2/29/2008

Have a nice time Sujatha Sir!

சுஜாதா அவர்களது பூதவுடல் பொதுமக்கள் மரியாதைக்காக அவரது அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மயிலை நீதிபதி சுந்தரம் சாலையில் சாய்பாபா கோவிலுக்கருகில் அவரது இல்லம்.

இன்று காலை 9 மணியளவில் அவர் வீடு இருந்த தெருவுக்கு சென்றபோது கார்ட்டூனிஸ்ட் மதனைப் பார்த்தேன். அவரும் சுஜாதா வீட்டுக்குத்தான் செல்கிறார் என்பதை அறிந்து அவரைப் பின்தொடர்ந்தேன். நல்ல ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தனர். சற்று நேரம் முன்புதான் உடல் கொண்டு வரப்பட்டது என்று சொன்னார்கள். தூங்குவது போன்ற தோற்றம். இறுதி வணக்கம் செய்துவிட்டு சற்றே தள்ளி வந்தபோது அதியமானைப் பார்த்தேன். சிறிது நேரம் கழித்து என்றென்றும் அன்புடன் பாலாவும் வந்தார். தேசிகன் மற்றும் மனுஷ்யபுத்திரனை சந்தித்து அவர்களுக்கு எனது அநுதாபங்களைத் தெரிவித்தேன். நான் பார்த்த மற்ற பதிவர்கள் உண்மைத் தமிழன், ஹரன் பிரசன்னா, உண்மைத்தமிழன், நகுபோலியன் ஆகியோர்.

ஒருவர் என்னை நெருங்கி தான் நடராஜன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மெலட்டூர்ர் நடராஜனா என்று கேட்க, இல்லை என்று கூறினார். தான் பதிவுகளை படிப்பவர் மட்டுமே என்று கூறினார். என்னைப்போலவே அவரும் சுஜாதாவின் விசிறி. அவரும் நானும் சிறிது நேரம் சுஜாதா பற்றி பேசினோம்.

பல பிரபலங்கள் வந்திருந்தனர். இரா. முருகன், இந்திரா பார்த்தசாரதி, பூர்ணம் விஸ்வநாதன், கமலஹாசன், கனிமொழி, சாரு நிவேதிதா, கலைஞர், பாலுமகேந்திரா, டைரக்டர் வசந்த், இன்னும் பலர்.

அவரவர் தாங்கள் சுஜாதா அவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்ததைக் கூற நானும் அவரை சமீபத்தில் 1971-ல் சந்தித்ததை நினைவு கூர்ந்தேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னால் தனது எழுபதாம் ஆண்டு நிறைவு சந்தர்ப்பத்தில் எழுதியது நினைவுக்கு வந்தது. வயது ஆக ஆக நமது நிச்சயங்கள் குறைகின்றன. மரணத்துக்கு பின்னால் என்ன ஆகின்றது? மறு பிறப்பு உண்டா? என்பது பற்றியெல்லாம் எழுதியிருந்தார், விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில். அவையெல்லாம் நினைவுக்கு வந்தன.

சுஜாதா அவர்களின் மகன்களைப் பார்க்கும்போது தனது தந்தை இறந்த சந்தர்ப்பத்தில் தான் பெற்ற அநுபவங்களை எழுதியதும் நினைவுக்கு வந்தது. அச்சமயம் கருட புராணத்தைப் பற்றி அவர் எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது. அதாவது இறந்த பத்து நாட்களுக்கு பிரேதாத்மா எப்படியேல்லாம் அல்லாடுகிறது என்பதை விவரிப்பது யாருக்கும் அடிவயிற்றில் சங்கடம் தரக்கூடியது. சாதாரணமாக சாவு வீடுகளில் கர்மம் செய்ய வேண்டியவர்கள் படிப்பதற்காக இந்த புராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் அதை படிக்கக் கூடாது என்று கூட கூறுவார்கள்.

”நரகமா சொர்க்கமா எது உங்கள் சாய்ஸ்” என்று தனக்கு கொடுக்கப்பட்டால் தான் நரகத்தையே கேட்கப்போவதாக எழுதியிருந்தார். நரகத்தில் சுவாரசியமான மனிதர்கள் இருப்பார்களாம். சொர்க்கத்தில் ஒரு நாளைக்கு மேல் அகண்டபஜனை போர் அடித்து விடும் என்றும் எழுதியிருந்தது நினைவுக்கு வந்து என்னையும் மீறி மனதுக்குள் புன்முறுவல் வந்தது. அதுதான் சுஜாதா.

சுஜாதா அவர்களே, நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் மற்றவர்களுக்கு சொர்க்கமாகவே மாறிவிடும். அவர்களுக்கு இனிமையான தோழமை அளித்து நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆகவே, Have a nice time Sujatha Sir!

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

SP.VR. SUBBIAH said...

////ஆகவே, Have a nice time Sujatha Sir!////

எழுத்திற்கு ஏது மரணம்? காலத்தால் தமிழ்கூறும் நல்லுலகம் உள்ளவரை அவர் எழுத்துக்கள் நிலைத்து நிற்கும்!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!”
- கவிஞர் வாலியின் வைர வரிகள் இவைகள்

அதை மெய்ப்பித்து விட்டதும் சுஜாதாவின் சாதனைகளில் ஒன்றாகும்!

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் சுப்பையா அவர்களே,

சமீபத்தில் 1965-ல் வந்த "பணம் படைத்தவன்" படத்தில் வரும் "கண்போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா" எறு வரும் பாடலைத்தானே சுட்டினீர்கள்?

கண்ணதாசன் அவர்களே எழுதிய வரிகளோ என்று மயக்கத்தை அல்லவா அப்பாடலின் வரிகள் நமக்களிக்கின்றன!

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//பல பிரபலங்கள் வந்திருந்தனர். இரா. முருகன், இந்திரா பார்த்தசாரதி, பூர்ணம் விஸ்வநாதன், கமலஹாசன், கனிமொழி, சாரு நிவேதிதா, கலைஞர், பாலுமகேந்திரா, டைரக்டர் வசந்த், இன்னும் பலர்.//

கலைஞர் கூட வந்திருந்தாரா?

dondu(#11168674346665545885) said...

//கலைஞர் கூட வந்திருந்தாரா?//
ஏன், வரக்கூடாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அறிஞர்கள் மறையலாம், அவர்தம் எழுத்துக்கள் மறையா... திரு. அரங்கராசன் மண்ணை விட்டு மறைந்தாலும் என்றும் எம் இதயத்தில் வாழ்வார்..

Natrajan said...

Dear Dondu

You also mentioned only about celebrities CM/KamalRajini/Madhan/Murugan and some bloggers – not about 100s of only his fans – I am being one among them.

Natrajan

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் நடராஜன் அவர்களே. எழுத விட்டு போய்விட்டது. இப்போது சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//கலைஞர் கூட வந்திருந்தாரா?
ஏன், வரக்கூடாதா?
//

கலைஞர் வந்ததை பத்தோடு பதினொன்றாக சொன்னதால் அந்த கேள்வி என நினைக்கிறேன். கமல், கனிமொழிக்கு பிறகு கலைஞர் பெயரை எழுதியது master-stroke.
ஒரிஜினல் பார்ட்டியே பின்னூடம் போட்டிருக்கிறார். பல பேர் டரியலானது தெரிகிறது.

Anonymous said...

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!”
- கவிஞர் வாலியின் வைர வரிகள் இவைகள்
I accept the above

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

சுஜாதாவுக்கு இமெயில் CC TO ஆழ்வார்கள்

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்
I have posted tow postings in my blog
www.chandramowlee.blogspot.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது