12/02/2005

மறுபடியும் வெள்ளம்

பார்த்திப ஆண்டில் மழை வரும் என்று எந்த வேளையில் அம்மா கூறினாரோ தெரியவில்லை. எங்கள் வீட்டில் மூன்றாம் முறை வெள்ளம். இம்முறை போன தடவையை விட சற்று அதிகமே.

காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. இரவில் வேகம் அதிகரித்தது. அதுவரை ஒரு சமன்பாட்டில் இருந்தவை எல்லாம் அதை இழந்தன. விறு விறுவென்று தண்ணீர் ஏறியிருக்கிறது. இப்போது கட்டிலுக்கு சற்று கீழ் வரை வீடெங்கிலும் தண்ணீர். வீட்டம்மாவையும் பெண்ணையும் அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பியாகி விட்டது. நான் மட்டும் தனியே வீட்டில்.

இவ்வளவு தண்ணீர் காலை நனைக்க பதிவிடுவதும் ஓர் அனுபவம்தானே. இதற்கு முந்தைய பார்த்திப ஆண்டில்தான் பங்குனி மாதம் பிறந்தேன். அந்த வருடம் 1945-46 ல் நல்ல மழை என்று கேள்வி. எனக்கு ஞாபகம் இல்லை.

சென்னையில் பாதுகாப்பாக இருக்கும் நமக்கே இது தாங்கவில்லை என்றால் காவிரிக் கரையில் வாழும் மக்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?

இப்போது மணி இரவு 10.08. மழை அடுத்தப் பாட்டம் ஆரம்பித்து விட்டது. பார்க்கலாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்ன திருவுள்ளம் கொண்டான் என்று. மழை வலுக்கிறது. மேலும் தண்ணீர் விறுவென்று வர ஆரம்பித்து விட்டது. இன்று இரவு சிவ ராத்திரிதான் போலிருக்கிறது.

மெரினா பீச்சில் வேறு சர்வீஸ் சாலை வரை கடல் நீர் வந்ததாமே. இந்த அழகில் கிரிக்கெட் போட்டி வேறு. அறிவுக் கொழுந்துகள்தான் இந்திய கிரிக்கெட் போர்டில் கோலோச்சுகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

ஜயராமன் said...

டோண்டு சார்,

மழை வலுவாகத்தான் இருக்கிறது.

தங்கள் கஷ்டம் சீக்கிரமாகவும், அதிக damage இல்லாமலும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி

ஜயராமன்

rv said...

பத்திரமாக இருங்கள் டோண்டு சார்.

இதைத்தவிர வேறென்ன சொல்வது. வருண பகவானுக்கு தமிழ்நாட்டின் மீது என்ன கோபமோ? வந்தால் வெள்ளம் போனால் வறட்சின்னு படுத்தி எடுக்கிறானே..

முகமூடி said...

இந்த அனுபவம் எனக்கும் உண்டு.. மழை விட்டதும் வீட்டை சுத்தப்படுத்துவது ஒரு மகா கடுப்பான அனுபவம். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது... ஆகையால் அந்த நேரம் வவ்ரும் வரையிலும் மழையை அனுபவிக்க வேண்டியதுதான்..

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
அன்பு said...

டோண்டு சார்,

கேட்க கஷ்டமாயிருக்குது... சென்னையிலேயே இந்த நிலை. சீக்கிரம் எல்லாம் சரியாகட்டும். உங்கள் சிரமத்தை காதுகொடுப்பதில் பகிர்ந்துகொள்கிறேன், வேறென்ன செய்ய:(

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜயராமன், இராமநாதன், முகமூடி, மாயவரத்தான் மற்றும் அன்பு அவர்களே. நீங்கள் என் நலம் விசாரித்ததே ஆறுதலாக உள்ளது.

வீடு முழுக்க சேறு. கண்ணெதிரே ஒரு நிமிடத்திற்குள் வெள்ளம் சீறி வீட்டினுள் வந்து விட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேர விடா மழைக்கு இந்த நிலை. ஒரு நிமிடத்தில் வந்த சிரமத்தைப் போக்க மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டியுள்ளது.

நேற்று இப்பதிவு போடவும் மின்சாரம் நின்றது. காலைதான் மறுபடி சப்ளை வந்தது. முன்ஜாக்கிரதை நடவடிக்கையாக இது நடத்தப்பட்டது. செய்ய வேண்டிய காரியம்தான்.

அவ்வப்போது ரன்னிங் காமந்தரி கொடுப்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

சார் அப்படியே மீன் கீன் கிடைக்குதான்னு பாருங்க. உங்களுக்கு வேணாம்னாலும் நான் வந்து வாங்கிக்கறேன்.

இடுக்கண் வருங்கால் நகுகன்னு.. ஐயோ யார் சொன்னா மறந்து போச்சே. பரவால்லை யாரோ ஒருத்தர்.. அதுமாதிரிதான் இருக்கு நீங்க நனைஞ்சிக்கிட்டே பதிவு போடறதும்.

நல்ல வேளை எங்க பக்கம் மழைநீர் நிக்கலை Touch Wood. ஆனா கரண்ட்தான் இல்ல.. நேத்து ராத்திரி போனது இன்னமும் வரலை. கேட்ட மழையில போஸ்ட்மேல எப்படி சார் ஏர்றதுங்கறான். ராத்திரியெல்லாம் கொசுக்கு கம்பெனி குடுத்தோம்.

இந்த மாதிரி ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதான் போலருக்கு. மழை எப்ப நிக்கும்னு ஜோஸ்யர்கிட்ட கேட்டு ஒரு பதிவு போடுங்களேன். ஹி! ஹி!!

dondu(#11168674346665545885) said...

"இடுக்கண் வருங்கால் நகுகன்னு.. ஐயோ யார் சொன்னா மறந்து போச்சே."
ஔவையார் அல்லது ஒட்டக்கூத்தரக இருக்கும் என நினைக்கிறேன்.

"அதுமாதிரிதான் இருக்கு நீங்க நனைஞ்சிக்கிட்டே பதிவு போடறதும்"
இந்து நிருபனின் மகன் ஆயிற்றே. செய்தியை சுடச்சுடத் தருவது எனக்குப் பிடிக்கும்.

"கேட்ட மழையில போஸ்ட்மேல எப்படி சார் ஏர்றதுங்கறான்."
ரொம்ப நியாயமான கேள்வி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டது மாயவரத்தான் அல்ல."
மாயவரத்தன் அவர்களே, என்னை மன்னித்து விடுங்கள். ஊருக்கெல்லாம் எலிக்குட்டியை வைத்துப் பார்க்கச் சொல்லிவிட்டு நானே அதை செய்யாமல் போனேனே.

இப்போதுதான் அந்தப் போலி பின்னூட்டம் இட்ட இழிபிறவி என்ன கூற வருகிறது என்று புரிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது