8/31/2006

கடன்பட்டார் நெஞ்சம் போல....

ராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ராவணனை பீடிக்க ஆரம்பிக்கின்றன. அவனது அஸ்திரங்கள் ஒவ்வொன்றாகத் தீர்ந்துபோக, அவன் கிரீடமும் ராமர் விட்ட அம்பால் கவர்ந்து போக செய்வதறியாது நிற்கிறான். என்னதான் தவறிழைத்திருந்தாலும் சுத்த வீரனல்லவா. ஓடாமல் நிற்கிறான். அதே சமயம் ராமரும் சாமான்யமானவரா? பகைவனுக்கே அருள்பாலிக்கும் திருமாலின் அவதாரமல்லவா? அப்போதே நினைத்திருந்தால் நிராயுதபாணியாக நின்ற ராவணனை கொன்றோ சிறையெடுத்தோ யுத்தத்தை முடித்திருக்கலாம். ஆனாலும் அவ்வாறு செய்யவில்லை அக்கோதண்டபாணி.

"நீ களைத்திருக்கிறாய். இப்போது உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. ஆகவே நீ போய் ஓய்வெடுத்து, இன்று போய் நாளை வா" எனக் கூறுகிறான் தசரத மைந்தன், சீதாராமனாகிய காகுத்தன். இவ்வாறு தன்னை அனுப்பித்ததற்கு பதில் தன்னைக் கொன்றே போட்டிருக்கலாமே என்று மனம் நொந்த நிலையில் அரண்மனை திரும்புகிறான் தசகண்டன் ராவணன். அன்றிரவு அவன் இருந்த மனநிலையைத்தான் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று கம்பர் அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.

சமீபத்தில் 1959-ல் வந்த "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் ராமராகிய என்.டி.ஆர். ராவணனாகிய பகவதியிடம் இவ்வாறு கூற பகவதியும் அன்றிரவு சிவனை நோக்கிப் பாடுகிறாரே, "இன்று போய் நாளை வாராய், என எனை ஒரு மனிதனும் புகலுவதோ" என்று. ஞாபகம் இருக்கிறதா? "மண்மகள் முகம் கண்டேன் மனம் கலங்கிடும் நிலை இங்கு ஏன் கொடுத்தாய், ஈஸா" என்றும் பிரலாபிக்கிறானே எண்திசையும் முன்னர் ஒரு முறை வென்ற ராவணன். அக்கட்டத்தைத்தான் கம்பர் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று விவரிக்கிறார்.

அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு கம்பரின் காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.

அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப நாட்டார் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது கம்பரே பாடமாட்டாரா என்ன.


மேலே italics bold-ல் உள்ள இரு பாராக்கள் மாற்றப்பட்டுள்ளன. கீழே பார்க்கவும்.

பை தி வே, இந்த வட்டத்திலிருந்து அரசன் கூட தப்ப முடியாது என்பது மார்க்கோ போலோ அவர்களது பிரயாணக் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நண்பர் இரா. முருகன் இதை அழகாக எழுதியுள்ளார். அதில் வரும் செந்தர் பந்தி என்னும் அரசன் பெயர் சுந்தர பாண்டியனைக் குறிக்கும். அவர் வார்த்தைகளில்:

"யாராவது கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த ஆள் தெருவில் போகும்போது, கடன் கொடுத்தவன் சரசரவென்று அவனைச் சுற்றி ஒரு வளையம் வளைந்து விடுகிறான். பணத்தைத் திரும்பத் தரும் வரை அவன் அந்த வளையத்துக்குள்ளேயே நிற்க வேண்டியதுதான். செந்தர் பந்தியே ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி, இந்தோ தரேன் .. அந்தோ தரேன் என்று நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து சுந்தரபாண்டியனன விடுவித்துப் போனார்கள். (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அதற்கு முன் அடகு வைத்தானா என்ன?)"

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடன் வாங்குவது/அளிப்பது, அதற்கான வட்டி தருவது/பெறுவது ஆகிய அனைத்துமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் தூண்கள். இதில் அரசு தேவைக்கு மேல் தலையிடாமல் இருப்பதே நல்லது. அரசியல் காரணங்களுக்காக திடீரென ஒரு சாராரின் அத்தனைக் கடன்களையும் தள்ளுபடி செய்வதன் மூலம் பல தவறான சமிக்ஞைகளே மக்களிடம் செல்லுகின்றன. கடன் தள்ளுபடியால் சிலர் சந்தோஷப்படலாம். ஆனால் அக்கடனை முதலிலேயே ஒழுங்காகக் கட்டியவன் ஏமாளியாகவல்லவா ஆகிறான். அடுத்த முறை அவன் கடனை ஒழுங்காகக் கட்ட விரும்புவானா? அதே நேரத்தில் பேங்குகளும் சம்பத்தப்பட்டப் பிரிவினருக்குக் கடன் வழங்க முன்வருமா? இப்படியே போனால் "கடன் அளித்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றுதான் மாற்றி எழுத வேண்டியிருக்கும். இந்த அழகில் முன்னாள் மந்திரி ஒருவரின் கடனும் இம்மாதிரி குருட்டுத்தனமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை படித்த போது எங்கு அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

இப்பதிவின் உந்துதல் எனது முந்தையப் பதிவு ஒன்றில் நான் பொருளாதாரக் காரணிகளைப் புறக்கணித்து காரியம் செய்ததில் இரண்டு நாடுகளே வரை படத்திலிருந்து மறைந்ததைப் பற்றி குறிப்பிட்டதேயாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: எல்லப்பன அவர்கள் கேட்ட ஒரு கேள்வி என்னை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டது. அதாவது கடன் பட்டார் நெஞ்சம் போல என்று கம்பர் கூறவில்லை. அது ராமாயணம் பற்றிய தனிப்பாடலில் வருகிறது. இது பற்றி ராமாயண நிபுணரான ஹரி கிருஷ்ணன் அவர்கள் அழகான முறையில் எழுதியுள்ளார். அது பின்னூட்டதிலிலுள்ளது. இப்போது இப்பதிவில் சிறிது மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதை மூலப் பதிவில் செய்வது யோக்கியமான வேலையாக இருக்காது. நான் செய்த தவறை அவ்வாறு மறைக்க விருப்பம் இல்லை. ஆகவே இங்கு அதை செய்கிறேன்.

அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு தமிழகத்தில் சில நூற்றண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.

அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இப்புலவர் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது ஒரு புலவர் பாடமாட்டாரா என்ன.


அன்புடன்,
டோண்டு ராகவன்

51 comments:

dondu(#11168674346665545885) said...

சுதந்திரா கட்சியை சமீபத்தில் 1959-ல் நிறுவியதிலிருந்து ராஜாஜி அவர்களௌம் தேவையின்றி ஆடம்பரச் செலவுகளௌக்கு கடன் வாங்கக் கூடாது என்று கூறினார். ஆனால் யார் கேட்டார்கள்? காமராஜ் அவர்கள் ஒரு மீட்டிங்கில் கடன் கொடுத்த ரஷ்யாவோ அமெரிக்காவோ கவலைப்படாதபோது ராஜாஜி ஏன் கவலைப்பட வேண்டும் என்று ஒரு மீட்டிங்கில் கேட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thirumozhian said...

அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,

பதிவு நல்லா இருக்கு. இருந்தாலும் நானும் கொஞ்சம் கருத்து சொல்ல வேண்டி இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்.

திருமொழியான்.

Krishna (#24094743) said...

உலகத்திலேயே மிக அதிகமாக கடன் வாங்கும் நாடு அமெரிக்கா. அங்கேயே கடன் சம்பந்தமான சட்ட திட்டங்கள் மிகுந்த கெடுபிடி நிறைந்தவை. அடிப்படை பொருளாதார அறிவு, தொலைநோக்கு திறன் உள்ள எந்த மனிதனும் சுய நினைவோடு கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டான். இங்கே நடப்பது ஓட்டு வியாபாரம் - ஆட்சி அல்ல. தலைவர்களின் மூடத்தனம் நாட்டின் எதிர்காலத்தையே குட்டிச்சுவராக்கி விடும். இம்மாதிரி மடத்தனமான அபத்தங்களை பொதுமக்களிடம் விற்க, தேர்தலின் போது, நாட்டின் நிதியமைச்சரே வரிந்து கட்டி செயல்பட்டது வெட்கி தலைகுனியத் தக்கது. சமுதாய அக்கறை கொண்ட மற்றுமொரு பதிவு.

dondu(#11168674346665545885) said...

நன்றி திருமொழியான அவர்களே. இன்றுதார் பிளாக்கர் கணக்கு துவக்கியுள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி கிருஷ்ணா அவர்களே. யார் கடனை யார் தள்ளுபடி செய்வது? ரொம்பவும் அராஜகமாகப் போயிற்று இந்த ஓட்டு அரசியல்!

இந்த மூடத்தனத்திலிருந்து ப.சிதம்பரமே தப்பவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//யார் கடனை யார் தள்ளுபடி செய்வது?//

மகன் வாங்கிய கடனை அப்பா கட்டுவதில்லையா?

ஒரு நல்ல அரசு தன் மக்களை சொந்த மகனைப் போல கருத வேண்டும்....

ஒரு கண்ணில் வெண்ணெய்.. ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல குலக்கல்வித் திட்டம் எல்லாம் கொண்டு வரக்கூடாது....

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக் அவர்களே, உங்கள் பொருளாதார அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. மகன் கடனை தந்தை அடைப்பதாம். ஆஹா கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் தந்தைக்கு பணம் வானத்திலிருந்தா கொட்டுகிறது? நம்மைப் போன்ற வரி செலுத்துபவர்களின் பணம் ஸ்வாமி அது.

அது என்ன ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு? உங்கள் உதாரணப்படி பார்க்க வேண்டுமென்றால் ஊதாரியாக செலவழித்து கடனைக் கொடுக்காது ஏய்த்தவனுக்கு வெண்ணெய், வாங்கிய கடனை முதலிலேயே கட்டினான் பாருங்கள் அவனுக்கு ஒரு முக்கியமான இடத்தில் சுண்ணாம்பு வைத்து அடைத்துள்ளார் மஞ்சத் துண்டுக்காரர். அடுத்த முறை அவனும் கடனைத் திருப்பிக் கட்டுவான் என்கிறீர்கள்?

அது இருக்கட்டும் அம்மாதிரி கடனைக் கட்டாது தப்பித்தவர்களுக்கு யாராவது மேலும் கடன் கொடுப்பார்களா, அப்படியே கொடுக்க நினைத்தாலும் அவர்களிடம் அதற்கான நிதி வசதி கிடைக்குமா என்பதையெல்லாம் யோசியுங்கள்.

கடன் தள்ளுபடியில் ஒரு முன்னாள் அமைச்சரும் அடக்கம் என்பதாவது தெரியுமா உங்களுக்கு?

இம்மாதிரியெல்லாம் செய்துதான் இரண்டு நாடுகளே உலக வரைபடத்திலிருந்து அழிந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//லக்கிலுக் அவர்களே, உங்கள் பொருளாதார அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.//

நன்றி....

//மகன் கடனை தந்தை அடைப்பதாம். ஆஹா கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் தந்தைக்கு பணம் வானத்திலிருந்தா கொட்டுகிறது? நம்மைப் போன்ற வரி செலுத்துபவர்களின் பணம் ஸ்வாமி அது.//

நமக்கு சோறு போடுபவனே சோறில்லாமல் எலிக்கறி தின்னும்போது அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது கொலை செய்வதற்கு சமம்....

///அது என்ன ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு?////

வக்கீலின் மகன் வக்கீலாகவும், செருப்பு தைப்பவனின் மகன் செருப்பு தைப்பவனாகவே இருக்க வேண்டும் என வருணாசிரமத் திட்டத்தை அரசே தீட்டுமானால் அது ஒரு கண்ணில் வெண்ணண, ஒரு கண்ணில் சுண்ணாம்பாக இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?

dondu(#11168674346665545885) said...

எலிக்கறி சாப்பிட நேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்தார்களாமா? என்ன உளறுகிறீர்கள்? சகட்டு மேனிக்கு ஒரே ஸ்ட்ரோக்கில் செய்து விட்டார்கள். மூளையை உபயோகிக்கவேயில்லை. முன்னாள் மந்திரியும் எலிக்கறி சாப்பிடுபவர்தானாமா?

மற்றப்படி உங்கள் திசைதிருப்பும் முயற்சிகளுக்கு நான் துணைபோவதாக இல்லை.

"வக்கீலின் மகன் வக்கீலாகவும், செருப்பு தைப்பவனின் மகன் செருப்பு தைப்பவனாகவே இருக்க வேண்டும் என வருணாசிரமத் திட்டத்தை அரசே தீட்டுமானால் அது ஒரு கண்ணில் வெண்ணண, ஒரு கண்ணில் சுண்ணாம்பாக இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?"
இப்பின்னூட்டம் போன்ற பல பின்னூட்டங்களுக்கு எனது ராஜாஜி அவர்கள் பற்றிய இரண்டாம் மூன்றாம் பதிவுகளில் கூறியாகி விட்டது. அங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//எலிக்கறி சாப்பிட நேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்தார்களாமா? என்ன உளறுகிறீர்கள்? சகட்டு மேனிக்கு ஒரே ஸ்ட்ரோக்கில் செய்து விட்டார்கள். மூளையை உபயோகிக்கவேயில்லை. முன்னாள் மந்திரியும் எலிக்கறி சாப்பிடுபவர்தானாமா?//

டென்ஷன் ஆவாதீங்க சார்.. நீங்க உளறுதுனால தான் நான் பதிலுக்கு உளற வேண்டியதா இருக்கு....

அரசு தள்ளுபடி செய்தது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியக் கடனைத்தான்... கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை மற்றும் அரசு வஞ்சித்ததால் அவர்களுக்கு இந்த நிவாரணம் தேவையே.... வயிற்றெரிச்சல் பட்ட துக்ளக்கை தவிர நாடே பாராட்டியது இதை....

BTW, சில நேரங்களில் வாய்க்கால் வழியாக வயலுக்குப் போகும் நீர் புல்லுக்கும் கொஞ்சம் போவதில் தவறில்லை.....


///இப்பின்னூட்டம் போன்ற பல பின்னூட்டங்களுக்கு எனது ராஜாஜி அவர்கள் பற்றிய இரண்டாம் மூன்றாம் பதிவுகளில் கூறியாகி விட்டது. அங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்.
/////

போய்ப் பார்த்து விட்டேன்.... திருப்தி இல்லாததால் தான் திரும்ப திரும்ப சொல்லுகிறேன்.... :-)

Krishna (#24094743) said...

//வக்கீலின் மகன் வக்கீலாகவும், செருப்பு தைப்பவனின் மகன் செருப்பு தைப்பவனாகவே இருக்க வேண்டும்//

இப்படி யாரும் எந்தத் திட்டமும் போடவில்லை. குலக்கல்வித் திட்டம் செருப்பு தைப்பவரின் மகனையும் பள்ளிக்கு வரச்செய்வதற்கான ஒரு முயற்சியேயன்றி, வேறு வகையானது அல்ல. இதை டோண்டு அவர்களே பல முறை விளக்கியுள்ளார். இந்தத் திட்டம் தான் 50 ஆண்டுகளாக நடக்கவில்லையே? எத்தனை செருப்பு தைப்பவர்களின் மகன்கள் டாக்டராகி விட்டார்கள்? அப்படியே ஆகியிருந்தாலும், செருப்பு தைப்பவர் இன்னும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார் - தன் வாழ்க்கைக்கு. தற்கால கல்வித் திட்டத்தால் குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்க முடியுமேயன்றி, நல்ல வாழும் முறைகளை கற்ப்பிக்க இயலாது. vocational, moral classes வழக்கொழிந்து போய் யுகங்களாய் விட்டன. உடனே அதற்கும் 1000 ஆண்டுகளாகிய அடக்கு முறையே காரணம் என்று குரலிடுங்கள். இவர்கள் அனைவருமே சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம் - இவர்களுடைய மூதாதையர்கள் எல்லாருமே 'வாழ்ந்தார்கள்' - எப்படி என்பதற்கு இவர்கள் யாரிடமும் சான்று கிடையாது. மிஞ்சிப் போனால் தன்னுடைய பாட்டன் பேர் வரை தெரிந்திருக்கும். அதற்கு முன் இருந்தவர்களின் பெயரே தெரியாத போது, இவர்களின் வாத்ங்கள் வெறும் கூச்சலாக மட்டுமே இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

"போய்ப் பார்த்து விட்டேன்.... திருப்தி இல்லாததால் தான் திரும்ப திரும்ப சொல்லுகிறேன்.... :-)"

உங்களுக்காகவே இங்கு கிருஷ்ணா அவர்கள் பதில் கூறியிருக்கிறார். பார்த்துக் கொள்ளவும்.

"BTW, சில நேரங்களில் வாய்க்கால் வழியாக வயலுக்குப் போகும் நீர் புல்லுக்கும் கொஞ்சம் போவதில் தவறில்லை....."
கொஞ்சமா? யாருக்குத் தள்ளுபடி செய்வது, அதன் காரணிகள் என்ன என்பதையெல்லாம் பார்க்காது, மூளையை (அது இருப்பதாகத் தெரியவில்லை) உபயோகிக்காமல் வேலையும் செய்திருக்கிறார்கள். என்ன பேசுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கிருஷ்ணா, நீங்கள் என்ன சொன்னாலும் கருப்புக் கண்ணாடி மாட்டியவர்கள் இருட்டு என்றுதான் கூறுவார்கள். விட்டுத் தள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

////உங்களுக்காகவே இங்கு கிருஷ்ணா அவர்கள் பதில் கூறியிருக்கிறார். பார்த்துக் கொள்ளவும்.////

கிருஷ்ணா என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே புரிந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்... :-)

/////கொஞ்சமா? யாருக்குத் தள்ளுபடி செய்வது, அதன் காரணிகள் என்ன என்பதையெல்லாம் பார்க்காது, மூளையை (அது இருப்பதாகத் தெரியவில்லை) உபயோகிக்காமல் வேலையும் செய்திருக்கிறார்கள். என்ன பேசுகிறீர்கள்?/////

சரி. அதனால் எவ்வளவு கோடி நஷ்டம்? எவ்வளவு பணக்காரர்களுக்கு அது உதவியிருக்கிறது என்று உங்களை மூளையை பயன்படுத்தி ஒரு புள்ளிவிவரம் தாருங்களேன்.....

கடந்த 5 ஆண்டுகளில் நிலச்சுவான்தார்களே கூட வயலை சொற்ப விலைக்கு விற்று விட்டு வடநாட்டுக்கு கூலி வேலை செய்யக் கிளம்பி விட்டார்கள்....

நிலைமை அந்த அளவுக்கு மோசமாகத் தான் இருக்கிறது....

dondu(#11168674346665545885) said...

கிருஷ்ணா என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே புரிந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்... :-)

முதலில் உங்கள் புரிதலைப் பார்ப்போம். ரொம்ப சிம்பிளான அதர் ஆப்ஷனின் தீமை என்னவென்றே புரியாமல் இருந்திருக்கிறீர்கள். அதை வஜ்ரா உங்களுக்கு நேரடியாக நிரூபணம் செய்ய வேண்டியதாயிற்று.

அப்படியும் உங்கள் பதிவுகளில் பலர் இன்னும் அதர் ஆப்ஷனை உபயோகித்து மற்றவர் பெயரில் அவதூறு பதிவு போட்டு வருகின்றனர். அதையே உங்களால் கண்டறிய முடியவில்லை. இக்கடன் விஷயத்தை உங்களுக்கு யார் புரிய வைப்பது? போங்கள் சார், போய் உங்கள் பதிவுகளில் விளையாடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

பிரச்சினை பெருசாகிறதுக்குள்ள ஒரு மேட்டர்...

லக்கிலூக்...

வலைப்பதிவு சந்திப்புக்கு வரலையா மக்கா...

கிளம்பு காத்துவரட்டும்...

என்னது என்னோட கருத்தா ?

என் சிற்றறிவுக்கு எட்டிய விஷயம் எதுவும் இல்லையேப்பா...சமீபத்தில் 78ல் பிற்ந்தவன் நானு..எனக்கு ராஜாஜியையும் தெரியாது...ராகவேந்திர ராஜாவையும் தெரியாது...

நான் அப்பீட்ட்...

Krishna (#24094743) said...

//இவர்கள் அனைவருமே சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம் - இவர்களுடைய மூதாதையர்கள் எல்லாருமே 'வாழ்ந்தார்கள்' - எப்படி என்பதற்கு இவர்கள் யாரிடமும் சான்று கிடையாது. மிஞ்சிப் போனால் தன்னுடைய பாட்டன் பேர் வரை தெரிந்திருக்கும். அதற்கு முன் இருந்தவர்களின் பெயரே தெரியாத போது, இவர்களின் வாத்ங்கள் வெறும் கூச்சலாக மட்டுமே இருக்கும்.
//
என்னுடைய இந்த வாதம் லக்கிலுக் அவர்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன். இதனுடைய பின்புலம் "ஆயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு வந்தது எங்கள் சமூகம்" என்பது உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு அடைமொழி. உங்களில் பலருக்கு உங்களின் முப்பாட்டன் பெயரே தெரியாத போது, அவரும், அவருக்கு முந்தைய உங்கள் குடும்பத்தினரும் எப்படி வாழ்க்கை நடத்தியிருப்பார்கள் என்பது உங்களுடைய ஊகத்திற்க்கும் அப்பாற்பட்டது. உங்கள் அடிப்படை தகுதியையே நான் கேள்வி கேட்கிறேன். இப்போது புரியும் என நினைக்கிறேன்.

விவாதத்திற்கு அப்பாற்ப்பட்டு, இந்த விஷயத்தில் என்னுடைய தகுதியை தாங்கள் கேட்பீர்களானால், ஒவ்வொரு மனிதனும் 'திவசம்' வைக்கும்பொழுது தன்னுடைய முந்தய ஏழு தலைமுறைக்கும் சேர்த்து பிண்டம் இட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இத்தகைய பின்புலத்தில் இருந்து வந்ததால், எனக்கு எம்முடைய ஏழு மூதாதையரின் பெயர் மற்றும் பிறந்த நக்ஷத்திரம் வரை தெரியும். என் பாட்டனார் இன்றும் வாழ்கிறார். அவருக்கு அவருடைய ஏழு தலைமுறையும் தெரியும் ஆகவே என்க்கு என் பத்து தலைமுறை பெயர்களும் தெரியும். இப்படித்தான் வேதங்களும், ஜோதிட சாஸ்திரங்களும் வழி, வழியாய் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.

dondu(#11168674346665545885) said...

"ஆகவே என்க்கு என் பத்து தலைமுறை பெயர்களும் தெரியும். இப்படித்தான் வேதங்களும், ஜோதிட சாஸ்திரங்களும் வழி, வழியாய் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன."
எங்கேயோ போயிட்டீங்க கிருஷ்ணா அவர்களே. Hats off!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

அரசு தள்ளுபடி செய்தது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியக் கடனைத்தான்... கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை மற்றும் அரசு வஞ்சித்ததால் அவர்களுக்கு இந்த நிவாரணம் தேவையே.... வயிற்றெரிச்சல் பட்ட துக்ளக்கை தவிர நாடே பாராட்டியது இதை....


அதே அரசாங்கம் தற்போது என்ன செய்துள்ளது தெரியுமா?

இந்த வங்கிகளில் அடுத்தமுறை கடன் வாங்க வரும் விவஸாயி பழைய கடனை கட்டியவராக இருக்கவேண்டும். அதாவது, கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு இனி கடன் கிடையாது.

இனி விவஸாயம் செய்ய முதலீட்டிற்கு வழியில்லை. அதனால் வருங்காலத்தில் தமிழக விவஸாயிகள் நல்ல வளம் பெற்றுவிடுவர். ( ஆஹா, ஆஹா அமானுஷ்ய லாஜிக். இனி நானும் அறிவுசீவிகளோட சேந்துக்கவேண்டியதுதான்.)

Muse (# 01429798200730556938) said...

என் பாட்டனார் இன்றும் வாழ்கிறார். அவருக்கு அவருடைய ஏழு தலைமுறையும் தெரியும் ஆகவே என்க்கு என் பத்து தலைமுறை பெயர்களும் தெரியும்.

க்ருஷ்ணா,

கலக்கோ கலக்கு.

dondu(#11168674346665545885) said...

ஓஹோ, அதான் அமானுஷ்ய லாஜிக் என்றால் என்ன என்று கேட்டீர்களா?

சரிதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"க்ருஷ்ணா, கலக்கோ கலக்கு."
ஆமென்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

எப்படி என்பதற்கு இவர்கள் யாரிடமும் சான்று கிடையாது. மிஞ்சிப் போனால் தன்னுடைய பாட்டன் பேர் வரை தெரிந்திருக்கும்.

டார்வினின் ஆரம்ப கால கண்டுபிடிப்பின்படி முதன்முதலில் மனிதன் தோன்றுவதற்கு காரணமாக இருந்த குரங்கு த்ராவிட குரங்கே என்பதை அவர் லெமூரியா கண்டம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையில் வெளியிட்டிருந்தார். அதை உலக அளவில் யூதர்களும், இந்தியாவில் பார்ப்பனர்களும் திரித்துவிட்டனர். வந்தேறி பார்ப்பனர்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக செய்துவந்த சூழ்ச்சிகளின் ஆரம்ப முடிச்சு அங்கேதான் இடப்பட்டது என்று யூரோப்பிய இந்தியவியல் அறிஞரான ஃபாதர் டம்டாங்க்டிங்க் நிறுவினார். அதை இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று அறிஞர்களான தோழர் புகழ்விரும்பியும், தோழர் பிழைக்கத்தெரிந்த பெரியவரும் ஒத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்ச்சிகளின் விளைவுதான் குஜராத்தில் மதவெறியன் மோடி நடத்திய கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றை அறுத்து குழந்தையை கொல்லும் நிகழ்வு. இதற்கு ஆரியர்களால் உருவான இந்து மதமே காரணம். இந்து மதம் பார்ப்பனர்களின் மதம். ஆனால் இந்துக்கள் எல்லாம் ஆரிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இல்லை. இது புரியாதவர்களை எத்தனை ஈவேராக்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.

பின் குறிப்பு: அடடே. உண்மையில் ரொம்ப ரொம்ப ஈஸியாகத்தான் இருக்கிறது இந்த மாதிரி டைப் செய்வது. ஒரு விநாடிகூட யோசிக்கவேயில்லை.

dondu(#11168674346665545885) said...

"பின் குறிப்பு: அடடே. உண்மையில் ரொம்ப ரொம்ப ஈஸியாகத்தான் இருக்கிறது இந்த மாதிரி டைப் செய்வது. ஒரு விநாடிகூட யோசிக்கவேயில்லை."
I am speechless with admiration for you and Krishna.

Regards,
Dondu N.Raghavan

enRenRum-anbudan.BALA said...

Dondu Sir,
Very good posting. Pl. write more like this :)

dondu(#11168674346665545885) said...

Thanks Bala, will do so.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

வணக்கத்துடன் அவர்களே,

உங்கள் மனதை நான் புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன்.
"அந்த இரண்டு பத்திகளும் விவசாயிகளின் மேலான உங்கள் பார்வையை, மற்றொரு கோணத்தை வெளிப்படுத்துவதாக கருதி நீங்கள் வெளியிடவில்லையா?
கருணாநிதி, ஈ.வே.ரா வை கொச்சை படுத்துவதனால் தான் வெளியிடவில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள் தானே?"
நான் தணிக்கை செய்த முதல் பாரா துரதிர்ஷ்டவசமாக எலிக்கறி உண்ண நேர்ந்தவர்களை நீங்கள் கிண்டலடித்ததாக எனக்கு பட்டதால் அதை எடுத்தேன். இரண்டாவது கருணாநிதி அவர்களை பெர்சனலாக அட்டாக் செய்ததாக நினைத்ததால் எடுத்தேன்.

மறுபடியும் முதல் பாரா. கடனை சகட்டுமேனிக்கு ரத்து செய்ததைதான் குற்றம் சொன்னேன். மூளையை இந்த விஷயத்தில் பிரயோகிக்கவில்லை என்றும் சொன்னேன்.

நீங்கள் பின்னூட்டம் இடுவதை நிறுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Udhayakumar said...

//அதே சமயம் ராமரும் சாமான்யமானவரா? பகைவனுக்கே அருள்பாலிக்கும் திருமாலின் அவதாரமல்லவா? அப்போதே நினைத்திருந்தால் நிராயுதபாணியாக நின்ற ராவணனை கொன்றோ சிறையெடுத்தோ யுத்தத்தை முடித்திருக்கலாம். ஆனாலும் அவ்வாறு செய்யவில்லை அக்கோதண்டபாணி.
//

அப்புறன் ஏன் திருமாலின் அவதாரமாகிய ராமன் ஒளிந்திருந்து வாலியைக் கொன்றான்?

dondu(#11168674346665545885) said...

"அப்புறன் ஏன் திருமாலின் அவதாரமாகிய ராமன் ஒளிந்திருந்து வாலியைக் கொன்றான்?"
உதயகுமார் அவர்களே,
இதே கேள்வியை ஐயப்பன் அவர்கள் தனது இப்பதிவில் வைத்திருந்தார். பார்க்க:
http://iyappan.blogspot.com/2005/01/kaathosu-thaan-naan-pesuven-5.html

அங்கு நான் இட்ட பதில்கள் இதோ:

"இதில் இன்னொரு போர்க்கால யுக்தியும் அடங்கியுள்ளது. வாலிக்கு இந்திரன் கொடுத்த மாலைதான் அதற்குக் காரணம். அதை அணிந்த வாலியுடன் போரிட வரும் எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடும். பிறகு இருக்கவே இருக்கிறது வாலியின் சுய சக்தி. எடுத்த எடுப்பிலேயே கணித முறையில் எதிராளி பலவீனம் அடைந்து விடுகிறார். இது மனித அவதாரத்தில் இருக்கும் திருமாலுக்கும் பொருந்தும். இது ஒரு அழுகிணி வரம் அல்லவா? இதற்கு ஒரே மாற்று மறைந்திருந்துக் கொல்வதுதான்."
"வாலி இறக்கும் தருவாயில் கூறுவான்: "ராமா, நீ முதலிலேயே நேரில் என்னிடம் வந்திருந்தால் உன் பிரச்சினையை மிகச் சுலபமாகத் தீர்த்திருப்பேனே! நான் ஒரு வார்த்தை கூறியிருந்தால் ராவணன் கதறிக் கொண்டு சீதையை உன்னிடம் ஒப்படைத்திருப்பானே" என்று.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல். ராமன் நேரடியாக வாலியைச் சந்தித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிறன்மனைக் கவர்ந்த வாலி அதே குற்றம் செய்த ராவணனைக் கண்டித்திருக்க முடியுமா? அப்படியே நடந்திருந்தாலும் அதில் அவதாரக் காரியம் நடந்திருக்குமா?

இன்னொன்று. இப்போது இந்திரன் மாலைக்கே வருவோம். அதை பிற்காலத்தில் அணிந்துக் கொண்ட சுக்ரீவன் ராவணனுடன் துவந்த யுத்ததில் தோற்று ஓடவில்லையா? ஒரு வேளை இப்படியும் இருக்கலாம். அந்த மாலை வாலிக்கு மட்டும்தான் பயன் பட்டிருக்கும் போல.

எது எப்படியாயினும், வானரங்கள் தேவ அம்சம் உடையவர்கள். இந்திரன் அம்சம் வாலி, சூர்யன் அம்சம் சுக்ரீவன். ராமரின் அவதாரக் காரியத்துக்குத் துணை இருக்கவே அவர்கள் பூவுலகுக்கு வந்தனர்.

இதில் வாலி தான் வந்த நோக்கத்தை மறந்து விட்டான். கணினியில் கூறுவது போல இந்த கோப்பு கர்ரப்ட் ஆகிவிட்டது. அதை அழித்தால்தான் கணினி பாதுகாப்பாக இருக்க முடியும்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thirumozhian said...

டோண்டு சார்,

கடன், தள்ளுபடி, இத்யாதி சமச்சாரங்களை விட்டு விட்டு ராமாயணத்தையே பேசுவோம்.
ராமன் மறைஞ்சிருந்து அம்பு விட்டது வெறும் போர்த்தந்திரம் கிடையாது.
வாலி வாங்குனது அழுகுனி வரம்ன்னா, ராமன் ஆடுனதும் அழுகுனி ஆட்டம் தான். மஹாபாரதத்துல பல விதமான தந்திரங்களால கிருஷ்ணன் எதிரிகளைக் கொல்லலியா? கிருஷ்ணனோட சின்ன சின்ன லாஜிக்கல் தந்திரங்கள ஒண்ணும் அமானுஷ்யம்ன்னு சொல்லிட முடியாது(உம்: குந்தி கர்ணன் கிட்ட வாங்குன வரம்) ராமன் மறைஞ்சிருந்து தாக்குறத விட்டுட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமா ஏதாவது செஞ்சிருக்கலாமே? உதாரணத்துக்கு, இந்திரன் குடுத்த மாலையை அவன் தூங்கும் போது திருடி இருக்கலாம் அல்லது ஏதாவது சூழ்நிலையை உண்டாக்கி வாலியையே அந்த மாலையை (கொஞ்ச நேரத்துக்காவது) கழட்ட வச்சுருக்கலாம் ("நான் கொஞ்ச நேரம் அந்த மாலையை போட்டு பாக்குறேனே" என்று தாரை ரூபத்துல யாரையாவது விட்டு கேக்க விட்ருக்கலாம். "ஆம்பளயின்னா மாலையைக் கழட்டி வச்சுட்டு வா"-ன்னு சவால் விட்டுருக்கலாம்.
எனக்கே இவ்வளவு யோசனை வருதுன்னா, மானுடம் வெல்லும்ன்னு அவதாரம் எடுத்த நாயகனாம் கடவுளுக்கு ஏதாவது ஐடியா வந்திருக்க வேண்டாமா?

திருமொழியான்

dondu(#11168674346665545885) said...

திருமொழியான் அவர்களே,

நான் சுட்டியிட்ட பதிவை எழுதிய ஐயப்பன் அவர்கள், ஒரு சுவாரசியமான வாதத்தை அதே பதிவில் வைக்கிறார்.
"சரி எதுக்காக மறைந்து நின்று கொன்றாய் என்றால்..... சற்று யோசித்துப் பார்ப்போம்...ஒரு காலத்தில் இராவணனை வீழ்த்தியவன் தான் வாலி. ஆனாலும் அதன் பின் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது, உடன்பாடு ஏற்பட்டது... எதிரிக்கு நண்பன் தனக்கு எதிரி என்ற வகையில் வாலி அழிக்கப்படவேண்டியவன் தான். ஆனால் மறைந்து நிற்க வேண்டுவதன் காரணம்... இலக்குவன் சொல்லுகிறான்... அடேய் வாலி... எதிரில் நின்று போரிட்டு உன்னை அழிக்கத் தயக்கம் இல்லை.... ஆனால் என் அண்ணன் எதிர் நின்று போரிடும் நேரம்... நீயும் நான் உந்தன் அடைக்கலம் என்று புகுந்தால் உன்னைத் தண்டிக்க இயலாது. நீ செய்த குற்றங்கள் மன்னிக்கத் தகுந்தவை அல்ல.... என்கிறான்."

இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

யப்ப்ப்பா, பின்னூட்டங்களை எல்லாம் படிச்சா, தலை சுத்துது...

***

பதிவு நன்றாக, சூடாக இருக்கிறது :-)

***

//ஆனால் அக்கடனை முதலிலேயே ஒழுங்காகக் கட்டியவன் ஏமாளியாகவல்லவா ஆகிறான். அடுத்த முறை அவன் கடனை ஒழுங்காகக் கட்ட விரும்புவானா? //

ரசித்த வரிகள், யோசிக்க வைத்தன..

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக் அவர்களே,

உங்கள் மனதை புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். சம்பந்தப்பட்ட எல்லா பின்னூட்டங்களைஉம் எடுத்து விட்டேன், நீங்கள் கடைசியாக எழுதியதையும் சேர்த்து. ஏனெனில் அதில் நீங்கள் உங்களை புண்படுத்திய பின்னூட்டத்தை கோட் செய்திருந்தீர்கள்.

மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

நன்றி சார்.....

dondu(#11168674346665545885) said...

சோம்பேறி பையன் அவர்களே,

இம்மாதிரி கடன் தள்ளுபடியானவர்கள்ளுக்கு இனிமேல் கடன் கிடையாது என்றும் அரசு தீர்மானம் செய்திருப்பதாக அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Iyappan Krishnan said...

அன்றிரவு அவன் இருந்த மனநிலையைத்தான் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று கம்பர் அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.
***************

was it said by kambar ? if yes proof please

dondu(#11168674346665545885) said...

எல்லப்பன் அவர்களே,

மிக்க நன்றி. இப்போதுதான் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் தொலைபேசினேன். "கடன் பட்டார் நெஞ்சம் போல" என்று கூறியது கம்பர் இல்லையாம். கம்பர் அதை கூறியதாகக் கருதப்படுகிறது, ஆனால் அது தவறு என்று கூறிவிட்டார்.

ராமாயணத்தில் ஆழ்ந்து மூழ்கி முத்தெடுத்துள்ள ஹரிகிருஷ்ணன் அவர்கள் கூறினால் அதற்கு அப்பீலே கிடையாது.

முழுப்பாடலுடன் இங்கு பின்னூட்டமிடுவதாக வாக்களித்துள்ளார். அதை ஆவலுடன் எதிர்நோக்குகின்ற்றேன். அதை சாத்தியமாக்கிய உங்களுக்கும் மிக்க நன்றி.

பை தி வே, உங்களுக்கு இது பற்றி மேலும் தெரிந்தால் தயவு செய்து பின்னூட்டமிடுங்களேன். நன்றியுடையவனாக இருப்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஹரி கிருஷ்ணன் அவர்களே,

மிக்க நன்றி. அருமையான பாடல். இப்போது என் பதிவில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். செய்து விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thirumozhian said...

அன்புள்ள டோண்டு சார்,

யாரது do'o'ndu, ரொம்பக்கேவலமா எழுதுறது?

திருமொழியான்.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் திருமொழியான்,

உங்களுக்கும் அவனிடமிருந்து எந்தமிழில் மெயில் வந்து விட்டதா? அது போலி டோண்டு. அந்த இழிபிறவியை பற்றி தமிழ்மணத்தில் அறியாதவர்கள் குறைவு.

என்னுடைய இப்பதிவைப் பாருங்கள். http://dondu.blogspot.com/2006/05/4.html

அதன் பின்புலம் புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

எந்தமிழில் --> செந்தமிழில் என்று படிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு சார்,

யாரது do'o'ndu, ரொம்பக்கேவலமா எழுதுறது?

அம்பு பட்ட ராவணன் மட்டுமல்ல, தங்கள் பதிவுகளின் வெற்றிகண்டும் நெஞ்சம் கலங்கும் ராவணர்கள் பலர் உண்டு. இழிபிறவிகளும்.

ஜயராமன் said...

அற்புதமான தங்கள் கருத்துகளுக்கு என் சிறுதுளிகள்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றால் அந்த கடனை அரசாங்கமே திருப்பி கட்டி விட்டது என்றுதான் அர்த்தம். அதனால் பேங்குகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கவர்ண்ட்மென்ட்டுக்குத்தான் நஷ்டம்.

இந்த தள்ளுபடி அவசியமான ஒரு காரியமாகத்தான் தோன்றுகிறது. விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்க்கும்போது அவர்களுக்கு விளைஞ்சாலும், விளையாவிட்டாலும் சிரமம் குறைவதில்லை.

கொஞ்சம் விலை ஏறிவிட்டால் கவர்ண்ட்மெண்ட் அந்த சாமான்களை இறக்குமதி பண்ணி அதை சாப்பிடுபவர்களுக்கு சாதகமாகவே பண்ணிக்கொடுக்கிறது. ஆனால், அந்த சரக்கு விலை இறங்கிவிட்டால் ஒன்றும் செய்வதில்லை.

நிலத்தை வைத்து ஒருத்தன் ஜீவனம் நடத்தி மேலே வர முடியாது என்பதுதான் இன்றைய சூழ்நிலை.

பல குடியானவர்கள் இன்றும் ஏதோ காரணங்களினால், (பரம்பரையாக வந்தது, தனக்கு மட்டும் உபயோகத்துக்கு, வேற ஜீவனத்துக்கு வழி தெரியவில்லை என்று பல காரணத்தால்) வேறு வழியில்லாமல் இதில் முனைகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் கடன் தள்ளுபடி கொஞ்சம் ரிலீப் ஆக இருக்கும். இது அவசியம் தேவைதான். ஆனால், இது தற்காலிமானதுதான். மேலும், ரொம்ப குறைச்சல். வெந்த புண்ணில் சந்தனம் தடவினா மாதிரி. இது ஒரு பர்மெணெனட் தீர்வு இல்லை.


விவசாயமே மலிந்து பலமில்லாமல் போனதுக்கு அரசாங்கம் ஒரு முடிவு கட்டுமா என்பது தெரியவில்லை. பல லட்சக்கணக்கான விவசாயிகளின் ஜீவனத்துக்கு வேற வழி செய்து கொடுக்க வேண்டும். நம் தேசத்தில் வரப்போற வருஷங்களில் விவசாயத்தால் இத்தனை பேர் பிழைக்க முடியாது.

நன்றாக செழிக்கும் ஸர்வீஸ் வேலைகளில் அவர்களுக்கு தகுதியை வளர்த்து கொஞ்சம் புது மாதிரியாக பண்ண வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் விவசாயம், உற்பத்தி எல்லாமே போய் சர்வீஸ் மட்டும்தாம் பலருக்கு சாதம் போடுகிறது.

இதுவே நம் இந்தியாவிலும் நடக்கும் என்று தோன்றுகிறது.

இதற்கான முஸ்தீப்புக்கள் ஏற்கனவே இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வழக்கம்போல, சர்வீஸ் செக்டாரிலும் மேல்மட்ட ஜனங்களே (நான் பிராம்மணர்களை மட்டும் சொல்லவில்லை) அடைத்துக்கொண்டு "நீங்கள் விவசாயமே பண்ணிக்கொண்டிருங்கள். நாங்கள் கொழிக்கிறோம்" என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது ஒரு பெரிய துரோகம்.

இதில் கொடுமை என்னவென்றால், சர்வீஸ் செகடார் (அதாவது சேவகம், உதவி) சூத்திரர்களுக்கு என்றே சாஸ்திரம் சொன்னது. அதில்தான் இன்று பைசா!!

விஷயத்தை விட்டு எங்கேயோ போய்விட்டேன். வழக்கம்போல. சாரம் என்னவென்றால், கடன் தள்ளுபடி ரொம்பவும் நியாயமானதுதான்.

ஆனால், வழக்கம்போல "க்ரீமி லேயர்" லாபம் இதிலும் நடக்கிறது. இதில் அரசியல்வாதிகள் எல்லோருமே உடந்தை. எந்த திட்டம் போட்டாலும், அதில் இவர்களே நடுவில் கை போட்டு அனுபவிப்பது சகஜம்தானே!

அது புதிய நகரம் நிர்மாணம் ஆகட்டும், வேற லைசன்ஸ் விஷயமாகட்டும், பெருத்த லாபம் ஆளும் வர்க்கத்துக்குதான். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

இவர்கள்தான் க்ரீமி லேயர் தத்துவத்துக்கு விரோதிகளாச்சே! அதனால்தான், இப்படி பண்ணுகிறார்கள்.

அப்புறம், இந்த படிப்பு சிஸ்டம் என்பதெல்லாம் ரொம்பவும் சிடுக்காகி விட்டது. ராஜாஜி போட்ட சிஸ்டத்தின் தத்துவம் எதுவாக இருந்தாலும், தவறாக தோன்றிவிட்டதால் இதனால் தேசம் பிளவுபட்டதுதான் மிச்சம். உண்மையான பிரச்சினைகளை தீர்க்க பல சமயம் நல்ல தீர்வுகள் கொச்சைப்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. பாபு காந்திஜியிலிருந்து பலருக்கும் இந்த இக்கட்டு வந்து ரொம்பவும் சங்கடப்பட்டிருக்கிறார்கள்.

இன்று இதைப்பற்றி தூஷித்தோ, பாராட்டியோ பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.

க்ருஷ்ணாவின் பேச்சில் வேகமும் கோபமும் இருக்கிற அளவுக்கு மற்றவை தென்படவில்லை. சாஸ்திரங்கள் பிராமணர்களுக்கு மட்டும் இல்லை. எல்லோருக்கும்தான்.

இந்து சமுதாயத்தில் எல்லோருக்கும் ப்ரவரங்கள் தெரிந்துதான் இருந்திருக்கிறார்கள். ஆனால், பல நூறு வருஷங்களாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த சம்பிரதாயங்களை மற்ற வர்ணத்தார்கள் கை விட்டதுதான் இந்த தசைக்கு காரணம். இதற்கு பல வர்ண கலப்பு பிராமணர்கள் இல்லாதவர்களிடம் அதிகமாக, அதிகமாக, பிராமண சமுதாயம் தன்னை சுருக்கிக்கொண்டு மற்ற வர்ணத்தார்களை தவிர்த்து இந்த நேர்த்தியான பலப்பல சம்பிரதாயங்களை பற்றி சொல்ல தவறியதும் ஒரு முக்கிய காரணம். வர்ண கலப்பு ரொம்பவும் அதிகமாகவே எல்லோரையுமே சூத்திராள் என்று சொல்லி பிராமணர்கள் ஒதுங்கிவிட்டதும் ஒரு தப்பு. இதற்கும் சாஸ்திர சம்மதம் இல்லை. வர்ணம் என்கிற பிரிவுகள் ஜாதிகளாக புரையோடி பல்லாயிரமாக பெருத்ததனால் பிராமணன் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கை.

அதனால், சிலருக்கு பிரவரங்களும், தலைமுறைகளும் தெரிந்திருப்பது அவர்களின் மாறாத உண்மை வேத வாழ்க்கையை காட்டுகிறது.

அதை விட்டுவிட்டவர்களை கேலி பண்ணக்கூடாது.

நன்றி

ஜயராமன் said...

ம்யூஸ்,

///அம்பு பட்ட ராவணன் மட்டுமல்ல, தங்கள் பதிவுகளின் வெற்றிகண்டும் நெஞ்சம் கலங்கும் ராவணர்கள் ....///

பதிவில் "வெற்றி", "தோல்வி" எல்லாம் இருக்கிறதா? இது ஒரு புதிய சமாசாரமாக இருக்கிறதே? இம்மாதிரி கட்சிகட்டுவதால் தமிழ்மணம் "மணத்தது" தான் பலன்.

ராகவன் சாரின் பல பதிவுகள் கருத்து புஷ்டியாக இருப்பது வாஸ்தவம். அதில் அவருடைய அபிப்ராயங்கள் அவர் அடித்து சொல்லுவார். அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவருடைய தர்க்கம் ஒசத்திதான். அதற்காக அவருக்கு ஒரு ஷொட்டு!!!

நீங்கள் பதிவே போடுவதில்லை என்று ஏதாவது சமீபத்தில் விரதமா? ஏன் எழுதுவது இல்லை?

நன்றி

dondu(#11168674346665545885) said...

"கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றால் அந்த கடனை அரசாங்கமே திருப்பி கட்டி விட்டது என்றுதான் அர்த்தம். அதனால் பேங்குகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கவர்ண்ட்மென்ட்டுக்குத்தான் நஷ்டம்"
ஏற்றுக் கொள்ள வேண்டிய பாயிண்ட். ஆனால் அதே சமயம் கடன் இம்மாதிரி தள்ளுபடியானவர்களுக்கு புதுக் கடன் கிடையாது என்றும் கூறப்படுகிறதே? என்ன சமாச்சாரம் இது?

"ஆனால், வழக்கம்போல "க்ரீமி லேயர்" லாபம் இதிலும் நடக்கிறது. இதில் அரசியல்வாதிகள் எல்லோருமே உடந்தை. எந்த திட்டம் போட்டாலும், அதில் இவர்களே நடுவில் கை போட்டு அனுபவிப்பது சகஜம்தானே!"
இம்மாதிரி சகஜம் என்று விட்டு விட்டுத்தானே குடியே கெடுகிறது. மேலும் கூட்டுறவு வங்கிக் கடன்கள் மட்டும்தானே ரத்து செய்யப்பட்டனா? பேங்குக் கடன்கள்?

இப்போது கிருஷ்ணா அவ்ர்கள் பின்னூட்டத்துக்கு வருகிறேன். தாங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டு வந்ததை சேலஞ்ச் செய்தார் அவர் அவ்வளவுதான். அவ்வாறு ஏன் தான் கூறினார் என்பதையும் விளக்கினார். உனக்கு மட்டும் தெரியுமா என்று கேட்கக் கூடிய கேள்விக்கு அவர் முன்கூட்டியே பதிலளித்ததுதான் திவசம் போது செய்யும் காரியங்களை பற்றி. அவர் அவ்வாறு தெரியாதவர்களை நிச்சயம் பரிகாசம் செய்யவில்லை. அவரது வாதம் அற்புதமாக இருந்தது என்பதை மறுபடியும் இங்கே கூறுவேன்.

"உண்மையான பிரச்சினைகளை தீர்க்க பல சமயம் நல்ல தீர்வுகள் கொச்சைப்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்று. பாபு காந்திஜியிலிருந்து பலருக்கும் இந்த இக்கட்டு வந்து ரொம்பவும் சங்கடப்பட்டிருக்கிறார்கள்.

இன்று இதைப்பற்றி தூஷித்தோ, பாராட்டியோ பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை."
உண்மை. ஆனால் தூஷனை ரொம்பவும் அதிகமாக இருந்ததால் அது பற்றிய உண்மைகளை எழுத வேண்டியதாயிற்று. மற்றப்படி மாமனிதர் ராஜாஜி அவர்களுக்கு எனது டிஃபன்ஸ் தேவையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் பதிவே போடுவதில்லை என்று ஏதாவது சமீபத்தில் விரதமா? ஏன் எழுதுவது இல்லை?"
உங்களுடன் சேர்ந்து நானும் ம்யூசுக்கு இக்கேள்வியை வைக்கிறேன்.

பை தி வே இன்று உங்கள் செல்லுக்கு ஃபோன் செய்தேன். நீங்கள் அருகில் இல்லைபோலிருக்கிறது. ஆகவே மிஸ்டு காலாக விட்டேன்.

விஷயம் ஒன்றுமில்லை இப்பதிவில் கூறியதன் அடிப்படையையே மாற்றும்படி ஆயிற்று. அதாவது கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று எழுதியது கம்பன் இல்லை எனத் தெரிந்தது.

அது பற்றி ஏதேனும் கமெண்ட்? ஜயராமன் மற்றும் ம்யூஸ்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

///ஆனால் அதே சமயம் கடன் இம்மாதிரி தள்ளுபடியானவர்களுக்கு புதுக் கடன் கிடையாது என்றும் கூறப்படுகிறதே? என்ன சமாச்சாரம் இது?///

இதைப்பற்றி தீர்மானமாக எனக்கு தெரியவில்லை. இதுவரை பண்ணின பல கடன்தள்ளுபடி திருவிழாக்களில் நம் சர்க்கார் இப்படி ஒரு சட்டம் போடவில்லை. அதனால், இந்த தடவை இப்படி ஒரு கன்டிஷன் இருக்கா என்றே சந்தேகமாய் இருக்கிறது? நீங்கள் ஏதாவது லிங்க் கொடுக்க முடியுமா?

மற்றபடி கூட்டுறவு பேங்குகள் மட்டுமே தமிழ்நாட்டு சர்க்காரின் கண்ட்ரோலில் இருக்கிறது என்பதே இந்த தள்ளுபடி தமாஷ் மற்ற பேங்குகளை எட்டாத காரணம்.

இந்த கூட்டுறவு பேங்குகளில் பல ஏற்கனவே ஐ.சி.யூ.வில்தான் இருக்கின்றன. இதற்கு ஒரு நிரந்தர தீர்மானம் அரசாங்கம் எப்போது பண்ணுமோ தெரியவில்லை.

தங்கள் பதிவுக்கு நன்றி!!

ஜயராமன் said...

////பை தி வே இன்று உங்கள் செல்லுக்கு ஃபோன் செய்தேன். நீங்கள் அருகில் இல்லை போலிருக்கிறது.////

இதை படித்த பிறகு பார்த்தேன். மிஸ் பண்ணினதுக்கு மன்னிக்கவும். கார்த்தாலை 7:37க்கு போன் பண்ணினதாக வருகிறதே? இது சரியா? நான் நேற்றிரவு (உண்மையில் இன்று காலை) தான் பம்பாயிலிருந்து வந்திருந்தேன். ஏர்போர்ட் தூக்க கலக்கத்தில் போனை எங்கேயோ தூக்கிபோட்டு தூங்கினவன்தான்.!!! அதனால், உங்களிடம் பேச முடியவில்லை. மன்னிக்கவும்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லை, ஜயராமன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

நன்றாக செழிக்கும் ஸர்வீஸ் வேலைகளில் அவர்களுக்கு தகுதியை வளர்த்து கொஞ்சம் புது மாதிரியாக பண்ண வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் விவசாயம், உற்பத்தி எல்லாமே போய் சர்வீஸ் மட்டும்தாம் பலருக்கு சாதம் போடுகிறது.


இதுபற்றி குருமூர்த்தி கடந்த துக்ளக்கில் அழகான கட்டுரை வெளியிட்டிருந்தார். வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைஸேஷன் எந்த மாதிரி வளரும் நாடுகளை இந்த விஷயத்தில் எக்ஸ்ப்ளாய்ட் செய்கிறது என்பதை விளக்கியிருந்தார்.

பதிவில் "வெற்றி", "தோல்வி" எல்லாம் இருக்கிறதா? இது ஒரு புதிய சமாசாரமாக இருக்கிறதே? இம்மாதிரி கட்சிகட்டுவதால் தமிழ்மணம் "மணத்தது" தான் பலன்.

ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய இந்த தவறு டோண்டு ஸாரை எதிரியாக பார்ப்பவர்களின் பார்வையினடிப்படையில் இருந்ததால் ஏற்பட்டுவிட்டது. பலர் டோண்டு ஸாரின் பதிவுகள் பற்றியும், அவருக்கு கிடைத்திருக்கும், கிடைத்துவரும் பின்னூட்டங்கள் பற்றியும் வயிறெரிகிறார்கள். அவர்களது வெற்றி, தோல்வி பற்றிய கற்பனைகளின் அடிப்படையில் எழுதியது என் தவறுதான். சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் ஜயராமன் ஸார்.

நீங்கள் பதிவே போடுவதில்லை என்று ஏதாவது சமீபத்தில் விரதமா? ஏன் எழுதுவது இல்லை?

வழக்கம்போல சரியாகவே கணித்திருக்கிறீர்கள். விரதம்தான் காரணம். கோவி. கண்ணன் ஆறு பற்றி எழுதுமாறு பணித்தார். அதுபற்றி எழுதிவிட்டுத்தான் மற்றவை எழுத உத்தேஸம். நேரம் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அது பற்றி ஏதேனும் கமெண்ட்? ஜயராமன் மற்றும் ம்யூஸ்?

என் நண்பர் ஸ்ரீ ஷங்கர நாராயணனை கேட்டிருந்தேன். மனுஷர் கம்பன் கழகத்தின் பட்டிமண்டபங்களில் பேசுகின்ற ஆள். தகவல் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கும் முன்னதாக ஹரிக்ருஷ்ணன் தயவால் தகவல் கிடைத்துவிட்டது.

டோண்டு ஸார், ஒரு சிறு உதவி. ஹரிக்ருஷ்ணன் செல்பேசி மற்ற தொடர்பு தகவல்களை எனக்கு மெய்ல் செய்ய இயலுமா?

dondu(#11168674346665545885) said...

ஹரி கிருஷ்ணன் அவர்களின் தொலை பேசி எண்ணை உங்களுக்கு மெயில் செய்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது