூறிய, இவ்வளவு எளிதாகப் புரியக் கூடிய உண்மையை நேருவும் அவர் மகளும் பார்க்க மறுத்ததால் பல பத்தாண்டுகள் வீணாய் போயின. நல்ல வேளையாவது இப்போதாவது புத்தி வந்ததே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

1/09/2008

ஒரு முக்கியமான பொதுநல வழக்கு

நண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி.
உச்ச நீதி மன்றம் சோஷலிசம் பற்றி கூறிய சில விஷயங்கள் இக்கட்டுரையில் உள்ளன. பின்னாளில் அந்த சுட்டி செயல்படாது போகக்கூடும் என்பதால் கட்டுரையை அப்படியே இங்கு நகலிட்டு ஒட்டுகிறேன்.

"Look at socialism in broader perspective: Supreme Court
9 Jan, 2008, 0306 hrs IST, TNN

NEW DELHI: The Supreme Court on Tuesday refused to entertain a suggestion in a PIL which had sought deletion of the word "socialist" from the Constitution. The word "socialist" was added through the 42nd Amendment to the Constitution.

A bench comprising Chief Justice K G Balakrishnan, Justice R V Raveendran and Justice J M Panchal said, "Why do you (petitioner) take socialism in a narrow sense defined by (the) Communists. In broader sense, it means welfare measures for the citizens. It is a facet of democracy."

The court was hearing a PIL seeking direction to delete the word "socialist" from the Preamble to the Constitution on the ground that it was originally not there, and addition of the word amounted to re-writing of it.

"It hasn't got any definite meaning. It gets different meaning in different times," the bench observed.However, it agreed to hear the PIL which also sought to strike down the provision of the Representation of People Act (RPA) requiring a political party to adhere to socialism for being recognised.

The court will look into the issue of derecognising political parties which have wrongly shown allegiance to socialism in their manifesto despite their contrary objectives.The court, after hearing the contention of the petitioner, issued notices to the Centre and the Election Commission.

"It is contrary to the Constitution and to its democratic foundations that political parties be called upon to swear allegiance only to a particular mindset or ideology," said senior advocate Fali S Nariman, appearing for the petitioner, Kolkatta-based NGO Good Governance India Foundation.

Mr Nariman said, "Introducing the word 'socialist' in the Preamble breaches the basic structure and it is wholly inconsistent." "The attempt to deliberately tunnel the collective view in one ideological direction is also a grave breach of the liberty provisions of the Constitution," Mr Nariman said, seeking direction to strike down Sec 29A of the Representation of People Act".

இந்த் தருணத்தில் சோஷலிசம் என்ற வார்த்தையை அரசியல் நிர்ணயச் சட்டத்தின் முன்வாசகத்தில் 42-ஆம் சட்டத் திருத்தம் மூலம் இந்திரா திணித்த துரோக சிந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். விட்டிருந்தால் அந்த அன்னை மாதா தாயார் இந்தியாவை குட்டிச்சுவராக்கியிருப்பார். நல்ல வேளையாக 1977 தேர்தலை தான் வெற்றி பெறவோம் என்ற குருட்டு நம்பிக்கையில் நடத்தி, பிறகு மூலையில் உட்கார வைக்கப்பட்டாரோ நாடு பிழைத்ததோ. பிறகு 1979 இறுதியில் மீண்டும் பதவிக்கு வந்தாலும் அவரது பழைய விஷமச் செய்கைகள் நடத்த முடியாத அளவுக்கு மொரார்ஜி அவர்களது அரசு 44-ஆம் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி காப்பாற்றியது. நாட்டை மேலே குட்டிச்சுவராக்க இந்திராவுக்கு சந்தர்பம் அமையாமல் போனது நாட்டின் அதிர்ஷ்டமே.

மீண்டும் இந்த சோஷலிசம் பற்றிய விஷயத்துக்கு வருகிறேன். அ.நி.ச. வை விவாதிக்கும் சமயத்திலேயே இது பற்றி பிரேரேபிக்கப்பட்டு அம்பேத்கர் அவர்களால் நல்ல காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலை என்னவென்றால் தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளுமே இந்த சோஷலிசம் என்னும் கோமாளித்தனமான கொள்கையை ஆதரிப்பதாகக் கூறவேண்டிய நிலை. என்ன செய்வது. ஒப்புக்காக செய்ய வேண்டியிருக்கிறது. அதைத் தவிர்க்க ஒரே வழி சோஷலிசம் என்ற வார்த்தையை நீக்குவதுதான்.

சோஷலிசம் என்றால் என்ன என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றமே கூறுகிறது. அப்படிப்பட்ட நிலையில் அதை ஒத்து கொள்கிறோம் என்று ஒரு கட்சி தேர்தலில் நிற்பதாகக் கூறுவதை எவ்வாறு சரிபார்க்க இயலும்? எடுத்த எடுப்பிலேயே கட்சிகளை பொய் சொல்லவைக்கும் இந்த ஷரத்து தேவைதானா?

1977-ல் சென்னை கடற்கரையில் ஒரு பெரிய கூட்டத்தில் பேசிய சோ அவர்கள் கூறினார். இந்தியா ஒரு ஜனநாயக, சோஷலிச பரம்பரை நாடு என்று கூட முடிந்தால் அன்னை மாதா தாயார் போட்டிருப்பார் என்று வேடிக்கையாகக் கூறினார்.

நான் கூறுவது இது ஒன்றுதான். வெட்ககரமான 42-ஆம் சட்டத் திருத்தத்துடன் சம்பந்தப்பட்டதாலேயே இந்த சோஷலிசம் என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும் என்பதே. அது இந்த நாட்டின் அவமானச் சின்னம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது