4/11/2008

டோண்டு பதில்கள் - 11.04.2008

கோவர்த்தனன்:
1. காந்தியின் அஹிம்சா கொள்கைகள் நடப்பு உலகிற்கு சாத்தியமா?
பதில்: காந்தியின் அகிம்சா முறையெல்லாம் வெற்றி பெற வேண்டுமானால் ஆக்கிரமிப்பாளர் நாடு ஜனநாயக அரசாக இருந்து பத்திரிகை சுதந்திரமும் அங்கு இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பிரிட்டனுக்கு பதிலாக நம் நாட்டை நாஜி ஜெர்மனியோ அல்லது ஸ்டாலினின் சோவியத் குடியரசோ ஆண்டிருந்தால் காந்தி அவர்கள் ஒரு பட்டினி முகாமில் சேர்க்கப்பட்டு தடயம் இல்லாமல் போயிருப்பார்.

நடராஜன்: (ஆங்கிலக் கேள்வி தமிழாக்கப்பட்டது)
1. உலகமயமாக்கல் பற்றி திரு. குருமூர்த்தி (துக்ளக்) மற்றும் அதியமான் (உங்கள் நண்பர்) எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்து அவர்களை ஒப்பிட இயலுமா?
பதில்: குருமூர்த்தி அவர்கள் உலகமயமாக்கலை அப்படியே எடுத்து கொள்ளலாகாது, அதை இந்தியமயமாக்க வேண்டுமெனக் கூறுகிறார். அவரது ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச் இது சம்பந்தமாக வேலை செய்து வருகிறது. அதியமானும் சரி நானும் சரி உலகமயமாக்கல் வருவதால் நல்லதே நடக்கும் என நம்புகிறோம். குருமூர்த்தி அடுத்த தளத்துக்கு சென்று விவரங்களுக்குள் போகிறார். மொத்தத்தில் இரண்டு கோஷ்டியினருமே நேருவின் உருப்படாத கொள்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறோம் என புரிந்து கொள்கிறோம். ஆனால் ஒன்று, குருமூர்த்தி அவர்கள் கூறுவது போல நடக்கும் வாய்ப்புகள் குறைவு என்றுதான் படுகிறது. அதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும்.அது பலரது செயல் சுதந்திரத்தை பாதிப்பதாக எடுத்து கொள்ளப்படும் வாய்ப்பு உண்டு. மக்கள் எப்படி எதிர்வினை புரிகின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.

வால்பையன்
சினிமா கேள்விகள்
1.தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் பழக்கம் உண்டா?
பதில்: தியேட்டருக்கு சென்று கடைசியாக எப்போது படம் பார்த்தேன்? சற்றே யோசிக்க வேண்டும். இம்சை அரசனை ஜூலை 2006-ல் பார்த்தேன். அதற்கு பிறகு ஏதும் தியேட்டருக்கு சென்றதாக நினைவில்லை. நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது என்பது தவிர்க்க முடியாத சடங்காகத்தான் என்னைப் பொருத்தவரை இருந்திருக்கிறது. 1981 வரையிலும் அப்படித்தான். டில்லி சென்ற பிறகு இம்மாதிரி படம் பார்ப்பது சற்றே குறைந்தது. ஆனாலும் ரொம்பவும் குறைந்தது என்றால் 1990-களில்தான். என்னவோ மனம் விட்டு போயிற்று. சின்னத்திரையில் அவை அதிகம் காணக்கிடைத்ததும் ஒரு காரணமே. 2001-ல் நான் சென்னைக்கு நிரந்தரமாகத் திரும்பியதும் இன்றுவரை நான் பார்த்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட எல்லாமே எங்கள் ஊர் வெற்றிவேல் மற்றும் வேலன் அரங்குகளில் பார்த்ததுதான். இங்கும் சின்னத்திரை இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று.
2.சிரிப்பு நடிகர்களில் உங்களுக்கு பிடித்தவர் அன்று, இன்று?
பதில்: அன்று நாகேஷ், தங்கவேலு. இன்று விவேக், வடிவேலு.
3.சினிமாவில் பாடல்கள் தேவையா? உங்கள் கருத்து!
பதில்: மனித சரித்திரத்தில் பாடல்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எந்த நிகழ்ச்சிக்கும் பின்னணியாக நம் மனதில் இசை அதிர்வுகள் உண்டாகின்றன. அதை சரியாக உணர்ந்து பின்னணி இசை கொடுப்பவர்கள் மிகுந்த வெற்றி அடைகின்றனர். உதாரணத்துக்கு நான் இட்ட அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம் என்னும் பதிவில் கூறியது போல, நமது எண்ண ஓட்டங்கள் சரியான இசையின் பின்னணியில் அதிக பலம் அடைகின்றன. அதே பதிவில் நான் சுட்டிய அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் என்னும் பாட்டின் மெதுவான வெர்ஷனைக் கேளுங்கள். நான் சொல்வது புரியும்.
ஆக, இசை நம் வாழ்வோடு ஒட்டியிருக்கிறது. பழைய படங்கள் எல்லாமே என் நினைவில் இன்னும் இருப்பதற்கு காரணமா அவற்றில் வரும் பாடல்களால்தான் என்றால் மிகையாகாது. எல்லாவற்றிலும் இசை இருக்கிறது. அதுக்காக வடிவேலு படம் ஒன்றில் ஒரு பைத்தியம் கிட்ட டீக்கடையில் வைத்து மாட்டி அவனிடம் வடிவேலு இசை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு மாத்து மாத்து என்று மாத்து வாங்கியதையெல்லாம் வைத்து இசை குறித்து பயப்பட கூடாது.
பொது கேள்விகள்
1.சமீபத்தில் நடந்த திரைப்பட துறையினரின் உண்ணாவிரதம் நீர் பங்கீட்டிற்காக நடந்ததா அல்லது தமிழ் படங்களை ஓடவிட மறுக்கிறார்கள் என்பதற்காக நடந்ததா?
பதில்: திரைப்படத் துறையினர் எதற்கும் எளிதாக உணர்ச்சிவசப்படுகிறவர்கள். நீங்கள் சொன்ன இரு காரணங்களுமே அவர்களில் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அளவில் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
2.முதன் முதலில் கைபேசி வாங்கிய பொழுது அதை கையாள சிரமம் இருந்ததா?
பதில்: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கையேடு கொடுத்திருந்தார்கள். கணினியை இயக்கிய பழக்கம் இருந்ததால் ரொம்ப சிரமம் இல்லைதான். இருந்தாலும் பயிற்சி பெற பெற மெனுவை உபயோகிப்பதில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.
3.மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அனுபவம் உண்டா?
(எனக்குண்டு அதனால் கேட்கிறேன்)

பதில்: சமீபத்தில் 1973-ல் மாதுங்கா ரயில் நிலையத்தில் வைத்து விரைவு வண்டியில் மாட்ட இருந்தேன். ஒரு புண்ணியவான் சரியான சமயத்தில் காப்பாற்றினார். ஆனால் 42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையிலேயே இருந்தும் அதை உணராமல் இருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உள்ளம் கவர்கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதனின் அருளை நினைத்து என் மனம் விம்முகிறது.

எம்.கண்ணன், பாங்காக்.
1. வெளிநாடுகளுக்குச் செல்ல விருப்பம் இல்லாதது ஏன்? (பணம் காரணம் இல்லையென்று நீங்கள் சொன்னாலும் அதை ஏற்க இயலவில்லை). மும்பையிலும் டெல்லியிலும் வசித்ததால்தானே உங்களுக்கு அங்குள்ள நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. அதுபோல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தால் அங்கு உள்ள நல்ல விஷயங்களும் தெரிய வருமே ? எல்லாமே இணையம் வழி படித்து அனுபவிக்க முடியாது.
பதில்: பணமும் ஒரு காரணமே. ஆனால் அதை விடப் பெரிய காரணம் என் மனம் அதை கிஞ்சித்தும் நாடவில்லை என்பதுதான். விசித்திரமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
2. உங்களுக்கு மகன் உண்டா என தெரியாது. அப்படி இல்லையெனில் அதற்கான
வருத்தம் உண்டா ? இது பற்றி (ஆண் வாரிசு இல்லாததைப் பற்றி) உங்கள் எண்ணங்கள் என்ன?

பதில்: மகன் கிடையாது. ஆண்டவன் கொடுத்ததை வைத்து திருப்தியடைய வேண்டியதுதான்.
3. பதிவுகள் எழுதுவது, உங்கள் பழைய, தற்போதைய காண்டாக்ட்ஸ் தவிர உங்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு எப்படி விளம்பரம் செய்கிறீர்கள்? புது கஸ்டமர்களை எப்படி பிடிக்கிறீர்கள்? இது மாதிரி வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் உண்டு (தற்போதைய இந்திய நிலையில்)?
பதில்: இது சம்பந்தமாக நான் பத்து பதிவுகளுக்கு மேல் போட்டுள்ளேனே. வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் என்னும் லேபல் கீழ் பார்க்கலாம்.
இந்த வரிசையின் அறிமுகப் பதிவில் நான் இட்ட சில வரிகள்:
1. எல்லாவற்றையும் விட முக்கியமானது புது வாடிக்கையாளரைப் பிடிப்பது. எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்? யாருக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் பார்க்கலாம். இதற்கு மட்டும் பின்னால் ஒரு தனிப் பதிவு தேவைப் படும்.
2. உங்களை நீங்கள் அறிய வேண்டும். அதாவது உங்களால் எது முடியும் எது முடியாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவையில்லாது வாக்குறுதிகள் அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது போனால் உங்கள் நம்பகத்தன்மை அடிபட்டு விடும். உதாரணத்துக்கு வேலை எப்போது முடித்துத் தரவேண்டும் அன்று வாடிக்கையாளர் கூறும்போது அது உங்களுக்குத் தோதுப்படுமா என்று பார்த்தே ஒத்துக் கொள்ள வேண்டும். பத்துக்கு ஒன்பது தருணங்களில் அவசரம் என்று வாடிக்கையாளர் கூறுவது உதாராகத்தான் இருக்கும். அவசரமான வேலை என்றால் ஒன்றரை மடங்கு விலை என்று கூறிப் பாருங்கள் அவசரம் என்பது அவசரமாகவே மறைந்து விடும். இது பற்றிப் பின்னால் மேலும் விவரமாகக் கூறுகிறேன்.
3. உங்கள் விலை என்ன என்பதில் தெளிவாக இருங்கள். மொழி பெயர்ப்பாளர்கள் பலர் இதில்தான் கோட்டை விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வேலை சுலபமாகவே இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவே கூட இருக்கலாம். அதை எல்லாம் வாடிக்கையாளரிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு அவர் உங்களுக்கு ஏதோ சலுகை காட்டுவது போலத் தோற்றம் வந்து விடும். இது பற்றியும் அடுத்த பதிவுகளில் மேலும் கூறுவேன்.
4. வாடிக்கையாளர்களின் வாக்குறுதிகளை அப்படியே நம்பி விடாதீர்கள். தங்களிடம் ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருப்பதாகவும் நிறைய வேலை கொடுக்க முடியும் என்றும் ஆசை காட்டுவார்கள். இதுவும் மேலே கூறியதை போன்று அனேகமாக ஒரு உதாராகத்தான் இருக்கும். அவர்களிடம் ஒரே ஒரு வேலை இருந்தாலும் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்கள் அக்கறை முடிந்த அளவுக்கு விலையைக் குறைப்பதே ஆகும். இதை நான் என்னளவில் எவ்வாறு கையாண்டேன் என்பதையும் பின்னொரு பதிவில் கூறுவேன்.
5. தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.
6. எப்போதும் உங்களைத் தொடர்பு கொள்ள ஏதுவாக உங்கள் தகவல் வழிகளைத் திறந்து வைக்கவும். தொலைபேசி வைத்திருப்பது மிக முக்கியம். தொலைபேசி அழைப்புகளை நீங்களே கையாளுவது முக்கியம். குழந்தைகளைத் தொலைபேசியை எடுக்க விடாதீர்கள். அது முடியாது என்றால் உங்களுக்கென்றுத் தனியாக செல்பேசி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும் இருக்க வேண்டும். செல்பேசி "யூனிவர்செல்"பேசியாக மாறக் கூடாது. இதில் பல சாத்தியக் கூறுகள் உள்ளன. அவை பற்றி பிறகு.
7. உங்கள் அப்போதைய நிலை எதுவாக இருப்பினும் அதன் சாதகமான அம்சங்களையே வலியுறுத்தவும். 2002 வரை என்னிடம் கணினி இல்லை. இப்போது உண்டு. இரண்டு நிலைகளையும் நான் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டேன். அது பற்றிப் பிறகு.
8. வேலை செய்தால் மட்டும் போதாது. வரவேண்டிய தொகைகளையும் வசூலிக்கத் தெரிய வேண்டும். இது சம்பந்தமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் குறித்துப் பிறகு விரிவாகப் பேசுவேன்.
மேலே கூறியவற்றையும், மேலும் கூறப் போவதைப் பற்றியும் பேச என்னுடைய யோக்கியதாம்சங்கள் என்ன? சமீபத்தில் 1975-லிருந்து நானே உணர்ந்து கடைபிடித்ததைப் பற்றித்தான் கூறப்போகிறேன். நான் சென்னையில் வெற்றிகரமாகச் செயல் புரியும் ஒரு மொழி பெயர்ப்பாளன் என்றுக் கூறுவதைத் தடுக்க என்னிடம் பொய்யடக்கம் இல்லை.
மேலே கூறியவற்றை விரிவுபடுத்தி பத்து பதிவுகள் மொத்தம் போட்டுள்ளேன்.

4. எல்லா உணவு பொருட்களின் விலையும் ஏறி வருகிறதே? இதற்குக் காரணம் அமெரிக்க பொருளாதார நிலை மட்டுமா? இல்லை க்ளோபல் வார்மிங் எனப்படும் நிகழ்வால் வரும் நிலையா (பார்க்க: கோவி.கண்ணனின் சமீபத்திய சிங்கப்பூர் அரிசி தட்டுப்பாடு கட்டுரை)
பதில்: நீங்கள் குறிப்பிட்ட எல்லா காரணங்களும் சேர்ந்துதான் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
5. உங்களுக்கு மிகவும் அதிக கோபம் வந்தது எப்போது? யார் மீது? ஏன்? இது மாதிரி கோபம் வரும் சமயங்களில் எப்படி உங்களை பழைய சகஜ நிலைக்கு கொண்டு வருவீர்கள்?
பதில்: கோபம் வராத மனிதர்கள் இருக்க முடியுமா என்ன? சமீபத்தில் 1971-ல் என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை வரை நான் கோபப்பட்ட தருணங்கள் அனேகம். காச்சு மூச்சென்று கத்தி ஊரைக் கூட்டி விடுவேன். அதன் பிறகு எனது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதை நிலைநிறுத்த நாம் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் மறுபடி கோபப்பட்டு சந்தியில் நிற்க வேண்டும். அம்மாதிரி ஒரு தருணத்தில் ஆரவாரப் பேய்களெல்லாம் ஆட்டம் போட்டபோது அவற்றை ஓட்டவும் தயங்கவில்லை.

அனானி (04.04.2008 மாலை 5.52-க்கு கேட்டவர்)
1. //ரோஜாவுக்கும் அதை விசேஷ உரமாகப் போடலாம். //சிலர் மனித உரம் போடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மனித உரம் போடுவது கிராமங்களில் வயல்வெளிகளில் மிகவும் அதிகமாக இருந்தது. 33 ஆண்டுகளுக்கு முன்னால் என் பெரியப்பா பிள்ளையின் கல்யாணத்துக்காக பாண்டிச்சேரிக்கருகில் உள்ள வில்லியனூருக்கு சென்றபோது காலையில் வயல் பக்கம்தான் ஒதுங்கினோம். வயல் சொந்தக்காரர் எங்களை அனுமதித்தார். பிறகு கிணற்று பம்பு செட்டு குழாயில் வரும் நீரில் கால்கழுவி பிறகு குளித்து விட்டும் வந்தோம். மனிட உரம் நேரடியாக வேர்களில் படாமல் மணல் ஊடகத்தின் மூலம் செல்வது நல்ல உரம் என்று நினைப்பது விஷயம் தெரியாதவனின் எண்ணம் என்று கூட ஒதுக்கும் வாய்ப்பு உண்டு. நம் பதிவர்களில் விவசாயம் தெரிந்த யாராவது இதற்கு இதை விட சரியான பதிலை அளிக்க இயலும்.

பாலா:
1. அசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம்:
அ) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா? அல்லது ஆ)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்கள் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடிதுடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா? விளக்கமா பதில் சொல்லுங்கய்யா
.
பதில்: நீங்கள் சொல்பவர்கள் எல்லோருமே தாங்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. தானும் கஷ்டப்பட்டு மற்றவரையும் கஷ்டப்படுத்த வேண்டுமென ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. மேலும் ஒரு தேவையில்லாத குற்ற உணர்ச்சியும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அம்மாதிரி பேசும் பலர் மென்பொருள் நிபுணர்களாக இருந்து நன்கு சம்பாதிக்கின்றனர். தேவையற்ற குற்ற உணர்ச்சி.

வஜ்ரா:
1. இந்திய நகரங்கள் அனைத்துமே அழுக்கும் தூசுமாகவும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் இருக்கின்றன. சுத்தமாக இருப்பதே இல்லை. இதற்கு என்ன காரணம்? அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்பது மட்டும் உறுதி.
பதில்: யாருக்குமே பொறுப்புணர்ச்சி இல்லை என்பதுதான் நிஜம். சிங்கப்பூரும் நம் ஊர்களைப் போலத்தான் முதலில் அழுக்காக இருந்தது. ஆனால் லீ வான் கியூ வந்து எல்லோரையும் செருப்பால் அடித்து வழிக்கு கொண்டு வந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யாரையுமே தனக்கு வேண்டியவர்களாகக் கருதாது பாரபட்சமற்ற முறையில் நீதி அளித்தார். இம்மாதிரி விஷயங்களில் அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்.

அடுத்த வாரம் பார்ப்போமா? அதற்கான கேள்விகளை இப்பதிவில் இடவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

SP.VR. SUBBIAH said...

/////கோவர்த்தனன்:
1. காந்தியின் அஹிம்சா கொள்கைகள் நடப்பு உலகிற்கு சாத்தியமா?
பதில்: காந்தியின் அகிம்சா முறையெல்லாம் வெற்றி பெற வேண்டுமானால் ஆக்கிரமிப்பாளர் நாடு ஜனநாயக அரசாக இருந்து பத்திரிகை சுதந்திரமும் அங்கு இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பிரிட்டனுக்கு பதிலாக நம் நாட்டை நாஜி ஜெர்மனியோ அல்லது ஸ்டாலினின் சோவியத் குடியரசோ ஆண்டிருந்தால் காந்தி அவர்கள் ஒரு பட்டினி முகாமில் சேர்க்கப்பட்டு தடயம் இல்லாமல் போயிருப்பார்.///

அருமையான பதில்!!!!!

SP.VR. SUBBIAH said...

/////வஜ்ரா:
1. இந்திய நகரங்கள் அனைத்துமே அழுக்கும் தூசுமாகவும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் இருக்கின்றன. சுத்தமாக இருப்பதே இல்லை. இதற்கு என்ன காரணம்? அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்பது மட்டும் உறுதி.
பதில்: யாருக்குமே பொறுப்புணர்ச்சி இல்லை என்பதுதான் நிஜம். சிங்கப்பூரும் நம் ஊர்களைப் போலத்தான் முதலில் அழுக்காக இருந்தது. ஆனால் லீ வான் கியூ வந்து எல்லோரையும் செருப்பால் அடித்து வழிக்கு கொண்டு வந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யாரையுமே தனக்கு வேண்டியவர்களாகக் கருதாது பாரபட்சமற்ற முறையில் நீதி அளித்தார். இம்மாதிரி விஷயங்களில் அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்.

அடுத்த வாரம் பார்ப்போமா? அதற்கான கேள்விகளை இப்பதிவில் இடவும்.////

இதுவும் ஒரு நல்ல பதில். அப்படிச் செய்வதுதான் தீர்வு!

Anonymous said...

வணக்கம் டோண்டு சார் .
உங்களோட நல்ல உள்ளம் பல விதங்களிலே தெரிய வருகிறது.
வாழ்த்த வயதில்லை.
வணங்கி மகிழ்கிறேன்.
நன்றி.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
சீனுவாசன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

///////சிங்கப்பூரும் நம் ஊர்களைப் போலத்தான் முதலில் அழுக்காக இருந்தது. ஆனால் லீ வான் கியூ வந்து எல்லோரையும் செருப்பால் அடித்து வழிக்கு கொண்டு வந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யாரையுமே தனக்கு வேண்டியவர்களாகக் கருதாது பாரபட்சமற்ற முறையில் நீதி அளித்தார். இம்மாதிரி விஷயங்களில் அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள்.////////

மிகச்சரியான பதில்.
அவர் பெயர் லீ க்வான் யூ.
அவரின் இரு புத்தகங்கள்- தி சிங்கப்பூர் ஸ்டோரி,ஃப்ரம் தேர்ட் வேர்ட்ல்ட் டு ஃப்ர்ஸ்ட்,இரண்டையும் படித்துப் பாருங்கள்,ஒரு அரசின் தலைவன் எப்படி செயலாற்ற முடியும் என்பதற்கான ப்ளூ பிரிண்ட் அவை.
நமது அரசியல்வாதிகள் அவரிடம் 'மொரார்ஜி வைத்தியம்' பார்த்துக் கொண்டால் கூட புத்திவராது என நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

அறிவன் அவர்களே,

சிங்கப்பூரில் லீ க்வான் யூ என்றால் நம்ம தேசத்துக்கு மோடி இருக்கிறாரே. அதே செட்டப்பை வைத்து குஜராத்தை எங்கேயோ கொண்டு போயுள்ளாரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தமிழ்மணத்தில் நடசத்திரமாக இருந்திருக்கீர்களா? இல்லையென்றால் இப்பொழுது பதிவெழுத வந்தவர்கள் கூட நட்சத்திரமாக முடிவதை நினைத்து வருந்தியிருக்கிறீர்களா?

PPattian said...

உங்களுக்கு மோடி பிடிக்குமானால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுங்கள். ஆனால் தயவு செய்து அவரை லீ க்வானுடன் கம்பேர் செய்து லீ க்வான் யூவை சிறுமை செய்ய வேண்டாமே...

Anonymous said...

////இந்திய நகரங்கள் அனைத்துமே அழுக்கும் தூசுமாகவும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் இருக்கின்றன. சுத்தமாக இருப்பதே இல்லை. இதற்கு என்ன காரணம்? அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்பது மட்டும் உறுதி.
பதில்: யாருக்குமே பொறுப்புணர்ச்சி இல்லை ////

Not only that. The important reason for anything, not only cleanlinessless, but other vices such as corruption,
crimes etc to be widespread in India is lack of proper punishment. That gives our people (whether he is a
politician or official or general public) a sense of freedom, in indulging in these kind of vices.

Indians, who spit in public places, who drive with no discipline flouting traffic rules, who throw stones
on public buses, who get bribes, who does shoddy work of road fix/repair etc etc., when they go abroad, they
behave and follow the rules. How is it possible!!!??? Think!! Because they know there will be severe punishment
if they indulge in these, in other countries...

Vikram

Anonymous said...

////சிங்கப்பூரில் லீ க்வான் யூ என்றால் நம்ம தேசத்துக்கு மோடி இருக்கிறாரே.////

We also have 'thamiz ina thalaivan' for us!! he he...!!!

Vikram

Ganesh said...

நரசிம்மன் சார்,

மிக அருமையான பதிவு.
தாங்கள் திரு அத்வானிஜியின் 'My Country My Life' படித்து விட்டீர்களா?
படித்தபின் கண்டிப்பாக அதைப்பற்றி விமர்சனம் எழுதுங்கள்

dondu(#11168674346665545885) said...

அடேடே கணேஷ் (கே.கே.நகர் கிறுக்கன்) பாத்து ரொம்ப நாளாச்சே. எப்படி இருக்கீங்க?

நீங்க சொன்ன புத்தகத்தை படிக்க முயற்சி செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1) அம்பேத்கர் இயற்றிய சட்டம் தற்காலத்திற்கு சரியாக உள்ளது என நினைக்கிறிர்களா?
2) மோதி பிரதமர் ஆனால் இந்தியாவும் சிங்கப்பூர் போல கட்டுபாடன தேசமாகமுடியும் என் நினைக்கிறிர்களா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மோதியை லீ சீனியருடன் ஒப்பிடுவது சிறிது அதீதம்.
லீ சிங்கப்பூரின் மத,இன ஒற்றுமை தான் டிநாதம் என நினைத்து செயல்பட்டவர்.
அதை மீறியவர் எவராயினும் தயவு தாட்சனியமின்றி நடவடிக்கை எடுத்தவர்.
ஆனால் மோதி நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலும் இன அமைதிக்கு எதிராக செயல்படுவதான பிம்பம் இருக்கிறது;அதைத் துடைத்தெறிய அவர் முயற்சி எடுக்காதவரை அவரின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதே..

dondu(#11168674346665545885) said...

//இன அமைதிக்கு எதிராக செயல்படுவதான பிம்பம் இருக்கிறது;அதைத் துடைத்தெறிய அவர் முயற்சி எடுக்காதவரை அவரின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குரியதே..//
Exactly. நீங்கள் கூறுவது போல அது பிம்பம்தான். அப்படி பார்க்கப் போனால் லீ வான் க்யூவுக்கும் சர்வாதிகாரி என்னும் பிம்பம் உண்டுதானே. எதிர்க்கட்சிகளை அவர் வளரவிடவில்லை என்றும் படித்துள்ளேனே. அதற்காகவெல்லாம் அவர் கவலைப்படவில்லை என்பதுதானே நிஜம். அதே போலத்தான் மோடியும். மோடியைப் பற்றி குறை கூறுபவர்கள், சீக்கியக் கொலைகளை நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியை பற்றி பேச மறுப்பதேன்? இந்த அழகில் 1984-ல் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை பெற்ற அவர் ஐந்தே ஆண்டுகளில் பதவி இழந்தது ஏன்? நிர்வாகத் திறமை இல்லையென்பதால்தானே.

2002 குஜராத் கலவரம் யார் ஆட்சியிலிருந்தாலும் நடந்திருக்கும். அவற்றை வைத்து மோடிக்கு விரோதமாக தேர்தல் கூட்டங்களில் வேணது பேசி, அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனரே
தன் பதவியின் கௌரவத்துக்கு சம்பந்தமின்றி நடந்து பார்த்து விட்டார்.

மோடி அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஐந்து ஆண்டுகள் நடத்திய ஆட்சியில் ஒரு மதக்கலவரத்தையோ, அல்லது ஒரு தீவிரவாதத் தாக்குதலையோ குஜராத்தில் பார்த்தோமா? தேர்தல் கூட்டங்களில் பதவியில் இருக்கும் அரசுக்கு விரோத மனப்போக்கை வாக்காளர்கள் மத்தியில் பார்க்க முடிந்ததா? மோடி மேல் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூற முடிந்ததா? சொல்லுங்கள்.

அப்படிப்பட்ட நிர்வாகி எதிராக நிர்வாக சம்பந்தமான புகார் வைக்க வழியின்றி பழைய கதையைத்தானே பேச வேண்டியிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இருந்தன?

மோடி போன்ற நிர்வாகிதான் நமக்கு தேவை. டாக்டர் பட்டம் பெற அலைந்து, அதற்காக மாணவன் கொலைக்கு காரணமான தலைவர்கள் தேவையில்லை நமக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//மோடி போன்ற நிர்வாகிதான் நமக்கு தேவை. டாக்டர் பட்டம் பெற அலைந்து, அதற்காக மாணவன் கொலைக்கு காரணமான தலைவர்கள் தேவையில்லை நமக்கு
//


தமிழுக்கும் தமிழர்களுக்கும் அயராது உழைக்கும் கலைஞரைப் பற்றிய விஷமத்தனமான அவதூறு. அதே சமயம் அப்பாவி முசுலிம்களை கொன்ற மதவெறியன் மோடிக்கும் ஜால்ரா. டோண்டு அவர்களே உண்மை எப்போதும் உறங்காது

கோமணகிருஷ்ணன்

வஜ்ரா said...

எனது கேள்விகளுக்குப் பதில் அளித்தற்காக நன்றி.

அடுத்த கேள்விபதிலுக்கான என் கேள்விகள்

1. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்றுவிட்டால் ?

2. கன்னூர், மற்றும் நந்திகிராம் பற்றி ?

3. 27% OBC இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து ?

4. சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவீர்களா ?

Anonymous said...

//மோடி போன்ற நிர்வாகிதான் நமக்கு தேவை. டாக்டர் பட்டம் பெற அலைந்து, அதற்காக மாணவன் கொலைக்கு காரணமான தலைவர்கள் தேவையில்லை நமக்கு
//


தமிழுக்கும் தமிழர்களுக்கும் அயராது உழைக்கும் கலைஞரைப் பற்றிய விஷமத்தனமான அவதூறு. அதே சமயம் அப்பாவி முசுலிம்களை கொன்ற மதவெறியன் மோடிக்கும் ஜால்ரா. டோண்டு அவர்களே உண்மை எப்போதும் உறங்காது

கோமணகிருஷ்ணன்//

அடடே கோமணா,

உண்மை என்றுமே உறங்காதா? என்னப்பா இப்படி சொல்லிப்புட்ட? அப்போ, உதயகுமார் உண்மையும், ஆலடி அருணா/தா. கிருட்டிணன், மதுரை அப்பாவிகள் மூணு பேர் இப்படி பல உண்மைகள் எப்பவுமே உறங்காம கண்ணக் குத்திக் கிட்டே இருக்கும் என்ற உண்மை கூட தெரியாமல் அவசரப்பட்டு வார்த்தய விட்டுப்புட்டியே கோமணா?

bala said...

டோண்டு அய்யா,
சில கேள்விகள்:
1) "திராவிடீயம்" என்ற வெங்காய அல்வாவை வெற்றிகரமாக தமிழகத்தில் விற்ற தாடிக்காரனுக்கு,அல்வாவை மற்ற தென் மாநிலங்களில் விற்க முடியாமல் போனதுக்கு,அந்தக் காலத்தில் தமிழன் மட்டும் தான் இளிச்ச வாயனாக இருந்தான் என்பது தானே காரணம்?
2) இந்த வெங்காய மோசடி அல்வாவை இப்போது கூட கூவி கூவி விற்பனை செய்யும் மஞ்ச துண்டு,மானமிகு,ராசேந்திரன்,மீசை வீரபாண்டியன்(ஏன் வலையுலகத்தில் கூட கோவி.மு.க அய்யா,டி பி சி டி0,1,2,மற்றும் ம க இ க காமெடி வில்லன் பேர்வழிகள்)போன்ற அயோக்ய வியாபாரிகளின் வெற்றிக்கு காரணம்,தமிழன் அப்போது மட்டுமல்ல இன்னும் கூட இளிச்ச வாயனாகத் தான் இருக்கிறான் என்பதைத் தான் காட்டுகிறதா?

பாலா

வால்பையன் said...

சினிமா கேள்விகள்!
1.பிற மொழி படங்கள் அதாவது உங்களுக்கு தெரிந்த மொழி படங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டா?

2.இன்றைக்கு நுழைவு கட்டணம் இருக்கும் நிலையில், திருட்டு விசிடியை ஒழிக்க முடியுமா?

3.சாத்தியமில்லாத விசயங்களை சினிமாவில் ஹீரோ செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

பொது கேள்விகள்!

1.செண்டிமேன்டாக வைத்திருக்கும் பொருள்கள்?
(காதலியின் கைக்குட்டையை எதிர்பார்க்கிறேன்)

2.மனதை அரித்து கொண்டிருந்த/கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மைகள்?

3.வளர்ந்த நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி இருக்கும் பொது நம்நாட்டில் இல்லாதது
பற்றி உங்கள் கருத்து?

வால்பையன்

Anonymous said...

1) Why cant you start a special thread/post on self help topics (just like Norman Vincent Peale's Power of Positive thinking'
etc) in Tamil, which will be helpful for youngsters?

2) what do you think of recent SC ruling on 27% quota?

3) what do you think of recent 'balti' of our CM on Hogenakkal issue?

4) whenever there is some topic/comment on DK Veeramani, why do you go soft on him, for all the misdeeds he has done or
doing? (I am getting lot BP to think such an "Ayokkiyan" is still indulging in his misdeeds and living happily!!!).

Vikram

Anonymous said...

//
3.வளர்ந்த நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி இருக்கும் பொது நம்நாட்டில் இல்லாதது
பற்றி உங்கள் கருத்து?
//

முக்கிய காரணம், ஜனத்தொகை. சும்மா கூப்பிட்டாலே 10 சீட்டுக்கு 10000 பேர் வருகிறார்கள் (வறுமையின் காரணமாக!)
.

dondu(#11168674346665545885) said...

//முக்கிய காரணம், ஜனத்தொகை.//
அது ரொம்பவும் முக்கியக் காரணமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது