1/21/2013

எப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடியுமா?

எனக்கு, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்திருப்பதால் அம்மொழியில் உள்ள புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிப்பதுதான் நல்லது என இருப்பேன். ஆனால் இது எப்போதுமே வேலைக்காகாது.

ஆர்.கே. நாராயணனின் Swamy and friends நாவலை நான் முதன்முதலாக ஸ்வாமியும் சினேகிதர்களும் என்னும் தலைப்பில் படித்தபோது அது மொழிபெயர்ப்பு என்பது எனக்குத் தெரியாது. பிறகு ஆங்கிலத்தில் அதை கண்டபோது அதை படிக்க ஆவல் எழவில்லை. ஏனெனில் தமிழில்தான் அக்கதை பாந்தமாக இருந்தது.

அதே போல அருந்ததி ராயின் God of small things ஆங்கில மூலத்தில் படித்தபோது தமிழ் அல்லது மலையாளத்தில்தான் அது அதிக பாந்தமாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தையும் என்னால் தவிர்க்க இயலவில்லை.

ஹாரி பாட்டர் நாவல்களை ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய மொழிபெயர்ப்புகளிலும் நான் படித்தது நானே ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பதற்காகவும் அந்த மூன்று மொழிகளிலுமே அவை பாந்தமாகவே இருக்கும் என்பதாலும்தான். அவை விதி விலக்குகள்.

இதையெல்லாம் இப்போது இங்கே கூற காரணம் என்னவென்றால் இப்போதுதான் பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதி நாவலை படித்து முடித்தேன். அதே போல சில மாதங்களுக்கு முன்னால் புலிநகக் கொன்றையைத்தான் படித்தேனே தவிர அதன் ஆங்கில மூலத்தைப் (Tiger claw tree) படிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழில்தான் அவை அதிகப் பாந்தமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

புத்தகக் கண்காட்சியில் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் வாங்கினேன். இரண்டையுமே ஒரே மூச்சில் படித்து விட்டேன்.

ச்ரி,  இப்போது கலங்கிய நதியை பார்ப்போம். அதன் கரு ஒரு ஆள் கடத்தல் பற்றியது. அது உண்மை நிகழ்ச்சி, அதில் பி.ஏ.கிருஷ்ணனும் விசாரணை அதிகாரியாக சம்பந்தப்பட்டிருந்திருக்கிறார் என்பதை அக்கிரகாரத்தில் பெரியார் கட்டுரை தொகுப்பில் பார்த்தேன். ஆகவே கலங்கிய நதியை ஈடுபாட்டுடன் படித்தேன்.

நம்ம ஜெயமோகனின் வார்த்தைகளில், “இரு வலுவான உவமைகள் வழியாக ரமேஷ் சந்திரனின் அந்த எண்ணம் நாவலில் பதிவாகிறது. ஒன்று, பறவைகள் கூட்டம்கூட்டமாகத் தற்கொலைசெய்துகொள்ளும் ஜதிங்காவின் சித்தரிப்பு. விளக்கமுடியாத ஏதோ காரணத்தால் பறவைகள் அங்கேவந்து உயிர்விட்டுக்கொண்டே இருக்கின்றன. இரண்டாவது உவமை ஆந்திராவில் சிம்மாசலத்தின் கிருஷ்ணன் கோயிலுக்குக் காணிக்கையாக்கப்படும் கன்றுகள் உடனே கசாப்புக்கடைகளுக்கு விற்கப்படுதல். கடவுளின் காணிக்கையாகச் சென்று அவ்வழியே மரணம் நோக்கிச் செல்கின்றன அவை”.

இந்த நிகழ்வுகளை நாவலில் படித்தபோது அன்றிரவு தூக்கம் தொலைத்தேன். மனதில் தாளமுடியாத சோகம். கன்றுகளின் விஷயம் என்னை விக்கி விக்கி அழச்செய்தது.  ஏனெனில் நான்தான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் ஆயிற்றே. இப்படியெல்லாம்கூடவா கொடுமை நடக்கிறது?

ஒரு கதையில் இன்னொரு கதை, நாவலுக்கான விமரிசனம் வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக என அட்டகாசமாக கதை செல்கிறது. இதைத்தான் லீனியர் எடிட்டிங் என்பார்களோ [டவுட்டு :))]

பை தி வே, வாங்கிய வேறு புத்தகங்கள், இலவசக் கொத்தனாரின் ஜாலியா இலக்கணம், மற்றும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று ஆகியவை. இரண்டாவதை படித்தாயிற்று.இலக்கண புத்தகம் நிதானமாக பார்க்க வேண்டியது..

அவற்றைப் பற்றி பிறகு பார்ப்போமா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

phantom363 said...

Tondu saar, i have read both muddy river and tiger claw tree. i am now waiting to read the tamil versions. awesome books both. in english. have greater expectation in tamil. agrahaaraththil periyar was also tops. P.A.Krishnan is one of the most under rated modern Tamil writer. I think so... rajamani

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது