12/28/2012

தந்தி போவுது தபால் போவுது

இப்படி ஒரு விளையாட்டாம்.

இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர்.

இப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர். தந்தி போவுது தபால் போவுது திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர். 

இப்போ எதுக்கு இது பத்தி பேசறே என்னும் முரளி மனோகருக்கான பதில்தான் இப்பதிவு.

சமீபத்தில் 1969-ல் வெளியான படம் தர்தீ கஹே புகார் கே (நிலம் என்னும் நல்லாள் அழைக்கிறாள்) என்ற படத்தில் ஒரு சீன். ஜீதேந்திரா வயலில் இருக்க, அவன் அண்ணன் மகன் வந்து வீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அம்மா அழுகிறாள் என பதட்ய்டத்துடன் கூற, ஜீத்தேந்திராவும் அங்கு சென்று கூடவே ஒப்பாரி வைப்பார். தந்தியில் என்ன விஷயம் என யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருமே படித்தவர்கள் இல்லை. கிராம ஆசிரியர் அபீ பட்டாசார்யா வந்து நல்ல விஷயம்தான் எனக் கூறும்வரை அமர்க்களம் நீடிக்கும்.

இங்கு நான் சொல்ல வந்தது தந்தி என்றால் சராசரி இந்தியர்கள் பதறுவது பற்றியே. ஆனால் தற்சமயம் தந்திகளை யாராவது அனுப்புகிறார்களா? நன் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ஒரு தந்தி அனுப்பினேன், ஏனெனில் விலாசதாரரிடம் ஃபோன் இல்லை. அதன் பிற்கு லேது. ஆண்டு துவக்கத்தில் தபால் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள், அவர்களுள் தந்தி ஊழியர்கள் அதிகம். ஆனால் தற்சமயம் அதுவும் இல்லை. கூரியர் வந்து விட்ட இக்காலத்தில் ஆர்டினரி தபாலே இல்லை என ஆகிவிட்டது. சில அரசு சார் கடிதங்கள் மட்டும்தான் தந்தியில் அனுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.

ராஜேஷ் கன்னாவின் இப்பாடல் காட்சிகள் இப்போது காணக்கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.



ஒரு வேளை கிராமங்களில் இன்னும் இதெல்லாம் நடக்கிறதா எனத் தெரியவில்லை.? யாராவது சொல்லுங்கப்பூ.

இப்பல்லாம் தந்தி பற்றிய விளையாட்டுகளில் மட்டுமே அது பற்றி பேசுவார்கள் போல.

இத்துடன் தொடர்பு உள்ள எனது இன்னொரு பதிவு இதோ.

ஸ்ரீலங்காவில் தந்திக்கு மங்களம் பாடிவிட்டார்கள் போல தெரிகிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்சேர்க்கை: நணபர் நாகராஜன் அன்புடன் அனுப்பிய கௌரி கல்யாணம் பாட்டின் வீடீயோ இதோ:

4 comments:

sury siva said...

Sir,
A telegram to U Sir.

HAPPY NEW YEAR 2013

SUBBU THATHA.

Simulation said...

one of the comments for my blog post

http://simulationpadaippugal.blogspot.in/2012/05/1960-1970.html

நான் சிறுவயதாக இருந்தபோது(1976) ஒரு வீட்டின் ஆம்பிள்ளை பெயருக்கு தந்தி அவரோ அலுவலகம் சென்றிருந்தார்.தந்தியை பெற்றுக் கொண்டவர் அவரின் வயதான தாயார். தந்தி என்றாலே துக்க செய்தி என்பதாக அறிந்து வைத்திருந்த அந்த பாட்டி சமையல் செய்திருந்த சோறு,சாம்பார் இவைகளை கீழே ஊற்றி பாத்திரத்தை கழுவி தனக்கும்,தன் மகனுக்கும் சில உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தயாராக மகன் வருகைக்காக ( அந்த காலத்தில் யார் வீட்டிலும் போன் எல்லாம் கிடையாது) காத்திருந்தார். அவருக்கு துணையாக சில ஆங்கிலம் தெரியாத பெண்மணிகளும் அவர் வீட்டுக்கு சென்று அவருக்குத் துணையாக காத்திருந்தனர்.மகன் வீட்டுக்கு வந்ததும் தந்தியை படித்து விட்டு தம் தாயிடம் என் மனைவியும் ,மகளும் ​நாளை ஊரிலிருந்து புறப்படுவதாக என் மாமனார் தந்தி அனுப்பியுள்ளார் என தெரிவித்தார். அன்றைய தினம் தெருவே இதை கூடிப்பேசி மகிழ்ந்தது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவ ஜோக்.

NAGARAJAN said...

இதே போல் தமிழ் படத்திலும் ஒரு பாடல் உண்டு.

படம் : கௌரிக் கல்யாணம் - ஜெய் சங்கர் நடித்தது.
http://www.youtube.com/watch?v=iV-pTIZdesA

dondu(#11168674346665545885) said...

நன்றி நாகராஜன். பாடலின் வீடியோவை சேர்த்து விட்டேன் இரு பதிவுகளிலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது