10/24/2005

சரி செய்ய முடியாத தருணங்கள்

காசி அவர்களின் பதிவு ஒன்றை படித்ததிலிருந்தே மனம் பாரமாக உள்ளது. யாருடனும் தேவைக்கதிமாக சண்டை போடக் கூடாது என்று கூற மனம் விழைகிறது. சண்டையை பற்றி மட்டும் நான் இங்கு பேசப்போவதில்லை. சில விஷயங்கள் நிரந்தரமாகவே சரி செய்ய முடியாத நிலைக்கு போய் விடுகின்றன. அவற்றைப் பற்றி இங்கு பேசுவேன்

ராஜாஜி அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவர் மனைவி மரணப் படுக்கையில். பல மணி நேரங்கள் அவரது தலை ராஜாஜி அவர்கள் மடியில் இருந்திருக்கிறது. அவருக்கு கால் மரத்துப்போனதால் சற்றே மனைவியின் தலையை உயர்த்தி தலையணை மேல் வைக்கிறார். அது வரை நினைவில்லாமல் படுத்திருந்த மனைவி கண் விழித்துப் பார்த்து, "ஏன், நான் உங்களுக்கு பாரமாகி விட்டேனா?" என்று கேட்கிறார். ராஜாஜி அவர்கள் பதிலளிக்கும் முன்னரே அவர் மறுபடி நினைவிழந்து, சிறிது நேரத்தில் நினைவு வராமலேயே இறந்து விடுகிறார். இப்போது ராஜாஜி அவர்கள்தான் பாவம் அல்லவா? யாரிடம் போய் அவர் இதைக் கூறுவார்? இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகள் தன் உள்ளேயே வைத்து புழுங்கியிருக்கிறார். ஒரு நாள் தன் நண்பர் (காஸா சுப்பாராவ் என்று நினைவு) ஒருவரிடம் இந்த நிகழ்ச்சியை கூறுகிறார்.

தமிழ் படம் "பிராப்தம்". சிவாஜி, சாவித்திரி நடித்தது. இப்படம் "மிலன்" என்ற பெயரில் ஹிந்தியிலும், "மூக மனசுலு" என்று தெலுங்கிலும் வந்து போடு போடு என்று போட்டது. தமிழ் படம் வெற்றியடையவில்லை.

இப்படத்தில் ஒரு காட்சி. சிவாஜி, சாவித்திரி ஒரு பிறவியில் ஒன்று சேர முடியாமல் இறந்து விடுகிறார்கள். மறு பிறவியெடுத்து, திருமணம் புரிந்து தாங்கள் முந்தையப் பிறவியில் வசித்த இடத்திற்கே வருகிறார்கள். அங்கு இரண்டாம் கதாநாயகி சந்திரகலாவைப் பார்க்கிறார்கள். அவள் முந்தைய பிறவியில் சிவாஜையை காதலித்தவர். சிவாஜி சாவித்திரி இறந்ததும் அவர்கள் சமாதிக்கருகில் ஆண்டுகணக்காக உட்கர்ந்திருக்கிறார். சிவாஜி அவரை இப்போது பார்க்கும்போது அவர் தொண்டுக்கிழவி. பூர்வ ஜன்ம நினைவு சிவாஜிக்கு வர, அவர் சந்திரகலா அருகில் ஓடி தன்னையும் சாவித்திரியையும் அறிமுகப்படுத்த முயல்கிறார். ஆனால் அச்சமயம் பார்த்து சந்திரகலா இறந்து விடுகிறார். இவ்வளவு ஆண்டுகள் சோகத்தில் இருந்த சந்திரகலாவின் துக்கம் பெரிதா அல்லது அவரை சோகத்திலிருந்து மீட்கச் செய்த முயற்சி வெற்றியடையாமல் போனதில் சிவாஜி அடைந்த துக்கம் அதிகமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரி செய்ய முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று.

டாக்டர் சாமுவெல் ஜான்ஸன் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அதை பற்றி இங்கு பாருங்கள். இந்த நிகழ்ச்சியை நான் என்னுடைய பத்தாம் வகுப்புக்கான ஆங்கில பாடப்புத்தகத்தில் சமீபத்தில் 1960-ல் படித்தேன்.

இப்போது காசி அவர்களின் பதிவுக்கு திரும்ப வருகிறேன். இதில் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் சோகமும் என்னை விட்டு அகலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

ENNAR said...

சார் எப்பவோ பார்த்த படம் கதையே மறந்துவிட்டேன் இவ்வளவு ஞாபகம் வைத்துள்ளீரே அப்பா என்ன ஞாபக சக்த்தி உங்களுக்கு அந்த படம் சாவித்திரியின் சொந்த படம் என நினைக்கிறேன்.

ஜோசப் இருதயராஜ் said...

// யாருடனும் தேவைக்கதிமாக சண்டை போடக் கூடாது என்று கூற மனம் விழைகிறது.

ஐயா வணக்கம்!
எப்படி இருக்கீங்க....!

மேலே உள்ள வரி ரொம்ப ரொம்ப சரிங்க. ஆனா யாருங்க உங்கள மாதிரி நினைக்க போறாங்க! (பெரியவுங்க பெரியவுங்க தான்)

//சில விஷயங்கள் நிரந்தரமாகவே சரி செய்ய முடியாத நிலைக்கு போய் விடுகின்றன.//

எல்லாம் காலம் சரி செய்து விடும்... என்று நம்புவோம். மறதின்னு ஒன்ன மனுஷனுக்கு கடவுள் கொடுத்திருக்கார் இதுக்கு தான்.

இந்த மறதி மட்டும் இல்லைன்னா இந்நேரம் உலகத்தில மனுஷனே இருந்திருக்க மாட்டானுங்க.

காலம் ரணத்துக்கு மருந்தாகட்டும்.. நல்லதையே நினைப்போம்

" சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்
முடிவே இல்லாதது......"

அன்புடன்
ஜோசப் இருதயராஜ்

dondu(#11168674346665545885) said...

என் பெயரில் போலி டோண்டு பல தரக்குறைவானப் பின்னூட்டங்களை இட்டப்போது நான் தேவைக்கதிமாக எதிர்வினை கொடுத்ததாகப் பலர் கருதினர். நாம் அம்மாதிரி செய்ததற்காகக் காரணம் இதோ.

கீழே உள்ளவை உம்மாண்டி அவர்கள் பதிவில் வந்தவை. பார்க்க: http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html#comments

""என்பெயரில் கேவலமானவற்றை எழுதுவதாலும்-அறிவிலித்தனமான விவாதங்களை முன்வைப்பதாலும் நான் கொதிக்கவோ அன்றி டோண்டு அவர்களைப்போல் பதறியடிக்கவோ முயற்சிக்கமாட்டேன்."

சிறீரங்கன் அவர்களே, நீங்கள் கூறுவதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்பிரச்சினையை இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கிறேன். நட்பின் மரணம் என்பதுதான் அது. என் பெயரில் தவறானப் பின்னூட்டம் வர, அதைப் படிக்கும் என் நண்பர்கள் சிலர் என்னைத் தப்பாகப் புரிந்துகொள்ளலாம், ஆனால் என்னிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்க முடியாத நிலைமையும் உருவாகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் என் மீதுள்ள நல்லெண்ணம் மறைய அவர்கள் என் பால் கொண்ட நட்பும் மரணிக்கலாம். "எதிர்நீச்சல்" படத்தில் நாகேஷ் முத்துராமனிடம் கூறுவார்: "நண்பனின் மரணத்தைக் கூட சகித்து கொள்ளலாம், ஆனால் நட்பின் மரணத்தை அல்ல" என்று. அதே நிலைதான் எனக்கும்.
மேலும் "அஞ்சுவதற்கஞ்சாமை பேதமை" என்பது பொய்யாமொழி அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்"
இதற்கு ஸ்ரீரங்கன் அவர்களின் எதிர்வினை: "உம்மாண்டிக்கும்-டோண்டு அவர்களுக்கும் நன்றி!டோண்டு அவர்களே தங்கள் கருத்துச் சரியானது.நட்பு என்பது உயிரிலும் மேலானதுதாம்.அத்தகைய நட்பு இப்போ நோய்வாய்ப் பட்டுள்ளது.கர்ணனுக்கும்-துpரியோதனுக்குமுள்ள நட்புமாதிரி எங்கேயிப்போது?... எடுக்கவா கோர்க்கவா?
11.9 26.6.2005 # posted by Sri Rangan : 2:22 AM

"நட்பு என்பது உயிரிலும் மேலானதுதாம்.அத்தகைய நட்பு இப்போ நோய்வாய்ப் பட்டுள்ளது.கர்ணனுக்கும்-துரியோதனுக்குமுள்ள நட்புமாதிரி எங்கேயிப்போது?... எடுக்கவா கோர்க்கவா?"
அதற்கான என் பதில்:
"என்ன சந்தேகம் ஸிரீரங்கன் அவர்களே? ஏன் இந்த வரிகள்? நம் நட்பு அப்படியேத்தானே இருக்கிறது? அதில் உங்களுக்கு சந்தேகம் இல்லைதானே? இப்போது தங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?

(Weisen Sie vielleicht auf http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments hin? Machen Sie sich keine Sorge darüber).
அன்புடன்,
டோண்டு ராகவன்"
ஜெர்மனில் நான் குறித்தது மயூரன் அவர்கள் பதிவில் எங்கள் இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றியது.

இங்கு நான் இவற்றைப் பற்றியெல்லாம் எழுதுவதற்கு முக்கியக் காரணமே மனவேறுபாடுகளை அப்போதைக்கப்போது தீர்த்துக் கொண்டு விட வேண்டும் என்பதே. ஸ்ரீரங்கன் அவர்களுடன் அப்போது ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடும் தீர்ந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சாவித்திரி அவர்களின் சொந்தப்படம்தான். தெலுங்கு மூலத்தில் அவர் நாகேஸ்வரராவுடன் நடித்தார். ஹிந்தியில் நூதன், சுனில்தத் கதாநாயகன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

தோண்டு சார், நண்பர்களிடையே போலிப் பெயரில் வந்து அவர்களுக்குள் கலகமூட்ட நினைக்கும் கயவர்களை எதிர்த்து நின்று நன்றாக போருடுகிறீர்கள். உங்கள் நட்பை பெற அடுத்த முறை சென்னை வரும்போது உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன். போலி டோண்டுவின் அனுகுமுறையில் சற்று மாற்றம் தெரிகிறது. பார்க்க என் வலைப்பதிவை.

அன்புடன்
கால்கரி சிவா

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி சிவா அவர்களே. உங்களை மாதிரி புரிதல் உள்ளவர்கள் நட்பு எப்போதுமே விலமதிப்பற்றது.

சென்னைக்கு வந்தால் என்னுடன் தொலை பேசுங்கள். நேரிலும் சந்திக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது