பாண்டிய நக்கீரன்:
1. தமிழ் புதின எழுத்தாளர்களில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?
பதில்: ரமணி சந்திரன் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர். நேர்மறை எண்ணங்களுடன், நிமிர்ந்த நடையும் கூர்மையான பார்வையும் கொண்ட அவரது கதாநாயகியர் எனக்கு மிகவும் பிடிக்கும். தார்மீக கோபம் கொப்பளிக்கும் ஜோகிர்லதா கிரிஜாவும் எனக்கு பிடித்தமானவரே. அதற்காக சுஜாதாவை மறந்துவிட முடியாதே, நாடோடி மட்டும் சாமானியமானவரா? இன்னும் பலர் உள்ளனர் யாரைக் கூற, யாரை விட?
2. பிடித்த புத்தகம்?
பதில்: தேவனின் மிஸ்டர் வேதாந்தம்.
3. தமிழ்வாணனின் துப்பறியும் கதையில் கல்லுரிக்காலத்தில் ஈடுபாடு உண்டா?
பதில்: உண்டு. ஆனால் கல்லூரிக் காலங்களில் அல்ல, எட்டாம் வகுப்பு காலம் வரைதான்.
4. அவர் ஆங்கில"சேஸ்" களை காப்பிஅடிப்பதாக சொல்வார்களே?
பதில்: சேஸை மட்டுமா காப்பியடித்தார், மற்றவ்ர்களையும் காப்பியடித்தார். முக்கியமானவர்கள் எட்கர் வேலஸ், செக்ஸ்டன் பிளேக் கதைகளை எழுதியவர்கள் ஆகியோர். அப்படியாயினும் தமிழில் சுவையாக எழுதியதை மறக்க இயலாது.
5. அந்த ஆங்கில "சேஸ்"களைப் படித்ததுண்டா?
பதில்: சில சேஸ் கதைகளை சமீபத்தில் அறுபதுகளில் படித்துள்ளேன், Soft center, World in my pocket etc. அவை என் மனத்தைக் கவரவில்லை. கெட்டவர்கள் ஜெயிப்பது போன்ற தீம்கள் எனக்கு பிடிக்காது.
6. ஆங்கில நாவல்களை தொடர்ந்து படித்த நண்பர்களின் ஆங்கிலப் புலமை இன்றும் ஜொலிக்கிறது?
பதில்: அப்படி ஒன்றும் தெரியவில்லையே. பலருக்கு சேர்ந்தாப்போல் நான்கு வரிகள் பிழையின்றி எழுத வரவில்லை என்பதைப் பார்த்துள்ளேன்.
7. இந்த வரிசையில் தாங்கள் உண்டா?
பதில்: ஏதோ ஆங்கிலம் எழுதுவேன், எழுதியாக வேண்டும். இல்லாவிட்டால் மொழிபெயர்ப்பாளனாக எங்ஙனம் குப்பை கொட்டுவதாம்?
8. தற்கால எழுத்தாளர்களில் யார் பிரபலம் (விற்பனை அடிப்படையில்)?
பதில்: யாரோ சேத்தன் பகத்தாம். இன்றுதான் பேப்பரில் பார்த்தேன். எனக்கு பிடித்த வெற்றிகரமான எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங். அவரது ஹாரி பாட்டரை யாரால் மறக்க இயலும்?
9. புத்தக விற்பனை படுஅமர்க்களப்படுகிறதே?
பதில்: ஒரு நல்ல புத்தகம் வெற்றியடைவதை யாராலும் தடுக்க இயலாது என்பதுதான் உண்மை.
10. அதிலும் பிரபல புத்தங்களின் "டூப்பிளிக்கேட்" மலிவான வில்லக்கு விற்கப் படுவதை பற்றி?
பதில்: காலத்தின் அலங்கோலம்.
எழில் அரசு:
டோண்டு சார் இந்த பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)
1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
கம்யூனிஸ்டுகள் எப்போதுமே திருந்த மாட்டாங்க. அஞ்சுலே அறிவுக்கு வேலை கொடுக்காதவங்க ஐம்பதிலேயா கொடுப்பாங்க?
2. மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம்.
நாத்தனார் உடைத்தால் என்ன குடம்?
3. நிறை குடம் நீர் தளும்பாது. குறை குடம் கூத்தாடும்
காலி குடமும் தளும்பாது, தெரியுமா?
4. ஆழம் பார்க்காமல் காலை விடாதே
பக்கத்து வீட்டு பையன் எதற்கு இருக்கான்? அவனை காலை விடச்சொல்லி பார்க்கோணும்னு சொல்ற ரேஞ்சுக்கு சில தலைவனுங்க இருக்காங்களே.
5. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
கொஞ்சம் கையில் பிடிக்கிற அளவுக்கு முள் இருத்தல் நலம். இல்லாவிட்டால் இந்த முள் கையில் குத்தி சங்குதான்.
6. யானைக்கும் அடி சறுக்கும்
பிறகு சறுக்கவே செய்யாது, ஏனெனில் அதனோட எடைக்கு கால் முறிவு நிச்சயம்.
7. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
காக்கைக்குத் தெரியுமா பொன்னின் விலை?
8. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் (திருக்குறள்)
சில இன்னா செய்தவருக்கு அவர் நடுங்கும் அளவுக்கு உதைத்தால்தான் சரிபட்டு வரும் போலிருக்கிறதே.
9. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
ஜாங்கிரி கூடத்தான் தின்னாது. அதுக்கென்ன இப்போ?
10. வெறும் கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்.
12-B மாதிரி பஸ்களில் கடமையாற்றும் ஆஸ்தான ஜேப்படித் திருடர்களின் கூற்றா இது?
தென்காசி:
1. சென்னையில் நாடக சபாக்களின் தற்போதய நிலை என்ன?(வாசகர் வருகை, ஹைடெக் மாற்றங்கள்)
பதில்: நன்றாக இல்லை.
2. நாடகக் குழுக்களில் "பிசி"யாக உள்ள குழு யாருடையது?
பதில்: நண்பர் காஞ்சனா ராதாகிருஷ்ணனுக்கு இக்கேள்வி அனுப்பி வைக்கப்படுகிறது.
3. நாடகக் காவலர் மனோகர் வைத்திருந்த பிரமாண்ட அரங்க அமைப்புகளை என்ன செய்தார்கள்?
பதில்: அவர் பிள்ளை எடுத்து நடத்த முயல்வதாகக் கேள்வி. அப்படித்தானே ராதாகிருஷ்ணன் அவர்களே?
4. ரேடியோ நாடகங்கள் கூட தற்சமயம் சோபிக்கவில்லையே?
பதில்: ரேடியோவையே யார் கேட்கிறார்கள், எஃப்.எம். தவிர?
5. டீ.வி சிரியல்கள் எல்லோரையும் இழுத்துவிட்டதே?
பதில்: உண்மைதான். ஆனால் அவற்றில் வரும் கருத்துகள் பலரை பாதிப்பதால் அவற்றைத் தயாரிப்பவர்களின் கடமை அதிகரிக்கிறது. கோலங்கள் தொல்காப்பியனை இது சம்பந்தமாக நான் கேள்விகள் கேட்டேன்.
6. உங்களுக்கு சீரியல்கள் பார்க்கும் பழக்கம் உண்டா?
பதில்: ஆகா உண்டு.
7. அதை பற்றிய விமர்சனம் (பிடித்த அல்லது பிடிக்காத)
பதில்: நான் ஏற்கனவே கூறியபடி மிக நல்ல முறையில் எடுக்கப்படும் சீரியல்கள் உண்டுதான். ஆனால் அவற்றில் சொல்லப்படும் பல கருத்துகள் பொறுப்பின்றி டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக கூறப்படுவதுதான் கவலையளிக்கிறது.
8. திரைப்பட உலகம் பெரிய கார்பொரேட் கைகளில், செலவுகூட எகிறுதே?
பதில்: காலத்தின் கட்டாயம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்கே ஓடி கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே. அவர்கள் என்னதான் செய்வார்கள்?
9. 4 படங்களை தவிர மற்ற எல்லாம் ஊத்திக் கொண்டதாமே? (அஞ்சாதே, சந்தோஷ் சுப்பிரமணியம், சண்டை, யாரடி நீ மோகினி)
பதில்: மேலே சொன்ன படங்களில் ஒன்றைக் கூட நான் பார்க்கவில்லை. நோ கமெண்ட்ஸ்.
10. அடுத்த வருங்கால முதல்வர் கனவை அப்பாவுக்காக காண முயலும் விஜய்-ன் குருவி கூட ("நாளைய சின்ன தளபதி" இரண்டின் தயாரிப்பு- அரசு செல்வாக்கு etc)பாக்ஸ் ஆபீஸில் சோபிக்கவில்லையே?
பதில்: செல்வாக்கு ரொம்பவுமே ஓவராக இருந்தாலும் கஷ்டம்தான். மக்களுக்கே வெறுப்பு வந்து வேணுமடா இவர்களுக்கு என மகிழ்ச்சி கொள்ளும் காலம் இது.
ராமகிருஷ்ணஹரி:
1. What will happen to leftists if congresss breaks the understanding?
பதில்: ஆதரவு வாபஸ் என்ற பூச்சாண்டி வாபஸ் ஆகும்வரைதான் செல்லும். வாபஸ் ஆன பிறகு அது புஸ்வாணமே. அதுதான் இப்போது நடந்துள்ளது.
2. Will West Bengal Govt get threats of dissolving, based on law and order in the famous "Nandigraam"
பதில்: மாற்று சக்தி வரும்வரை தெரிந்த பிசாசே மேல் என்ற கோட்ப்பாட்டின்படி அங்கு அரசு பிழைக்கிறது. மமதா போன்றவர்கள் உழைத்தால் அரசு வீழ்வது நிச்சயம்.
3. It is told that leftist forces (all) will get less seats if election is ordered?Is it true?
பதில்: அதை மட்டும் முன்கூட்டியே சொல்ல இயலாது. அவசர நிலை பிரகடனம் செய்து நாட்டை திவால் நிலைக்கு கொண்டு சென்ற இந்திராவே மூன்றே ஆண்டுகளுக்குள் திரும்ப வந்துவிட்டாரே.
4. By joining hands with congress the leftists lost their mass base? Is it ok
பதில்: இடதுசாரிகள் மக்களுடன் தொடர்பை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
5. It seems wind blows in favour of BJP and next PM is Sri Advani?
பதில்: பா.ஜ.க. ஏதேனும் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு காரியத்தைக் கெடுக்காமல் இருக்க வேண்டும், மோடி போன்ற ஊழலற்ற மந்திரிகளை அக்கட்சி தரவேண்டும். அப்போது நீங்கள் சொல்வது நடக்கும்.
ரமணாஸ்திரம்:
1. கடைசியில் சிவப்பு கோழிகளின் சாயம் வெளுக்கப் போகிறதா?
பதில்: எப்போதோ வெளுத்தாகி விட்டதே.
2. ஒரு சில பதவிகளுக்காக காட்டி கொடுக்கும் முலாயம்சிங் யாதவ் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவரவர் அரசியல் நிர்ப்பந்தம் அவரவருக்கு.
3. அப்துல்கலாம் கூட எப்படி? யாரைத்தான் நம்புவதோ!
பதில்: ஏன், அவர் என்ன செய்தார்?
4. அணு ஒப்பந்தத்தை விட பயங்கரமான 123 (hide) பற்றி?
பதில்: அது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆகவே நான் இங்கு பேசாமல் இருப்பதே நல்லது.
5. சீனா கூட 123 ல் கையெழுத்து போடாமால் அணு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறதே?
பதில்: தெரியாது, அப்படியா?
6. பா.ஜ.க. வின் நிலை தற்போது?
பதில்: அணுவிஷயத்தில் பாஜகவும் காங்கிரஸ் போன்றுதான் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
7. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன் நிலைப்பாடு?
பதில்: மேலே கூறிய பதிலே இதற்கும்.
8. அமெரிக்காவில் பெரும் கூட்டம் வீட்டுக் கடனால் அல்லலுருகின்றனர் என்பது உண்மையா, மிகைபடுத்தப்படுகிறதா?
பதில்: உண்மை நிலைதான். செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு என்று ஒரு சொலவடை உண்டு. இருந்தால் பாதுஷா இல்லாவிட்டால் பக்கிரிஷா. அமெரிக்க தேசமே கடனில் மூழ்கியுள்ளது.
9. காருக்கு பெட்ரோல் போட தன்னையே கொடுக்கும் (பலான சுகம்) போக்கு உள்ளதாமே?
பதில்: இது நான் கேள்விப்படாத கொடுமை.
10. பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாதது போல் தெரிகிறதே?
பதில்: எப்போது பெரும்பான்மை இருந்ததாம்?
ரமணா:
1. சன் டீவி, கலைஞர் டீவி கோழிச் சண்டை எப்படியுள்ளது?
பதில்: ஆழமாகியுள்ளது.
2. அரசு டீவிக்கு மதுரையில் இடமில்லை பார்த்தீர்களா?
பதில்: அரசின் மைந்தர் டி.வி. ஒன்றையும் வர விடாது.
3. நெல்லையில் சிறப்பு கவனிப்பு அரசு டீவிக்கு, கரன் டீவியை ஒழித்துகட்டவா?
பதில்: கரன் டீவி?
4. சன் டீவியில் காட்டவில்லை (வை.கோ, வி.காந்த், ச.கு) எனக் குற்றம் சாட்டிய அத்துணை பேரும் இப்போ சன் டீவிக்கு வக்காலாத்து? இது எப்படி இருக்கு?
பதில்: எதிரிக்கு எதிரி நண்பன், அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.
5. நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் க.டீவி, ச.டீவிக்கு பின்னால்தான் இல்லையா?
அதில் எள்ளள்வும் ஐயம் இல்லை. கலைஞர் டி.வி. செய்வது அப்பட்டமான காப்பி. காப்புரிமை சட்டப்படி தண்ணி காட்டியிருப்பார்கள் இதுவே மேல் நாடாக இருந்தால்.
6. சன் டீவியின் டிடிஎச் சேவை வெற்றியா?
பதில்: இன்னும் அதன் விலை குறைய வேண்டும். அப்போதுதான் வெற்றி.
7. டாடா அதிபரை இதற்காகதானே மிரட்டியதாக செய்தி வந்தது?
பதில்: அது இப்போது பழைய கதையாகி விட்டதே.
8. மற்ற டீவிகளுக்கு முற்பகல் செய்தது (தீமைகள், இடையுறுகள்) இவர்களுக்கு இப்போ காலதேவன் அழகிரி வடிவில் கொடுக்கிறானா?
பதில்: அது என்னவோ உண்மைதான்.
9. இந்தியாவில் மூன்றாம் அணி கோவிந்தாவானாலும் இங்கே அது நடந்து விடும் போலுள்ளதே? (மருமகன் மாறன் பிள்ளகளின் பணபலம்)
பதில்: இல்லை என்பது எனது அழுத்தமான கருத்து. மூன்றாவது அணி வெறுமனே ஓட்டுகளை மட்டும் பிளக்கும். அதனால் தொங்கு சட்டசபைகள் அல்லது பாராளு மன்றங்கள்தான் வரும்.
10. தொலைதொடர்பு மெஹா டெண்டரில் ஏதோ நடந்ததாக அரசல் புரசலாய் புயல் கிளம்பியதே, அது மீண்டும் தூசு தட்டப்படுமா?
பதில்: தூசு தட்டினால் யாருக்கு லாபம் என்பதை பொருத்தது அது.
பாண்டிய நக்கீரன்:
1. இன்றைய பதிவுலக ஜாம்பவான்களில் முதல் பத்து பேரை வரிசைபடுத்தவும் (name with url)
பதில்: இது வேண்டாத வேலை. ஆளை விடுங்கள். முதல் ரேங்குகளில் நான் குறிப்பிடுபவர்களைப் பார்த்தால் வேறு வினையே வேண்டாம். ஏற்கனவே டோண்டு ராகவன் ரொம்பவும் பீற்றுகிறான் என்று பலர் எழுதி வருகின்றனர்.
2. தமிழ்மணத்தில் ஒரு சில நல்ல பதிவுகள் பலர் கண்ணில் படாமலேயே போகிறதே,ஏதாவது வழி உண்டா?
பதில்: மனம் இருந்தால் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுப்பது கடினமே அல்ல. அப்படி தேர்ந்தெடுத்த பதிவுகளுக்கு இணைப்பு தாருங்கள் அல்லது கூகள் ரீடரில் சேமியுங்கள்.
3. பாலுணர்வு சம்பந்த பதிவுகளுக்கு ஆதரவு குமிகிறதே?
பதில்: வயசுக் கோளாறு. இது எக்காலத்துக்கும் பொருந்தும்.
4. அதுவும் சமீபகாலமாக அவை கொத்து கொத்தாய் வந்து ஆலவட்டம் போடுகின்றதே? நல்லதற்கா?
பதில்: வரட்டுமே, பொழுது போகிறதல்லவா?
5. மலையாள சினிமா போஸ்டர் போல் தலைப்புகள் வைத்து வாசகர்கள் இழுக்கப் படுகிறார்கள் போலுள்ளதே
பதில்: கண் பார்த்து கை வேலை செய்யும் காலம் இது.
6. மலிவான தந்திர விளம்பர யுக்தியின் வெற்றி கண்டு சில நல்ல பதிவாளர் கூட அதை கையில் எடுக்க முயலுகிறார்களே?
பதில்: ஊரே சிரித்தால் கல்யாணம்.
7. இலைமறைவு காய்மறைவு என்பதெல்லாம் போய் பம்பாய் சிவப்பு விளக்கு கதைகள் போல் வலம் வருகிறதே?
பதில்: பாதியாவது மறைத்தால்தான் கவர்ச்சி. முழுக்க திறந்து காட்டினால் மிக சீக்கிரம் எல்லாமே கழண்டு வீழ்ந்து விடும்.
8. ஏற்கனவே இன்றைய இளைய தலைமுறையினர் இந்த சமாச்சாரத்தை"just like that " எனப் பாவிக்கும் போக்கு கண்கூடு.
பதில்: இன்றைய இளையதலைமுறை மட்டும் என்ன புதிதாகவா செய்கிறது. இது காலம் காலமாக நடப்பதுதான். ரோமானியர் காலத்து ஆர்ஜிகள் கேள்விப்பட்டதில்லையா?
9. திரைப் படங்கள், சின்னத் திரை ஆட்டங்கள், பத்திரிகைகளில் வரும் அந்த மாதிரிச் செய்திகள் இளைஞர்களுக்கு தூபம் போடுவது போலுள்ளதே?
பதில்: சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அல்லவா அவை.
10. உங்கள் பதில்கள் ஒரு பொறுப்புள்ள பண்பாடு காக்கும் குடும்பத்தலைவன்
பார்வையில் இருக்க வேண்டும். (வழக்கம் போல் வசதியும் வாய்ப்பும் இருந்தால் அனுபவி ராஜா அனுபவி (skin to skin no sin) என்பது போல் பதில்கள் இருக்கவேண்டாம். கொஞ்சம் சீரியஸ் டோண்டு ராகவன் சாராக)
பதில்: மொக்கை மன்னன் டோண்டு ராகவனிடம் ரொம்பவும் அதிகமாகவே எதிர்ப்பார்க்கிறீர்கள் ஸ்வாமி. என்னது? சீரியஸ் டோண்டு சாரா? எங்கே, எங்கே?
11. பா.ம.க வின் கதை கொஞ்சம் சிரமம் போலுள்ளதே?
பதில்: சற்றே அவசரப்பட்டு விட்டார்கள் போலிருக்கிறது.
12. காடுவெட்டியாரை சும்மா விட்டுவிடுவது போல் பாவ்லா காட்டி கட்சியில் கைது படலம் ஆரம்பம்?
பதில்: கொள்ளையில் கூட்டு என்பது எப்போதுமே நிலைக்காது. சம்பந்தப்பட்டவர்கள்தான் பக்குவமாக காலத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
13. அறிவிக்கும் போராட்டங்கள் பிசுபிசுப்பதாக செய்திகள்?
பதில்: அவர்கள் நலனுக்காகவே போராட்டங்கள் என்பதை சரியாக மறைக்கவில்லை. ஆகவேதான் அப்படி.
14. இதெல்லாம் பார்த்தால் அம்மையார் கூட பிகு பண்ணுவாரே?
பதில்: அம்மையார் சரியானபடி காய்களை நகர்த்தல் நல்லது. ஒரேயடியாக பாமகவை ஒதுக்கினால் அவருக்குத்தான் நஷ்டம்.
15. ஏற்கனவே கொடநாடு பங்களாவில் மணி அவர்களுக்கு (சட்டசபை கட்சித் தலைவர்) தரிசனம் மறுக்கப்பட்டுள்ளது?
பதில்: அம்மையாரின் பலவீனமே இம்மாதிரியான செய்கைகள்தான்.
16. விஜயகாந்த், சரத்குமார், மாறன் பிரதர்ஸ் யாரு கூடவும் சேர முடியாதே?(விமரிசனத்தின் விபரீதம்)
பதில்: ஏன் முடியாது? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
7. மருத்துவர் ஐயா ஒரு கணக்கு போட்டால் அரசியல் வேறு ஒரு கணக்குப் போடுகிறதே?
பதில்: இப்படிப்பட்ட தருணங்கள்தான் ஜாதகங்கள் மேல் சம்பந்தப்பட்டவருக்கு நம்பிக்கை வரவழைக்கின்றன.
8. இந்த தடவை தனித்து விடப்படுவார் போலுள்ளது? (மகனும் கைவிடுவார்)
பதில்: நிலைமை அவ்வளவு மோசம் இல்லை போலிருக்கிறதே.
9. அவரது சம்பந்தியை கூட காங்கிரசின் தலைமையிலிருந்து தூக்கிவிட்டார்களே?முதலில் ராமதாசுக்கு கல்தா கலைஞரால், அடுத்து கிருஷ்ணசாமி சோனியா அம்மையாரால், அடுத்து யாருக்கு கல்தாவோ?
பதில்: வன்னியர்களுக்கு கொடுக்கப்படும் கரிசனம் அப்படியே உள்ளது போலிருக்கிறதே.
10. முலாயம்சிங் யாதவ் ஆதரவு கிடத்துள்ளதால் இனி அன்புமணி (அமைச்சர் பணி கோவிந்தாவா!(கலைஞர் அவர்களின் ராஜதந்திரம் மீண்டும்) கட்சிப் பணியாற்ற வேண்டியதுதான் போலுள்ளதே? உப்பை தின்னவர் தண்ணி குடிக்கவேண்டாமா!
பதில்: இப்போதாவது கட்சிப் பணியாற்றட்டுமே. அது ஒன்றும் செய்யாமல்தானே மந்திரியானார்? செய்யட்டும் செய்யட்டும்.
தென்காசி:
1. இன்று விற்கும் புத்தகங்களில் சோதிடம் சார்ந்த புத்தகங்களுக்குத்தான் கிராக்கி ஏன்?
பதில்: எப்போதுமே அம்மாதிரி புத்தகங்களுக்கு மார்க்கெட் உண்டு. இன்னமும் பஞ்சாங்கங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. "பத்திரிகைகள், சினிமா போன்றவை காலப்போக்கில் இவ்வாறு மாறுவது தவிர்க்க முடியாதது. இன்றைய ‘வெகு ஜனப்’பத்திரிகைகளின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், மாற்றம் புரியும். மாறாத பத்திரிகை என்று தேடினால், ஸ்ரீரங்கம் கோயில் வாக்கியப் பஞ்சாங்கம் ஒன்றைத்தான் உடனே சொல்ல முடிகிறது" என்று சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதுமில் கூறியதில் அர்த்தம் உண்டு. பஞ்சாங்கத்தை மாற்ற நினைத்தாலும் அதன் தீவிர வாசகர்கள் கோபித்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
2. முக்கால்வாசி டீ.வி.களில் வாஸ்து, பெயர் மாற்றுதல், கல் அணிதல் களைகட்டுகிறதே? அதிகம் பேர் நம்புவதனால்தானே?
பதில்: மூட நம்பிக்கைகளுக்கு காலமோ, இடமோ ஒரு பொருட்டே அல்ல.
3. பகுத்தறிவு சிங்கங்கள் கூட யாகம்,சோதிடம் என் அலைவதாக தகவல், உண்மையில்லையா?
பதில்: உண்மையே.
4. ஒரு சில கட்சிகள் ஜாதகம் பார்த்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர் இல்லையா?
பதில்: சில கட்சிகள்தானா?
5. மனிதன் எவ்வளவு நாத்தீகம், பகுத்தறிவு பேசினாலும் 50 வயதுக்கு மேலே கோயிலே சரணம் என்றுதானே இருக்கிறார்கள்-பக்தி என்று வரும் போது ஜாதகம், சகுனம் பார்ப்பது, சூலம் பார்ப்பது, எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதானே?
பதில்: பக்தி இருப்பதால் மட்டும் மூடநம்பிக்கைகள் இருக்கும் எனக் கூறுவது சரியில்லை. என்ன, வயதாக வயதாக மனமும் தளர்கிறது. வாழ்க்கையில் விழும் அடிகளும் அதிகம். எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலை.
அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
குடும்ப உறவுகளில் வன்முறையும் அடிமைத்தனமும்
-
ஏன் நம் குடும்ப உறவுகளில் இத்தனை வன்முறையும் அடிமைத்தனமும் உள்ளது? நாம்
முழுமையாகவே உலகியலில் மூழ்கியிருக்கிறோம். இன்னொரு அகவாழ்க்கை இல்லாமல்
இருக்கிறோம்.
1 day ago
