5/04/2007

ரொம்ப நாட்களுக்குப் பிறகு புதிர்கள்

ரொம்ப நாளைக்கு அப்புறம் சில புதிர்கள் போடுகிறேன்.

1. நான் இப்போது வேறொரு சூழ்நிலையில் கேட்ட இன்னொரு கேள்வியை இங்கு சற்றே மாற்றி கேட்கிறேன்.
ஜகந்நாத பூபதி தன்னுடைய டூ-சீட்டர் காரை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருக்கிறார். நல்ல மழை, மாலை மறையும் நேரம். பஸ்கள் ஒன்றும் தென்படவில்லை. அவர் வேலப்பன் சாவடி அருகில் வரும்போது ஒரு பஸ் நிறுத்தத்தில் கீழ்க்கண்டவர்களைப் பார்க்கிறார்.
அ) செத்து விடுவார் போன்ற தோற்றத்தில் ஒரு கிழவி ஆஸ்பத்திரி செல்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்.
ஆ) ஜகந்நாத பூபதியின் உயிரை ஒரு காலத்தில் காப்பாற்றிய உயிர் நண்பன் ஒருவன் நிற்கிறான்.
இ) ஒரு அழகான 20 வயது பெண் நிற்கிறாள்.
டூ-சீட்டர் காரில் இன்னும் ஒருவருக்கு மட்டும்தான் இடம் என்ற நிலையில் ஜகந்நாத பூபதி என்ன செய்யப் போகிறார்?

2. அனாமத்து போன் காலில் வந்த தகவல்படி ஒரு கொலைகாரன் ஒரு வீட்டில் இருப்பதாக நிச்சயமாகத் தெரிகிறது. அவன் எப்படியிருப்பான் என்பது கூட தெரியாது. ஆயினும் அவன் பெயர் ராமசுப்பிரமணியம் என்பது மட்டும் தெரியும். அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது நால்வர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் தச்சர், இன்னொருவர் லாரி டிரைவர், மூன்றாமவர் மருத்துவர், நான்காமவர் மெக்கானிக். போலீஸ்காரர் ஒரு தயக்கமுமில்லாமல் தச்சரை பிடித்து விட்டார். அவர்தான் கொலைகாரர். ஆனால் போலீஸ்காரர் அதை எப்படி எடுத்த எடுப்பிலேயே கண்டு கொண்டார்?

3. ஒரு குட்டிச் சிறுமியின் கார்டியன் அவளை அந்த வீட்டுத் தோட்டத்தில் உள்ள கார் ஷெட் கதவைத் திறக்கவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். ஒரு நாள் அந்த சிறுமி கார்டியன் இல்லாதபோது அந்த ஷெட் கதவை திறந்து விடுகிறாள். அவள் என்ன பார்த்திருப்பாள்?

4. அமெரிக்காவில் பல கடைகளில் விலைகள் முழு டாலர்களாக இருக்காது. விலைகள் $9.99, $99.95 என்ற ரேஞ்சில்தான் இருக்கும். நம்மூர் பாட்டா கலணிகள் விலை போல. இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மனோதத்துவ முறைப்படி $9.99 பத்து டாலர்கள் என்று சொல்லும்போது வரும் உணர்வை விட குறைவான விலைத் தோற்றத்தைத் த்ரும் என்று. ஆனால் உண்மை அதுவல்ல? என்ன காரணம்? இது உண்மையான நிகழ்வு என்பதை மனதில் நிறுத்தவும்.

5. எண்பதுகளில் சென்னை பஸ்களில் சில்லறை பிரச்சினை அதிகம் இருக்கும். ஒரு நாள் தில்லியிலிருந்து விடுமுறைக்காக சென்னை வந்த டோண்டு ராகவன் பஸ்ஸில் செல்லும்போது ஒரு காரியம் செய்தான். அதனால் டோண்டு ராகவனை அந்த கண்டக்டருக்கு பிடிக்காமல் போயிற்று. அவன் என்ன செய்திருப்பான்?

6. தபால் நிலையத்தில் விற்கப்படும் தபால் தலைகள் ஏன் கருப்பு வண்ணத்தில் இல்லை?

7. உலகின் மொத்த ஜனத்தொகை கிட்டத்தட்ட 5,000,000,000 (500 கோடிகள்). அவர்களது இடது கை விரல்களை ஒன்றோடொன்று பெருக்கினால் என்ன தொகை வரும்? கட்டை விரலைக் கூட விரல்களில் சேர்த்து கொள்லலாம். சரியான விடை தெரியாவிட்டாலும் அதன் அளவை உத்தேசமாகக் கூற இயலுமா?

8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன?

9. நீந்தத் தெரியாத ஒருவன் கப்பலிலிருந்து கடலில் விழ, அவனை உயிருடன் காப்பாற்ற இரண்டு மணி நேரம் ஆயிற்று. அவன் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. பக்கத்தில் மரக்கட்டை ஏதுமில்லை. கப்பலிலும் பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றுமில்லை. இது எப்படி சாத்தியம்?

10. கப்பலிலிருந்து கடலில் விழுந்த கன்னியை கடலில் குதித்து காப்பாற்றிய அந்த கன்னியாகுமரிக்காரர், இருவருமே கப்பல் தளத்துக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டதும் என்ன கூறியிருப்பார்?

11. பிரணதார்த்தி ஹரன் நல்ல பையன். தினம் அவனுக்கு ஒரே கனவு வருகிறது. அதில் அவனைச் சுற்றி அழகிய இளம் பெண்களாகவே இருந்து அவனைக் கட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர். ஆனாலும் பிரணதார்த்தி ஹரன் இக்கனவால் மன வியாகூலத்தில் ஆழ்கிறான். ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

Anonymous said...

. நான் இப்போது வேறொரு சூழ்நிலையில் கேட்ட இன்னொரு கேள்வியை இங்கு சற்றே மாற்றி கேட்கிறேன்.
ஜகந்நாத பூபதி தன்னுடைய டூ-சீட்டர் காரை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருக்கிறார். நல்ல மழை, மாலை மறையும் நேரம். பஸ்கள் ஒன்றும் தென்படவில்லை. அவர் வேலப்பன் சாவடி அருகில் வரும்போது ஒரு பஸ் நிறுத்தத்தில் கீழ்க்கண்டவர்களைப் பார்க்கிறார்.
அ) செத்து விடுவார் போன்ற தோற்றத்தில் ஒரு கிழவி ஆஸ்பத்திரி செல்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்.
ஆ) ஜகந்நாத பூபதியின் உயிரை ஒரு காலத்தில் காப்பாற்றிய உயிர் நண்பன் ஒருவன் நிற்கிறான்.
இ) ஒரு அழகான 20 வயது பெண் நிற்கிறாள்.
டூ-சீட்டர் காரில் இன்னும் ஒருவருக்கு மட்டும்தான் இடம் என்ற நிலையில் ஜகந்நாத பூபதி என்ன செய்யப் போகிறார்?


கிழவியை காப்பாத்துவார்....அஸ்க்கு புஸ்க்கு...அவரோட நன்பனை வண்டியை ஓட்டச்சொல்லி கிழவியை காரில் துக்கிப்போட்டுவிட்டு அந்த அழகான பெண்ணுக்கு கம்பெனி கொடுப்பார்...

2. அனாமத்து போன் காலில் வந்த தகவல்படி ஒரு கொலைகாரன் ஒரு வீட்டில் இருப்பதாக நிச்சயமாகத் தெரிகிறது. அவன் எப்படியிருப்பான் என்பது கூட தெரியாது. ஆயினும் அவன் பெயர் ராமசுப்பிரமணியம் என்பது மட்டும் தெரியும். அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது நால்வர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் தச்சர், இன்னொருவர் லாரி டிரைவர், மூன்றாமவர் மருத்துவர், நான்காமவர் மெக்கானிக். போலீஸ்காரர் ஒரு தயக்கமுமில்லாமல் தச்சரை பிடித்து விட்டார். அவர்தான் கொலைகாரர். ஆனால் போலீஸ்காரர் அதை எப்படி எடுத்த எடுப்பிலேயே கண்டு கொண்டார்?

தச்சர் பிச்சுவா கத்தி இல்லைன்னா அவருடைய தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆயுதத்தை வைத்திருக்கிறார்.

3. ஒரு குட்டிச் சிறுமியின் கார்டியன் அவளை அந்த வீட்டுத் தோட்டத்தில் உள்ள கார் ஷெட் கதவைத் திறக்கவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். ஒரு நாள் அந்த சிறுமி கார்டியன் இல்லாதபோது அந்த ஷெட் கதவை திறந்து விடுகிறாள். அவள் என்ன பார்த்திருப்பாள்?

கார்.

4. அமெரிக்காவில் பல கடைகளில் விலைகள் முழு டாலர்களாக இருக்காது. விலைகள் $9.99, $99.95 என்ற ரேஞ்சில்தான் இருக்கும். நம்மூர் பாட்டா கலணிகள் விலை போல. இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மனோதத்துவ முறைப்படி $9.99 பத்து டாலர்கள் என்று சொல்லும்போது வரும் உணர்வை விட குறைவான விலைத் தோற்றத்தைத் த்ரும் என்று. ஆனால் உண்மை அதுவல்ல? என்ன காரணம்? இது உண்மையான நிகழ்வு என்பதை மனதில் நிறுத்தவும்.

டாக்ஸ் பிரசினையில் இருந்து விடுபட


5. எண்பதுகளில் சென்னை பஸ்களில் சில்லறை பிரச்சினை அதிகம் இருக்கும். ஒரு நாள் தில்லியிலிருந்து விடுமுறைக்காக சென்னை வந்த டோண்டு ராகவன் பஸ்ஸில் செல்லும்போது ஒரு காரியம் செய்தான். அதனால் டோண்டு ராகவனை அந்த கண்டக்டருக்கு பிடிக்காமல் போயிற்று. அவன் என்ன செய்திருப்பான்?

பைசா சுத்தமாக சில்லறை வைத்திருந்தது

6. தபால் நிலையத்தில் விற்கப்படும் தபால் தலைகள் ஏன் கருப்பு வண்ணத்தில் இல்லை?

அதன் மீது குத்தும் அச்சு சரியாக தெரியாதல்லவா

7. உலகின் மொத்த ஜனத்தொகை கிட்டத்தட்ட 5,000,000,000 (500 கோடிகள்). அவர்களது இடது கை விரல்களை ஒன்றோடொன்று பெருக்கினால் என்ன தொகை வரும்? கட்டை விரலைக் கூட விரல்களில் சேர்த்து கொள்லலாம். சரியான விடை தெரியாவிட்டாலும் அதன் அளவை உத்தேசமாகக் கூற இயலுமா?

மூன்றிலிருந்து நான்கு செண்டி மீட்டர்கள்

8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன?

நேரோவான படிக்கட்டுகள்...

9. நீந்தத் தெரியாத ஒருவன் கப்பலிலிருந்து கடலில் விழ, அவனை உயிருடன் காப்பாற்ற இரண்டு மணி நேரம் ஆயிற்று. அவன் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. பக்கத்தில் மரக்கட்டை ஏதுமில்லை. கப்பலிலும் பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றுமில்லை. இது எப்படி சாத்தியம்?

அப்படியொன்றும் ஆழமில்லை அங்கே

10. கப்பலிலிருந்து கடலில் விழுந்த கன்னியை கடலில் குதித்து காப்பாற்றிய அந்த கன்னியாகுமரிக்காரர், இருவருமே கப்பல் தளத்துக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டதும் என்ன கூறியிருப்பார்?

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

11. பிரணதார்த்தி ஹரன் நல்ல பையன். தினம் அவனுக்கு ஒரே கனவு வருகிறது. அதில் அவனைச் சுற்றி அழகிய இளம் பெண்களாகவே இருந்து அவனைக் கட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர். ஆனாலும் பிரணதார்த்தி ஹரன் இக்கனவால் மன வியாகூலத்தில் ஆழ்கிறான். ஏன்?

அவனுக்கு கல்யாணமாயிருச்சு சாமி

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் செந்தழல் ரவி அவர்களே.
1. சரியான விடை. இதில் நான் டோண்டு ராகவன் பெயரைத்தான் முதலில் போட்டேன். ஆனால் அவனுக்கு கார் ஓட்டத் தெரியாதே, (ஸ்கூட்டரே ஓட்டத் தெரியாது). ஆகவே ஜகன்னாத பூபதி பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.
5. பாதி சரியான விடை. உண்மையில் நான் என்ன செய்தேன் என்றால், கும்பலான அந்த பஸ்ஸில் கண்டக்டரிடம் 10 ரூபாய்க்கு ஐந்து பைசாக்களும், 10 ரூபாய்க்கு பத்து பைசாக்களும், 10 ரூபாய்க்கு 20 பைசாக்களாகவும் சில்லறை வைத்திருப்பதாக உரக்கக் கூறி, அவற்றை அவரிடம் அளித்து 30 ரூபாய் பெற்றுக் கொண்டதே. உடனேயே பஸ்ஸில் உள்ள பலரும் எனக்கு ஐந்து பைசா பாக்கி, எனக்கு நாலணா பாக்கி என்று கண்டக்டரை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் தலைக்கு மேல் தெரிந்த கண்டக்டரின் உதடுகள் சாவு கிராக்கி என முணுமுணுத்தது லிப் ரீடிங் மூலம் பார்க்க முடிந்தது.
6. சரியான விடை.

மீதி எல்லாம் தவறான விடைகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1 ஜகந்நாத பூபதி தன் உயிர் நண்பனிடம் தன் டூ-சீட்டர் காரைக் கொடுத்து, செத்துவிடுவார் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு கிழவியை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மழையில் நனையும் அழகான 20 வயது பெண்ணுக்குத் துணையாக அந்த பஸ் நிறுத்தத்தில் காத்துக்(pun!)கொண்டிருப்பார்.

2. லாரிடிரைவர், மருத்துவர், மெக்கானிக் எல்லோரும் பெண்கள்

3. கார் ஷெட்டின் உள்புறம்

5. அவர் நடத்துனரிடம் பயணச்சீட்டிற்கான விலையை எல்லாம் 1 பைசா அல்லது 2 பைசா அல்லது 3 பைசா அல்லது 5 பைசா அல்லது 10 பைசா அல்லது 20 பைசா ...... என்று கைநிறைய சில்லறையாகக் கொடுத்திருப்பார். ( அல்லது நடத்துனரிடம் டிக்கட்டை டச் (dutch) முறையில் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார் )

6. பொதுவாக, தபால் தலைகளின்மீது பதிக்கப்படும் மையின் நிறம் கறுப்பாக இருப்பதால்.

7. சுழி. (சிலருக்கு இடது கைவிரல்களே இருக்காது)

8. உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே ஒரு நுழைவு வாயில்தான் இருந்தது

10. தன்னைக் கடலில் தள்ளியது யார் என்று கேட்டிருப்பார்

11. அந்தக் கனவுகளின் நிகழ்வுகள் எல்லாம் இருட்டில் நடக்கின்றன. (அல்லது அவனுக்கு ஏதோ ஒருவிதத்தில் உடல்நலக்குறை உள்ளது)

dondu(#11168674346665545885) said...

1 ஜகந்நாத பூபதி தன் உயிர் நண்பனிடம் தன் டூ-சீட்டர் காரைக் கொடுத்து, செத்துவிடுவார் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு கிழவியை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மழையில் நனையும் அழகான 20 வயது பெண்ணுக்குத் துணையாக அந்த பஸ் நிறுத்தத்தில் காத்துக்(pun!)கொண்டிருப்பார். சரியான விடை, செந்தழல் ரவி ஏற்கனவே கூறி விட்டார்.

2. லாரிடிரைவர், மருத்துவர், மெக்கானிக் எல்லோரும் பெண்கள் - சரியான விடை

3. கார் ஷெட்டின் உள்புறம். தவறான விடை

5. அவர் நடத்துனரிடம் பயணச்சீட்டிற்கான விலையை எல்லாம் 1 பைசா அல்லது 2 பைசா அல்லது 3 பைசா அல்லது 5 பைசா அல்லது 10 பைசா அல்லது 20 பைசா ...... என்று கைநிறைய சில்லறையாகக் கொடுத்திருப்பார். ( அல்லது நடத்துனரிடம் டிக்கட்டை டச் (dutch) முறையில் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார் )- சரியான விடை, நான் ஏற்கனவே ரவியின் பாதி சரியான விடையை எக்ஸ்டெண்ட் செய்து கூறி விட்டேன். உங்கள் விடையும் என் விடையும் ஒன்றையொன்று கிராஸ் செய்துள்ளன. மற்றப்படி டட்ச் ட்ரீட்டுக்கு பஸ்பயணம் என்ன வலைப்பதிவர் சந்திப்பா என்ன?

6. பொதுவாக, தபால் தலைகளின்மீது பதிக்கப்படும் மையின் நிறம் கறுப்பாக இருப்பதால்.-சரியான விடை செந்தழல் ரவி ஏற்கனவே கூறி விட்டார்

7. சுழி. (சிலருக்கு இடது கைவிரல்களே இருக்காது)- பலே, சரியான விடை

8. உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே ஒரு நுழைவு வாயில்தான் இருந்தது. தவறான விடை, ஏனெனில் இக்கேள்வி உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

10. தன்னைக் கடலில் தள்ளியது யார் என்று கேட்டிருப்பார். அமர்க்களமான சரியான விடை.

11. அந்தக் கனவுகளின் நிகழ்வுகள் எல்லாம் இருட்டில் நடக்கின்றன. (அல்லது அவனுக்கு ஏதோ ஒருவிதத்தில் உடல்நலக்குறை உள்ளது). தவறான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சென்ஷி said...

11. அந்த கூட்டத்தில் அவனும் பெண்ணாக இருக்கிறான்.


9. அது உப்புத்தன்மை அதிகமுள்ள கடல். அதில் மிதக்க மட்டுமே முடியும்.

சென்ஷி

dondu(#11168674346665545885) said...

9, 11 இரண்டுமே சரியான விடைகள் சென்ஷி அவர்களே.

அதிலும் அந்த உப்புக்கடலுக்கு சாவுக்கடல் என்று பெயர். இஸ்ரேலில் உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar V said...

ஹ்ம்ம்ம்... சுலபமான கேள்விகள் எல்லாம் விடை வந்து விட்டது போல. :((((

#3 - இது ரொம்ப லாங் ஷாட். அந்த கதவுக்கு பின்னால் ஒரு கார் ந்யூட்ரலில் சரிவில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. சிறுமி கதவைத் திறந்தவுடன் அந்த கார் நகர்ந்து அந்த சிறுமியை கொன்று விடுகிறது. கார்டியன் கைக்கு சொத்து போய் சேர்கிறது.

#4 - அதனால் வியாபாரிகளுக்கு இரட்டிப்பு இலாபம். பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஒரு பென்னியை வாங்காமல் போய்விடுவார்கள். விற்பனை வரியும் குறையும்.

விற்பனை வரி அடுக்குகள் முழு எண்ணிலிருந்துதான் துவங்கும் ($10). $9.99 போன்ற விலைக்கு அதனுடைய முந்திய அடுக்குக்குண்டான வரி விதிப்பு முறை ஏற்கப்படும்.

வெகு சமீபத்தில் :-) 2003-ம் வருடத்திலிருந்து பேட்டா இந்த விலை முறையை விட்டொழித்து விட்டது என்று படித்ததாக நினைவு.

#8 - இடிதாங்கி இல்லாதது மற்றும் பூமி அதிர்ச்சி பாதுகாப்பு இல்லாதது

ரசித்த கேள்விகள் 6, 7, 9 & 11. விடையளித்த நன்பர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் :-)

dondu(#11168674346665545885) said...

ஸ்ரீதர் வெங்கட் அவர்களே, நீங்கள் அளித்ததெல்லாமே தவறான விடைகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jay said...

//8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன?//

மாடி படிகள் குறுகலாகவும், ஏறுவதற்கு இறங்குவத்ற்கும் இதையே பயன்படுத்தியதாலும் மற்றும் மின் இனைப்பு துண்டிக்கபட்டால் தானாக எமர்ஜேன்ஸி விளக்குகள் எரிய எந்த வித ஏற்பாடு இல்லாதது.

//4. அமெரிக்காவில் பல கடைகளில் விலைகள் முழு டாலர்களாக இருக்காது. விலைகள் $9.99, $99.95 என்ற ரேஞ்சில்தான் இருக்கும். நம்மூர் பாட்டா கலணிகள் விலை போல. இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மனோதத்துவ முறைப்படி $9.99 பத்து டாலர்கள் என்று சொல்லும்போது வரும் உணர்வை விட குறைவான விலைத் தோற்றத்தைத் த்ரும் என்று. ஆனால் உண்மை அதுவல்ல? என்ன காரணம்? இது உண்மையான நிகழ்வு என்பதை மனதில் நிறுத்தவும்.//

இது கடையின் கேஷியர்கள் பணம் திருடுவதை குறைபதற்கு எடுக்கபட்ட நடவடிக்கை. கல்லாவிலிருந்து சில்லறை எடுக்க வேண்டுமென்ரால் அதற்கு தகுந்த என்ட்ரிகள் போடனும், அதில் விற்பனை செய்த்து பதிவாகிவிடும். பணத்தை அப்படியே அபேஸ் பன்ன முடியாது.

dondu(#11168674346665545885) said...

நான்காம் கேள்விக்கான விடை சரிதான். அதாவது கேஷ் டில்லரை இயக்க வேண்டியிருக்கும்.

குதுப்மினாருக்கான கேள்வியின் விடை சரியில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன?
//

குதுப் மினார் கட்டிடமே தவறு, அதில் வடிவமைப்பு தவறு இல்லாமலா இருக்கும்!

அந்த கட்டிடத்தில் ஜன்னல்கள் இல்லை. மூச்சுத்திணறி மக்கள் இறந்தனர்.

//
3. ஒரு குட்டிச் சிறுமியின் கார்டியன் அவளை அந்த வீட்டுத் தோட்டத்தில் உள்ள கார் ஷெட் கதவைத் திறக்கவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். ஒரு நாள் அந்த சிறுமி கார்டியன் இல்லாதபோது அந்த ஷெட் கதவை திறந்து விடுகிறாள். அவள் என்ன பார்த்திருப்பாள்?
//

அ. பதுக்கப்பட்ட பணம், பொருள்
ஆ. தாய் தந்தையரின் பிரேதம்
இ. கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் அளித்த இரு விடைகளுமே தவறானவை வஜ்ரா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன? //

அதன் கதவுகள் உள்புறமாகத் திறக்கும்படி இருந்திருந்தால், கூட்டம் உள்ளேயிருந்து நெருக்கியபோது கதவுகளை திறக்கமுடியாமல் போயிருக்கக் கூடும். இதுபோல பிற இடங்களில் நிகழ்ந்ததாக படித்திருக்கிறேன். குதுப் மினாரில் அப்படி இருந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்!

dondu(#11168674346665545885) said...

//அதன் கதவுகள் உள்புறமாகத் திறக்கும்படி இருந்திருந்தால், கூட்டம் உள்ளேயிருந்து நெருக்கியபோது கதவுகளை திறக்கமுடியாமல் போயிருக்கக் கூடும்.//

Bull's eye. 100% சரியான விடை. சில விடலைப்பையன்கள் பெண்களை சீண்டுவதற்காக கதவை சாத்தி அமர்க்களம் செய்தனர். வெளிப்புறமாக திறக்காத கதவருகில் கும்பல் அதிகமாக, மேலேயிருந்து பலர் இவர்கள் மேல் விழ சில நிமிடங்களிலேயே பல மரணங்கள்.

அந்த நேரத்தில் சென்னை தொலைகாட்சி நிலையத்தில் இச்செய்தியை தமிழில் வாசித்த ஷோபனா ரவி அவர்கள் நிலைமைக்கு ஏற்ப முகத்தை இறுக்கமாக வைத்து கொள்ள, ஆங்கில செய்தி வாசிக்கும் பெண் இச்செய்தியை பயங்கர புன்முறுவலுடன் படித்து விட்டு பிறகு எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

கேள்வி 3 மட்டும் பாக்கி. யார் விடை கூறப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, இம்முறை விடைகள் மிக சீக்கிரமாக குறைவான பின்னூட்டத்திலேயே வந்து விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஒரு குட்டிச் சிறுமியின் கார்டியன் அவளை அந்த வீட்டுத் தோட்டத்தில் உள்ள கார் ஷெட் கதவைத் திறக்கவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். ஒரு நாள் அந்த சிறுமி கார்டியன் இல்லாதபோது அந்த ஷெட் கதவை திறந்து விடுகிறாள். அவள் என்ன பார்த்திருப்பாள்? //

தோட்டத்தை தான் பார்த்தாள் அந்தச் சிறுமி. கொடுமைக்கார கார்டியன் அவளை உள்ளேயே பூட்டி வைத்திருந்ததால், அவள் கதவைத் திறந்தது "ஷெட்" இன் உள்ளேயிருந்து. (என்னதான் 'லேட்டரல் திங்க்கிங்' என்றாலும், என்ன கொடுமை இது சரவணன்!)

dondu(#11168674346665545885) said...

//தோட்டத்தை தான் பார்த்தாள் அந்தச் சிறுமி.//
100% சரியான விடைதான். என்ன செய்வது, வாழ்க்கையில் இதற்கு மேலும் பல கொடுமைகள் நடக்கின்றன. முக்கியமாக ஒரு துப்பறியும் அதிகாரி துப்பு துலக்கும்போது நினைவில் வைக்க வேண்டியது ஒரு கொலை நடந்தால் முதல் சந்தேகம் கொலையுண்டவரின் மனைவி அல்லது கண்வர் மேல்தான் விழும் என்பதே.

இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய அந்த பிரபல வக்கீல் (ராம் ஜேத்மலானி என்று நினைக்கிறேன்) கொலைக்கு பின்னணியில் ராஜீவ் காந்தியே கூட இருக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தார். அது உண்மையா இல்லையா என்பது இங்கு பிரச்சினை அல்ல. ஆனால் அந்த வக்கீலின் ஒரு வாக்கியம் என் மனதில் உள்ளது. அதன் தமிழாக்கம்: "தாயையே கொல்வது (matricide) அரசியலில் நடக்காததில்லை."

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar V said...

இந்த பதில் நன்றாக இருக்கிறது.

நானும் ரொம்ப lateral-ஆ யோசிச்சுதான் இதற்கு பதில் சொன்னேன்.

இன்னும் நிறய யோசிக்கனுமோ என்னமோ :-))

dondu(#11168674346665545885) said...

//இந்த பதில் நன்றாக இருக்கிறது.//
3-ஆம் கேள்விக்கான பதிலைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

அடிமைப் பெண் படம், ஹாரி பாட்டர் முதல் புத்தகம் ஆகியவற்றை பார்த்திருந்தால் இந்தக் கேள்விக்கு விடை இன்னும் சீக்கிரமாகவே வந்திருக்கும்.

கேரேஜ் தோட்டத்தில் உள்ளது, சிறுமி காரேஜ் கதவை திறக்கக் கூடாது என்று கூறும்போது, சிறுமி வீட்டில்தான் வசிக்கிறாள் என்பது சாதாரணமாக எல்லோரும் செய்யும் அனுமானம். அது இங்கு சரியாகப் பொருந்தாததால்தான் இக்கேள்வி மட்டும் இவ்வளவு நேரம் எடுத்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சார் 3ஆம் கேள்விக்கு ரொம்ப சோகமான பதில்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது