9/29/2007

அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே

அறுபதுகளில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ல்லாய்ட் சி. டக்லஸ் மிகவும் முக்கியமானவர். அவரது ஆங்கில நடை எளிமையாக இருக்கும். மனதைக் கவரும். எல்லாவற்றையும் விட முக்கியமாக கதைகளின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது 1929-ஆம் ஆண்டு அவர் எழுதிய Magnificent Obsession என்னும் நாவல்.

கதை சுருக்கம் பின்வருமாறு.

ராபர்ட் மெர்ரிக் என்னும் இளைஞனுக்கு படகு விடும்போது விபத்து ஏற்படுகிறது. அவனுக்கு திறமை வாய்ந்த மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்து அவனைக் காப்பாறுகிறது. ஆனால் அதே சமயம் சற்று அருகிலேயே இருத நோயால் அவதிப்பட்ட மருத்துவர் ஹட்ஸனை அக்குழுவால் காப்பாற்ற சமயமின்றி அவர் இறக்கிறார். ஹட்ஸன் சிறந்த மூளை சிகிச்சை நிபுணர். ராபர்ட்டோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் பணக்கார இளைஞன். வேலை செய்யாமலேயே வாழ்நாள் முழுதும் கழிக்கும் அளவுக்கு பணம் படைத்தவன். மருத்துவர் ஹட்ஸன் இறந்த அதே மருத்துவ மனையில்தான் உயிர் பிழைத்த ராபர்ட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தான். மருத்துவருக்கு பதிலாக இவன் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் இவன் காதுபடவே பேசுகின்றனர்.

முதலில் கோபப்பட்ட ராபர்ட், பிறகு ஹட்ஸனின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு துணுக்குறுகிறான். மற்றவர்கள் ஆதங்கப்பட்டதின் உண்மை அவனுக்கு உறைக்கிறது. நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன செய்வது என யோசிக்கிறான். ஹட்ஸன் இறந்ததால் பல நோயாளிகளின் நிலையில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என அவனுக்கு தோன்றுகிறது. இதே நிலைமையில் பலர் மருத்துவ மனைக்கு பெரிய நன்கொடையாகக் கொடுத்து தங்கள் மன நெருடலை நீக்க முயற்சித்திருப்பார்கள். ஆனால் இவன் சற்று வித்தியாசமாக சிந்தித்தான். ஹட்ஸன் இடத்தில் இன்னொரு மருத்துவர் அதே திறமைகளுடன் தேவை. இதை மனதில் இருத்தி தானும் ஹட்ஸன் மாதிரியே மூளை சிகிச்சை நிபுணனாக வேண்டுமென தீர்மானிக்கிறான்.

இடையில் இவனிடம் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டயரி கிடைக்கிறது. ஆனால் அதை டாக்டர் ஹட்ஸன் முழுக்க முழுக்க சங்கேதக் குறிகளாலேயே நிரப்பியுள்ளார். பிறகு அதனுடன் போராடி அதற்கான திறவுகோலை கண்டுபிடிக்கிறான். டாக்டர் ஹட்ஸனின் ரகசிய உலகுக்குள் பிரவேசிக்கிறான். அற்புத உலகம் அது.

ராபர்ட் மருத்துவ கல்லூரியில் சேருகிறான். தன்னை விட பல ஆண்டுகள் சிறிய மாணவர்கள் மாணவிகளுடன் கல்லூரிக்கு செல்கிறான். பலரது ஏளனத்துக்கு ஆளாகிறான். மனம் தளறாமல் படிக்கிறான். பலருக்கு பல உதவிகள் செய்கிறான். பொருள் ரூபத்திலோ, உடல் உழைப்பாகவோ அவன் செய்யும் உதவிகள் பலரது வாழ்வில் வசந்தத்தை மலரச் செய்கின்றன. உதவி அளிக்கும்போது ஒரே ஒரு நிபந்தனைதான் விதிப்பான். அது என்னவென்றால் தான் உதவி செய்தது, செய்வது செய்யப்போவது எல்லாமே ரகசியமாக இருக்க வேண்டும் என்பதே அது.

சில காலங்களுக்கு பிறகு அவனிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுடன் பிரதியுபகாரம் செய்ய வரும்போதோ, பெற்று கொண்ட பொருள் வசதிகளைத் திரும்பத் தர முயலும்போதோ ஒன்றே ஒன்றுதான் கூறுவான். "நான் இதை எப்படித் திரும்பப் பெறுவேன்? அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே"! என்று. அதற்கு மேல் கூற மாட்டான். விளக்கம் கேட்டாலும் சொல்ல மாட்டான்.

நாவலிலும் முதலில் விளக்கம் தரப்படவில்லை. வாசகனான நான் தலைமயிரைப் பிய்த்க்து கொண்டேன். நாவல் படித்து முடிந்ததும்தான் விளங்கிற்று.

எல்லாவற்றுக்கும் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டைரிதான் காரணம். அவர் பலருக்கு ரகசியமாக உதவிகள் செய்து வந்தவர். தன் பெயர் எக்காலத்திலும் வெளியில் வரலாகாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அவ்வாறு அவர் காரியங்கள் செய்து கொண்டு போகப் போக அவர் முனைப்புடன் செய்ய முயன்ற காரியங்களில் வெற்றி தேவதை சர்வ சாதாரணமாக அவருக்கு துணை இருக்க ஆரம்பித்தாள். தர்மத்தின் புண்ணிய பலன் அடுத்த பிறவி வரை காத்திராது இப்பிறவியிலேயே கிடைத்து விடும் என்பதுதான் கதையின் அடிநாதம். இதை உணர்ந்ததாலேயே அவர் பிரதியுபகாரங்களை மறுத்து வந்த்தார்.

வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியலாகாது என்னும் சொலவடையை இக்கதை விளக்குகிறது என்பதையே நான் புரிந்து கொள்கிறேன். மகாபாரதத்தில் வரும் கர்ணன் செய்த கொடைகளின் பலனாய் அவன் மேல் விடப்பட்ட பார்த்தனின் அம்புகள் பலனின்றி கீழே விழ, பார்த்தசாரதியாம் கண்ணன் அதைக் கண்டுணர்ந்து போரை நிறுத்தி விட்டு கர்ணனிடம் கிழ ரூபம் தரித்து தானம் கேட்கிறார். கர்ணன் ஒரே ஒரு வேண்டுகோளையே அவரிடம் விடுக்கிறான். "என்னால் மரணத்தின் வாயிலில் நிற்கும் இத்தருணத்தில் தரக்கூடியதையே கேளுங்கள்" என்கிறான். கண்ணனும் அவனது தானதருமங்களின் பலனைத் தருமாறு அவனிடம் யாசிக்கிறார். "எனது எல்லா தருமங்களின் பலனையும் தந்தேன். அத்தருமங்களுள் நான் இப்போது செய்யும் தருமமும் அடங்கக் கடவது" என்று கூறி தானம் அளிக்கிறான் கௌந்தேயனான கர்ணன்.

பிறகு கர்ணன் மாண்டதும் குந்தி மட்டும் அழவில்லை. தரும தேவதையுமே வந்து கதறுகிறாள், தான் இனி யாரிடத்தில் குடி கொள்வது என்று.

பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காது உதவி செய்ய வேண்டும், ஆனால் அதே சமயம் அவ்வாறு செய்வது வேறு யாருக்கும் தெரியக் கூடாது. சற்று கஷ்டமான காரியமே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/27/2007

What cannot be cured must be endured

இப்பதிவுடன் சம்பந்தம் உடைய சுட்டிகள்:

1
2
3
4

What cannot be cured must be endured என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. கஷ்டம் என்று வந்து விட்டால் அதற்காக புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதே அதன் பொருள். அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பது ஒரு காலத்தின் கட்டாயம். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இதை செயல்படுத்துவது கஷ்டம்தான்.

அறுபதுகளின் துவக்கத்தில் ஹவாய் சப்பல்கள் என்னும் பெயரில் செருப்புகள் சந்தைக்கு வந்தன. சிங்கப்பூர் செருப்பு என்றும் அதை கூறுவார்கள். அவை வந்ததில் செருப்பு ரிப்பேர் செய்யும் தொழிலாளிகளின் வாழ்வில் பிரச்சினை வந்தது. தோல் செருப்புகளையே கையாண்டு பழகிப் போன அவர்கள், இவ்வகை செருப்புகள் வந்ததும் திக்கு முக்காடி போயினர். அக்காலக் கட்டத்தில் விகடனில் ஒரு கருத்து படம் கூட வந்தது. காலையில் தொழிலுக்கு கிளம்பும்போது செருப்பு தைக்கும் தொழிலாளி தெருவில் ஒரு ஒற்றை சிங்கப்பூர் செருப்பைப் பார்த்து "சே இன்னிக்கு சகுனமே சரியில்லை" என நொந்து கொள்கிறான்.

ஆனால் சிலர் சற்று வித்தியாசமாக சிந்தித்தனர். என்னதான் இருக்கிறது அவற்றில் என்று ஆராய்ந்ததில் தங்கள் தொழிலுக்கு தோதான சில புது வழிமுறைகளையும் கண்டனர். மேல் வார்ப்பட்டை சர்வ சாதாரணமாக அச்செருப்புகளில் வெளியில் வந்து விடும். அதை மறுபடி உள்ளே நுழைக்க ஒரு கம்பியை பயன் படுத்தினர். அதை குத்துவதற்கும் ஒரு லாகவம் தேவைப்பட்டது. வார்ப்பட்டை சேதமடையாமல் செய்ய வேண்டும். ஆக அவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சிலர் வார்ப்பட்டைகளை மட்டும் தனியே விற்க ஆரம்பித்தனர். அதன் உற்பத்தியே ஒரு குடிசைத் தொழிலாக உருவெடுத்தது.

மேலே கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. தங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறிய ஒரு விஷயம் நடந்தால் அதற்காக புலம்பாமல் அதிலுள்ள தங்களுக்கு சாதகமான விஷயங்களை தேடி எடுப்பதே புத்திசாலித்தனம். அதையும் முதலில் ஒருவர் செய்யும்போது அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அலாதியானவை.

இப்போது இருக்கும் நிலையில் எந்த தொழில் நுட்பமும் நிரந்தரமாக இருப்பதில்லை. பல மாற்றங்கள் வருகின்றன. சில சமயங்களில் வேறு துறைகளில் மாற்றம் வரும்போது சம்பந்தப்பட்ட தொழில் நுட்பமே தேவையற்று போய் விடுகிறது. இது சம்பந்தமாக விகடனில் நான் படித்த கதையொன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு ஹோட்டல் முதலாளி மனித நேயம் மிக்கவர். கிரைண்டர்களை தன் ஹோட்டலில் வைக்கவில்லை. காரணம் கேட்கிறார் ஹோட்டல் தொழிலாளர் யூனியன் தலைவர் (அவர் ஒரு கிரைண்டர் கம்பெனியின் ஏஜென்ஸியை தன் மனைவி பெயரில் நடத்தி வருபவர்). முதலாளி கூறுகிறார், "அது ஒண்ணும் இல்லை சார், என் கிட்ட சீனுன்னு ஒரு பையன் வேலை செய்யறான். சற்றே மூளை வளர்ச்சி குறைவு. மாவரைக்கத்தான் அவனுக்கு தெரியும். இப்ப கிரைண்டரை வாங்கி போட்டுவிட்டால் என்னிடம் வந்த்து மலங்க மலங்க முழிச்சுண்டு நிற்பான்". ஆகவே அவர் சீனு தன்னிடம் வேலைக்கு இருக்கும் வரை கிரைண்டர் வாங்குவதாக இல்லை.

சீனு அதிர்ஷ்டம் செய்தவன். மனித நேயம் கொண்ட முதலாளி கிடைத்தார். அதே சமயம் முதலாளிக்கும் அதிகம் நட்டம் இல்லை. மாறாக லாபமே. ஏனெனில் கையால் மாவாட்டும் மாவுக்கு தனி ருசி என்று பலர் நினைப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் கும்பலுக்கு குறைவில்லை. மின்சார தட்டுப்பாடு வரும்போது அவரது இட்டலி வியாபாரமும் பாதிக்கப்படாது. ஆக எல்லோருமே இதில் பயனடைந்தனர். ஆனால் அது எப்போதுமே நடக்குமா? வேறு வகை உபகரணங்களை கையாளும் திறனை பெறுவதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நான் கூறியதற்கான உதாரணங்களை பார்க்கலாம். எனது மொழிபெயர்ப்பு துறையையே எடுத்து கொள்ளுங்கள். நான் ஆரம்பத்தில் பேப்பரில் கையால் எழுதிய மொழிபெயர்ப்புகளை தட்டச்சு செய்வித்து, பிழை திருத்தி வாடிக்கையாளரிடம் கொடுத்து வந்தேன். தட்டச்சு இயந்திரம் வாங்கவில்லல. தொழில் முறை தட்டச்சுக்காரர்களை பயன்படுத்திக் கொண்டேன். அதற்கான கட்டணம் அதிகம் இல்லை. அதற்கு மாறாக நானே தட்டச்சு செய்திருந்தால் நேரம் அதிகம் பிடித்திருக்கும். அந்த நேரத்தில் மொழி பெயர்ப்பு செய்திருந்தால் பல மடங்கு பணம் சம்பாதிக்க முடியும். ஆக, எனக்கும் தட்டச்சு செய்பவர் ஆகிய இருவருக்குமே லாபம். தட்டச்சு செய்பவர்கள் சரியாக அமையாத போது கைப்பட எழுதித்தான் மொழி பெயர்ப்பை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. அதற்குள் எனக்கு தில்லியில் மொழிபெயர்ப்பாளனாக நல்ல பெயர் கிடைத்து விட்டதால் அதையும் ஒத்து கொண்டனர் வாடிக்கையாளர்கள்.

மேலும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்கே சென்று பணியாற்றியதால் தட்டச்சு செய்யும் வேலையை வாடிக்கையாளரின் டைப்பிஸ்டே பார்த்து கொண்டார். எல்லாம் சரிதான். ஆனால் இப்போது? நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கணினிகள் உபயோகத்துக்கு வந்து விட்டன. தட்டச்சு செய்வதில் தவறு ஏற்பட்டாலும் சுலபமாக திருத்த முடிகிறது. இப்போது நான் யுக்தியில் மாறுதல் செய்ய வேண்டி வந்தது. நானே நேரடியாக கணினியில் தட்டச்சு செய்து விடுவதாலும், பிழை திருத்தங்கள் அவ்வளவாக எனது தட்டச்சில் இல்லததாலும் நேரம் மிச்சப்பட்டது.

மாற்றங்களுக்கு உட்பட மாட்டேன் என இருந்தால் பிரச்சினை நமக்குத்தான். மற்றவர்கள் நம்மிடத்திற்கு வந்து தீர்வு கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பது அறிவீனம்.

வேலை போய் விட்டதா, கவலை வேண்டாம் என கூறும் நிலை வேண்டுமானால் பல திறமைகளை வளர்த்து கொள்வது முக்கியம். நான் விருப்ப ஓய்வு பெறும் சமயம் மற்றவர்களைப் போல வேறு வேலை ஒன்றும் கைவசம் இல்லை. எனது மொழிபெயர்ப்பு திறனும் நான் வேலையில் இருந்த போதே தேடிக் கொண்ட எனது இந்த வேலைக்கான வாடிக்கையாளர் பட்டியலுமே எனக்கு துணையாக இருந்தன. வேலையை விட்டு மேலும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தில்லியிலேயே நன்கு பிழைக்க முடிந்தது. சென்னைக்கு வந்து ஆறு சொச்ச ஆண்டுகளிலேயே நான் தில்லியில் 20 ஆண்டுகள் இருந்து சம்பாதித்ததை விட மூன்று மடங்குக்கு மேல் சம்பாதிக்க முடிந்தது. இதெல்லாமே புது நிலைமைகள் உருவாகும் சமயம் நமக்கு சாதகமான விஷயங்களை தெரிவு செய்து கையகப்படுத்துவதாலேயே சாத்தியமாயிற்று.

உலகமயமாக்கல் நல்லதா கெட்டதா என வாதம் செய்வதில் என்ன உபயோகம்? அதெல்லாம் தியாகுகளும் அசுரர்களும், ராஜா வனஜ்களும் செய்யும் வேலை. வந்து விட்ட உலகமயமாக்கலை தவிர்க்க முடியாது என்னும் பட்சத்தில் அதன் மூலம் வாடிக்கையாளர் பட்டியலை பெருக்கிக் கொள்வது டோண்டு ராகவன், அதியமான், ஜெயகமல்களின் வேலை.

ஆகவே கூறுவேன்: "What cannot be cured must be taken advantage of".

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/23/2007

அதிகப் பிரசங்கித்தனமான தணிக்கைகள்

இப்பதிவு வெகு நாட்களாக என் மனதில் நிலை கொண்டிருந்தது. இன்று திடீரென அதன் உந்துதல் அதிகமானதற்கு காரணம் யாழ் சுதாகர் அவர்களின் இப்பதிவே காரணம். அவருக்கு என் முதன்கண் நன்றி. இனிமையான எம்ஜிஆர் பாடல்களை கேட்டு கொண்டே இங்கு எழுதுகிறேன். இங்கு இனிமை என்பது பாடல்களுக்கு மட்டுமல்ல எம்ஜிஆருக்குமே பொருந்தும் என கூறுவது அந்த உலகம் சுற்றும் வாலிபனின் 61 வயது இளம் ரசிகனான இந்த டோண்டு ராகவன்.

சமீபத்தில் 1967-ல் திமுக ஆட்சி ஏற்பட்ட சில மாதங்களில் இச்செய்தி குமுதத்தில் வந்தது. அதாவது "பெற்றால்தான் பிள்ளையா" என்னும் எம்ஜிஆர் படத்தில் உள்ள "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்னும் பாடலை நேயர் விருப்பத்தில் போட AIR சம்மதிக்கிறது என்பதை அச்செய்தி குறிக்கிறது. அதுவரை அப்பாடல் கீழ்க்கண்ட வரிக்காக தடை செய்யப்பட்டிருந்தது.

"மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்" என்பதுதான் அது. அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்ததும் இத்தடை அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தில் இம்மாதிரி அசட்டுத்தனமான தணிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. உதாரணத்துக்கு ஹார்மோனியம் பல ஆண்டுகள் இங்கு தடை செய்யப்பட்டிருந்தது. பிறகு காலத்தின் கட்டாயம் இத்தடையின் அபத்தத்தை உடைத்தது. அது இருக்கட்டும், நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கண்டுணர்ந்த சில அபத்தத் தடைகளை பற்றி இங்கு பேச உள்ளேன்.

"காதலிக்க நேரமில்லை" படத்தில் "அனுபவம் புதுமை", "என்ன பார்வை உந்தன் பார்வை" ஆகியவற்றுக்கு தடா. வெண்ணிற ஆடையிலோ "சித்திரமே சொல்லடி, முத்தமிட்டால் என்னடி" என்ற இனிமையான பாடலைக் கேட்டாலே அகில இந்திய ரேடியோவின் நிலைய இயக்குனருக்கு கொலைவெறி வரும் போலிருக்கிறது. அப்பாடலை நேயர் விருப்பமோ, வேறு எங்குமோ போட மாட்டார்கள். இப்போதெல்லாம் போடுகிறார்கள் போல. காலம் கடந்த நீதி என்றுதான் அவற்றை குறிப்பிட வேண்டும்.

என் நினைவிலிருந்து எழுதுகிறேன், அவ்வாறு தடை செய்யப்பட்ட பாடல்கள்:

1. "வாங்கோன்னா, வாங்கோன்னா", படம் பத்திரகாளி.
2. "ஒத்த ரூபா உனக்கு தாரேன்", படம் பத்திரகாளி
3. "பாதி நிலாவை விண்ணில் வைத்து, மீதி நிலாவை கண்ணில் வைத்து" எங்க வீட்டு பிள்ளை.

இன்னும் கூறிக்கொண்டே போகலாம், ஆனால் எனது கருத்தை நிலை நிறுத்த அவை போதும் என நினைக்கிறேன்.

அதே "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்னும் பாடல் திரையிலும் தணிக்கை செய்யப்ப்பட்டது. "மேடையில் முழங்கு திரு விகாவைப் போல்" என மாற்றப்பட்டது. (வி.க. --> வி. கல்யாணசுந்தரனார் என்பதை அறிக, வேறு யாரும் அல்ல). :)

அதே போல சுமைதாங்கி படத்தில் வரும் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்ற பாடல் வரி "எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி" என்று மாற்றப்பட்டது.

அவசர நிலை அமுலில் இருந்த போது கிஷோர் குமார் சம்பந்த பாடல்கள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் தடை செய்யப்பட்டன. தொண்ணூறுகளில் இந்த அபத்தங்கள் தொலைக்காட்சியிலும் குறைவில்லாம இருந்தன. உதாரணத்துக்கு ஆலோக் நாத் என்னும் நடிகர் (புனியாத் மெகா சீரியலில் மாஸ்டர்ஜி பாத்திரத்தில் வருபவர்) நடித்த சீரியல்கள் தேர்தல் நேரத்தில் தடை செய்யப்பட்டன. ஏனெனில், அவர் முகஜாடை வி.பி. சிங்கின் முகஜாடையுடன் ஒத்திருக்கும். அதே போல காட்சிகளில் சைக்கிள்கள் மாஸ்க் செய்யப்பட்டன. காரணம்? அவை தெலுகு தேசத்தின் தேர்தல் சின்னமாம். அரிக்கேன் விளக்கும் மூடி மறைக்கப்பட்டது. அது என்ன கட்சியின் சின்னம் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

இப்போது பழைய படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வரும்போது சிகரெட்டை எதிர்க்கும் வாசகங்கள் வருவதும் ஒரு தணிக்கையே.

இப்போது முரளி மனோஹர் ஒரு கேள்வி வைக்கிறான். "அதெல்லாம் சரிடா டோண்டு, யாருக்கோ பின்னூட்டமிட்டால் வேறு யாருக்கோ பின்னால் பிடுங்கி கொண்டதே"?

டோண்டு ராகவன் - ஷ் ஷ் ஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: எம்ஜிஆர் பாடல்கள் கேசட் முடிந்து விட்டது. பதிவையும் இப்போதைக்கு முடிக்கிறேன்.

9/17/2007

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்

பதிவுலகில் மற்றவர்களுக்கு துன்பம் வரும்போதெல்லாம் நியாயஸ்தர்கள் மாதிரி பேசி பொறுமையை கடைபிடிக்குமாறு உபதேசம் செய்பவர்கள், விட்டேற்றியாக பேசுபவர்கள் ஆகியோர் தங்களுக்கும் அவ்வாறே துன்பம் வரும்போது பொறுமையை மிகத் துடிப்புடன் பொறுமையைத் தொலைப்பது வேடிக்கையாக உள்ளது. அப்போதும் அழுவாச்சிப் பதிவுகள், பார்ப்பனக் கூத்து என்றெல்லாம் திட்டிப் பதிவுகள் போடுவதில் மட்டும் குறைவில்லை.

ஐடிபிஎல்-லில் இருந்தபோது ஒரு தமாஷ் நடந்தது. ஒவ்வொரு மாதமும் 22-ஆம் தேதி வாக்கில் ஒரு அறிக்கை ஒவ்வொரு துறையிடமிருந்தும் கணக்காளர் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதில் துறைத்தலைவர் தன் மேற்பார்வையில் இருக்கும் ஊழியர்கள் அம்மாதம் ஒழுங்காக வேலைக்கு வந்தார்களா என்பதை தெரிவிக்க வேண்டும். யாரேனும் லீவில் (முழு சம்பள, பாதி சம்பள அல்லது சம்பளமில்லாத) இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். மற்றப்படி எல்லாம் நல்லபடியாக இருந்தால் அதை ஒரே வரியிலும் குறிப்பிடலாம். அப்போதுதான் அத்துறைக்கான சம்பளமே போடுவார்கள். அடுத்த மாதம் முதல் தேதி அது கிடைக்கும்.

நான் இருந்த பொறியாளர் பிரிவுக்கு தலைவர் மேனேஜர் இஞ்ஜினியரிங் என்னும் பதவியில் உள்ளவர். அந்தக் குறிப்பிட்ட மாதம் இந்த அறிக்கை செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது, ஏதோ ஒரு காரணத்தால். 28-ஆம் தேதிதான் போய் சேர்ந்தது. எல்லோருக்கும் அடுத்த மாதம் கொடுத்த பே ஸ்லிப்பில் சம்பளம் எல்லாம் குறிக்கப்பட்டு, கீழே ஒரு வரி எழுதியிருந்தார்கள். அதாவது சம்பந்தப்பட்டவருக்கு சம்பளம் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறித்திருந்தார்கள். இஞ்சினியரிங் துறையில் உள்ள எல்லோருக்கும் இது காணப்பட்டது. எனது ஸ்லிப்பிலும் அவ்வாறே இருந்தது. சம்பளம் எப்போதுமே எங்களது பேங்க் கணக்கில் ஏற்றப்பட்டு விடும். அதற்காகவே இந்தியன் வங்கியின் ஒரு extension counter எங்கள் வளாகத்திலேயே இருந்தது. இப்போது என்ன ஆயிற்றென்றால் இந்த ஸ்லிப்புக்குரிய மாத சம்பளம் கணக்கில் ஏற்றப்படவில்லை.

நான் உடனே கணக்குப் பிரிவின் தலைவரிடம் சென்று விளக்கம் கேட்க அவர் இதற்காக கவலை கொள்ள வேண்டாம் என்றும், கடைசி நிமிடத்தில் கணக்கில் சம்பளத்தை ஏற்றி விட்டதாகவும் கூறினார். நான் இதை தெரிவிக்க மேனேஜர் இஞ்சினியரிடம் சென்றேன். சற்று விவரமாக ஆரம்பித்தேன்.

நான்: சார், இந்த மாத ஸ்லிப்பில் எனது கணக்கில் சம்பளம் ஏற்றவில்லை என குறித்துள்ளார்கள்.
மேனேஜர் (மோகனப் புன்னகையுடன்): சில சமயம் அம்மாதிரி ஆகி விடும் ராகவன். பேசினால் சரியாகி விடும். என்ன கொஞ்ச நாள் பிடிக்கும். உங்களுக்கு பணத்துக்கென்ன குறைச்சல். சற்றே பொறுமையாயிருங்கள். எப்போதும் பணம் பணம் என அலையாதீர்கள். கம்பெனி வேலைகளைப் பாருங்கள்.

ஆக இவருக்கு ஒரு விவரமும் தெரியாது. அவர் இன்னும் தனது பே ஸ்லிப்பை பார்க்கவில்லை.

நான்: (சற்றே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு): ஓக்கே சார். எனக்கென்ன வருத்தம் என்றால் நம்ம துறையில் எல்லோருக்கும் அப்படியே செய்து விட்டார்கள், உங்களையும் சேர்த்து.
மேனேஜர் (தன் மோகனப் புன்னகையை உடனே தொலைத்தார்): ஆ, என்ன அப்படியா? மேடம் (அவரது க்ளார்க்), என்ன இது? என்ன அக்கிரமம்? என்ன செஞ்சீங்க?

இவ்வாறு கத்திக் கொண்டே, அவர் க்ளார்க் மற்றும் சில இஞ்சினியர்கள் புடை சூழ கணக்குப் பிரிவின் தலைவரை அணுகினார். அவரோ என்னிடம் கூறியதையே கூறி, இதை ராகவனிடம் ஏற்கனவே தெரிவித்ததாகக் கூறினார்.

முகத்தைத் துடைத்து கொண்ட மேனேஜர் அப்படியே தொழிற்சாலையின் வேறு பிரிவுக்கு மேற்பார்வை செய்யப் போவது போல பைய நழுவினார். என்னை பிறகு ஏண்டா பாவி இம்மாதிரி பயமுறுத்தினே என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எனக்கும் அவரிடம் தலைப்பில் இருக்கும் பழமொழியை கூறி அதற்கு பொழிப்புரை, பதவுரை எல்லாம் உரைக்க வாய்ப்பு இல்லாமல் போயிற்று. :).

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/15/2007

கள்ளா வா புலியைக் குத்து

இப்பதிவில் என்னைத் தமிழ் தாத்தா என்று ஒருவர் அழைக்க, நான் அதற்கு, "தமிழ்த்தாத்தா ஒருவர்தான், அவர்தான் உ.வே. சாமினாத ஐயர். என்னைப் போன்ற துரும்புக்கெல்லாம் அந்த பெயரைத் தராதீர்கள்" என்று உறுதியாக மறுத்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னை தமிழ் தாதா என்று அழைத்ததெல்லாம் இப்பதிவுக்கு வேண்டாம். ஏனெனில் இது உ.வே.சா. அவர்களைப் பற்றியது. அந்தக் கிழவர் மட்டும் விடாமுயற்சியுடன் பழந்தமிழ்நூல்களை சேமித்திராவிட்டால் இங்குள்ள பல தமிழ்ப் பேச்சாளர்களுக்கு வேலையே இல்லாது போயிருக்கும்.

ஐயரவர்களால் பதிப்பிக்கப் பெற்ற நூல்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி. அதில் ஒரு காட்சி வருகிறது. அது பின்வருமாறு.

யாழ் மீட்டுதலில் தன் ஆர்வத்தைக் காட்டுவோருக்கு, தன் மகள் காந்தர்வதத்தையை மணம் புரிந்து தருவதாக அவளது தந்தை ஸ்ரீதத்தன் அறிவித்தான். காப்பியத்தலைவனான சீவகன் திறம்பட யாழிசைத்துப் போட்டியில் வென்றான். ஏற்கனவே சீவகன் மீது பொறாமை கொண்டிருந்த மன்னனான கட்டியங்காரன் மனம் புழுங்கி, சீவகனுடன் போரிட்டு வெல்பவர்களே காந்தர்வதத்தையை மணம் புரியத் தக்கவர் என்று யாழிசைப் போட்டிக்கு வந்திருந்த மன்னர்களிடம் அறிவித்தான். அவ்வறிப்பைக் கேட்ட மன்னர்கள் ஒன்று திரண்டு சீவகனுடன் போரிட்டனர். அவர்களைப் போரில் வென்று காந்தர்வதத்தையை சீவகன் மணம் புரிந்தான்.
பிற மன்னர்களை சீவகனுக்கு எதிராகத் தூண்டிய கட்டியங்காரனின் செயலை, "கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்" என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது. இத்தொடர் இடம்பெறும் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் "சீவகன், தத்தையை யாழும் பாட்டும் வென்றான், நல்லனென்று மாந்தர் ஆர்ப்ப அது பொறாதே கட்டியங்காரன் மனம் புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப் போர் காண வேண்டி, அரசர்க்கெல்லாம் சில தீமொழிகளைக் கூறினானென்க" என்று உரை எழுதியுள்ளார்.

உரை தெளிவாக இருப்பினும், "கள்ளரால் புலியை வேறு காணிய" என்னும் தொடருக்கு விளக்கம் ஏதும் இல்லை. உவேசா அவர்களும் எவ்வளவோ யோசித்துப் பார்த்தார். சீவகன் புலிதான். அதில் பிரச்சினையில்லை. அவனால் தோற்கடிக்கப்பட்ட அரசர்களை பசுக்கூட்டங்களோடு ஒப்பிடுவதுதானே முறை என்ற ரீதியில் அவர் கருத்து சென்றது. இருப்பினும் காலத் தட்டுப்பாடு வேறு. ஆகவே இத்தொடருக்கு விளக்கம் காண இயலாத நிலையில் உ.வே.சா சீவக சிந்தாமணி முதல் பதிப்பை வெளியிட்டார். பிறகு வேறு வேலைகள், வேறு பதிப்புகள் என்று அவரது கவனம் சென்றது.

ஒரு நாள் அவர் வீட்டுக்கு சாமப்பா என்னும் பெயருடைய ஒரு கிழவர் மிகுந்த கோபத்துடன வந்தார். வந்தவரது கோபம் இன்னொரு கிழவர் மேல். அவரைப் பற்றி கோபமாக உவேசாவிடம் பேச இவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வந்தவரிடமே விஷயம் என்ன என்று கேட்டார்.

தமக்கு வேண்டாத ஒருவர், தமக்கும் மற்றொருவருக்கும் இடையே சண்டை மூட்டிவிட்ட நிகழ்வைக் கும்பகோணத்தில் வசித்துவந்த உ.வே.சாவிடம் சாமப்பா என்னும் அந்தக் கிழவர் பின்வருமாறு குறிப்பிட்டார். "எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக்கொண்டு சாகட்டுமே என்பது அவன் அபிப்பிராயம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே, அதற்குத்தான், கள்ளா வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்"

அதுவரை ரொம்ப ரியேக்ஷன் இல்லாமல் கேட்டுவந்த உவேசாவோ தேள் கொட்டியது போல துள்ளி குதித்தார். "என்ன, என்ன, என்ன சொன்னீர்கள்" என்று பரபரப்பாகக் கேட்டார். சாமப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொன்னேன்" என்று அவரிடமே திருப்பி கேட்டார். "ஏதோ கள்ளன், புலின்னு சொன்னீர்களே" என்று உவேசா கேட்க, அவர் சாவகாசமாக, "ஓ அதுவா இது ஒரு பழமொழியாச்சே" என்று "கள்ளா வா, புலியைக் குத்து" என்று திரும்பச் சொன்னார். இப்பழமொழி ஒரு கதையை உள்ளடக்கியிருந்தது. அக்கதையை உ.வே.சா விடம் அக்கிழவர் பின்வருமாறு விளக்கினார்.

"ஒரு மனுஷ்யன் பண மூட்டையோடு சுடுகாட்டு வழிகாக போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு திருடன் அவனைக் கண்டு துரத்தினான். எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இந்த இரண்டு அபாயங்களிலிருந்தும் தப்புவதற்கு அந்த வழிப்போக்கன் ஒரு தந்திரம் பண்ணினான். திருடனைப் பார்த்து "அதோ பார், அந்த புலியைக் குத்தி கொன்றுவிடு; நான் உனக்கே பண மூட்டையைத் தந்துவிடுகிறேன்" என்றான். திருடன் அப்படியே புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்து தின்று பசி தீர்ந்தது. அதற்குள் வழிப்போக்கன் தப்பி பிழைத்து ஓடிபோய்விட்டான். அவன் தனக்குப் பகையாக வந்த புலியையும் கள்ளனையும் முட்டவிட்டுத் தான் தப்பினான்.

இக்கதையைக் கேட்டதும் உ.வே.சாவிற்கு ஒரே மகிழ்ச்சி. அக்கிழவரிடம் அவர் தன் வீட்டிற்கு எப்போது வேண்டுமானால் அமுதுன்ண வரலாம் என பொது அழைப்பை விடுத்தார். பிறகு "கள்ளரால் வேறு காணிய" என்னும் சீவக சிந்தாமணி அடிக்கு "கள்ளர்களாகிய அரசர்களால் புலியாகிய சீவகனை வெற்றி கொள்ளுதலைக் காணும் பொருட்டு" என்று பொருள் விளங்கிக்கொண்டார். பின்னர் சீவக சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பில் மேற்கூறிய செய்யுளின் கீழ் "கள்ளா வா, புலியைக் குத்து என்பது பழமொழி" என்னும் குறிப்பைச் சேர்த்தார்.

இவ்வாறாக உ.வே.சா. அவர்கள் 91 நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்..... அவருடைய "என் சரிதம்' என்ற சுய சத்திர நூல் பழமைக்கும், புதுமைக்கும் ஒரு பாலமாக உள்ளது என்றால் மிகையாகாது. அவருக்கு சென்னை அரசு 1906-ல் அளித்த பட்டமாகிய "மஹாமஹோபாத்யாய'' அவரால் பெருமை பெற்றது; 1932-ல் சென்னைப் பல்கலைக் கழகமும் டாக்டர் பட்டம் அளித்து கௌரவம் அடைந்தது. இப்போதும் திருவல்லிக்கேணி மாநிலக்கல்லூரி முன்பு அன்னாருடைய சிலை உள்ளது. அவருடைய நினைவை நன்றியுடன் போற்றுவது தமிழ் கூறும் நல்லுலகத்தின் கடமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி:

1. நிலாச்சாரல்

2. காலச்சுவடு மார்ச் 2005 இதழ், திரு ஆ.சிவசுப்பிரமணியனின் "உ வே சா வும் நாட்டார் வழக்காறுகளும்" கட்டுரை பற்றி இங்கு வந்த குறிப்புகள்.

நான் ரசித்த கதைகள் - 1

சமீபத்தில் அறுபதுகளில் குமுதத்தில் படித்தது இக்கதை. தலைப்பு மறந்து விட்டது. எழுதியவர் பெயரும் மறந்து விட்டது. இப்போது யோசித்து பார்க்கும் போது இதை எழுதியது அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் செயலோடிருந்த அந்த மும்மூர்த்திகளில் ஒருவராக இருக்கலாம். அதாவது எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன் மற்றும் ஜ.ரா. சுந்தரேசன் இவர்களில் ஒருவர். இவர்கள் மூவராகச் சேர்ந்ததுதான் அரசு என்று கூறியவர்களும் உளர். நிற்க.

கதாபாத்திரங்களின் பெயர்களும் நினைவுக்கு இல்லையாதலால் நானே பெயர் சூட்டி விடுகிறேன். அதே போல கதையின் கருத்துதான் முக்கியம் என்பதாலும், கதையின் வாக்கியங்களும் அப்படியே நினைவுக்கு வராததாலும், இப்போது கதையை என் வாக்கியங்களில் தருகிறேன்.

கமலாவுக்கு சுய இரக்கம் மிக மிக அதிகம். அதே சமயம் அவளது பிரச்சினைகளும் அதிகம் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். அவள் அம்மாதான் சிரமப்பட்டு அவளையும் அவள் அண்ணனையும் கரையேற்றினார். கமலாவுக்கு வரன் பார்க்கும் சமயம் அவள் அண்ணா சொல்ப சம்பாத்தியத்தில் இருந்தார்.

ஆனால் நல்ல வேளையாக ஒரு பணக்கார வாலிபன் அவள் அழகைப் பார்த்து, விரும்பி சீர் செனத்தி எதுவுமின்றி அவளை கைப்பிடித்தான். ஆனால் புகுந்த வீட்டிலோ அவள் மாமியாருக்கு இம்மாதிரி ஏழை வீட்டில் பெண்ணெடுத்தது பற்றி கழுத்து மட்டும் குறை. போதாக்குறைக்கு கமலாவின் மூத்த ஓரகத்திகள் இருவர் வீட்டிலிருந்தும் அமரிதமான வகையில் சீர் வந்தது நிச்சயமாக கமலாவுக்கு சாதகமான சூழ்நிலையைத் தரவில்லை.

சில ஆண்டுகள் கடந்தன. கமலாவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. இரண்டு குறை பிரசவங்கள். அவள் உடல்கட்டும் குலைந்தது. மாமியாரின் குத்தல் பேச்சுகள் வேறு. எல்லா விஷயங்களும் அவளை ஒரு ஹிஸ்டீரியா நோயாளியாக மாற்றியன. தன்னிரக்கம் அவளுள் பொங்கியது. காச்சு மூச்சென்று கத்தி சாமான்களை விட்டெறிந்து என்றெல்லாம் நிலைமை மாற ஆரம்பித்தது.

அன்று நிலைமை மோசமாகியது. காலையிலிருந்தே கமலாவின் தலைக்குள் ஏதோ ரீங்காரம் செய்வது போன்ற உணர்வு. அவள் கணவன் கோபாலன் பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவள் அவனிடம் ஏதோ கூற அவன் பேப்பரிலிருந்து கண்ணை எடுக்காமல் வெறுமனே உம் கொட்டிக் கொண்டிருந்தான். கமலாவின் கையிலிருந்த காப்பி தம்ளர் பறந்து சுவற்றை பதம் பார்த்து கீழே விழுந்து காப்பி எங்கும் சிதறியது. கோபாலன் நடுங்கி போனான்.

"ஒன்றுமில்லை, உங்கள் மனைவி கோபம் அடையாமல் பார்த்து கொள்ளுங்கள். நான் இப்போது போட்டிருக்கும் ஊசி அவரைத் தூங்கச் செய்யும் என்று கூறிவிட்டு லேடி டாக்டர் ஃபீஸ் வாங்கிக் கொண்டு சென்றார். அடுத்த சில நாட்கள் அவ்வளவாக பிரச்சினை இல்லை. கமலாவின் நாத்தனார் ஊரிலிருந்து வந்திருந்ததால் கமலாவின் மாமியாருக்கு தன் மகளுடன் பேசவே நேரம் போதவில்லை, ஆகவே கமலாவுடன் சண்டை இல்லை. கமலாவும் மௌனமாக இருக்க ஆரம்பித்தாள்.

அன்று கமலாவின் அண்ணன் சிரஞ்சீவி அவளைப் பார்க்க வந்திருந்தார். சற்று தன்னுடன் வெளியே வருமாறு கூறி அவளை நகரின் இன்னொரு பகுதிக்கு அழைத்து சென்றார். ஒரு வீட்டின் வாசலில் மணியை அழுத்த, "வாங்க சிரஞ்சீவி, ரொம்ப நாளாச்சு பார்த்து" எனக் கூறியவாறு அவரையும் கமலாவையும் உள்ளே வருமாறு பணித்தார் ஒரு தலை நரைத்த பெண்மணி.

வீட்டை மிக துப்புரவாக வைத்திருந்தார் அவர். சிறிய வீடுதான், சாமான்களும் அதிகம். ஆனால் அவற்றை நேர்த்தியாக வைத்ததில் இடநெரிசல் எதுவும் தெரியவில்லை. அவர்களை ஹாலில் அமரச் செய்து விட்டு உடனே வருவதாகக் கூறி உள்ளே சென்றார் அவர்.

"யார் இவர்" எனக் கண்ணாலேயே கமலா சிரஞ்சீவியைக் கேட்க, அவர் அப்புறம் கூறுவதாகக் கூறினார். பிறகு அப்பெண்மணியை சரஸ்வதி என்று அவளுக்கு அறிமுகப்படுத்தினார். தன் தங்கையையும் சரஸ்வதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரஸ்வதி மிருதுவாகப் பேச ஆரம்பித்தார். அவர் கைவினைப் பொருகள் பல செய்து பல கடைகளுக்கு அனுப்புபவர். கணிசமான வருமானம். அவர் பொருட்களுக்கும் கிராக்கி அதிகம். சிரஞ்சீவி வேலை செய்யும் கடை கூட அவரது வாடிக்கையாளரே. இதெல்லாம் கமலா அடுத்த அரை மணி நேரத்தில் தெரிந்து கொண்டாள். சரஸ்வதியின் கணவர் இறந்து பல வருடங்களாகி விட்டன. ஒரே ஒரு பிள்ளை. போலியோ நோயால் கால் சூம்பி விட்டது. இருந்தாலும் அவனைப் படிக்க வைத்து அவன் இப்போது வேலைக்கும் போகிறான்.

திரும்பி வரும் சமயம்தான் சிரஞ்சீவி சரஸ்வதியைப் பற்றி மேலும் விவரங்கள் கூறினார். அவர் கணவ்ர் வண்டி ஓட்டுனர். குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளாகி அவர் இறந்த சமயம் சரஸ்வதி நிறைமாத கர்ப்பிணி. தனது ஒரே பிள்ளை விபத்தில் போனது சரஸ்வதியின் சனியன் பிடித்த ராசி என்று அவ்ரது மாமியாரின் நிஷ்டூரப் பேச்சுகள் வேறு. கைவசம் பணம் இல்லை. கைக்குழந்தையுடன் மிக அவதிக்குள்ளானார் சரஸ்வதி. இந்த அழகில் குழந்தைக்கு வேறு போலியோ அட்டாக்.

இருப்பினும் மனம் தளராது பாடுபட்டார். ஒரு கைவினைத் தொழிற்கூடத்தில் வேலை. அங்கு நன்கு கற்றுக் கொண்டு எல்லா பொறுப்புகளையும் நிர்வகித்து முக்கிய பதவியும் பெற்றார். பிறகு தான் சேர்த்த பணத்தைக் கொண்டு தானே தொழில் தொடங்கி, போராடி இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இப்படி பேசிக் கொண்டே வந்ததில் நேரம் தெரியவில்லை. கமலாவும் சிரஞ்சீவியும் வீட்டுக்கு வரும்போது கோபாலன் வீட்டில் இல்லை. ஆபீசுக்கு சென்று விட்டிருந்தான். மாமியார் மட்டும் வாசல் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். "என்ன இப்படி பொறுப்பில்லாமல் போனால் என்ன அர்த்தம்? ஆம்படையான் ஆபீசுக்கு போறப்போது பக்கத்தில் இருந்து எல்லாம் எடுத்து கொடுத்து உதவி செய்யாமல் இந்த மாதிரி வெளியில போறது எதில் சேர்த்தி" என்று நிஷ்டூரமாகப் பேசினார். பேசாமல் உள்ளே வந்தாள் கமலா. அவள் கண்களில் கண்ணீர். சிரஞ்சீவிக்கே சற்று பயம் வந்து விட்டது. மறுபடியும் இந்தப் பெண் பொருட்களை வீசி எறிய ஆரம்பிக்கப் போகிறாள் என பயந்தார். மாமியாருக்கு தெரியாமல் கமலாவிடம் அமைதியாக இருக்குமாறு கூறினார்.

அவளோ, "பாவம் அண்ணா சரஸ்வதி, எத்தனை கஷ்டப்பட்டு விட்டார்" எனக்கூறி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். அவள் அழட்டும் என அண்ணனும் அப்படியே விட்டு விட்டார். கமலா குணமாகும் அறிகுறிகள் அவருக்கு புலப்பட ஆரம்பித்தன.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். கதை நன்றாக இருந்தால் கிரெடிட் அதை எழுதியவருக்கு. இல்லையென்றால் நான் அதை மீள்பதிவு செய்தலில் ஏற்பட்ட சொதப்பல்களே காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/11/2007

மழை விட்டும் தூவானம் விடவில்லை

இன்று காலை நண்பர் அதியமான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். தில்லியில் உள்ள ரிட்சா ஓட்டுபவர்கள் படும் அவஸ்தையை பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார். மேல் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

தில்லியில் இருபது வருடங்கள் இருந்த எனக்கு இது புதிய செய்தி. இந்த ரிட்சாக்கள் குறைந்த தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. சுமார் 3 - 4 கிலோமீட்டர்கள் வரை முழு பயணம் இருக்கும். ஒருவர் மட்டும் ஏறினால் ஒரு கட்டணம் இருவருக்கு அதிக கட்டணம் ஆனால் இரட்டிப்புக்கும் குறைவு. கிழக்கு தில்லியில் நான் இருந்த குடியிருப்பு மெயின் சாலையிலிருந்து 2 கிலோமிட்டர்கள் தூரம். பஸ் எங்கள் தெருவினுள் வராது. ஆகவே தெருமுனையிலிருந்து ரிட்சாவில் செல்ல வேண்டும். ஆனால் அவற்றுக்கு உரிமம் அளிப்பதில் இத்தனை ஊழல் உள்ளது என்பதை நான் அவ்வளவாக அறியாததால் மேலே குறிப்பிட்ட மின்னஞ்சல் எனக்கு வியப்பையும் திகைப்பையும் அளித்தது.

எல்லா செண்ட்ரல் திட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் இங்கும் உள்ளன. லைசன்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு அதை கொடுப்பதில் அதற்கான கையூட்டை பெறுவது என்பதைத் தவிர்த்து வேறு என்ன பிரச்சினை இருக்க முடியும்? முக்கியமாக டேக்கேதார் என அழைக்கப்படும் காண்ட்ராக்டர்கள் செய்யும் அலம்பலைப் பற்றி பேச வேண்டும்.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட கட்டுரையிலிருந்து சில பத்திகள் தருகிறேன்.

The thekedars (contractors) are a bunch of smart entrepreneurs who own between 10 to 200, or even a few thousand rickshaws. It’s just that their entrepreneurship is liable to earn them arrest warrants! In fact, 90 per cent of all rickshaws in Delhi are rented out by these contractors. So, how do they manage to run truckloads of rickshaws when the ordinary citizen cannot even manage one?



This is how it works: for a few of their rickshaws, they bribe the MCD officials heftily to get hold of licences in bulk (which is again illegal, since only one licence can be granted to one person under the law), issued under real or fictitious names, while most other rickshaws remain unlicensed. To protect these rickshaws from being confiscated, these contractors pay a certain agreed-upon amount to the police and MCD as ‘protection money’ or suvidha shulk. Surprisingly, even in this act of corruption, there is a proper system in place. The ‘protected’ rickshaws have the name of the contractor and number displayed on them, by which MCD officials recognise and spare them. Also, they can distinguish between the errant contractors (the ones not paying protection money) and the non-errant ones in order to take action against the former.

But the contractors’ crimes do not end here. Article 3(1) of the Delhi Municipal Corporation Cycle Rickshaw Bylaws, 1960, makes renting out a rickshaw a punishable crime. There are two kinds of licences that a rickshaw-puller must hold — the owner’s licence and the puller’s licence — both have to be held by the same person for any given rickshaw. The article states that “no person shall keep or ply for hire, a cycle rickshaw in Delhi unless he himself is the owner thereof and holds a licence granted by the Commissioner, on payment of the fee that may, from time to time, be fixed under sub-section (2) of Section 430”. In effect, the law means there is no room for the growth of individual owners in the cycle-rickshaw business. Working under the present laws, a rickshaw puller would be earning almost the same income all his life, condemned to live at the subsistence level on the revenue from one cycle rickshaw, as all legal alternatives to expand his trade and increase income have been sabotaged.

But in spite of this whole gamut of laws and regulations, the contractor’s money power rules. And for a bribe of about Rs 200 every month, an illegal rickshaw rented out to its driver, safely plies on the road.

As a direct fallout of this cost of illegitimacy, and the risky and expensive nature of maintaining illegal rickshaws, rickshaws rented from contractors come expensive — at about Rs 25 per day. And if this does not seem expensive at first look, consider the economics: a new rickshaw costs Rs 5,000 and a second one costs between Rs 1,000- 2,000. In effect, the Rs 750 charge that a puller pays every month is a little more than one-sixth the cost of a new rickshaw, or about half the cost of a second-hand rickshaw!

Another drawback of this system is that there is no initiative by either the puller or the owner to invest in simple technological advancements and upgradation like motorisation of the rickshaw. The dynamics of the market do not permit these advancements and leave us with the same pedal-pushed ‘muscle powered’ cycle rickshaw.

Back in 1991, the prime minister’s office issued a directive calling for scrapping of the licensing system. But the task of translating this policy into a legal framework and implementing laws was left to the municipal authorities and is still unfinished business.

The bottomline: If at all the licence regime serves any purpose, it is in providing unbounded opportunities for the authorities to make a fast buck. It is just another example of how the licence quota raj remains deep rooted, and never went away with the 1991 economic reforms.

இம்மாதிரி எல்லாம் குருட்டுத்தனமாகச் செயல்பட்டதாலேயே சோவியத் யூனியனும் கிழக்கு ஜெர்மனியும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. என்னதான் பின் நவீனத்துவம், தொழிலாளர் சர்வாதிகாரம் என்றெல்லாம் ஓசையுடன் பஜனை செய்தாலும் அவை செல்லா(து). பொருளாதார விதிகள் என்று இருக்கின்றனவே, என்ன செய்ய.

1991-ல் ஆரம்பித்த லைசன்ஸ் ஒழிப்பு இன்னும் இந்த ரிட்சா விஷயத்தில் அப்படியே உள்ளது. இதைத்தான் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/08/2007

கம்யூனிஸ்டுகளின் சொர்க்கம்!!!!!!

கம்யூனிசத்தின் கோளாறுகளை பற்றி நான் போட்ட பதிவுகள்:
1
2
3
4

ஆனால் அவையெல்லாம் மேக்ரோ அளவில் போடப்பட்டவை. இப்போது கம்யுனிஸ்டுகளால் ஆளப்பட்டு வரும் கேரளாவின் நிலையை மைக்ரோ அளவில் பார்ப்போமா? அதியமான் அவர்களிடமிருந்து எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை பார்த்ததும் எனக்கு தோன்றுவதுதான் இப்பதிவு. முதலில் மின்னஞ்சலில் கூறியதைப் பார்ப்போம்.

மாயாவித் திருடர்கள்

சக்கரியா

பன்னாட்டு மூலதனங்களால் பிரபலமடைந்திருக்கிறது தமிழகம். முதலீட்டாளர்களில் பலரும் - உதாரணமாக பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் - கேரளத்துக்கு வந்து முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை விவாதித்தவர்கள். ஆனால் அவர்கள் உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். காரணம், கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்து கேரளத்தில் உருவாக்கிவைத்திருக்கும் தொழிற்சூழல் பைத்தியக்கார விடுதிக்குச் சமமானது. தொழிலாளிகளின் மூளைகளை அரசியல் கட்சிகள் பொய்களால் மழித்துவைத்திருக்கின்றன. கம்பெனியைத் திறப்பதில் அல்ல; மூடுவதிலேயே அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் இடையில் நின்று இரு தரப்பினரின் சட்டைப் பைகளிலும் கை போடுகிறார்கள். இன்று கேரளத்தில் முதலீடு செய்வதும் அதைக் கடலில் வீசுவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

இங்கே சின்ன அளவிலாவது முதலீடு செய்யத் துணிந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துரதிருஷ்டவசமாகக் கொக்கோகோலா மட்டுமே. அர்த்தமில்லாத ஒரு பானம். அதைக் குடிப்பதனால் தாகம்கூடத் தீராது. அது மட்டுமல்ல, குழந்தைகள் அதைக் குடிப்பதால் குண்டோ தரர்களாகவும் அகாலத்தில் நீரிழிவு நோயாளிகளாகவும் மாறக்கூடும். மதுவைப் போலவே கொக்கோகோலாவும் தீங்கானதுதான். மது நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், கேரளத்தில் அரசே மது விற்பனையை நடத்துகிறது. மது அருந்து பவர்களின் எண்ணிக்கையோ கொக்கோகோலா குடிப்பவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு.

கொக்கோகோலாவுக்குப் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்தது அன்று ஆட்சியிலிருந்த இடது முன்னணி அமைச்சரவையே. 2000இல் அந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது. 2001இல் காங்கிரஸ் முன்னணி அதிகாரத்துக்கு வந்தது. அப்போதுதான் பழைய மார்க்சிஸ்ட் முன்னணியில் அங்கமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கொக்கோகோலாவுக்கு எதிராகக் களமிறங்கியது.

கொக்கோகோலா தொழிற்சாலை உள்ள பிளாச்சிமடை என்ற பகுதி பெருமாட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது. கொக்கோகோலாவுக்கு அங்கே ஆலை நிர்மாணிக்க அனுமதியளித்த பெருமாட்டிப் பஞ்சாயத்து அப்போது ஜனதா தளம் (எஸ்)-இன் கைவசம் இருந்தது. கோலா எதிர்ப்பை முன்னெடுத்ததும் அவர்கள்தாம்.

முன்னெடுத்தார்கள் என்று சொல்லக் காரணமிருக்கிறது. கொக்கோகோலா தொழிற்சாலையின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு ஒரு போதும் குடிநீர் கிடைத்தது இல்லை. காரணம் எளிமையானது. ஆதிவாசிகளின் கோரிக்கைகளுக்குக் கேரளத்திலுள்ள அரசியல்-ஆட்சி-சமூகப் பொது அமைப்பு, ரோமத்தின் மதிப்புக்கூடத் தந்ததில்லை என்பதுதான். அவர்களுடைய குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்ததும் அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது கொக்கோகோலா தொழிற்சாலையால்தான் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்பவைக்க ஆட்கள் இருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து தர யார் கடமைப்பட்டவர்களோ அவர்கள் மிகச் சாமர்த்தியமாகப் பழியைக் கொக்கோகோலாமீது சுமத்தினார்கள். கொக்கோகோலா தொழிற்சாலைக்கு முன்னால் பந்தல் கட்டி ஆதிவாசிகள் போராட்டம் தொடங்கினார்கள்.

உலகமயமாக்கல், முதலாளித்துவம், நவகாலனியாக்கம் போன்ற சொற்களுக்கான மார்க்கெட் இடது சாரி மனோபாவமுள்ள கேரளத்தில் பிரசித்தமானது. தவிரவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் இத்தகைய சொற்களின் நட்சத்திர மதிப்பு கவர்ச்சிகர மானது. அப்படிப்பட்ட சந்தையில் கொக்கோகோலாவுக்கு எதிராகத் திசைதிருப்பிவிடப்பட்டவர்களும் அப்பாவிகளுமான ஆதிவாசிகள் தொடங்கிய போராட்டம் முதல் தரமான விற்பனைச் சரக்காக இருந்தது. அதை ஜனதா தளம் போன்ற உயிர்ப் பிணமான ஒரு கட்சி ஆனந்தமாக முன்னெடுத்தது. ஆதிவாசிகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டு, அரசியல்வாதிகள் முன்னிலை வகித்தார்கள். சி.கே. ஜானு போன்ற ஆதிவாசித் தலைவர்கள் பின்வாங்கினார்கள்.

தாமதமில்லாமல் பிளாச்சிமடை உலகப் புகழ் பெற்றது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கேரளத் தலைவருக்கு உரிமையான ஒரு பிரபல நாளிதழ் போராட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது. மேதா பட்கர் முதல் வந்தனா சிவா வரையான உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர்களின் தீர்த்தாடன கேந்திரமானது பிளாச்சிமடை. மயிலம்மாவைப் போன்ற உள்ளூர் விக்கிரகங்களும் உருவாக்கப்பட்டன. வழக்குகள் தடபுடலாக நடந்தன. கொக்கோகோலா தொழிற்சாலை மூடப்பட்டது. காங்கிரஸ் அரசு போய் கம்யூனிஸ்ட் அரசு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் அது முதலில் செய்த காரியம் கொக்கோகோலாவுக்குத் தடை விதித்ததுதான். அதாவது, கேரளத்தின் மக்கள் தொகையில் 0.5 விழுக்காட்டினர் குடிக்கும் பானத்தைத் தடைசெய்தது. 90 விழுக்காட்டினர் காலாவதியானதும் உலகளவில் தடைசெய்யப்பட்டதுமான மருந்துகளைப் பயன்படுத்தும் மாநிலத்தில், 60 விழுக் காட்டுக்கும் மேற்பட்டவர்கள் கலப்படம் செய்த மதுவை அருந்தும் மாநிலத்தில், தடை விதிக்கப்பட்டதோ 0.5 விழுக்காடுள்ள ஒரு முட்டாள் பானத்துக்கு.

இதற்கிடையில் கோலாவில் நச்சுக் கொல்லிகளின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இருக்கும் என்பதில் என்ன சந்தேகம்? கோலா தயாரிக்கப் பயன் படுத்தும் தண்ணீரிலும் சர்க்கரையிலும் அவை இருக் கின்றனவே! நச்சுக் கொல்லியின் கணக்கைப் பார்த் தால் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு வரும் எந்தக் காய்கறியையும் எந்தப் பழத்தையும் பயன்படுத்த முடியாது. அவை பூச்சி மருந்துகளில் மூழ்கி எழுந்தவை. அதிகம் எதற்கு? கேரளக் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குழாய் நீரைப் பரிசோதித்தால் காணப்படும் நச்சுக் கூறுகள் நம்மை உணர்விழக்கச் செய்யும். ஆனால், இந்த உண்மைகள் வந்தனா சிவாவுக்கும் மேதா பட் கருக்கும் எம்.பி. வீரேந்திர குமாருக்கும் அவசியமில்லை. அவர்களுக்குத் தேவை கொக்கோகோலா போராளிகள் என்ற சர்வதேசப் பெருமை. மக்சேசே போன்ற விருதுகள். குடிநீரில் விஷமிருந்தால் யாருக்கு நஷ்டம்? காய்கறியிலும் பழத்திலும் விஷமிருந்தால் அவர்களுக்கு என்ன? கொக்கோகோலாதானே நட்சத்திரம்.

கொக்கோகோலா நிறுவனத்தை மூடி வருஷங்களாகின்றன. அது தண்ணீரை உறிஞ்சுவதில்லை என்பது வெளிப்படை. ஆனால், பிளாச்சிமடை ஆதிவாசிகளுக்கும் பிறருக்கும் இன்றும் குடிநீர் கிடைக்கவில்லை. இது என்ன ஆச்சரியம்? அப்படியானால் இந்த உலகப் பிரசித்தி பெற்ற போராட்டங்கள் எதற்காக? தமிழ் நாட்டிலுள்ள கொக்கோகோலா தொழிற்சாலைவரை பரவிய இந்தப் போராட்டம் ஏன் ஆதிவாசிகளுக்குக் குடிநீரைக் கொண்டுவரவில்லை? எல்லாரும் கேட்கக் கூடிய கேள்விகள்தாம் இவை.

அண்மையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உண்மை வெளிவந்தது. சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான பிரகாஷ் காராட்டின் கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் செய்புதீன் ஷேக் அளித்த பதில் பின்வருமாறு:

மத்திய நீர்வளத் துறை பிளாச்சிமடை தண்ணீர்ப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிளாச்சிமடை உள்ளிட்ட பெருமாட்டிப் பஞ்சாயத்திலுள்ள நிலத்தடி நீரில் 92 விழுக்காட்டையும் அங்குள்ள விவசாயிகளின் குழாய்க் கிணறுகள் தாம் உறிஞ்சியெடுக்கின்றன. சரியாகச் சொன்னால் பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 17.4 மில்லியன் கன மீட்டர் நீர் இன்று உள்ளது. இதில் 16.12 மில்லியன் கன மீட்டர் நீர் விவசாயப் பாசனத்துக்கும் 1.08 மில்லியன் கன மீட்டர் நீர் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 0.2 மில்லியன் கன மீட்டர் நீரைத்தான் கொக்கோகோலா தொழிற் சாலையும் பிற மதுத் தயாரிப்பு ஆலைகளும் பங்கிட்டுக் கொள்கின்றன. பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 508 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அவற்றில் கொக்கோகோலாவுக்கு உரிமையானவை ஐந்து. சாராய ஆலைக்குச் சொந்தமானது இரண்டு.

வந்தனா சிவாவுக்கும் மேதா பட்கருக்கும் இதைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருக்கிறதா? ஒரு வார்த்தைகூட இல்லை. அமைதி. பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை' உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு முன்னால் செல்வதாக நான் முன்பே குறிப்பிட்டேன்.

பிளாச்சிமடையில் நடந்த போராட்டக் கூத்துக்கு இன்னொரு சுவாரசியமான கிளைமாக்ஸ் அண்மையில் நிகழ்ந்தது. கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிளாச்சி மடைக்குச் சென்றிருந்தார். ஆதிவாசிகளுக்கு இப் போதும் குடிநீர் கிடைப்பதில்லை என்ற உண்மையைக் 'கண்டுபிடித்தார்'. காரணம் என்ன என்கிறீர்களா? அண்மைக் காலம்வரை நீதிமன்ற உத்தரவின்படி கொக்கோகோலா நிறுவனம் ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து விநியோகம் செய்துவந்தது. கம்பெனி மூடப்பட்ட பிறகும் அது தொடர்ந்துவந்தது.

நிறுவனம் ஊரைக் காலிசெய்ததோடு குடிநீர் விநியோகமும் நின்றுபோனது. நீர்வளத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் பிளாச்சிமடையில் ஒரு கம்பீரமான அறிவிப்பைச் செய்தார்: "ஆதிவாசிகளுக்குக் கொக்கோகோலாவின் பிச்சை வேண்டாம். இனிமேல் அரசே குடிநீர் வழங்கும்." அப்படியானால் இத்தனை காலமாகக் குடிநீர் வழங்காமல் அவர்களைப் போராட்டத்தில் இறக்கிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் யார்? கொக்கோகோலாவா?

"முட்டாள்களின் சொர்க்கம்" என்று ஒரு பிரயோகம் உண்டு. அதை நேரடியாக அனுபவித்து அறிய விரும்பினால் கேரளத்துக்கு வந்தால் போதும். நல்வரவு!

நன்றி: காலச்சுவடு

இதையும் பார்க்கவும்:


கேரள சகோதர்கள் உழைப்புக்கு அஞ்சுவதில்லை. இருப்பினும் கம்யூனிச கெடுபிடிகளால் அங்கு புது தொழில்கள் வரும் வாய்ப்பும் குறைவே. ஆகவேதான் அச்சகோதரர்கள் வெளியிடங்களுக்கு செல்கின்றனர். வெளிதேசங்களுக்கும்தான். அவ்வாறு ஈட்டிய பொருட்செல்வத்துடன் வருபவர்கள் ஏதேனும் தொழிலில் முதலீடு செய்தாலும் அது கேரளாவில் இல்லாதபடி பார்த்து கொள்கின்றனர். அவ்வளவு புண்ணியாத்மாக்கள் அங்குள்ள அரசியல்வியாதிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/06/2007

IDPL நினைவுகள் - 7

ஐ.டி.பி.எல்-லில் திடீரென என்னை தலைமையகத்திலிருந்து பக்கத்திலிருந்த தொழிலகத்துக்கு மாற்றியதை பற்றி கூறியுள்ளேன். தொழிற்சாலையிலும் என்னை மறுபடி தலைமை அலுவலக கட்டிடத்தின் மின்சார பராமரிப்பை பார்த்து கொள்ள அனுப்பிவிட்டதையும் கூறியுள்ளேன்.

ஐ.டி.பி.எல். க்ஷீண நிலையை அடைந்து கொண்டிருந்தது (அப்பப் போய் உன்னை இந்த வேலைக்கு போட்டாங்களா, கிழிஞ்சது கிருஷ்ணகிரி எனக் கதறுவது முரளிமனோஹர்). இக்கட்டிடத்தின் மின்சார கட்டமைப்புகள் சரியான நிலையில் இல்லை. பல இடங்களில் விளக்குகள் எரியவில்லை. குழல் விளக்குகள் தட்டுப்பாடு. எல்லாமே தொழிற்சாலையிலிருந்துதான் போட வேண்டும். அங்கோ பணம் இல்லை. அவர்களது கவலை அவர்களுக்கு. இப்போதுதான் நான் ஒரு காரியம் செய்தேன். ஜலானி அவர்களை அணுகினேன். அப்போது அவர் DGM (Project) ஆக இருந்தார். நான் அவரை அணுகிய சமயம் பலத்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. நான் மேலே சொன்ன அதே விஷயம்தான். எல்லோரும் என்னை சாடினர். அந்த இடத்தில் விளக்கு எரியவில்லை. இன்னொரு இடதில் ஃபேன் ஓடவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள். பொறுமையாகக் கேட்டு கொண்டிருந்த ஜலானி திடீரென வெடித்தார். "பணம் ஒன்றுமே இல்லாது ராகவன் மட்டும் என்ன செய்ய முடியும்" என்று? இப்போது நான் ஒரு யோசனை சொன்னேன். ஒரு குறிப்பிட்ட தொகை இம்ப்ரஸ்ட்டாக வந்தால் இந்த சிறிய ஆனால் எரிச்சலூட்டக்கூடிய தொல்லைகளை சரி செய்யலாம் என்று.

ஜலானிக்கும் அது சரி என்று பட, தலைமை அதிகாரியிடம் பேசி எனக்கு தலைமை அலுவலகத்திலிருந்தே இம்ப்ரஸ்ட் ஏற்பாடு செய்தார். இம்மாதிரி ஓர் அதிகார மையத்தின் கீழ் வேலை செய்து இன்னொரு அதிகார மையத்திடமிருந்து நேரடியாக இம்ப்ரஸ்ட் பெறுவது ரொம்பவும் அபூர்வம். இம்ப்ரஸ்ட் கணக்கு வழக்குகளையும் நான் நேரடியாக ஜலானி அவர்களிடமே சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று இம்ப்ரஸ்ட் தொகையை அவ்வப்போது நிரப்பிக் கொள்ள முடிந்தது.

திடீரென தலைமை அலுவலகத்தில் நெருப்பு பிடித்து விட்டது (நீ ஏதாவது செய்தாயா என நக்கலடிப்பது முரளிமனோஹர்). மெயின் ஸ்விட்ச் ரொம்ப நாளாகவே அழும்பு செய்து கொண்டிருக்கவே அதை டைரக்ட் செய்து வைத்திருந்தனர். அதை மாற்ற ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்படும், இம்ப்ரஸ்ட் போதாது. ஆகவே அதை மாற்ற நான் பல முயற்சிகள் செய்து வந்தேன். இது சம்பந்தமாக நான் எழுதிய குறிப்புகள் சிவப்பு நாடா முறையால் அலைக்கழிக்கப்பட்டன. திடீரென கட்டிடத்தின் வேறு இடத்தில் நெருப்பு பிடிக்க அதனால் ட்ரிப் ஆகியிருக்க வேண்டிய முக்கிய ஸ்விட்ச் சொதப்ப, தொழிற்சாலை மின் பங்கீட்டு நிலையத்திலேயே பெரிய பட்டாசாகி விட்டது. இதுதான் சாக்கு என நான் எனது கோரிக்கையை மறுபடி வைத்தேன். ஆனால் இம்முறை ஜலானியிடம் சென்றேன். தலைமை அலுவலகத்திலிருந்தே பணம் பெற்று இரண்டே நாட்களில் வேலை முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் இம்மாதிரி விஷயங்களுக்கு பிளாண்டை அணுகுவதை சுத்தமாக விட்டேன். ஏதாவது தலைமை அலுவலகத்துக்கு தேவை என்றால் நேரடியாக நோட் போட்டு, ஜலானியிடம் ஒப்புதல் பெற்று நிதி இயக்குனர் ராமச்சந்திரன் அவர்களிடம் மேல் ஒப்புதல் பெற்று காதும் காதும் வைத்தாற்போல் செயல்பட்டு என வாழ்க்கை போயிற்று.

ஒரு முறை இம்மாதிரி சாங்ஷன் காகிதத்தை எடுத்து கொண்டு போய் காசாளரிடம் வந்தேன். அப்போதுதான் கார்ப்பரேட் அலுவலகத்தில் இரண்டு மூன்று அதிகாரிகளின் பண அட்வான்ஸ் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது. என் காகிதத்தை பார்த்ததுமே காசாளர் சச்தேவா அக்கௌண்ட்ஸ் அதிகாரியை நோக்கி (அவர் ஹாலுக்கு இன்னொரு புறம் இருந்தார்) "சார் பணம் கேட்டு இன்னொரு கோரிக்கை" எனக் கத்த, அவரும் அங்கிருந்து கொண்டே "யார் கேட்பது" எனக் கேட்க அவர் ராகவன் கேட்பதாகக் கூற அவர் அங்கிருந்து கொண்டே "கொடுத்து விடு" எனக் கூற, இவரும் பணத்தை எண்ணிக் கொடுத்தார். சச்தேவாவிடம் விவாதம் செய்து கொண்டிருந்த மற்ற அதிகாரிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எனக்குமே இது ஒவர் எனப்பட்டது. என்ன ஏது எனக் கேட்காமலேயே அக்கௌண்ட்ஸ் அதிகாரி செய்தது ஆச்சரியத்தை கொடுத்தது. சச்தேவாவிடம் சாவகாசமாக கம்பெனி பஸ்ஸில் வீட்டுக்கு செல்லும்போது எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அவர் கூறிய காரணங்கள்.

1. ராகவன் நீங்கள் எப்போதுமே எல்லா காகிதங்களையும் தயார் செய்து கொண்டுதான் அணுகுவீர்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
2. வேலை முடிந்ததும் கடைசி வவுச்சரின் தேதிக்கு அடுத்த நாளே நீங்கள் கணக்கை கொடுத்து விடுகிறீர்கள். பல அதிகாரிகள் அந்த விஷயத்தில் ரொம்ப மோசம். மாதக் கணக்கில் இழுத்தடிப்பார்கள். நாங்கள் பலமுறை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கும்.
3. ஆகவே உங்களுக்கு நாங்கள் உடனடி பணம் தராது இழுக்கடித்தால் தலைமை அலுவலகத்துக்குத்தான் பிரச்சினை. அவ்வளவுதான் விஷயம் என்றார்.

இம்மாதிரி கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. சச்தேவா சொன்ன விஷயங்களெல்லாம் சரிதான். ஆனாலும் நான் அவற்றை செய்தது எனது சௌகரியத்துக்குத்தான். வவுச்சர்கள் எங்காவது மறதியாக வைத்து விட்டு அவை தொலைந்து போனால் கஷ்டம் என்பதே நான் அவற்றை உடனடியாக கணக்கு எழுதி சமர்ப்பித்தற்கு காரணம். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. 4000 ரூபாய் தேவை என்றால் 4500 ரூபாய் கேட்பேன். கணக்கு தரும்போது என்னிடம் கம்பெனி பணம் சுமார் 500 ரூபாய் இருக்கும். ஆகவே கணக்கின் கடைசி வரியாக, மிகுதிப் பணத்தை திரும்பச் செலுத்த தேவையான ஆணை இடுமாறு எழுதுவேன். அந்த ஆணையையும் கணக்கை சரிபார்த்த பிறகுதான் இடுவார்கள். பிறகு என்ன, ஒரே நாளில் அத்தனையும் நடந்து விடும். அதுவே நான் குறைச்சலாக முன்பணம் வாங்கி எனது கையை விட்டு செலவழித்திருந்தால் அவ்வாவு சீக்கிரம் கணக்கைப் பார்த்து எனக்கு நான் செலவழித்த பணத்தைத் தந்துவிட மாட்டார்கள்.

சச்தேவா கூறியதில் இன்னொரு விஷயமும் புலப்பட்டது. அதாவது என் மேல் இந்த விஷயத்தில் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதே அது. சந்தோஷம் ஒரு புறம், இத்தனை நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பயம் இன்னொரு புறம்.

ஒருவர் நம் மீது நம்பிக்கை வைத்திருப்பது என்பது மிகப் பெரிய விஷயம். நம்பிக்கையைப் பெற மாதக்கணக்கில் பாடுபடவேண்டும். ஆனால் அது குலைய ஒரு நிமிடம் போதும். இந்த அக்கௌண்ட் விஷயத்தில் எனக்கு அதுபோல் கடைசிவரை நடக்கவில்லை என்பதில் ஆறுதல்.

அதே போலத்தான் ரகசியங்கள் பெறுவதும். அது பற்றி பிறகு ஒரு நாள் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/04/2007

டோண்டு ராகவன் மசோகிஸ்டா, இது என்ன புதுக்கதை?

குழலி மற்றும் ஓசை செல்லா அவர்களின் அரிய கண்டு பிடிப்பு இது. எங்கு அடித்து கொள்வது என்று தெரியவில்லை.

இதில் செல்லாவை விடுங்கள். மனிதர் ரொம்பவுமே அன்ஸ்டேபிள். மூடுக்கு ஏற்ப பேசுபவர், எழுதுபவர். அப்படித்தான் பாருங்கள், சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்புவை திட்டி பதிவுகள் போட்டு, விடாது கருப்பு மூர்த்தி எதிர்ப்பதிவுகள் போட்டு என்றெல்லாம் கூத்து நடந்தது. பிறகு திடீரென எல்லாம் மறைந்தன. என்ன விஷயம் எனக்கேட்டு பின்னூட்டம் இட்டால், "வேண்டுமானால் ஓசை செல்லா ஒரு கோழை" என்று ஒரு பதிவு போட்டு கொள்ளுங்கள் என்று எதிர்வினை. பிறகு எனது பின்னூட்டமும் மிஸ்ஸிங் அவரது எதிர்வினையும் மிஸ்ஸிங். அந்தப் பதிவு கூட காக்கா ஊஷ் ஆகி விட்டது. சரி என்று நானும் விட்டு விட்டேன்.

பிறகு என்னடாவென்றால் போலி டோண்டுதான் மூர்த்தி என்ற பதிவு. நான் கூட ஃபோன் செய்து கங்ராட்ஸ் கூறினேன். அப்பதிவையும், சர்வேசன் பதிவையும் வாழ்த்தி நான் போட்ட பதிவுக்கு அப்புறம் திடீரென செல்லாவிடமிருந்து ஒரு பதிவு என்னை முன்னிறுத்தி. சரி எனது விளக்கத்தைக் கூறலாமே என்று போட்டால் அதையும் நிராகரித்து விட்டார். அது மட்டுமின்றி "பாருங்க இப்ப கூட அவரு கமெண்ட் ஒண்ணை போட்டுத்தள்ளிட்டம்ல! சண்டைன்னு வந்துச்சுன்னா தயவு தாட்சண்யம் பாக்ககூடாது" என்று எகத்தாளமா ஒரு கமெண்ட் வேறு. எதற்கும் இருக்கட்டும் என தொலைபேசினால் ஏதோ வேலைக்காரனை நடத்துவது போன்ற எகத்தாளமான பேச்சு. நான் வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமாம். பின்னூட்டம் எல்லாம் அனுமதிக்க மாட்டாராம். அது சரி அவர் விருப்பம். ஆனால் என்னை அட்ரெஸ் செய்து போட்ட பதிவில் எனது பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்வது என்ன வலையுலக எதிக்ஸோ தெரியவில்லை.

ஆனால் எனக்கும் எதிர்வினை என்று ஒன்று இருக்கும் அல்லவா. ஆகவே இஸ்ரேல் பதிவு. அதற்கு அவரது எதிர்ப்பதிவு. அமெரிக்காவின் அடுத்த அணுகுண்டு இஸ்ரேல் மீதாம். இஸ்ரேல் அது வரைக்கும் பூ பறித்து கொண்டிருக்குமா என்ன? அதைத்தான் எனக்கு அனானியாக அடுத்த ஷ்டாசி பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவருக்கு சொன்னேன். அவ்வளவுதான். உடனே இந்த டோண்டு ராகவன் இருக்கும் வரை ஒன்றுமே உருப்படாது என்ற ஒரு பதிவு. அதில் கூறுகிறார், இனிமேல் சாகும்வரை எனக்கு பின்னூட்டமிடமாட்டாராம். எனக்கு சமீபத்தில் பின்னூட்டமிட்ட மாதிரி தோன்றவில்லையே என்று பார்த்தால் மேலே நான் குறிப்பிட்ட அனானி பின்னூட்டம்தான் தெரிகிறது. ஓகோ அப்படியா விஷயம் என விட்டு விட்டேன்.

இந்த குழலிக்கு என்ன வந்தது என்றுதான் தெரியவில்லை. அவரது மூர்த்தி பற்றிய பதிவில் நான் வெறுமனே "லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளீர்கள்" என்னும் பொருள்பட ஆங்கிலத்தில் இட்ட மிகச் சாதாரணப் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டது. என்ன விஷயம் என்று தொலைபேசி கேட்டால் அவரும் கூறுகிறார் நான் ஒன்றுமே செய்யாமல் மூலையில் உட்கார வேண்டுமாம். பிறகு மின்னஞ்சல் வேறு. ஆனால் ஒன்று, மனிதர் மரியாதையாகவே பேசினார். கடைசியில் ஒன்றுமட்டும் கூறினார். அவர் சொன்னதைப் பற்றி விவாதம் செய்யத் தயாரில்லை என்று. அதுதான் மனதில் இடித்தது. இவர் எனக்கு ஒன்று செய்ய வேண்டும் எனக் கூறுவாராம். நான் எதிர்வினையே செய்யக்கூடாதாம். ஆகவே அவரிடம் பேசிப் பயன் இல்லை என நினைத்தேன். ஆக, எனது இஸ்ரேல் பதிவுக்கு அவரும் ஒரு காரணம்.

இப்போது திடீரென எனக்கு மசோகிஸ்ட் என்ற பட்டம் வேறு. நானா மசோகிஸ்ட்? அப்படியிருந்திருந்தால் போலியுடன் இவ்வளவு போராடியிருபேனா? அதுவும் சில மாதங்களுக்கு முன்னால் கூட விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்று என்னுட்ன் தொலைபேசியில் பேசும்போது அடித்து சொன்னவர் குழலி அவர்கள். நான் போராளி. யுத்தம் செய்யும்போது வரும் காயங்களை பொருட்படுத்தாது யுத்தம் செய்பவன். அப்படிப்பட்டவன் எப்படி மசோகிஸ்ட் ஆக முடியும்? அதை விடுங்கள், அது அவரது கருத்து. எனக்கும் அவரைப் பற்றி கருத்துகள் இருக்கும்தானே. ஆகவே பரவாயில்லை.

அது எப்படி என்னைத் தமிழ்மணத்திலிருந்து விலக்கவேண்டும் எனப் பதிவு போடப் போயிற்று? நான் போட்டிருக்கும் 400-க்கும் மேல் பதிவுகளிலிருந்து ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கூறியதற்கு ஆதாரமாகக் காட்ட முடியுமா? ஏதாவது ஆபாசமாக எழுதினேனா? யாரையாவது அவமரியாதை செய்தேனா? கருத்தில் வன்முறை எனக் கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை எனது இடுகைகளிலிருந்தோ அல்லது நான் இட்ட பின்னூட்டங்களிலிருந்தோ காட்ட இயலுமா?

இப்போது உண்மைத் தமிழனிடம் வருகிறேன். அவருக்கு நான் இட்டப் பின்னூட்டம் இதோ. "விட்ஜட் எல்லாம் போடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று. எனக்கு முதலில் பின்னூட்டமிடுபவரின் தளத்துக்கு சென்று அவர் மட்டுறுத்தல் செய்யாது இருந்தால் செய்யும்படி ஆலோசனை கூறுவது எனது வழக்கம்.

//பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நீங்களே முதலில் சமாதானம் செய்து பின்பு அது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மறுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதைப் போல் எழுத ஆரம்பித்து இதனால் போலியும் தனது சத்தியத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்து இதனால் பாதிக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல.. நாங்களும்தான்..//
மேலே கூறியதில் சில தவறுகள் உள்ளன. எனது முதல் யோம்கிப்பூர் பதிவு போட்டு ஐந்து நிமிடத்துக்குள்ளாக மூர்த்தியின் டுண்டூ பதிவில் அசிங்கப்பதிவு போடப்பட்டது. அவன் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக அவன் சத்தியம் ஒன்றும் செய்யவில்லை.

ஆகவே இரண்டாம் யோம் கிப்பூர் பதிவு போட்டு அவனை அலட்சியம் செய்ய ஆரம்பித்தேன். என்னைப் பற்றி ஆர்குட்டில் அசிங்க ப்ரொபைல்கள் போட்டான். இப்போது கூட அது சம்பந்தமாக பல டெலிஃபோன் அழைப்புகள் வருகின்றன.

நீங்கள் பின்னூட்டமிட்டதால்தான் அவன் உங்களை இவ்வளவு அசிங்கமாகத் திட்டினான் ஆகவே நீங்கள்தான் அவனது இச்செய்கைக்கும் பொறுப்பு எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதே அபத்தம்தான் என்னையும் குறை கூறுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மற்றப்படி விட்ஜட் நீங்கள் போட்டுக் கொண்டு "டோண்டுவின் வலைப்பதிவில் யார் பின்னூட்டம் இட்டாலும் அவர்களுக்கு போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பரிசாக வரும். தொடர்ந்தால் அவர்களின் பெயரில் ஆபாசத் தளம் திறக்கப்படும். எனவே அவரது தளத்திற்குள் வருவதும், பின்னூட்டமிடுவதும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரிலேயே வாருங்கள். விளைவுகளுக்கு அவர் பொறுப்பில்லை...” என்று போட்டுக் கொள்வதைப் பற்றி எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை". நான் அவர் சொன்னதுபோல விட்ஜட் போட்டுக் கொண்டால்தான் மசோகிஸ்ட் என்று கூறலாம்.

மா.சிவகுமார் கூறுகிறார், "டோண்டு சார் வேண்டுமென்றே குத்திக் கிளறும் நோக்கத்தோடு எழுதும் இடுகைகளை நிறுத்தவும்". நான் தன்னிலை விளக்கம்தான் இங்கு தருகிறேன். அதுவும் உங்களிடம் தொலைபேசியதில் சோனதைத்தான் கூறுகிறேன். யாரையும் குத்திக் கிளறாது என நம்புகிறேன். அப்படி கிளறும் என்றால் அது சம்பந்தப்பட்டவர் பிரச்சினை.

டோண்டு ஆபாசமாக எதையும் எழுதவில்லையே, எப்படி தமிழ்மணத்திலிருந்து நீக்க முடியும் என்று ரமணி அவர்கள் மைல்டாக எழுதியதற்கே ஓசை செல்லாவிடமிருந்து அழுவாச்சி பதிவுகள். இத்தனைக்கும் ரமணி அவர்களும் நானும் மசோகிஸ்ட் என்றுதான் எழுதியுள்ளார். ஆனால் அது ஓசைக்கு போதவில்லை. தான் தமிழ்ப்பதிவுகளையே நிறுத்தப் போவதாக ஃபிலிம் வேறு காட்டிக் கொண்டிருக்கிறார். ஐயா ஓசை அவர்களே. ரொம்பவும் பிகு செய்து கொள்ளாதீர்கள். திடீரென எல்லோரும் சரி போங்கள் என்று விட்டால் திரும்ப எப்படி வருவீர்களாம்? நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வருகிறேன் என்று காலம் கடக்கும் முன்னால் ஒரு பதிவு போட்டு வந்து விடுவதை பற்றி யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/02/2007

Staatssicherheit (Staasi)

Staatssicherheit (Staasi) ஷ்டாஸி என்ற பெயரில் பயத்துடன் உச்சரிக்கப்பட்ட இது சமீபத்தில் 1990-ல் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தஜெர்மன் ஜனநாயக் குடியரசின் உளவுத் துறை ஆகும். இக்குடியரசு இருந்தவரை இது அந்நாட்டின் முடிசூடா மன்னனாகவே இருந்தது.

சமீபத்தில் 1949-ல் உருவான இக்குடியரசு முதலிலிருந்தே பலப்பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளது. அங்குள்ள வறுமை, கொடுங்கோன்மை பொறுக்கமுடியாது பலர் மேற்கு ஜெர்மனிக்கு ஓடினர். முக்கியமாக கிழக்கு பெர்லினிலிருந்து மேற்கு பெர்லினுக்கு. நிலைமை சமாளிக்க முடியாது போகவே அப்போது அந்நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த Walter Ulbricht பெர்லின் சுவர் எழுப்பினார். 28 ஆண்டுகள் இருந்த அச்சுவர் 1989-ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜெர்மனிகளின் இணைப்பு மேற்கு ஜெர்மனியின் தலைமையில் உருவாயிற்று.

இப்பதிவில் அவற்றைப் பற்றி எழுதப்போவதில்லை. ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சானலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர். அதுதான் முக்கியம். வேவு பார்த்தது என்னவோ உண்மைதான், கண்டனத்துக்குரியதுதான். ஆனால் முக்கிய எதிரி ஸ்டாஸிதான், அதுவும் அதை உருவாக்கிய கிழக்கு ஜெர்மன் அரசும் ஒழிந்தன என்பதே முக்கியம் என்பதை மக்கள் நல்ல வேளையாக நினைவில் வைத்துக் கொண்டனர். ஆகவே பைத்தியமாகாமல் பலர் தப்பித்தனர். வாழ்க்கை தொடர்ந்தது. பொருளாதார சிக்கல்களை சமாளிக்கவே நேரம் இல்லாத போது இதையெல்லாம் எவ்வளவு நேரத்துக்குத்தான் பார்த்து கொண்டிருப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/01/2007

வளைகுடா யுத்தமும் இஸ்ரேலும்

ஈராக் குவைத்தை அபகரித்து தனது மாநிலங்களில் ஒன்றாக அதை மாற்றியதால் வந்தது வளைகுடா யுத்தம். கொடுங்கோலன் சதாம் அமெரிக்கா தன்னை தாக்கினால் தனது தாக்குதல் இஸ்ரேல் மீதுதான் என்பதை தெளிவுபடுத்தினான். அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. இஸ்ரேலை அவன் தாக்கினால் அது ஈராக்கை செருப்பால் அடிக்கும். அதை காரணம் காட்டி மற்ற அரபு தேசத்தினர் அமெரிக்காவுக்கு துணை போக மாட்டார்கள் என்பது அவன் கணக்கு. அதில் விஷயம் இல்லாமல் இல்லை.

மற்ற நாடுகள் (இந்தியா உட்பட, அஹிம்சாவாதம்?) இந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் இஸ்ரேலை சீண்டிய அண்டை நாடுகள் உதை வாங்காமல் இருந்ததில்லை. 1976-ல் யூத பயணக் கைதிகளை உகாண்டா எண்டெப்பெ விமான நிலையத்திலிருந்து அது மீட்டு வந்தது தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்த பலமான அடியாகும். 1982-ல் லெபனானிலிருந்து தொல்லை கொடுத்த பாலஸ்தீன தீவிரவாதிகளை பெல்ட் அடி கொடுத்து அங்கிருந்து விரட்டியதை யாரால் மறந்திருக்க முடியும்?

ஆக இந்த விஷயத்தில் அமெரிக்கா ஏகத்துக்கு கவலைப்பட்டது. இஸ்ரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அப்படியே ஏதேனும் தாக்குதல்கள் வந்தாலும் எதிர்வினை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இஸ்ரேலின் பாதுகாப்புக்குக்கு முழுபொறுப்பு ஏற்று கொண்டது. சொன்னதுபோலவே பாதுகாப்பும் பேட்ரியாட் ஏவுகணைகள் ரூபத்தில் கொடுத்தது. சதாமின் கணக்கு பொய்த்தது. இஸ்ரேலை சாக்காக வைத்து அரபு நாடுகளின் ஆதரவை பெற இயலவில்லை. இன்று குவைத் நாளை நாம் என்ற பயத்திலேயே அவை அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தன. பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது இஸ்ரேலுக்கு வருகிறேன். அது எப்போதுமே தனது பாதுகாப்பை தானே பார்த்து கொள்ளும். ஆனாலும் இம்முறை மிக கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது. ஆனாலும் யுத்தத்தில் மறைமுகமாக பல உதவிகள் செய்தது. உதாரணத்துக்கு:

· அப்பிராந்தியத்திலேயே இஸ்ரேலிய படை மட்டுமே ஈராக்கிய படையை வெற்றிகரமாக சமாளித்திருக்க முடியும். இந்த எண்ணமும் சதாம் மற்ற தேசங்களை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுத்தது.

· ஈராக்கிய படைகள் ஜோர்டானுக்குள் நுழைந்தால் தனது போர் நடவடிக்கையை தொடங்கும் என்ற எச்சரிக்கையால் ஜோர்டான் தப்பித்தது.

· அமெரிக்கா இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட Have Nap வான் ஏவுகணைகளை தனது B­52 விமானங்களில் பொருத்தி கொண்டது. அமெரிக்க கடற்படையும் இஸ்ரேலின் பயனீயர் விமான ஒட்டி இல்லாத drones வானூர்திகளை வேவு வேலைக்கு பயன்படுத்தியது.

· இஸ்ரேலின் கண்ணிவெடி நீக்கும் கலப்பைகளை உபயோகித்தது அமெரிக்கா.

· இஸ்ரேலின் கணினி தொழில்நுட்பம் அளித்த ஆலோசனையின்படி பேட்ரியாட் ஏவுகணைகளின் மென்பொருளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

· இஸ்ரேலிய விமான தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எரிபொருள் டேங்குகள் மூலம் F­15 விமானங்களின் வீச்சை அதிகரிக்க முடிந்தது.

· எல்லாவற்றையும் விட முக்கியமாக இஸ்ரேல் 1981-லேயே ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலையத்தை அழித்ததால் பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்காவும் நேச நாடுகளும் ஈராக்கை தாக்கியபோது அது அணுசக்தி உள்ள நாடாக இல்லை. 1981-ல் இஸ்ரேலை இதற்காக குறை கூறிய பலநாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன.


இன்னும் கூறிக் கொண்டே போகலாம். தேவையானால் இந்த உரலுக்கு செல்லவும்.

இப்போது பதிவின் கருப்பொருளுக்கு வருகிறேன். நேரடி நடவடிக்கைகளை எடுக்காது அடக்கிவாசிப்பதும் ஒரு போர் யுக்தியே. ஆனால் இதுதான் மிகக்கடினம். என்ன செய்வது, பலன் வேண்டுமானால் அதையும் செய்ய வேண்டும்.

Disclaimer: Any resemblance to events in the Tamil blogging world is purely intentional.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது