3/27/2007

விடாது கருப்புவுக்கு நன்றி

விடாது கருப்பு செய்த ஒரு நல்ல காரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது பெரியார் பேச்சு பற்றிய இப்பதிவைத்தான் குறிப்பிடுகிறேன்.
தனது ஆருயிர் மனைவி நாகம்மாள் மறைந்த சமயத்தில் பெரியார் அவர்கள் மனம் விட்டு எழுதியதை இங்கே கீழே அப்படியே தருகிறேன்.

உண்மையிலேயே கூறுகிறேன் தனது இப்பேச்சால் பெரியார் அவர்கள் என் மதிப்பில் மிகவும் உயர்ந்தார். அவர் பொதுக்கூட்டங்களிலோ, தனது கட்டுரைகளிலோ என்னதான் கடுமையான சொற்களை உபயோகித்தாலும் நேரில் பழக இனிமையானவர் என்றும் தனக்கு மிகவும் இளையவர்களையும் வாங்க என்று மரியாதையாக விளிப்பார் என்றும் படித்துள்ளேன். ஹிந்து நிருபராக பணி புரிந்த எனது தந்தையார் நரசிம்மன் அவர்களே என்னிடம் கூறியிருக்கிறார் என்பதை நான் பெரியார் அவர்களது திருமணம் பற்றிய பதிவில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

இப்போது வி.க.தனது பதிவில் இட்ட பெரியார் அவர்களது பேச்சை அப்படியே கீழே போடுகிறேன். நன்றி விடாது கருப்பு மற்றும் குடிஅரசு இதழ் 14.5.1933. தடித்த சாய்வெழுத்துகளில் சில வரிகளை குறித்திருப்பது நான். என்னைக் கவர்ந்த வரிகள் அவை.

"நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக!

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.

ஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

'குடிஅரசு' 14.5.1933"

இப்போது மறுபடியும் டோண்டு ராகவன்.

மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம்.

மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான். அவர் ஏற்கனவே சிலப்பதிகாரத்தை பற்றி கூறியதுடன் நான் ஒத்துப் போனதை எழுதியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/26/2007

தாய் மொழி தரும் உற்சாகம்

பிரபல இட்டிஷ் (Yiddish) எழுத்தாளர் Sholom Aleichem கூறுவதை நம்ப வேண்டுமென்றால் உலகிலேயே மிக சுலபமான மொழி இட்டிஷ்தானாம். ஏன் அவர் அவ்வாறு கூறினார்? ஏனெனில் இட்டிஷ் அவரது தாய் மொழி.

சமீபத்தில் 1953-ல் நான் படித்த இந்த ஜோக் அப்போது ஜோக் என்றே தோன்றவில்லை:

குப்பு: நல்ல வேளை நான் ஜெர்மனியிலே பிறக்கவில்லை.
சுப்பு: ஏன்?
குப்பு: ஏன்னாக்க எனக்கு ஜெர்மன் பாஷை சுத்தமாத் தெரியாது.

ஏனெனில், நான் பிறந்து சில ஆண்டுகளுக்கு உலகத்தில் எல்லோருக்குமே தமிழ் தெரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு.

வருடம் 1995. தில்லிக்கு வந்து பதினான்கு ஆண்டுகள் அப்போது ஆகிவிட்டிருந்தன. திடீரென கேபிள் தொலைக்காட்சி நடத்துனர் எங்கள் வீட்டுக்கு சென்னை தொலைகாட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகளைக் காட்டும் DD 5 நிகழ்ச்சிகள் தரத் துவங்கினார். ஆஹா, பதினான்கு ஆண்டு வனவாசத்துக்கு பிறகு இந்த ராகவனுக்கு இதை விட என்ன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்க முடியும்? இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தேமதுரத் தமிழோசையை தொலைக்காட்சிப் பெட்டியில் கேட்க முடிந்தது சவலைக் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைத்தது போல இருந்தது என்று நான் நன்றியுடன் DD5 எதிரொலி நிகழ்ச்சிக்கு எழுத அதையும் ஒளிபரப்பி எனது களிப்பை பன்மடங்காக்கினர் சென்னைத் தொலைகாட்சியினர்.

பிறகு என்ன? செய்திகள் கூட தமிழ் செய்திதான் பார்ப்பது என்ற பிடிவாதம். ஒவ்வொரு திங்களன்றும் மாலை 7 மணிக்கு "நிலாப்பெண்" என்ற அருமையான சீரியல் இன்னும் மனதில் இருக்கிறது. கச்சிதமாக 13 திங்கட் கிழமைகளில் முடிந்து உள்ளத்தை கொள்ளை கொண்டது. இரவு 7 மணிக்கு "விழுதுகள்" என்ற மெகா சீரியல். ஓராண்டுக்குமும் மேல் தொய்வில்லாமல் ஓடியது. எல்லாவற்றையும் விட அது தமிழில் இருந்தது என்பதுதான் முக்கியம்.

வருடம் 2000. அகில உலக பெண் தொழிலதிபர்கள் மகாநாடு நடந்தது. அதில் நான் பிரெஞ்சு துபாஷியாக பங்கு பெற்றேன். அதில் ருவாண்டா தேசத்து பிரதிநிதி பிரெஞ்சில் எழுதிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அவர் முதலில் பிரெஞ்சில் வாசிக்க நான் அவருக்கு பிறகு ஆங்கிலத்தில் வாசித்தேன். அது நல்ல அனுபவம்தான்.

ஆனால் காமரூன் பிரதிநிதி விஷயத்தில் அதை விட சிறந்த அனுபவம் கிடைத்தது. அதாவது மொழிபெயர்த்தது என்னவோ நாந்தான். ஆனால் அதை வாசிக்க அந்த நாட்டு பிரதிநிதி தனது பிரிட்டிஷ் தோழியை தேர்ந்தெடுத்தார். நான் எழுதியதை அந்த பிரிட்டிஷ் பெண்மணி படிக்கப் படிக்க நான் அப்படியே உறைந்து போனேன். எவ்வளவு அழகாகப் படித்தார்! நான் உருவாக்கிய வார்த்தைகளை எவ்வளவு அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் உச்சரித்தார்! நான் அப்படியே உருகிப் போனேன். பிறகு அப்பெண்மணியிடம் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க "அந்த வார்த்தைகள் என்னவோ உங்களுடையதுதானே, ஏனெனில் எனக்கு பிரெஞ்சு தெரியாது. நீங்கள் எழுதியதை வெறுமனே படித்தேன்" எனக் கூறினார். வெறுமனேவா? என்ன தத்ரூபமாகப் படித்தார்! என்ன இருந்தாலும் அவர் தாய் மொழி அல்லவா?

அதே போல புது தில்லி ரயில் முன்பதிவு செய்யும் இடத்தில் படிவத்தை ஹிந்தியில் நிரப்பித் தர, சம்பந்தப்பட்ட ஊழியர் மிக மகிழ்ந்து நல்ல இருக்கை தந்தார். அதுவும் தில்லியில் எல்லோரிடமும் சரளமாக இந்தி பேசியதால் நான் அங்கு வெளியூரில் இருப்பது போலவே என்னை அந்த ஊர்க்காரர்கள் உணர விடவில்லை. அதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமிழில் பார்க்க முடிந்த போது நான் அதைத்தான் செய்தேன். இது எனது தாய் மொழி சம்பந்தப்பட்டது. தில்லிக்காரர்களின் எதிர்வினை அவர்களது தாய் மொழி சம்பந்தப்பட்டது. அதே போல இப்பதிவில் நான் குறிப்பிட்ட உருது ஃபிகருக்கும் அதே தாய் மொழி அபிமானமே.

இப்போது? என்ன மொழிபெயர்ப்பாக இருந்தாலும் தமிழுக்கு மாற்றும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா? உதாரணத்துக்கு என் நண்பர் ரவி பாலசுப்ரமணியம் அனுப்பிய மின்னஞ்சலின் அடிப்படையில் நான் இட்ட இப்பதிவை மொழி பெயர்க்கும்போது நான் நானாக இல்லை. மடமடவென வார்த்தைகள் கணினியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் மாதிரி வெளிவந்தன.

சும்மாவா சொன்னார்கள், தமிழுக்கு அமுதென்று பேர் என்று?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/24/2007

இந்தியாவுக்கு கட்டிவராத டாம்பீகமும் சோம்பேறித்தனமும்

எனக்கு தெரிந்து எந்த பாராளுமன்ற அல்லது சட்டசபை கூட்டத் தொடரோ அதனதன் முதல் நாளைக்கு முழுவதுமாக வேலை செய்ததில்லை. என்ன நடக்கும் என்றால், இடைகாலத்தில் யாராவது பழைய அல்லது செயலில் உள்ள அங்கத்தினர்கள் மண்டையைப் போட்டிருப்பார்கள். முதல் நாளன்று சபை கூடியதும் இறந்தவர்களை பற்றி இரங்கல் தீர்மானம் போட்டு விட்டு, சபையை அத்துடன் அன்றைக்கு ஒத்தி வைத்து விட்டு இறங்கி போய் கொண்டேயிருப்பார்கள். இதில் கட்சி வேறுபாடே கிடையாது.

நான் கேட்கிறேன், ஒரு நாளைக்கு சட்டசபை கூட்டம் நடக்க என்ன செலவாகும்? அத்தனையும் எள்ளுதானா? ஏன், இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து அஞ்சலி செலுத்தி விட்டு வேலையைத் தொடங்கினால் குடி முழுகி விடுமா என்ன?

இன்னொரு கொடுமை செயற்கைக்கோள் சேனல்கள் வருவதற்கு முன்னால் நடந்தது. அதாவது ஒரு தலைவர் இறந்தால் இரண்டு நாட்களுக்கும் மேல் சோக இசைதான் தொலைக் காட்சி மற்றும் ரேடியோவில். அதுவும் இந்திராகாந்தி இறந்த போது அவர் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டது முழுக்க முழுக்க லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது. அடுத்த நாள் சடங்குகளும் அவ்வாறே. ராஜீவ் காந்தி கோட்டின் மேல் பூணூல் போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ததை முழுக்கவே காண்பித்தார்கள். நல்ல வேளையாக இப்போதெல்லாம் இந்த வேலை நடக்கவியலாது என்பதற்கு நாம் உலகமயமாக்கலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அதே போல பிரதம மந்திரி / குடியரசுத் தலைவர் இறந்தால் இரண்டு நாள் விடுமுறை. வெளி தேசத்து தலைவர்கள் இறந்தால் ஒரு நாள் விடுமுறை. என்ன இதெல்லாம் கூத்து? ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத் யூனியனிலோ லீவே கிடையாது. எங்கு போய் அடித்து கொள்வது?

இன்னொரு கொடுமை பிரதம மந்திரி இறந்தால் அரசு அவருக்களித்திருக்கும் இல்லத்தை நினைவுச் சின்னம் ஆக்குவது. நேரு காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது. தீன் மூர்த்தி பவன், 1, சஃப்தர்ஜங் சாலை ஆகிய கட்டடங்கள் மியூசியமாகின. நல்ல வேளை, ராஜீவ் காந்தி இறந்த போது அவர் அதிகாரத்தில் இல்லையோ 7, ரேஸ்கோர்ஸ் சாலை பிழைத்ததோ. அதுவும் இந்த விஷயத்தில் நேரு குடும்பத்தினருக்கு மட்டும் இந்த சலுகை. நாடு யார் அப்பன் வீட்டு சொத்து என நினைத்து கொண்டிருக்கிறார்கள்? நேரு தனது அலகாபாத் மாளிகையை நாட்டுக்கே எழுதிவைத்தார் எனப் பெருமை பேசுவார்கள். அங்கு போய் பார்த்தால்தானே தெரிகிறது அதுவும் நேரு மியூசியம் என்று. பிறகு சமாதிகள் வேறு. ஒவ்வொரு சமாதிக்கும் ரியல் எஸ்டேட் வளைத்து போடப்படுகிறது. சென்னையிலேயே பார்க்கிறோமே. இதனால் வரும் பொருள் நட்டம் எவ்வளவு?

வேறொரு கொடுமை விடுமுறைகள். அரசு ஊழியர்களுக்கு வருடத்துக்கு 16 விடுமுறை நாட்கள், 2 ரெஸ்ட்ரிக்டட் விடுமுறைகள். முதலாவதில் மூன்று கட்டாய விடுமுறை நாட்கள். அவை ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 மற்றும் ஜனவரி 26. இந்த 3 நாட்களுக்கும் தில்லியில் எல்லா கடைகளும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று வேலை செய்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் வேறு கட்ட வேண்டும் இல்லையெனில் கடமை தவறாத போலீசாருக்கு மாமூல் தர வேண்டும். உழைப்பின் உயர்வை அவ்வாறு உயர்த்திப் பேசிய உயர்ந்த மனிதர் காந்திக்கு நல்ல அவமரியாதை இது.

இதனால் என்ன ஆகிறது என்றால் பல நாட்களுக்கு தொடர்ந்தால் போல பேங்குகள் வேலை செய்வதில்லை. எவ்வளவு நஷ்டம்? இசுலாமியப் பண்டிகை ரெஸ்ட்ரிக்டட் லிஸ்டில் வந்தால் பல இந்துக்கள் அதை எடுத்து கொள்கிறார்கள். அதே போலத்தான் ரெஸ்ட்ரிக்டாட் லிஸ்டில் வரும் மற்ற மத பண்டிகைகளும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுக்கும்போது prefix suffix செய்வது வேறு.

இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அப்படியே எல்லா விடுமுறைகளையும் கட் செய்ய முடியாது. வேறு விதமாக செய்யலாம். மூன்று கட்டாய விடுமுறைகள் இருக்கட்டும். மீதி எல்லா பண்டிகை தினங்களும் ரெஸ்ட்ரிக்டட் வகைக்கு போகட்டும். சம்பந்தப்பட்ட மத சம்பந்தமில்லாதவர்கள் அவற்றை எடுக்க தடை செய்ய வேண்டும். அம்மாதிரி எடுத்து கொள்ளக்கூடிய விடுமுறைகள் ஆரம்பத்தில் 15 வைக்கலாம். பரவாயில்லை. ஏனெனில் எல்லோரும் அவற்றை ஒரே சமயத்தில் எடுக்க முடியாதாகையால் அரசு அலுவலகங்கள் பாட்டுக்கு இயங்கும். சம்பந்தப்பட்ட அலுவலக பொறுப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் விடுமுறை எடுப்பவர்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அதே போல இந்த மாதிரி தாரை வார்த்த அரசு கட்டிடங்களைத் திரும்பப்பெற வேண்டும்.

செய்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/22/2007

டோண்டு ராகவனின் கிறுக்கு குணங்கள்

நண்பர் மா.சிவகுமாரின் அன்பான அழைப்பை ஏற்கிறேன். அதற்கு முன்னரே நண்பர் நாட்டாமை என்னை சில கேள்விகள் கேட்டிருந்தார். அவற்றுக்கு பதிலாக நான் ஒரு தனி பதிவே போட்டேன். அதற்கு பிறகு பல பதிவுகள் என்னை பற்றி நான் சுதாரித்து அறிந்து கொண்டதை மையமாக வைத்து போட்டிருக்கிறேன்.

இப்போது எனது கிறுக்கு குணங்கள் பற்றி எழுத ஆரம்பிக்கிறேன்.

1. அச்சில் எது வந்தாலும் அதை படிப்பது என்ற எனது குணத்தால் எனது பல நண்பர்கள் என்னுடன் கூட வருவதையே தவிர்த்தனர். அதிலும் என் நண்பன் எம்.பி. சாரதிக்கு ஒரு அனுபவம். நானும் அவனும் திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையில் பேசிக் கொண்டே பீச் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, நான் திடீரென முரளி கஃபே எதிரில் ஒரு நடைபாதை புத்தகக் கடையில் நின்று விட, சாரதி மட்டும் நான் கூட வருவதாக நினைத்து கொண்டு பேசிக் கொண்டே சென்றிருந்திருக்கிறான். பக்கிங்காம் வாய்க்கால் அருகே திடீரென ஒரு அசாதாரண சூழ்நிலையை உணர்ந்திருக்கிறான். அதாவது எல்லோரும் அவனையே பார்ப்பது போன்ற நிலை. என்னிடம் கேட்கலாம் என நினைத்து திரும்பினால் நான் காணவில்லை. அதன் பிறகு அவன் என்னிடம் கோபித்து கொண்டு போய் வெகு நாள் காணவில்லை.

2. அதே நேரத்தில், இந்த கிறுக்கு குணமே சில சமயங்களில் சௌகரியமாகப் போனதும் நடந்திருக்கிறது. சமீபத்தில் பிப்ரவரி 1969-ல் நங்கநல்லூர் வீட்டிற்கு குடி புகுந்தோம். மாவரைப்பதற்காக மெஷினுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு எப்போதும் கும்பல் அதிகம். ஆகவே கையில் அமெரிக்க நூலகத்திலிருந்து எடுத்து வந்த ஒரு தலையணை சைஸ் நாவல். கியூவின் கடைசியில் போய் நிற்க, முதலாளி மெஷின் அருகிலிருந்தவர் என்னைப் பார்த்ததும் விரைந்து வந்து என் கையில் இருந்த பாத்திரத்தை எடுத்து சென்றார். அதை சில வயதான பாட்டிகள் ஆட்சேபிக்க அவ்ர் "இந்தா படிக்கிற பிள்ளை பாவம், கையிலே பாட புத்தகத்தோட வந்திருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பினா அங்கே போய் படிச்சுக்கும் இல்லையா" என்று அவர்களை அடக்க, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு என்னை நன்றாக படிக்குமாறு அறிவுரைகள் கூறினர். என் காது வரை சங்கடத்தால் உஷ்ணம் ஏறியது. அசடு வழிய பாத்திரத்தை மாவரைத்ததும் திரும்ப வாங்கி வீட்டுக்கு விரைந்தேன்.

3. அறுவை மன்னனின் படுத்தல்கள். பல அறுவை ஜோக்குகள், கதைகள் என்றெல்லாம் கூறி எல்லோரையும் பல ஆண்டுகளுக்கு படுத்தியிருக்கிறேன். என்னைப் பார்த்தாலே நண்பர்கள் ஓடுவர்.

4. பிறகு திடீரென என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை வந்து என்னைத் திருத்தியது.

4. பிடிவாதம். மேலே 3 மற்றும் 4-ல் கூறப்பட்டவை அந்தந்தக் காலக் கட்டங்களில் தீவிரமாக அனுசரிக்கப்பட்டன. அறுவை என்றால் படு அறுவை, அவ்வளவு அறுவை. பிறகு அதன் நேர் எதிர் நிலையிலும் பிடிவாதமாக இருந்தேன். சில ஆசிரியர்களுக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டால் பிடிக்காது. நான் அவர்களிடம்தான் அதிகம் சந்தேகம் கேட்பேன். ஆகவே ஸ்கூல் நாட்களில் பெஞ்சு மேல் நின்றதோ அல்லது வகுப்பறைக்கு வெளியே அனுப்பப்பட்டதோ, அல்லது உதை வாங்கியதோ அல்லது எல்லாம் சேர்ந்தோ நடக்காத நாட்களை கையில் உள்ள விரல்களால் எண்ணிவிடலாம். ஆனால் அதே பிடிவாதம்தான் எனது முரட்டு வைத்தியங்களுக்கும் அடிப்படை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

5. ஞாபக சக்தி. இது என்னையே பலமுறை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பற்றி ஏற்கனவே பதிவுகள் போட்டுள்ளேன். அதை விட என்னை ஆச்சரியப்பட வைத்தது ஹைப்பர் லிங்குகள் என்றால் மிகையாகாது.

6. மொழியார்வம். சாதாரணமாக பொறியாளர்களுக்கு மொழியறிவு கம்மி என்ற ரேஞ்சில் பேசுவார்கள். பல பொதுப்படுத்துதல்கள் போல இதுவும் முழு உண்மையல்லதான். இருப்பினும் இந்த எண்ணம் உலகெங்கும் பரவலாக உள்ளது. ஆகவே ஒரு பொறியாளராக இருந்து மொழிபெய்ர்ப்பு வேலைகளையும் பார்ப்பதென்றால் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆச்சரியம் தரும் விஷயம்தான். அதற்காகவே எனக்கு முதல் இண்ட்ர்வியூ கிடைத்து விடும். ஒரு முறை நல்ல வேலை செய்து அசத்தினால் அவர் ஏன் இன்னொரு சேவை அளிப்பவரிடம் போகப் போகிறார். ஆக இந்த கிறுக்கு குணமும் உதவியாகவே உள்ளது.

வேறு கிறுக்கு குணங்கள் என்னவென்று எழுதுவது. ஏற்கனவே அவற்றில் பல ஓவர்லேப் ஆகிவிட்டன. ஆகவே இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

நான் அழைக்கும் 5 பேர்:
1. என்றென்றும் அன்புடன் பாலா
2. மதுசூதனன்
3. ம்யூஸ்
4. டி.பி.ஆர்.ஜோசஃப்
5. டாலர் செல்வன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/16/2007

தாய்மொழி வெறியர்கள்

நான் சமீபத்தில் 1975-ல் செய்த முதல் மொழிபெயர்ப்பு வேலையே துபாஷி வேலைதான். மார்ச் மாதம். அப்போது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் Oberstufe வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். பிரெஞ்சு இன்னும் கற்கவில்லை. அந்த ஆண்டு ஜூலை மாதத்தில்தான் அதை ஆரம்பிக்கப் போகிறேன் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. அது வேறு கதை. இப்போது நான் கூறவந்ததைக் கூறிவிடுகிறேன்.

திடீரென Gaitonde என்ற தோல் பதனிடும் கம்பெனிக்கு ஜெர்மன் துபாஷி தேவைப்பட்டது. மேக்ஸ்ம்யுல்லர் பவன் நிர்வாக அதிகாரி துளிக்கூட தயக்கம் காட்டாது என்னை சிபாரிசு செய்து விட்டார். எனக்கு சற்றே உதறல்தான். ஆனால் தேசிகன் என் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையை பார்த்தபின் நானும் துணிந்து விட்டேன். போனேன், வேலை செய்தேன்.

ஆரம்பத்திலேயே ஜெர்மன் விருந்தாளி என்னிடம் கூறிவிட்டார். அவர் தனது ஆங்கில அறிவை மேம்படுத்துவதில் இருந்ததால் தான் அதிகம் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கப் போவதாகவும் ஆகவே நான் அவருக்கு அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளை எடுத்து கொடுத்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். பணவிஷயம் பற்றிப் பேசும்போது மட்டும் மனிதர் ஜெர்மனில்தான் பேசினார்.

நான் பார்த்த ஜெர்மானியர் முடிந்த வரைக்கும் தாங்களே ஆங்கிலம் பேசி என்னைப் போன்ற துபாஷிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டனர். அவர்களை துரோகிகள் என்று நான் பாதி விளையாட்டாகவும் பாதி வினையாகவும் கூறுவதுண்டு. அப்போதிலிருந்து இன்று வரை நான் செய்த ஜெர்மானிய துபாஷி வேலைகள் ஃபிரெஞ்சு துபாஷி வேலைகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பிரெஞ்சுக்காரர்கள்? ஆங்கிலம் தெரிந்தாலும் அதில் பேச விரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாய்மொழிப் பற்று அவர்களுக்கு. அவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். என் போன்றவர்களுக்கு வேலை கிடைக்கிறதல்லவா? ஹி ஹி ஹி.

அவர்களது மொழிவெறிக்கு ஒரு உதாரணம் Gerge Pompidou என்பவர். அவர் ஃபிரான்ஸின் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடந்த விஷயம் இது. அப்போது இங்கிலாந்து ஐரோப்பிய பொதுச் சந்தைக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒத்து கொண்ட நிலையில் ஃபிரான்சு மட்டும் முட்டுக்கட்டை போட்டது.

அப்போது Pompidou சொன்னார். "இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தால், ஐரோப்பிய சந்தையின் பொது மொழியாக ஆங்கிலம் வந்து விடும். எனக்கு அது பிடிக்கவில்லை" என ஒரு குண்டைப் போட்டார். அச்சமயத்தில் சில ஃபிரெஞ்சுக்காரர்களுக்கே இது கொஞ்சம் ஓவராகப் பட்டது. ஒரு பத்திரிகையில் இவ்வாறு தலைப்பு குடுத்தார்கள். "Monsieur le Président, vous êtes chauviniste!!" (குடியரசுத் தலைவர் அவர்களே, நீங்கள் ஒரு வெறியர்). அதற்காகவெல்லாம் அவர் அசரவில்லை. உண்மையைத்தானே கூறுகிறார்கள் என்று விட்டுவிட்டார் போல.

எது எப்படியானாலும் பிரெஞ்சுக்காரர்களுடன் ஒப்பிடும்போது நாம் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கித்தான் இருக்கிறோம். எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கப்பல் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையே எடுத்து கொள்வோம். பழந்தமிழர்கள் கடற்பயணங்களில் விரும்பி ஈடுபட்டவர்கள். கப்பல்களை கட்டி, கடலில் செலுத்தியவர்கள். நான் கூறுவது சோழர்கள் காலத்தை. கண்டிப்பாக கப்பலின் எல்லா பகுதிகளுக்கும் தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள். அவற்றை கண்டறிந்து இக்காலக் கப்பல்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்க முடியாதா? உதாரணம் மாலுமி, மீகாமன், சுக்கான், நங்கூரம் போன்றவை.

அதைத்தான் ஃபிரெஞ்சுக்காரர்களும் செய்கிறார்கள். பல புதிய தொழில்நுட்ப ஆங்கில வார்த்தைகளை முதலில் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். பிறகு அவற்றுக்கேற்ற பிரெஞ்சு வார்த்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். நம்ம வைகைப்புயல் ஒரு படத்தில் சொன்னது போல இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்க போல.

உதாரணத்துக்கு:
Walkman --> Baladeur
Email --> Courriel
Spam --> Pourriel or Polluriel
Hardware --> Matériel
Software --> Logiciel

இந்த மாதிரி ஒக்காந்து யோசிக்கறதுக்குன்னே எனக்கு தெரிந்து இரண்டு அமைப்புகள் உள்ளன. அவை:

Académie Française,

L'enrichissement de la langue française (ELF)

நிஜமாகவே உக்காந்துதான் யோசிக்கிறாங்க. அவ்வப்போது பயங்கர சண்டையெல்லாம் ஏற்படும். அது வேறு கதை. ஆனால் ஒன்று யாராவது சரியான வார்த்தையை உபயோகிக்காவிட்டால் அவர்களுக்கு சங்குதாண்டி. அதே போல பெயர்ப்பலகை வைக்கும்போது ஃபிரெஞ்சில் இல்லையேன்றால் கையில் அகப்பட்டதை வெட்டி விடுவார்கள்.

திடீரென ஏன் இப்பதிவைப் போட்டேன்? காரணம் இருக்கிறது. நான் இப்போது மொழிபெயர்த்து கொண்டிருக்ப்பது ஒரு ஃபிரெஞ்சு கட்டுரை. அது பிளாஸ்டிக் பொருட்கள் பற்றியது. அதில் திடீரென Plasturgiste என்ற வார்த்தை வந்தது. பார்த்த உடனேயே புரிந்து விட்டது. மெடல்லர்ஜி நிபுணர்களை நாம் மெடல்லர்ஜிஸ்டுகள் என்று கூறுவது போல இங்கு பிளாஸ்டிக் தொழில் நுட்பம் தெரிந்தவர்களை பிரெஞ்சில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் தொழ்யில் நுட்பங்களௌக்கிடையே பல வார்த்தைகள் பொது. மோல்ட், காஸ்டிங் போன்றவை. இது பற்றி உடனே நான் மரபூராருக்கு (ப்ளாஸ்டிக்சந்திரா) ஃபோன் செய்து கேட்டபோது ஆங்கிலத்தில் அவ்வாறு கூறுவதில்லை எனக் கூறிவிட்டார். இருப்பினும் இந்த வார்த்தை என்னைக் கவர்ந்தது. பிளாஸ்டிக் டெக்னாலஜிஸ்ட் என்று கூறுவதை விட இது அழகாகத்தானே உள்ளது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எப்படி நடந்தது என்று தெரியவில்லை

திடீரென எனது இரு பழைய பதிவுகள் பப்ளிஷ் ஆகியுள்ளன. எனது அம்மாதிரியான பதிவுகளை எனது வலைப்பூவில் புது லேபல்கள் கொடுத்து வகைப்படுத்தியதுதான் நான் செய்தது. ஆனால் அவை திடீரென பப்ளிஷ் ஆகியுள்ளன. இம்மாதிரி ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை.

ஆகவே குழப்பத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். அவை இரண்டும் இப்போதைய சூழ்நிலையில் தேவையில்லாததால் அவற்றுக்கான பின்னூட்ட பெட்டியை மூடி உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/02/2007

அசிங்கமெனக் கருதப்படும் தொழில், ஆனால் மகிழ்ச்சி அசிங்கமல்ல

அருமை நண்பர் ஜயகமல் அவர்கள் எனக்கு இன்று காலை இட்ட மின்னஞ்சலில் வந்த கட்டுரை என்னை இப்பதிவு போடச் செய்தது.

Filthy Rich Businesses, Want to be disgustingly happy? Start a disgusting business என்ற நீண்ட தலைப்பில் Geoff Williams என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை மிகவும் அருமை. இங்கு அதை முடிந்த அளவில் தமிழில் தருவேன்.

Jay Villemarette என்னும் மனிதர் எலும்புக் கூடுகளை சுத்திகரிக்கும் வேலை செய்பவர். இது அவருக்கு சாப்பாடு போடும் தொழில். சாப்பாடு என்ன விருந்தே தரும், தனம் தரும், செல்வம் தந்திடும் தொழில் என்பதிலே அவர் அடையும் மகிழ்ச்சி மிக உண்மையானது. செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்கிறார் அவர்.

வேலை ரொம்ப சுவாரசியமானது என்று அவர் கூறுவது நம்பத் தகுந்ததே. இன்று கொரில்லாவின் எலும்புகள், நாளை காண்டா மிருகம், இன்னொரு நாள் மனித எலும்புக் கூடு என்று வியாபாரம் செல்கிறது.

அப்படி இதில் ஏதேனும் விரும்பத்தகாதது உண்டென்றால் அவரைப் பொருத்த வரை மனித எலும்புக் கூட்டை சுத்தம் செய்வதுதான் என்கிறார் அவர். ஏனெனில் மனிதன் தன் வாழ்நாளில் கண்டதை உண்கிறான். பல உணவுப் பொருட்கள் வெவ்வேறு வகை கொழுப்புகளாக எலும்புகளில் படிகின்றன. கெட்டுப் போன உணவின் வாசனை அந்த எலும்புகளில் என்றும் கூறுகிறார்.

ஆகவே ஒரு மனித எலும்புக் கூட்டை சுத்தம் செய்ய 7500 அமெரிக்க டாலர்கள் கேட்கும் அவர் ஒரு கரடியின் எலும்புக்கூட்டுக்கு அவ்வளவு சார்ஜ் ஆகாது என்கிறார்.

இவரது இந்த வேலை, சாக்கடை சுத்தம் செய்யும் வேலை, குப்பை வாரும் வேலை ஆகியவை சாதாரணமாக அசிங்கம் எனக்கருதப்படுபவை. ஆனால் சரியாக நடத்தினால் பணம் அள்ளலாம். ஏனெனில் இவை மனித நாகரிகத்துக்கு மிக முக்கியமானவை. பணம் மட்டுமா அள்ளலாம்? இத்தொழில்களை சந்தோஷமாகவும் உணரலாம் என்பது Jay Villemarette அவர்களின் கட்டுரையிலிருந்து அறிய முடிகிறது. நாம் பெறும் சந்தோஷத்தை விட அதிக சந்தோஷம் அவர்கள் பெறலாம் என்றும் தெரிகிறது.

Skulls Unlimited International என்ற அவரது கம்பெனியின் பெயரே அதைக் குறிக்கிறது. இதில் unlimited என்ன வேண்டியிருக்கிறது என்றும் சிலர் கேட்கலாம். ஆனால் கூர்ந்து நோக்கின், அதன் நியாயம் புரியும். மியூசியம், மிருக மற்றும் மருத்துவ கல்லூரிகள் போன்றவைக்கு இவற்றின் தேவை மிகவும் அதிகம். எல்லாம் சந்தையை சரியாக படித்து தேவையை பூர்த்தி செய்யும் கலைதான்.

இவரைப் பொருத்தவரை எல்லாம் விளையாட்டாகவே ஆரம்பித்தது. ஒரு நாயின் மண்டையோட்டுடன் ஆரம்பித்த இவர் ஆர்வம் பல மிருகங்களின் மண்டையோடு மற்றும் எலும்புகள் என்று பரவி (ஒரு வேளை இவர் தாயார் "அடேய் கடங்காரா என்ன வேலை செய்யறே நீ? அந்த கருமாந்திரத்தையெல்லாம் தூக்கிப்போட்டு, கைகால் கழுவிவிட்டு உள்ளே வா சனியனே" என்று கூட திட்டியிருக்கலாம் என்று இந்த டோண்டு ராகவனுக்கு இப்போது தோன்றுகிறது), தற்சமயம் இவ்வளவு பெரிய பிசினசாக வளர்ந்துள்ளது.

தன் வேலை அசாதாரணமானது என்பதை Skulls Unlimited International அதிபர் உடனே ஒத்துக் கொள்கிறார். "என் மனைவிக்கு இது குறித்து முதலில் தினமும் அழுகைதான்" என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிடுகிறார். (நகைச்சுவையாக என்று நம்பிக் கொள்ளத்தான் வேண்டும்). ஆனால் அவர் என்னமோ சந்தோஷமாகத்தான் உள்ளார்.

Mike Rowe என்பவர் Dirty Jobs என்னும் நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் தொகுத்து அளிப்பவர். அவர் கூறுகிறார்: இந்த Villemarette அவர்களைப் போலவே பலரும் உள்ளனர். அசிங்கம் என கருதப்படும் தொழிலை செய்தாலும் அவர்கள் அதில் சந்தோஷமாகவே உள்ளனர்".

என்றைக்கு எந்த புது அனுபவம் கிட்டும் என்று தெரியாத நிலைதான் இமாதிரியான வேலைகள் செய்பவர்களுக்கு ஒரு த்ரில்லை கொடுக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. புதிதாக கற்பதால் நகைச்சுவை உணர்வும் அதிகரிக்கிறது என்றும் இக்கட்டுரை கூறுகிறது. எப்படி? அதை இப்போது பார்ப்போம்.

இப்போது நான் எனது அபிமான அமெரிக்க, யூத, விஞ்ஞான, நகைச்சுவை எழுத்தாளர் இஸாக் அசிமோவைப் பற்றி கூறுவேன். நான் எனது இப்பதிவில் குறிப்பிட்ட அதே அசிமோவ்தான் ஐயா. அவர் எழுதிய சயன்ஸ் ஃபிக்சன் பற்றி பலரும் அறிவர். ஆனால் ஜோக் புத்தகம் கூட எழுதியுள்ளார். அதிலிருந்து இப்பதிவுக்கு ஏற்ற ஒரு ஜோக்.

சாவு காரியங்களை நடத்தவென்று அமெரிக்காவில் அண்டர்டேக்கர்கள் (undertakers) உண்டு. அப்படிப்பட்ட ஒருவரிடம் இந்த வாலிபன் பயிற்சியாளராகச் சேர்ந்தான். அவன் வீட்டாருக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. "எனது கிளப்பில் என் பிள்ளை என்ன வேலை செய்கிறான் என்று என் சினேகிதிகள் எமிலியும் சாராவும் கேட்கிறார்களே, என்னவென்று சொல்வது" என அன்னை அலுத்து கொள்ள, "எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான், ஐயா இப்படி துள்ளுகிறார்" என்று பேப்பரை புரட்டிக் கொண்டே தந்தை கூற என்று ஒரே கலாட்டா.

அந்த வாலிபன் முதல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து தந்தையிடம் "இந்த வேலை ரொம்ப சுவாரசியமாக உள்ளது" என்று கூற, அவரோ 'ஹூம்' என பெருமுச்சு விடுகிறார். "இல்லையப்பா, நான் சொல்றதை கேளுங்கள்" என்று பையன் மேலும் சொல்கிறான்.

"நான் இப்போது வேலை செய்வது ஒரு சிறிய நகரம். அதில் இரண்டு பணக்காரக் குடும்பங்கள். ஒன்றுக்கொன்று ஜன்மப்பகை. அவற்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆடவன் ஒருவனும் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த நங்கை ஒருத்தியும் காதல் கொண்டனர். ஆனால் தங்கள் காதல் நிறைவேறாது என்ற விரக்தியான நிலமைக்கும் வந்தனர். ஆகவே அவர்கள் அந்த நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பனிரண்டாவது மாடியில் அறை ஒன்று எடுத்துக் கொண்டு கடசி முறையாக கூடினர். அந்த நிலையிலேயே விஷம் அருந்தி பிணமாயினர். இப்போது பிரச்சினை நான் பயிற்சி பெறும் நிறுவனத் தலைவரிடம் வந்தது. அப்பிணங்கள் ஒன்றுக்கொன்றுடன் உடலால் கூடிய நிலையில் இருந்தன. அவற்றைப் பிரித்து, தனித்தனியாக அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்புவிக்க வேண்டும், தனித்தனியாக சடங்குகள் செய்து வெவ்வேறு இடுகாடுகளில் புதைக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகளுக்கு ஒன்றும் தெரியக்கூடாது.

தலைவர் என்னை மட்டும் கூட்டிக் கொண்டு அந்த ஹோட்டலுக்கு சென்றார். எங்களை தனி லிஃப்டில் 12 வது மாடிக்கு அழைத்து சென்றார்கள். அறைக்குள்ளே நானும் தலைவர் மட்டும் பிரவேசித்தோம். கண்ட காட்சி மனதையே உருக்கிவிட்டது. இரு உடலகளும் ஒன்றை நோக்கி ஒன்று படுத்த நிலையில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த அழகில் ரிகர் மார்ட்டிஸும் (ரிகர் மார்ட்டிஸ் என்றால் என்ன என்பதை ரஷ்யா ராமனாதனிடம் கேட்கவும் - டோண்டு) ஆரம்பிக்கும் நிலையில் இருந்தது போல இருந்தது. ஆனால் தலைவர் அசரவில்லை. தனது வாக்கிங் ஸ்டிக்கை இரு உடல்களுக்கும் இடையில் சொருகினார். பிறகு 1, 2, 3 என்று எண்ணி விட்டு கில்லியை கீழே வைத்து தாண்டை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அடிப்பது போல வாக்கிங் ஸ்டிக்கை பட்டென்று அடித்தார். பளக் என்று உடல்கள் பிரிந்தன".

தன்னையும் மீறிய சுவாரசியத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை ஆர்வத்துடன் குறுக்கிட்டார். "அப்பாடா இந்த ரிகர் பிரச்சினையாவது தீர்ந்ததே" எனப் பெருமூச்சு விட்டார். "இல்லையப்பா நாங்கள் சென்றது தவறான அறைக்கு" என்று விளம்பினான் பையன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது