5/29/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 91 & 92)

எபிசோட் - 91 (26.05.2010) சுட்டி - 2
நாதன் ஜட்ஜைப் பார்த்து பேசுகிறார். கைலாஷ் டைம்சில் அசோக் பற்றி எழுதும் முன்னாலே தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என அவர் அங்கலாய்க்கிறார். தானே கோவில் புனருத்தாரணத்துக்கான பணத்தை தந்திருப்பேனே எனக்கூறி அவர் வருத்தப்பட, இது தனக்கு ஏற்கனவேயே தோன்றாமல் போயிற்றே என ஜட்ஜும் மன்னிப்பு கேட்கிறார். நாதன் ஒரு பிளாங்க் செக் தந்து விட்டு செல்கிறார்.

காதம்பரி தன் அக்கா வீட்டுக்கு வருகிறாள். அசோக்கிடம் தான் படும் கஷ்டங்களைச் சொல்லி புலம்புகிறாள். அசோக் கதா காலட்சேபத்துக்கு போக, அவள் கதா படத்துக்கு சென்றாளாமே என அவளது அத்திம்பேர் கேட்க, பின்னே வேற என்ன செய்வது என அவள் திரும்பக் கேட்கிறாள். அது ஒரு காதல் கதை, ஆனால் அதுபற்றி அசோக் கேட்டபோது அது ஒரு பக்திப் படம் எனக்கூறி தான் சமாளித்ததை அவள் கூறுகிறாள். ஒரு பத்தினி தன் பர்த்தாவிடம் பொய் சொல்லலாமா என அத்திம்பேர் கேட்க, அவர் வேண்டுமானால் அரிச்சந்திரனாக இருக்கட்டும் தன்னால் முடியாது என அவள் பதிலளிக்கிறாள். அரிச்சந்திரனின் மனைவியின் தாலி அவன் கண்களுக்கு மட்டும்தான் தெரியும் எனவும், ஆனால் காதம்பரியின் தாலி தன் கண்களுக்கு தெரிகிறதே என அவள் அத்திம்பேர் கிண்டலடிக்கிறார்.

அரிச்சந்திரன் மனைவியின் தாலி கதை தனக்கும் தெரியும் என சோவின் நண்பர் குறிப்பிட, அந்த தாலி மேட்டர் ஒரு பிற்சேர்க்கையே என சோ அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். பிறகு அரிச்சந்திரனின் முழுக்கதையையும் சுருக்கமாகவே கூறுகிறார் (இதை நானும் சமீபத்தில் 1968-ல் படித்திருக்கிறேன்). பொய்யே பேசாதவன் எனப் பெயரெடுத்த அரிச்சந்திரன் உண்மையிலேயே ஆரம்பத்தில் பொய்யுரைத்த கதையும் அதில் வருகிறது. அவனுக்கு மகன் பிறக்கவில்லை என வருணனை நோக்கி தபஸ் செய்ய, அவனும் பிள்ளை வரம் தருகிறான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், அப்பிள்ளையை தனக்கு பலி தரவேண்டும் என. அரிச்சந்திரனும் எப்படியாவது பிள்ளை வந்தால் போதும் என அதற்கு ஒத்துக் கொல்ள லோகிதாட்சன் அவனுக்கு பிறக்கிறான்.

ஆனால் பிறகு பிள்ளையை வருணனிடம் தராமல் சாக்கு போக்கு சொல்லியே தள்ளிப் போடுகிறான். அப்போதே பல பொய்களை கூறியவனாகி விட்டான். பிறகு இன்னொரு ஏழையின் பிள்ளையை விலைக்கு வாங்கி அவனை பலி கொடுக்க எண்ணியபோது விஸ்வாமித்திரர் அப்பிள்ளைக்கு வருண மந்திரத்தை உபதேசித்து அவனை அதை சொல்ல வைக்கிறார். வருணனும் வந்து அப்பிள்ளையை ஆசீர்வதிக்க, எல்லாமே சுபமாக முடிகிறது.

ஆனால் அதற்கு பிறகு அரிச்சந்திரன் தான் சொன்ன பொய்களுக்கு பிராயச்சித்தமாக ஒரு பொய் கூட சொல்லாமல் வாழ்ந்து நல்ல பெயர் பெறுகிறான். அவனது குரு வசிஷ்டர் அதற்காக அவனை சிலாகித்து பேச, விஸ்வாமித்திரர் வசிஷ்டரை வெறுப்பேற்றவே அரிச்சந்திரனுக்கு அத்தனை சோதனைகள் வைக்க, அவனும் வெற்றி பெறுகிறான் என கதை போகிறது. ஆனால் ஒரிஜினல் கதையிலோ தாலி விஷயம் இல்லவே இல்லை. இதே மாதிரி பல நிகழ்ச்சிகள் பிற்சேர்க்கையால் மெருகேற்றப்படுகின்றன எனக் கூறும் சோ உதாரணங்களையும் அடுக்குகிறார். அவற்றில் சில வாலிக்கு இந்திரன் அளித்த மாலை எதிராளியின் பாதி பலத்தை முதலிலேயே கிரகித்துக் கொள்வது, லட்சுமணன் கோடு கிழிப்பது, குசேலருக்கு 27 பிள்ளைகள் ஆகியவை ஆகும்.

எப்படியாவது காதம்பரி தன் கணவனை மாற்ற வேண்டுமென அவள் அக்கா கூற, மாறியது தான் மட்டுமே எனக் கூறி அவள் உதாரணங்களை அடுக்குகிறாள்.

நாதன் வீட்டில் வசுமதி காதம்பரியிடம் அவள் அசோக் பற்றி அவளது பிறந்தகத்தில் குறை கூறியது குறித்து கண்டிக்கிறாள். அவரை எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை என காதம்பரி வருத்தப்பட, வசுமதி அவளுக்கு ஒரு ஐடியா சொல்கிறாள். அதன்படி அடுத்த நாள் அவர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும்போது காதம்பரியின் செருப்பு ‘அறுந்து’ போகிறது. வீட்டுக்கு திரும்பிச் சென்று காரில் போகலாம் என அவள் யோசனை கூற, கோவிலுக்கு செல்லும்போது படாடோபம் கூடாது என அசோக் மறுக்கிறான். வாக்குவாதம் இவ்வாறே வளர, கோவில்களில் நைவேத்தியம் செய்து பக்தர்கள்தானே பிறகு அதை உண்கிறார்கள், விக்கிரகம் உண்ணவில்லையே என அவள் கேள்வி கேட்கிறாள். அது சூரியன் கடல் தண்ணீரை உறிஞ்சுவது போல புறக்கண்களுக்கு தெரியாது என அசோக் பதிலளிக்கிறான்.

அது எப்படி சார், தண்ணீரை சூரியன் உறிஞ்சினால் தண்ணீர் குறைவது நமது கண்ணுக்கு தெரிகிறதே, ஆனால் நைவேத்தியத்தின் அளவு குறைவதில்லையே என சோவின் நண்பர் கேட்கிறார். சோ ஒரு எதிர் கேள்வி போடுகிறார், அப்படி நைவேத்தியத்தின் அளவு குறைந்தால் மறுபடி யாராவது நைவேத்தியம் செய்வார்களா என.

(தேடுவோம்)

எபிசோட் - 92 (27.05.2010) சுட்டி - 2
சோ மேலும் பேசுகிறார். நிவேதனம் என்றால் காட்டுதல் எனப் பொருள். பகவானிடம் உனதருளால் இன்றைய அன்னம் கிடைத்தது. இதை உன் ஆசியுடன் எடுத்துக் கொள்கிறேன் எனச் சொல்லி தன்னடகத்தை வளர்த்து கொள்ளவே செய்யப்படுகிறது. விக்கிரகம் உண்ணும் என்று பொருள் அல்ல. அப்படியெல்லாம் நாம் அளிக்கும் அன்னத்தை உண்ண நாம் என்ன கண்ணப்ப நாயனாரா என சோ மேலும் கிண்டலுடன் கேட்கிறார். அசோக் கொடுக்கும் விளக்கம் தவறானது என்றும் கூறுகிறார்.

காதம்பரி விடாது பேசுகிறாள். சரி கார் வேண்டாம், ஆட்டோ வைத்துக் கொண்டு போகலாமே என அவள் கேட்க, அதுவும் படாடோபமே, மேலும் கோவிலுக்கு நடந்து போவதே சிறப்பு என அவன் பதிலளிக்கிறான். கடைசியில் வீட்ட்லிருந்து அவர்கள் அதிக தொலைவில் இல்லையென்றும், காதம்பரி வீட்டுக்கே செல்லலாம் எனவும் அவன் கூறிவிட்டு மேலே செல்கிறான்.

காதம்பரி வீட்டுக்கு வந்து வேறு செருப்பு அணிந்து செல்ல, வசுமதி தான் சொன்ன ஐடியா (செருப்பு அறுந்து போவது) என்னவாயிற்று என கேட்க, காதம்பரி அது ஊத்திக்கிச்சு எனக்கூறிவிட்டு வேகமாக போய் அசோக்குடன் சேர்ந்து கொள்கிறாள். அவனும் அவளை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்க, இது என்ன எப்போதுமே புத்தர் போல அவன் புன்முறுவல் பூக்கிறான் என காதம்பரி ஆச்சரியப்படுகிறாள். அது போதாதா அசோக்குக்கு, இப்படித்தான் பகவான் புத்தர் ஒரு சமயத்துல என பேசியவாறே நடக்க, காதம்பரி ஒரு அற்புதமான கேமரா லுக் தருகிறாள்.

நீலகண்டன் வீட்டுக்கு நாதன் வந்திருக்கிறார். உமா விஷயம் அலசப்படுகிறது. ரமேஷ் விடுதலையானதில் கம்பெனியின் எம்டி என்னும் முறையில் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றாலும், தான் நீலகண்டனின் நண்பர் என்னும் முறையில் அவர் மாப்பிள்ளை விடுதலையானதில் சந்தோஷமே எனக்கூறுகிறார். ரமேஷ் நேரில் வந்து பேசினாலும் உமா அவனுடன் முகம் கொடுத்து பேசவில்லை என நீலகண்டன் வருந்துகிறார். ரமேஷ் வந்த காட்சி ஃப்ளாஷ் பேக்காக காட்டப்படுகிறது. நீலகண்டன் மிகவும் வற்புறுத்திக் கேட்க, உமா அசோக்குடன் கலந்து பேசித்தான் இனிமேல் முடிவெடுக்கப் போவதாகக் கூற நீலகண்டனும் பர்வதமும் கோபமடைகின்றனர்.

தன் பிள்ளை அசோக்தான் விசித்திரமானவன் என தான் நினைத்தால் உமா அதற்கு மேலாக இருக்கிறாளே என நாதனும் வியக்கிறார். பிறகு ரமேஷுக்கு ஏதேனும் பிசினஸ் வைக்க தானே பின்னால் உதவி செய்வதாக அவர் கூற நீலகண்டன் மனம் நெகிழ்கிறார். யார் கண்டது, பின்னால் ரமேஷ் பெரிய பிசினஸ்மேனாகவும் நல்ல பெயர் எடுக்கலாம் என நாதன் மேலும் கூற, நீலக்ண்டன் Every Saint has a past என்று அவர் கூறுகிறா என கேட்க, நாதனோ Every sinner has a future என்று பதிலளிக்கிறார். (வசுமதி இதை பின்னால் நீலகண்டன் தன்னிடம் டெலிஃபோனில் கூறக்கேட்டபோது மனமெல்லாம் நெகிழவில்லை என்று கூறவும் வேண்டுமோ)?

சிங்காரம் நாதனிடம் வேம்பு சாஸ்திரிகள் இப்போதிருக்கும் வீட்டில் படும் கஷ்டங்களை பட்டியலிடுகிறான். நாதன் யோசனையில் ஆழ்கிறார். அப்போது அங்கு வரும் அசோக் ஒரு யோசனை கூறுகிறான். சாம்பு சாஸ்திரிகளின் வீடு விற்பனைக்கு வருகிறது என்றும், அதை நாதனே வாங்கி அவர்கள் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டு, வேம்பு சாஸ்திரிகளையும் சாம்பு சாஸ்திரிகளையும் ஒரே வீட்டில் குடியேற்றி விடலாம் எனபதுதான் அந்த யோசனை. இப்படி செய்தால், வைதீகாளையும் கௌரவம் செய்த மாதிரி இருக்கும் என்றும் அவன் கூறுகிறான்.

நாதன் உடனே அதற்கு ஒத்துக் கொள்ள, அசோக் தனது தந்தையின் தர்ம சிந்தனையை மிகவும் சிலாகிக்கிறான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நாதன் கூறிவிட்டு, அசோக் தன் பிள்ளை என்றும் முடிந்தவரை அவன் கேட்பதை தான் தருவது தனது கடமை என அவர் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிவிடுகிறார். மேலும் அவனுக்காக தன் உயிரையே கூட தருவேன் எனவும் கூற, பாபர் ஹுமாயூன் கதை மாதிரியா என அசோக் கேட்கிறான். அவரோ அப்படியும் வச்சுக்கலாம், ஆனால் யயாதி மாதிரி பிள்ளையின் யௌவனத்தை கேட்க மாட்டேன் எனக் கூறிவிட்டு, அப்போது தான் காண்டேகரின் யயாதி கதையை தான் படித்து கொண்டிருப்பதாக கூறுகிறார்.

யயாதிதானே பிள்ளையின் இளமையை வாங்கிக் கொண்ட ராஜா, நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்களே, பேராசை பிடிச்சவன் சார் அவன் என சோவின் நண்பர் கூற, சோ கண்களை உருட்டியவாறே புன்னகை பூக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/28/2010

கனேடிய தூதரகத்தின் அவமானம் செய்யும் அடாவடி நடவடிக்கைகள்

இந்திய பாதுகாப்பு/உளவுத் துறைகளில் வேலை செய்பவர்கள், வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு கனேடிய தரப்பிலிருந்து அவமானங்கள் காத்திருக்கின்றன. இப்படித்தான் கனடா செல்லவிருக்கும் பிரதம மந்திரியின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே கனடா செல்ல வேண்டிய குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட காரணமோ சம்பந்தப்பட்ட இந்தியத் துறைகள் செய்யும் காரியங்கள் மனித உரிமை மீறல்களாம், பயங்கரவாதத்தை ஆதரிப்ப்பவையாம். இதை விட அவமானம் கொப்பளிக்கும் செயல் ராஜரீக விஷயங்களில் நடக்கவியலாது.

ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி கனடாவில் உள்ள தன் பிள்ளையைப் பார்க்க விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது விசாவும் இதே மாதிரி காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாம். இந்த கனேடிய மயிராண்டிகள் தங்களைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒட்டுமொத்தமாக ஒரு அரசுத்துறையையே இம்மாதிரி வர்ணிக்கும் தைரியம் அவர்களுக்கு யார் தந்தது?

கூர்ந்து பார்த்தால் பலமுறை வெளிநாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர்கள் என தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்ளும் இந்தியர்களே காரணம். இப்படித்தான் குஜராத் முதல்வர் மோடி அவர்களுக்கு அவரைப்பற்றிய நம்மவர்களின் அழுவாச்சி புகார்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. அப்போது மோடிதானே, நன்றாக வேண்டும் அவருக்கு என தெனாவட்டாக இருந்தவர்கள் இப்போது அடிமடியிலேயே இம்மாதிரி கைவைக்கும் செயலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

நான் தில்லியில் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி. தில்லியில் ஒரு வெளிநாட்டு தூதரகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு நமது இந்திய மந்திரி ஒருவர்தான் தலைமை விருந்தாளி. ஆனால் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரது காரை தூதரக வளாகத்துள் அனுமதிக்கவில்லை. அவர் வெளியே காரைவிட்டுவிட்டு உள்ளே வெகுதூரம் நடந்து வரவேண்டியிருந்தது. அவரும் வெட்கமில்லாமல் அவ்வாறே செய்தார். நான் அவரிடத்தில் இருந்தால் போடா மயிராண்டி, நீங்களாச்சு உங்கள் நிகழ்ச்சியாச்சு என காரை ஓட்டச் சொல்லி நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பேன்.

அதே சமயம் வெள்லைத்தோல் மயிராண்டிகள் எவனாவது வந்தால் நம்மவர்கள் அவனுக்கு சலாம் போடுவதை பார்த்தாலே மனதை கொதிக்க வைக்கும். கூர்ந்து பார்த்தால் அந்த மயிராண்டி அவனது நிறுவனத்தில் அடிமட்டத்தில் இருப்பவனாக இருக்கும்.

என்ன செய்வது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெராலாக இருந்த ராபெர்ட் கிளைவ் சொந்த ஊரில் தத்தாரியாக ஒரு வேலைக்கும் லாயக்கில்லாது திரிந்தந்தவந்தானே. அவனுக்கு இந்திய ராஜாக்கள் எல்லாம் சலாம் போட்டனரே. அந்த லெகசி இன்னும் தொடர்கிறது போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 89 & 90)

எபிசோட் - 89 (24.05.2010) சுட்டி - 2
அசோக்குக்கும் காதம்பரிக்கும் திருமணம் முடிந்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வாசலில் ஆரத்தி எடுக்கின்றனர். அசோக்கின் கிருஹஸ்தாஸ்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே காதம்பரிக்கும் அசோக்குக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது.

இதை கண்டு நாதனும் வசுமதியும் டென்ஷன் அடைய ஆரம்பிப்பதும் புரிகிறது. அசோக் தேடும் பெண் அவன் கூறியபடி ஒரு வைதீக குடும்பத்தில் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம், ஆனால் வசுமதி ஸ்டேட்டஸ் என்ற விஷயத்தை புகுத்தியதில் காதம்பரி வந்து சேருகிறாள். அசோக்காவது தனது தெரிவில் தெளிவை காட்டியிருக்கலாம், ஆனால் என்னவோ தெரியவில்லை அவன் எல்லாமே பகவான் செயல் என விட்டுவிட்டான். மேலே கதை எப்படி செல்லப் போகிறது என்பது சோவுக்கும் வெங்கட்டுக்குமே வெளிச்சம். ஏதாவது பெரிய விஷயம் வந்தால்தான் உண்டு. பார்ப்போம், தேடுவோம்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டு கல்யாண முகூர்த்தத்துக்கு போக நேரம் கிடைக்கவில்லை, ஆகவே ரிசப்ஷனுக்கு போக முடிவு செய்கின்றர். அவாத்துக்கு கிஃப்ட் வாங்கிப் போக வேண்டாமா என வசுமதி கேட்க, நாதன் தான் ஏற்கனவேயே அசோக்கிடம் 25000 ரூபாய்க்கான செக்கை கொடுத்து விட்டதைக் கூறுகிறார். இது ரொம்பவே டூ மச் என வசுமதி அபிப்பிராயப்படுகிறாள்.

அசோக் அன்று மாலை காதம்பரியை அழைத்து கொண்டு மயிலாப்பூரில் வாலி வதம் பற்றிய கதாகாலட்சேபத்துக்கு போகப் போவதாகவும் வாலிவதம் பற்றி பாகவதர் அழகாகக் கதை கூறுவார் எனவும் கூறுகிறான்.

வாலியை ராமர் ஒளிந்திருந்து தாக்கியது தவறுதானே என சோவின் நண்பர் கேட்க, “வாலியை மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று ராமர் அம்பு விட்டது மட்டும் சரியா” என கேட்க, சோ அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், ராமர் அவ்வாறு ஒருபோதும் செய்யவேயில்லை என. இம்மாதிரி மரத்தின் பின்னாலிருந்து அம்பு விட்ட கதை கம்ப ராமாயணம் மற்றும் துளசி ராமாயணத்திலும்தான் வருகிறது, வால்மீகி ராமாயணத்தில் வரவேயில்லை. மேலும் வால்மீகி ராமாயணம்தான் அத்தாரிட்டி, மீதி ராமாயணங்கள் அல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். வாலியின் உடலை பார்க்க வந்த தாரையிடம் வானரங்களே கூறுகிறார்கள், “வாலி ஆக்ரோஷமாக ராமருடன் சண்டையிட்டான் மரங்கள் பாறைகள் ஆகியவற்றை அவர் மீது எறிந்தான், ஆயினும் ராமபாணத்தின் முன்னால் அவை எல்லாம் வியர்த்தமாகப் போயின” என்று. இதை தானாக சொல்லவில்லை. பிரதிவாத பயங்கர, ராமாயண பிரவசன சிரோன்மணி பிரும்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் 1939-ல் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டதையே தானும் கூறுவதாக மேலும் சோ கூறுகிறார்.

என் அப்பன் ராமபிரான் குற்றம் செய்யவில்லை என அறிந்து டோண்டு ராகவனாகிய எனக்கும் மீண்டும் மனச்சமாதானம் ஏற்பட்டதை நான் இங்கே மறைக்கப் போவதில்லை. அதென்ன மீண்டும்? இந்த வாலிவதம் பற்றிய விஷயம் ஏற்கனவேயே எங்கே பிராமணன் பார்ட் -1-ல் 83-ஆம் எபிசோடில் வந்து விட்டது.

அசோக் மட்டும் தனியாக கதா காலட்சேபத்துக்கு போக காதம்பரியோ புதிதாக வெளியான கதா என்னும் ஹிந்தி படத்துக்கு போகிறாள். விஷயம் புரிந்து நாதனும் வசுமதியும் திகைக்கின்றனர்.

(தேடுவோம்)

எபிசோட் - 90 (25.05.2010) சுட்டி - 2
கைலாசநகர் வாக்காளர்களுக்கு தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான கோவில் புனருத்தாரணத்தை அரசியல்வாதி நல்லத்தம்பி நிறைவேற்றாதது குறித்து ஜட்ஜும் கைலாசநகர்வாசிகளின் அசோசியேஷன் செயலாளரும் பேசுகின்றனர். கிருஷ்ணர் குசேலர் கொடுத்த ஒருபிடி அவலை வாயில் போட்டுக் கொண்டதிலேயே குசேலர் பணக்காரர் ஆனது மாதிரி இந்த இடைதேர்தலில் அடைந்த வெற்றியை வைத்து நல்லத்தம்பி இன்னும் பணக்காரனானதுதான் நடந்தது என ஜட்ஜ் கூறுகிறார்.

அதென்ன குசேலருக்கு 27 குழந்தைகள் என கூறுகிறார்களே உண்மையாக இருக்குமா என சோவின் நண்பர் கேட்கிறார். அத்தனை குழந்தைகள் இருந்ததாக பாகவதத்தில் எங்குமே கூறவில்லை எனவும், இதுவும் பிற்சேர்க்கையாக கதைக்கு அதிக அழுத்தம் தருவதற்காக சேர்க்கப்பட்டது எனவும் சோ கூறுகிறார். குசேலரின் கதையையும், குருகுலவாசத்தில் கிருஷ்ணருக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு பற்றியும் சோ விவரிக்கிறார். கடைசியில் எல்லாவற்றையும் கூறிவிட்டு, 27 குழந்தைகள் என்பது மிகைப்படுத்திக் கூறலில் வருகிறது என்று முத்தாய்ப்பாக மறுபடியும் சொல்கிறார்.

அசோக் சொல்லித்தான் தான் கைலாசநகர்வாசிகளுக்கு அந்த இடைதேர்தலில் நல்லத்தம்பிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆகவே அவன்தான் இதற்கு பதில் கூறவேண்டும் எனவும் ஜட்ஜ் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் தனக்கு மாதாமாதம் ரேஷன் பொருட்களை அனுப்புவது யார் என்பதை கண்டுபிடித்து விடுகிறார். அவரது பழையவீட்டின் சொந்தக்காரர்தான் அது. அவரை விசாரித்ததில் தான் அவரை வீட்டைவிட்டு அடாவடியாக காலிசெய்வித்தது மகாபாவம் எனவும், அது நடந்த பத்தே நாட்களில் தனது மகன் ஒருவிபத்தில் கையை இழந்ததாகவும், தன்னிடம் இதுபற்றிப் பேசிய பலருமே இதற்கெல்லாம் காரணமே வேம்பு சாஸ்திரிகளை வீதியில் கொண்டுவந்து நிறுத்தியதுதான் என்று கூறியதாகவும் சொல்லி அவரது மன்னிப்பைக் கோருகிறார். வேம்பு அவரை தேற்றுகிறார். இனிமேல் இம்மாதிரி சாமான் எல்லாம் அனுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொள்ள, வீட்டுக்காரரோ வேம்பு சாஸ்திரிகள் ஒரு ஸ்திர நிலைக்கு வரும்வரை இதை செய்யப்போவதாகக் கூறிவிடுகிறார்.

சாம்பு சாஸ்திரிகள் காதம்பரியை பார்த்து பேசுகிறார். அவள் தங்களாத்து கல்யாண ரிசப்ஷனுக்காவது வந்திருக்கலாம் எனக்கூற, அவளோ பிறகு ஒரு நாள் அவரது வீட்டுக்கு வருவதாகக் கூறுகிறாள்.

நாதன் ஆபீசில் நீலகண்டன் வந்திருக்கிறார். அசோக் காதம்பரி பற்றி பேச்சு செல்கிறது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாதனும் நீலகண்டனும் அபிப்பிராயப்படுகின்றனர். வழக்கம்போல, எல்லா விடுகளிலும் நடப்பது போல இங்கும் அசோக்தான் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் என பாதி சீரியசாகவும் பாதி வேடிக்கையாகவும் கூறப்படுகிறது.

கைலாஸ்நகர் டைம்சில் அசோக் பற்றி தாறுமாறாக செய்திகள் வந்ததை நீலகண்டன் நாதனுக்கு காட்ட அவர் கோபப்படுகிறார். அப்பத்திரிகைக்கு போன் செய்து பேச முயல ஃபோன் கட் செய்யப்படுகிறது. அதை நிர்வகிப்பது பிரியாவின் தந்தை ஜட்ஜ் என்பதை அறிந்து நாதன் அவரை நேரில் சந்திக்க விரைகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/24/2010

Blogpot திறப்பதில் பிரச்சினை

கடந்த சில நாட்களாக பிளாக்ஸ்பாட் பக்கங்களை திறப்பதில் பிரச்சினை அவ்வப்போது இருந்து வருகிறது. நான் பாவிப்பது கூகள் க்ரோம் உலாவி. ஆனால் இதே பிரச்சினை எக்ஸ்ப்ளோரரிலும் ஃபயர் ஃபாக்ஸிலும் கூட வந்தது. அவ்வப்போது சரியாகிறது. ஆனால் பல சமயங்களில் இணைப்பு உடைந்து விட்டது என மெசேஜ் வருகிறது.

உதாரணத்துக்கு இப்பதிவை பப்ளிஷ் செய்து விட்டு பிளாக்குக்குகு போக முயற்சித்தால் கீழ்கண்ட அறிவிப்பு வருகிறது.

Oops! Google Chrome could not find dondu.blogspot.com
Suggestions:
Access a cached copy of dondu. blogspot. com
Try reloading the page
Go to blogspot. com
Search on Google:

மற்றவர்களது அனுபவம் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/21/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 87 & 88)

எபிசோட் - 87 (தேதி 19.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
கேட்டரர் மனைவியின் சந்தர்ப்பவாதப் பேச்சைக் கேட்டு சோவின் நண்பர் மனம் கொதித்துப் பேசுகிறார். அலயன்ஸ் என்றாலே இப்படித்தானா என அவர் கேட்க, கூட்டணி அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய முன்சாக்கிரதை நடவடிக்கைகளை பற்றி சோ பேசுகிறார். அதற்கு மேற்கோளாக மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு அம்புப் படுக்கையிலிருந்து செய்யும் உபதேசத்தில் கூறும் ஒரு கதையை இங்கு சொல்கிறார்.

பலிதம் என்னும் பெயர் உடைய எலிக்கும், லோபசம் என்று அழைக்கப்படும் பூனைக்கும் இடையில் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் வந்த உயிரபாயத்தைத் தவிர்க்க ஏற்பட்டக் கூட்டணி பற்றித்தான் இக்கதை. அதை வீடியோ லிங்கில் பார்த்துக் கொள்ளவும். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், உயிரபாயம் இருவருக்குமே அந்தக் கூட்டணியின் விளைவால் நீங்கிவிட்ட நிலையில், அக்கூட்டணி இனிமேலும் நீடிக்கும் என்ற பிரமேயமே இல்லாமல் போகிறது. எது எப்படியானாலும் எலி பூனையின் உணவு. அது எலியை அடிக்கத்தான் விரும்பும், எலி தப்பித்து ஓடத்தான் செய்யும். அது போல செயற்கை முறையில் காலத்தின் கட்டாயத்தால் உருவாகும் கூட்டணிகளுக்கும் அதுதான் கதி என்பதுதான் இக்கதையின் நீதி.

கேட்டரர் மனைவி இப்போது தனது கணவருக்கே ஒரு பெரிய ஆர்டர் வந்த நிலையில் சர்வ அலட்சியமாக 19-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிக்கு திருமணத்தை மாற்றி விட்டு ஒரு குற்றவுணர்ச்சியுமே இல்லாது மேலே பேசுகிறாள். இப்போது நாதன் எதிரில் தான் ஒரு சங்கட நிலையில் இருப்பதை அழமாட்டாக் குறையாக சாம்பு கூறிவிட்டுச் செல்கிறார்.

சாம்பு வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் நடந்ததைக் கூற, அவள் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என கேட்கிறாள். என்ன செய்வது அவர்கள் பெரிய இடம் தம்மால் என்ன செய்ய முடியும் என சாம்பு விரக்தியுடன் பேசுகிறார். அவருக்கு கிடைக்கவிருந்த நாதன் வீட்டு புரோகிதம் வேம்புவுக்கு போயிற்றே என அவர் மகன் கூறுகிறான். வேம்புவும் கஷ்டப்படுகிறான், ஆகவே அவனுக்கு வேலை செல்வதே நல்லது எனக்கூறும் சாம்பு, வேம்புவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது எனக் கூறுகிறார். ஆனால் அச்சமயம் வந்த வேம்பு அதை கேட்டு விட்டார்.

சாம்புவின் பெருந்தன்மையை நெகிழ்சியுடன் குறிப்பிடும் அவர் தான் சாம்புவின் சமகால புரோகிதனாக இருப்பது தான் செய்த பாக்கியம் என தழதழக்கிறார். சாம்புவோ அவருக்கு தெரிந்ததால் தனது சங்கடம் தீர்ந்ததென்றும், அவரே நாதனிடம் இதெல்லாவற்றையும் கூறிட வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். பேச்சு இப்போது வேம்புவுக்கு யாரோ பெயர் தெரியாதவரால் செய்யப்படும் உதவிகள் பக்கம் திரும்புகிறது. வேம்புவின் சம்பந்தி முதலியாராக இருப்பாரோ என கேட்கப்பட முதலியாரோ தன் இல்லை எனக்கூறிவிட்டதாகவும், அவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் வேம்பு கூறிவிடுகிறார். அசோக்கும் செய்யவில்லை, சாம்புவும் செய்யவில்லை, சிங்காரம் செய்திருக்க சான்சே இல்லை என அலசப்படுகிறது.

நாதன் வீட்டுக்கு வேம்பு வந்து அசோக் கல்யாண வேலைக்கான புரோகித ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறார். முதற்கண் அசோக்கை வாதத்தில் இழுத்து விட்டதற்காக நாதனிடமும் வசுமதியிடமும் மன்னிப்பைக் கோருகிறார். நாதன் அவரை மன்னித்து அட்வான்சாக 5000 ரூபாய் தருகிறார். அதை வாங்கிக் கொண்டு, சாம்புவின் சங்கடத்தையும் கூறிவிட்டு அவர் விடை பெற்று செல்கிறார்.

நீலகண்டன் வீட்டில் ரமேஷை அவன் வக்கீல் அனந்தராமன் தன் திறமையான வாதத்தால் அவனை அப்ரூவராக மாறச் செய்து விடுவித்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உமா அவன் விடுதலை பெர்றது அதர்மமான செயல் என பிடிவாதமாகக் கூறுகிறாள். அவனைப் பார்க்க நீலக்ண்டன் மற்றும் வசுவுடன் வர மறுக்கிறாள். தனது பெண்ணும் திருட்டு அப்பனைப் பார்க்க வேண்டாம் என அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 88 (20.05.2010) சுட்டி - 2
அசோக் குடுமியை எடுத்து விட்டு, ஸ்டைலாக ஒரு மோட்டார் பைக்கில் அமர்ந்து தன்னைப் பார்க்க விட்டுக்கு வருவதாகவும், அவளால் தான் பல விதங்களில் மாறியதாகவும், இனிமேல் அவளுக்காகவே வாழப்போவதாகவும் கூறியதாக கனவு காண்கிறாள் காதம்பரி. அவள் அக்காவால் எழுப்பப் பெற்று அத்தனையும் கனவுதானா என எண்ணி ஏமாற்றமடைகிறாள்.

சிங்காரம் தன் மகனை காப்பாற்ற அசோக் உதவியாக இருந்ததை எண்ணி மிகவும் நெகிழ்ச்சியுடன் அவனுக்கு நன்றி கூறுகிறான். தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும், வெறுமனே பலரிடம் அவனுக்காக உதவி பெற்றதாகவும், உண்மையில் நன்றியெல்லாம் அவ்வாறு உதவி செய்தவர்களுக்கும் மேலும் அவர்கள் மனதில் புகுந்து அவர்களை அச்செயல்களை செய்ய வைத்த இறைவனுக்குமே அவன் நன்றி செலுத்த வேண்டும் எனவும் அவன் கூறுகிறான். மேலும், இனிமேலாவது அவன் தனது மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்து காட்ட வேண்டும் எனவும் கூறுகிறான். அவனும் அதை கண்ணீருடன் ஏற்கிறான்.

வேம்புவும் சாம்புவும் கோவிலில் வைத்து சந்திக்கின்றனர். நாதன் வீட்டில் நடந்ததை வேம்பு கூறுகிறார். சாம்பு அவருக்காக மக்ழ்கிறார். அன்னேரத்தில் அசோக்கும் வந்து நாதன் அவர்கள் வேம்பு சாம்பு இருவருமே சேர்ந்தே புரோகிதத்துக்கு வரச்சொன்னார் எனக் கூறி சாம்புவுக்கும் முன்பணத்தை அளிக்கிறான். 21-ஆம் தேதியன்று நடக்கும் ஆர்த்தியின் கல்யாணத்துக்கு தனது குடும்பத்திலிருந்து அனைவரும் வரப்போவதாகக் கூறி அக்கல்யாணத்திற்காக நாதன் முன்னால் அவரிடம் தந்து அவர் மறுத்த 25000 துக்கான செக்கையும் தருகிறான். தன்னை ஊரை விட்டு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அந்த செக் இப்போது தன் மகளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு அனுப்ப பயன்படும் நகை முரணை சாம்பு எடுத்து கூறுகிறார்.

ரமேஷ் விடுதலையாகி வீட்டுக்கு வர, உமா அவனைப் புறக்கணித்தது குறித்து அவன் தாய் தந்தையர் குறை கூறுகின்றனர். ரமேஷோ உமாவின் சார்பாகவே பேசுகிறான். தான் செய்தது தவறுதானே எனவும் கேட்கிறான். நீலகண்டனும் பர்வதமும் வந்து ரமேஷுடன் பேசுகின்றனர். இப்போதும் இன்னும் உமா வராதது குறித்து ரமேஷ் வருந்துகிறான். அவளுடைய செல் நம்பர் நினைவிலிருந்தால், அவன் அவளுடம் பேசலாமே என நீலக்ண்டன் கேட்க, தயவு செய்து செல் நம்பர் எனக் கூறாதீர்கள், மொபைல் நம்பர் எனக்கூறுங்கள் என ரமேஷ் அவரிடம் கூறிவிட்டு உமாவுடன் பேச முயற்சிக்க அவளோ ஃபோனை கட் செய்கிறாள்.

இப்பெண் ஏன் இன்னும் பிடிவாதமாக இருக்கிறாள் என சோவின் நண்பர் கேட்கிறார். அதற்கு அவர் உண்மையே பேசிய சத்தியதபர் என்னும் பெயருடைய ஒரு ரிஷியின் கதையை வராக புராணத்திலிருந்து எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். வேடனின் அம்புக்கு பயந்த வராகம் ரிஷியின் ஆசிரமத்துள்ளே தஞ்சம் புகுந்து கொள்ள, அங்கு வந்த வேடன் வராகம் எங்கே என ரிஷிஅயிக் கேட்க, அவரோ தெரியாது என்பது போல இருந்து விட்டார். அவரது லாஜிக் இவ்வாறு செல்கிறது. வராகம் போனதை கண்கள் பார்த்தன ஆனால் அவை பேசா. வாயோ வராகம் போனதை பார்க்கவில்லை, ஆகையால் அது வேடனிடம் ஒன்றும் ஊற முடியாது என்பதே அது. உடனேயே வராகம் விஷ்ணுவாகவும் வேடன் இந்திரனாகவும் உருவெடுத்து, அவரது சத்தியத்தை சோதிக்கவே வந்ததாகக் கூறி அவருக்கு ஆசியளித்தனர்.

இங்கோ உமா தான் சிபாரிசு செய்து பெற்றுத் தந்த வேலையில் சேர்ந்த ரமேஷ் உண்டவீட்டுக்கே இரண்டகம் நினைப்பதை பொறுக்காமல் அவனை நாதனிடம் காட்டிக் கொடுத்தது சரிதான். ஆனால் ரமேஷ் இப்போது மனந்திருந்தி வருந்தும்போதும் அவனிடம் அதே விரோதபாவம் பாவிப்பது சரி அல்ல என சோ கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 85 & 86)

எபிசோட் - 85 (17.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
தான் கொஞ்சம் பேசலாமா என அசோக் கேட்கும்போதே என்னுள் ஒரு புன்முறுவல் எழுந்தது. அவன் என்ன கேட்பான் என்பதை என்னாலேயே ஊகிக்க முடிந்தபோது அவனிடம் அனுபவம் பெற்றுள்ள அவன் பெற்றோருக்கு மட்டும் அது தோன்றாது இருக்குமா என்ன? அவனை மிருதுவாக அவாயிட் செய்ய நினைக்கின்றனர். ஆனால் அதெல்லாம் அசோக்கிடம் நடக்குமா?

நான் நினைத்த மாதிரியே அவன் கல்யாணம் என்பது மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என மிருதுவாக ஆனால் உறுதியாகக் கூறிவிடுகிறான். வெளி மனிதர்களுக்கு அழைப்பில்லை, ரிசப்ஷன் கிடையாது, பெரிய மண்டபம் எல்லாம் வேண்டாம். வைதீக காரியங்களுக்கே முக்கியத்துவம் என்றெல்லாம் அடுக்க, அவனுக்கு கல்யாணம் நடந்த விஷயமே ஊருக்கு தெரியாமல் போகுமே என அவன் அன்னை ஆட்சேபம் எழுப்ப, ஊர் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறது என அவன் எதிர் கேள்வி போடுகிறான். தேவையானால் ரிஜிஸ்டர் திருமணம் கூட ஓக்கே எனக்கூறிவிட்டு அப்பால் செல்கிறான்.

என்ன சார் இது என சோவின் நண்பர் கேட்க, ரிஜிஸ்டர் கல்யாணமெல்லாம் நமது வைதீக முறைப்படியான கல்யாணமே அல்ல, அதைப் போய் செய்யலாம் என அசோக் கூறுவது அபத்தமாகவே படுகிறது என அவர் பங்குக்கு அசோக்குக்கு ஒரு குட்டு வைக்கிறார். பிறகு பழங்காலத்தில் நடந்த நான்கு நாள் திருமணம் பற்றியும் பேசுகிறார்.

நடந்த விஷயம் கேட்டு காதம்பரி டரியல் ஆகிறாள். அசோக்குக்குத்தான் மூளை இல்லையென்றால் அவர் பெற்றோர்களுக்கு எங்கே போச்சு அறிவு என அவள் நீட்டி முழக்குகிறாள். இந்த எளிமையான கல்யாணம் அவள் மனதுக்கு பிடிக்கவில்லை என்பதை தெளிவாகவே காட்டுகிறாள். அசோக்குக்கு அவளே போன் போட்டு கிண்டலாகப் பேசுவதாக எண்ணி மண்டபம் கூட ஏன், கோவிலிலேயே வைத்துக் கொள்ளலாமே என கேட்க அதற்கும் சரி எனக்கூறி அவன் அவளை மேலும் திகைப்புக்கு உள்ளாக்குகிறான்.

நாதனும் வசுமதியும் என்ன செய்வதென்று புரியாது, திருப்பந்துரத்தியில் இருக்கும் தங்கள் குலதெய்வம் கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.

கேட்டரர் வீட்டில் அசோக்கின் திருமணம் பற்றி பேச்சு வருகிறது. ரொம்பவுமே எளிமையாக சென்னைக்கு வெளியே செய்வதால் தனக்கு கேட்டரிங் சான்ஸ் இல்லை என கேட்டரர் கூறுகிறார். அப்போது சாம்பு சாஸ்திரிகள் அங்கு வர, அவரிடம் ஜனவரி 19-ஆம்தேதி ஆர்த்திக்கும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் என கேட்டரரின் மனைவி கூற, அவர் அன்றுதான் அசோக்குக்கு வெளியூரில் கல்யாணம் எனவும், அங்கு புரோகிதம் செய்ய தான் ஒத்துக் கொண்டு விட்டதாகவும் கூற, அந்த மாமியோ அதெல்லாம் முடியாது என நிர்தாட்சண்யமாக மறுத்து விடுகிறாள். சாம்புவும் குழப்பத்துடன் விடைபெர்றுச் செல்ல, கேட்டரரும் தன் மனைவியை இது பற்றி குறித்து கண்டிக்க, அப்பெண்மணி தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என நிற்கிறாள்.

நாதன் வீட்டுக்கு காதம்பரி வருகிறாள். அவளுடன் பொதுப்படையாகப் பேசும் நாதன் அசோக் வெளியில் போயிருப்பதாகக் கூறுகிறார். அவளுக்கு எளிமையான கல்யாணம் என்பதால் ஏதேனும் ஏமாற்றமா என அவர் மேலும் கேட்க, அப்படியெல்லாம் இல்லை என மறுக்கிறாள். திருமணத்துக்கு முன்பே தனக்காக அசோக் ஒரு காரியம் செய்வானா என அவனிடமா கேட்பதற்காக தான் வந்ததாக அவள் கூறுகிறாள். நாதனும் வசுமதியும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்களிடம் அவள் இதை தான் அசோக்கிடம்தான் முதலில் கேட்க வேண்டும் எனக்கூறிவிட்டு சென்று விடுகிறாள்.

அவள் அந்தண்டை போனதும், அசோக் மாடியிலிருந்து இறங்கி வருகிறான். அவன் வெளியில் போகவில்லையா என நாதன் ஆச்சரியத்துடன் கேட்க, இல்லை என்கிறான். காதம்பரி வந்து சென்றது பற்றி அறிந்த அவன் அவளுடன் போனில் பேசுகிறான். அவள் மேலே ஏதும் கூறும் முன்னரே, அவள் கேட்பதை தன்னால் கன்சிடர் செய்யவியலாது எனவும் கூறி விடுகிறான்.

(தேடுவோம்)

எபிசோட் - 86 (18.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
காதம்பரி கேட்பதை தன்னால் ஏற்றுக் கொள்ளவியலாது என அசோக் கூறிவிட்டு அப்பால் போக வசுமதி நாதனிடம் என்ன இதெல்லாம் என கேட்க, எதிராளியை வாயடைக்க வைக்கும் இந்த டெக்னிக்கும் நன்றாகவே இருக்கிறது எனக் கூறிவிட்டு அவரும் அப்பால் செல்கிறார். சமையற்கார மாமி அசோக்கிடம் அவன் காதம்பரி என்ன கேட்க நினைத்தாள் என அறிந்துதான் அவ்வாறு கூறினானா எனக் கேட்க, அவனும் ஆமாம் என்கிறான். என்ன அவள் கேட்க நினைத்தாள் என மாமி விடாது கேட்க, அது முற்றிலும் தங்கள் தனிப்பட்ட விஷயம் எனக் கூறிவிட்டு அப்பால் செல்கிறான்.

கோவிலில் வைத்து காதம்பரி அசோக்கை சந்திக்கிறாள். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அம்பாளுக்கு விளக்கு ஏறுமறு தன் அக்கா கூறியதால் தான் கோவிலுக்கு வந்தாக அவள் கூறுகிறாள். செவ்வாயில் அம்பாளுக்கு ராகுகால பூஜை செய்வது விசேஷம் என அசோக்கும் கூறுகிறான்.

இதென்ன ராகு கால பூஜை என நண்பர் கேட்க, சோ இது முதற்கண் சாத்திர அங்கீகாரம் எல்லாம் பெற்றதில்லை என்றும், தான் பல அறிஞர்களிடம் விசாரித்தவரை இது காலப்போக்கில் ஏற்பட்டது எனவும் கூறி விளக்குகிறார். அம்பாளுக்கு பூஜை செய்தால் நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கு பிரீதி என பொருள்படும் வடமொழி ஸ்லோகம் இருப்பதைக் கூறி ஒரு வேளை இந்த வழக்கம் அதிலிருந்து டெவலப் ஆகியிருக்கலாம் என்றும், எது எப்படியாயினும் அதை செய்பவர்களுக்கு ஒரு மனவமைதியை இது கொடுப்பதால் இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்றும் கூறுகிறார்.

தனது வேண்டுகோளை அது என்னவென்று கேட்காமலேயே அசோக் நிராகரித்து விட்டதாகவும், ஆகவே அவன் அதை நிறைவேற்ற அவனைத் தூண்டுமாறு தான் அம்பாளை வேண்டிக் கொண்டதாகவும், அவள் தன் வேண்டுகோளை நிறைவேற்றுவாளா எனக் கேட்க, அவள் செய்ய மாட்டாள் என அசோக் கூறுகிறான். ஏன் அவ்வாறு கூறுகிறான் என காதம்பரி விடாது கேட்க, தானும் எதிர் வேண்டுகோள் அம்பாளிடம் வைத்திருக்கலாமல்லவா என அவன் கேட்கிறான்.

தான் கேட்க நினைத்தது என்ன என்பதை அவன் நிஜமாகவே அறிவானா என காதம்பரி கேட்க, தெரியும் என்கிறான் அசோக். அது என்ன என அவள் விடாது கேட்க, திருமணத்துக்கு முன்னால் தான் குடுமியை எடுத்துவிட வேண்டும் என்றுதானே அவள் கேட்க நினைத்தாள் என அவன் கூற, அவள் திகைக்கிறாள். ஏனெனில் அதுதான் உண்மை.

தன்னால் அசோக் திருமணத்துக்கு வரவியலாது என சாம்பு தன் இயலாமையை கூற, முதலில் திகைத்தாலும் அவரது நிர்ப்பந்தங்களையும் நாதன் புரிந்து கொள்கிறார். தனக்கு பதிலாக வேம்பு சாஸ்திரிகளை ஏற்பாடு செய்யட்டுமா எனக் கூறி, வேம்பு மிகச் சிரமதசையில் இருப்பதையும் அவரிடம் கூறுகிறார். வசுமதி தயங்கினாலும் நாதன் ஒத்துக் கொள்கிறார்.

வேம்பு வீட்டுக்கு சென்று சாம்பு விஷயத்தைக் கூற அவர் சாம்புவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறார். வேம்புவுக்கு மாதா மாதம் மளிகை சாமான்கள் வருவது பற்றிக் கேட்க, அவரும் தன் திகைப்பை வெளிப்படுத்துகிறார். அது சாம்புவாக இருக்குமோ என வேம்பு எதற்கும் கேட்டு வைக்க சாம்புவோ நானா எனக் கேட்டு, ஒரு அவுட்டு சிரிப்பை வெளியிடுகிறார்.

நாதன் வீட்டில் அவருக்கு சமையற்கார மாமி காப்பி கொண்டு வந்து வைக்கிறாள். வசுமதி எங்கே என அவர் கேட்க, அவள் ஜவுளி எடுக்கப் போயிருப்பதாகக் கூறுகிறாள். கல்யாண பெண்ணுக்கு வசுமதி நகைகளாக வாங்கிப் பூட்ட எண்ணூகிறாள் என்றும் கூற, அவர் காதம்பரி சர்வாலங்காரத்துடன் நகைக்கோலம் பூண்டு அபிநயம் பிடிப்பதை மனக்கண்ணால் பார்த்து திகைக்கிறார்.

அசோக் அப்போது வெளியிலிருந்து வர, அவனிடம் எங்கே போயிருந்தான் அவன் என நாதன் கேட்கிறார். வேதபாடசாலைக்கு சென்றதாகவும் அங்கு தன் நண்பர்களுக்கு பத்திரிகை வைத்ததாகவும் அவன் அவன் நண்பர்கள் பஸ் ஒன்றை அரேஞ்ச் செய்து கொண்டு முந்தைய தினமே வந்து விடுவார்கள் எனவும் கூறுகிறான். கல்யாணம் முழுக்க வேத கோஷங்களுடன் களை கட்டும் என நாதன் தமாஷாகக் கூறுகிறாள்.

கேட்டரர் வீட்டுக்கு ஃபோன் வருகிறது. அவரது ஆடிட்டர் நண்பர் தங்களாத்துக் கல்யாணத்தை ஜனவரி 19-ஆம் தேதி வைத்திருப்பதாகக் கூறி, அவர்தான் கேட்டரிங் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ள, அவர் தயங்குகிறார். அவரது மனைவியோ அவரிடமிருந்து ஃபோனை பிடுங்கி, அதே தேதிக்கு ஒத்துக் கொண்டு விடுகிறாள். தங்கள் பிள்ளைக்கும் அன்றுதானே கல்யாணம் என கேட்டரர் கேட்க, அதனால் என்ன 21-ஆம் தேதி வைத்துக் கொண்டால் போயிற்று என அலட்சியமாக பேசுகிறாள். சாம்பு சாஸ்திரி அவ்வளவு கெஞ்சியும் மனமிரங்காத அவள் இப்போது மட்டும் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்க, துளிக்கூட குற்ற உணர்ச்சியே இன்றி அந்தப் பெண்மணி மேலே பேசுவதைக் காண எனக்கே கோபம் வருகிறது. அந்த கேட்டரர் அவள் கன்னத்தில் பொளேர் என ஒரு அறை விட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

சாம்பு சாஸ்திரிகள் அப்போது வந்து தான் வேம்புவை தனக்கு பதிலாக அசோக் கல்யாணத்துக்கு புரோகிதத்துக்கு ஏற்பாடு செய்ததை கூற கேட்டரர் பேய் முழி முழிக்கிறார். அவர்து மனைவியோ அவர் தைரியமாக பேச வேண்டும் எனக் கூறுகிறாள்.

என்ன சார் இப்படியிருக்காங்க என நண்பர் கேட்க, அப்படித்தான் என சோவும் ஆமோதிக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/17/2010

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைந்தார்

தினகரன் இணையதளத்தில் வந்தது இந்த செய்தி

சென்னை : பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் இன்று (அதாவது நேற்று 16.05.2010) மாலை மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 62. இறுதிச் சடங்கு நாளை மாலை (அதாவது இன்று, 17.05.2010) நடக்கிறது. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, 'சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்' உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இவரது, 'மழைக்கால மல்லிகைகள், சந்திப்பு தொடரும்' நாவல்கள் பிரபலமானவை. அவரது எழுத்துக்கள் பல விருதுகளை அவருக்குப் பெற்றுத்தந்தன. சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் ராஜகோபால் முதல் தெருவில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒருவாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், இன்று மாலை மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் இரவு வால்மீகி நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு சுதா, சுபா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அனுராதா ரமணனின் இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

அவரது சிறை மற்றும் கூட்டுப் புழுக்கள் என்னைக் கவர்ந்தன. மாத நாவல்களை நிறைய வாங்கி வந்த காலகட்டத்தில் ஏதேனும் புதிய நாவல் அனுராதா ரமணனுடையதாக காணப்பட்டால் புரட்டிக்கூட பார்க்காமலேயே வாங்கி விடுவேன். ஏனெனில், எனக்கு அவரது கதைகள் சொதப்பாது என்பதில் அவ்வளவு நம்பிக்கை. கல்கியில் தொடர்கதையாக வந்த “மாம் ஃப்ரம் இண்டியா” ஒரே தமாஷாக விறுவிறென சென்றது.

பிரபல கேரக்டர் ஆக்டர் பாலசுப்பிரமணியத்தின் பேத்தி அவர். அவரது இளமை நினைவுகளை சுவைபட பல இடங்களில் எழுதியுள்ளார். அவரது திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. கணவர் மோசமாக அமைந்து விட்டார். நல்ல வேளையாக சீக்கிரமே மண்டையை போட்டார். தனது இருமகள்களையும் நல்லபடி வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்து தனது வாழ்க்கைக் கடமைகளை நல்லபடியாகவே முடித்தார்.

ஆம்பல்மலர் என்னும் பெயருடைய வலைப்பூவில் பார்த்த வரிகள் இங்கு இடுவது பொருத்தமாக இருக்கும். அவை அவர் அனுராதா ரமணனுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளன.

சகோதரி அனுராதா ரமணன் அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் கைவண்ணத்தால் உருவான எத்தனையோ கதைகளை படித்திருந்தாலும், தினமலர் வாரமலர் ''அந்தரங்கம்'' பகுதியில் தாங்கள் அளிக்கும் ஆறுதலும், அரவணைப்பும், வழிக்காட்டலும் எம்மை மெய்மறக்கச் செய்யும். அதன் தாக்கம் தான் இக்கடிதம்.

தவறுகள் பல விதமாய்
தறிக்கெட்ட பாதைகளில்
தவளும் நினைவுகளோ
தகிக்கிறது எழுத்துக்களில்.

பயமாய், பாவமாய்,
நடுக்கமாய், நாசரமாய் (நாரசமாய் )
உணர்வுகள் எத்தனையோ
அத்தனையும் எழுத்துக்களில்.

பரவசமோ உணர்வினிலே,
தடுமாற்றமோ மனதினிலே.
சீரமைத்துக் கொள்ளவே,
வழிகளைத் தேடியே,
உமை நாடி வருகின்றார்,
அந்தரங்கத்தை வெளிப்படுத்தி.

ஆறுதல் அளிக்கும் அம்மாவாய்,
வழி நடத்தும் சகோதரியாய்,
தட்டிக் கொடுக்கும் தோழியாய்,
ரணம் அகற்றும் மருத்துவராய்,
பாவப்பட்ட ஜென்மங்களுக்கு
கடவுளாய்,
உமை நினைத்து
வெள்ளைத் தாட்களில்
கோடுகளை கிறுக்கி வைப்பார்
கோளங்களாய் மாற்றச் சொல்லி.

கழிவுகளை கழித்து விட்டு,
சுகமென்னும் நினைவுகளை
மனத்தினிலே சுமந்திடவே,
மனச்சுமைகளை உம்மிடமே
இறக்கியே வைக்கின்றார்.

நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும்
வாசிக்கின்ற எங்களையே
வருத்தெடுக்கும் எண்ணங்கள்.
மனத்தையே உறைய வைக்கும்.
உடலையும் சிலிர்க்க வைக்கும்.
கண்களை கரைய வைக்கும்.

வந்து உமை தாக்கும்
வேதனை அம்புகளால்
ஆறா ரணமாய்
நிற்கா குருதியுடன்
நித்தமும் துடிப்பீரோ.


அவர் வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக ரசிப்பவர் என்பதை பல முறை பலவிதமாகக் கூறியுள்ளார். உதாரணத்துக்கு:

சந்திப்பு : மாயன் (குமுதம் ஜங்ஷன்): “நான் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் பக்தை. அன்னைக்காக தினமும் நூறுரூபாய் வரை பூக்கள் வாங்குவேன். தாமரைப்பூ, செண்பகப்பூ என்று பலவிதமான பூக்கள்.

எழுதுவதற்காக உட்கார்ந்தால் எழுத்துகள், வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது என் பழக்கம். எழுதிக் கொண்டிருக்கிறபோதே முன்பின் தெரியாத சிநேகிதிகள் எனக்கு போன் செய்வார்கள். அவர்களின் பிரச்னையை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பிரச்னையை போனிலேயே தீர்த்து வைப்பேன்.

பகல் நேரத்தில் என்னை யாராவது பார்த்தால் புல் மேக்கப்பில் இருப்பேன். ‘மேடம், எங்கேயாவது வெளியே போறீங்களா?’ என்று என்னைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள். இந்த அலங்காரத்தை நான் வேஷமாக நினைப்பதில்லை. உற்சாகமாக இருக்க இதுவும் அவசியம் என்று எனக்குப் படுகிறது.


அவரது பூதவுடல் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் மூலம் சாவா வரம் பெற்றவராகவே இருப்பார் என்பது ஒரு க்ளீஷேவாக பட்டாலும், இங்கு முற்றிலும் பொருந்துகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/16/2010

சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?

உண்மையாகவே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது என்னைப் போன்ற வெளி ஆட்களுக்கு சற்றுக் கடினமான காரியமே. இதே டாபிக்கை உண்மை தமிழன் ஆதண்டிக் செய்திகளுடன் 20-பக்கங்களுக்கு ஒரு சிறிய பதிவாக எழுதியிருக்கும் சக்தி படைத்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன். இருந்தாலும் இது சம்பந்தமாக எனது கருத்துக்களை கூறலாம் என எண்ணுகிறேன்.

முதற்கண் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடையது முழுக்க முழுக்க வெளிமனிதனின் பார்வை கோணத்திலேயே இருக்கும். சம்பந்தப்பட்ட மாற்றங்களின் பின்புலனாக அதில் சம்பந்தப்பட்டவர்களது ஆசைகள், அபிலாஷைகள் பற்றி நான் ஒன்றும் அறியேன். ஆனால் பல நல்ல சீரியல்கள் இம்மாதிரி சேனல் தாவல்களால் குட்டிச்சுவரானது மட்டும் நிச்சயம்.

உதாரணத்துக்கு நான் தில்லியில் வசித்த போது, தொண்ணூறுகளின் இறுதியில் மௌலியின் சீரியல் ஒன்று, சுந்தரவனம் என்னும் தலைப்பில் சன் டீவியில் வந்தது. அது முடிவடைய இன்னும் ஓரிரு எபிசோடுகளே பாக்கி இருக்கையில் அந்த சீரியலே சன் டிவியிலிருந்து தூக்கப்பட்டது. தயாரிப்பாளர் தூக்கினாரா, சன் டிவி நிர்வாகம் தூக்கியதா என்பதெல்லாம் நான் அறியேன். பார்வையாளர்களை தொங்கலில் விட்டுச் சென்றனர். அது அங்கிருந்து ராஜ் டிவிக்கு சென்றிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் உள்ளூர் ஆப்பரேட்டர் ராஜ் டிவி தரவில்லை. ஆகவே அந்த சீரியல் எப்படி முடிந்தது என்பதை வாய் வார்த்தையாகத்தான் சென்னையில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ராஜ் டிவியில் அதுவரை நடந்த கதையை மூன்று எபிசோடுகளில் சுருக்கமாக வெளியிட்டு, பிறகு கடைசி 2 அல்லது 3 எபிசோடுகளை வெளியிட்டு அந்த சீரியலை முடித்து வைத்தனர் என்பதை அறிந்தேன். அதே தயாரிப்பாளர் பிறகு கங்கா, யமுனா, சரஸ்வதி என்னும் அமர்க்களமான சீரியலை ஆரம்பித்தார். அது ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்பதை ஸ்டார் மூவீஸ் சேனலில் ஒரு படத்தைப் பார்க்கையில் எதேச்சையாக அறிந்தேன். அந்த ஸ்டோரி லைனை பின்தொடர்ந்தவரை சீரியல் விறுவிறுவென போயிற்று. ஆனால் இந்திய மசாலாக்கள் சேர்த்தவுடன் தொய்வடைந்தது. இருந்தாலும் பார்க்கும்படியாகத்தான் இருந்தது. அதுவும் ஒரு உச்சக்கட்டத்துக்கு போகும் தருவாயில் காரணம் ஏதுமின்றி நிறுத்தப்பட்டது.

இப்போது சரித்திரம் திரும்பியது. அதன் தயாரிப்பாளர் இந்த சீரியலை விட்ட இடத்திலிருந்து தொடர சன் டீவிக்கே திரும்பினார். இங்கு அதன் பெயர் கங்கா, யமுனா, சரஸ்வதி சங்கமம் என வந்தது. முதல் சில எபிசோடுகளும் கச்சிதமாக வந்தன. பிறகு என்னவாயிற்று எனத் தெரியவில்லை. ராஜ் டிவி ஏதேனும் சட்ட மிரட்டல் விடுத்திருக்கும் என நான் ஊகிக்கிறேன். ஏனெனில் அந்த சீரியலுக்கும் ஒரிஜினல் கங்கா யமுனா சரஸ்வதி சீரியலுக்கும் சம்பந்தம் இல்லை திடீரென ஒரு நாள் ஓர் அறிவிப்பு வந்தது. பிறகுதான் ஆரம்பித்தன சொதப்பல்கள் மேல் சொதப்பல்கள். கடைசியில் சீரியலை முக்கி முனகி முடித்தபோது கதை என்னவென்று சீரியல் தயாரித்தவருக்கே தெரிந்திருக்குமா என்பதே ஐயத்துக்குரியதாக இருந்தது. ஒரு எபிசோட் முழுக்க முழுக்க அக்கதை பாத்திரங்கள் பங்கெடுத்த ஒரு கேம் ஷோவாகவே இருந்தது இன்னொரு கூத்து.

இதெல்லாம் தொடர்ச்சிகளின் முக்கியத்துவம் உள்ள கதைகள். ஆனால் குஷ்புவின் ஜாக்பாட் அப்படியெல்லாம் இல்லையே என நினைக்கலாம். ஆனால் அம்மாதிரியான ஷோக்களும் பாதிக்கப்படுவது வெளிப்படையாக பல முறை தெரிய வந்துள்ளது.

விசுவின் அரட்டை அரங்கம் சன் டிவியிலிருந்து ஜெயா டிவிக்கு போனதில் அத்துடன் கூடவே சென்ற விசுவும் அங்கே சோபிக்கவில்லை, இங்கே அரட்டை அரங்கத்தை ஏற்று நடத்தும் கரடி தாடி டி.ராஜேந்தரும் சோபிக்கவில்லை. ஒரு சீரியலின் முக்கிய அங்கம் அதன் தீம் இசை. அதுதான் இம்மாதிரியான மாறுதல்களில் முக்கிய பலி. குஷ்பூ ஜாக்பாட்டை எங்கே தொடருவார் எனத் தெரியவில்லை. ஆனால் தீம் சாங்குக்கு அவரிடம் காப்புரிமை இருந்தால் ஜெயா டிவி அதை தொடர்ந்து உபயோகிக்க இயலாது. புதிதாக யார் வந்தாலும் குஷ்புவை பார்த்து வழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கும் ஏற்பு வருவது கஷ்டமே.

குஷ்புவும் வேறு இடத்தில் போய் சோபிப்பாரா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். அந்த தீம் சாங் ஜெயா டிவியுடையதாக இருந்தால் அதை அவர் செல்லும் கலைஞர்/சன் டிவிகளில் உபயோகிக்க இயலாது.

திமுகவும் அதிமுகவும் இம்மாதிரி அரசியல் மாற்றுக் கருத்துக்களையெல்லாம் தனிப்பட்ட விரோதமாகப் பார்ப்பதில் நல்ல நிகழ்ச்சிகள் பலியாவதுதான் நடக்கிறது. இன்னும் நிலுவையில் இருக்கும், குஷ்பு தயாரித்த 12 எபிசோடுகளும் ஒளிபரப்பப்பட மாட்டாது என்பது ஒரு பெரிய பொருளாதார இழப்பு மட்டுமல்ல, உழைப்பு விரயமும் ஆகும்.

குஷ்பு செய்தது சரியா, ஜெயா டிவி செய்தது சரியா என்பதையெல்லாம் ஆராய்வது என் சக்திக்கு மீறியது. நான் சொலதெல்லாம் ஏற்கனவேயே முதலில் குறிப்பிட்டுள்ள வெளி ஆளின் பார்வைக் கோணமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 83 & 84)

எபிசோட் - 83 (12.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் அவர், வசுமதி, காஞ்சனா மற்றும் அவள் கணவன் முரளி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். காஞ்சனா அசோக் காதம்பரி சம்பந்தத்தை உறுதி செய்து கொள்ளும் முகமாய் தட்டை மாற்றிக் கொள்ளச் சொல்ல, நாதன் இன்னும் சற்றே பொறுக்கலாம் எனக் கூறுகிறார். தங்கள் பிள்ளை அசோக் தங்களாலேயே புரிந்து கொள்ள ரொம்பக் கடினமானவன், அவனை இந்தக் காதம்பரி ஒரே சந்திப்பிலேயே புரிந்து கொண்டிருப்பாள் என்பதை நம்ப அவருக்கு கடினமாக உள்ளது.

காதம்பரி அருகிலுள்ள கோவிலுக்கு வந்திருப்பதை தெரிந்து கொண்ட அவர் அங்கு போய் அவளுடன் மனம் விட்டுப் பேசுகிறார். அசோக் பற்றிய அவளது கருத்துக்களை அவர் அவளிடமிருந்தே நேரடியாக தெரிந்து கொள்ளவே வந்ததாகவும், அவளது முடிவு அவளது அக்கா மற்றும் அத்திம்பேரின் தூண்டுதல்களால் உருவாக்கப்பட்டிருந்தால் அது சரியானதாக இருக்காது எனவும் அவர் கூறுகிறார். காதம்பரியும் தனது கருத்துக்களை வெளிப்படையாகவே கூறுகிறாள். முதலில் அசோக் குடுமி வைத்துக் கொண்டிருந்தது, அவனது அதீத செய்கைகள் ஆகியவை பற்றி குறைவாக என்ணினாலும் நேரில் சந்தித்து பேசிய பிறகு தான் மனம் மாறியதாகவும் கூறுகிறாள். தான் கண்டுணர்ந்த அவனது நல்ல பக்கங்களையும் வலியுறுத்துகிறாள். இருப்பினும் நாதன் முழுதாக கன்வின்ஸ் ஆகாதது போலத்தான் தோன்றுகிறது.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரது சம்பந்தி சிகாமணி முதலியார், மாப்பிள்ளை ஆகியோர் வந்திருக்கின்றனர். வேம்புவின் மகள் ஜயந்தி வர மறுத்து விட்டதாக மாப்பிள்ளை கூறுகிறான். இவர்கள் அதைக் கேட்டு வருத்தப்படுகின்றனர். வரும் ஞாயிறன்று வேம்பு குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு விசிட் செய்ய வேண்டும் என சிகாமணி முதலியார் கூற, வேம்பு ஜயந்தியை என்ணி தயங்குகிறார். இருப்பினும் மாப்பிள்ளை அவரை கன்வின்ஸ் செய்கிறான்.

நாதன், நீலகண்டன், வசுமதி, பர்வதம் ஆகியோர் நாதன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். நாதன் தனது தயக்கங்களை எடுத்துரைக்கின்றார். இப்போதைக்கு ஒத்துக் கொண்டுவிட்டு பின்னால் அப்பெண் மனத்தாங்கல்பட்டால் என்ன செய்வது என வசுமதி கேட்க, அப்படியெல்லாம் எந்த கல்யாணத்தையும் பிரெடிக்ட் செய்ய முடியாது என நீலகண்டன் எடுத்துக் காட்டுகிறார். பல திருமணங்கள் எதிர்பார்ப்புகளின் இரு பக்கங்களுக்கும் சென்றுள்ளன.

அதையே சோவின் நண்பரும் கேட்கிறார், இத்தனை ஜாதகங்கள் பார்த்தும் பல திருமணங்கள் ஏன் தோல்வியில் முடிகின்றன என்று.

சோ அவருக்கு ஜாதகங்களின் லிமிட்டுகளை விளக்குகிறார். அவை வெறுமனே சூசகமாகவே சொல்லக் கூடியவை என்றும், ஒரேயடியாக அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது என்றும் கூறுகிறார். திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்குமே கடமைகள் உண்டு உரிமைகளும் உண்டு. அவரவர் கடமைகளை நன்கு செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும் எனவும், அதன்றி ஒவ்வொருவரும் உரிமைகளை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் கஷ்டமே எனவும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் சம்பாஷணை தொடர்கிறது. கடைசியாக அசோக் பேசாமல் சிவன் கோவிலின் பூக்கட்டிப் பார்க்கலாம் என ஆலோசனை கூற, வசுமதி அது சரியாக வருமா என தயங்குகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 84 (13.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிவன் கோவிலில் பூக்கட்டிப் பார்த்து விடலாம் என அசோக் கூற, அதெல்லாம் சரியா வருமா என வசுமதி சந்தேகத்தைக் கிளப்புகிறாள். ஒரு வேளை வேண்டாம் என வந்து விட்டால் என்ன செய்வது என அவள் மனம் மயங்க, அப்போ அது ஈஸ்வர சங்கல்பம் என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அவன் பதிலளிக்கிறான். பேச்சு இதிலேயே தொங்க, நீலகண்டன் அசோக் அவனை அடிக்கடி பார்க்க வரும் தேஜஸ்வியான அந்த தபஸ்வியை அவன் மனதார பிரார்த்தித்து அவரை தருவித்து வழிக்காட்டும்படி கூறலாம் எனக்கூறுகிறார். அருகில் உள்ள கோவிலுக்கு காதம்பரியை கூட்டிப்போய் அவர்கள் இருவரும் ஒன்றாகவே பிரார்த்திக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.

அசோக்கும் காதம்பரியும் கோவிலில் சந்திக்கின்றனர். காதம்பரி அவன் ஏன் தன்னை வரச்சொன்னான் என கேட்க அவனும் நீலகண்டன் சொன்ன ஆலோசனையை அவளிடம் கூற, அவள் அதை எதிர்க்கிறாள். இது 21-ஆம் நூற்றாண்டு என அவள் கூற, நூற்றாண்டு என்பது மில்லெனியத்தில் ஒரு துளியே, சத்தியம் என்பது மாறவே மாறாது என மிருதுவாக ஆனால் அழுத்தமாகவே கூறுகிறான்.

காதம்பரி தனக்கு விதிக்கப்பட்டவள் இல்லை என்றால் அந்த தபஸ்வி நிச்சயமாக வர மாட்டார் எனவும் கூறுகிறான். இருவருமாக பிரார்த்திக்க திடீரென எங்கிருந்தோ இடியும் மின்னலுமாக மழை வருகிறது. கோவிலுக்கு வெளியிலிருந்து அந்த தேஜஸ்வி பிரவேசிக்கிறார். இவர்களை நோக்கி வருகிறார். இவர்களும் அவரை நோக்கிச் செல்கின்றனர். அசோக் ஒரு பரவச நிலையிலிருக்கிறான். காதம்பரி ஒரு பிரமிப்பில் இருக்கிறாள். அவர் ஒன்றுமே பேசாது அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்து திரும்பி போகிறார். அசோக் அவரை வணங்கிய வண்ணமே இருக்க, கடைசியில் காதம்பரி அவசர அவசரமாக ஒரு கும்பிடு போடுகிறாள்.

காதம்பரி தன் அக்கா, அத்திம்பேர், பிச்சுமணி ஆகியோரிடம் தனது இந்த அனுபவங்களைக் கூற, அவர்கள் பிரமிப்பில் ஆழ்கின்றனர். அந்த சன்னியாசி எங்கிருந்து வந்தார் என காஞ்சனா கேட்க, அவர் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை என்கிறாள் காதம்பரி. ஒரு வேளை ஏதேனும் செட்டப் வைத்து ஒரு சாமியாரை வரச்சொல்லியிருப்பானோ என பிச்சுமணி சந்தேகத்தைக் கிளப்ப, சான்ஸே இல்லை என்கிறாள் காதம்பரி. சன்னியாசியை வேண்டுமானால் செட்டப் செய்யலாம், ஆனால் அந்த இடியையும் மழையையும் எப்படி வரவழைக்க இயலும் என அவள் கேட்கிறாள்.

தெய்வ சங்கல்பம் இதுதான் என நிச்சயமாகத் தெரிகிறது என அவள் அத்திம்பேர் கூற, காதம்பரி தனது குழப்பங்களைத் தெரிவிக்கிறாள். அதாகப்பட்டது, அசோக்கின் பல எதிர்மறை விஷயங்கள் தெரிந்த நிலையிலும் அவனிடம் தன்னை ஏதோ ஒரு சக்தி இழுக்கிறது என அவள் பிரமிப்புடன் கூறுகிறாள். ஒரு வேளை ஏதேனும் பூர்வ ஜன்ம தொடர்பால் அவர்கள் இணைக்கப்பட்டவர்களோ எனக் கேள்வி வருகிறது.

இந்த இடத்தில் சோ தன் நண்பரிடம் துரோபதை பாண்டவர் ஐவரை மணந்த கதையின் பின்புலனைக் கூறுகிறார். முந்தைய பிறவியில் பாண்டவர்களுக்கும் துரோபதைக்கும் விதிக்கப்பட்டவையே ஒருங்கிணைந்து அவள் அவர்களை மணக்க நேர்ந்ததை அவர் எடுத்துரைக்கிறார்.

அப்படியே கூட இருக்கலாம் என காதம்பரி ஒத்துக் கொள்ள, அவளது அத்திம்பேர் நாதன் வீட்டுக்கு போன் செய்கிறார். பிறகு குறிப்பிட்ட நாளன்று சந்தித்துப் பேசுகின்றனர். கல்யாணம் நடக்க வேண்டிய லௌகீகங்களை விவாதிக்கின்றனர். தங்கள் ஒரே மகன் அசோக்குக்கு எப்படியெல்லாம் தடபுடலாக கல்யாணம் செய்ய வேண்டும் என அவர்கள் திட்டமிட, அசோக் அப்பக்கம் வந்து தான் ஒன்று சொல்லலாமா எனக் கேட்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/14/2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பை வென்ற ரகசியம்

எனது கணினி குரு முகுந்தன் அனுப்பிய மின்னஞ்சல். வழக்கம் போலவே பலருக்கு வந்திருக்கும்தான், இருந்தாலும் கீதாசார்யன் சொன்ன மாதிரி, பலனை எதிர்பாராது அதை இங்கே இடும் கடமையை நிறைவேற்றுகிறேன்.

































ஏதோ நம்மால் ஆன மொக்கை. சும்மா சொல்லப்படாது, முகுந்தன் நல்லாவே ஆணி பிடுங்கறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/13/2010

தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்

வினவு பதிவுகளுக்கு போய் பின்னூட்டம் போடுவதை நிறுத்தினாலும் அதற்காக அவற்றைப் படிக்காமல் எல்லாம் இல்லை. அப்பதிவுகளில் பலவற்றில் தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களின் வேஷமும் துகிலுரியப்படுவதை பார்க்க தமாஷாக இருக்கிறது.

உதாரணத்துக்கு கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்டையே எடுத்துக் கொள்வோம். அப்பதிவில் தன் குலவழக்கப்படி வினவு எப்பாடுபட்டாவது பார்ப்பனீயத்தை கொண்டு வருவதையும் செய்துள்ளது இப்பதிவுக்கான விஷயம் இல்லை என்றாலும் போகிற போக்கில் குறிப்பிட்டு விட்டு செல்கிறேன். கூடவே சிலருக்கு (குழலி, தமிழ்சசி) வன்னிய டோண்டு என பட்டம் அளித்து தனது டோண்டு ஃபிக்ஸேஷனை மீண்டும் நிரூபிக்கும் காமெடி பீஸான வினவு பற்றியும் இப்பதிவு இல்லை.

வினவே எதிர்பார்க்காத அளவில் ஒரு வன்னிய பதிவர் சீறி எழுந்து தனது சாதியை டிஃபண்ட் செய்துள்ளார். அதுகூட பிரச்சினை இல்லை, சகட்டு மேனிக்கு பார்ப்பானரை சாடி எல்லா பார்ப்பனர்களையுமே ஒட்டு மொத்தமாக இழிவுபடுத்தும் ஒரு சான்சையும் விடாத அவர் தங்களை முற்போக்காளர்கள் என சுயமுத்திரை குத்திக் கொள்பவர்களில் முக்கியமானவர் என்பதை கூறிவிட்டே இப்பதிவுக்கு செல்கிறேன்.

வினவில் அப்பதிவு வன்னிய சாதிவெறியர்களின் செயல்பாடு பற்றியதாகும். முதல் பின்னூட்டமே நான் போன பாராவில் குறிப்பிட்ட பதிவருடையதுதான். அவரின் பின்னூட்டங்களை இங்கே ஒன்றன் பின் ஒன்றாக போடுகிறேன். ஒவ்வொரு பின்னூட்டத்துக்குமான மற்றவர்களது எதிர்வினைகளை போட்டுக் கொண்டிருந்தால் பதிவு மிகப்பெரியதாகி விடும். ஆகவே தேவைப்பட்டவர்கள் சிரமத்தைப் பார்க்காது அங்கு போய் அவற்றை தேடிப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட பதிவர் பெயர் அருள்:

1. //கொளத்தூரில் வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான். காலம் காலமாக நிலவிவரும் சாதி வேறுபாடுதான் இருவரையும் பிரிக்கிறது. கல்வி, பொருளாதார நிலைகளில் மிகமிகமிக பின் தங்கியிருக்கும் வன்னியர்களின் அறியாமையால் சில பிரச்சினைகள் எழலாம். அது தவறுதான். அதற்காக வார்த்தைக்கு வார்த்தை ‘வன்னிய சாதிவெறி’ என்பது வன்னியர்களுக்கு எதிரான உங்களின் காழ்ப்புணர்ச்சியைதான் காட்டுகிறது.//

2. சீ.பிரபாகரன் என்னும் வன்னிய பதிவர் தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதி எடுத்துக்காட்டியுள்ளார். அவருக்கு பதிலாக அருள் கூறுகிறார், //சீ.பிரபாகரன் – நீங்கள் கூறுவது உண்மை என்று நான் சாட்சி கூறுகிறேன்//.

3. //கொளத்தூர் பகுதியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி மீது போடப்பட்ட ஒரு பொய் வழக்கினை காரணமாக வைத்து கோயில் விழாவில் மேளம் வாசிக்க ஆதிதிராவிடர்களை அழைக்கவேண்டாம் என்று முடிவுசெய்த வன்னியர்கள் அருந்ததியினரை அழைத்தனர்.
மேளம் வாசிப்பது ஒரு தொழில் என்று எடுத்துக்கொண்டால், அதனை எங்குவேண்டுமானாலும் செய்வதற்கு அருந்ததியினருக்கு உரிமை இல்லையா?
ஆனால், மேளம் வாசித்த அருந்ததியினரை ஆதிதிராவிடர்கள் மிரட்டியுள்ளனர். அருந்ததியினருக்காக வன்னியர்கள் பேசப்போய் கலவரம் ஏற்பட்டுள்ளது.
வன்னியர்கள் சண்டையிட்டது தவறுதான். ஆனால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துக்கொண்டது மட்டும் நியாயமா?
வன்னியர்கள் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக நடப்பது சாதி வெறிதான். அப்படியானால், அருந்ததியினருக்கு எதிராக ஆதிதிராவிடர்கள் நடந்துகொண்டதற்கு என்ன பெயர்?
வன்னியர்களை பார்ப்பனர்களுக்கு இணையாக பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்//.

4. ///அருள் அவர்களே,வன்னியரின் நிலையும், தலித்துகளின் நிலையும் ஒன்றுதான சற்று விளக்குகளேன்///
Kanisays:
‘நான் உயர்ந்த சாதி, நீ தாழ்ந்த சாதி’ என்கிற வீண் சாதிப்பெருமையை தவிர – கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை போன்ற எல்லாவற்றிலும் வன்னியரின் நிலையும், தலித் மக்களின் நிலையும் ஒன்றுதான்.
உண்மையில், தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் என்பவை எல்லாம் – வன்னியர்களும் பறையர் பிரிவினரும் அதிக அளவில் வாழும் பகுதிகள்தான்.
இந்த அவலத்தை எதிர்த்து போராடுவதே இன்றைய தேவை//

5. //அதிகாரமிக்க பதவிகளில் வன்னியர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?
டிஐஜி பதவி ஒன்றுதான். அந்த ஒன்றும் வன்னியருக்கு இல்லை என்று சொல்வதில் என்ன பிரச்சனை? டிஐஜி பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு டிஐஜியும் வன்னியர் இல்லை.
உண்மையை சொல்வதால் வெறி ஏறும் என்றால், உண்மையை சொல்லக்கூடாதா?//

6. //வால்பையன்says:
// ///எனது மகளுக்கு நான் சாதி சான்றிதழ் தரவில்லை, தர மாட்டேன் என்று சொல்லியிருக்கேன்! அடுத்த தலைமுறையிலாவது சாதி ஒழிய அதை செய்வோம் முதலில்!சாதிவாரியான கணகெடுப்பில் கூட நான் ”சாதி இல்லை” என்றே சொல்வேன்/// //
இது என்ன முற்போக்குன்னு யாராவது விளக்குங்களேன்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவைன்னு அண்ணல் அம்பேத்கர் “பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு”னு ஒரு கட்டுரை எழுதியிருக்கார். அதப்படிங்க வால்பையன்//.

7. //அருணா says:
கட்டுரையாளர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரவாக எழுதிஉள்ளார்/// //
அப்படி கூறிவிட முடியாது.
வன்னியர்களும் தலித் மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பது ஆதிக்க சாதியினரின் விருப்பம்.
அதைத்தான் இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.
வன்னியர்களும், தலித்துகளும் நேரடியாக பேசினால் பிரச்சனைகளை தீர்க்க முடியும். நடுவில் மற்றவர்களை விடுவது பூனைகள் தோசையை பங்கிட குரங்கிடம் போன நிலைதான் ஏற்படும்.
ஆதிக்க சாதியினரிடம் எச்சரிக்கையாக இருப்பது – வன்னியர், தலித் இரண்டு பிரிவினருக்குமே அவசியம்//.

8. //சரி. என்னதான் முடிவு?
சாதி வெறி என்பது எல்லா மேல் மற்றும் நடுத்தர சாதிகளிடமும் இருக்கிறது. வன்னியர்களுக்கு மேல் பார்ப்பனர்கள் + வெள்ளாளர்கள், பறையர்களுக்கு மேல் வன்னியர்கள், அருந்ததியினர்களுக்கு மேல் பறையர்கள். இது இந்து மதம் கொடுத்த கொடை. காலம் காலமாக பலர் முயற்சித்தும் இன்றுவரை முடிவு எதுவும் இல்லை. நேற்றைவிட இன்று பரவாயில்லை என்பதே நிலை. அதற்காக சாதிவெறியை அனுமதிக்க வேண்டும் என்பது இல்லை.
குற்றம் இழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது எந்த சாதியின் வெறியானாலும் சரி.
பா.ம.க வன்னியர்களை நம்பி அரசியல் செய்கிறது. ஆனால், சாதிவெறியை அதுதான் தூண்டுகிறது என்பதும், பா.ம.க.வால்தான் சாதிச்சண்டையே வருகிறது என்பது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.
அதே போல விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்கின்றனர் என்பதும் தவறு.
பா.ம.க இல்லாமல் போனால் வன்னியர்களுக்கு நல்லது என்பதும், வி.சி.க்கள் இல்லாமல் போனால் தலித்துகளுக்கு நல்லது என்பதும் – ஆதிக்க சாதி பிரச்சாரம்.
பா.ம.க இல்லாமல் போனால் மிகமிக பின் தங்கிய சமூகமான வன்னியர்களுக்காக பேச வேறு யார் இருக்கா?
வி.சி.க்கள் இல்லாமல் போனால் ஒடுக்கப்படும் சமூகமான தலித்துகளுக்காக பேச வேறு யார் இருக்கா?//

9. //உழைக்கிற வன்னியரையும் தலித்தையும் பிரிப்பவை பா.ம.கவும், வி.சியுமா? தலைக்கீழா மாற்றி பேசாதீர். இரண்டுசாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்ததான் இரண்டு அமைப்புகளும் பாடுபட்டன.//

10. //கல்லூளி மங்கன்says:
// ///பாமக பேசியதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு
1. நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்2. என் வாரிசுகள் யாரும் கட்சியில் சேர மாட்டார்கள்…………………………………………………./// //
ஓ, தெரியுமே.
1950களில் வன்னியர்களுக்காக அரசியல் கட்சி தொடங்கிய தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் இராமசாமி படையாட்சியும், பொதுநலக் கட்சியின் மாணிக்கவேல் நாயகரும் 1952 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இல் வெற்றிபெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் மாணிக்கவேல் நாயகருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இராஜாஜி முதல்வர் ஆனார். 1954 இல் காமராஜர் முதல்வராக இராமசாமி படையாட்சியும் ஆதரவு கொடுத்து அமைச்சரானார்.
இரண்டு பேருமே கட்சியை கலைத்துவிட்டு தொண்டர்களை காங்கிரசில் சேரச்சொன்னார்கள்.
இதனால், வன்னியர்களுக்காக பேச அரசியல் கட்சி இல்லாமல் போய்விட்டது.
இதனால்தான் “நானோ என் மகனோ சட்டமன்றா நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என்று மருத்துவர் இராமதாசு கூறினார்.
இதன்படி, அவர் இன்றுவரை எந்த பதவிக்கும் வரவில்லை.
மற்றபடி காலத்துக்கு ஏற்ப சத்தியத்தை கைவிடுவது ஒன்றும் கொடூர குற்றம் இல்லை//.

11. /////ஒரு தடவை தீ மூ கா மற்றொரு முறை ஆ தீ மூ கா என்று மாறுபடுகிறாரே////
பா.ம.க கூட்டணி மாறுவது மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? கூட்டணி மாறாத ஒரு தேர்தல் கட்சியை காட்டுங்களேன்//.

12. //வன்னியர்களுக்கு கொள்கை இல்லை என்று சொன்னால், வேறு எவருக்குமே கொள்கை இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்
காலை 8 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருந்த டாஸ்மாக் கடைகள் இப்போது 10 to 10 என நேரம் குறைந்தது பா.ம.கவால்தான்.
முன்னணி சினிமா நடிகர்கள் திரைப்படஙகளில் புகைப்பிடிக்காமல் இருப்பதும் பா.ம.கவால்தான்.
மற்றபடி மதுக்கடைகளை ஒலிப்பதும், இரசிகர் மன்றங்களை ஒளிபதும் பா.ம.கவுக்கு நேர்ந்துவிட்ட வேலைகள் அல்ல. கடைவிரித்தோம் கொள்வார் இல்லை என்பது போல மருத்துவர் இராமதாசு போராடுகிறார். நடந்தால் நடக்கட்டும், நடக்காவிட்டால் போகட்டும்
மற்றபடி ‘வன்னிய சாதிவெறியர்கள்’ என்று எல்லா வன்னியர்களையும் பொத்தாம் பொதுவாக சொல்வதை கண்டிக்கிறேன்//.

13. //பார்ப்பனர்களைப் போல (எல்லா) வன்னியர்களும் சாதிவெறியர்கள் என்பது உங்கள் கருத்தா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க//.

14. ////சாதி வெறி பிடிச்ச சனியன்களா!// என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்குமே பொருந்தும் – ஏனென்றால், பலப்பல உட்பிரிவுகள் இல்லாத சாதி எதுவும் இல்லை.
சாதி இல்லாத தமிழனும் யாரும் இல்லை. கொஞ்சம் உங்கள சுத்தி பாருங்க. மாமா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா – எல்லா உறவுகளும் யாரை கல்யாணம் பண்ணியிருக்காங்க//?

15. //காடுவெட்டி குருவுக்கு வரவேற்பு கொடுத்த வன்னியர்களை எந்த அடிப்படையில் “வன்னிய வெறியர்கள்” என்று கூறுகிறீர்கள்//?

16. //வால்பையன் says:
// ///எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது, என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன், அதுவே மதத்திற்கும்!// ///
எவனனொருவன் தன் சாதி சிறந்தது/உயர்ந்தது என்கிறானோ, அவன் நிச்சயமாக சாதிவெறியன் என்பது சரிதான்.
என் சாதிகாரர்கள் நல்லவர்கள் என்பதும் சாதிவெறியா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
சாதி, மதம் எல்லாம் மனிதனை பிடித்த அடையாளம். மத அடையாளத்தை மாற்ற முடிகிறது. சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.
ஒருவன் எந்த அடையாளத்தினால் ஒடுக்கப்படுகிறானோ, சுரண்டப்படுகிறானோ, அந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்க்க அதே அடையாளத்தை பயன்படுதுவதில் தவறு எதுவும் இல்லை. உண்மையில் அதுதான் விடுதலைக்கு வழி.
எனவே, அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றிணைவது அடக்குவதற்கா? அல்லது விடுதலைக்கா? என்பதுதான் முக்கியம்.
எனவே, தலித், ஓ.பி.சி, முஸ்லீம் என்கிற அடையாளங்கள் பெரும்பாலும் விடுதலைக்கானவைதான் என்பது எனது கருத்து//.

17. //வால்பையன் says:
//சாதி அடையாளம் பிறப்பிலேயே வருகிறது.// என்பது ஒரு உண்மை. சாதியை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த உண்மையை சொன்னால் எப்படி வர்ணாசிரம தர்மத்தை வளர்ப்பதாகும்?
சான்றிதழில் சாதிப்பேரை போடாமல் விடுவது. இடஒதுக்கீட்டை ஒழிப்பது – இதனாலெல்லாம் சாதி ஒழியும் என்பது உயர்சாதியினர் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வஞ்சகக் கற்பனை.
மகளுக்கு சாதிசான்றிதழ் தராமல் விடுவதனால் “இனிவரும் சமூகமாவது சாதியில்லாமல் வரும்” என்று மனப்பால் குடிப்பது ஒருமூட நம்பிக்கை.
//சாதி ஒழியாத வரைக்கும் இப்படி அடிச்சிகிட்டு சாவறது தான் நடக்கும்!// என்று நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். அப்படியே, சாதி ஒழிய ஒரு நல்லவழி சொன்னால் பயனாக இருக்கும்//

சும்மா சொல்லப்படாது, மனிதர் தனது சாதிக்கு நன்றாகவே சப்பைக்கட்டு கட்டுகிறார். ஏதோ ஓரிருவர் தனது வன்னிய சாதியில் இருப்பதற்காக சாதி மொத்தத்தையுமே வெறிபிடித்தவர்கள் என லேபல் போடக்கூடாது என உத்தமமாக குறிப்பிடுபவர், பார்ப்பனர்கள் மேல் ஒட்டுமொத்தமாக சேறு அடிப்பதற்கு மட்டும் அஞ்சவில்லை.

இந்த அழகில் இப்போது எந்த பார்ப்பனர் தலித்துகளை சவுக்கால் அடிக்கின்றனர்? அவர்கள் வாயில் மலத்தை இடுகின்றனர்? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, தாங்கள் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என்றெல்லாம் கெடுபிடி செய்கின்றனர்? இருப்பினும் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒரே சுண்ணாம்பாக போட்டு அடிக்கும் இப்பதிவர் தனது சாதி என்றவுடனேயே hair splitting வாதங்களை முன்வைக்கிறார். கூடவே பாமகவின் கொபசேவாக வேறு உருவெடுக்கிறார்.

இருப்பினும் இப்பதிவர் எனது பதிவுகளில் வந்து அலம்பல் செய்யும் அதே அருளா என தயங்கி நின்ற போது, அதே வினவு பதிவில் வால்பையனது பின்னூட்டம் எண் 69.1 அவரேதான் என தெளிவுபடுத்தியது. வால் பையனுக்கு என் நன்றி.

இந்த உண்மைகளை வெளியே கொணர்ந்த வினவின் அந்தப் பதிவுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகாபாரதத்தில் மங்காத்தா

எஸ்.வி.சேகரின் இந்த நாடகம் பரவலாகவே வரவேற்பை பெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் எனது நினைவிலிருந்து. இந்த நாடகம் இப்போதும் போடப்படுகிறது. என்ன, காலத்துக்கு ஏற்ப டயலாக்குகளும் மாறும், நல்ல டைமிங் சென்ஸோடு. நான் தரப்போவது ஆரம்பகாலங்களில் நான் பார்த்த வெர்ஷன்.

சேகரின் தந்தை ஒரு விஞ்ஞான பைத்தியம். அவர் செய்த குளறுபடியால் அவனது அண்ணன் வானரமாக மாறிவிடுகிறான். நாடக ஆரம்பத்தில் டெலிஃபோன் மணி அடிக்கிறது. வானரம் போய் அதை எடுக்கிறது. தொலைபேசியின் அந்தண்டை பக்கத்திலிருந்து கேள்விகள் வருகின்றன. வானரம் மௌனமாக நிற்கிறது. கதாநாயகன் (எஸ்.வி.சேகர்) வருகிறான்.

சேகர்: ஏண்ணா உனக்கு இந்த வேண்டாத வேலை? உன்னால்தான் பேச முடியாதோல்லியோ. பேசாமல் இருக்க வேண்டியதுதானே?

சேகரின் அப்பா: ஒரு புது மருந்தை டெஸ்ட் பண்ணலாம்னு அவனுக்கு அதை கொடுத்தேன். இந்த மாதிரி ஆயிட்டான். மாற்று மருந்தை தேடிண்டிருக்கேன். அது வரைக்கும் என்ன பண்ணறதுன்னு தெரியல்லே.

எஸ்.வி. சேகர்: அது வரைக்கும் பேசாம ஏ.பி.டி. பார்சல் செர்வீசு விளம்பரத்தில் வரும் வானரத்துக்கு இவனை மாடலா போடலாம்.

சுந்தா வருகிறான். சேகரும் சுந்தாவும் ஒரு சினிமா எடுக்கும் முயற்சியில் இருக்கின்றனர். அனிதா (நான் பார்த்த போது அந்த பாத்திரத்தில் நடித்த நடிகையின் பெயர்) சுந்தாவின் செட்டப்பு. அவள் எங்கு வந்தாலும் அவள் வருவதற்கு முன்னால் அவளுடைய நாற்காலியை ஒருவன் கொண்டு வந்து வைக்கிறான்.

இவர்கள் இருவருமே விஞ்ஞான அப்பாவால் தயார் செய்யப்பட்ட கால யந்திரந்தில் ஏறி எக்குத் தப்பாக மாட்டிக் கொள்கின்றனர். 1919 வாக்கில் உள்ள சென்னைக்கு வந்து சேருகின்றனர்.

மவுண்ட் ரோடில் நடக்கின்றனர்.

சுந்தா: ஐயையோ என்னடா இது எல்.ஐ.சி. பில்டிங்கையே காணும்?
சேகர்: இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை அல்லவா, எல்.ஐ.சி.க்கு லீவு.
சுந்தா: லீவுன்னா பில்டிங்குக்குமா.
சேகர்: அதானே.

அந்தப் பக்கமாக வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் என பாடிக் கொண்டே தான் வேலை செய்யும் சுதேசமித்திரன் அலுவலகத்துக்கு வருகிறார் பாரதியார்.

அவர்களது அடுத்த ஹால்ட் பாஞ்சாலங்குறிச்சி. மேடையில் அவர்கள் நிற்க, ஒரு சேவகன் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போடுகிறான்.
சுந்தா: இந்த நாற்காலியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.

ரொம்ப நேரம் குழம்பத் தேவையின்றி அனிதா வந்து அதில் அமர்கிறாள். அவளும் இவர்களுக்கு தெரியாம கால யந்திரத்தில் பயணம் வந்திருக்கிறாள். ஆனால் இங்கு அவள் வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு செட்டப்பாக வருகிறாள். அவள் செய்யும் அலம்பல் தாங்கவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனும் வருகிறான். அவ்வப்போது மார்வலி என துடிக்கிறான். இருந்தாலும் அவன் அனிதாவின் பேச்சுக்கு மயங்கி தானும் ஒரு நாடகம் போடலாமா என நினைக்கிறான்.

வெறும் நாட்டுப் பாடல்களில் மட்டும் அறியப்பட்ட கட்டபொம்மன் ம.பொ.சி.யின் தயவால்தான் பிரபலமானான் என்று அவனுக்கு சேகரும் சுந்தாவும் தரும் செய்தியை கட்டபொம்மன் நம்பத் தயாராகவில்லை என்பது தனி விஷயம்.

எனது உயிர் நண்பர் எட்டப்பன் என சேகர் சுந்தாவுக்கு அவன் அறிமுகப்படுத்த, அவர்கள் திகைப்படைகின்றனர். எட்டப்பன் பானர்மேனின் கையாள் என்பதை போட்டுக் கொடுக்க சேகர் முயற்சிக்க, எட்டப்பன் சாமர்த்தியமாக கட்டபொம்மனை சேகரும் சுந்தாவும்தான் ஒற்றர்கள் என நம்ப வைத்து விடுகிறான். நல்ல வேளையாக நிகழ்காலத்தில் இருந்து கொண்டு கால எந்திரத்தை ரிமோட் கண்ட்ரோலில் இயக்க முயலும் விஞ்ஞான அப்பாவின் உபயத்தால், அங்கிருந்து தப்பி ஷாஜஹான் காலத்துக்கு செல்கின்றனர். அங்கும் அனிதாவின் அலம்பல் தொடர்கிறது. அவள் ஷாஜஹானின் செட்டப்பாக மாறி விட்டாள். இந்த மூவர் புதிதாக எங்கிருந்து வந்தன என ஷாஜஹான் குழம்ப, தானும் சேகர் சுந்தாவை அட்டாக் செய்து ஷாஜஹானிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சியில் அனிதா ஈடுபடுகிறாள்.

இவர்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி அவள் அவர்களை ஷாஜஹானிடம் போட்டுக் கொடுக்க, அவனும் கோபத்துடன் இவர்களை சவுக்கால் அடிக்கும்படி ஆணையிட, அனிதா அதற்கு மேல் ஒரு படி போய் அவர்களை அதன் பின்னால் கொதிக்கும் எண்ணையில் போட வேண்டும் என்னும் ஆலோசனையும் தர சேகரும் சுந்தாவும் நொந்து போகின்றனர்.

ஒரு நிமிடம் அனிதாவை வெறித்துப் பார்க்கும் ஷாஜஹான் அனிதாவுக்கும் சேர்த்துத்தான் இத்தனை தண்டனைகளையும் தர வேண்டும் என உத்திரவு போட, அனிதா திகைக்கிறாள். வா, வாடி கண்ணூ, உனக்கும் எங்களுக்கும் ஒரே கதிதான். நீ என்னதான் கூப்பாடு போட்டு எங்களை போட்டுக் கொடுத்தாலும் உனக்கும் எங்களுக்கு தரும் தண்டனையைத்தான் தரப்போறாங்கடி என அவளிடம் இவர்கள் கூறுவார்கள்.

நல்ல வேளையாக எல்லோரும் மீண்டும் அங்கிருந்து கிளம்பி, இம்முறை மகாபாரத காலத்துக்கு போய் விடுகின்றனர். அஞ்ஞாத வாசம் முடிந்து யுத்தம் ஆரம்பிக்கும் காலம் அது. இவர்கள் துரியோதனனின் சபைக்கு செல்கின்றனர்.

அங்கு அவர்கள் துரியோதனனிடம் தங்களுடன் மங்காத்தா ஆட அழைக்கின்றனர். அவனும் தன் குல வழக்கப்படி, சகுனியை தனக்கா ஆடும்படி கூறுகிறான்.

சகுனி: யாரங்கே ஆசனம் கொண்டு வாருங்கள்
சேகர்: அதெல்லாம் வாணாம், இந்த ஆட்டத்தை குந்திக்கிட்டேதான் ஆடணும்.
துரியோதனன்: எனது சித்தி குந்தி தேவியிடமா?
சுந்தா: இல்லே கண்ணு குந்தி ஒக்காந்துதான் ஆடணும் என அவ்வாறே உட்கார்ந்து காண்பிக்கிறான்.
சகுனி: இந்த மாதிரி உட்காருவது மிகுந்த கடினமாக உள்ளதே?
சேகர்: ஏம்பா நெஜம்மா சொல்லு, இந்த மாதிரி ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தபா உக்காந்ததே இல்லையா?
சகுனி சங்கடத்துடன் எழுந்து நிற்கிறான். பிறகு மங்காத்தா ஆட்டம் ஆரம்பிக்கிறது. உள்ளே வெளியே உள்ளே வெளியேன்னு சொல்லிச் சொல்லி சேகர் சகுனியிடமிருந்து எல்லாத்தையும் ஜெயிக்கிறான். துரியோதனன் செய்வதறியாது விழிக்க, சேகர் ஸ்டைலாக நடந்து வந்து துரியோதனனை துகிலுரிக்க ஆரம்பிக்கிறான்.

துகிலிருக்கும் இடங்களுக்கு வழக்கமாக வரும் கண்ணபிரானும் அங்கு வருகிறார்.

துரியோதனன்: கர்ணா, கர்ணா காப்பாற்று

கர்ணன் வருகிறான் அம்பை வில்லில் கோத்துக் கொண்டு.

சேகர்: கர்ணா என்ன இருந்தாலும் பாண்டவர்கள் உனது சகோதரர்கள் எனப் பேச ஆரம்பிக்க, பதறிப் போகும் கண்ணபிரான் இப்போது கர்ணனிடம் நைச்சியமாகப் பேசி சேகர் சுந்தா மேல் பிரும்மாஸ்திரத்தை பிரயோகிக்க சொல்கிறார்.

சேகர்/சுந்தா: கர்ணா, நீதான் கொடை வள்ளலாயிற்றே, எங்களுக்கு உயிர் பிச்சை தா.

கர்ணன் குழம்புகிறான் என்ன செய்வதெனத் தெரியாமல்.

கண்ணபிரான்: சரி என்ன செய்வது கர்ணா பின்னால் கூறப்போவதை இப்போதே கூறிவிடுகிறேன் எனக்கூறி கர்ணனுக்கு பலனை எதிர்ப்பார்க்காது கர்மத்தைச் செய்யத்தூண்டும் பகவத் கீதையை உபதேசிக்கிறார்.

கடைசியாக அங்கிருந்தும் தப்பி எதிர்காலத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கு அவர்களை ஒரு எந்திர மனிதன் வரவேற்கிறான். நீங்கள்தானே சேகர் சுந்தா, இருபதாம் நூற்றாண்டிலிருந்து வந்துள்ளீர்கள். சுந்தாவின் செட்டப் அனிதாவை இப்போதுதான் உங்கள் காலத்துக்கு அனுப்பினோம். இப்போ உங்களையும் அனுப்புகிறோம் என்கிறான் அவன்.

ஒரே மாட மாளிகைகளாக இந்த இடம் இருக்கே இது என்ன இடம் என சேகர் கேட்க, பழைய மாம்பலம் என பதில் வருகிறது. நம்பவே முடியாது என அவர்கள் இருவரும் அடம் பிடிக்கின்றனர்.

அப்போது தன் கையை படீரென அடித்துக் கொள்ளும் இயந்திர மனிதன், இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல்லியே என அலுத்துக் கொள்கிறான். இப்போ நம்பறோம் என்கின்றனர் சேகரும் சுந்தாவும்.

இவர்களை இருபாதாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் டாக்சி வந்து நிற்கிறது.

சேகர்: என்னப்பா எங்களை ஒழுங்காக கொண்டு போய் சேர்ப்பாயா?
டிரைவர்: மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் போட்டுக்கொடு சார்.

சர்ரியலிசம் என்பதை வைத்து அந்தப் பெயரையெல்லாம் சொல்லி அலம்பல் செய்யாது சேகர் இந்த நாடகத்தில் விளையாடியிருக்கிறார். அவரை கலைஞர் பாராட்டியது மிகக்குறைவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/12/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 81 & 82)

எபிசோட் - 81 (10.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரி வீட்டுக்கு மேற்கொண்டு கேஸ் இணைப்பும் வருகிறது. யார் அனுப்புகிறார்கள் என்னும் நிலையில் அந்த வீட்டில் ஒரே குழப்பம். நடுவில் புது வீட்டு வாடகை வேறு பாக்கி நிற்கிறது. சுப்புலட்சுமியின் வற்புறுத்தல் பேரில் வேம்பு தயக்கத்துடன் சாம்புவின் உதவியை கேட்க ஒத்துக் கொள்கிறார்.

நாதன் வீட்டில் அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அது என்ன என வசுமதி கேட்க, மனுஸ்ம்ருதி என அவர் பதிலளிக்கிறார்.

என்ன சார் இது இவர் மனு ஸ்ம்ருதியைப் படிக்கிறார். அதிலே என்ன சொல்லியிருக்கப் போறாங்க? பாப்பான்தான் ஒசத்தி. அவன் சொன்னபடி கேளுங்கோ அப்படீன்னுதானே எழுதியிருக்கப் போறாங்க என சோவின் நண்பர் அசுவாரசியமாக கூற, சோ மனுஸ்ம்ருதியை பற்றி மிகத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது என பல எடுத்துக் காட்டுகளுடனே கூறுகிறார். அதில் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மாக்களை பார்த்தால் பிராமணன் ஆகும் ஆசையே ஒருவருக்கும் வராது எனவும் கூறுகிறார்.

அது ஒரு அருமையான அரசியல் வழிக்காட்டு நூல். அதை சரியாக புரிந்து கொண்டு நடந்தால் நாடு நன்றாகவே ஓகோன்னு வரும் என சோ எடுத்துரைக்கிறார். இங்கு நான் அவற்றைக் கூறப்போவதில்லை. வீடியோவில் காண்க என்று மட்டும் சொல்வேன்.

நாதன், வசுமதி மற்றும் பிச்சுமணி ஆகியோர் கூடிப் பேசி, காதம்பரியையும் அசோக்கையும் சந்திக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கின்றனர். அசோக்கும் ஒத்துக் கொள்கிறான்.

(தேடுவோம்)

எபிசோட் - 82 (11.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(சுட்டி பாதிலிலிருந்துதான் ஆரம்பிக்கிறது)
அசோக்கும் காதம்பரியும் சந்தித்து பேசுகின்றனர். அசோக் தனது நிலைப்பாட்டை விளக்குகிறான். அவன் வர்ணரீதியான பிராமணனை தேடுவதாக தான் அறிந்ததாக காதம்பரி கூற, அவனே இப்போது தன்னுள்ளேயே பிராமணனை தேடுவதாகவும், தேடுவதை விட தேடப்படும் பொருளாக மாறுவது நல்லதல்லவா என்றும் கூறுகிறான். அவன் தான் முதல் கட்டமான பிரும்மச்சரியத்தை முடித்து விட்டதாக கூற, காதம்பரி bachelorhood? எனக் கேட்கிறாள். பிரும்மச்சாரிகள் எல்லோருமே கல்யாணம் ஆகாதவாத்தான் ஆனாக்க கல்யாணம் ஆகாதவா எல்லோருமே பிரும்மச்சாரிகள்னு சொல்லிட முடியாது என அசோக் எடுத்து கூறுகிறான்.

அதே போலத்தான் கிருகஸ்தாஸ்ரமம் என்பதும் வெறுமனே குடும்ப வாழ்க்கை மற்றும் சந்ததிகலை பெருக்க மட்டுமே இல்லை என்றும் குறிப்பிடுகிறான். பிறகு தர்ம பத்தினியின் குணநலன்களை அடுக்குகிறான். இக்காலத்தில் எல்லாராலுமே இது எல்லாம் முடியாது என்பதை தானும் அறிவதாகவும், ஆகவே சில சமரசங்கள் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறான். பிறகு காதம்பரியாக யோசித்து நிதானமாக முடிவைச் சொன்னால் போதும் எனவும் குறிப்பிட்டு விடுகிறான்.

தன் வீட்டில் காதம்பரியும் அவள் அக்கா மற்றும் அத்திம்பேர் அசோக்கை திருமணம் செய்து கொள்ளுவதன் சாதக பாதகங்களை அலசுகிறார்கள். தனது ஆட்சேபணைகளை ஒவ்வொன்றாக காதம்பரி கூறக்கூற, அவற்றுக்கு பதிலும் அளிக்கப்படுகிறது. அசோக் மூணு வேளையும் சந்தி பன்ணுகிறான் என அவள் திகைப்புடன் கூற, அந்தந்த நாளின் பாவத்தை அன்றே முறிக்கிறான் என அவளுக்கு பதில் வருகிறது.

அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்க, அது சந்தி செய்வதின் நோக்கங்களில் ஒரு சிஇய பகுதியே எனக் கூறி, சந்தியாவந்தனம், பிராணாயாமம், மற்றும் காயத்ரி மந்திரங்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். இப்போது மேலேறப்பட்டிருக்கும் வீடியோ துண்டில் அது கவர் செய்யப்படவில்லை என்பது ஒரு குறையே. கூடிய சீக்கிரம் அதை சரி செய்வார்கள் என நம்புகிறேன். (அப்பாடா சரி செய்து விட்டார்கள். முழு வீடியோவையுமே இப்போது பார்க்க இயலுகிறது).

காதம்பரி மற்றும் அவளது அக்காவின் அலசல் தொடர்கிறது. அவளது அத்திம்பேரும் இதில் கலந்து கொள்கிறார். இப்போதுதான் கவலை தரும் ஒரு டெவலப்மெண்ட் வருகிறது. என்ன வேண்டுமானாலும் வாக்கு தந்து விட்டு காதம்பரி அசோக்கின் மனைவியாகிவிட வேண்டும் என்றும் பிறகு எல்லாவற்றையும் நாளடைவில் தூக்கி எறியலாம் என அபாயகரமான கருத்தை அவள் அக்கா முன்வைக்க, காதம்பரியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறாள். (இது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை)

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உழக்கிலே கிழக்கு மேற்கு பார்க்கும் பரமசிவம் அவர்கள்

பதிவின் தலைப்புக்கு போகும் முன்னால் வேறு ஒரு விஷயத்துடன் ஆரம்பிக்கிறேன். ஆனால் பின்னால் சொல்லவிருப்பதுடன் அதற்கு சம்பந்தம் உண்டு.

கிரிமினல் வழக்குகளில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது என்பது ஒரு பெரிய கலை. அதற்கு பல வழிமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு இங்கிலாந்தில் ஒரு குற்றவாளியின் மீது கேஸ். அவன் ஏற்கனவேயே பல வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றான். ஆனால் அப்போதிருந்த நடைமுறைகளின்படி இந்த ஒரு வழக்கில் பழைய குற்றங்கள் பற்றி அவனிடம் பிராசிக்யூஷன் குறுக்கு விசாரணை நடைபெறும் பட்சத்தில் (குற்றவாளி கேசில் சாட்சி சொல்ல வேண்டும் என நிர்பந்தப் படுத்தமுடியாது என்பது இன்னொரு விதி), கேட்கவியலாது. ஆனால் இதற்கும் ஒரு செக் உண்டு.

அதாகப்பட்டது, பிராசிக்யூஷன் தரப்பு சாட்சிகளை விசாரிக்கும்போது அவனது வக்கீலும் சாட்சிகள் வேறு எங்கேனும் குற்றம் செய்து தண்டிக்கப்பட்டிருந்தால் அது பற்றி கேட்கக் கூடாது. அப்படி மீறி கேட்டால் என்ன ஆகும்? குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட மேலே சொன்ன சலுகையும் செல்லாது.

இந்த கேசில் பிராசிக்யூஷன் தரப்பில் வந்த பெண் சாட்சி ஒரு விலைமகள் என்றும் ஏற்கனவேயே அது சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்றவள் எனவும் குற்றவாளியின் வக்கீல் நிறுவினார். இப்போது கைதியின் முறை சாட்சிக் கூண்டில் நிற்க. அவனிடம் அவனது பழைய குற்றங்கள் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட அவனது வக்கில் ஆட்சேபணை எழுப்பினார். நீதிபதியோ அவர் முன்னால் பிராசிக்யூஷன் தரப்பு சாட்சியை சரித்திரத்தை நோண்டியது பற்றி நினைவுபடுத்த, இப்போதுதான் இந்த வக்கீல் ஒரு அருமையான பதிலை தந்தார். “யுவர் ஹானர், அந்த தருணத்தில் ஒரு கெட்ட நடத்தையுள்ள பெண் சாட்சியளிக்கலாகாது என்பதாலேயே அவ்வாறு செய்தேன்” என்றார். ஆனால் அந்தோ, நீதிபதியிடம் அவர் பப்பு வேகவில்லை. அவர் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது. எல்லோரும் அந்த வக்கீலை பார்த்து கேலியாக சிரித்தனர், இது கூட தெரியாத வக்கீலா என.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் இது பற்றி ஒரு புத்தகத்தில் படித்தபோது நான் கூட ஆச்சரியப்பட்டேன், இப்படிக் கூட இருப்பார்களா என்று. ஆனால் இன்று வெளிவந்த ஜூனியர் விகடனில் (16.05.2010 இதழ், 6-ஆம் பக்கம்) வந்த இக்கட்டுரையை பார்த்ததும் அந்த ஆச்சரியம் மறைந்தது.

சரி இப்போது தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோம்.

தகிக்கும் பார்த்திபன்...
மறுக்கும் வக்கீல்கள்!


சென்னையில் வன்னிய சம்பத், பகத்சிங் என்கிற வழக்கறிஞர்கள் இருவர் அடுத்தடுத்து ரவுடிகளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் வட்டாரத்தையே கொதித்துப் போக செய்துள்ளது. அது சம்பந்தமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாகத்தான் நடிகர் பார்த்திபன் அதே மாதிரி வேறு பல பெரிய குற்றங்களில் ஈடுபட்டு அப்பாவியின் உயிர்களை குடித்த குற்றவாளிகளின் கேசை மட்டும் வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொள்ளலாமா என கேள்வி கேட்டு சீறியுள்ளார். சக வழக்கறிஞர்களுக்கு மட்டும் இந்த கன்சிடரேஷன் ஏன் என்றும் அவர் ஆணித்தரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் இதற்கு தந்துள்ள பதில்தான் உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் விஷயமாக அமைந்துள்ளது. அவர் சொல்வதாவது, அவ்வாறு குற்றவாளிகளுக்கு ஆஜராக மறுத்தால் நீதிபதியே இலவச வக்கீலை நியமித்து விடுவார். அதுவும் இல்லையென்றால் கேஸ் பெண்டிங்கிலேயே நிற்கும். ஆகவே அம்மாதிரி செய்யும்படி வழக்கறிஞர்களுக்கு உத்திரவு போட முடியாது என்பவர் அதற்கு பிறகு வெளியீடிருக்கும் சிந்தனை முத்துக்கள்தான் அபாரம்.

ஆனால் வழக்கறிஞர்கள் தாக்க்க்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என அவர்கள் கூறியதற்கு காரணமே வழக்கறிஞர்கள் என்றுகூட பாராமல் கொலை செய்த அந்த பாவிகள் வழக்கறிஞர்களுக்காக அலைய வேண்டும் என்பதால்தானாம்.

அடாடா என்ன சாதுர்யம்? ஏன் இப்போது மட்டும் நீதிபதி இலவச வக்கீலை நியமிக்க மாட்டாராமா? அப்படி இல்லை என்றால் இங்கும் கேஸ் பெண்டிங்கில் நிற்காதாமா? என்ன தெளிவான சிந்தனை பாருங்கள்?

மேலே குறிப்பிட்ட ஆங்கிலேய வக்கிலின் மறு அவதாரமோ நமது பரமசிவம் அவர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/11/2010

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் சோவியத் யூனியனின் பங்கு

முதற்கண் கலையகம் என்னும் வலைப்பூவில் மே 9: நாஸிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிவிழா என்னும் தலைப்பில் வந்த இடுகைக்கு நான் இட்ட இப்பின்னூட்டத்தைப் பாருங்கள். (அது அங்கே அனுமதிக்கப்படும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத நிலை. ஆகவே எதற்கும் இருக்கட்டும் என எனது அப்பின்னூட்டத்தை இங்கும் வெளியிடுகிறேன்).

(இந்த நிமிடம்வரை அதுவரவில்லை மணி 10.36, 11.05.2010. அவங்களுக்கு டோண்டு ராகவன் பற்றி சரியாகத் தெரியவில்லை என நினைக்கிறேன். பின்னூட்டத்தை மறைப்பது சீப்பை ஒளித்து கல்யாணத்தை நிறுத்த நினைப்பதற்கு சமம்).

(அப்பின்னூட்டம் கடைசியாக வெளியில் வந்தே விட்டது. ஆனால் பதில்கள்தான் காதுல பூ சுற்றல். வேறு என்னதான் செய்ய முடியும் அவர்களால், பாவம்)?

1939 முதல் 1941 வரை சோவியத் யூனியனும் ஜெர்மனியும் சேர்ந்தே செயல்பட்டன. அவர்களது நட்பு ஒப்பந்தத்தின் பேரில் போலந்து இரண்டாகத் துண்டாடப்பட்டு, கிழக்குப் பகுதியை சோவியத் யூனியனும் மேற்குப் பகுதியை ஜெர்மனியும் கபளீகரம் செய்தன.

பிறகு ஜெர்மனி எடுத்துக் கொண்ட பகுதிகள் முழுக்கவும் திரும்ப போலந்துக்கு கிடைத்தன, ஆனால் சோவியத் யூனியன் முழுங்கியது முழுங்கியதுதான்.

போலந்தின் வீழ்ச்சியே இரண்டாம் உலக மகா யுத்தத்தின் ஆரம்பம் என்பது மறுக்க முடியாத சரித்திரம். ஆக, அதில் பெரிதும் சம்பந்தப்பட்ட ஹிட்லர்-ஸ்டாலின் ஒப்பந்தத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்?

1941-ன் வீடியோவை இங்கு காட்டுவது மூலம் என்ன நிறுவ எண்ணுகிறீர்கள்? அது ஒரு பிரச்சார வீடியோ அவ்வளவே. சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர் வேறெதையும் பேச இயலாது.


கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் ஸ்டாலின் - ஹிட்லர் ஒப்பந்தம் பற்றி கள்ள மௌனம் சாதிப்பார்கள், அல்லது அது சோவியத் யூனியனின் போர் யுக்தி என்பார்கள். அதை திடீரென 1941-ல் ஜெர்மனி மீறியபோது சோவியத் யூனியன் நிஜமாகவே மிகவும் பாதிக்கப்பட்டது. அது பற்றி நகைச்சுவை எழுத்தாள்ர் ரிச்சர்ட் ஆர்மர் குறிப்பிடுகையில், ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறியது ஸ்டாலினுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்தது, ஏனெனில் அவரே தனக்கு சௌகரியமான தருணத்தில் அதை மீறத்தான் எண்ணியிருக்கிறார். ஹிட்லர் முந்திக் கொண்டதில் அவருக்கு மகாகோபம் என எழுதியுள்ளார்.

இது கற்பனையில்லை என்பது ஸ்டாலின் ஜப்பான் விஷயத்தில் நடந்து கொண்டதிலிருந்து தெரியும். இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த முக்கால்வாசி காலத்தில் சோவியத் யூனியன் ஜப்பானுடன் செய்து கொண்டிருந்த நட்பு உடன்படிக்கையின்படித்தான் நடந்தது. 1945, ஆகஸ்ட் - 6-ஆம் தேதி ஹிரோஷிமா மேல் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்கு பிறகு, ஆகஸ்ட் - 8 ஆம்தேதி சோவியத் யூனியன் ஜப்பான் மேல் யுத்தப் பிரகடனம் செய்தது. அடாடா என்ன டைமிங்? ஆகஸ்ட் 9 நாகசாகி மேல் அணுகுண்டு. ஆக சோவியத் யூனியன் சைக்கிள் கேப்பில் ஆட்டோ விட்டது. அது பற்றியும் கம்யூனிஸ்டு தோழர்கள் கள்ள மௌனம் சாதித்தார்கள்/இன்னும் சாதிக்கிறார்கள். இதன் மூலம் ஜப்பானின் குரில் தீவுகள் சோவியத் யூனியனோடு நிரந்தரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டன.

அது மட்டுமல்ல இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னால் தனது block-ல் சேர்க்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கொள்ளையடித்து தனது நாட்டின் செல்வத்தைப் பெருக்கியது சோவியத் யூனியன். ஆகவேதான் 1989-ல் உலக சரித்திரம் பெரிய அளவில் மாற்றப்பட்ட போது கிழக்கு ஐரோப்பியரின் முதல் மகிழ்ச்சியே சனியன் பிடித்த சோவியத் யூனியனிடமிருந்து பெற்ற விடுதலைதான்.

எனது மேலே சுட்டப்பட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

1989 அக்டோபரில் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் 40-ஆம் ஆண்டு விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. "40 Jahre Bestehen der DDR" (40 வருடங்களாக ஜெ.ஜ.கு.) என்றெல்லாம் வெற்றிகரமாக பேனர்கள் கிழக்கு ஜெர்மனியில் பறந்தன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே புகைச்சல் ஆரம்பித்தது.

ஹங்கேரி தனது எல்லைத் தடைகளை நீக்கியது. அதன் வழியாக ஆஸ்திரியா பிறகு அங்கிருந்து மேற்கு ஜெர்மனி என்ற கணக்கில் பல கிழக்கு ஜெர்மானியர்கள் ஓடத் துவங்கினர். தூர்தர்ஷனில் அக்காலக் கட்டத்தில் இவையெல்லாம் பரபரப்பாகப் பார்க்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனியின் அதிபர் ஹோனேக்கர் படு டென்ஷனானார். கர்பசியவ் உதவி ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்து விட்டார். அடுத்த சில நாட்களிலேயே விழவே விழாது என்று கருதப்பட்ட பெர்லின் சுவர் விழுந்தது. அடுத்த ஓராண்டுக்குள் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியில் இணைந்தது.

Cold war என்ற பெயரில் கிழக்குக்கும் மேற்கிற்கும் நடுவில் நடந்து வந்த யுத்தம் அமெரிக்கர்களின் வெற்றியுடன் முடிவடைய ஆரம்பித்தது.சோவியத் யூனியனின் ஆதரவு இல்லை என்றானதால் சீட்டுகட்டு மாளிகைகள் போல செக்கொஸ்லாவிக்கியா, ருமேனியா, போலந்த், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டு அரசுகள் கவிழ ஆரம்பித்தன. அப்போதிலிருந்து 1991 திசம்பர் வரை இழுபறியாகக் கிடந்த சோவியத் ஒன்றியமும் இறுதி மூச்சை விட்டது. Cold war-ம் முடிவுற்றது.

இதையெல்லாம் அன்றைய ஊடகங்களின் வாயிலாக நேரடியாகப் பார்த்த எனக்கு உணர்வுகள் கலந்து இருந்தன. ஒரு பக்கம் தீவிர அமெரிக்க ஆதரவாளனான நான் அமெரிக்காவின் இந்த வெற்றிக்கு சந்தோஷப்பட்டேன். அதே சமயம் 42 ஆண்டுகளாக அதனுடன் போராடிய சோவியத் யூனியனின் வீழ்ச்சி எனக்குள் பரிதாபத்தையும் ஏற்படுத்தின. அதுவும் அதன் கடைசி இரண்டு ஆண்டுகளில் பல விஷயங்கள் வெளியில் வந்தன. சூப்பர் பவராகக் கருதப்பட்ட சோவியத் யூனியன் உண்மையிலேயே எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை விளவித்தது. செண்ட்ரலைஸ்ட் பிளான்னிங் என்ற பெயரில் என்னவெல்லாம் கம்யூனிஸ்டுகள் கூத்தடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இப்படியெல்லாம் அறிவுகெட்டத்தனமாகவெலாம் நாட்டை ஆள முடிய்மா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. மனித இயற்கைக்கு விரோதமான பல கோட்பாடுகளை மார்க்ஸ் சொன்னார், லெனின் சொன்னார் என்பதற்காக மட்டுமே அவற்றை கடைபிடித்தவர்களின் அறியாமை புலப்பட்டது. எதுவும் இவ்வுலகில் இலவசம் இல்லை என்ற உண்மையை கவனியாது வேலை செய்தால் இப்படித்தான் நடக்கும் எனக் கூறிவிடலாம்.

எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏய்ன் ரேண்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய "அட்லாஸ் தோள்களைக் குலுக்கினான்" என்ற நாவல் கூறியபடியே சோவியத் யூனியனில் நடந்தது. அந்த நாடே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து பல தொழிற்சாலைகள் வேரோடு பெயர்க்கப்பட்டு பல வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது சம்பந்தமான பேப்பர்களை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழி பெயர்க்கும் வேலை தொண்ணூறுகளில் பெற்றேன். அப்போது நினைத்துக் கொண்டேன், அடாடா இந்த தொழிற்சாலைகளை எவ்வளவு நம்பிக்கையுடன் ஆரம்பித்தனர், இப்போது இவ்வாறு இடம் மாறுகின்றனவே என்ற கிலேசம் என் மனதில் ஏற்பட்டது.


என் மனதில் எழுந்த பரிதாபங்கள் சோவியத் யூனியன் என்னும் தீமையின் தீவிரத்தை அணுவளவுகூட குறைக்க இயலாது என்பது வேறு விஷயம்.

அதற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் பரிசுத்த ஆவியால் உருவானவையா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறுவேன். அவற்றின் வன்மம் நிறைந்த செயல்களுக்கும் சரித்திரத்தில் பஞ்சம் இல்லை. ஆனால் அவற்றுக்கும் சோவியத் யூனியனுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். மற்ற நாடுகள் பல இடங்களில் வரம்பு மீறியதை அந்தந்த நாட்டின் பத்திரிகைகளே வெளியில் கொணர்ந்து அரசை கிழிகிழியென. கிழித்தன. சோவியத் யூனியனில் இந்த பத்திரிகை சுதந்திரம் சுத்தமாக லேது, அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/08/2010

நவீன விக்கிரமாதித்தன் - வேதாளம் கதை

பெங்களூர் நண்பர் பதிவர் எம். அருணாசலம் அவர்கள் அன்புடன் எனக்களித்த அனுமதியின் பேரில் அவரது இப்பதிவை இங்கே நகலெடுத்து தடித்த சாய்வெழுத்துக்களில் ஒட்டுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றியுடன், ஓவர் டு அருணாசலம்:

விக்ரமாதித்தனும், வேதாளமும்

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி உச்சியில் இருந்த வேதாளத்தை தனது வாளினால் கட்டுப்படுத்தி, தன்னுடைய தோளின் மேல் ஏற்றிக்கொண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி காட்டிலிருந்து நாட்டை நோக்கி விறு, விறுவென்று நடக்க தொடங்கினான். தன்னை தனது தோளின் மேல் சுமந்து கொண்டு மெளனமாக நடந்து செல்லும் அரசன் விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம் பேச தொடங்கியது:
"விக்கிரமாதித்த மன்னனே, ஒரு நாட்டின் அரசனாக இருந்தும்கூட, என்னை சிறைபிடிக்க உன் வீரர்களை அனுப்பாமல், நீயே மீண்டும், மீண்டும் மரத்தின் மீதேறி என்னை தூக்கிக்கொண்டு உன் தோளின் மேல் சுமந்து கொண்டு வேகமாக நடந்து செல்லும் உன்னை பார்க்கும்போது, எனக்கு முன் காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த ஒரு சிற்றரசன் கதைதான் நினைவுக்கு வருகிறது. உன்னுடைய நெடும் நடை பயணத்தின் களைப்பு தெரியாமல் இருக்க அவனுடைய கதையை கூறுகிறேன், கேட்பாயாக.

பண்டைய பாரத நாட்டிலே, மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்திருந்த சமயத்திலே, அந்நாட்டின் தென்கிழக்கு மூலையிலே அமைந்திருந்த தமிழகம் என்ற மாநிலத்திலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் ஒரு நாட்டின் மன்னனைபோல், ஒரு சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு மன்னர் குல வழக்கப்படி மனைவிகளும், துனைவிகளும், அவர்கள் மூலம் நிறைய மக்களும் இருந்தனர். வயதாக வயதாக விவேகம் ஏற்படுவதற்கு பதிலாக, அவனுக்கு கேளிக்கைகளே வேண்டி இருந்தன. அந்த சிற்றரசன் குத்தாட்ட பிரியன். எப்போதும் கலை மற்றும் கும்மாங் குத்து ஆட்டங்களையும், தன்னை பற்றி பிறர் புகழ்ந்து எழுதும் கவிதைகளையும் மட்டுமே கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டுமே காலத்தை கழித்துக்கொண்டு இருந்தான். ஆட்சி புரிவதை பற்றி கவலைப்படவே இல்லை. அதனால் அவனுடைய உறவினர்களும் மற்றும் நண்பர்களுமே நாட்டை மறைமுகமாக ஆள்கிற நிலைமை தோன்றியது. அவ்வப்போது, மக்களுக்கு தான் ஆட்சி புரிவதுபோல் சீன் காட்டுவதற்காக, அவர்களுக்கு முன் தோன்றி, ஏதாவது பேசி, அவர்களை நம்ப வைத்தே காலத்தை கழித்து வந்தான்.

இந்த சிற்றரசன் ஆட்சி புரிவதற்கு வடநாட்டு ராணியின் உதவி தேவையாக இருந்தது. அதேபோல், வடநாட்டு ராணிக்கும் அங்கே ஆட்சி புரிய சிற்றரசனின் ஆதரவு தேவை பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்துகொண்டு தத்தமது ஆட்சிகளில் நன்றாக ஊழல் புரிந்து பணத்தில் கொழுத்து திளைத்தனர்.

இதற்கு நடுவே தெற்கில் உள்ள தீவு நாட்டின் அரசனுக்கு திடீரென்று ரோஷம் பொத்துக்கொண்டு வந்து அவன் அந்நாட்டின் தீவிரவாதிகளுடன் போர் புரிய ஆரம்பித்தான். இந்த போரில் சில அப்பாவி பொது மக்களும் சிக்கி அல்லல் பட்டனர். இதனை ஒரு பெரிய பிரச்னை ஆக்கி சிற்றரசனுக்கு எதிராக ஆதாயம் தேடுவதற்கு பல எதிர் கட்சிகளும், தீவிரவாத ஆதரவாளர்களும் புறப்பட்டனர். சிற்றரசனும் சாதாரணமாக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவன்தான். ஆனால் இப்போது அவன் நிலைமையே வேறு. அவனுக்கு ஆட்சி புரிய ஆதரவு தரும் வடநாட்டு ராணிக்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது பிடிக்காது. எனவே, சிற்றரசன் அவர்களுக்கு ஆதரவு தந்தால் அவன் ஆட்சியே "அம்போ" ஆகிவிடும் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது. ஆட்சி போய்விட்டால் குடும்ப வருமானமும் "கோவிந்தா' ஆகிவிடும் என்பதையும் அவன் மிகவும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததினால் அவன் இந்த விஷயத்தில் ரொம்பவும் அடக்கியே வாசிக்க வேண்டி இருந்தது. அதே சமயம், அவனுடைய எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை ரொம்பவே பயன்படுத்தி சிற்றரசனை "படுத்த" ஆரம்பித்தனர். இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சிற்றரசனுக்கு, அவனுடைய மிக நீண்ட கால அரசியல் அனுபவமும், மக்களின் சுலபமாக ஏமாறும் தன்மையும் இந்த சமயத்தில் கை கொடுத்தன.
சிற்றரசன் வடநாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான், தென் தீவு அப்பாவி மக்களை காப்பாற்ற சொல்லி. அவனுக்கும் தெரியும், வடநாட்டு ராணிக்கும் தெரியும் அந்த கடிதத்தை எந்த குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று. ஆனால், மக்கள் இந்த தள்ளாத (!) வயதிலும் தென் தீவு மக்களுக்காக அவன் கடிதம் எழுதி போராடுவதை (?) ரசித்தனர். எதிர்க்கட்சிகளுக்கோ ஒரே வயிற்றெரிச்சல்.

அடுத்ததாக கொட்டும் மழையில் தென் தீவு மக்களுக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினான். மக்களும் அதனை மிகவும் ரசித்து பார்த்தனர். ஒருவருக்கும் இதனால் ஒரு பைசாவுக்கும் உபயோகம் இல்லை என்று தெரிந்திருந்தும்.

தள்ளாத வயதில் குத்தாட்டங்களை பார்ப்பதற்கும், உபயோகமில்லாத கடிதங்கள் எழுதுவதற்கும் நேரம் செலவிட்டதால், சிற்றரசன் முதுகு வலியால் அவதிப்பட ஆரம்பித்தான். மருத்துவமனையிலும் அவனை அனுமதிக்க வேண்டியதாயிற்று. அரசியலில் அனுபவசாலியான சிற்றரசன் அந்த சந்தர்ப்பத்தையும் மக்களை ஏமாற்றவே உபயோக படுத்திக்கொண்டான். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே திடீரென்று ஒருநாள் அதிகாலையில் தென் தீவு மக்களுக்காக உண்ணா நோன்பு இருக்கிறேன் என்று ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டான். அது மிக பெரிய செய்தியாக பரவி அனைவரும் அவனின் தியாகத்தை (?) மெச்சி அவனின் வயதையும் உடல் நலத்தையும் கருதி உன்னா நோன்பை கை விடுமாறு கெஞ்சி கூத்தாடி அதனை கைவிட வைத்தனர். அவனுக்கு மட்டும்தானே தெரியும் மருத்துவர்கள் அவன் உடல் நிலை கருதி, அன்று ஒரு நாள் அவனை சாப்பிடாமல் இருக்க சொன்னது (!).

இப்படியாகத்தானே, நோகாமல் நோன்பு கும்பிடும் செப்படி வித்தையை சிற்றரசன் பயன்படுத்தி வடநாட்டு ராணியையும் பகைத்துக்கொள்ளாமல், மக்களிடமும் கெட்டபெயர் எடுக்காமல், எதிர்கட்சிகளையும் வெறுப்பேற்றி, தன் ஆட்சியையும் பாதுகாத்துக்கொண்டான். இந்த கூத்துகளுக்கு நடுவில் தென் தீவு மக்களை பற்றி கவலை படுவதற்கு யாருக்கு நேரம் இருந்தது?

இந்த கூத்துகள் நடந்துகொண்டிருக்கும்போதே பாரத நாட்டில் தேர்தல்களும் நடந்து முடிந்தன. அதில், நம் சிற்றரசனும் வடநாட்டு ராணியும் நல்ல வெற்றி பெற்றனர். என்ன ஒன்று, வட நாட்டு ராணி எதிபார்த்ததைவிட அதிகமாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததால் அவளுக்கு சிற்றரசனின் தயவு முன்பைபோல இப்போது தேவைப்படவில்லை. ஆனால், சிற்றரசனுக்கு தன்னுடைய குறுநிலத்தை ஆள்வதற்கு வடநாட்டு ராணியின் உதவி முன்பை போலவே வேண்டி இருந்தது.

வடநாட்டு புதிய ஆட்சியில் பங்குகொள்ளுமாறு வந்த ராணியின் அழைப்பை ஏற்று சிற்றரசன் தன்னுடைய தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வடநாட்டுக்கு பயணமானான். தென் தீவு மக்களின் அல்லலை தீர்க்க வடநாட்டுக்கு பயணிக்காதவன் இப்போது வடநாட்டு ஆட்சியில் தன்னுடைய குடும்பத்தினருக்கு "தகுந்த" பதவியை ஏற்பாடு செய்வதற்கு தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாது பயணிப்பதை அனைவரும் "ஆ"வென்று வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடிந்தது.

ஆனால், மிகவும் கித்தாப்புடன் தனக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று வடநாட்டுக்கு போனவனுக்கு "ஆப்பு" வைத்தாள் ராணி. சிற்றரசனுக்கு தற்போதைய நிலவரத்தை, அதாவது, அவனுக்குத்தான் ராணியின் உதவி தேவை, ஆனால், ராணி அவன் உதவி இன்றியே ஆள முடியும் என்னும் சூட்சுமத்தை புரிய வைத்தாள். அதனால், சிற்றரசன் தன்னுடைய மனைவியின் மூத்த மகனுக்கு மட்டுமே வடநாட்டு அமைச்சர் பதவியை பெற முடிந்தது. துணைவியின் மகளுக்கு ஒன்றுமே வாங்கி கொடுக்க முடியவில்லை. ஆனால், "கிடைத்தவரை லாபம்" என்ற கணக்கில் வருமானத்துக்கு குறைவில்லாமல் தன்னுடைய மற்ற ஆட்களுக்கு வட நாட்டில் மந்திரி பதவி வாங்கி விட்டான்.

பாதி வெற்றியுடன் ஊர் திரும்பிய சிற்றரசனுக்கு, மனைவியின் வரவேற்பு சரியாக இல்லை. என்ன காரணம் என்று பார்த்தால், சின்ன மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்று அவளுக்கு குறை. பாவம், தாயுள்ளம்தானே, தவித்தது. பார்த்தான் சிற்றரசன். எப்படியும் சின்னவன்தான் தனக்கு பிறகு ஒரு நாள் குறுநில ஆட்சிபீடம் ஏறவேண்டும். அந்த நாள் ஏன் இன்றாகவே இருக்க கூடாது என்று எண்ணியவன், அன்றே இளைய மகனை தமிழகத்தின் "இளவரசன்" என்று அறிவித்துவிட்டான். கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? மனைவியின் மகிழ்ச்சி அல்லவா முக்கியம். தான் ஒரு சிறந்த கணவன் என்று நிரூபித்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தான் சிற்றரசன்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அதே போல் நம் சிற்றரசனுக்கும் பாவம் இரண்டு பேரை சமாளிக்க வேண்டிய துர்பாக்கியம். மனைவியை ஒருவழியாய் சமாளித்தவனுக்கு துணைவியை சமாளிப்பது ரொம்பவே பேஜாறாகிவிட்டது. துணைவிக்கு சிற்றரசன் மேல் மிகுந்த கோபம். இருக்காதா பின்னே! மூத்தவளின் இரண்டு மகன்களுக்கு அடித்தது யோகம். ஆனால் தன்னுடைய ஒரே ஒரு செல்ல மகளுக்கு ஒன்றுமே இல்லை என்றால், எந்த தாய் மனதுதான் வாளாவிருக்கும்? துணைவியின் கோபம் தலைக்கு ஏறி, சிற்றரசனுக்கு, ஏண்டாப்பா இரண்டோடு நிறுத்தி விட்டோம். நாம் வழக்கமாக உபயோகிக்கும் சொல்லோடைபோல், எல்லாமே மூன்று மூன்றாக அடுக்குவோமே, "தமிழ்" என்னும் எழுத்து மூன்று, மா, பலா, வாழை என்னும் "கனிகள்" மூன்று, அய்யன் வள்ளுவன் இயற்றிய குரளில் "பால்கள்" மூன்று, என்பதுபோல், தானும் இரண்டோடு நிருத்தியிருக்காமல் மூன்றாவதாக ஒருவளையும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டது, எவ்வளவு தப்பாக போய்விட்டது, என்று நினைத்தான். இப்போது நினைத்து என்ன பயன் என்று தன் விதியை (மனதிற்குள்) நொந்துகொண்டு, தான் தினமும் வீட்டு வாசலில் திருட்டுத்தனமாக வணங்கும் "இயற்கையை" வேண்டிக்கொண்டு, துணைவியின் வீட்டுக்குள் அவளை எவ்வாறு சமாதான படுத்துவது என்று சிந்தித்தவாறே நுழைந்தான்."

இவ்வாறு சிற்றரசன் கதையை கூறி நிறுத்திய வேதாளம் விக்ரமனை பார்த்து கேட்டது: "இவ்வளவு நேரம் இக்கதையை கேட்ட மன்னனே, இதோ என்னுடைய கேள்விக்கு விடை கூறு. துணைவியின் பாராமுகத்தால் துன்புறும் சிற்றரசன், அவளை எவ்வாறு சமாதானம் செய்வான்? தென் தீவு மக்களின் துன்பத்தை தீர்க்க தான் செய்ததுபோல் வடநாட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி துணைவியின் மகளுக்கு பதவி வாங்கி கொடுப்பானா? இல்லை, இந்த தள்ளாத வயதையும் பொருட்படுத்தாது, மறுபடியும் வானில் பறந்து வடநாடு சென்று ராணியிடம் மகளுக்காக பதவி வேண்டி கெஞ்சுவானா? இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூற தவறினால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிவிடும்".

இவ்வளவு நேரம் பொறுமையாக வேதாளம் கூறிய கதையை கேட்ட மன்னன் விக்ரமன் வேதாளத்தின் கேள்விக்கு விடை கூறலானான்:

"வடநாட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி பலன் எதிர்பார்ப்பது என்பது, அதுவும் மந்திரி பதவி, அதிலும் தான் விரும்பிய இலாகா என்பது, குதிரைகொம்பு என்பது அப்பாவியான பொது மக்களுக்கே தெரியும் என்பதால், துணைவியிடம் அந்த பாட்சா பலிக்காது என்று சிற்றரசனுக்கு மிக நன்றாகவே தெரியும்.

மறுபடியும் வடநாட்டுக்கு வானில் பரந்து போவது இந்த தள்ளாத வயதில் தனக்கு கடினம் என்றாலும், துனைவிக்காக தன்னால் அந்த சுமையை தாங்கிக்கொள்ள முடியும் என்று "எதையும் தாங்கும் இதயம்" படைத்த அந்த சிற்றரசனுக்கு நன்றாகவே புரிபட்டது. ஆனால், அப்படி போவதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பதும் இன்னும் நன்றாகவே அவனுக்கு புலப்பட்டது. ஏனெனில், வடநாட்டு ராட்ஷசிக்கு, அதாவது, ராணிக்கு, தன்னுடைய ஆதரவு இப்போது தேவை இல்லை என்பதால், தான் குட்டி கரணம் போட்டாலும் அவள் மசியப்போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது.

எனவே, சிற்றரசன் மேலே கூறிய இரண்டு சமாதானங்களையும் துணைவியிடம் கூறுவதால் ஒரு பயனும் இல்லை என்று நம்பினான். துணைவிக்கும் இவை தெரிந்தேதான் இருந்தன. எனவே, துணைவியிடம் சிற்றரசன் என்ன கூறுவான் என்றால்:

"அன்பே, இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்ததிலிருந்து நீ என்னை புரிந்து கொண்டு இருப்பது இவ்வளவுதானா? நான் செய்வது அனைத்திலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்பது உனக்கு தெரியாததா? மூத்தவள் மகன்கள் ஏற்கெனவே அரசியலில் ஈடுபட்டு மக்களிடம் மிகவும் கேட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டு விட்டனர். இனிமேல், அவர்கள் நல்ல பெயர் எடுப்பது என்பது "அத்தைக்கு மீசை முளைத்த கதை" தான்.

ஆனால், நம் செல்ல மகளின் கதை அப்படியா? ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத அவளை மக்கள் இப்போது "கவிதாயினி" என்று கூறும்படி செய்ய வைத்தது யார்? நான்தானே? என்னுடைய பல்கி பெருக்கெடுத்துள்ள வாரிசுகளிலேயே "சுமாராக நல்ல பெயருள்ளவள்" நம் செல்ல மகள்தான் என்று உனக்கும் தெரியும்தானே? அப்படிப்பட்டவளை ஒரு மந்திரியாக்கி வெகு விரைவிலேயே "ஊழல் பேர்வழி" என்று கெட்ட பெயர் எடுக்க விட்டால் நஷ்டம் நமக்குத்தானே? நம்மை போன்றவர்களுக்கும் அவ்வப்போது "நல்லவர்கள்" என்ற முகமூடி தேவைப்படும் அல்லவா? அச்சமயத்தில் நம் செல்ல மகள்தானே நமக்கு துணை? எனவேதான், அனைத்தையும் யோசித்து நம் மகளுக்கு பதிலாக மூத்தவளின் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்தேன். ஏற்கெனவே கெட்டு போனவன்; இனிமேல் அவன் கெடுவதற்கு ஒன்றும் இல்லை.

அதே நேரம், அன்பே, உன் கவலையும் எனக்கு புரிகிறது. மூத்தவளின் வருமானத்திற்கு வழி செய்து வைத்த நான், உனக்கு என்ன செய்தேன் என்றுதானே நீ கவலைப்படுகிறாய்? விடு கவலையை. உன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்களைத்தானே நான் முக்கியமான துறைகளில் மந்திரிகளாக ஆக்க வைத்திருக்கிறேன்? எவ்வாறு இதனை நீ கவனிக்க தவறி விட்டாய்? உன்னுடைய ஆட்கள் உனக்கு சேரவேண்டிய வருமானத்தை, சேரவேண்டிய இடத்திற்கு, சேரவேண்டிய நேரத்தில், கட்டாயமாக சேர்த்து விடுவார்கள். ஒன்று பார்த்தாயா? என்னுடைய ஆட்கள் நிறைய பேருக்கு வடநாட்டான்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, உன்னுடைய ஆள் பேரில் பெரும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் உன்னுடைய ஆள் என்ற ஒரே காரணத்திற்காக நான் வடநாட்டான் காலில், கையில் விழுந்து, உன் ஆளை அதே பதவியில் மறுபடியும் அமர்த்த வைத்து இருக்கிறேனே, இது போதாதா கண்ணே, நான் உன்னுடைய நலத்தை ஒருபோதும் கவனிக்க தவறுவதில்லை என்பதற்கு?

ஒரு புறம் உன்னுடைய நம்பிக்கையான ஆட்கள் மூலமே உன் வருமானத்திற்கு வழி. மறுபுறம் உன் அன்பு மகளின் நற் பெயர் நீடிக்கும்படி ஏற்பாடு. இதைத்தான் கண்ணே ஆங்கிலத்தில் "வின்-வின்" என்று சொல்லுவார்கள். இத்தகைய ஏற்பாட்டை உன்நலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செய்துள்ள என்னைப்போய் எவ்வாறு நீ சந்தேகித்தாய்?"

இவ்வாறு சிற்றரசன் தன்னிலை விளக்கம் அளித்தபிறகும், துணைவி முறுக்கிக்கொண்டு நிற்க என்ன முட்டாளா அவள்?" என்று விக்ரமாதித்தன் வேதாளத்தின் கேள்விக்கு நீண்ட விடை அளித்தான்.

விக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் "வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான், என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய் விக்ரமாதித்தா" என்று கூறி விட்டு மௌனத்தை கலைத்த மன்னனின் தோளில் இருந்து பறந்து மீண்டும் தான் குடிஇருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது. மன்னன் விக்ரமாதித்தனும் தன்னுடைய மௌனம் கலைந்ததால் விடுதலை பெற்று பறந்து சென்ற வேதாளத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக அது குடி கொண்டு இருக்கும் முருங்கை மரம் நோக்கி திரும்பி நடக்கலானான்.


அப்படியே அவரோட இந்தக் கவிதையயும் பாத்துக்குங்கப்பு!!

திராவிடம் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதை
கழக குஞ்சுகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.

("அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!!" என்ற பாடலின் மெட்டில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது).


(பல்லவி)

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )


(சரணம்)

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன் .....

ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ .....

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன்,

மனைவி, துணைவிகளின் மனம் கோணாமல்

பிரித்து, பகிர்ந்து கொள்வான் கழக தலைவன் .....

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!


(சரணம்)

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

தாயுள்ளத் தலைவர், கோடிகளை கவர்ந்து,

இதயத்தில் 'மட்டும்' இடம் தருகின்றார் .....


கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )


அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது