2/26/2011

Explain with reference to context

Explain with reference to context (ERC) என்று அழைக்கப்படும் சில வினாக்கள் நான் பள்ளியில் படித்த காலத்தில் மொழி பாடங்களில் கேட்பார்கள். ஒரு வாக்கியத்தை கொடுத்து அதன் இடம் பொருள் ஏவலுடன் விவரிக்கச் சொல்வதே அக்கேள்விகளின் நோக்கம்.

மகத்தான நோக்கம்தான் அது என்பதை நான் இன்றுதான் முழுமையாக உணர்ந்தேன். அதை உணர்த்தியது ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதை சம்பந்தமாக அவரது வலைப்பூவில் வந்த கடிதம்தான்.

தியாகையரின் எந்தரோ மகானுபாவுலு என்னும் கீர்த்தனை மிக பிரசித்தம். பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்று. தியாகையர் ஆராதனை உற்சவத்தில் திருவையாற்றில் பல இசைமேதைகள் ஒன்றாக இருந்து பாடுவதைக் காணக் கண்கோடிகள் வேண்டும். அதே பாடலை மேற்சொன்ன ஜயமோகன் பதிவில் கொடுக்கப்பட்ட யூ ட்யூப் சுட்டியை இங்கு தருவித்து எம்பெட் செய்திருக்கிறேன்.



நாகய்யா தியாகய்யாகவே மாறி இருப்பதை இதைக் கண்டுதான் அனுபவிக்க வேண்டும். 1946-ஆம் ஆண்டு வெளி வந்த அப்படத்தில் இப்பாடல் வந்த பின்னணியை இப்படம் காட்டுகிறது. இங்குதான் அந்த erc என்றால் என்ன என்பது புரிகிறது.

இதற்கு முன்னாலும் இதை பல தருணங்களில் பார்த்துள்ளேன். உதாரணத்துக்கு நடிகர் ராஜேஷ் திருவள்ளுவராக நடித்த சீரியல். அது திருவள்ளுவரின் சரிதம், பொதிகை டிவியில் வந்தது என நினைக்கிறேன். அதில் ஒரு காட்சி. அவரது நண்பனே அவருக்கு நஞ்சளிக்க அவரும் அதை அறிந்தே உண்ணும் காட்சியில் அதற்கான குறளை கூறுவது மிக இயல்பாகவே வந்தது (நானும் தேடிப் பார்த்து விட்டேன், இக்கணம் அக்குறள் சட்டென பிடிபட மாட்டேன் என்கிறது. தெரிஞ்சால் யாராவது சொல்லுங்கப்பூ).

அது போலவே ஒரு சீரியல் மிர்ஜா காலிப். சீரியல் முதல் சுதந்திரப் போர் தோல்வியுற்ற காலத்தில் (1857) இருந்து மிர்ஜா காலிப்பின் பழைய நினைவுகளுடன் ஆரம்பிக்கிறது. அவரது அமரத்துவம் வாய்ந்த பல கவிதைகள், அவரால் கூறப்பட்ட பல வாக்கியங்கள் ஆகியவை அவை இயல்பாக வந்த முதல் தருணங்களை குல்ஜாரின் இந்த சீரியல் அமர்க்களமாக காட்டுகிறது.

ஆயிரக்கணக்கானவர் வெள்ளை அரசால் தூக்கிலிடப்பட்டனர். அப்போது காலிப் மனம் கசந்து கூறினார், “பல பிணங்களை நான் சுமந்தேன். இப்படியே நிலைமை நீடித்தால் நான் இறக்கும்போது என்னைச் சுமக்க யாருமே மிஞ்ச மாட்டார்கள் என அஞ்சுகிறேன்”. இதன் erc-யை இங்கு காணலாம்.



1946-ல் தியாகய்யர் படம் வந்ததாக நான் சொன்னேன் அல்லவா. அப்படத்தைக் காண தன் கணவர் மற்றும் சுமார் மூன்று வயது பெண், 10 மாதங்களே நிரம்பியிருந்த மகன் ஆகியோருடன் சென்றார் ஒரு பெண்மணி. குழந்தைகள் இருவரும் படத்தைப் பார்க்க விடாமல் அழுது ரகளை செய்ய, அப்பெண்மணியின் கணவர் அவற்றை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணிக்கு இது பற்றி கழுத்து மட்டும் குறை. அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அதை அவர்களிடம் கூறியுள்ளார். அப்படத்தின் நல்லனுபவத்தை அனுபவிக்க விடாமல் அந்த துஷ்டப் பையன் எவ்வளவு படுத்தினான் என்பது இப்போதுதான் புரிகிறது.

இந்த டோண்டுவை மன்னித்துவிடு அம்மா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/24/2011

டோண்டு பதில்கள் 24.02.2011

சில கேள்விகள் அடுத்த வார பதிவுக்கு போய் விட்டன.

Surya
கேள்வி-1. கனிமொழி ஸ்ரீலங்கா எம்பசிக்கு முன் போராட்டம் நடத்திக் கைதானார் என்று செய்தி படித்தேன். தந்தை தண்டவாளத்தில் தலை வைத்து தமிழுக்காக உயிரைக் கொடுக்க முன் வந்து மொழி காத்தார். மகள் மனிதாபிமானற்ற மகிந்த ராஜபக்சேயை, மனுநீதிப் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்து கொண்டாடும் சிங்களக் கயவனை, சிங்கம் போல சீறிப் பாய்ந்து தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடி சிறை சென்றார் என்று சில வட்டாரங்கள் அதற்குள்ளேயே செய்தி எழுதத் துவங்கிவிட்டன. இதை எல்லாம் இன்னமுமா நம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்?
பதில்: வின்னரில் வடிவேலு கேட்ட இந்தக் கேள்விக்கு அவரது அல்லக்கைகளில் ஒருவன் கூறிய பதிலே இங்கும்: “அது அவங்க தலைவிதி தலைவா”.

கேள்வி-2. சுப்ரமண்யம் சுவாமிக்கு உச்ச காட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிலர் (ஆர்.எஸ்.எஸ். சார்புடையோர்) கோரிக்கை வைத்துள்ளனர். சுவாமியைப் பார்த்தால் ஒன்றும் பயப்படுகிற மாதிரித் தோன்றவில்லையே! சுவாமிக்கு அம்மா சீட் (ராஜ்ய சபை) வழங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: சுப்பிரமணியம் சுவாமி அரசு பாதுக்காப்பை யோசித்துத்தான் ஏற்பதே நல்லது. அவர் மேல் இருக்கும் எரிச்சலில் 1984 அக்டோபர் 30 மீண்டும் நடந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

கேள்வி-3. ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் வெல்வார் என்று ப.சி. பேசியுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: சிதம்பரம் ஜோக் எல்லாம் அடிக்கிறாரே.

கேள்வி-4. காதலர் தினப் பதிவு ஒன்றும் போடவில்லையே நீங்கள்! ஏன்?
பதில்: ஏற்கனவேயே போட்டு விட்டேனே.

கேள்வி-5. நீங்கள் கர்நாடக சங்கீதம் கேட்பது உண்டா? பிடித்த பாடகர்/பாடகி யார்?
பதில்: அதை சரியாக சீர்தூக்கி கேட்டு எஞ்சாய் செய்யும் ஞானம் எனக்கில்லை. பிடித்த பாடகர் என்று யாரும் இல்லை.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-6. 112 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ள நிலையில் மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
பதில்: மீனவர்கள் கடலுக்கு செல்லும் நேரத்தில் பல ஹெலிகாப்டர்கள் மேலே ரோந்து செய்வது நல்ல பலன் அளிக்கும்.

கேள்வி-7. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார். ராசாவின் 14 நாள் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பதில்: முடிந்தால் நிரூபிக்கட்டுமே, யார் வேண்டாம் என்றார்கள்?

கேள்வி-8. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ராசா தான் எல்லாவற்றையும் செய்தார், அமைச்சரவையில் கூட அது தொடர்பாக அவர் ஆலோசிக்கவில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறை எப்படி அமல்படுத்தப்பட்டது?, ஏன் ஏல முறை பின்பற்றப்படவில்லை? என்பது எனக்குத் தெரியாது-பிரதமரின் பேட்டி
பதில்: பதவி வெறி.

கேள்வி-8. 7 கூன் மாஃப்… ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் படம். ப்ரியங்காவைவிட இதன் இயக்குனர் முக்கியமானவர், விஷால் பரத்வாஜ், மெக்பூல், ஓம்காரா போன்ற அற்புதப் படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தில் ஏழு பேரை திருமணம் செய்து கொண்டவராக வருகிறார் ப்ரியங்கா. அதனால் படத்தின் முழுக் கதையும் இவரைச் சுற்றியே வருகிறது. ப்ரியங்காவின் முதல் கணவராக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். ஹீரோயின் ஓரியண்ட் கதையில் ஏழில் ஒருவராக நடிக்க எப்படி நீல் நிதின் ஒத்துக் கொண்டார்?

பதில்: மாற்றம் என ஏற்படுவது நல்லதுதானே. அவரது ரோலுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுப்பார்களாக இருக்கும்.

கேள்வி-9. பீகாரில் மாலை நேர ‌கோர்ட்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது . முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.
பதில்: வக்கில்களுக்கு இதில் ஆட்சேபணை இருபது வேடிக்கையாக உள்ளது.

ezhil arasu
FOR DONDU'S COMMENT:-
கேள்வி-10. Dr Singh showed us on Wednesday that he will cling to power. That makes him no better than run-of-the-mill politicians. So, as an exercise in image-building, his press conference was a depressing failure.

பதில்: யாருக்கும் வெட்கமில்லை.

கேள்வி-11. The reported statement of an eminent cleric from Gujarat asking Muslims of the state to leave the 2002 riots behind and take advantage of the state's development has unleashed a flurry of arguments and counter arguments.
பதில்: இசுலாமியர்கள் மோதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது குஜராத்துக்கு வெளியில்தான். குஜராத்தில் அங்குள்ள இசுலாமியருக்கு மோதியின் அரசு செய்யும் நல்ல காரியம் தெரியாமலா அவரது கட்சிக்கு உள்ளாட்சி தேர்தல்களில் இத்தனை அமோக வெற்றி கிடைத்திருக்கும்?

கேள்வி-12. P. Chidambaram, Pranab Mukherjee and Digvijay Singh are at least three prime ministerial frontrunners should Manmohan Singh decide to go, unable to face the heat from the 2G and other scams and if Rahul Gandhi declines the hot job.
பதில்: விஜய், அஜீத் மற்றும் மாதவன் நடிக்கும் படத்துக்கு என்ன பெயர்?

கேள்வி-13. When India and Pakistan met in Thimpu to revive the composite dialogue between their foreign ministers this spring, Pakistan asked India to do more against Hindu extremists allegedly responsible for the Samjhauta Express blasts
பதில்: பாகிஸ்தன் முதலில் தன் நாட்டு நிலைமையை சரி செய்து கொள்ளட்டும்.

கேள்வி-14. UPA-2 in the run-up to the budget session of Parliament is plagued by two nightmares: corruption and inflation. And it is acutely aware of them. Prime minister Manmohan Singh, finance minister Pranab Mukherjee, and Planning Commission deputy chairman Montek Singh Ahluwalia expressed their concern over inflation on Friday.
பதில்: 12-ஆம் கேள்விக்கான ப்திலே இங்கும்.

hayyram
கேள்வி-15. இந்த டுபாங்க்ஸ் சாமியார் பற்றி உங்கள் கருத்தென்ன? (டுபாங்க்ஸ் என்னைப் பொறுத்தவரை)
http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_14.html
http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_17.html

பதில்: சாதாரணமாகத்தானே எழுதுகிறார்? தமாஷாக பொழுது போகிறதே.

கேள்வி-16. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறிக்கொண்டே மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொலைகள் பற்றி தங்களது கருத்து?
http://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html

பதில்: இன்னுமா இந்த விஷயத்தில் ஊர் அவர்களை நம்புகிறது?


ரமணா
கேள்வி-18. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நாடாளுமன்ற கூட்டுக் குழு சாதிக்குமா?சமாளிக்குமா?
பதில்: சோனியாவுக்கே தெரிந்த ரகசியம் அது.

கேள்வி-19. இலங்கை தமிழர் நலம் பேசும் திருமாவளவன் காங்,திமுகவுடன் கூட்டணி வேடிக்கையா? வினோதமா?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

கேள்வி-20. வட மாநிலங்களில் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கும் மருத்துவரும் திருவும் பதவி ஆசையில் மீண்டும் ஒரே கூட்டணியில் என்ன உதாரணம் சொல்ல ?
பதில்: ஆசை வெட்கமறியாது.

கேள்வி-21. ஒருவேளை காங் தனியாய் அணி அமைத்தால் விஜய காந்த் எந்தப் பக்கம் சாய்வார் ?
பதில்: தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு மாற்றுத் திறனாளிதான்.

கேள்வி-22. பாஜக, திமுக கூட்டணி சாத்யமானால் சோவின் நிலை?
பதில்: இப்போதைய நிலையில் நாட்டு நலனுக்கு பொருந்தாத கூட்டு என்றுதான் அவர் கூறுவார் என நினைக்கிறேன்.

அடுத்த வியாழனன்று மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/17/2011

யானை டாக்டர் அமரர் கிருஷ்ணமூர்த்தி

ஜெயமோகனுக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை. மனிதர் விடாது தனது இணைய பக்கத்தில் நெஞ்சத்தை அள்ளும் சிறுகதைகாளாக போட்டு வருகிறார். அறம், சோற்றுக் கணக்கு, மத்துறு தயிர், வணங்கான் என்று மூச்சு முட்டவைக்கும் சிறுகதை வரிசையில் இப்போது நான் படித்தது யானை டாக்டர் என்னும் கதையின் மூன்று பதிவுகள். முதல் பகுதியின் சுட்டி இதோ.

இக்கதை உண்மையிலேயே வாழ்ந்து பலரது நினைவுகளில் வாழும் வனவிலங்கு மருத்துவர் அமரர் கிருஷ்ணமூர்த்தியை வைத்தே எழுதப்பட்டுள்ளது. உண்மை புனைவைவிட அதிசயமானது என பொருள்படும் ஆங்கிலச் சொலவடையின் எடுத்துக்கட்டு இந்த கிருஷ்ணமூர்த்தி.

ஜெயமோகன் கூறுகிறார், “தமிழக கோயில்யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித்திட்டம் அவர் முன்வைத்து முன்னின்று நடத்தியதேயாகும். பொதுவாக யானையை பயன்மிருகமாக வளர்ப்பதையும் கோயில்களில் அலங்காரமாக வளர்ப்பதையும் நிறுத்தவேண்டும் என்று கோரிவந்தார்.

இலக்கிய ஆர்வம் கொண்டவர் டாக்டர் கே. அவருக்கு லார்ட் பைரனின் கவிதைகளிலும் சங்க இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று இந்து நாளிதழில் அருண் வெங்கட்ராமன் பதிவுசெய்கிறார்.

2002 டிசம்பர் 9 ஆம்தேதி தன் 73 ஆவது வயதில் மரணமடைந்தார்”.


இப்போது ஜெயமோகனின் யானை டாக்டர் கதையில் என்னைக் கவர்ந்த வரிகள்:

//’புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். .. நீங்க இங்க கருப்பா ஒரு புளியங்கொட்டை சைசுக்கு ஒரு வண்டு இருக்கறத பாத்திருப்பேள். உங்க வீட்டுக்குள்ள கூட அது இல்லாம இருக்காது’ என்றார் ‘ஆமா, அதுகூடத்தான் வாழறதே. சோத்திலகூட கெடக்கும். பாத்து எடுத்துப் போட்டுட்டு சாப்பிடணும்’. டாக்டர் கே சிரித்து ‘அந்த வண்டோட புழுதான் நீங்க பாத்தது..வண்டு பெரிய ஆள். புழு கைக்குழந்தை. கைக்குழந்தை மேலே என்ன அருவருப்பு?’

நான் மேலே பேச முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். ‘எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது. அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்…ஒரு கைக்குழந்தை சாப்பிட சாப்பாட்டை அதோட எடையோட கம்பேர் பண்ணினா நீங்க தினம் முப்பது லிட்டர் பால்குடிக்கணும்…’ என்றார் டாக்டர் கே ‘அதுக்கு அப்டி ஆர்டர். சட்டுபுட்டுன்னு அகப்பட்டத தின்னு பெரிசாகிற வழியப்பாருன்னு….’ புன்னகைத்து ‘கிறுக்கு ஃபிலாசபின்னு தோணறதா?’ இல்லை என்றேன்.//

//ஒருமுறை காட்டுக்குள் நானும் அவரும் சென்றுகொண்டிருந்தபோது டாக்டர் கே கைகளை ஆட்டினார். ஜீப் நின்றது. அவர் சத்தமின்றி சுட்டிக்காட்டிய இடத்தில் புதருக்குள் ஒரு செந்நாயின் காதுகள் தெரிந்தன. அது எங்களை வேவுபார்ப்பதை உணர்ந்தேன். அவர் இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கே இன்னொரு செந்நாய் தெரிந்தது. சில நிமிடங்களில் அந்தக்காட்சி தெளிவாகியது. ஆறு செந்நாய்கள் ஆறு திசைகளிலாக மையத்தில் இருப்பதை காவல்காத்து நின்றன.

‘அங்கே அவர்களின் தலைவன் அல்லது குட்டிபோட்ட தாய் நகரமுடியாமல் கிடக்கிறது’ என்றார் டாக்டர் கே ஆங்கிலத்தில். கண்களை அங்கேயே நாட்டியபடி மிகமெல்லிய முணுமுணுப்பாக ‘ இங்கேயே இருங்கள். அசையவேண்டாம். கைகளை தூக்கக்கூடாது. நான் மட்டும் போய்ப்பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றார். நான் பதற்றத்துடன் ‘தனியாகவா?’என்றேன் . ‘இல்ல, அதுங்களுக்கு என்னை தெரியும்’ ‘இல்லடாக்டர், ப்ளீஸ் …செந்நாய்கள் ரொம்ப ஆபத்தானவைன்னு சொன்னாங்க’ ‘கண்டிப்பா ஆபத்தானவைதான்…பட்…’ திரும்பி ‘திஸ் இஸ் மை ட்யூட்டி’ என்றபின் மெல்ல கதவைத்திறந்து இறங்கி அந்த செந்நாய்களை நோக்கிச் சென்றார்.

என் வழியாக ஒரு குளிர்ந்த காற்று கடந்து சென்றது. கைகளால் மெல்ல என் பைக்குள் இருந்த சிறிய துப்பாக்கியை தொட்டேன் .அதன் குளிர் ஆறுதலை அளித்தது. டாக்டர் மேடேறி அந்த நாய்களின் அருகே சென்றார். புதருக்குள் இருந்து முதல் நாய் தலை தூக்கி காதுகளை முன்னால் மடித்து அவரைப் பார்த்தது. அவர் நெருங்க நெருங்க தலையை கீழே கொண்டுவந்து மூக்கை நன்றாக நீட்டி அவரை கவனித்தது. மற்றநாய்கள் இருபக்கமும் சத்தமே இல்லாமல் அவரை நோக்கி வருவதைக் கண்டேன். சில நிமிடங்களில் அவர் அந்த ஆறுநாய்களாலும் முழுமையாகச் சூழப்பட்டுவிட்டார்.

டாக்டர் கே முதல் செந்நாயின் அருகே சென்று அசையாமல் நின்றார். சிலநிமிடங்கள் அந்த நாயும் அவரும் ஒரு மௌனமான பிரார்த்தனை போல அப்படியே நின்றார்கள். பின் அந்த நாய் நன்றாக உடலை தாழ்த்தி கிட்டத்தட்ட தவழ்ந்து அவர் அருகே வந்தது. முகத்தை மட்டும் நீட்டி அவரை முகர்ந்தது. சட்டென்று பின்னால் சென்றபின் மீண்டும் வந்து முகர்ந்தது. ஹுஹுஹு என்று ஏதோ சொன்னது. புதர்களுக்குள் நின்ற மற்ற நாய்கள் நன்றாக நிமிர்ந்து தலைதூக்கி நின்றன.

முதல் நாய் அவர் அருகே நெருங்கி அவரது பூட்ஸ்களை நக்கியது. பின் அது அவர்மேல் காலைத்தூக்கி வைத்து அவர் கையை முகர்ந்தது. அதன் உடல்மொழி மாறுவதை கண்டேன். நம்மை வரவேற்கும் வளர்ப்புநாய்போல அது வளைந்து நெளிந்து உடலைக்குழைத்து வாலைச்சுழற்றியது. அவரைப்பார்த்துக்கொண்டு வாலாட்டியபடியே பக்கவாட்டில் நடந்து சென்றபின் துள்ளி ஓடி கொஞ்சதூரம் போய், காதை பின்னால் தழைத்துக்கொண்டு நான்குகால் பாய்ச்சலில் அவர் அருகே ஓடி வந்து நின்று, மீண்டும் முன்னால் துள்ளி ஓடியது. அவரை ஒரு விசேஷ விருந்தாளியாக அது நினைப்பது தெரிந்தது. அவர் வந்ததில் அதற்கு தலைகால் புரியாத சந்தோஷம் என்று தெரிந்தது. அந்த கௌரவத்தை எப்படி கொண்டாடுவதென்று அதற்கு புரியவில்லை.

மற்றநாய்களும் வாலைச்சுழற்றுவது புதர்களின் அசைவாக தெரிந்தது. பின் ஒரு நாய் முதல்நாய் நின்ற இடத்தை எடுத்துக்கொள்ள பிற நான்கும் அவற்றின் பழைய இடத்துக்குச் சென்றன. டாக்டர் கே புதர்களுக்குள் குனிந்து எதையோ பார்ப்பது தெரிந்தது. பின் அவர் அமர்ந்துகொண்டார். அங்கே அந்த நாய் குவ் குவ் குவ் என்று நாய்க்குட்டி போல ஏதோ சொல்வது மட்டும் கேட்டது. அரைமணி நேரம் கழித்து டாக்டர் கே திரும்பிவந்தார். காரில் ஏறிக்கொண்டு ‘போலாம்’ என்றார்

‘என்னசார்?’ என்றேன். ‘அங்க அவங்க தலைவன் அடிபட்டு கெடக்கறான்’ என்றார். ‘என்ன அடி?’ ‘சிறுத்தைன்னு நெனைக்கறேன். வலதுகால் சதைபேந்து போயிருக்கு. எலும்பும் முறிஞ்சிருக்கலாம்…’ ‘நாம என்ன பண்றது?’ என்றேன். ‘ஒண்ணுமே பண்ண வேண்டாம். அது அவங்களோட வாழ்க்கை, அவங்க உலகம்…நாம பாகக்வேண்டியது ரெண்டுமூணு விஷயம்தான். அந்த நாயை யாராவது மனுஷங்க ஏதாவது பண்ணியிருக்காங்களாங்கிறது முதல்ல. அப்டீன்னா குற்றவாளிய கண்டுபுடிச்சு தண்டிக்கணும். ரெண்டு, வழக்கமா இல்லாத ஏதாவது தொற்றுநோய் இருக்கான்னு பாக்கணும். இருக்குன்னா உடனடியா நடவடிக்கை எடுக்கணும்…’

நான் ’அப்டியே விட்டுட்டு போறதா, அது செத்துட்டா?’ என்றேன். ‘சாகாது…ஆனா அந்த நாய் இனிமே தலைவன் இல்லை. அனேகமா என்னை கூட்டிண்டுபோச்சே அவன்தான் இனிமே தலைவன்…’ ‘நாம ஏதாவது மருந்து போட்டா என்ன?’ ‘என்ன மருந்து? நம்மளோட வழக்கமான ஆண்டிபயாட்டிக்குகளா? காட்டுமிருகங்களோட ரெஸிஸ்டென்ஸ் என்ன தெரியுமா? இந்த மருந்துகளை குடுத்து பழக்கினா அப்றம் காட்டுக்குள்ளயும் ஊரைமாதிரி மூணுகிலோமீட்டருக்கு ஒண்ணுன்னு ஆரம்ப சுகாதார நிலையம் தெறக்கவேண்டியதுதான்’

நான் பெருமூச்சுடன் ‘அந்த நாய் உங்கள அடையாளம் கண்டது அமேஸிங்கா இருந்தது…’ என்றேன். ‘நாய்னா என்னன்னு நினைச்சே? சச் எ டிவைன் அனிமல்…மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார். ‘பைரன் கவிதை ஒண்ணு இருக்கு. ’ஒரு நாயின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்’ . படிச்சிருக்கியா?’

‘இல்லை’ என்றேன். அவர் காட்டையே சிவந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று மந்திர உச்சாடனம் போலச் சொல்ல ஆரம்பித்தார். ‘When some proud son of man returns to
earth, Unknown to glory, but upheld by birth..’ நான் அந்த அவ்வரிகளை அவரது முகமாகவே எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

ஆனால் நாய் வாழ்க்கையில் உன்னத நண்பன்
வரவேற்பதில் முதல்வன்! பாதுகாப்பதில் முந்துபவன்!
அவன் நேர்மை நெஞ்சம் உரிமையாளனுக்கே சொந்தம்,
அவனுக்காகவே உழைக்கிறான் உண்டு உயிர்க்கிறான்!//


அப்படிப்பட்டவருக்கு கிடைக்காத அவார்டுக்கே மதிப்பில்லை.

இக்கதையைப் படித்தவுடனேயே எனக்கு பதிவர் லதானந்த்தான் நினைவுக்கு வந்தார். அவருக்கு போன் போட்டு அவரிடம் இது பற்றிக் கூற, அவரோ சாவகாசமாக இது சம்பந்தமாக ஜெயமோகன் தன்னிடம் ஒரு கட்டுரை அனுப்பச் சொன்னதாகவும், தானும் அவ்வாறே சென்ற வாரம் அனுப்பியதாகக் கூறினார். காட்டிலாகா அதிகாரியான அவர் இக்கதையை இன்னும் அப்ரிஷியேட் செய்வார் என்பதற்காக அவருக்கு நான் கூறப்போக, அவரிடமிருந்து வந்த இத்தகவல் ஒரு கூடுதல் போனஸ்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 17.02.2011

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-1. செவ்வாய் கிரகத்துல இருந்து தகவல் அனுப்பியிருந்தாங்க... அவங்க சாட்டிலைட் மூலமா இளைஞன் படத்த பாத்தாங்களாம். மொழி புரியாட்டாலும், அடுக்கடுக்கா வந்த வசன ஒலி அவங்க ரொம்ப கவர்ந்திடுச்சாம்.

பதில்: அப்படியானா பெண் சிங்கத்தையும் அனுப்பிவிடலாமே.

கேள்வி-2. அறுபது வருடங்களுக்கு முன்... கூவத்தில் குளித்தார்களாம்! துவைத்தார்களாம்! நீர் குடித்தார்களாம்! சென்னையில் சங்கமம் ஆனபின்னே... இன்று கூவம் இருப்பதைப் போல... தலைநகர அரசியல்! சென்னையில் சங்கமம்...
பதில்: எத்தனை அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தது எனக் கூறுகிறீர்கள்?

கேள்வி-3. சாதி சான்றிதழை போலி ஆவணங்கள் மூலம் பெறுவதால் அடித்தட்டு மக்கள் பாதிப்பு: ஊட்டியில் நீதிபதி தர்மராவ் பேச்சு
பதில்: எல்லா சாதிகளிலுமே திறமைசாலிகள் உண்டு. அதை விடுத்து குருட்டுத்தனமாக சாதியை மட்டுமே வைத்து பொருளாதார அடிப்படை பர்றி கவலை கொல்ளாது சகட்டுமேனிக்கு இட ஒதுக்கீடு தந்தால், அதைப் பெற அடித்தளமாக இருக்கும் சாதி சான்றிதழ் விவகாரத்தில் ஊழல் தலைவிரித்து டேன்ஸ் ஆடும்.

கேள்வி-4. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பதில்: கடைசியில் ஏற்றிவிட்டார்கள் போல.

கேள்வி-5. செருப்புகளில் இந்துக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு மலேசியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது
பதில்: மலேசியா இசுலாமிய மத அரசு. அங்கு இதெல்லாம் நடப்பதில் வியப்பில்லை.

கேள்வி-6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எங்களால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் கூறியுள்ளது.
பதில்: அரசில் உள்ளவர்களுக்கு உரித்தான பங்கை சரியாக தந்திருப்பதைத்தான் அவ்வாறு கூறுகிறாரோ என்னவோ.

கேள்வி-7. மழைக்காலம், கிரிக்கெட் போன்ற சீஸன்களில் தியேட்டர்களில் கூட்டமே இருப்பதில்லை. எனவே டாஸ்மாக் கடை- பார் இணைந்த திரையரங்குகளாக இவற்றை மாற்றிக் கொள்ள அனுமதி தேவை என தமிழக அரசுக்கு தியேட்டர்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பதில்: அந்த அனுமதி மழைக்காலங்களில் அல்லது கிரிக்கெட் சீசனில் மட்டும்தானாமா?

கேள்வி-8. இந்து முன்னணியினர் காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் நாய்களை குதிரை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து திருமணம் நடத்தி வைத்தனர்.
பதில்: பார்த்துக் கொண்டே இருங்கள். சொல்ல முடியாது. நாய்கள் எங்காவது ஏடாகூடமாக கடித்து வைக்கப் போகின்றன.

கேள்வி-9.உலகக்கோப்பை கிரிக்கெட் ‌போட்டிகள் விரைவில் துவங்கவிருப்பதை யொட்டி , ஸ்பாட்பி்க்ஸிங், ஊழல் உள்ளிட்ட சூதாட்டங்களை தவிர்க்க , கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள் டிவீட்டர் வலைதளத்தை பயன்படுத்த ஐ.சி.சி. தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதில்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன?

கேள்வி-10. மனைவிக்கு வேறு திருமணம் நடக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசில் கணவன் புகார் கொடுத்துள்ளார்.
பதில்: எந்தப் புற்றில் எந்தப் பாம்போ. விஷயங்களின் பின்புலம் தேவை.


ரமணா
கேள்வி-11. கருணாநிதி அவர்களின் துள்ளல் வசனத்துடன் வந்ததாய் பெரும் விளம்பரம் செய்யப்பட்ட பா.விஜயின் இளைஞன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதாதன் காரணம்? இதனால் தயாரிப்பாளரின் நிலை? கருணாநிதி அவர்களின் மனம்? சுய லாபத்திற்காக பாராட்டிப் பேசிய திரை பிரபலங்கள் நிலை? விஜய்கள் என்ன நினைப்பார்கள்?
பதில்: தயாரிப்பாளருக்கு முதலிலேயே கருணாநிதியின் திறமை இந்த விஷயத்தில் வறட்சி அடைந்து பல ஆண்டுக்காலம் ஆகிவிட்டது என்பது தெரிந்திருக்குமாக இருக்கும். அதே சமயம் தலையில் துண்டு போடும் தயாரிப்பாளருக்கு வேறு வகையில் பெர்மிட் ஆகியவை கிடைக்கும் என சோ அவர்கள் ஆண்டு விழா மீட்டிங்கில் கடந்த ஜனவரியில் கூறியதை நினைவில் கொண்டால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் நிலைப்பாடு புரிந்ததே.

தகுதியற்ற பாராட்டை பெறுவது என்பது சாதாரண கூச்சமுள மனிதனுக்கு சங்கடம் அளிக்கக் கூடியதே. உடலே கூச வேண்டும்.ஆனால் அந்தக் கூச்ச நிலை கடந்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகி, மரத்துவிட்ட இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களது மனம் பற்றியெல்லாம் கவலை கொள்வது மற்றவர்களுக்கு நேர விரயமே.

திரை பிரபலங்கள் செய்வதும் வியாபாரமே. யாருக்கு என்னென்ன பெர்மிட்டுகள் எதிர்காலத்தில் தேவைப்படுகிறதோ யாரறிவார்?

விஜய்கள் இதற்காகவே முதல்வராக ஆக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

கேள்வி-12. இன்று நண்பகல் 1100 மணிக்கு பிரபல தொலைகாட்சி செய்தி சேனல்களின் பத்திரிக்கையாளரின் துளைக்கும் கேள்விகளுக்கு நமது பாரத பிரதமர் அவர்களின் பதில் பற்றிய உங்கள் கருத்து என்ன?
1)2ஜி ஸ்பெக்ரம் ஊழலில் அரசின் பெருளாதார இழப்பு
2) பெரிய கார்பொரேட்களுக்கு ராசாவின் இந்தச் கட்டணச் சலுகையை ரேசன் பொருட்களுக்கு கொட்டுக்கபடும் மான்யம் போல் என ஒப்பிட்டது?
3)ராசாவின் நியமனத்தில் திமுகவின் நிர்பந்தம்?
4)கூட்டணி கட்சிகளை காம்பரமைஸ் செய்யும் காங்கிரசாரின் நிலை?
5)விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க விகிதம் அதனால் ஏழைகள் பாதிப்பு?
6)ஜெபிசி முன்னால் ஆஜாராக ரெடி?
7)பிஜேபி மேல் குற்றச்சாட்டு-குஜராத் அமைச்சரை காப்பாற்றத்தான் இந்த பாராளுமன்றத்தை முடக்கும் செயல்கள்?
8)ஊழல்காரர்களை நிச்சயம் தண்டிப்பேன்?
9.தமிழக மீனவர்களின் தொடர் கைது அரசின் நடவடிக்ககள்
10.பொருளாதார கேள்விகளுக்கு பதில் சொல்லுபோது இருந்த முகத் தெளிவு-மெகா ஊழல்கள்-2ஜி,கா.வெ.கேம்ஸ்,எஸ்பேண்ட்,கார்கில்வீடு ஒதுக்கீடு பற்றிய பதில்களின் போது அவரது தோற்றம்,குரல் செயல் பாடு?

பதில்: அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அது மட்டுமல்ல, டிவியை ஆன் கூடச் செய்யவில்லை. காலை 4 மணியிலிருந்து விடாத வேலை கணியில் மொழி பெயர்ப்பு. ஆகவே உங்களது 10 கேள்விகளுக்கும் ஒட்டு மொத்தமாகத்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது.

நிகழ்ச்சியை பார்க்காவிட்டால் என்ன, சர்தார்ஜி என்ன கூறியிருப்பார் என்பதை நான் அறிவேன். அவரது உடல் மொழி? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பதே. ரொம்பவும் நிலைமை தலைக்கு மேல் போனால், கூட்டணிக் கட்சிகளாவது மண்ணாங்கட்டியாவது. அவனவன் பாம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கப்பூ என்பது போன்ற முகபாவம்.

ஊழல்காரர்களை நிச்சயம் தண்டிப்பேன் என்னும் போது மர்றவர்களை சிரிக்க வைக்கும் கோமாளி தான் மட்டும் சீரியுசாக முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதன் இலக்கணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.

முதலில் ஜேபிசியை கூட்டட்டும் பிறகு பார்க்கலாம் அவர் ஆஜராவாரா இல்லையா என.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/10/2011

டோண்டு பதில்கள் 10.02.2011

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-1. கருத்துச் சொல்லி எந்த மாற்றமும் உருவாகப் போறதில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை. என் சினிமா சிறந்த சினிமாவாக உருவாவதைவிட, வேறு எதிலும் எனக்கு அக்கறை இல்லை. சினிமா மூலம்தான் எனக்கு எல்லாமும் கிடைச்சது.-இயக்குனர் சேரன்

பதில்: அதாவது, தான் அரசியலுக்கு வரப்போறதில்லைன்னு இவர் சொல்லறாருன்னு நினைக்கிறேன். தமிழகம் ஆந்திராவுக்கு மட்டுமே இந்த சாபக்கேடு. யாராவது திரைப்படத் துறையில் வெற்றி பெற்று விட்டால் (அதிலும் நடிகராக) அவர் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணமே இந்த இரு மாநிலங்களிலும் டீஃபால்ட் நிலை என ஆகிவிட்டது. என்ன செய்வது, விதி.

கேள்வி-2. வீர விளையாட்டாயினும் மக்கள் சாவதைத் தடுக்க ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை, நீங்கள் விரும்புகிறீர்களா என்றும் அது கேட்டுள்ளது.
பதில்: எனது கருத்தோ உங்களது கருத்தோ கேட்டு என்ன செய்ய? சம்பந்தப்பட்ட மாடுகளின் கருத்தைக் கேட்டுத் தொலையட்டுமே.

கேள்வி-3. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது.
பதில்: எல்லாமே கண்ணாமூச்சி நாடகம்தான் என நண்பர் விஸ்வாமித்திரா எழுதியுள்ளாரே, அதுதான் சரி என எனக்குப் படுகிறது

கேள்வி-4. விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதற்கான தகுதி வயதை 16 என்பதிலிருந்து 12 ஆக குறைக்க வகை செய்யும் சட்ட அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
பதில்: இதையா கேட்கிறீர்கள்? கேவலமாக இருக்கிறதே. மத்திய அரசுக்கு கடைசியிலாவது புத்தி வந்ததே.

கேள்வி-5. மைனா பட புகழ் அமலா பால் இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக பேட்டி கொடுத்து, இளம்பெண்களை கெடுக்கிறார் என்று இந்திய் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
பதில்: இன்னொரு குஷ்புவை உருவாக்குகிறார்களா?

கேள்வி-6. மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சில சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பதில்: சேவை அளிப்பாளர்கள் மரியாதையாக வாடிக்கையாளர் சேவை இதனால் தருவார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி-7. போன் செய்தால் வீட்டுக்கோ வந்து மொபைல் போன் கருவிகளை வழங்கும் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஸார் குழுமத்தின் மொபைல் ஸ்டோர்
பதில்: பில்லையும் பின்னால் அவர்களே கட்டினால் என்ன ஆட்சேபணை?

கேள்வி-8. செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது
பதில்: Remedial measures பற்றியும் ஏதாவது சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும், சொன்னார்களா?

கேள்வி-9. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் காவலனின் வரவேற்பால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். காவலன் வெற்றியும், ஷங்கர் 3 இடியட்ஸில் அவருக்கான சீட்டை கன்பார்ம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
பதில்: பாவம், பிழைத்துப் போகட்டும். இனியும் அரசியல் என்றெல்லாம் போகாமல் தனது நடிப்பு வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளட்டுமே.

கேள்வி-10. பருத்திவீரன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் சரவணன். அவரும், அவரது மனைவி சூர்யஸ்ரீயும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.
பதில்: ஏதாவது ஒரு அரசியல் முகாமில் சேருவதைத்தான் பலரும் தற்காப்பு நடவடிக்கை என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கு.

மேலும் கேள்விகள் இருந்தால் அடுத்த வியாழக்கிழமை சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/08/2011

பிராமணர்கள் சோம்பேறிகளா, ஒரு ஆய்வு

//வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல.//

கட் அண்ட் பேஸ்ட் புகழ் பதிவர் அருள் அடிக்கடி திருவாய் மலர்ந்தருளும் வார்த்தைகளில் மேலே உள்ளனவும் அடிக்கடி வரும்.

தெரியாமல்தான் கேட்கிறேன், அப்புறம் ஏனய்யா உங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு அவர்களை வருந்தி வருந்தி அழைக்கிறீர்கள்? அருளின் அண்ணனின் மணமே அவ்வாறு நிகழ்ந்ததுதான். அது ஏன், நாத்திகச் செம்மல்கள் என தம்மைப் பற்றி பீற்றிக் கொள்ளும் பல பதிவர்கள் வீட்டிலும் அதே நிலை. அதைச் சொன்னால் மட்டும் கோபம் எங்கெங்கிருந்தோ பிடுங்கிக் கொண்டு வரும் என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

இப்போது கலைஞர் சுப்பிரமணியம் சுவாமிக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியதும் அவரது பார்ப்பன வக்கீல்கள் மூலம்தான் என அறிகிறேன் (இல்லையென்றால் யாராவது சொல்லுங்கப்பூ).

சாதி முறையை தமிழகத்துக்கு கொண்டு வந்தது பார்ப்பனரே என்று ஒரு பிதற்றல் இப்போது அடிக்கடி கேட்கக் கிடைக்கிறது. அட முட்டாள்களே பாப்பான் சொன்னான் என்றால் மத்தவங்களுக்கு எங்கேடா மூளை மேயப் போயிருந்தது? உண்மை என்னவென்றால் சாதி முறை காலத்தின் கட்டாயம். அது எல்லோருக்கும் உதவியாக இருந்தது. இப்போதும் இருந்து வருகிறது. இப்போது எந்த மரம் வெட்டியும் அதை ஊர்ஜிதம் செய்வார்.

அக்காலகட்டங்களில் மன்னர்கள் ஏன் பார்ப்பனர்களை ஆதரித்தனர்? ஜெயமோகன் இது பற்றி தனது ராஜராஜ சோழன் பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். அவர் எழுதியதன் ஒரு பகுதி இங்கே.

அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்? இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும்? அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி. கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார். இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.

படையெடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி.

கோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலை ஞானமாகவும் அன்றாட வாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.

பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள் கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.

சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சை நிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.

இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக் கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்வி சார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.

ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல. கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை [சமரசம் தூது] பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகிம்சை மதங்கள் பேரரசுகளை உருவாக்க உதவாதபோது அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள்.

அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணார்களின் சேவையும் இன்றும் கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதில் பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மத நம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.

ஆம், பிராமணர்களும் கோயில்களும் ஆதிக்கத்தின் கருவிகளே. ஆனால் இந்த ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது, நிகழ்ந்தேயாக வேண்டியது என்பதே கோஸாம்பி கூற்று. இதே காலகட்டத்தில் உலகின் மற்றப் பகுதிகளில் ஈவிரக்கமற்ற இனஅழித்தொழிப்பு மூலம் ஆதிக்கம் உருவானது என்பதை இதனுடன் நாம் ஒப்பிடவேண்டும். இந்திய மன்னர்கள் பிராமணர்களையும் பௌத்த சமணத்துறவிகளையும் பயன்படுத்தி நிகழ்த்திய ஆதிக்கம் என்பது சாத்வீகமானது. அழிவு அற்றது. அந்த மக்களின் பண்பாடுகள் கூட அழிக்கப்படவில்லை, அவை மைய பண்பாட்டுச்சரடு ஒன்றால் தொகுக்கப்பட்டன. இது தேவையில்லை என்றால் வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் அடுத்த வழி பரிபூரண அழித்தொழிப்பும் வன்முறையும்தான். இந்த வழியை வன்முறை என்பவர்கள் இதைவிட் பலமடங்கு வன்முறைமூலம் உருவான ஒருங்கிணைத்தலை நியாயப்படுத்தும் தரப்புகளின் குரலாக ஒலிக்கும் அபத்தத்தையும் நாம் காணலாம்.

உலகம் முழுக்க நிலவுடைமைச்சமூகத்தில் பூசகர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆனால் உலகிலேயே பூசகர்கள் குறைவான அதிகாரத்துடன் இருந்தது இந்தியாவில்தான். இங்கே பிராமணர்கள் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டனவே ஒழிய நிலம் ,நிதி மீது அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது மன்னர்கள் மற்றும் வேளாளர் மற்றும் போர்ச்ச்சாதியினர் கைகளிலேயே இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.

சோழர்காலகட்டத்தில் பிராமண ஆதிக்கம் உருவானது பற்றி மேடைகளில் பேசுவோர் அக்காலத்தில்தான் இன்றும் நீடிக்கும் வேளாள ஆதிக்கம் வலுவாக நிலைநாட்டப்பட்டது என்றும் அதே ஆய்வாளர்கள் சொல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். நிலங்கள் வேளாண்மைக்குக் கொண்டு வரும் தோறும் நிலநிர்வாகம் செய்யும் சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்தது. புதிய நில உடைமையாளர்கள் உருவாகி அவர்கள் வேளாளர்கள் என்று பொது அடையாளத்துக்குள் வந்தபடியே இருந்தார்கள். ஒருகட்டத்தில் தமிழக வேளாண் நிலம் முழுக்கவே வேளாளர் மற்றும் அவர்களின் மத அமைப்பான சைவ மடங்களின் கைகளுக்குச் சென்று அப்படியே பிரிட்டிஷ் ஆட்சி வரும் வரை நீடித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் வேளாளர் வகித்த அதிகாரத்தின் துளியைக் கூட பிராமணர்கள் ருசிக்க நேர்ந்ததில்லை என்பதே உண்மை.

பிராமணர்கள் சோழர் காலத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரவலாக அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கிருக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது உண்மையில் நாயக்கர் காலகட்டத்தில்தான். ஆனால் அதுகூட தெலுங்குபிராமணர்கள்தான். பிரிட்டிஷார் வந்தபின் ஆங்கிலக்கல்விமூலம் பிரிடிஷாருட்ன் ஒத்துழைத்தே பிராமணர் நேரடி அதிகாரத்தை அடைந்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் வேளாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். அந்தக் கசப்பே தமிழகத்திலும் கேரளத்திலும் பிராமண எதிர்ப்பரசியலுக்கு வித்திட்டது. அதை ஆரம்பித்தவர்கள் வேளாளர்களும் அவர்களின் கேரள வடிவமான நாயர்களும்தான்.


மீண்டும் டோண்டு ராகவன். உடல் உழைப்பு இல்லாத மூளைவேலை என்றால் அவ்வளவு மட்டமா? அப்படி பார்த்தால் கிறித்துவ பாதிரியார்கள், இசுலாமிய, யூத குருமார்கள் ஆகியோரைய்ம்தான் சாட வேண்டும். விஷயம் என்னவென்றால் மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் இம்மாதிரியான உழைப்புப் பங்கீடு இருந்தே தீரும். மூளை உழைப்புக்காரனுக்கு எல்லாமே எளிது என்றால் ஏன் எல்லாருமே அப்படிப் போகக் கூடாது? எல்லாவர்றுக்கும் அவரவரது மனப் போக்கே காரணம். அதை வைத்துத்தான் நம் தேசத்தில் வர்ணங்கள் தோன்றின. தேவைக்கேற்ப அந்த பாகுபாடுகள் ரிஃபைன் ஆகிக் கொண்டே சென்றன.

இப்போதைய சாதிகளை எல்லாம் எடுத்து விட்டாலும் எதிர்காலதில் அதுவே வேறு ரூபத்தில் வரும் என்பதை சமீபத்தில் 1957-ல் எழுத்தாளர் நாடோடி நகைச்சுவையுடன் பதிவு செய்தார்.

அதிலிருந்து சில வரிகள்: (இங்கு நிகழ்வுகள் 2957-ஆம் ஆண்டு வருவன என்பதை நினைவில் வைக்கவும்)

அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு போகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. எழுத்தாளர் நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலைசுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்.

மனிதர்களுக்குள் குழுமனப்பான்மை என்பது இயற்கையாகவே வரும். ஆனால் அதற்காக இம்மாதிரி ஜாதி என்றெல்லாம் சொல்வது ஓவர் என்பவர்கள் சரித்திரத்தை பற்றி சரியாக அறியாதவர்கள். இப்போது கூட பார்க்கிறோமே, டாக்டர்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் அறிவுரைப்படி டாக்டர்கள் ஆகின்றனர். அதே மாதிரித்தான் மற்ற தொழில்களிலும்.

இதையெல்லாம் ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் நாடோடியின் இந்தக் கட்டுரை நல்ல முறையில் நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.


அன்புடன்,
டோண்டு ராகவன்

2/04/2011

ஜெயமோகனின் “அறம்”

ஐந்து நாட்களுக்கு முன்னல் விடியற்காலை 5 மணியளவில் மொழிபெயர்ப்பு வேலைக்காக கணினியைத் திறந்து, இணைய இணைப்பை பெற்று, கூகள் டாக்கை திறந்து ஆன் செய்தால் நம்ம ஜெயமோகன் அந்த நேரத்திலும் ஆன்லைனில் இருக்கிறார். சாதாரணமாக நான் யாருடனும் சேட் அதிகம் செய்வதில்லை. இருப்பினும் ஏதோ ஒன்று என்னை உந்த, அவரை சேட்டில் அழைத்தேன். அவரும் வந்தார். அவருடனான சேட் இங்கே நான் இப்போது வெளியிடுவது ஒரு காரணமாகத்தான். அதாவது வாழ்வின் பல நிகழ்வுகள் இம்மாதிரித்தான் எதேச்சையாகவே நடக்கின்றன, அதை காட்டத்தான் எண்ணுகிறேன். இந்த சேட் வெளியீட்டை ஜெயமோகன் ஆட்சேபிக்க மாட்டார் எனஎண்ணுகிறேன்.

from jeyamohan_ B
to raghavan
date Mon, Jan 31, 2011 at 5:39 AM
subject Chat with jeyamohan_ B

5:06 AM me: வணக்கம் ஜெயமோகன் அவர்களே
jeyamohan_: வணக்கம்
me: இவ்வளவு சீக்கிரமே எழுந்து விட்டீர்களே
jeyamohan_: ஆம், இப்போது இரவு 10 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுவது வழக்கம்
me: தினசரி வழக்கமா?
jeyamohan_: ஆம்
me: நல்ல பழக்கம்
5:08 AM பிப்ரவரிவாக்கில் சென்னை வருவது போல படித்தேனே?
வருகிறீர்களா?
வலைப்பதிவர் சந்திப்பு?
5:10 AM jeyamohan_: ஆம். இன்னமும் முடிவாகவில்லை’
me: முடிந்தால் அப்போது உங்களை சந்திக்க ஆவல்
5:11 AM jeyamohan_: பார்ப்போம்
me: இப்போது வரும் துப்பறியும் கதை பிரமாதம்
சாம்புவையும் விடவில்லையே
சி.ஐ.டி சந்துரு வருவாரா?
5:12 AM jeyamohan_: அது 2002ல் எழுதியது
திண்ணையில் வந்தது
5:13 AM me: தெரியும், படித்தேன். வெளியிடப்படாத நாவல் என்று
5:14 AM திகம்பர சாமியாரிடம் கேள்வி கேட்போர் படும்பாடு என்னிடம் பலர் தெரியாத்தனமாக இஸ்ரேல் பற்றி கேட்டு மாட்டிக் கொள்வதை நினைவுபடுத்தியது
5:15 AM ஓக்கே சார், பிறகு பார்ப்போம். இப்போது சேட் செய்ததில் மிக்க மகிழ்ச்சி
5:16 AM jeyamohan_: நான் இஸ்ரேல் பற்றி கேட்கக்கூடாது இல்லையா? நன்றி
பார்ப்போம்
me: keeLunggaLeen, santhooshamaaka peesalaam
கேளுங்களேன்
5:17 AM jeyamohan_: ))
me: சந்தோஷமாக பேசுவேன்
jeyamohan_: சந்தோஷமா கேட்கத்தான் முடியாது இல்லையா? )))
me: அதைத்தான் கூறினேன்
5:18 AM jeyamohan_: பார்ப்போம்..நேரில் சந்திக்கும்போது எப்படி என்று
me: எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகள்
5:19 AM jeyamohan_: சந்தித்தபோது அதிகம் பேசமுடியவில்லை.
me: ஆம்
கேணியில் பிசியாக இருந்தீர்கள்
jeyamohan_: http://www.jeyamohan.in/?p=11976
me: ஷாஜி பாராட்டு விழாவில் incognito ஆக வந்தீர்கள்
5:20 AM jeyamohan_: இந்தக்கதையை வாசியுங்கள். உங்கள் காலகட்ட விஷயம். பணத்தின் தொகைகள் மிக குறைவாக இருக்கிறதே என்று ஒரு சந்தேகம். ஆனால் அப்போது அப்படித்தான் என்றார் தஞ்சை பிரகாஷ்..
me: சுட்டியை ஆன் செய்து விட்டேன், படிக்கிறேன்
11 minutes
5:32 AM me: படித்தேன், பிரமிப்பில் ஆழ்ந்தேன்
உங்களிடம் தமிழ் விளையாடுகிறது.
வாழ்த்துக்கள்
நிஜமாக நடந்ததா?
5:33 AM jeyamohan_: ஆள் யாரென தெரிந்திருக்கும்...
http://en.wikipedia.org/wiki/M._V._Venkatram
http://preview.palaniappabrothers.com/en/products/authors/97
5:34 AM me: தி.ஜானகிராமனுடைய கதை ஒன்று நினைவுக்கு வந்தது. பிள்ளை கல்யாணத்துக்கு உண்ண வந்தவனை விரட்டியடிக்க, அவன் சாபமிட்டு, பிறகு அதே பிள்ளையின் சவண்டிக்கு சாப்பிட வருகிறான்
jeyamohan_: பரதேசி வந்தான்
me: இன்னொரு சுட்டிக்கும் நன்றி
ஆம்
டைட்டில் சட்டென்று நினைவுக்கு வரவில்லை
jeyamohan_: நான் தமிழின் மிகச்சிறந்த 8 கதைகளில் ஒன்றாக அதை என் முன்னோடிகள் வரிசை விமர்சன நூலில் சொல்கிறேன்
5:35 AM me: எம்.வெங்கட்ராமனும் எனக்கு பிடிக்கும்
சௌராஷ்ட்ரா வகுப்பை சார்ந்தவர் அல்லவா?
அவரது காது என்னும் நாவலை படித்துள்ளேன்
5:36 AM jeyamohan_: காதுகள்
ஆம்
me: காதுகள்தான்
5:37 AM பை தி வே நேரம் கிடைத்தால் எனது ஜெயா டிவி நேர்காணல் வீடியோவை காணுங்கள்
http://dondu.blogspot.com/2010/07/uploading-jaya-tv-interview-dated.html
5:38 AM jeyamohan_: ஆம்
நன்றி
me: ஓக்கே, உங்களது பொன்னான நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டேன்
பிறகு பார்க்கிறேன்
jeyamohan_: பொன்னெல்லாம் இல்லை...
me: வணக்கம்
5:39 AM jeyamohan_: பார்ப்போம்

இந்த சேட்டில் என்னை அதிகம் கவர்ந்தது ஜெயமோகனின் எளிமையான அணுகுமுறை. அவர் அக்கதை பற்றி கூறியிருக்காவிட்டாலும், அதை நான் எப்படியும் படித்திருப்பேன், ஏனெனில் அவரது தளம் எனது பிளாக் ரோலில் உள்ளது. இருப்பினும் அவரே அதை எனக்கு படிக்குமாறு கூறிய விதம் எனக்கு பிடித்திருந்தது.

நான் ஏற்கனவேயே கூறியது போல, அக்கதை என்னை பிரமிக்கச் செய்தது. எம்.வி. வெங்கட்ராமனின் சோகம் என்னை செவுளிலேயே அறைந்தது. சம்பந்தப்பட்ட ஆச்சியின் தர்ம ஆவேசம், செட்டியின் பதைபதைப்பு ஆகியவை அப்படியே உணரும்படியாக இருந்தன.

தமிழ் ஜெயமோகனிடம் விளையாடுகிறது, பிரெஞ்சு எழுத்தாளர் Francois Kavannah-விடம் பிரெஞ்சு விளையாடுவது போல. ஜெயமோகன் போன்ற மகோன்னத எழுத்தாளர்களின் சமகாலத்தவனாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தி.ஜானகிராமனின் “பரதேசி வந்தான்” என்னும் கதையும் அவ்வாறே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/03/2011

டோண்டு பதில்கள் 03.02.2011

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-1. எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

பதில்: வின்னர் வடிவேலு பாஷையில் கூற வேண்டுமானால், இன்னுமா ராமதாசை இந்த ஊர் நம்புது?

கேள்வி-2. சூர்யாவோட உள்ளங்கையில் பூமத்திய ரேகையே ஓடிக் கொண்டிருக்கிறது என்று பெருமூச்சு விடுகிறது கோடம்பாக்கம்! அந்தளவுக்கு டாப் ரேஞ்சில் இருக்கிறது அவரது ஆசையும் லட்சியமும்! அதற்கேற்றார் போலதான் கேட்கிறாராம் தனது சம்பளத்தையும்.
பதில்: அவர் தந்தை சிவகுமார் தனது நடிப்பு வாழ்க்கையில் இதுவரை தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர். சூர்யா அப்படி இல்லை என்கிறீர்களா? அவர் சம்பளம் அதிகம் கேட்டாலும் அதைத் தர தயாரிப்பாளர்கள் இருந்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? சமீபத்தில் 1978-ல் இதயம் பேசுகிறது பத்திரிகையில் இப்படித்தான் ஒரு நடிகர் தன் தகுதிக்கு மீறி சம்பளம் கேட்கிறார், அவரது தொழில் முன்னேற்றத்துக்கு இது உகந்ததல்ல என அட்வைஸ் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகர் பெயர் ரஜனிகாந்த்.

கேள்வி-3. போர்க்குற்றவாளி என பல நாடுகளாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரி்க்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது
பதில்: இந்தச் செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? சம்பந்தப்பட்ட அமெரிக்க கோர்ட்டுக்கு இம்மாதிரி வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உண்டா எனத் தெரியவில்லையே. முதலில் ராஜீவை கொலை செய்வித்த வழக்கில் பிரபாகரனது முக்கியப் பங்கை யாராவது விசாரித்தால் தேவலை.

கேள்வி-4. சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் சட்டத்திற்கு புறம்பாக, பலகோடி அளவிலான பணத்தை பதுக்கியவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பதில்: இம்மாதிரி சட்டங்களுக்கு மாரல் பின்னணி இருப்பதில்லை. முன்பெல்லாம் வெளி நாட்டுக்கு ஒரு இந்தியன் போக வேண்டுமென்றால், இந்திய அரசு அவன் சில நூறு டாலர்களுக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதிக்காது. இந்த அழகுக்கு அவனது சொந்தப் பணத்தை எடுக்கத்தான் இத்தனை கூத்து. ஆகவே என்ன செய்தார்கள் என்றால், வெளிநாடுகளில் கிடைக்கும் பணத்தை அங்கேயே வங்கிகளில் போட்டு, அங்கு அவர்கள் செல்லும் போது அதை எடுத்து பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக வைத்தார்கள். அதுவும் இந்திய அரசுக்க்கு பொறுக்கவில்லை.

இதையெல்லாம் முடக்க நினைத்த இந்திய அரசு என்னென்னவோ செய்து பார்த்தது. அது முடியவில்லை என்றதும் இப்போது மூக்கால் அழுது மன்னிப்பு பற்றியெல்லாம் பேசுகிறது.

கேள்வி-5. இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார் சமீப காலமாக சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்
பதில்: இது பாகிஸ்தானியருக்குத் தெரியுமா? பாக் டிவி காணக் கிடைக்கும்போதெல்லாம் ஜின்னாவை பற்றிய புகழ்ச்சிகளுக்கு முக்கியப் பின்னணியே அவர் பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்ததுதான்.

அப்போதைய முஸ்லிம் லீகில் இருந்த இசுலாமியர்தான் நாட்டைப் பிரித்தது என்பது சரித்திர உண்மை. அதை இப்போதைய ஓட்டு அரசியலுக்காக திரித்துப் பேசினால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.


ரமணா
கேள்வி-6. கடந்த ஆண்டு 31,735 கோடி லாபம் பெற்றதாய் வரவு செலவு அறிக்கை -2009-2010-அறிவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள், எங்களுக்கு நஷ்டம் எனவே தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறோம் என் சொல்லுவது நியாயமா?
பதில்: அவர்கள் கூறுவது லாபத்தில் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-7. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 ரூபாய் மத்திய மாநில அரசு வரிகள். இது சரியா?அரசே இப்படி செய்யலாமா?
பதில்: கண்டிப்பாக தவறுதான் அரசு செய்வது. ஆனால் நாம் ஏதாவது செய்யும் நிலையில் உள்ளோமா?

கேள்வி-8. சதவிகித அடிப்படையில் உள்ள வரியை ஒரு லிட்டருக்கு இவ்வளவு என நிர்ணயம் செய்ய் மறுப்பது நியாயமா?
பதில்: மேலே சொன்ன பதில்தான்.

கேள்வி-8. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பண லிஸ்டில் அரசியல் வாதிகள் பெயரும் இருப்பததால் தானே இந்த கண்ணா மூச்சி ஆட்டம்?
பதில்: அதிலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளே பெரும்பான்மையினராக இருந்தால் வியப்படைவத்ற்கு இல்லை.

கேள்வி-9. ஆன்லைன் வர்த்தகத்தால்தான் உணவுப் பொருட்களின் விஷ விலையேற்றம் என தெரிந்த பிறகும் யாரைக் குஷிபடுத்த இது தொடர்கிறது?
பதில்: எனக்கு ஆன்லைன் வர்த்தகம் பர்றி ஒன்றும் தெரியாது. ஒரு வேளை நீங்கள் எதிர்க்கால ஊக வர்த்தகத்தைக் குறிக்கிறீர்களோ?

கேள்வி-10. இந்தியாவிலே பெட்ரோலுக்கு தமிழகத்தில்தான் 30 % வரி விதிக்கபடுகிறதாமே?
பதில்: என்னிடம் கார் இல்லை. ஆகவே இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாண்டிச்சேரியில் தமிழகத்தை விட வரி கம்மி என்பது மட்டும் தெரியும்.

கேள்வி-10. காங். தலைவர் இளங்கோவனின் திடீர் பல்டி?
பதில்: அன்னையின் ஆணை!!!!!

கேள்வி-11. பாமக மதில் மேல் பூனையா?
பதில்: மதில் மேல் பூனையா அல்லது மதிலின் இரு பக்கத்திலிருந்தும் விரட்டப்படும் பூனையா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

கேள்வி-12 .திமுக காங் கேட்கும் 100 தொகுதிகளை கொடுக்குமா?
பதில்: கொடுக்காது என்றுதான் நினைக்கிறேன். சமீபத்தில் 1980 தேர்தல் திமுகாவுக்கு நினைவில் இருந்தால் அவ்வாறு நடக்காது.

கேள்வி-13. ஸ்டாலின் அழகிரி திடீர் சமாதானம் தொடருமா, தொடர்ந்தால் எது வரை?
பதில்: Unstable equilibrium

ezhil arasu
1952 ல் தொடங்கி 2011 வரை நிகழ் பெற்ற அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய கேள்விகளுக்கு உங்களின் நேர்மையான பதில் என்ன?
கேள்வி-14. அண்ணாவுக்கு பிறகு வாழ்கின்ற திறமையான தலைவர் யார்?

பதில்: திமுகாவிலா, ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு.

கேள்வி-15. கலைஞரிடம் தங்களுக்கு பிடித்த அம்சம் என்ன,என்ன?
பதில்: அவரது அயராத உழைப்பு.

கேள்வி-16. அவரது எந்தத் திறமை கண்டு அதிசியக்கிறீர்கள்?
பதில்: நல்ல ஞாபக சக்தி. அதே சமயம் தேவைப்பட்டால் மறதியை வரவழைத்துக் கொள்வது.

கேள்வி-17. அவரிடன் என்ன மாற்றம் வந்தால் நல்லது என எண்ணுகிறீர்கள்?
பதில்: குடும்ப பாசத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது.

கேள்வி-18. 2006-2011 ஆட்சி காலத்தில் உங்களை மிகவும் நெருடியது எது?
பதில்: உலக ரிக்கார்ட் அளவுக்கு ஊழல்கள்

கேள்வி-19. விடுதலைப் புலிகள் விசயத்தில் அவரின் அணுகுமுறை சரிதானே?
பதில்: சரிதான். 1991-ல் பட்ட துன்பம் போதாதா கலைஞருக்கு!

கேள்வி-20. தனிப் பெரும்பான்மை அவருக்கு கிடைக்குமா?
பதில்: He has to keep the fingers crossed.

கேள்வி-21. அவரது நலத் திட்டங்களில் எது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதாகச் சொல்வீர்கள்
பதில்: அவசர ஆம்புலன்ஸ் திட்டம்

கேள்வி-22. குடும்பத்தில் ஏற்படும் பூசல்களை அவர் கையாளும் விதம் எப்படி?
பதில்: ஏம்பா, அவரே நொந்து போயிருக்கார். இந்தக் கேள்வி தேவையா?

கேள்வி-23. தனது இல்லத்தை தானமாய் கொடுத்தது கண்டு?
பதில்: தயவு செய்து சிரிப்பு மூட்டாதீர்கள்.


ரமணா
கேள்வி-24. தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்டும் தகவலகள் கோபத்தில் உள்ள ஒரு பகுதி அரசு ஊழியரை சாந்தப்படுத்துமா?
பதில்: பலருக்கு பிரமோஷன் கிடைக்காதே. அவர்கள் சாந்தமடைய மாட்டார்களே.

கேள்வி-25 .அழகிரியாருக்கு திமுகவில் உயர் பதவி வழங்கப்பட்ட பின்னர் ஸ்டாலின் செயல்பாடு என்னவாகும்?
பதில்: தனிப்பட்ட முறையில் நான் அழகிரிக்கே ஆதரவு. ஸ்டாலினை விட அவர் அதிக வல்லவர்.

கேள்வி-26. தினமலரின் செய்தியின்படி தமிழக அரசின் கடன் 1 லடசம் கோடியாய் விட்டதே,இதை எதிர்கட்சிகள் பிரச்சாரம் பண்ணினால் எடுபடுமா?
பதில்: மாதம் ஐம்பதாயிரம் சம்பாதித்தால்கூட ஒரு கோடியை எட்டவே 200 மாதங்கள் ஆகும். அப்படியிருக்க ஒரு லட்சம் கோடியா? அம்மாடியோவ்.

கேள்வி-27. சன் டீவி வீடியோ புகழ் பெங்களுர் சாமியாரை 100 கோடி கேட்டு மிரட்டிய ஆஆஆஆஆஆஆசாமி யாரயிருக்கும்?
பதில்: தெரியாது, அவரது அந்தரங்கம் தெரிந்த முன்னாள் சிஷ்யராக இருக்கலாம்.

கேள்வி-28. முதல்வரின் சமீபத்திய டெல்லி விஜயம் திமுகவுக்கு சறுக்கலா?
பதில்: காங்கிரசுட கூட்டணி முடிவாகி யாருக்கு எவ்வளவு சீட் எனத் தெரிந்தால்தான் அவரது தற்போதைய டில்லி விஜயம் பற்றிக் கருத்து கூற முடியும். அவ்வாறு சரியாக முடிவாகாது முடமானால், சங்குதான்.

மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது