11/06/2005

வெள்ளம் உள்ளே வந்தது

நங்கநல்லூரில் உள்ள எங்கள் வீடு 1969-ல் கட்டப்பட்டது. அப்போது தெருமட்டத்தை விட உயர்ந்த நிலையில் இருந்தது. வாசலில் மூன்று படிக்கட்டுகள் வேறு. நடுவில் சுமார் 22 வருடம் இங்கில்லாது தில்லியில் வசித்து விட்டு 2001-ல் திரும்பி வந்து பார்த்தால் வாசற்படிகள் காணவில்லை. சுற்றுப்புற நிலம் உயர்ந்து படிகள் நிலத்துள் புதைந்து போயின. இப்போது வீடு தெருவிலிருந்து சற்றுக் கீழே உள்ளது. இதனால் பிரச்சினை இல்லை. அவ்வப்போது வெள்ளம் வீட்டினுள் வரும் அவ்வளவுதான்.

அதுதான் இன்று நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இது மூன்றாம் முறை. முதல் முறை 2002-ல், அதன் பிறகு போன மாதம், பிறகு இன்று. இப்போதைக்கு மழை நின்றிருக்கிறது. தண்ணீரும் வடிய ஆரம்பித்துள்ளது. ஆனால் முழுக்க வடியாது. ஏனெனில் வெளியே செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. நாளை காலை இறைத்துத்தான் வெளியேற்ற வேண்டும்.

போன மாதம் இரண்டு நாட்களுக்கு மின்சாரம் இல்லாததால் அந்த வெள்ளத்தைப் பற்றி உடனே பதிவு போட இயலவில்லை. இப்போது ரன்னிங் காமண்டரி கொடுக்க எண்ணம். தண்ணீர் வடிதல் தொடர்கிறது. மழையும் நின்றிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மறுபடி ஆரம்பிக்கலாம்.

இன்று காலையிலிருந்து மழை விடாது பெய்கிறது. பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், மவுண்ட் ஆகிய இடங்களில் உள்ள சப்வேக்கள் நிரம்பி விட்டன. ஆகவே நங்கநல்லூரிலிருந்து சென்னைக்கு காரில் வருவது கடினம். இன்று காலை ஒரு திருமணம் புரசைவாக்கத்தில். மீனம்பாக்கத்தில் ரயில் பிடித்து எக்மோர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் புரசை செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறே செய்தேன்.

நகரம் முழுதும் நல்ல மழை. எங்கள் கிணற்றில் நீர் கையை விட்டு மொள்ளும் அளவுக்கு வந்து விட்டது. போர் பம்ப் போட்டால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. நிலத்தடி நீர் சேமிப்புத் திட்டம் மிக உபயோகமாக இருக்கிறது. ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக பல சமயம் எதிர்த்தாலும் இந்தத் திட்டத்திற்கான முழு க்ரெடிட்டையும் அவருக்கே கொடுப்பதில் எந்தத் தயக்கமும் எனக்கில்லை.

இப்போது இந்திய நேரப்படி மணி இரவு 11.22. தண்ணிர் வடிய ஆரம்பித்து விட்டது. இரவில் இதற்கு மேல் மழை பெய்யாது என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

துளசி கோபால் said...

வெள்ள ரிப்போர்ட் கொடுத்ததுக்கு நன்றி.

Bharathi said...

நன்றி.

குசும்பன் said...

gesund und munter?

ENNAR said...

என்ன சார் தூக்கம் வரவில்லையா 11.22 வரை தூங்காமல் இருக்கிறீர்கள் இங்கு திருச்சியிலும் மழைதான் தூரள் கணமழை ஒன்றும் இல்லை பல இடங்களில் நெற்பயிர்கள் முழ்கியுள்ளன.

dondu(#11168674346665545885) said...

இப்போது நேரம் காலை 6.47. வீட்டிலிருந்து தண்ணீர் கிட்டத்தட்ட வடிந்து விட்டது. தரை மட்டம் பிரச்சினை உள்ள இடங்களில் சற்றே தேங்கியுள்ளது. ஆனால் எல்லா இடத்திலும் ஒரே அழுக்கு. இன்னும் ஒரு பாட்டம் மழை வரும் போல இருக்கிறது. ஆகவே இப்போதைக்கு அப்படியே விட்டிருக்கிறோம். வீட்டம்மா துடைப்பத்தை அப்புறம் கையில் எடுக்கலாம் என்று இருக்கிறார். சுமாராக புழங்க முடிகிறது. இப்போதைக்கு அது போதும் என விட்டுள்ளோம்.

பின்னூட்டமிட்ட துளசி, பாரதி, குசும்பன் மற்றும் என்னாருக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜென்ராம் said...

//வீட்டம்மா துடைப்பத்தை அப்புறம் கையில் எடுக்கலாம் என்று இருக்கிறார்//

அவங்களுக்கு உதவி செய்யாமல் பதிவு போட்டுக் கொண்டு இருப்பதற்கா? :-)

dondu(#11168674346665545885) said...

"அவங்களுக்கு உதவி செய்யாமல் பதிவு போட்டுக் கொண்டு இருப்பதற்கா? :-)"

அவங்க துடைப்பத்தாலே தண்ணீரைத் தள்ளி பக்கெட்டில் துணி மூலம் பிழிந்தெடுக்க, பக்கெட் தண்ணியைத் தெருவில் கொட்டுவது இந்தத் தொண்டன் வேலை. அப்புறம் துடைப்பத்தை எடுக்கப் போவதால் இப்போதைக்கு பதிவுபோட முடிகிறது. ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆம் நாட்டாமை அவர்களே.

வெள்ளத்தால் ஒரு கஷ்டம் என்னவென்றால். அது வடிந்த பிறகு வரும் தண்ணீர் பற்றாக்குறையே. சில சமயம் வெள்ள நீர் கிணற்றில் புகுந்து நாசம் செய்ததும் நடந்திருக்கிறது. அதெல்லாம் இப்போதைக்கு நடக்கவில்லை என்பதால் மனதுக்கு ஒரு ஆறுதல். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

P B said...

ippozhuthu vella nilamai eppidi iruku? meendum etho puyalame?

dondu(#11168674346665545885) said...

நன்றி முத்துக்குமார் புராணம் அவர்களே. இப்போதைக்கு மேகமூட்டமாகத்தான் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். Keeping fingers crossed.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

நான் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தாலும் என் மனைவியும் பிள்ளைகளும் கடந்த இருபது வருடங்களாக சென்னைவாசிகள்தான்.

நான் கடந்த பத்து வருடங்களாக வெளியூரிலிருந்துவிட்டு இப்போதுதான் பதினெட்டு மாதங்களாக நிரந்தரமாக சென்னையில். இதுதான் பல வருடங்கள் கழித்து முதல் முழு மழைக்காலம்.

நான் தங்கியிருக்கும் Rain Water Drains தமிழக அரசு கட்டியிருந்தும் மக்கள் பொறுப்பில்லாமல் இறைத்த எல்லா குப்பைக் கூளங்களும் முக்கியமாக பிளாஸ்டிக் பைகள், Drain நுழைவாய்களை அடைத்துக்கொள்ள முதல் இரண்டு நாட்கள் வெள்ளக்காடாய் இருந்தது.

பிறகு எங்களுடைய Residents நண்பர்கள் குழு முனிசிபல் ஊழியர்களின் உதவியுடன் எல்லா குப்பைகளையும் நீக்க இப்போது கணுக்கால் அளவு நீர் கூட நிற்பதில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

''நான் தங்கியிருக்கும் Rain Water Drains ''

'நான் தங்கியிருக்கும் கோடம்பாக்கத்தில் Rain Water Drains'
என்று இருக்க வேண்டும்.

தவறுக்கு மன்னிக்கவும்!

dondu(#11168674346665545885) said...

மக்களின் பொறுப்பற்றத் தன்மைக்கு அளவேயில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது