Showing posts with label ஹைப்பர்லிங். Show all posts
Showing posts with label ஹைப்பர்லிங். Show all posts

10/05/2010

My wife, the computer

என் வீட்டம்மாவை சில நாட்கள் முன்னால் கேட்டேன், நாம எப்ப ஃப்ரிட்ஜ் முதலில் வாங்கினோம் என்று. ஒரு நிமிடம் என்னைக் கூர்ந்து பார்த்தார். பிறகு கண்ணில் பல்ப் எரிவதுபோல ஒரு வெளிச்சம் மாதிரி நான் உணர்ந்தேன்.

உங்க கடைசி தங்கையின் கல்யாணத்துக்காக சென்னைக்குச் சென்றீர்கள் அல்லவா அப்போதுதான் வாங்கினேன். அதாவது 1982-ஆம் வருடம். அவள் கல்யாணம் ஜூன் நடுவில். அடுத்த மாதம் ஒரு வெள்ளியன்று ஃப்ரிட்ஜ் வீட்டுக்கு வந்தது. நான் எனது பேங்கில் லோன் போட்டு வாங்கினேன். ஆனால் எந்த வெள்ளிக்கிழமை எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார், ஒரு விநாடிக்கு. முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது. ஆம், முதல் வெள்ளிதான், ஏனெனில் அதையடுத்த முதல் ஞாயிறன்று நீங்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தில்லி வந்து சேர்ந்தீர்கள். நீங்கள் வந்தது ஜூலை 4-ஆம் தேதி. ஆகவே ஃப்ரிட்ஜ் நம்ம வீட்டுக்கு வாங்கியது 1982, ஜூலை 2-ஆம் தேதி.

என் வீட்டம்மா சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியளித்தால், பாவம் எதிர்க்கட்சி வக்கீல். நொந்து விடுவார், இவர் விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதற்கு உபயோகிக்கும் முறை பற்றி.

இப்போது முதல் டிஸ்கி. இங்கு வரும் நான் டோண்டு ராகவனல்ல. சமீபத்தில் 1967-ல் ரீடர்ஸ் டைஜஸ்டில் My wife, the computer என்னும் தலைப்பில் வந்த ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நான் சொன்ன உதாரணங்கள் உண்மை. அவை இக்கட்டுரையை விளக்க என் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதே.

இப்பதிவின் நோக்கம் நாம் எவ்வாறு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறோம் என்பதைக் கூறுவதே. இந்த முறை ஆராய்ச்சியாளர்கள் சரித்திர நிகழ்வுகளின் தேதிகளை நிர்ணயம் செய்ய பயன்படுத்துகின்றனர். ஒரு அரசனது கல்வெட்டில் சில தெரிந்த வேறு பல அரசர்கள், நூல்கள் பெயர் இருந்தால், இந்த அரசனின் காலகட்டத்தை நிர்ணயிப்பதுபோல என வைத்துக் கொள்வது போலத்தான்.

நான் அடிக்கடி சமீபத்தில் 1955, 54, 52 என்றெல்லாம் எவ்வாறு எழுதுகிறேன் தெரியுமா? குறிப்பிட்ட நிகழ்வின் போது நான் எங்கிருந்தேன், அப்போது பள்ளி மாணவனாக இருந்திருந்தால் எந்த வகுப்பில், கல்லூரி மாணவனாக இருந்தால் எந்தக் கல்லூரியில் (புதுக்கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி), வேலையில் இருந்தால் சி.பி.டபிள்யூ.டி.யிலா அல்லது ஐ.டி.பி.எல்லிலா என்பதையெல்லாம் நினைவு கூற வேண்டியதுதானே. ரொம்பவும் சுலபமானச் செயலே.

உதாரணத்துக்கு இந்த ஹைப்பர்லிங்கையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த நிகழ்வு நான் Mittelstufe-I ஜெர்மன் வகுப்பில் படித்த போது வந்தது. ஆகவே என்ன ஆண்டு எழுதுவதில் பிரச்சினையல்ல. குமுதத்தில் அக்கட்டுரை வந்தபோது நான் பள்ளியிறுதி வகுப்பில் இரண்டாம் டெர்மில் இருந்தேன் (ஆண்டு 1961). என்ன, இவையெல்லாம் வெகுவிரைவில் நினைவுக்கு வரும் அவ்வளவே.

ஆனால் இந்த முறையை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். பள்ளிக்கு இன்ஸ்பெக்டர் வரப்போகிறார் என அமர்க்களப்படுகிறது என வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மாணாக்கர்களிடம் கூறுகிறார். இதோ பாருங்கப்பா, உலகத்தின் வடிவம் என்ன என்று கேட்டால், எனது வட்டமான பொடி டப்பியை நினைவில் கொண்டு, உலகம் உருண்டை எனக்கூறிவிடுங்கள் என்கிறார். இதே போல வேறு பல கேள்விகளுக்கும் உதாரணங்களுடன் விடை சொல்லிக் கொடுக்கிறார்.

இன்ஸ்பெக்டர் வந்தார். அன்று பார்த்து ஆசிரியர் தன் பொடி டப்பியை கொண்டுவர மறந்து விட்டார். யதார்த்தமாக அடுத்த வகுப்பு ஆசிரியரின் பொடி டப்பியை இரவல் வாங்கி பயன்படுத்தினார். அப்போது பார்த்து இன்ஸ்பெக்டர் வந்து மாணவன் உப்பிலியிடம் உலகத்தின் வடிவம் என்ன எனக்கேட்க, அந்த திருவாழத்தானும் பவ்யமாக கையைக் கட்டிக் கொண்டு, “சார் இத்தனை நாள் உருண்டையாகத்தான் இருந்தது. ஆனால் இன்று மட்டும் சதுரமாகி விட்டது” எனக்கூற, அப்போதுதான் ஆசிரியர் தன் கையில் இருந்த பொடி டப்பி சதுரமானது என்பதை உணர்ந்து திகைத்தார்.

பை தி வே, ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரைக்கு உதாரணமாக நான் எடுத்துக் கொண்ட நிகழ்வு விளக்கத்துக்கு மட்டுமே என்றாலும், என் வீட்டம்மாவின் ஞாபகசக்தி முற்றிலும் வேறுவகை. அவர் ஒருவரை ஒரு முறை பார்த்தால் போதும், அவர் முகத்தை நினைவில் வைத்திருப்பார். எனக்கு அத்திறமை அவ்வளவாக இல்லை. சில முறைகளாவது பார்க்க வேண்டும் ஒருவரை. ஆனால் பிறகு ஆண்டுகள் எவ்வளவானாலும் அவரை அடையாளம் கண்டு கொள்வேன். ஸ்டார்டிங் டிரபிள் போல என வைத்துக் கொள்ளலாம்.

மனைவி வெளியில் சென்றிருக்கும்போது நான் சமையலறையிலிருந்து முந்திரிப் பருப்பு, பாதாம், திராட்சை ஆகியவற்றைத் தேட்டை போடுவதுண்டு. அவர் வீட்டுக்குள் வந்ததும் சமையலறைக்குச் செல்வார். ஆனால் அதற்கு முன்னமே என் முகக்குறியிலிருந்து ஏதோ திருட்டுவேலை செய்திருப்பதை கண்டு கொள்வார் போலிருக்கிறது. உள்ளே சென்றதும், என்னைக் கூப்பிட்டு சில பாத்திரங்கள் ஏன் இடம் மாறின எனக்கேட்பார். திருதிருவென முழிப்பதைக் கண்டதும் முந்திரிப்பருப்பு, பாதாம் திராட்சையுடன் சேர்த்து நெய்யையும் எடுத்து சாப்பிட்டதகக் குற்றம் சாட்டுவார். நெய் இல்லை என்று கூறி, மீதி மட்டும்தான் எடுத்தேன் என அசடு வழிய வேண்டும்.

இன்று எனது சமையல். அவர் தங்கை வீட்டுக்கு சென்றிருக்கிறார். குழம்புப்பொடி எங்கே என நான் ஃபோன் செய்து கேட்ட போது போட்டோக்ராஃபிக் மெமரியில் இந்த டின்னுக்கு பக்கத்தில் இந்த கிளாஸ் ஜார், அதன் பக்கத்தில் பச்சை மூடி போட்ட ஹார்லிக்ஸ் பாட்டில் என்று அடையாளம் கூறினார்.

சமையல் செய்த ஜோரில் பல பாத்திரங்கள் இடம் மாறிவிட்டன. அவர் வந்ததும் இருக்கிறது கச்சேரி. ஈஸ்வரோ ரக்ஷது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/07/2009

பரீட்சைக் கனவும் ஒரு ஹைப்பர்லிங்கும்

இது ஒரு மீள்பதிவு. காரணத்தை பிறகு கூறுகிறேன். இப்பதிவை முதலில் போட்டது ஏப்ரல் 2005-ல் என்பதை மட்டும் நினவில் கொள்ளுங்கள். பழைய பதிவில் சில மாறுதல்களும் செய்துள்ளேன்.

எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும்.

அதாகப்பட்டது, நான் இன்னும் பொறியியல் பரீட்சைகள் அதனையும் பாஸ் செய்யவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்துக் கார்டு வரும். நீங்கள் நான்காம் வருடக் கணக்குப் பேப்பர் இன்னும் க்ளியர் செய்ய வேண்டியுள்ளது. தவறுதலாக உங்களுக்கு டிகிரி கொடுத்து விட்டோம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும்.

நான்காம் வருடக் கணிதமா? அதில் என்னக் கற்றுக் கொண்டேன் என்பது அப்போது நினைவுக்கு வராது. அந்த நிலையில் பரீட்சை எழுதுவதாவது? சுழிதான். இதன் வேரியேஷனாக எங்கள் தமிழ் வாத்தியார் நரசிம்மாச்சாரியார் வேறு கனவில் வந்து, தமிழ் பரீட்சைக்கு தயாரா என்றுக் கேட்க, பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பது கூட அந்த பதட்டத்தில் மறந்து விடும்.

முழித்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் யதார்த்த நிலைக்கு வர இயலும். மறுபடி பரீட்சை எழுதியப் பிறகுதான் இக்கனவு நிற்குமோ?

இப்போது (ஏப்ரல் 2005) 11-ஆம் வகுப்புத் தேர்வை எழுதி விடுமுறையில் சென்றிருக்கும் மாணவர்களுக்கு தாக்கீது அனுப்பியிருக்கிறார்கள், இன்னும் ஒரு பரீட்சை எழுத வேண்டும் என்று. ஏனெனில் சுற்றுப்புறச்சூழல் பரீட்சை வைக்க மறந்து விட்டார்களாம். அதற்கும் மேலாக அப்பாடத்தையே நடத்த மறந்து விட்டார்களாம்.

இதில் ஹைப்பர்லிங்க் எங்கிருந்து வந்தது? கூறுகிறேன்.

வருடம் 1987. என் மனைவி அப்போது இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். அவர் பணிபுரியும் வங்கிக்கிளையின் மேலாளர் திரு ஜகந்நாதன் அவர்கள். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறினார்: "புகுமுக வகுப்பு படிக்கும்போது எங்கள் கல்லூரியில் தர்க்கச்சஸ்திரம் மற்றும் மனோதத்துவப் பாடங்களை ஒன்றாக வைத்து பேஜார் செய்தனர்". நான் உடனே அவரிடம் "உங்களுக்கு தர்க்கசாஸ்திரம் பாடம் எடுத்தது முகம்மது காசிம் அவர்கள்தானே என்று கேட்க என்னைத் திகைப்புடன் பார்த்தார். மேலும் அவரிடம் அவ்ருக்குப் பாடம் எடுத்த மற்ற ஆசிரியர்களைப் பற்றிக் கேட்க அவர் திகைப்பு இன்னும் அதிகரித்தது. பிறகு அவரிடம் சமீபத்தில் 1962 - 63 கல்வியாண்டில் புதுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் ஏழாவது பேட்சில் படித்தாரா என்றும் கேட்டதில் மேலும் திகைப்படைந்தார்.

பிறகு நான் அவரிடம் அதே கல்லூரியில் இரண்டாம் பேட்சில் படித்ததைக் கூறினேன். 1963-ல் புதுக்கல்லூரியின் இப்பிரச்சினை மிகப் பிரபலம் அடைந்தது என்றும் கூறினேன். இரண்டு பரிட்சைகளும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டதில் நிர்வாகம் முழிபிதுங்கியது. அச்சமயம் கல்லூரி முதல்வர் மதிப்புக்குரிய அல் ஹஜ் அஃப்சல் அல் உலேமா சையத் அப்துல் சாஹேப் வாஹப் புகாரி அவர்கள். நிர்வாகத்தினர் செய்தத் தவறுக்கு நேரடியாகத் துணைவேந்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அவரைப் பொறுத்தவரை மாணவர்களின் நலம்தான் முக்கியம். சம்பந்தப்பட்ட மாணவர்களை அவ்விரண்டுப் பரீட்சைகளும் நடந்த அன்று தனியாக கோட்டையில் வைத்து அவர்கள் பரீட்சை எழுத வகை செய்யப்பட்டது. இம்மாதிரி நட்ந்தது இதுவே முதல் மற்றும் கடைசித் தடவை என்று அறிகிறேன்.

ஆனால் ஒன்று, இம்மாதிரி கனவுகள் எனக்கு எப்போதுமே பொறியியல் சம்பந்தமான படிப்பு சம்பந்தமாகத்தான் வரும். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் சம்பந்தமாக வராது. அது அப்படித்தான் என்பதை நேற்றுதான் கண்டு கொண்டேன்.

நேற்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது ஜெர்மன் மொழிக்கான ஆன்லைன் தேர்வு க்விஸ் பாணியில் இருந்த ஒரு பக்கத்துக்கு எதேச்சையாக வந்தேன். அத்தனையும் இலக்கணம், வாக்கிய அமைப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கேட்கப்படும் கேள்விகள். மொத்தம் ஐம்பது கேள்விகள் பல கோணத்தில். Advanced தேர்வு லெவல். பரீட்சைக்கு நேரம் வேறு 30 நிமிடங்கள் என குறித்திருந்தனர். நான் பாட்டுக்கு விளையாட்டாக கேள்விகளுக்கான சரியான விடைகளை (மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள்) டிக் செய்து கொண்டே போய் கடைசியில் தேர்வு முடிவை அடைய அதற்கான பெட்டியில் சொடுக்கினேன். 29 நிமிடங்களில் தேர்வு முடிந்திருந்தது. ஐம்பதுக்கு நாற்பத்தெட்டு மதிப்பெண்கள், Sehr gut (மிக நன்று) என்னும் கிரேட் கிடைத்தது.

சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என பிரெஞ்சுக்கும் அதையே செய்து பார்த்தல் ஐம்பதுக்கு நாற்பத்தி ஏழு மதிப்பெண்கள் (28 நிமிடம்) Très honorable (மிகவும் மதிப்புக்குரிய) என்னும் கிரேட் கிடைத்தது. அப்போதுதான் ஏன் இந்த மொழிகளுக்கான தேர்வுகள் பற்றி மட்டும் கனவு வருவதில்லை என புரிந்தது.

அதெல்லாம் இருக்கட்டும் பெரிசு, தமிழ் மொழிக்கான தேர்வு மட்டும் எப்படி கனவில் வந்தது எனக் கேட்கும் முரளி மனோகருக்கு நான் ஊகத்தில் கூறும் பதில் இப்படித்தான் இருக்க வேண்டும்.

தமிழிலும் வெறும் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்புகள் பற்றி மட்டும் கேட்டிருந்தால் ஊதித் தள்ளியிருப்பேனாக இருந்திருக்கும். தமிழ்ப் பாடத்தில் என்னென்னவோ விஷயங்கள் எல்லாம் பாடமாக வைப்பார்களே. அவற்றில் பல நெட்டுரு அல்லவா செய்ய வேண்டியிருக்கும்? அதெல்லாம் தயாரிப்பு இல்லாமல் திடீரென தேர்வு எழுத முடியாதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/24/2006

இந்த ஹைப்பர்லிங்க் மீள்பதிவுக்கு இட்லி வடைதான் பொறுப்பு

இட்லி வடையின் இப்பதிவைப் பார்த்ததும் எனது பழைய ஹைப்பர்லிங்க் பதிவு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் "ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே" என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் "நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ "மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்" என்றார்.



அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான். இது பற்றி மகாபாரதத்தில் அஞாதவாசம் துவங்கும் முன்னால் தௌம்ய முனிவர் யுதிஷ்டிரருக்கு விஸ்தாரமாகவே அறிவுரை கூறுகிறார். அது பற்றி பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/09/2006

ஹைப்பர்லிங்குகளை மொழிபெயர்க்கக் கூடாது

முந்தைய ஹைப்பர்லிங்குகளுக்கு இப்பதிவை பார்க்கவும்.

இன்னொரு ஹைப்பெர்லிங்க் பற்றி இங்கு பேசப் போகிறேன். இதுவும் பழைய பதிவே. போன ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்டது.

நான் சமீபத்தில் 2001-ல் தில்லியிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தபோது கணினி பற்றிய எனது அறிவு பூஜ்யம். ஹைப்பர்லிங்க் என்ற வார்த்தை கூட கேள்விப்பட்டதில்லை. அப்போது சென்னைக்கு எனது தில்லி வாடிக்கையாளர் ஒரு கோப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப, எனது நண்பர் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து எனக்கு தந்தார். பிறகு மொழி பெயர்ப்பை எழுதி அவரிடம் கொடுக்க, அவர் கணினியில் சேமித்துவைத்திருந்த அக்கோப்பின் நகலில் மொழிபெயர்ப்பை ஓவர்டைப் செய்ய ஆரம்பித்தார். அப்போது தான் அவரிடமிருந்து ஹைப்பர்லிங்க் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன். அதில் உள்ள ஹைப்பர் லிங்கை நான் மொழிபெயர்த்திருந்தேன். அது கூடாது என்று நண்பர் கூறினார்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன், ஹைப்பர்லிங்குகளை மொழி பெயர்க்கக் கூடாது என்பது மொழிப் பெயர்ப்பாளர்களின் முதல் தாரக மந்திரமாகும் என்று. மீறி மொழி பெயர்த்தால் என்ன ஆகும்? அவ்வாறு மொழிப் பெயர்க்கப்பட்ட ஹைப்பர்லிங்குகள் வேலை செய்யாது, அவ்வளவுதான்.

மனித மூளையைக் கணினியுடன் ஒப்பிடுவார்கள். ஆனால் மொழிப் பெயர்த்தாலும் இங்கு ஹைபர்லிங்குகள் வேலை செய்யும். உதாரணம்? இதோ என் வாழ்க்கையில் வந்த இன்னொரு ஹைபர்லிங்க்.

சமீபத்தில் 1982-ல் நான் டில்லியில் ஒரு பஞ்சாபியின் வீட்டில் (பண்டாரி) குடியிருந்தேன். ஒரு நாள் வீட்டிற்குள் நுழையும்போது தூர்தர்ஷனில் ஒரு நாடகம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் ஒருவன் இன்னொரு வீட்டில் இருந்துக் கொண்டுத் தன் வீட்டிற்கு ஃபோன் செய்துக் கொண்டிருப்பான். அவன் அருகில் ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருப்பாள்.

ஃபோனில் இவன் தன் மனைவியிடம் "ஆஃபிஸில் வேலை அதிகம், ஆகவே நான் இன்று வீட்டுக்கு வர இயலாது" என்றுக் கூறுவான்.

உடனே விளம்பர இடைவேளை.

இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த நான் வீட்டுக்காரரிடம் கூறினேன்:

"இப்போது அந்தப் பெண்மணி இவனை வீட்டைவிட்டு வெளியேற்றுவாள். நாடகமும் அத்துடன் முடிவடையும்." அவர் என்னைத் திகைப்புடன் பார்த்தார். பிறகு நான் நாடகம் எப்படி ஆரம்பித்தது என்பதை கூறி அந்த சீன் வரை என்ன நடந்தது என்பதையும் கூறினேன்.

அதற்குள் விளம்பர இடைவேளை முடிந்தது. நாடகம் தொடர்ந்தது. நான் கூறியபடியே நடந்தது. நாடகமும் முடிந்தது. பஞ்சாபிக்குத் திகைப்பில் பேச்சே வரவில்லை.

அவர்: "ராகவன் எப்படி இவ்வாறு சரியாகக் கூறினீர்கள்? இந்த நாடகம் எனக்கு தெரிந்து தூர்தர்ஷனில் முதன் முறையாக ஒளிபரப்பப்படுகிறது."

நான்: "பண்டாரி அவர்களே, சமீபத்தில் 1956-ல் இதே ஹிந்தி நாடகத்தின் தமிழாக்கத்தை அகில இந்திய ரேடியோ நாடக சம்மேளனத்தில் கேட்டிருக்கிறேன். அதிலும் ஃபோனில் அவன் இதையே தமிழில் கூறுவான். அந்தப் பெண்மணியும் அவனைத் தமிழில் திட்டி வெளியே அனுப்புவாள்.

இங்கு அதையே இந்தியில் செய்தாள் அவ்வளவுதான்."

ஆக இன்றைய ஹைபர் லிங்க்: "ஆஃபிஸில் வேலை அதிகம், ஆகவே நான் இன்று வீட்டுக்கு வர இயலாது". இது தமிழ் மற்றும் இந்தியில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/03/2006

Recent ஹைப்பெர்லிங்க்

முந்திய ஹைப்பர்லிங்குகளுக்கு இப்பதிவைப் பார்க்கவும்.

I am refreshing another hyperlink. When I refreshed it last time, it had some existing comments and I was not sure that they would not be deleted in a straightforward changing of dates in the editing mode. Hence I reproduced this post along with comments replaced as one comment in the new comments box. I agree that it was clumsy of me. But now I know better. Over to the post being revived once more for the purpose of classification.

போன சனிக்கிழமை திருவல்லிக்கேணிக்கு சென்றிருந்தேன்.

"என்றென்றும் அன்புடன்" பாலா அவர்கள் வீட்டிற்கும் சென்றேன். என்னை வரவேற்று பேசிய அவர் தான் சமீபத்தில் தன் சித்தியின் மரணம் விஷயமாக பெங்களூர் சென்றிருந்ததாகக் கூறினார்.

நான் முதலில் சரியாகக் கவனிக்கவில்லை. அடுத்த முறை இப்பேச்சு வந்ததும் நான் மேல் விவரம் கேட்க, தன் சித்தி அவர் மருமானுடன் சில மாதங்கள் முன் வண்டியில் செல்லும் போது கீழே விழுந்துத் தலையில் அடிப்பட்டுக் கொண்டதாகவும் அதன் காரணமாகப் பிறகு காம்ப்ளிகேஷன்ஸ் வந்து அவர் மரணம் நிகழ்ந்தது என்றுக் கூறினார்.

உடனே என் மண்டைக்குள் வழக்கமான பல்ப் எரிய, அவர் சித்தியின் பெயர் வைதேகியா என்றுக் கேட்டேன். ஆச்சரியத்துடன் பாலா ஆம் என்றுக் கூற, அவருடையக் கணவர் தியாகுவா என்று கேட்டேன். பாலா மேலும் ஆச்சரியத்துடன் ஆமாம் என்றார். தியாகுவின் அண்ணா அண்ணா சந்தானம் என் ஷட்டகர் என்ற விஷயத்தைக் கூறினேன்.

பாலா உடனே தன் தாயிடம் சென்று இதைக் கூற அவர் பரபரப்பாக வெளியே வந்து என்னுடன் மேலே பேசினார். இது ஒரு சிறிய உலகம்தான்.

பாலாவுடனான என் பேச்சு அதுவரை என் வாழ்வில் வந்த ஹைப்பெர்லிங்குகளைப் பற்றி ஆரம்பித்தது. அவரும் தன் பங்குக்கு தன் வாழ்வில் வந்த ஒரு ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறினார். Over to Bala for its description! (இது வரை அவர் அதைக் கூறவில்லை).

இது நடந்த சில மாதங்கள் கழித்து ரோசா வசந்துடன் சந்திப்பு நடந்தது. திடீரென மனிதர் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். என் மச்சினியின் பெண்ணின் பெயரைக் கூறி அவர் எனக்கு என்ன ஆக வேண்டும் எனக் கேட்டார். அவள் எனக்கு மருமாள் என்று கூறி விட்டு விசாரித்தேன். அவள் கணவர் தனக்குத் தெரிந்தவர் என்று கூறினார். எல்லோரும் அப்போது டோக்கியோவில் இருந்திருக்கின்றனர். ரோசா வசந்தின் மனைவியின் பிறந்தகம் நங்கநல்லூரில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட என் மருமாள் தன் மாமா ராகவன் அங்கு இருப்பதாகக் கூற, அவர் பெயர் டோண்டுவா என்று ரோசா கேட்க, என் மருமாள் ஆச்சரியத்தில் மயக்கம் போடாத குறை. ரோசாவிடம் அவருக்கும் ஹைப்பர் லிங்க்தான் வேலை செய்ததா என்று கேட்டேன். அவர் தந்த பதிலை அவரே இப்பதிவைப் பார்த்தால் பின்னூட்டமாகத் தரட்டும். ஆக, இந்த ஹைப்பர் லிங்க் என்பது ஒரு விசித்திர விஷயம்தான், எனக்கு மட்டும் அது நடக்கவில்லை, பலருக்கும் நடந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/24/2006

ஆ கலே லக் ஜா - கஜமுஜா

ஹைப்பர்லிங்க் - 1
ஆடுதுறை ரகு

இன்னொரு மீள்பதிவு, இன்னொரு ஹைப்பர்லிங்க். இந்த ஹைப்பர் லிங்குகளின் விசேஷமே அவை எதிர்பாராது வருவதில்தான் இருக்கிறது. ஒரு நிமிடம் வேறு எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்போம். அடுத்த நிமிடம் ஹைப்பர் லிங்க் வந்து முடிந்திருக்கும். எல்லோரும், நான் உட்பட, ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவோம். இப்போது ஹைப்பர் லிங்குக்குக்கப் போவோம்.

வருடம் 1982. ஐ.டி.பி.எல்லில் என்னை அவசர பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைக்காக ஹைதராபாத் பிளாண்டுக்கு அனுப்பியிருந்தனர். அங்கு டவுன்ஷிப்பில் என் சக பொறியாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் வீட்டில் என்னை சாப்பாடுக்குக் கூப்பிட்டிருந்தார்கள்.

சாப்பாடு முடிந்தது; தூர் தர்ஷனில் சித்ரஹார் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது ஷஷி கபூர் மற்றும் ஷர்மிலா டாகோர் நடித்த "ஆ கலே லக் ஜா" என்ற படத்திலிருந்து ஒரு பாட்டை ஒளி பரப்பினார்கள். அதைப் பார்த்த உடன்,

ராமமூர்த்தி: "இப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நண்பன் செய்த கஜமுஜாதான் ஞாபகத்துக்கு வருகிறது".
நான்: "நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி சென்னை எமரால்ட் தியெட்டரில் 1973 டிசம்பர் 31-ல் மாலைக் காட்சியில்தானே நடந்தது?"

ராமமூர்த்தி என்னைத் திகைப்புடன் பார்த்தார்.

ராமமூர்த்தி: "எப்படி ராகவன்...?"
நான்: நீங்கள் நண்பர்கள் சேர்ந்து தண்ணியடித்துவிட்டு புது வருடத்தை (1974) வரவேற்க இந்தப் படம் சென்றீர்கள். அப்போது முதல் காட்சியில் சர்மீலா டாகோர் பின்னால் ஓடி வரும் ஷஷி கபூர் 'ஸிர்ப் ஏக் பார், ஆ கலே லக் ஜா' என்று கூறுவார். அன்று திரையில் அவ்வாறு அவர் கூறியதும் இங்கே உங்கள் குழுவில் ஒருவன் 'களக், புளக, தூ தூ தூ என்ற சப்ததுடன் வாந்தி எடுத்தான். முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் சட்டையெல்லாம் வாந்தி. நண்பனை டாய்லெட்டுக்கு அழைத்துச் சென்றால், முன் ஸீட்டு நபர் வாஷ் பேஸினில் தன் சட்டையை அலசிக் கொண்டிருந்தார். எல்லாம் கஜமுஜா ஆகி விட்டதல்லவா"?
ராமமூர்த்தி: "ராகவன் எப்படி உங்களுக்கு இது தெரியும்? நீங்கள் அச்சமயம் அங்கு இருந்தீர்களா?"
நான்: "அன்று நான் பம்பாயில் இருந்தேன்".
ராமமூர்த்தி: பின் எப்படி நேரில் பார்த்தது போலக் கூறுகிறீர்கள்?
நான்: ஆனால் சில நாட்களுக்குப் பிறகு என் ரூம்-மேட் கிருஷ்ணமூர்த்தி என்பவன் சென்னைலிருந்து திரும்பி வந்து என்னிடம் இதைக் கூறினான். அவன் குழுவில் ராமமூர்த்தி என்றொருவன் இவ்வாறு செய்ததாகவும், ஆ கலே லக் ஜாவை கஜமுஜா செய்ததாகவும் கூறினான்."
ராமமூர்த்தி (ஆவேசத்துடன்): "செருப்பு பிய்ந்து விடும் என்று கிருஷ்ணமூர்த்தி படவாவைப் பார்த்தால் கூறுங்கள். வாந்தியெடுத்தது அந்த ராஸ்கல்தான்."
நான்: "டேக் இட் ஈஸி ராமமூர்த்தி, இது நடந்து 8 வருடம் ஆகி விட்டன."

இப்படியாக இன்னொரு ஹைப்பர் லிங்க் என் வாழ்வில் நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/10/2006

ஹைப்பர் லிங்க்-2

சக வலைப்பதிவாளர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். இந்த மீள்பதிவுக்கும் கிருஷ்ணாவே காரணம். கிருஷ்ணாவும் என்னை மன்னிக்கவும். இப்பதிவிலும் உங்களைப் படுத்திய அதே 1961-ஆம் ஆண்டு வந்து தொலைக்கிறது. இப்போது பதிவுக்கு:

சமீபத்தில் 1970-ஆம் ஆண்டு என்னுடன் பத்மா சந்திரசேகரன் என்பவர் ஜெர்மன் படித்து வந்தார். அவருடன் ஒரு நாள் மேக்ஸ் ம்யுல்லெர் பவன் நூலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.

தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் தன் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் கூறினார். உடனே என் தலைக்குள் வழக்கமான பல்ப் எரிந்தது போன்ற உணர்ச்சி.

நான்: "நீங்கள் 1948-ல் பள்ளியிறுதித் தேர்வு குறைந்த வயதுக் காரணமாக பனாரஸ் மெட்ரிக்கில்தானே தேர்ச்சிப் பெற்றிர்கள்?"

பத்மா: "ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"
நான்: "அதன் பிறகு பனாரஸ் இன்டெர் செய்தீர்கள் அல்லவா?"
பத்மா: "ஆமாம், ஆனால் எப்படி இது உங்களுக்கு...?"
நான்: "அதே போல பி.ஏ.வும் செய்தீர்கள் அல்லவா?"
பத்மா: முதலில் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கூறுங்கள்"
நான்: "பிறகு சொல்கிறேன். நீங்கள் ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று சாயி பாபாவிடம் கேட்ட போது, அவர் உங்களிடம் 'எஸ்.ஏ.ஐ திருப்பிப் போட்டால் ஐ.ஏ.எஸ் என்று வருகிறது. முயற்சி செய்' என்று கூறினார் அல்லவா?"
பத்மா (பொறுமை இழந்து): "இதற்கு மேல் உங்களுடன் பேச வேண்டுமானால் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்பதைக் கூற வேண்டும்!"
நான்: இதைப் பற்றியெல்லாம் நீங்கள் சமீபத்தில் 1961- ல் குமுதத்தில் எழுதியிருந்தீர்கள். அதை நான் படித்தேன்."
பத்மா: "அதைப் பற்றி நானே மறந்து விட்டேன். நீங்கள் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்?"
நான்: "அந்தக் கட்டுரையில் மேலே கூறியதையெல்லாம் எழுதிய நீங்கள் உங்கள் பேட்சில் ஐ.ஏ.எஸ் பிரிவில் போதுமான காலியிடம் இல்லாததால் ஐ.ஏ.& ஏ.எஸ் ஆக பணி ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் கூறினீர்கள். உங்கள் பேட்சில் இருந்த சந்திரசேகரன் என்பவரை காதலித்து மணம் புரிந்ததாகவும் கூறினீர்கள். இப்போது பேசுகையில் நீங்கள் ஐ.ஏ.& ஏ.எஸ். என்றும் உங்கள் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் கூறினீர்கள். உடனே நான் படித்த உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்தது. ஆகவே கேட்டேன்."

கால வரிசைப்படிப் பார்த்தால் இது என் நினைவிலிருக்கும் முதல் ஹைப்பர் லிங்க் ஆகும். ஹைப்பர் லிங்குக்கான சொற்கள் இங்கு: "நான் ஐ.ஏ.& ஏ.எஸ், என் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ்"

மேலும் பல ஹைப்பர்லிங்குகள் போட்டு படுத்துவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆடுதுறை ரகு - ஒரு ஹைபெர் லிங்க்

இது ஒரு மீள் பதிவு. இன்னொன்றா என்று நம்பியார் குரலை விவேக் மிமிக்ரி செய்வது போல கூவ நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம். இந்த மீள்பதிவுக்கு வலைப்பதிவர் கிருஷ்ணா அவர்களே பொறுப்பு. இப்போது இந்த ஹைப்பர்லிங்குக்குப் போவோமா? கிருஷ்ணா அவர்களுக்கு நம்பிக்கை வராவிட்டால் இதில் உள்ள முதல் பின்னூட்டங்களின் தேதிகளைப் பாருங்கள்.

சமீபத்தில் 1972-ஆம் வருஷம் நான் பம்பாயில் சி.பி.டபிள்யூ.டி யில் இளநிலைப் பொறியாளராக இருந்தேன். ஒரு நாள் கேன்டீனில் வைத்து என் நண்பர் வெங்கடராமன் எனக்கு ஒரு புது நபரை அறிமுகப் படுத்தினார். "ராகவன் இவர்தான் ஆடுதுறை ரகு" என்று. அவரும் ஹல்லோ என்று கை குலுக்கினார். அவர் வயதும் என் வயதும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது.

உடனே ரகுவை நான் கேட்டேன்: "உங்கள் பெரியப்பா பெயர் T.P. கிருஷ்ணமாச்சாரியா?"
ரகு (திகைப்புடன்): "ஆமாம், உங்களுக்கு எப்படி...?"
நான்: "அவருடைய ஷட்டகர் பெயர் சீனுவாசந்தானே?"
ரகு: "ஆமாம், ஆனால் நீங்கள் எப்படி...?"
நான்: "சீனுவாசன் என்னுடைய மாமா."
வெங்கடராமன்: "சே, இதான் ஐயங்கார்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் ஐயர்)
ரகு: "இப்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
நான்: "உங்கள் பெரியப்பாவின் மனைவியும் என் மாமியும் சகோதரிகள்".
ரகு (அழும்போல ஆகி விட்டார்): "எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்?"
நான்: "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ரகு. சமீபத்தில் 1955-ல் என் சின்ன மாமாவுக்குப் பெண் பார்ப்பதற்காக என் அம்மா, சின்ன மாமா மற்றும் உங்கள் பெரியப்பா கும்பகோணம் சென்றனர். திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த வீட்டில் ரகு என்று என் வயதுடையப் பையன் இருந்ததாக என் அம்மா கூறியிருந்தார். இப்போது ஆடுதுறை ரகு என்று என் காதில் விழுந்தவுடனேயே அந்த ஞாபகம் வந்தது. ஆகவே உங்களைக் கேட்டேன்."

அப்பொது கணினி அறிவு எனக்கோ வேறு யாருக்குமோ இல்லை. இப்போது அது நடந்திருந்தால் இதை ஒரு ஹைப்பெர்லிங்கிற்கான உதாரணமாக ரகுவிடம் கூறியிருப்பேன்.என் வாழ்க்கையில் இம்மாதிரி பல ஹைப்பெர்லிங்குகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/06/2005

நான் தேடும் ஹைப்பெர்லிங்க்

சாதாரணமாக என் ஹைப்பெர் லிங்க் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதும் போது சம்பந்தப்பட்ட ஹைப்பெர்லிங்க் எது என்பதில் எனக்கு ஐயமே இருந்ததில்லை. இப்போது மட்டும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன ஆனால் அவற்றைப் பற்றிய நினைவைத் தூண்டிய ஹைப்பெர்லிங்க் எது என்பதைத்தான் மறந்து விட்டேன். என் வலைப்பதிவு நண்பர்கள் எனக்கு இதில் ஏதாவது உதவி செய்ய முடியுமா?

சரி, நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சி அலிபாபாவின் கதையில் வரும். அந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அலிபாபா (எம்.ஜி.ஆர்.) தையற்காரனின் (தங்கவேலு) கண்களைக் கட்டி தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வெட்டப்பட்டிருக்கும் தன் அண்ணன் (எம்.ஜி.சக்கரபாணி) உடலைத் தைக்கச் செய்து, நிறையப் பணம் கொடுத்து, திருப்பி அவன் கண்களைக் கட்டி அவனை அனுப்புவார். வீட்டைத் திரும்ப அடையாளம் கண்டு கொள்ள அந்தத் தையற்காரன் அலிபாபாவின் வீட்டுக் கதவில் ஒரு குறியிடுவான். இதை யதேச்சையாக கவனித்த மார்ஜியானா (பானுமதி) புத்திசாலித்தனமாக தெருவில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அவ்வாறே குறியிட, பிறகு கொள்ளையர் தலைவன் (பி.எஸ்.வீரப்பா) பின்தொடர வரும் தையற்காரன் வீட்டை அடையாளம் காட்ட முடியாது திகைப்பான்.

இன்னொரு நிகழ்ச்சி நிஜமாக நடந்தது. ஐ.டி.பி.எல்.-லில் எங்கள் பொறியியல் மேலாளர் பாலிகா அவர்கள் தன் சகா மகரபூஷணம் சம்பந்தமாகக் கூறியது. மகரபூஷணத்துக்கு பொது மேலாளர் ஒரு வேலை கொடுத்தார். அதாவது, தனக்கு வேண்டிய மூவருக்கு முன்கூட்டிய ஊதிய உயர்வு அளிப்பதற்காக ஒரு கோப்பைத் தயார் செய்யச் சொன்னார். மகரபூஷணம் ஒரு காரியம் செய்தார். கோப்பைத் தயார் செய்தார், ஆனால் வேண்டிய மூவருக்காக கொடுத்த குறிப்புகளை வைத்து கொண்டு மொத்தம் 10 பேர் முன்கூட்டிய ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்பதாகக் கோப்பைத் தயாரித்தார். பொது மேலாளரும் வேறு வழியின்றி அதை நிதி ஒதுக்கலுக்காகப் பரிந்துரைக்க, தலைமை அலுவலகம் அப்பரிந்துரையை நிதிப் பற்றாக்குறை காரணமாக நிராகரித்தது.

இந்த நிகழ்ச்சிகள் இரண்டும் திடீரென எனக்கு இப்போது ஏன் நினைவுக்கு வந்தன? அதுவும் பிரிட்டிஷ் தயாரிப்பான மார்ரிஸ் மைனர் காரைப் பற்றி ஒரு பழைய பத்திரிகைக் குறிப்பை பார்த்ததும் அவை நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/04/2005

மொழி பெயர்ப்பில் ஹைப்பர் லிங்க்

This is another updated old post.

ஒரு ஜெர்மன் கட்டுரை மொழி பெயர்ப்புக்காக வந்தது. அதில் திடீரென்று ஒரு சுருக்கப்பட்டச் சொல்லைப் பார்த்தேன்.

"ver. Spiegel" என்று குறிப்பிட்டிருந்தார்கள். Spiegel என்றால் கண்ணாடி என்றுப் பொருள். ஆனால் ver.?

கட்டுரை ஒரு பெரிய ஜெனரேட்டரைப் பற்றியது. மேலே குறிப்பிடப்பட்டிருந்தக் கண்ணாடி ஜெனரேட்டரைச் சோதிப்பதற்கு உபயோகப்படுவது. தலை முடியைப் பிய்த்துக் கொள்வதுதான் பாக்கி. ஏனெனில் ver.-க்கு முழு வார்த்தை (expansion) என்னவென்றுக் கூறுதல் மிகக் கடினம்.

அம்மாதிரி நேரங்களில் நான் சிறிது நேரம் வேலையை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது செய்வது வழக்கம். கையில் ஒரு ஆங்கிலத் துப்பறியும் நாவல் கிடைத்தது. அதை சுவாரஸ்யமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அதில் கதாநாயகன் காரில் இரு தேசங்களுக்கிடையில் உள்ள எல்லைக்கோட்டைக் கடப்பதற்காக அங்குச் செல்வான். எல்லையில் உள்ள அதிகாரி காரின் அடியில் ஒரு பெரியக் கழியின் முடிவில் ஒரு கண்ணாடியைப் பொருத்தி ஏதாவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க அக்கண்ணாடியைக் காருக்கு அடியில் தள்ளிப் பார்ப்பார்கள். அதை ஆங்கிலத்தில் "sliding mirror" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதைப் படித்த உடன் என் வழக்கமான பல்ப் மண்டைக்குள் எரிந்தது. என்னை அறியாமலேயே அந்த ஆங்கிலச் சொல்லை ஜெர்மனில் கூறிப் பார்த்தேன்.

"Vershiebbarer Spiegel" என்று வந்தது. அப்புறம் என்ன. புத்தகத்தை ஓரமாக வைத்து விட்டு மொழி பெயர்க்க ஆரம்பித்தேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று வாடிக்கையாளரைக் கேட்டால் அவர் நான் ஊகித்தது சரி என்றுக் கூறினார்.

7/02/2005

ஹைப்பர் லிங்க் (ஆனால் என்னுடையது அல்ல)

ஹைப்பெர் லிங்க் பற்றி நான் முன்னம் பதித்த இன்னொரு பதிவை இங்கு இற்றைப்படுத்துகிறேன் அப்படியே வாசகர்களையும் படுத்துகிறேன் என்று யாராவது கூறிவிடும் முன்னால் நானே அதையும் இப்போதே கூறிவிடுகிறேன்.

வருடம் 1971. அப்போது பம்பாயில் மாதுங்காவில் இருந்தேன். நாங்கள் 10 தமிழர்கள் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தோம். ஆளுக்கொரு கட்டில். ஒரு கட்டிலுக்கு வாடகை 70 ரூபாய்கள்.

அது பற்றிப் பிறகு. இப்போது ஹைப்பர் லிங்க்குக்கு வருவோம்.

ஞாயிறு காலையில் 10 மணி அளவில் ஆனந்தமாக கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பக்கத்தில் உள்ள அரோரா சினிமாவில் ஏதாவது தமிழ்ப்படம் காலைக் காட்சி பார்க்கச் செல்வது வழக்கம். அன்று அம்மாதிரி என் சக அறைவாசிகள் நரசிம்மன் மற்றும் சுந்தரம் 'குடியிருந்த கோவில்' படத்துக்குச் சென்றிருந்தனர். ஆனால் பாதியிலேயே திரும்பி விட்டனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

நரசிம்மன் எரிச்சலுடன் கூறினான்:"அட போப்பா. ஏற்கனவே பார்த்த படம். இந்தப் படத்தைப் பொறுத்த வரை இது நான்காம் முறையாக நடக்கிறது" என்றான்.

"சற்று விவரமாகச் சொல்லப்பா" என்றேன். அதற்கு அவன் கூறினான்:

"நம்பியார் இரண்டாவது சீனில் எம்.ஜி.ஆரின் அப்பா ராம்தாசைத் துரத்திக் கொண்டு வருவார். முகத்தை வழக்கம்போல கோணிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேகக் குரலில் 'அடேய் ராமனாதா' என்று கத்துவார் இல்லையா"?

நான்:"ஆமாம் அதற்கு என்ன இப்போது?"

நரசிம்மன்:" அதுதான் பிரச்சினையே. அந்த 'அடேய் ராமனாதா' வந்தப் பிறகுதான் எனக்கு இது நான் ஏற்கனவே பார்த்த படம் என்று நினைவுக்கு வரும். இது நான்காம் முறை."

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/06/2005

Even a scene in a mega-serial can be a hyperlink

புறா சமாதானச் சின்னமே இல்லை.

எல்லோரும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவதற்கு முன் நான் கொடுக்கும் ஆதாரங்களைப் பாருங்கள்.

கோன்ராட் லோரென்ட்ஸ் (Konrad Lorenz) என்பவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவர் எழுதியப் புத்தகம் எங்களுக்கு ஜெர்மன் டிப்ளமா பரீட்சைக்குரியப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தின் பெயர் "Er redete mit dem Vieh, den Vögeln und den Fischen"(மிருகம், பறவைகள் மற்றும் மீன்களுடன் பேசினான் அவன் (அரசன் சாலமன்)). இனி புத்தகத்திலிருந்துத் தொகுத்துத் தருகிறேன்.

இரண்டு நாய்கள் ஆவேசமாகச் சண்டை போடுகின்றன. ஒரு நாய் சளைத்து விட்டது. அது உடனே கீழே படுத்துக் கொண்டு தன் கழுத்தை இன்னொரு நாய்க்குக் காட்டுகிறது.

ஒரு கடியில் கதை முடிந்து விடும் என்று எதிர்ப்பார்த்த கோன்ராடுக்கு வியப்பு. வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாய் அதைக் கடிக்கவில்லை. அதையே சுற்றிச் சுற்றி வருகிறது. படுத்திருக்கும் நாய் எழுந்தவுடன் சண்டை மறுபடியும் துவங்குகிறது.

கோன்ராட் இதை Demütsgebärde (சரணாகதிச் சமிக்ஞை) என்றுக் குறிப்பிடுகிறார். நாய், ஓநாய், சிங்கம், புலி ஆகிய மிருகங்களின் பரம்பரை அணுக்களில் புதைந்துள்ள அற்புதம் இது.

ஆனால் புறாக்கள்? அதே புத்தகத்தில் கான்ராட் கூறுவதைப் பாருங்கள்.

இரண்டு புறாக்கள் ஒரே கூண்டில் இருந்தன. ஒரு புறா அமைதியான முக பாவத்துடன் வலிமையற்ற இன்னொருப் புறாவின் கழுத்தைக் கொத்திக் குதறுகிறது. ஒரே ரத்தம். இருப்பினும் கொத்துவது நிற்கவில்லை. மரணத்துக்குப் பிறகே அது நிற்கிறது.

ஆனாலும் இது அதிகம் காணக் கிடைக்காதக் காட்சிதான் ஏனெனில் சுதந்திரமாகப் பறக்கும் நிலையில் வலிமைக் குறைந்தப் புறா பறந்துச் சென்று விடும்.

இப்போது இதை நான் ஏன் கூறுகிறேன் என்றுக் கேட்பவர்களுக்கு:

நேற்று நான் பார்த்த மெட்டி ஒலிக் காட்சிதான் நான் மேலே கூறியதற்கு எனக்கு ஹைப்பர் லிங்காகச் செயல் பட்டது.

ரவிப் புறா லீலாப் புறாவைக் குத்துகிறது. லீலாப் புறாவின் அப்பாவாகிய சிதம்பரம் புறா லீலாவுக்குப் பொறுமையை உபதேசிக்கிறது. ஏன்? இந்தியப் பண்பாடாம்.

இந்தக் கூண்டில் அடைப்பட்டுக் கிடக்கும் லீலாப் புறாக்கள் தேவையானால் கட்டுப்பாடுகளை உடைக்கத் தைரியம் கொள்ளும்படிக் கதையை நடத்தத் தெரியாமல் திருமுருகன் என்னும் டைரக்டர் புறா எல்லோர் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிறது.

எல்லா தமிழ் சீரியலகளுமே இந்தக் குற்றத்தைத்தான் செய்கின்றன. இது பற்றிப் பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது