5/21/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 87 & 88)

எபிசோட் - 87 (தேதி 19.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
கேட்டரர் மனைவியின் சந்தர்ப்பவாதப் பேச்சைக் கேட்டு சோவின் நண்பர் மனம் கொதித்துப் பேசுகிறார். அலயன்ஸ் என்றாலே இப்படித்தானா என அவர் கேட்க, கூட்டணி அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய முன்சாக்கிரதை நடவடிக்கைகளை பற்றி சோ பேசுகிறார். அதற்கு மேற்கோளாக மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு அம்புப் படுக்கையிலிருந்து செய்யும் உபதேசத்தில் கூறும் ஒரு கதையை இங்கு சொல்கிறார்.

பலிதம் என்னும் பெயர் உடைய எலிக்கும், லோபசம் என்று அழைக்கப்படும் பூனைக்கும் இடையில் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் வந்த உயிரபாயத்தைத் தவிர்க்க ஏற்பட்டக் கூட்டணி பற்றித்தான் இக்கதை. அதை வீடியோ லிங்கில் பார்த்துக் கொள்ளவும். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், உயிரபாயம் இருவருக்குமே அந்தக் கூட்டணியின் விளைவால் நீங்கிவிட்ட நிலையில், அக்கூட்டணி இனிமேலும் நீடிக்கும் என்ற பிரமேயமே இல்லாமல் போகிறது. எது எப்படியானாலும் எலி பூனையின் உணவு. அது எலியை அடிக்கத்தான் விரும்பும், எலி தப்பித்து ஓடத்தான் செய்யும். அது போல செயற்கை முறையில் காலத்தின் கட்டாயத்தால் உருவாகும் கூட்டணிகளுக்கும் அதுதான் கதி என்பதுதான் இக்கதையின் நீதி.

கேட்டரர் மனைவி இப்போது தனது கணவருக்கே ஒரு பெரிய ஆர்டர் வந்த நிலையில் சர்வ அலட்சியமாக 19-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிக்கு திருமணத்தை மாற்றி விட்டு ஒரு குற்றவுணர்ச்சியுமே இல்லாது மேலே பேசுகிறாள். இப்போது நாதன் எதிரில் தான் ஒரு சங்கட நிலையில் இருப்பதை அழமாட்டாக் குறையாக சாம்பு கூறிவிட்டுச் செல்கிறார்.

சாம்பு வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் நடந்ததைக் கூற, அவள் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என கேட்கிறாள். என்ன செய்வது அவர்கள் பெரிய இடம் தம்மால் என்ன செய்ய முடியும் என சாம்பு விரக்தியுடன் பேசுகிறார். அவருக்கு கிடைக்கவிருந்த நாதன் வீட்டு புரோகிதம் வேம்புவுக்கு போயிற்றே என அவர் மகன் கூறுகிறான். வேம்புவும் கஷ்டப்படுகிறான், ஆகவே அவனுக்கு வேலை செல்வதே நல்லது எனக்கூறும் சாம்பு, வேம்புவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது எனக் கூறுகிறார். ஆனால் அச்சமயம் வந்த வேம்பு அதை கேட்டு விட்டார்.

சாம்புவின் பெருந்தன்மையை நெகிழ்சியுடன் குறிப்பிடும் அவர் தான் சாம்புவின் சமகால புரோகிதனாக இருப்பது தான் செய்த பாக்கியம் என தழதழக்கிறார். சாம்புவோ அவருக்கு தெரிந்ததால் தனது சங்கடம் தீர்ந்ததென்றும், அவரே நாதனிடம் இதெல்லாவற்றையும் கூறிட வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். பேச்சு இப்போது வேம்புவுக்கு யாரோ பெயர் தெரியாதவரால் செய்யப்படும் உதவிகள் பக்கம் திரும்புகிறது. வேம்புவின் சம்பந்தி முதலியாராக இருப்பாரோ என கேட்கப்பட முதலியாரோ தன் இல்லை எனக்கூறிவிட்டதாகவும், அவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் வேம்பு கூறிவிடுகிறார். அசோக்கும் செய்யவில்லை, சாம்புவும் செய்யவில்லை, சிங்காரம் செய்திருக்க சான்சே இல்லை என அலசப்படுகிறது.

நாதன் வீட்டுக்கு வேம்பு வந்து அசோக் கல்யாண வேலைக்கான புரோகித ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறார். முதற்கண் அசோக்கை வாதத்தில் இழுத்து விட்டதற்காக நாதனிடமும் வசுமதியிடமும் மன்னிப்பைக் கோருகிறார். நாதன் அவரை மன்னித்து அட்வான்சாக 5000 ரூபாய் தருகிறார். அதை வாங்கிக் கொண்டு, சாம்புவின் சங்கடத்தையும் கூறிவிட்டு அவர் விடை பெற்று செல்கிறார்.

நீலகண்டன் வீட்டில் ரமேஷை அவன் வக்கீல் அனந்தராமன் தன் திறமையான வாதத்தால் அவனை அப்ரூவராக மாறச் செய்து விடுவித்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உமா அவன் விடுதலை பெர்றது அதர்மமான செயல் என பிடிவாதமாகக் கூறுகிறாள். அவனைப் பார்க்க நீலக்ண்டன் மற்றும் வசுவுடன் வர மறுக்கிறாள். தனது பெண்ணும் திருட்டு அப்பனைப் பார்க்க வேண்டாம் என அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 88 (20.05.2010) சுட்டி - 2
அசோக் குடுமியை எடுத்து விட்டு, ஸ்டைலாக ஒரு மோட்டார் பைக்கில் அமர்ந்து தன்னைப் பார்க்க விட்டுக்கு வருவதாகவும், அவளால் தான் பல விதங்களில் மாறியதாகவும், இனிமேல் அவளுக்காகவே வாழப்போவதாகவும் கூறியதாக கனவு காண்கிறாள் காதம்பரி. அவள் அக்காவால் எழுப்பப் பெற்று அத்தனையும் கனவுதானா என எண்ணி ஏமாற்றமடைகிறாள்.

சிங்காரம் தன் மகனை காப்பாற்ற அசோக் உதவியாக இருந்ததை எண்ணி மிகவும் நெகிழ்ச்சியுடன் அவனுக்கு நன்றி கூறுகிறான். தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும், வெறுமனே பலரிடம் அவனுக்காக உதவி பெற்றதாகவும், உண்மையில் நன்றியெல்லாம் அவ்வாறு உதவி செய்தவர்களுக்கும் மேலும் அவர்கள் மனதில் புகுந்து அவர்களை அச்செயல்களை செய்ய வைத்த இறைவனுக்குமே அவன் நன்றி செலுத்த வேண்டும் எனவும் அவன் கூறுகிறான். மேலும், இனிமேலாவது அவன் தனது மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்து காட்ட வேண்டும் எனவும் கூறுகிறான். அவனும் அதை கண்ணீருடன் ஏற்கிறான்.

வேம்புவும் சாம்புவும் கோவிலில் வைத்து சந்திக்கின்றனர். நாதன் வீட்டில் நடந்ததை வேம்பு கூறுகிறார். சாம்பு அவருக்காக மக்ழ்கிறார். அன்னேரத்தில் அசோக்கும் வந்து நாதன் அவர்கள் வேம்பு சாம்பு இருவருமே சேர்ந்தே புரோகிதத்துக்கு வரச்சொன்னார் எனக் கூறி சாம்புவுக்கும் முன்பணத்தை அளிக்கிறான். 21-ஆம் தேதியன்று நடக்கும் ஆர்த்தியின் கல்யாணத்துக்கு தனது குடும்பத்திலிருந்து அனைவரும் வரப்போவதாகக் கூறி அக்கல்யாணத்திற்காக நாதன் முன்னால் அவரிடம் தந்து அவர் மறுத்த 25000 துக்கான செக்கையும் தருகிறான். தன்னை ஊரை விட்டு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அந்த செக் இப்போது தன் மகளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு அனுப்ப பயன்படும் நகை முரணை சாம்பு எடுத்து கூறுகிறார்.

ரமேஷ் விடுதலையாகி வீட்டுக்கு வர, உமா அவனைப் புறக்கணித்தது குறித்து அவன் தாய் தந்தையர் குறை கூறுகின்றனர். ரமேஷோ உமாவின் சார்பாகவே பேசுகிறான். தான் செய்தது தவறுதானே எனவும் கேட்கிறான். நீலகண்டனும் பர்வதமும் வந்து ரமேஷுடன் பேசுகின்றனர். இப்போதும் இன்னும் உமா வராதது குறித்து ரமேஷ் வருந்துகிறான். அவளுடைய செல் நம்பர் நினைவிலிருந்தால், அவன் அவளுடம் பேசலாமே என நீலக்ண்டன் கேட்க, தயவு செய்து செல் நம்பர் எனக் கூறாதீர்கள், மொபைல் நம்பர் எனக்கூறுங்கள் என ரமேஷ் அவரிடம் கூறிவிட்டு உமாவுடன் பேச முயற்சிக்க அவளோ ஃபோனை கட் செய்கிறாள்.

இப்பெண் ஏன் இன்னும் பிடிவாதமாக இருக்கிறாள் என சோவின் நண்பர் கேட்கிறார். அதற்கு அவர் உண்மையே பேசிய சத்தியதபர் என்னும் பெயருடைய ஒரு ரிஷியின் கதையை வராக புராணத்திலிருந்து எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். வேடனின் அம்புக்கு பயந்த வராகம் ரிஷியின் ஆசிரமத்துள்ளே தஞ்சம் புகுந்து கொள்ள, அங்கு வந்த வேடன் வராகம் எங்கே என ரிஷிஅயிக் கேட்க, அவரோ தெரியாது என்பது போல இருந்து விட்டார். அவரது லாஜிக் இவ்வாறு செல்கிறது. வராகம் போனதை கண்கள் பார்த்தன ஆனால் அவை பேசா. வாயோ வராகம் போனதை பார்க்கவில்லை, ஆகையால் அது வேடனிடம் ஒன்றும் ஊற முடியாது என்பதே அது. உடனேயே வராகம் விஷ்ணுவாகவும் வேடன் இந்திரனாகவும் உருவெடுத்து, அவரது சத்தியத்தை சோதிக்கவே வந்ததாகக் கூறி அவருக்கு ஆசியளித்தனர்.

இங்கோ உமா தான் சிபாரிசு செய்து பெற்றுத் தந்த வேலையில் சேர்ந்த ரமேஷ் உண்டவீட்டுக்கே இரண்டகம் நினைப்பதை பொறுக்காமல் அவனை நாதனிடம் காட்டிக் கொடுத்தது சரிதான். ஆனால் ரமேஷ் இப்போது மனந்திருந்தி வருந்தும்போதும் அவனிடம் அதே விரோதபாவம் பாவிப்பது சரி அல்ல என சோ கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது