1/13/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 16 & 17)

எபிசோட் - 16 (11.01.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
அடியாள் சிங்காரம் இரைக்க இரைக்க ஓடிவந்து நாதனிடம் இறந்து போனதாகக் கருதப்படும் அரசியல்வாதி வையாபுரி இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூற, நாதன் முதலில் நம்பவில்லை. இருப்பினும் அவரை பிடிவாதமாக தன்னுடன் அழைத்துச் சென்று வையாபுரி போலவே இருக்கும் அந்த மனிதரைக் காண்பிக்கிறான். நாதனும் திகைக்கிறார். அவரிடம் பேச்சு கொடுத்ததில் முதலில் சற்றே ரிசர்வ்டாக இருந்து பம்மும் அவர் தான் வையாபுரியின் இரட்டைப் பிறவி என்றும், தன் பெயர் நல்லத் தம்பி என்றும் கூறுகிறார்.

நாதன் அவர் தங்குவதற்கு தனது ஃபிளாட்டை தருகிறார். முதலில் தயங்கும் வசுமதியும் நாதன் சொல்லுக்கு கட்டுப்படுகிறாள். பிறகு வசுமதியிடம் சிங்காரம் தனக்கும் நாதன் வீட்டில் ஏதேனும் எடுபிடி வேலை போட்டுத் தருமாறு கேட்க, அவளும் நாதனுடன் இது பற்றிப் பேசுவதாக வாக்களிக்கிறாள்.

நாதன் வீட்டு சமையற்கார மாமி தெருவோடு போய் கொண்டிருக்கையில் வேம்பு சாஸ்திரியின் மனைவி சுப்புலட்சுமியின் கண்களில் படுகிறாள். அவள் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு சுப்புலட்சுமியும் அவள் நாத்தனாருமாக சமையற்காரியிடம் பேச்சு கொடுக்கின்றனர். நாதன் வீட்டில் வேம்பு சாஸ்திரிக்கு விரோதமாக மூட் இருபதை உணர்ந்து சுப்புலட்சுமி வருத்தப்படுகிறாள். அவளும் வேம்பு சாஸ்திரியுமாக திருநள்ளாறு சென்று சனிபிரீத்தி செய்ய வேண்டும் என சுப்புலட்சுமியின் நாத்தனார் கூறுகிறார்.

திருநள்ளாறு ஏன் என சோவின் நண்பர் கேட்க, அதற்கு சோ அந்தத் தலத்தில்தான் நளமகாராஜா சனியால் பீடிக்கப்பட்ட தனது பிரச்சினையிலிருந்து மீண்டதாகக் கூறுகிறார். அந்தத் தலம் பற்றி திருஞான சம்பந்தர் கூறிவதையும் அவர் இங்கு பாட்டாக சொல்கிறார். அப்பாடல்,

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள்ளாறே


இதன் பொழிப்புரை:
விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலை மங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும்.

திருநள்ளாற்றுக்கான வேறு தல புராணங்களையும் கூறுகிறார். முக்கியமாக அங்கிருக்கும் மண்டைக்குளம் பற்றியும் கூறுகிறார். முசுகுந்தன் என்பவனுக்கு இந்திரன் பல சிவலிங்கங்களை தந்தது பற்றியும் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றுதான் இங்குள்ள சிவலிங்கம் என்றும் சொல்கிறார்.

போகிற போக்கில் வசுமதி சாம்பு சாஸ்திரிகளை வேலையை விட்டு நீக்கியது பற்றியும் வாய்தவறி சமையற்காரமாமி கூறிவிட்டு பயப்படுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 17 (12.01.2010) (சுட்டி - 1 & சுட்டி - 2)
மன அமைதிக்காக கோவிலுக்கு வரும் நாதன் பாகவதரை அங்கு சந்திக்கிறார். மனச்சஞ்சலம் பற்றி அவர் பாகவதரிடம் கூற மனத்தின் இயல்புதான் என்ற பொருளில் பாகவதர் பதிலளிக்கிறார்.

அது பற்றி தனது நண்பர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சோ அவர்கள் யமன் நசிகேதசுக்கு செய்த உபதேசத்தின் ஒரு பகுதியை விளக்குகிறார். உடல்தான் தேர், புத்திதான் தேரோட்டி மனம் கடிவாளம், இந்திரியங்கள் குதிரைகள், அதில் பயணம் செய்வது ஆத்மா. மனம் என்னும் கடிவாளத்தின் துணையால் புத்தி இந்திரியங்களை சரியானபடி வழிகாட்ட, தேர் முன்னால் நகர்கிறது. ஆகவே மனம் போன போக்கில் அதை விடக்கூடாது என சோ கூறுகிறார்.

குருகுல வாசம் போன அசோக் குருவாக பாகவதரைத் தேடாது சாம்பு சாஸ்திரிகளை தேடியது குறித்து வருந்துகிறார். அசோக் ஒரு நல்ல குருவின் தேடலில் இருக்கிறான். அவ்வாறு தேடும்போது குருவைத் தேர்ந்தெடுப்பது அவன் உரிமை எனக் கூறுகிறார். பிறகு அசோக் பிட்சை எடுத்து உண்பதையும் நாதன் சங்கடத்துடன் கூற, அது அதி உன்னத நிலை என பாகவதர் சொல்லிவிடுகிறார். இப்போதைக்கு வசுமதிக்கு இந்த விஷயம் இப்போதைக்குத் தெரிவது நல்லதில்லை என இருவருமே கருதுகின்றனர்.

வரும் சங்கடஹர சதுர்த்திக்கு வசுமதியை கோவிலுக்கு அழித்து வந்து பிள்ளையாரிடம் பாரத்தை போடுமாறு பாகவதர் கூறுகிறார். சங்கடஹர சதுர்த்தி பற்றீ பாகவதர் கேட்கிறார். விநாயக சதுர்த்தி வளற்பிறையில் வருகிறது. அதே சமயம் தேய்பிறை சதுர்த்திக்கான தேவதை விநாயகரை தனக்கும் முக்கியத்துவம் தருமாறு கேட்டதற்கேற்ப விநாயகரால் முக்கியத்துவம் தரப்பட்டதே சங்கட ஹர சதுர்த்தி என சோ கூறுகிறார். அதில் பூஜை செய்தால் சங்கடங்கள் விலகி பிரச்சினைகள் தீரும் எனவும் அவர் கூறுகிறார்.

ஜட்ஜின் மகள் பிரியா சட்டப்படிப்பை கரஸ்பாண்டன்ஸ் கோர்சில் முடித்து விட்டு ஒரு பிரபல வக்கீலிடம் ஜூனியராகச் சேர தனது தந்தை கூறியபடி வருகிறாள். அவளை இண்டர்வ்யூ செய்த வக்கீல் திருப்தியுடன் அவளை ஜூனியராக ஏற்றுக் கொள்கிறார்.

நாதனிடம் வசுமதி சிங்காரத்தை வீட்டிலேயே எடுபிடி வேலைக்கு வைத்துக்கொள்ளச் சொல்கிறாள். முதலில் தயங்கும் நாதன் பிறகு ஒத்துக் கொள்கிறார். அதே போல சிங்காரம் வேலைக்கு சேருகிறான். அசோக் விஷயம் அறிந்து வருந்துகிறான். சாம்பு வீட்டிற்கருகில் நின்று அசோக் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்க நளினி அவனிடம் சொல்கிறாள். அசோக் பின்னால் செல்லும் அவன் பிட்சை எடுப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அசோக் ஒரு வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்கிறான். அந்த வீட்டுப் பெண்மணி அவனிடம் ஒன்றும் இல்லை எனக்கூற, அவளது கணவர் அவளை கண்டித்து பிட்சை போட வைக்கிறார். அசோக் முகத்தில் உள்ள ஒளியால் அவர் கவரப்படுகிறார்.

சங்கடஹர சதுர்த்திக்காக கோவிலுக்கு வந்துள்ளனர் நாதனும் வசுமதியும். அங்கு குடுமி வைத்த ஒரு பிள்ளை நிற்பதைப் பார்த்த வசுமதி அவனை அசோக் என தவறாக அடையாளம் கண்டு கொண்டு அவனருகில் சென்றால் அது வேறு யாரோ. குழப்பத்துடன் நிற்கும் அவளிடம் சிங்காரம் பதற்றத்துடன் வந்து அசோக் பிச்சை எடுக்கிறான் எனக்கூற, அது பிச்சையல்ல பிட்சை என திருத்துகிறாள் வசுமதி. நாதனிடம் வந்து அதுகுறித்து அவள் குமுற, நாதன் அது தனக்கு முதலிலேயே தெரியும் எனக் கூறுகிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் வேதம் படித்துக் கொண்டிருக்கும் அசோக்கிடம் வந்து சிங்காரம் “தாய் தந்தையரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அவன் படிக்கும் வேதம் கூறவில்லையா, அப்படியானால் அது என்ன வேதம்” எனக் கேட்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

வழிப்போக்கன் said...

அன்புமிக்க ராகவன் அவர்களுக்கு,
பொங்கல் வாழ்த்துக்கள்.
www.arvindsdad.blogspot.com
என்ற வலைப்பதிவுக்குச் சென்று பாருங்கள். பார்த்துவிட்டு, தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

Anonymous said...

Thiru Raghavan

Thanks for compiling all the episodes. I missed few minutes in yesterday's episode. There was an intermittent problem with Jaya TV's transmission in USA for few days.

What is meant by "Indriyangal" (depicted by Cho as the Horses) ?

Regards
-Venkat

தமிழ்/கூடல் said...

இமை திறப்பது இருள் அகல
இசை பிறப்பது மருள் விலக
மேகம் திறப்பது மழை பெருக
மேன்மை பிறப்பது உயர்வு அடைய
கை திறப்பதோ உதவி செய்ய
இந்த தை பிறந்ததோ நல்வழி பிறக்க
-தமிழ்/கூடல்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது