12/30/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 3

இதற்கு முன்பு இந்த வரிசையில் வந்த
இரண்டாம் பதிவு
முதல் பதிவு

இதற்கு முந்தைய 2 பதிவுகளில் நீங்கள் தவிர்க்க வேண்டிய நபரகளை பற்றி பேசும்போது தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்களையே குறி வைத்தேன். இப்பதிவில் சற்று வேறு மனநிலைகளில் இருப்பவர்களைப் பற்றி கூறுவேன்.

நான் சமீபத்தில் 1963-69 காலக் கட்டத்தில் பொறியியல் கல்லூரியில் படித்த தருணம் அது. என் நண்பன் ஒருவன். பெயர் ராமகிருஷ்ணன் என்று வைத்துக் கொள்வோமே. (அவன் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பதால் அவனது உண்மைப் பெயரை கூறவில்லை). அவன் நன்றாகப் படிப்பவன். தினமும் தவறாது அன்றன்றைய பாடங்களைப் படித்து விடுபவன். ஹாஸ்டலில் இருந்தான். ஆனால் அவ்வாறு படிப்பது விடியற்காலை 3 மணியிலிருந்துதான். நாள் முழுக்க ஊர் சுற்றுவான். தான் ஒன்றுமே படிப்பதில்லை என்றெல்லாம் ஃபிலிம் காட்டுவான். அவன் சொல்வதை அப்படியே நம்பி சில அசடுகள் அவனுடன் ஊரை சுற்றும். இரவு 10 மணி வரை கொட்டம் அடித்து விட்டு படுக்கப் போய் விடுவான். அசடுகளும் அவ்வாறே செய்யும்.

ஆனால் விடியற்காலை 3 மணிக்கு ஃபிரெஷாக எழுந்து படித்து விடுவான். அது தெரியாத மற்ற அசடுகள் காலை 7 மணி வரை தூங்கும். கடைசியில் பரீட்சையில் இவன் எல்லா சப்ஜெக்டுகளையும் க்ளியர் செய்து போய்க் கொண்டே இருப்பான். அசடுகள் கம்பார்ட்மெண்டுகள் வாங்கும். இவன் ஒரு உதாரணமே. ஆனால் வாழ்க்கையில் இவனைப் போல பலர் உண்டு. தாங்கள் நேரத்தை வீணாக்குவதுபோல நடிப்பார்கள். எனக்கு எப்போதுமே இவர்களின் மோட்டிவேஷன் புரிந்ததேயில்லை. நல்ல வேளையாக நான் ஹாஸ்டலில் இருந்ததில்லை. இவனிடம் நான் மாட்டிக் கொள்ளவில்லை. இவனை பற்றி நான் என் தந்தையிடம் பேசினேன். அப்போது என் ஆச்சரியம் எல்லாமே அவன் எப்படி ஊர் சுற்றினாலும் அவ்வாறு எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றான் என்பதுதான். ஆனால் நான் அவனை வர்ணித்ததுமே என் தந்தை கூறினார், அவன் நடிக்கிறான் என்று. ஏனெனில் அவர் படிக்கும்போது கூட அவருடன் ஒருவன் இதே குணநலன்களுடன் இருந்தானாம். அப்புறம் விசாரித்ததில் என் தந்தை கூறியது போலத்தான் எனது கிளாஸ்மேட்டும் நடந்து கொள்கிறான் என்று தெரிய வந்தது.

அப்படிப்பட்டவர்களை நிச்சயம் தவிர்க்கவும். அதிலும் இப்போதெல்லாம் டீம் செயல்பாடுகள் அதிகம். இந்த குணாதிசியம் உள்ளவர்கள் தாங்கள் முன்னுக்கு வந்தால் போதாது, மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதற்காகக் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் காலில் விழுவார்கள், காரியம் முடிந்ததும் காலை வாருவார்கள்.

ஒரு பிரசித்தி பெற்ற அமெரிக்க பதிப்பாளர் ஒரு சமயம் கூறினார், "வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க நீங்கள் வெற்றி பெற்றால் மட்டும் போதது, உங்கள் நண்பர்கள் அதே சமயம் தோற்கவும் வேண்டும்" என்று.

அரசியல்வாதிகள் பலரும் இவ்வாறுதான் செயல்படுவார்கள்.

"தமிழ்வழிக்கல்வி எல்லோருக்கும் விழுந்து விழுந்து சிபாரிசு,
ஆனால் ஆங்கில மீடிய கல்வியில்தான் அவர்தம் வாரிசு"

என்ற ரேஞ்சில் செயல்படுவார்கள். அவர்களை பற்றி ஏற்கனவே வேணமட்டும் எழுதியாகி விட்டதால், இங்கு அவர்களை பற்றி அதிகமாகக் குறிப்பிடமாட்டேன்.

ஆனால் வேறு சில பதிவர்களை பார்க்கிறேன். உலகமயமாக்கலை எதிர்ப்பார்கள் ஆக்கிரோஷமாக. ஆனால் கூர்ந்து பார்த்தால், அப்பதிவுகளையும் அவர்கள் அதே உலகமயமாக்கல் கொள்கையால் உண்டான வேலைகளில் இருந்து கொண்டே வேலை நேரத்தில் போடுவார்களாக இருக்கும். அமெரிக்காவைத் திட்டுவார்கள், ஆனால் அங்கு வேலை செய்ய வாய்ப்பு வந்தால் அமெரிக்க தூதரக வாசலில் தேவுடு காப்பவர்களில் அவர்களே முதன்மையாக இருப்பார்கள்.

அது சரி, அது அவர்கள் பிரச்சினை, உமக்கென்ன வந்தது என்று கேட்பவர்களுக்கு எனது பதில்:

இப்பதிவு அவர்களைக் குறைகூறி அல்ல. அவர்கள் அப்படித்தான். ஆனால் அதே சமயம் அவர்கள் பதிவுகளை மற்றவர்கள் ஜாக்கிரதையாகவே அவதானிக்க வேண்டும் என்றெடுத்துரைப்பதற்காகவே. ஏனெனில் அவர்களது அறிவுறைகளை அவர்களே நம்புவதில்லை.

இருக்கட்டும், நான் கூற நினைப்பது என்ன?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/28/2006

என் புது முகம்

எதேச்சையாக இந்த பழைய பதிவைப் பார்த்தேன். மீள்பதிவு செய்தேன்.


தர்சன் அவர்களின் தங்கை என் வேண்டுகோளுக்கிணங்கி என் படத்தை சீர்படுத்தியிருக்கிறார். தர்சனுக்கு இந்த ரிக்வெஸ்டை வைத்ததும் அவர் நான்தான் கேட்கிறேனா அல்லது வேறு யாரோவா என்று சிறு குழப்பம் போல. எனக்கு தனி மின்னஞ்சலிட்டு கேட்டு தெளிவு செய்து கொண்டார். நான் மிகவும் ரசித்தேன் என் புது முகத்தை. நீங்களும் பாருங்கள். குழந்தைகள் பயந்து கொண்டால் கொழுமோர் காய்ச்சிக் கொடுக்கவும்.

தர்சனுக்கும் அவர் தங்கைக்கும் மிக்க நன்றி. அவர் என்னைப் பேயாக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

எல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/24/2006

நான் ரசித்த ஹிந்தி சீரியல்கள் - 1

ஹம்லோக்:
சமீபத்தில் 1984-85 ல் நான் தில்லியில் வசித்து வந்த போது திடீரென ஃபோன் அடித்தது. சென்னையிலிருந்து எஸ்டிடி. என் மைத்துனன் பேசினான். "டோண்டு, எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டுமே" என்று ஆரம்பிததான். நான் சட்டென்று கூறினேன், இங்க பாருடா, டிவி-லே ஹம்லோக் காண்பிச்சிட்டிருக்கான். இப்போ பேச நேரம் இல்லை. உன் தங்கையுடன் பேசிக் கொள் அவள் எனக்கு விஷயத்தை பின்னால் கூறுவாள்" என்று கூறி, ஒலி வாங்கியை என் வீட்டம்மாவிடம் கொடுத்துவிட்டு சீரியலை பார்க்கச் சென்றேன். அவன் அதற்காகக் கோபித்துக் கொண்டு அடுத்த முறை சென்னை சென்றபோது ரொம்ப நேரம் (5 நிமிடங்கள்) பேசாமல் இருந்துவிட்டு பிறகுதான் பேசினான்.

இங்கே எதற்கு இதை கூறினேன் என்றால், ஹம்லோக் என்ற சீரியலை நான் எந்த அளவுக்கு பார்த்து வந்திருக்கிறேன் என்பதைக் கூறவே. வாரத்துக்கு மூன்று நாள் ஹம்லோக் காட்டப்பட்டது. அது ஒளிபரப்பாகும் நேரங்களில் தில்லி தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கும். அடுத்த நாள் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் முந்தைய நாள் காட்டப்பட்ட எபிஸோடை பற்றி எல்லோரும் காரசாரமாக விவாதம் புரிவார்கள். ஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் திரைப்பட நடிகர் அசோக் குமார் நடந்து முடிந்த பகுதியை அலசுவார். அடுத்த எபிசோடில் என்ன காட்டப் போகிறார்கள் என்பதையும் கோடி காட்டுவார். (அதே சமயம் சென்னையில் முதல் சில எபிசோடுகளில் ஜெமினி கணேசனும், பிறகு வி.எஸ்.ராகவனும் எபிசோடுக்கு முன்னால் அதில் வரப்போகும் நிகழ்ச்சிகளை பற்றி கதை சுருக்கம் அளிப்பார்கள். சீரியல் என்னவோ ஹிந்தியில்தான் வரும்).

பசேஸர் ராமுக்கு மூன்று பெண்கள், பட்கி (பெரிய சகோதரி்), மஜ்லி (நடு சகோதரி), சுட்கி (குட்டி சகோதரி), இரண்டு பிள்ளைகள், லல்லு, நன்னே. பசேஸர் ராமின் மனைவி, பாட்டி, தாத்தா (பசேஸர் ராமின் அம்மா மற்றும் அப்பா). பசேஸர் ராம் ஏற்கனவே ஒரு மனைவியை இழந்தவர். அவர் வழியில் இரண்டு பெண்கள், ஏற்கனவே மணமானவ்ர்கள். ஆனால் முதல் சில எபிசோடுகளுக்கு பிறகு காணாமல் போனவர்கள்.

மேற்கண்ட குடும்பத்தினரை சுற்றியே கதை போகிறது. பாட்டி கூட சில எபிசோடுகளுக்கு பிறகுதான் கதைக்கே வருகிறார். அதே போல வெளிநாட்டு சித்தப்பா (பசேஸர் ராமின் தம்பி), சித்தி மறறும் அவர் குழந்தைகள் ஆகியோரும் நடுவில் வந்து சேருகின்றனர். குடும்பத் தலைவிக்கு திடீரன ஒரு தம்பியையும் அவரது குடும்பத்தினரையும் வேறு கதையில் புகுத்தினர். அதாவது ராக்கி சகோதரன் (உடன்பிறவா சகோதரன்). இந்த குடும்பம் தமிழ்க் குடும்பம். அவ்வப்போது தமிழில் வேறு டயலாக் வரும். தமாஷாக இருக்கும்.

மேலே கூறியவை எல்லாம் கதையில் மிக நாசுக்காகச் சேர்க்கப்பட்டன. தில்லியில் பொருளாதார ரீதியில் கீழ் நடுத்தர குடும்பம். இருப்பது வாடகை வீடு. இந்த குடும்பத்தில் நடக்கும் தினப்படி நிகழ்ச்சிகள். அதுதான் சீரியல். ஒவ்வொரு பாத்திரத்தையும் சிற்பி செதுக்குவதுபோல நன்றாகவே செதுக்கியிருந்தனர். இன்னொரு விசேஷம், இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அதாவது, ஒவ்வொரு எபிசோடிலும் வரும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும் தேதியன்றே நடை பெறுவதாகக் காட்டியிருப்பார்கள். உதாரணத்துக்கு 1985 ஜனவரி 26-ஆம் தேதி அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் அன்று காலை லைவாக காட்டப்பட்ட அணிவகுப்பை காட்டி, அதை குடும்பத்தினர் பார்ப்பதுபோல அமைத்திருந்தார்கள். திடீரென பாட்டி கத்துவாள், "பார் உங்கள் தாத்தாவும் அணிவகுப்பில் போகிறார்" என்று. (அப்பாத்திரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அவரும் அந்த பரேடில் மார்ச் செய்ததாக நிகழ்ச்சி). அதே போல அந்த ஆண்டு தீபாவளியின் போது ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலும் அதே உத்தி. பல எபிசோடுகளில் தினசரி காலண்டரை ஏதாவது ஒரு ஷாட்டில் காட்டுவார்கள். அது எபிசோட் ஒளிபரப்பாகும் தேதியையே காட்டும். இதனால் என்ன ஆயிற்றென்றால், பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாகப் பார்க்கும் உணர்ச்சியைத் தரும். இந்த விஷயமும் அந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

அக்காலக் கட்டத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் சுதீர் தார் அவர்களது கேலிச் சித்திரம் ஒன்று வந்தது. அதில் மீட்டிங் நடக்கும் ஹாலில் அமைப்பாளர்களைத் தவிர பார்வையாளர்கள் இல்லாமல் ஈ அடிக்கும். ஒரு அமைப்பாளர் இன்னொரு அமைப்பாளரைப் பார்த்து பல்லைக் கடிப்பார், "எந்த முட்டாப்பயபுள்ள ஹம்லோக் சமயத்துல இந்த மீட்டிங்கின் நேரத்தை வச்சான்?"

சீரியலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினைகளுக்கேற்ப பிந்தைய எபிசோடுகளை மாற்றி வடிவமைத்ததுதான். முக்கியமாக இந்த பட்கியின் பாத்திரத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லோருக்கும் நல்லது சொல்லும் இந்த பாத்திரம் தனக்கு என்று வரும்போது மட்டும் சுயநலமாக நடந்து கொள்ளும். மக்களுக்கு அந்த பாத்திரத்தின் மேல் ஒரு எரிச்சலே பிற்காலத்தில் வந்தது. அதற்கேற்ப ஒரு எபிசோடில் பக்கத்து வீட்டுக்காரி அப்பாத்திரத்தின் பலவீனங்களைத் தாக்கி, கிழி கிழி என்று கிழித்து தோரணமிடுவார். இதெல்லாம் பார்வையாளர்கள் கொடுத்த எதிர்வினையின் பலனே.

100வது எபிசோடில் பட்கியின் திருமணம் காட்டப்பட்டது. அன்று தில்லி தெருக்களே ஈயடித்தன. கடைக்காரர்கள் கூட கடைகளைப் பூட்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்கள். அவ்வப்போது லாஹூருக்கு பெரிய மனிதர்கள் யாராவது வரும்போது வேண்டுமென்றே ஹம்லோக்கில் சுவாரசியமான நிகழ்ச்சிகளை அமிர்த்தசர் டிவியில் காண்பித்து லாஹூர் நிகழ்ச்சிகளை பிசுபிசுக்க செய்துவிடுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வேறு அவப்போது பொருமுவார்கள். அதே அரசு அதிகாரிகளில் அதற்குப் பின் வந்த "புனியாத்"தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டபோது, அவ்வாறு பொருமாமல் அவர்களும் அந்த எபிசோட்டைப் பார்த்தனர். அது பற்றி அடுத்த பதிவில் மேலும் விவரமாக.

இம்மாதிரி சீரியல்களை முழுதும் ரசித்து பார்க்க எனது ஹிந்தி அறிவு மிகவும் பயன்பட்டது. தில்லியில் இருந்த 20 வருடங்களுமே, வெளியூரில் இருக்கும் எண்ணமே வராதவகையில் கழிந்தன என்பதையும் இப்போது மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/19/2006

நண்பர்களுக்கு நன்றி

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (20.03 hrs IST) ஹிட் கவுண்டர் 99,981 காண்பிக்கிறது. இதை முடிக்கும்போது ஒரு லட்சம் தாண்டி விடும். ஹிட் கவுண்டர் போன ஆண்டு ஜூலையில் வலைப்பூவில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 17 மாதங்கள்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எனது யோம் கிப்பூர் பதிவுகள் சமயத்தில் ஒரு நாளைக்கு 1000-க்கு மேல் ஹிட்கள் இருந்தன.

இப்போது நேரம் 20.07, கவுண்டர் காண்பிப்பது 99,986. இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பதிவு போடுகிறேன். நெருப்பு நரியில் வலைப்பூவை திறந்துள்ளேன். அதிலிருந்துதான் ஹிட்கள் பார்க்கப்படுகின்றன.

ஹையா, ஹிட்கள் 1,00,001 (நேரம் 20.45hrs. IST). சோடா சாப்பீட்டு வருவதற்குள் லட்சத்தை தாண்டி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தி. நகர் மகாத்மியம்

மதுசூதனன் அவர்களது இப்பதிவில் தி.நகரைப் பற்றி வந்துள்ளது. ஆங்கிலத்தில் வந்துள்ளதை இங்கு தமிழில் தருகிறேன்.

இந்த மார்கழிப் பனியிலும் உங்களுக்கு வியர்க்கிறதா? நடைபாதையில் போக்குவரத்து நெருக்கடி? ரெயில்வே ஸ்டேஷன் ஓய்வு அறையில் உள்ள கழிப்பிட நாற்றத்தையும் மிஞ்சும் நாற்றத்தை உணர்கிறீர்களா?

மேலே உள்ள எல்லா கேள்விகளுக்கும் உங்கள் விடை ஆமாம் என்றிருந்தால், நீங்கள் தி.நகருக்கு வந்துள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவாகுக. தி.நகர் நமது பால்வெளிவீதியில் உள்ள ஒரு தீவிர ஷாப்பிங் பகுதியாகும். இங்கு ஷாப்பிங் செய்ய உங்களுக்கு தேவைப்படுவது அசாத்திய பொறுமை மற்றும் இந்த இடத்தை ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள் தெரிவு செய்வதற்கான அபார முட்டாள்தனம். இங்கு இருக்கும் எல்லா கடைகளிலும் புகுந்து சாமான்களை வாங்க முயன்றால், கி.பி. 2020-க்கு முன்னால் வெளியில் வர இயலாது.

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியதை கூறும் நோக்கத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

1.தி.நகர் எங்குள்ளது?
இந்தக் கேள்விக்கு சரியான விடை அறிந்தவர் இலர். சென்னையில் உள்ள இந்த அழகிய இடத்துக்கு மறுமுறை நீங்கள் வர எண்ணினால், கீழ்பாக்கத்து மனநிலை மருத்துவமனையில் ஜன்னலோர பெட் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். விடுமுறை பேக்கேஜ் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

2. மூன்றாம் முறையும் நான் அங்கு வந்தால்?
ஏர்வாடியில் சேது விக்கிரமுக்கு பக்கத்து தூணில் சங்கிலியுடன் கட்டப்படுவீர்கள். விடுமுறை பேக்கேஜில் சங்கிலியின் விலையும் அடக்கம்

3. ஆனால் அழகிய இடம் என்று சொன்னீர்களே? இங்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் உள்ளனரா?
ஒரு மாதிரி அப்படித்தான். இது சென்னையின் தற்கொலை முனையாகவும் கருதப்படுகிறது.

4. இங்கு ஷாப்பிங் செய்ய இயலுமா?
இங்கு செய்யக் கூடிய காரியங்கள் இரண்டேதான். ஒன்று ஷாப்பிங் மற்றது செத்துப் போதல். முந்தையது மட்டும் என்னவோ உங்கள் சாய்ஸில் வரும், பின்னது இல்லை.

5. என் வீட்டம்மா சில பட்டுப் புடவைகள் வாங்க விரும்பறாங்க. அவங்களை எங்கே அழைத்து செல்லலாம்?
அவங்களை போத்தீசுக்குள்ளே தள்ளி விட்டுட்டு எகிறி குதிச்சு எஸ்கேப் ஆயிடுங்க. அப்போத்தான் பிற்காலத்திலே சுயமரியாதையோடு வாழ முடியும்.

6. நான் ஓடாம அங்கேயே இருந்தாக்க?
பீஹார் தேர்தல்லே பங்கு பெறும் எல்லா தகுதியும் உங்க கிட்டே இருக்கு.

7. நானும் கடைக்குள்ளே போனாக்க?
உங்க பேர் அண்ணாமலைன்னு இருந்தால் வெளியில் வரும்போது நீங்க அரோஹரா ஆகிடுவீங்க.

8. அங்கே சில கடைகளிலே தங்கம் பயங்கர சீப்பாமே?
விலை மட்டுமே சீப்பா இருக்காது. ஒரு வேளை ரங்கநாதன் தெரு அண்ணாச்சி கடையை பற்றி கேக்கறீங்களா?

9. ஆமாமாம். அங்கே எப்படி போறது?
அந்தத் தெருவோட ஒரு முனையிலே நிந்துக்கோங்க. கண்ணை மூடிக்குங்க. முழிச்சுப் பாத்தா கடைக்குள்ளே நீங்க. மத்த வாடிக்கையாளர்கள் உங்களை அங்கே தள்ளிண்டே போய் சேர்த்துடுவாங்க.

10. என் வண்டியை எடுத்துட்டு போகலாமா?
வாயைக் கழுவுங்க. லாலு பிரசாத் யாதவுக்கு கூட அந்த துணிச்சல் வராது.

11. அப்படியா? அங்கே கூட்டம் அதிகமோ?
ஆமாம். சுத்தி இருக்கறவங்களை நீங்க எண்ணி முடிக்கறதுக்குள்ளே ஜுனூனை ரெண்டு தடவை ஒளிபரப்பிடலாம்.

12. ஜுனூனா? அது யார் அல்லது என்ன?
கடவுளே. தெரியாதா உங்களுக்கு ஜுனூனை பற்றி? பாத்ததில்லையா இதுவரை அதை நீங்க? அது என்னவோ பெரிய சீரியல். அதில் பேசுவாங்க மாத்தி மாத்தி மொழிபெயர்த்த தமிழிலே.

13. சரி இருக்கட்டும். தி. நகர்லே ஆண்களும் ஷாப்பிங் செய்யறாங்களா?
புத்திசாலி ஆண்கள்னா செய்ய மாட்டாங்க. கல்யாணமான ஆண்கள்தான் செய்வாங்க.

14. அங்கே நிறைய நடைபாதை கடைகள் இருக்குன்னு கேள்விப்படறேனே?
நடைபாதையா? அது எங்கே இருக்கு? ஆனா கடைங்க இருக்கு.

15. சரி தொலையட்டும். பொருட்கள் எப்படி இருக்கும்?
நிஜம்மாவே நல்லா இருக்கும். குறைஞ்ச விலையிலே எல்லா பிராண்டுகளும் கிடைக்கும். Nykee, Ribok, Adeedas, இன்னும் இப்படி பல பிராண்டுகள்.

16. ஏம்பா இதெல்லாம் போலி மாதிரி இருக்கே? ஸ்பெல்லிங் வேற தப்பு தப்பா இருக்கு!
அப்படியில்லை சார். நியூமராஜிபடி இருக்கு ஸ்பெல்லிங், அவ்ளோதான்.

17. சரி, சரி. அங்கே ஏதாவது நல்ல ஹோட்டல் இருக்கா?
இருக்கே, சரவணா பவன்.

18. ஹை! 50 ரூபா கொடுத்தா இங்கே என்ன கிடைக்கும்?
நிறைய கிடைக்குமே. பாதி தோசை, சின்ன சொப்பிலே சாம்பார், சில பொடி கற்கள்.

19. பொடி கற்களா? ஏன், ஏன், ஏன்?
என்ன சார் குழந்தை மாதிரி கேட்டுண்டு. காக்கா, பானை மற்றும் அதில தண்ணி கதை கேட்டதில்லையா நீங்க? கல்லைப் போட்டாத்தானே சாம்பர் சொப்பில் மேலே வரும்?

20. அப்ப சட்னி?
கதவு கிட்ட பெரியா பாத்திரத்துலே சட்னி இருக்கும். அதை வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு ஓடிடணும்

21. அடேடே ரொம்ப மோசம்தான் நிலைமை. ஆனா அங்க ஹாட் சிப்ஸ் கூட கிடைக்குமாமே?
ரங்கநாதான் தெருலே நுழைஞ்சா நீங்களே ஹாட் சிப்பா மாறிட போறீங்க. அப்போ தனியா எதுக்கு ஹாட் சிப்ஸ் எல்லாம்?

22. தி. நகர்லே சுற்றுப்புற சூழல் எப்படி?
அங்கே போய் நீளமா மூச்சை இழுங்க. உடனே சாவு நிச்சயம். இல்லேன்னாக்க பணம் வாபஸ்.

23. இவ்ளோ பிரச்சினைகளா அங்கே? கடைசியா ஒரு கேள்வி. தி.நகரின் சிறப்பு என்ன?
வெரைட்டிதான். அவ்ளோ கடை, அவ்ளோ வகை உடைகள், இன்ன பிற சமாசாரங்கள். வேறு எந்த முறைலே சாகாம தப்பிச்சாலும் கொழப்பத்திலேயே செத்துடுவீங்க!

நன்றி மதுசூதனன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்றுவது?

டோண்டு ராகவனது இந்த மீள்பதிவுக்கு தூண்டுகோல் எஸ்.கே. ஐயாதான். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. அவர் எனது இந்தப் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம்தான் காரணம்.

தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மொழி பெயர்க்கக் கூடாது என்னும் எண்ணம் இப்போது கோலோச்சுகிறது. இக்கேள்வி என்னைப் பொருத்தவரை தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் அல்லது பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பதை குறிக்கும். தமிழ் ஆங்கிலம் இரண்டும் என்னைப் பொருத்தவரை தாய்மொழி ஸ்தானத்தில் உள்ளன. ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் சிலர் கேட்கிறார்கள்.

இது ஒரு நல்ல கேள்வி. ஏன் கூடாது என்பதற்கான வாதங்களை முதலில் வைக்கிறேன்.

முதலில் ஒன்றைக் கூறி விட வேண்டும். இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த எதிர்ப்பு கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சரியே. ஆகவே அதை முதலில் பார்ப்போம்.

இவற்றில் மொழியின் நெளிவு சுளிவுகளுக்கு அதிக இடம் உண்டு. உதாரணம் ஹாரி பாட்டர் புத்தகங்கள்.

என்னைப் போன்ற மொழி பெயர்ப்பாளர்கள் தலைகீழாக நின்றாலும் அதன் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பை அவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது.

அதே போல விளம்பர வாசகங்களையும் கூறலாம். "இது என்னப் புதுக் கலர்" என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொருவராகக் கிழே விழுந்து துணிகளை அழுக்காகிக் கொள்வார்கள். அருமையான தமிழாக்கம். ஹிந்தியில் கேட்கவே வேண்டாம். அவ்வளவு அற்புதம். அதே போல "எல்லோரும் உஜாலாவுக்கு மாறிவிட்டார்கள்" என்ற வாசகமும்தான்.

தாய் மொழிக்காரர்களால்தான் இது முடியும். இங்கும் கிட்டத்தட்ட என்றுதான் கூறினேன். ஏனெனில் மேலே கூறியது எப்போதும் பொருந்தாது.

உதாரணத்துக்கு மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன் அவர்கள் ஜெர்மனில் மொழி பெயர்த்த அகிலனின் கதையை எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிப்பில் குறிப்பிட்டுள்ளேன். (தேசிகன் என்னும் மாமனிதர்). (இதுவும் மீள்பதிவு செய்யப்பட உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் கூறுவேன்).

நிச்சயமாக ஒரு ஜெர்மானியனால் இக்கதையை மொழி பெயர்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழறிவு பெற்ற ஜெர்மானியர் கிடைப்பது அரிது. அவ்வளவுதான்.

தொழில் நுட்பங்களை உள்ளிட்டுக் கலைச் சொற்கள் மிகுந்த ஒரு கட்டுரையை மொழி பெயர்க்க மொழியறிவு மட்டும் போதாது. விஷய அறிவும் வேண்டும்.

அப்போது கூட ஒன்று கூறுவேன். மொழியறிவு மற்றும் விஷய அறிவும் சேர்ந்து அமையப் பெற்றால் தாய் மொழியில் மொழி பெயர்ப்பவர்கள் அதிகம் ஆதரிக்கப்படுவர்.

ஆனால் இங்கு விஷய அறிவுக்கு முக்கியத்துவம் அதிகம். என்னுடைய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் நான் 12 வருடம் வேலை செய்த ஐ.டி.பி.எல்லில் பிரெஞ்சுக்காரர்கள் கிடையாது. ஆகவே கம்பெனி இந்திய மொழி பெயர்ப்பாளர்களுடன் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

அதில் எனக்கு முன்னால் இருந்தவரால் ஈடு கொடுக்க முடியவில்லை நான் ஈடு கொடுத்தேன். ஏனெனில் நான் ஒரு பொறியாளன் கூட. முன்னவர் வெறுமனே பிரெஞ்சில் எம்.ஏ. அவ்வளவுதான். என் மொழிபெயர்ப்பு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது.

ஆனால் தற்சமயம் இணையத்தின் உதவியால் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பு வேலை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆகி விட்டது. ஆகவே இப்போதைய நிலையில் தாய் மொழியிலிருந்து அன்னிய மொழிக்கு மாற்றம் செய்வது அவ்வளவாக ஆதரிக்கப்படுவதில்லை.

இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் இன்னும் அதைச் செய்கிறோம். காரணம் என்ன? விலைதான் அது.

ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு மொழி பெயர்ப்பாளர் ஒரு இந்திய மொழி பெயர்ப்பாளரை விட பல மடங்கு பணம் அதிகம் வாங்குவார். அங்கு விலைவாசி அப்படி. பணமும் அன்னியச் செலாவணியில் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே நாங்கள் இங்கும் தேவைப் படுகிறோம்.

வீரமாமுனிவர் என்னும் மாமனிதர் இத்தாலியப் பாதிரியார். தமிழ் கற்றுக் கொண்டு விவிலிய வேதத்தை தமிழில் மொழி பெயர்த்தார். பாராட்டத் தக்க முயற்சி. ஆனாலும் கண்ணதாசன் அவர்களால் எழுதப் பெற்ற ஏசுவின் கதையைப் போல சரளமானத் தமிழில் இருந்திருக்காது.

இங்கும் கால தேச வர்தமானங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. வீரமாமுனிவர் காலத்தில் மேல் நாட்டு மொழிகள் அறிந்த தமிழர்கள் மிகக் குறைவு. ஆகவே அப்போதைக்கு அவர் மொழி பெயர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அது இப்போது பிரார்த்தனை நூல் ஆனதால் இப்போது அதை மாற்ற யாருக்கும் ஆசை வராது. இங்கு மொழியின் நெளிவு சுளிவுகளூக்கு மேலாக மற்றக் கருத்துக்கள் ஆட்சி செய்கின்றன.

இன்னும் ஒன்று கூறுவேன். நாம் எழுதுவது இந்திய ஆங்கிலம். அதில் எழுதுபவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிக்காரர்கள். ஆகவே அவர்கள் எழுதும் ஆங்கிலம் அவர்கள் தாய்மொழியால் பாதிக்கப்பட்டிருக்கும். எஸ்.கே. ஐயா எழுதிய "The world is not dark just because the cat has closed it eyes!!" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதை பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட தமிழ் மொழி தெரிந்த டோண்டு ராகவன் போன்றவர்களே சிறந்தவர்கள்.

ஆக இக்கேள்விக்கு பதில் எளிதானதல்ல. மொழி பெயர்ப்பாளர்களின் இணையத் தளங்களில் இது பற்றிய விவாதங்கள் இப்போதும் சூடு பறக்க நடந்துக் கொண்டிருக்கின்றன.

See:

http://www.proz.com/post/134603#134603

I am the Raghavan, whose posting is highlighted in the above link. Do read the other posts too in that thread.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/17/2006

புதிர்கள் புதுசு - 3

"புதிர்கள் புதிசு - 2" போட்டு பல நாளாச்சு. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, விடையளிக்கப்பட்டவைக்கு பதிலாய் சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. உலகம் முற்றும் சுற்றினாலும் இது மட்டும் ஒரு மூலையிலேயே இருக்கும்.

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> -->

3. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

4. பேசினாலே இது கலைந்து விடும். அது என்ன?

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட, அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் வேங்கை மாதிரி ஓடி விட்டார்.

7. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

8. அபீதகுசலாம்பாளின் அன்னைக்கு மூன்று பெண்கள். ஒருத்தியின் பெயர் சித்திரை, இன்னொருத்தி வைகாசி. மூன்றாமவள் பெயர் என்னவாக இருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

எந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ

"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயிற்று. வேறு காண்டக்ஸ்ட் ஏதும் இல்லாமல் கேட்டபோதே இந்த நிலை. வைதவ்யம் அடைந்த அப்பெண், அவளது பெற்றோர்களின் துயரம் ஆகியவற்றை மனம் தன்னையறியாமலேயே கற்பனை செய்யத் தொடங்கி விட்டது.

இதன் பின்புலம் புரியாதவர்களுக்காக இப்போது கடந்த புதனன்று நடந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து கூறுவேன்.

கிழக்கு பதிப்பகம் இலக்கிய மொழி பெயர்ப்பாளர்களுக்காக ஒரு கலந்துரையாடலை எல்டாம்ஸ் ரோடில் உள்ள பார்வதி மினிஹாலில் ஏற்பாடு செய்திருந்தது. இது பற்றி ஹிந்து பத்திரிகையில் அதற்கு முந்தைய நாள் அறிவிப்பு வந்தது. நம்ம பத்ரியை உடனே தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் கலந்துரையாடலுக்கு இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் பலரை எதிர்பார்ப்பதாகக் கூறினார். யோசித்தேன். நானும் இது வரை தொழில்நுட்ப எழுத்துக்களை மட்டுமே மொழி பெயர்த்து வந்திருக்கிறேன். கதைகளை தொழில் முறையில் மொழி பெயர்த்ததில்லை. போன மாதம் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் நண்பர் பால பாரதி அவர்கள் நான் ஏன் நாவல்களை மொழிபெயர்க்கக் கூடாது என்று கேட்டதற்கு அப்போதைக்கு அது ஒரு வேலை என்ற கணக்கில் என்னிடம் வராதவரை நானாகவே மெனக்கெட்டு ஒரு நாவலை மொழி பெயர்ப்பதற்கில்லை என்று கூறி விட்டிருந்தேன்.

இருப்பினும் மனதில் இது ஒரு எண்ண அலையை உருவாக்கி விட்டது, ஏன் அதை முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று. அதற்கேற்றாப்போல் அந்த சந்திப்பிற்கு முன்னமேயே Jerome K.Jerome எழுதிய "Three men in a boat, not to say of the dog" என்ற புத்தகத்தை விளையாட்டாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தேன். அதன் நாலாம் அத்தியாயம் இங்கே.

மேலும், என் மனைவியின் அத்தையின் கணவர் திருக்குறள் பரிமேலழகர் உரை சார்ந்து ஒரு ஆங்கில நூலை வெளியிட இருப்பதாகவும், அதை நான் சரிபார்த்து தட்டச்சிட வேண்டும் என்று அதிகாரபூர்வமாக வேலை கொடுத்தார். (அதற்கான முன் காசோலையை நேற்றுத்தான் அனுப்பியதாக தில்லியிலிருந்து தொலைபேசி மூலம் இப்போதுதான் தெரிவித்தார்). இந்த வேலை பற்றி இன்னொரு பதிவில்.

நான் புதன் அன்று காலை ஒன்பதரை மணியளவில் கலந்துரையாடல் நடக்கும் இடத்திற்கு செல்லும்போது ஏற்கனவே ஆரம்பமாகி இருந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பதில் இருக்கும் சில சங்கடங்களை பேச்சாளர் எடுத்துரைத்தார். அப்போதுதான் "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்னும் வாக்கியம் கூறப்பட்டது. தமிழர்களுக்கு உடனுக்குடன் பொருள் புலப்பட்டுவிடும் இந்த வாக்கியம் ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஒருவருக்காக எவ்வாறு மொழி பெயர்ப்பது. என்பதை வைத்துத்தான் பேச்சு. அதைக் கேட்ட உடனேயே என்னுள்ளே இருக்கும் மொழி பெயர்ப்பாளன் மனதுக்குள்ளேயே வேகமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். அந்த வாக்கியத்தை பதிவின் கடைசியில் தருகிறேன்.

கலந்துரையாடலுக்கு சிறப்பு விருந்தினர் ஜெயகாந்தன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி. அவர்களை நான் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஜெயகாந்தனின் புத்தகங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அங்கு வந்திருந்தார். அவருடன் பேச விருப்பமா என்ற கேள்விக்கு ஜெயகாந்தன் தேவையில்லை என்று கூறிவிட்டார். அவரைப் பொருத்தவரை தான் ஒருமுறை ஒரு கதையை எழுதிவிட்டால் அது எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்பதில் தனக்கு சுவாரசியம் இல்லை எனக் கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் இஸ்ரவேல எழுத்தாளரான Ephraim Kishon பற்றியும், அவரது ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர் Friedrich Torberg பற்றியும் என் எண்ணங்கள் எழுந்தன. அவர்களை பற்றி பேசலாம் என எண்ணியபோது ஜெயகாந்தன் அவர்கள் மேலே பேச ஆரம்பித்ததால் பிறகு கூறலாம் என்று விட்டு விட்டேன். பார்வையாளர்கள் அவர்கள் அறியாமலேயே இஸ்ரேல் சம்பந்தப்பட்ட எனது உரையிலிருந்து தப்பித்தனர். இங்கே அதை பற்றி கூறிவிடுகிறேன்.

Ephraim Kishon ஒரு ஹங்கேரிய யூத எழுத்தாளர். இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கு பிறகு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர். மத்திய ஐரோப்பாவை சேர்ந்த அவருக்கு பல ஐரோப்பிய மொழிகள் தாய் மொழி அளவுக்கு சரளமாக வரும். இஸ்ரேலுக்கு வந்ததும் ஹீப்ரூவில் எழுத ஆரம்பித்தார். அவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்படும். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்ப்பார். அந்த மொழியில் தானே எழுதியிருந்தால் எப்படியிருக்குமோ அதே மாதிரி தோர்பெர்க் மொழிபெயர்த்துள்ளார் என்று கிஷோன் அழுத்தம்திருத்தமாகக் கூறுவார். ஒரு மொழிபெயர்ப்புக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்கவே முடியாது என்பது இன்னொரு மொழிபெயர்ப்பாளனான எனக்கு தெரியும். தோர்பெர்க் மரணத்துக்கு பிறகு கிஷோனே தனது புத்தகங்களின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பை செய்தார்.

இப்போது கலந்துரையாடலுக்கு போவோமா. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நடுவில் கலாசார இடைவெளி மிகப் பெரியதுதான். அடிக்குறிப்புகள் கொடுப்பதை பலரும் விரும்பவில்லை. அது கதையின் போக்கை தேக்கிவிடும் என்று பலரும் கருதினர். அடிக்குறிப்பு எண்களை அங்கங்கே தந்துவிட்டு, விளக்கங்களை கடைசியில் கூறலாம் என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை நன்றாகத்தான் இருந்தது. தமிழர்கள், ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது என்றிருப்பவர்களுக்கு இக்குறிப்புகள் தேவையிருக்காது என்றும் கூறப்பட்டது. ஆகவே ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் டார்கெட் வாசகர்கள் யார் என்பதையும் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணமும் முன்வைக்கப்பட்டது.

நடுவில் என் செல்பேசி "அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்: என்று ஒலிக்க ஆரம்பிக்க, வெளியில் வந்து பார்த்தால் சகபதிவர் சுவனப்பிரியன் அழைத்திருக்கிறார். எதிர்பாராத போனஸ். அவரது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

தேனீர் இடைவேளை சமயத்தில் இ.பா. அவர்களுடன் சிறிது பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் எழுதிய "ஔரங்கசீப்" நாடகம் தில்லியில் மேடையேற்றப்பட்ட சமயம் அதில் ஷாஜஹானாக என் மனைவியின் அத்தையின் கணவர் (மேலே குறிப்பிடப்பட்ட திருக்குறள் வேலை தந்தவர்) நடித்ததை அவரிடம் கூறினேன். இ.பா.வும் என் அத்தையின் கணவரைத் தெரியும் என்று கூறினார்.

இடைவேளைக்கு பிறகு ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் திருமதி கௌரி நாராயணன் பேசினார்கள். பின்னவர் கல்கியின் எழுத்துக்களை மொழிபெயர்த்தவர். (அவர் பேத்தி என்று நினைக்கிறேன், தவறாயிருப்பின் யாராவது திருத்தவும்). கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டனர். ஒரு ரெஜிஸ்தரில் தத்தம் விவரங்களை பதித்தனர். நானும்தான். 12 மணி அளவில் கூட்டம் முடிந்தது.

இப்போது மேலே கூறிய "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற வாக்கியத்துக்கான எனது மொழிபெயர்ப்பு: "It should really have been an inauspicious moment, when she was married. She returned a widow to her parents, next month itself".

இதே வாக்கியத்துக்கான வேறு விதமான மொழிபெயர்ப்புகளை எதிர் நோக்குகிறேன். இந்த வாக்கியம் எந்த புத்தகத்தில் என்ன சூழ்நிலையில் வந்தது என்பது தெரியாது. கதையில் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது கதாசிரியர் இதை எழுதியிருக்கலாம். அல்லது கதையில், அந்த பாத்திரத்தின் அன்னையோ தந்தையோ மூன்றாமவருக்கு தன் மகளைப் பற்றி கூறும்போது இதை கூறியிருக்கலாம். இன்னும் வேறு சூழ்நிலைகள் இருந்திருக்கலாம். சூழ்நிலைக்கேற்ப வாக்கியங்களும் வேறுபடும்.

இந்தத் தருணத்தில் ஒரு ஹிந்தி சிறுகதை நினைவுக்கு வருகிறது. ஹிந்தி தலைப்பு: "உஸ்னே கஹா தா". அக்கதையை இரு மொழிபெயர்ப்பாளர்கள் தனித்தனி முயற்சியாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார்கள். ஒரு தலைப்பு "அவன் சொன்னான்", இன்னொரு தலைப்பு "அவள் சொன்னாள்". ஹிந்தி தலைப்பு இரு மொழிபெயர்ப்பையும் ஒத்துக் கொள்ளும். இந்த விஷயத்தை நான் தில்லியில் Indian Scientific Translators Association-னின் கருத்தரங்கில் போட்டு உடைக்க, ஒரு ஜப்பானிய மொழிபெயர்ப்பாளரும் ஒரு ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளரும் (இருவரது தாய்மொழியும் ஹிந்திதான்) இது குறித்து பத்து நிமிஷங்கள் காரசாரமாக விவாதம் செய்து குடுமிப்பிடி சண்டை செய்ய, நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஸ்ரீவாஸ்தவ் "பத்த வச்சுட்டயே பரட்டை" என்று கூறுவது போல என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆனி இரண்டாம் தேதி, 1965

ஒரு பிறப்பு சான்றிதழை ஈழத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்து கொண்டிருக்கிறேன். அதில் விண்ணப்பதாரரின் பிறந்த திகதி ஆனி இரண்டாம் தேதி 1965 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சமமான ஆங்கில தேதி தேவை. தமிழ்நாட்டில் நாங்கள் சித்திரை முதல் தேதி ஏப்ரல் 14 என்று வைத்து கொண்டுள்ளோம். அப்படியென்றால் ஆனி இரண்டாம் தேதி என்பது ஜூன 14/15 ஆக இருக்கும். ஈழத்திலும் அப்படித்தானா?

ஏன் அப்படி கேட்கிறேன் என்றால், சில ஈழ பதிவர்கள் ஜனவரியை சித்திரை என்று குறிப்பிட்டதாக ஞாபகம். எந்த பதிவர் என்பதை மறந்து விட்டேன். ஆக, ஈழத்தில் வழமை என்ன என்று யாராவது ஈழப் பதிவர்கள் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன். முக்கியமாக ஆனி இரண்டாம் தேதி 1965 ஆண்டு என்பதின் ஆங்கிலத் தேதி என்ன?

இது மிக அவசரமாக தேவைப்படும் உதவி.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/15/2006

ஈவேரா அவர்கள் சிலை விவகாரம்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

சமீபத்தில் 1961-ல்ல் திரையிடப்பட்ட "பார்த்தால் பசிதீரும்" படத்தில் கவியரசு எழுதிய இந்தப் பாடல் கூறுவதை விடவா இந்த டோண்டு ராகவன் கூறிவிட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 7

இதற்கு முந்தையப் பதிவை இங்கே பார்க்கலாம்.

நான் போன பதிவில் கூறியதை இங்கு விளக்குகிறேன். அங்கு கூறியது: "இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது."

மேலாண்மை பற்றி எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு அடிநாதம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதாவது வேலையை பங்கிட்டு தருதல். எல்லா வேலையையும் அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்பது போல தலைவனே செய்து கொண்டிருக்க முடியாது. திருவள்ளுவரும் அது பற்றி ஒரு குறள் எழுதியுள்ளார், "இதனை இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று. (குறள் சரியாக எழுதப்படாவிட்டால் தயவுசெய்து யாராவது திருத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்).

இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். அறுபதுகளின் துவக்கம் வரை காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருந்ததென்றால், மத்தியில் பொதுக் குழு, அந்தந்த மாநிலங்களுக்கு தனிக்குழு என்றிருக்கும். தமிழக காங்கிரசுக்கு காமராஜ் அவர்களது அற்புதத் தலைமை வாய்த்திருந்தது. அவரது உச்சக்கட்ட காலத்தில் அதிருப்தியினர் கோஷ்டி என்று அவ்வளவாக இல்லை. ஏனெனில் அம்மாதிரி கோஷ்டிகளை மத்தியக் குழு எப்போதுமே ஆதரித்ததில்லை. அதுவும் நேரு அவர்களிடம் அது நடக்கவே நடக்காது.

இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது 1963-ல் காமராஜ் திட்டம் என்று வந்து பல காங்கிரஸ் மந்திரிகள் கட்சி வேலைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் காமராஜர். ஆனல் அவர் பொருத்தமட்டில் ராஜினாமா அவராகவே செய்தார், ஏனெனில் திட்டத்தையே அவர் பெயரில், அவரை முன்னிருத்தி கொண்டு வந்திருந்தனர். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தில்லிக்கு சென்றார். அவர் கர்மவீரர். எங்கிருப்பினும் தனது தனித்தன்மை இழக்காமல் காரியமாற்றக்கூடியவர். ஆனால் இழப்பு என்னவோ தமிழகத்துக்குத்தான்.

அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானவை. 1964-ல் நேரு மறைந்தார். அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது காமராஜ் அவர்கள் திரைமறைவில் திறமையாகச் செயலாற்றி லால்பஹதூர் சாஸ்திரியை பிரதமராகும் பணியில் தன் பங்காற்றினார். சாஸ்திரி அவர்களும் தன் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை பொய்க்காத வண்ணம் கடமையை செய்தார். அவர் 1966 ஜனவரியில் இறந்தது நாட்டின் துர்பாக்கியமே.

இப்போது இருவர் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவர் மொரார்ஜி தேசாய் இன்னொருவர் இந்திரா காந்தி. மொரார்ஜி அவர்கள் பதவிக்கு வந்தால் தங்கள் கட்டுப்பாட்டில் அவர் இருக்க மாட்டார் என்று எண்ணியவர்களில் காமராஜும் ஒருவர். ஆகவே அவர்கள் ஆதரவு இந்திரா காந்திக்கு என்று ஆனது. அப்போது இந்திரா அவர்கள் மிகுந்த பணிவுடன் நடந்து கொண்டார். அவருக்கு மெழுகு பொம்மை என்று பெயர் உண்டு. அவரை தங்கள் கருத்துக்கேற்ப செயல்பட வைக்கலாம் என்பதே அவரை ஆதரித்த தலைவர்களின் எண்ணம். ஆனால் நடந்ததென்னவோ தலைகீழ். இந்திரா காந்தி அவர்கள் மெதுவாக காமராஜரையும் மற்றவரையும் ஒதுக்க ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக 1967-தேர்தலில் காமராஜ் அவர்கள் தோற்றது இந்திரா காந்திக்கு சாதகமாயிற்று. காமராஜ் அவர்கள் பல வகையில் இந்திரா காந்தியால் அவமானப்படுத்தப்பட்டார். 1969-ல் காங்கிரஸை இந்திரா காந்தி தன் சுயநலனுக்காக இரண்டாக உடைத்தார். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான சஞ்சீவரெட்டியின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

1966-ல் ரூபாயின் மதிப்பை குறைத்தபோதே அதை காமராஜ் எதிர்த்தவர். அதே போல பாங்குகள் நாட்டுடைமையாக்கல், மன்னர்களின் ப்ரீவி பர்ஸ் ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் இந்திரா காந்தி அவர்கள் தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே செய்தவை என்பதிலும் காமராஜ் உறுதியாக இருந்தார்.

தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அப்படியே காமராஜ் அவர்கள் வசமே இருந்தது. 1969-ல் கட்சி உடையாது இருந்திருந்தால் 1971 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, எல்லாமே இறைவன் கையில்தானே. பல ஆண்டுகள் தமிழகத்திலிருந்து விலகி இருந்த காமராஜ் அவர்களுக்கு உண்மை நிலை அவ்வளவாகத் தெரியாது போனது துரதிர்ஷ்டமே.

1971-க்கு பிறகு காமராஜ் நிலைமை இன்னும் மோசமானது. ஆனாலும் மனம் தளராது அவர் பணியாற்றினார். ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனம் வந்ததும்தான் அவர் நிஜமாகவே மனம் நொந்து போனார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அதே ஆண்டு காந்தி ஜெயந்தியன்று அவர் மறைந்தார்.

ஆகவே என்னை பொருத்தவரை 1963-ஆம் ஆண்டை ஒரு சகாப்த்தத்தின் முடிவுக்கான ஆரம்பம் என்றுதான் பார்க்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் பார்க்கீறேன். தமிழகத்தில் 1971-க்கு பிறகு காங்கிரஸ் மிகவும் தேய்ந்து போய் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது. அது இன்றைக்கும் அப்படியே உள்ளது. இதற்கு முழுபொறுப்பு இந்திரா காந்தி அவர்களின் செயல்பாடே ஆகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/12/2006

பொன்னியின் புதல்வர் - 1

சமீபத்தில் 1954-ல் கல்கியின் கடைசி தொடர்கதையான அமரதாரா முழுமையடைவதற்கு முன்னமேயே காலன் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டான். நல்லவேளையாக அவர் வைத்திருந்த கதை குறிப்புகளை வைத்து அவர் மகள் ஆனந்தி தொடர்கதையை முடித்து வைத்தார். என்னதான் அவர் முயற்சி செய்திருந்தாலும் கல்கியே எழுதியிருந்தால் போல இருக்குமா?

நேற்று கஸ்தூரி சீனுவாசன் நூலகத்திலிருந்து கல்கியின் வாழ்க்கை வரலாறாகிய "பொன்னியின் புதல்வர்" எடுத்து வந்தேன். எழுதியது சுந்தா அவர்கள். சமீபத்தில் 1974-ல் அது கல்கியில் வாராவாரம் தொடராக வந்தது. அச்சமயம் நான் சுந்தா அவர்கள் வீட்டுக்கு போய் இத்தொடர் சம்பந்தமாக பேசியது பற்றி எனது இப்பதிவில் போட்டுள்ளேன்.

சுந்தா அவர்களிடம் கி.ராஜேந்திரன் கல்கியின் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வேலையில் இறங்கினார். ரொம்ப விஸ்தாரமாகவே தகவல்கள் சேகரித்திருக்கிறார். கல்கி அவர்கள் தன் வாழ்நாளில் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நோட்டு புத்தகங்கள் போட்டுக் கொண்டு விவரங்கள் சேகரித்திருக்கிறார். கல்கி எழுதிய அத்தனை புத்தகங்களையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறார். அவருடைய சமகாலத்தவர்களை விவரமாக பேட்டி கண்டு பல அரிய தகவல்கள் சேர்த்துள்ளார். இப்போதெல்லாம் கூகளில் ஓரிரு க்ளிக்குக்ளில் விஷயம் பெறுகிறோம். அவர் இந்த நூல் எழுதிய காலத்தில் அவையெல்லாம் ஏது? ஒரு டாக்டரேட் என்ன, கல்கியை பற்றி பல விஷயங்களில் பல டாக்டரேட் பெறும் அளவுக்கு அவர் உழைத்தார்.

அவருடன் நான் மேலே கூறிய தருணத்தில் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் அவருக்கும் சிட்டி, கு.ப.ரா. மற்றும் தி.ஜானகிராமனிடம் ஏற்பட்ட விவாதங்கள் "சிறிது வெளிச்சம்" என்ற வாசகர் வட்ட வெளியீட்டு புத்தகத்தில் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு பிறகு தனது அடுத்த வீட்டுக்காரரிடம் போய் என்னை தருவிக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த மனிதரும் எனக்கு தகவல் அனுப்பி உடனே அவர் வீட்டிற்கு வரச் சொன்னார். என்னவோ ஏதோ என்று நானும் பதறி ஓடி வந்தேன். இருக்காதா பின்னே, அந்த பக்கத்து வீட்டுக்காரர் என் சொந்த பெரியப்பாவாயிற்றே. அவர் வீட்டிற்கு போனால் சுந்தா அவர்கள் முன்னறையில் அமர்ந்திருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட போது என்னிடம் சிறிது வெளிச்சம் புத்தக விவரம் கேட்டிருக்கிறார். அதாவது புத்தகப் பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் நான் வரவழைக்கப்பட்டேன். விஷயத்தை நான் மறுபடி கூற, உடனே கி.ராஜேந்திரனுக்கு ஃபோன் போட, அன்று இரவே புத்தகம் அவர் வீட்டிற்கு வந்து விட்டது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கல்கியின் வாழ்க்கை வரலாறுக்காக அவரும் கி.ராஜேந்திரனும் என்ன செலவை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருக்கிறார்கள்.

இப்போது புத்தக நாயகன் கல்கியிடம் வருவோம். சுந்தா அவர்களது புத்தகத்தை நான் ஆதாரமாக வைத்துக் கொள்ளப் போகிறேன். அப்படியே எனக்கு கல்கி சம்பந்தமாக இருக்கும் ஞாபகங்களும் உதவிக்கு வரும்.

அடுத்த பதிவில் பார்ப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/11/2006

நரகம் என்றால் என்ன?

சமீபத்தில் 1953-ல், எனக்கு ஏழு வயதாக இருந்தபோது என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் நரகம் என்றால் என்ன என்பதை புராணங்களிலிருந்து பல கதைகள் மூலம் விளக்கினான். வடமொழி அவனுக்கு தண்ணீர் பட்டபாடு. சுலோகங்களாக கூறி வேகமாக அவற்றுக்கு பொருள் கூறுவான். நரகம் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் பயமாக இருக்கும்.

அப்போதெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உற்சவ காலங்களில் கோபுர வாசலில் பல ஸ்டால்கள் போட்டிருப்பார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை. கோவிலுக்கு அருகில் தாண்டவராய முதலித் தெருவில் வீடு. திருவிழாக் காலங்களில் அந்த ஸ்டால்கள் பக்கம் சுற்றிக் கொண்டிருப்பேன். ஒரு பயாஸ்கோப் பெட்டியில் காலணா கொடுத்தால் (2 பைசாக்கள்) நரகம் பற்றிய காட்சிகள் காட்டுவார்கள். தீயில் போட்டு வாட்டுதல், எண்ணெய் கொப்பறையில் பொறித்தெடுத்தல் என்றெல்லாம் பார்க்கவே பயமாக இருக்கும்.

பல ஆண்டுகளுக்கு நரகம் என்றால் எனது எண்ணங்கள் மேலே கூறப்பட்டதையே பெரும்பாலும் சார்ந்து இருந்தன. மெதுவாக அவை மாறத் தொடங்கின. கல்லூரிக் காலங்களில் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell என்ற அமெரிக்க பெண்மணி. அவர் புத்தகங்களை வெறியுடன் தேடித் தேடி படித்திருக்கிறேன். அவர் நரகம் பற்றி கூறுவது ஏறத்தாழ கீழ்க்கண்ட முறையில் இருக்கும்.

நம் வாழ்க்கையிலேயே நாம் நரகத்தை அனுபவித்து வருகிறோம். நரகம் என்றால் துன்பங்கள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி ஜெயிப்போம் என்று எந்த நம்பிக்கையும் இல்லாது இருத்தல் என்று கூறி அதை பல மேற்கோள்கள் மூலம் விளக்கினார். அவர் கூற வந்தது கடவுள் நம்பிக்கை இருந்தாலே பெரும்பான்மையான தருணங்களில் ஜெயித்து விடலாம் என்ற உறுதி வந்து விடும் என்பதே. அப்போது நரகம் இனிமேல் இல்லை என்பதுதான் அவர் சித்தாந்தம்.

இதை நான் முதன் முறையாக அனுபவித்தது பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணக்கு பேப்பர் சமயத்தில். தொட்ட கணக்குகள் ஒன்றும் சரியாகவே வரவில்லை. பல சூத்திரங்கள் திடீரென நினைவுக்கு வராமல் போக அவற்றையெல்லாம் வேகமாக டிரைவ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நேர அளவு 3 மணிகள்தானே. கடைசி பெல் அடிக்கும்போதே தெரிந்தது பேப்பர் காலி என்று. அதே போல தேர்வில் தோல்வியுற்று ஓர் ஆண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. நிலைமை சரியாகும் என்றெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. இதுதான் நான் அனுபவித்த முதல் நரகம்.

என் மேலேயே கண்மண் தெரியாத கோபம் வந்தது. அதுவும் கணக்கில் போய் தோல்வியா என்ற எண்ணம் என்னை அறுத்தது. அப்போதுதான் குருட்டாம் போக்கில் எனது முரட்டுவைத்தியத்தை ஆரம்பித்தேன். ஆனால் அது மட்டும் போதாதே. கணக்கு இம்மாதிரி காலை வாரிவிடும் என்பதை நான் எதிர்ப்பார்க்காமல் தெனாவட்டாக இருந்திருக்கிறேன். ஆகவே அதை முதலில் சரி செய்ய என்ன செய்தேன் என்பதை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

கணக்கில் விட்டதை பிடிக்கலாம் என்ற நிலை வந்ததும் நம்பிக்கை வந்தது. கூடவே ஃபெயிலான பௌதிகம் மற்றும் ரசாயனத்தையும் படிக்கும் ஆர்வம் வந்து அதே ஆண்டு அக்டோபரில் வந்த பரீட்சை பாஸ் செய்ய முடிந்தது. கணக்கில் டிஸ்டிங்க்ஷன்.

அடுத்த நரகம் எனது கடைசி வருட பரீட்சை ரிசல்டுகள் வந்ததும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அது ஜூன் 1969. ஐந்தாம் ஆண்டு பரீட்சை ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங்களில் நான் தேறவில்லை - கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிகல் மெஷினெரி. நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைப்பு பாடத் திட்டத்தில் கடைசி 3 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் வாய்ந்தவையாகும். அதில் வரும் மதிப்பெண்களை வைத்துத்தான் எங்களுக்கு கிளாஸ் நிர்ணயம் செய்வார்கள். அதில் முக்கிய கண்டிஷன் மூன்று ஆண்டுகள் படிப்பை சரியாக 3 ஆண்டுகளில் எல்லா பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் இரண்டாம் வகுப்புதான். ஆகவே எனது முதல் வகுப்பு கனவுகள் கானல் நீராயின. ரொம்பவும் நொந்துப் போன நிலையில் இருந்தேன். அடுத்த பரீட்சை நவம்பர் மாதம்தான்.

அப்போதுதான் என் தந்தை என்னிடம் கூறினார், "பரவாயில்லை, இதற்காக ரொம்ப வருத்தப்படாதே. என்னிடம் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் க்ளாஸ் ஆரம்பிக்கப் போவதாக அங்கிருந்து கையேடு வந்திருக்கிறது. சும்மா வீட்டில் டிப்ரஸ்டாக உட்கார்ந்திருப்பதை விட பேசாமல் ஜெர்மன் க்ளாஸில் சேர்வதுதானே" என்று கேட்டார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. அது எப்படி என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்பதையும் அதில் பார்க்கலாம்.

இந்த அனுபவங்கள் எதிரில் போன ஆண்டு எனக்கு நேர்ந்த பெரிய பிரச்சினை என்னைப் பொருத்தவரை நரகம் இல்லைதான். ஏனெனில் முதலில் என்ன செய்வது என்று சற்றே மயங்கினாலும், என்னை ரொம்பநேரம் சோர்வடைய விடாது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்னை ஆட்கொண்டான். என்னென்ன செய்வது என்பதை ஒரு தந்தை குழந்தைக்கு சொல்வதுபோல எனக்கு காட்டினான். அதுவும் கடந்து போயிற்று.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் வருமா? கண்டிப்பாக வரும். ஏனெனில் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆனால் அச்சமயங்களில் என்ன செய்வது என்பதை யோசித்து நாம்தான் செயல்படவேண்டும், ஆண்டவனைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள உழைத்தால் நண்பர்களும் உற்சாகமடைந்து உதவிகள் செய்வார்கள் என்பதும் நிஜம். அதன்றி வெறுமனே அழுது கொண்டிருந்தால் நாம் இப்பதிவிலும் அதற்கு முந்தைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தபடி தவிர்க்கப்பட வேண்டிய நபர்களாகக் கருதப்பட்டுவிடும் அபாயம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/10/2006

சீரியல்கள், சங்கடங்கள்

சோப் ஆபெரா என்று செல்லமாக அழைக்கப்படும் மெகா சீரியல்கள் முதலில் அறிமுகமானது அமெரிக்காவிலேதான். ஐம்பது, அறுபது, எழுபதுகளில் பிரபலமான சீரியல்கள் I love Lucy, Dennis the menace, I love Jeannie, Bewitched, Dallas, Dynasty ஆகியவை. நான் இங்கு பேசப்போவது முழுக்கவும் அவற்றைப் பற்றியல்ல. அவற்றை எடுக்கும்போது எழுந்த சங்கடங்களைப் பற்றியே. உதாரணத்துக்கு Dennis the menace. இது சுமார் மூன்று வயதுடைய சிறுவனின் விஷமங்களை விவரிக்கும். ஆனால் இதெல்லாம் கார்ட்டூன்களில் மட்டுமே சாத்தியமாயிற்று. டைரக்டர் சொல்வதை சரியாக உள்வாங்கி பல எபிஸோட்கள் ஷூட் செய்ய தேவையான குழந்தையைக் கண்டுபிடிப்பது கடினமே. ஆகவே ஒரு வேலை செய்தார்கள். டென்னிசுக்கு வயது 11 என்று கதையை மாற்றினார்கள்.

இது முதல் மாடிஃபிகேஷன். இந்த சீரியல்கள் எல்லா எபிஸோடுகளிலும் வருபவர்கள், டென்னிஸ், அவன் தந்தை, தாய், பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டர் வில்ஸன் அவர் மனைவி மார்த்தா வில்சன் ஆகியோரே. பிற முக்கிய பாத்திரங்கள் ஜோயீ என்ற சிறுவன், டென்னிசுக்கு சிஷ்யன், மார்க்கரெட் என்னும் சிறுமி வயதுக்கு மீறிய அறிவு மற்றும் படிப்புடன், அவ்வப்போது வரும் ஜீனா என்னும் இத்தாலியச் சிறுமி, இவளை மட்டும் டென்னிசுக்கு பிடிக்கும். மார்க்கரெட் போன்ற இதர சிறுமிகள் அவனுக்கு பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்னால் ஐம்பதுகளில் வந்த இந்த சீரியலின் எபிசோட்களை மறுபடி டெலிகாஸ்ட் செய்தார்கள், ஹிந்தி டப்பிங்கில். திடீரென் வில்சன் பாத்திரத்தில் வந்த நடிகர் ஷூட்டிங்கிற்கு வரமுடியாமல் போக, வில்சன் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவர் அண்ணா வேலை விஷயமாக வில்சன் வீட்டுக்கு வந்து தங்குவதாகவும் கதைகள் எடுக்கப்பட்டன. திடீரென அவ்ரும் ஒரு எபிசோடில் இல்லாமல் போக உள்ளூர் மளிகைக் கடைக்காரர் பாத்திரத்தை இந்த பாத்திரத்துக்காக ஒப்பேற்றினர்.

நான் கூற வருவது என்னவென்றால், இம்மாதிரி நடிக நடிகையர் மாற்றம் வரும்போதெல்லாம் மெனக்கெட்டு சிரமம் எடுத்து கதையை எல்லாம் மாற்றினர்.

அதே போலத்தான் ஹிந்தி சீரியல்களிலும். எண்பதுகளில் வந்த "யே ஜோ ஹை ஜிந்தகி" என்ற சீரியலில் முக்கிய நடிகர் ஷாஃபி இனாம்தார் சீரியலை விட்டு சிலகாலத்துக்கு விலக, அந்த பாத்திரம் வெளிதேசத்துக்கு போனதாக கதையை மாற்றி ஒப்பேற்றினர். இன்னொரு சீரியல் "டைகர்". கதாநாயக நடிகரை மாற்ற கையாளப்பட்ட உத்தி தமாஷானது. அதாவது ஒரு விபத்தில் கதாநாயகனின் முகம் சிதைக்கப்பட, பிளாஸ்டிக் சர்ஜெரி செய்கிறார்கள். இப்போது இருக்கும் முகம் புது கதாநாயக நடிகருடையது.

இன்னும் அதிகக் கொடுமை "ஒரு பெண்ணின் கதை" என்னும் சீரியல். அதில் நடித்த நடிகர் பாரி வெங்கட் பஸ் விபத்தில் இறந்துவிட (சீரியலில் அல்ல, நிஜமாகவே), கதையை மேலே எப்படி எடுத்து செல்வது என்ற குழப்பம். சீரியலில் பாத்திரமும் விபத்தில் இறப்பது போலவே காட்டிவிடுகின்றனர். ஆனால் மனைவியாக நடித்த பாத்திரத்துக்கு புத்தி பிசகி விடுகிறதாம். துக்கம் விசாரிக்க வந்தவர்களில் ஒருவரது முகம் அவர் கண்ணுக்கு மட்டும் பாரி வெங்கட்டின் உருவமாகத் தெரிகிறதாம். ஆகவே கணவர் இறக்கவில்லை என்று கூறி அவருடன் வாழப்போவதாக பிடிவாதம் பிடித்து, மருத்துவ ஆலோசனைப்படி மற்றவரும் இந்த நாடகத்துக்கு ஒத்துக் கொண்டு,... இப்படி போகிறது கதை. அதற்குமேல் அந்த சீரியலை பார்க்க பொறுமையில்லை எனக்கு.

ஆனால் இப்போது? சர்வசாதாரணமாக திடீரென ஒரு நாள் பழைய நடிகரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டிவிட்டு மார்ஃபிங் செய்து புது நடிகரின் முகமாகக் காட்டுகின்றனர். கீழே ஒரு அறிவிப்பு: "இவருக்கு பதில் அவர்". தீர்ந்தது பிரச்சினை.

எனக்கென்னவோ இதுவே சரியான, நேர்மையான உத்தியாகத் தெரிகிறது. இம்மாதிரி பல சீரியல்களில் செய்து விட்டார்கள், செய்தும் வருகிறார்கள். உதாரணத்துக்கு: வரம், மலர்கள் (நடிகை வைஷ்ணவியின் மரணத்தால்), அலைகள், கோலங்கள், பல்லாங்குழி, முதலியன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/09/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 6

இதற்கு முந்தைய பதிவு இதோ.

போன பதிவுகளில் சுட்டிய சோ அவர்கள் புத்தகத்தில் குமரி அனந்தன் அவர்கள் எழுதியதிலிருந்து சில தகவல்கள்.

காமராஜ் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்கள் அளித்த MDT 2727 என்ற கார் பல ஆண்டு காலம் உபயோகத்தில் இருந்து வந்திருக்கிறது. மிகுந்த வற்புறுத்தல் பேரிலேயே இக்காரை புது காருக்காக மாற்றிக் கொண்டார். அதன் உரிம எண் கூட 2727தான், ஆனால் வேறு வரிசையில்.

(இந்த சந்தர்ப்பத்தில் சில தலைவர்களின் சில எண்களுக்கான விருப்பத்தைப் பற்றி பல சுவையான செய்திகளை நான், டோண்டு ராகவன், படித்திருக்கிறேன். உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு "ஏழு" ராசியான எண். அவர் கார் நம்பர்கள் எல்லாம் 4777 என்று கூட்டு எண் 7 ஆக இருக்கும். என்ன புது வரிசை பதிவுகள் வந்தாலும் அந்த எண் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும். அவருக்காகவே மராட்டிய மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரை வாங்கினார்கள். அதன் எண் MGR 4777).

மறுபடியும் காமராஜ். 1967-ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவருக்கு முழங்காலில் அடிபட்டது. ஆகவே இனிமேல் வர இருக்கும் தேர்தல்களில் பயன் படுத்துவதற்கு அவருக்காக பல வசதிகளுடன் கூடிய ஒரு வேன் லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு முறை கூட ஏற அவர் மறுத்து விட்டார்.

குமரி அனந்தன் அவர்களது வேதனை நிரம்பிய வரிகள்: "வேனில் ஏறித் தேர்தல் பயணம் செய்வார் என்று எண்ணினோம். ஆனால் அவர் வான் ஏறி தேவருலகு சென்று விட்டார்."

குமரி அனந்தன் அவர்கள் மேலும் கூறுகிறார்.

காமராஜ் அவர்கள் போன இடத்தில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த அமர்ந்து விட்ட பிறகும் அந்த வருவாய்த்துறை அதிகாரி, திரு. ராமதாஸ் என்பவர் நின்று கொண்டேயிருந்தார். அவரும் அமர்ந்தால்தான் தானும் சாப்பிட உட்காரப் போவதாக காமராஜ் அவர்கள் கண்டிப்பாகக் கூறிவிட, அவ்வாறே நடந்தது. இதன் பின்புலன் என்னவென்றால் அந்த ராமதாஸ் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவரை சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என தலைவர் காமராஜ் நினைத்து விட்டார்.

கும்பகோணத்தில் சக்கரவர்த்தி ஐயங்கார் பழைய தியாகி. காமராஜை சந்தித்தால் பாசத்தோடு வேர்க் கடலையை ஒரு காகிதத்தில் சுற்றிய பொட்டலமாகக் கொடுப்பார். காமராஜரும் அதை வாங்கிச் சுவைத்து மிக அன்னியோன்யமாக உரையாடுவார்.

அப்பக்கத்தில் சுற்றுப் பயணம் செய்யும் போது மாலைக்குப் பதிலாகவோ, பிற வகையிலோ தொண்டர்கள் அன்போடு அளிக்கும் பணத்தை வாங்கி சக்கரவர்த்தி ஐயங்காரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறுவார்.

மறுபடியும் டோண்டு ராகவன்.

இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/05/2006

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடிகள்

நான் கூறவருவது நாயக நாயகி ஜோடி அல்ல. வெற்றி நடிகர்கள் இருவரது ஜோடி. இது ஒரு மீள்பதிவு. கமலுக்கு ஷெவாலியே விருது வருவதாக பேச்சு எழுந்துள்ள இந்தத் தருணத்தில் இந்தப் பதிவும் ரெலெவண்ட் ஆகிறது.

சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம். தமிழ்த் திரையுலகில் ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் ஏதாவது இரு நடிகர்கள் நன்குப் பேசப் படுவார்கள்.

பி. யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர்.

முன்னவர் பின்னவரை விட அதிகத் திறமை வாய்ந்த நடிகர். இருந்தாலும் பின்னவருக்கு அதிக முகராசி (charisma?).

அடுத்த இருவர் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியார். அதே மேலே கூறப்பட்ட முன்னவர் பின்னவர் குணதிசயங்கள்.

இப்போது கமல் மற்றும் ரஜினி.

இப்போதைய நிலை சற்றே வித்தியாசமானது. ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு- கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும்.

சிவாஜியின் விஷயத்தில் எம்ஜியார் மாதிரித் தன்னை நல்லவனாக காண்பித்து கொள்ளச் செய்த முயற்சிகள் அனேகமாகச் சொதப்பலாயின. உதாரணம்: உத்தமன். ஆ கலே லக் ஜாவில் சஷி கபூர் மாதிரி லைட்டாக வர இயலவில்லை. ரொம்பவே பொறுமையைச் சோதித்தார். சிவாஜி தன் இயல்பிலிருந்துக் கொண்டு நடித்தப் படங்களே இன்றும் பேசப்படுகின்றன. உதாரணத்துக்கு கப்பலோட்டிய தமிழனில் அப்பாத்திரமாகவே மாறினீர்களா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு, இல்லை, அவ்வாறு நடிக்கத்தான் செய்தேன் என்று உண்மையாக கூறினார். திரும்பிப் பார் என்னும் படத்தில் முழு வில்லனாகவே வருவார். அதற்கெல்லாம் கவலைப்பட்டதேயில்லை.

அதே மாதிரி கமலும் ரஜினியைப் போல் ஸ்டைல் காண்பிக்க முயன்றால் தன் அடையாளத்தை இழப்பது நிச்சயம். அவ்வாறு செய்ய அவர் முயற்சிப்பதில்லை என்பது மனத்துக்கு ஆறுதலைத் தருகிறது. ரஜனி கூட கமல் மாதிரி இப்போதைய நிலையில் எல்லாவித ரோல்களையும் எடுக்க முயன்றால் தோல்விதான் கிடைக்கும். அவருக்கு இருக்கும் இமேஜை விட்டு வெளியே வர இயலாத நிலையிலேயே அவர் இருக்கிறார்.

இந்த இரட்டையர் ஜோடி எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதில்லை. 1977-ல் எம்ஜியார் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற பின்புதான் கமல் ரஜினி ஜோடி வந்தது. இருவருமே இன்னும் களத்தில் இருப்பதால் இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/04/2006

செந்தழல் ரவிக்கு கங்க்ராட்ஸ்

இவ்வார குங்குமம் இதழில் (10.12.2006 தேதியிட்டது, Page 106) நம்ம சகபதிவர் செந்தழல் ரவி அவர்கள் செய்து வரும் பலருக்கு வேலை பெற்றுத் தரும் சேவையை பற்றி வந்துள்ளது. பல பதிவர்கள் இம்மாதிரி சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது. அவருடன் இன்று காலை தொலைபேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பெங்களூரில் குங்குமம் சற்றே லேட்டாக வருவதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. He was pleasantly surprised.

இப்பத்தான் சில நாட்களுக்கு முன்னால் நம்ம பழூர் கார்த்தியை பற்றி இப்பதிவு போட்டேன்.

ஓராண்டுக்கும் மேலாக ஏழை மாணவ மணிகளுக்கு உதவி செய்யும் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல் ரவி மாதிரி இருப்பவர்களால் இக்கால இளைஞர் சமுதாயம் பீடு நடை போடுவது குறித்து இந்த அறுபது வயது சக இளைஞன் டோண்டு ராகவன் மிக மகிழ்ச்சி அடைகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது