3/23/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 33, 34 & 35

பகுதி - 33 (18.03.2009):
கிருபா, பிரியா கல்யாணத்துக்கும் பிறகு அடையார் வீட்டில் தனிக்குடித்தனம் போகப்போவது பற்றி பற்றி சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் டிஸ்கஷன். அடையார் வீட்டில் எல்லோருமாக போய் இருக்கலாம் என்ற யோசனையை சாம்பு நிராகரிக்கிறார். புதுமணத்தம்பதிகளை தொந்திரவு செய்யக்கூடாது என்கிறார் அவர். சோவும் நண்பரும் இது பற்றிப் பேசும்போது இம்மாதிரி கலிகாலத்தில் மனிதனின் குடும்பம் குறுகப்போவது பற்றி ஏற்கனவேயே கூறப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார் சோ. அதுவும் ஒரு மனிதனுக்கு தனது உறவினர்களைவிட தனது மனைவிசார் உறவினர்களே அதிக முக்கியத்துவம் பெறுவார்கள் என்பதும் மகாபாரதத்தில் ஏற்கனவேயே கூறப்பட்டதே என்கிறார் அவர்.

நீலகண்டன் வையாபுரி வீட்டுக்கு வந்து அவருடன் அசோக் விஷயமாக சண்டை போடுகிறார். அதற்கு எதிர்வினையாக வையாபுரியின் ஸ்பான்ஷர்ஷிப் பெற்ற ராஜப்பாவின் வங்கிக் கடன் விண்ணப்பத்தை தான் நிராகரித்ததாகக் கூறிவிட்டு செல்கிறார்.

கிருபா பிரியாவின் கல்யாணம் முடிந்து பால் பழம் தரும் சடங்கு நடைபெறுகிறது.

நாதன் வீட்டில் வசுமதிக்கும் நாதனுக்கும் இடையில் விவாதம் நடக்கிறது. வையாபுரியிடம் தன் மகன் பைத்தியம் என்பதை ஒத்து கொண்டதை அவள் சாட, அசோக்கை பைத்தியம் என குறிப்பிட்டது வசுமதியே என அவர் சுட்டிக் காட்டுகிறார். வையாபுரி கொடுக்கச் சொன்னதாக ஒரு கடிதத்தை சிங்காரம் கொண்டு வந்து தருகிறான். அவருக்கும் வையாபுரிக்கும் இடையில் தான் வந்தது குறித்து ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.

பாகவதர் வீட்டில் அவரும் அவர் மனைவி ஜானகியும் அசோக் பற்றி விவாதிக்கிறார்கள். அசோக் ஒரு தெய்வக் குழந்தை என பாகவதர் கூறுகிறார். அவனும் பிரான்சின் Jeanne d'Arc, ஐயப்பன் போன்று இளமையிலேயே ஞானம் பெற்றவன் எனக் கூறுகிறார். இத்தருணத்தில் தெய்வமே ராமராக வந்து அவதார காரியத்தை நிறைவேற்றும்போது வால்மீகி ராமாயணத்தின்படி ராமருக்கு தான் கடவுள் என்னும் பிரக்கிஞை இல்லை என சோ எடுத்து கூறுகிறார். அவரை தெய்வமாக உயர்த்திக் காட்டியது துளசிதாசரும் கம்பரும் மட்டுமே என வேறு கூறுகிறார்.

அசோக் இவ்வளவு செய்தும் சிங்காரம் கேசில் அவனது சாட்சியம் உபயோகமாகவில்லையே என பாகவதர் மனைவி அங்கலாய்க்க, அசோக் பலனை எதிர்பாராது காரியம் செய்பவன் என பாகவதர் சுட்டிக்காட்டுகிறார்.

நீலகண்டனின் மனைவி பர்வதம் வசுமதியிடம் தனது கணவர் வையாபுரியிடம் சண்டை போட்டது பற்றி கூற நாதன் நீலகண்டனுக்கு இது தேவையில்லாத வேலை என கண்டிக்கிறார். அச்சமயம் நீலகண்டன் மனைவியைத் தேடி அங்கு வந்த சிங்காரம் அவளையும் அவள் குடும்பத்தினரையும் தாக்கப் போவதாகக் கூறி பயமுறுத்துகிறான்.

பகுதி - 34 (19.03.2009):
நீலகண்டன் வீட்டில் பர்வதம் தன் கணவரிடம் இனிமேல் நாதன் வீட்டுக்கு போக வேண்டாம் என ஆலோசனை கூறுகிறாள்.

பாகவதர் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட பையனின் கேஸ் விசாரணை முடிந்தது என்றும், அவரது பேரன் ராமசுப்பு இனிமேல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார்.

மறுபடியும் வையாபுரி வீட்டுக்கு வரும் நீலகண்டன் இனிமேல் தனது கைத்தடியையெல்லாம் தன் வீட்டுக்கு அனுப்பி பயமுறுத்தும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறார். வையாபுரி இம்முறை அவரிடம் நயமாகப் பேசி தனது நண்பர் ராஜப்பாவுக்கு லோன் சாங்க்‌ஷன் செய்யும்படி கேட்க, வையாபுரி காரண்டி செய்யும் பட்சத்தில் அந்தக் கடன் கிடைக்காது எனக்கூறி விடுகிறார். வையாபுரியோ நீலகண்டன் இனிமேல் தன் நண்பன் என ஒரு ஆட்டையைப் போடுகிறார்.

கிருபா, பிரியா வீடு. அந்த மாத சம்பளத்தை வழக்கம்போல கிருபா தன் அப்பா அம்மாவிடம் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும் எனக் கூறுகிறாள். அத்துடன் மாமனார் வீட்டுக்கு மாதம் ஒரு தொகை தரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறாள். கிருபாவோ அதெல்லாம் கட்டுப்படியாகுமா என சந்தேகப்பட, பிரியாவோ அதற்கேற்ப தான் செலவைக் குறித்து கொள்வதாகக் கூறுகிறாள். எப்படியும் வீட்டு வாடகை தரவேண்டாம், ஆகவே அதைத் தருவதாக நினைத்து ஒரு தொகையை தன் மாமனாராத்துக்கு தரும்படி அவள் ஆலோசனை கூறுகிறாள்.

இப்படியும் ஒரு மருமகளா என சோவின் நண்பர் கேட்க, இம்மாதிரி உத்தமப் பெண்கள் இருப்பதாலேயே தர்மம் செழிக்கிறது என சோ கூறுகிறார். ஆண்களைப் போலவே பெண்கலிலும் எல்லா வகையினரும் உண்டு என்று வேறு அவர் கூறி, பெண்களின் வெவேறு குணங்களின் காம்பினேஷனையும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் யாரும் இல்லை, எல்லோரும் வெளியே போயிருக்க, பீரோவில் சாவிக்கொத்து தொங்குகிறது. சமையற்கார மாமி சபலத்துக்கு இரையாகி மூன்று வளையல்களை எடுத்து தனது ஆடிட்டர் கணவனிடம் தருகிறாள்.

கிருபா தனது அப்பாவுடன் பேசும்போது, இனிமேல் தனது மாமனாராத்துக்கு அவர் புரோகிதம் செய்யப் போக வேண்டாம் எனக் கூறுகிறான். அதனால் அவரது கௌரவம் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறான்.

பகுதி - 35 (20.03.2009):
நாதன் வீட்டு பால்கனியில் காக்கா கத்த யார் வரப்போகிறார்கள் என சிந்திக்கிறாள் சமையற்கார மாமி. அதற்கேற்ப நாதன் குடும்ப சினேகிதி உடையாளூர் செல்லம்மா மாமி வருகிறார். அசோக்கை பற்றி விசாரிக்க, வசுமதி அவரிடம் நடந்ததைக் கூறுகிறாள்.

கிருபா வீட்டில் அவன் வெறுமனே ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டுப் போனதை அவன் தங்கை குறை கூறுகிறாள். எல்லாம் பிரியாவின் போதனை என அபாண்டமாகக் கூறுகிறாள் அவள். சாம்பு சாஸ்திரிகளும் அவர் மனைவியும் பெண்ணை அடக்குகின்றனர்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு வரும் வேம்பு சாஸ்திரி அவருக்கு டிவியில் சாஸ்திரிகள் ரோல் வாங்கித் தருவதாகக் கூற அவர் அது வேண்டாம், மந்திரங்களின் வீர்யத்தையெல்லாம் கண்ட இடங்களில் உச்சரித்து கெடுக்கக் கூடாது என அவர் கூறுகிறார்.

அப்படியானால் நடிப்பு என்பது மட்டமா என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்களோ சாஸ்திரப்படி அப்படித்தான் எனக் கூறுகிறார். இருப்பினும் சிவபெருமானே நடனத்துக்கு தலைவனாக சித்தரிக்கப்படுவது பற்றியும் கூறுகிறார். ஆனால் காலப்போக்கில் நடிப்புக் கலையும் கௌரவம் தருவதாகப் போயிற்று. என்ன இருப்பினும் சாம்பு சாஸ்திரிகள் பழைய காலத்து மனிதர் என்பதையும் மறக்கலாகாது என அவர் கூறுகிறார்.

மீண்டும் சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு காட்சி வருகிறது. சாம்பு அவ்வாறு இந்த சான்ஸை மறுப்பதை வேம்பு பாராட்டுகிறார். ஆனால் அவரது பெண் இதையெல்லாம் ஒரு விரோதமான முகபாவத்துடன் நோக்குகிறாள்.

பிரியாவைப் பார்க்க அவளது மாமியார் வருகிறார். பிரியா அவரிடம் மிக மரியாதையாகப் பேசி ஆசாரமாக நடந்து கொள்ள பயிற்சி அளிக்குமாறு கேட்டு கொள்கிறாள். மாமியாருக்கு மிக்க மகிழ்ச்சி.

நாதனும் அசோக்கும் பேசுகின்றனர். நாதன் லௌகீக விஷயங்கள் பற்றிப் பேச, அசோக் ஞான மார்க்கம் மற்றும் பிரும்மம் பற்றிப் பேசுகிறான். நாதனுக்கு அவன் பேசுவது புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யக்கூட மனமில்லை.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது