3/15/2005

ஜூலை 1949-ல் நடந்தது என்ன?

ஜூலை 1949 திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. அம்மாதம்தான் ஈ.வே.ரா. அவர்கள் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். அதை எதிர்த்தனர் அண்ணாத்துரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர். அதன் விளைவாக தி.மு. க. பிறந்தது என்பது மேலோட்டமாகப் பார்க்கப்படும் செய்தி.

அறுபதுகளிலும் இத்திருமணம் விவாதிக்கப் பட்டு வந்தது. 1964-ல் வெளியானப் படம் "பணக்காரக் குடும்பம்". எம்.ஜி.ஆர். நடித்தது. அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடி விட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். அதைப் பற்றி எழுதும் போது குமுதம் தி.மு.க. வினர் இன்னும் பெரியார் திருமணத்தால் தங்களுக்கு ஏற்பட்டப் பாதிப்பிலிருந்துத் திரும்பவில்லை என்று விமரிசனம் செய்தது. அதே படத்தில் கடைசிக் காட்சியில் கதாநாயகனின் தந்தை அவனுடன் வந்து சேர்ந்துக் கொள்ளும் போது, குமுதம் அதே விமரிசனத்தில் "திருந்தி வந்தப் பெரியார்" என்று ஒரு உப-தலைப்பைக் கொடுத்தது. இது நான் நேரடியாகப் படித்தது.

அப்போதிலிருந்தே இது சம்பந்தமாகப் பலரிடம் வெவேறுத் தருணங்களில் சந்தேகங்கள் கேட்டு வந்தேன். அதைப் பற்றி இங்கு இப்போதுக் குறிப்பிடுகிறேன்.

முதல் சந்தேகத்தைப் பார்ப்போம். திருமணம் என்பது ஒருவர் தனிப்பட்ட விவகாரம். ஈ.வே.ரா. அவர்களோ மணியம்மை அவர்களோ சிறு குழந்தைகள் அல்ல. தங்கள் நல்லது கெட்டது தெரிந்தவர்கள். சுய விருப்பத்தில் செயல்பட எல்லா உரிமைகளும் உடையவர்கள். இதில் அண்ணத்துரை அவர்களோ, சம்பத் அவர்களோ எதிர்ப்புத் தெரிவிக்க என்ன முகாந்திரம் இருந்திருக்க முடியும்?

இதற்கு இரு பதிலகள் கிடைத்தன. முதல் பதில் சொத்து விவகாரம் பற்றியது. அதாவது தி.க. பெயரில் சேர்ந்த சொத்து வகையறாக்கள் யாருக்குப் போய் சேர வேண்டியது? அவை பெரும்பாலும் கொள்கை அடிப்படையில் நன்கொடைகளாகப் பெறப்பட்டவை. இது கை விட்டுப் போகப் போகிறதே என்றுதான் அண்ணாவும் மற்றவரும் செயல்பட்டனர் என்று ஒரு பதில் கூறியது. மேலும் தி.க. தேர்தலில் போடியிடாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். அண்ணா முதலியானோர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரம் பெற ஆசைப் பட்டனர். அதை நிறைவேற்றிக் கொள்ள இத்திருமணத்தை ஒரு சாக்காகப் பயன் படுத்தினர் என்றும் கூறப் பட்டது.

ஜூலை 10 1949-ல் மதுரையில் நிறைவேற்றப் பட்ட ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டதின் சுருக்கம் இதோ. "திரு நாயக்கர் அவர்கள் தன் 72-ஆம் வயதில் ஒரு 30 வயதுப் பெண்ணை மணம் செய்ய முடிவெடுத்தது கழகத்தால் போற்றப்படும் லட்சியங்களுக்கு எதிரானது. கழகத்தை அழிக்கக் கூடியது. திருமண எண்ணத்தைக் கைவிடுமாறுக் கேட்டக் கழகத்தின் முக்கியத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்காத திரு நாயக்கர் அவர்களின் பிடிவாத்ப் போக்கு துரதிர்ஷ்டவசமானது". (11 - 07 - 1949 ஹிந்துவில் வெளியான செய்தியின் தமிழாக்கம் என்னுடையது).

இரண்டாம் பதில் இதோ. அச்சமயம் பலப் பொருந்தாத் திருமணங்கள் நடந்தன. அதாவது 50 வயதுக்காரர் 14 வயதுப் பெண்ணை மூன்றாம் அல்லது நான்காம் தாரமாகத் திருமணம் செய்துக் கொள்வது சர்வ சாதாரணம். இத்திருமணங்களை எதிர்த்து தி.க. ஒரு தார்மீகப் போராடமே நடத்தி வந்தது. பெரியார் அவர்களே அவற்றைக் கண்டித்து எழுதியும் இருக்கிறார். அச்சமயத்தில் பெரியார் இவ்வாறு செய்தது அக்கட்சியினரை ஒரு கேலிக்குரியப் பொருளாக்கி விட்டது. "எனக்கு புத்திசாலிகள் சீடர்களாகத் தேவையில்லை. முட்டாள்களே போதும்" என்று பெரியார் அக்காலக் கட்டத்தில் கூறியதாகவும் செய்திகள் படித்துள்ளேன்.

இன்னொரு தருணத்தில் தி.மு.க. வினரைக் கண்ணீர் துளிகள் என்றும் பெரியார் கேலி செய்திருக்கிறார். இதையும் நான் படித்துள்ளேன். அவர் எதிர்ப்பு 1967 வரை நீடித்தது. இன்னும் கூறப் போனால் 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராடத்தின் போது ஹிந்தியை ஆதரித்து விடுதலையில் கட்டுரைகள் கூட வந்தன. நான் அக்காலக் கட்டத்திலேயே அவற்றை நேரடியாகப் படித்துள்ளேன். அப்போது அவர் "பச்சைத் தமிழன்" காமராஜ் அவர்களைத் தீவிரமாக ஆதரித்தவர்.

தனிப்பட்ட முறையில் பெரியார் அவர்களும் சரி அண்ணா அவர்களும் சரி தங்கள் வீட்டிற்கு எதிர்த் தரப்பாளர்கள் யார் வந்தாலும் பொறுமையாகவும் அன்பாகவும் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார்கள் என்றே நான் அறிவேன். என் தந்தை நிருபர் என்ற முறையில் இருவரிடமும் பழகியிருக்கிறார். அவர் எனக்கு இதை எனக்குக் கூறியிருக்கிறார்.

அப்படிப் பட்ட இருவர் எதிர் முகாம்களில் இருந்ததன் பின்னணி தமிழக வரலாற்றில் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இது பற்றி ஏதாவது நடுநிலைப் பதிவுகள் உண்டா? அவை எங்கு கிடைக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

"சோ ராமசாமிச் சஞ்சிகை நடுநிலையானதுதானே டோண்டு ஐயா. துக்ளக்கிலே இருக்காததா? அதிலேப் பழசிலேத் தேடிப் பாருங்களேன். இல்லையென்றால், தங்கள்த் தந்தைத் தொழில்ப் புரிந்த ஹிண்டுப் பத்திரிக்கையிலே அவர் நடுநிலையாகப் பதிந்திருப்பார் அல்லவா? அதிலேத் தேடிப் பாக்கலாமே?
பெயரிலி."
பார்க்கலாம்தான். ஆனால் அதில் ஒரு சிக்கல். துக்ளக் பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டது 1970-ல். அப்போது இந்த விவகாரம் சமகாலச் செய்தியல்ல. மேலும் சோ அவர்கள் இதைப் பற்றி எழுதியதாக ஞாபகம் இல்லை. அப்படியே எழுதியிருந்தாலும் அது செகண்ட் ஹேண்ட் தகவலாகத்தான் இருந்திருக்கும்.
ஹிந்துவிலோ கேட்கவே வேண்டாம். 1949 ஜூலை மற்றும் ஆகஸ்ட் பேப்பர்களைத் துளாவியதில் எனக்குக் கிடைத்தது மிகச் சொற்ப விஷயங்களே. அப்பத்திரிகை அந்தத் தருணத்தில் அச்செய்திகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் அவ்வளவுதான் என்றுத் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thangamani said...

//அப்போதிலிருந்தே இது சம்பந்தமாகப் பலரிடம் வெவேறுத் தருணங்களில் சந்தேகங்கள் கேட்டு வந்தேன். அதைப் பற்றி இங்கு இப்போதுக் குறிப்பிடுகிறேன்.//

பலரிடம் கேட்ட தகவல்களையும், படித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் தந்தைப் பெரியார் அவர்கள் 'எனது திருமணம்' என்ற சிறு கையேட்டையே இது தொடர்பாக வெளியிட்டார். திமுக தலைவர்கள் மற்றும் இராஜாஜி முதல் இன்னும் தமிழகத்தில் பெரியாரை போற்றியவர்கள், அவரை விமர்சித்தவர்கள், அவரை வெறுத்தவர்கள் இப்படி பலருக்கும் பல கருத்துக்களும், சார்புகளும் இருந்திருக்கும். ஆனால் ஒரு மனிதனின் திருமணத்தைப் பற்றி பேச, முடிவான கருத்தைச் சொல்ல அந்த பந்தத்தை சார்ந்த இருவருக்கே உண்மையான உரிமையுள்ளது. அந்த வகையில் பெரியாரின் எனது திருமணத்தை நீங்கள் படிக்கலாம். அது தி.க பிரசுரமாகக் கிடைக்கிறது.

இந்துவைப்பற்றி நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்துவுக்கு எப்போதும், உகாண்டா, கஜகிஸ்தான், போன்ற நாடுகளின் மேலிருக்கும் அதிக அக்கறையினால் அது பற்றிய செய்திகளுக்கு அதிமுக்கியம் கொடுப்பதும், தமிழர்கள் பற்றிய செய்திகளை அலட்சியப்படுத்துவதும் அனைவரும் அறிந்ததுதான்.

உங்களுக்கு இன்னொரு தகவலையும் சொல்லுகிறேன். அது தமிழ்நாட்டுக்கும் இந்துவுக்கும் இருக்கும் வியக்கத்தக்க தொடர்பினை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவை. இந்த இந்து சில வருடங்களுக்கு முன் தனது பத்திரிக்கை விளம்பரத்துக்காக தமிழ் நாட்டு வரைபடத்தை போட்டு 'your place, your paper' என்று விளம்பரம் செய்தது. அப்போது நந்தன் பத்திரிக்கை தமிழர்களுக்கு இந்த அறிய செய்தியை நினைவூட்டி சுரணை வரச்செய்த இந்துவுக்கு நன்றி கூறி, நந்தன் அதே தமிழ்நாடு வரைபடத்தை போட்டு 'உங்கள் நாடு உங்கள் ஏடு' என்று நந்தனுக்கு விளம்பரம் செய்தது..

நன்றி!

dondu(#11168674346665545885) said...

நன்றி விஸ்வாமித்ரா அவர்களே. பெயருக்கேற்ற தார்மீகக் கோபத்துடன் நீங்கள் ஒரு அருமையானப் பின்னூட்டம் தந்திருக்கிறீர்கள். என்னுடைய வாதத்துக்கு இது ஒரு அருமையான ஆதாரத்தை அளித்துள்ளது. மீண்டும் நன்றி.
நானே எதிர்ப்பார்க்காத ஆதாரம். அதுதான் பெரியார் ஆதரவாளர்கள் ரொம்பவும் அடக்கி வாசிக்கிறார்கள் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Boston Bala said...

I am not sure how/where it is available. But, there is a five part documentary by Jnani on Periyaar called 'Aiyya'. It might be helpful.

dondu(#11168674346665545885) said...

நன்றி பாஸ்டன் பாலா அவர்களே. நீங்கள் குறிப்பிடும் ஐந்துப் பகுதி டாக்குமென்டரி எங்கு கிடைக்கும் என்றுத் தெரியவில்லை. அதில் கூறப்பட்டது என்ன என்பதை சுருக்கமாகத் தெரிவிக்க இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெரியாரின் திருமணம் பற்றி காஞ்சி பிலிம்ஸ் இன்னொருப் பதிவு செய்திருக்கிறார். அதன் தலைப்பு: "சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர் ?" பெரியார் சுய மரியாதைத் திருமணம் செய்துக் கொள்ளாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்திருக்கிறார். இந்த பாயின்ட் எனக்குக் கூடத் தோன்றவில்லை. காஞ்சிக்கு என் நன்றி உரித்தாகுக. அப்பதிவுக்கு நான் பின்னூட்டம் இட்டுள்ளேன். அது இங்கே:
ஸேம் சைட் கோல் அடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே? சரி உங்கள் கேள்விக்கு வருவோம். என் நினைவுக்கு எட்டிய வரை சுய மரியாதைத் திருமணங்கள் 1949-ல் சட்டப்படி செல்லாதவையாக இருந்தன. அவ்வாறு திருமணம் செய்துக் கொண்டப் பெண் வைப்பாட்டியாகவே கருதப்பட்டு வந்தார். கணவர் சொத்திலும் பங்கு கிடைக்காது என்ற நிலையும் இருந்ததெனக் கருதுகிறேன். வைப்பாட்டியின் குழந்தைகளுக்குத்தான் தகப்பன் சொத்தில் பங்குண்டு என்ற நிலை.

இப்போது மணியம்மையாரின் பார்வைக் கோணத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். விதவையானால் சொத்தில் பங்கில்லை. 72 வயதுக் கணவர் குழந்தை கொடுக்க முடியுமா? அப்போது சொத்து ஈ.வி.கே. சம்பத்துக்குத்தானே போயிருக்கும். அவ்வாறு விட்டு விட முடியுமா? சொத்து என்றப் பிரச்சினை வந்ததும் சுயமரியாதையாவது மண்ணாங்கட்டியாவது என்றுதானே செயல்படத் தோன்றும்? அப்படித்தான் பெரியாரும் மணியம்மையாரும் செயல் பட்டிருக்க வேண்டும்.

1967-க்குப் பிறகுதான் அவை சட்ட ஒப்புதல் பெற்றன என நினைக்கிறேன். இருப்பினும் பெரியார் பலருக்கு இம்மாதிரித் திருமணங்கள் செய்வித்தார் என்று கேள்விப் பட்டுள்ளேன். அவர்களிடம் அப்படி சொத்து ஒன்றும் இருந்திராது என்றுப் படுகிறது. அப்படியே இருந்திருந்தாலும் அதைப் பற்றிப் பெரியாருக்கு என்னக் கவலை இருந்திருக்க முடியும்? சுயமரியாதைக் கொள்கையானது மற்றவர்கள் நலனை விட அதிக முக்கியம் அல்லவா?

சுவாரசியமாக இருக்கின்றன இம்மாதிரி தியரிகள். நன்றி காஞ்சியாரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

p.s. kanchi's blog url: http://kanchifilms.blogspot.com/2005/03/blog-post_111184187900287133.html

dondu(#11168674346665545885) said...

காஞ்சியின் மேலே குறிப்பிடப்பட்டப் பதிவிலிருந்து அவருடைய மற்றும் என்னுடையப் பதிவுகளை இங்கு மறுபடியும் இடுகிறேன்.
காஞ்சி பிலிம்ஸ் said...
//ஸேம் சைட் கோல் அடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?//

ஏன் ஜெயலலிதா மட்டும் தான் "sameside goal" போடுவாரா?(சங்கராச்சாரி விஷ்யத்தில்)

கண்மூடித்தனமாக ஒருவரை பின்பற்றுவதைவிட, கடைசிவரை அவர் சொன்னவற்றை பகுத்தறிந்து பார்த்தும், காலத்திற்கு ஏற்ப அதனை மாற்றி அமைத்து வாழ்வதே பகுத்தறிவாகும். அப்படியில்லை என்றால் கண்மூடித்தனமாக காஞ்சி மடத்திற்கு ஜால்ரா போடும் ஒரு கூட்டத்திற்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.


//இப்போது மணியம்மையாரின் பார்வைக் கோணத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். விதவையானால் சொத்தில் பங்கில்லை. 72 வயதுக் கணவர் குழந்தை கொடுக்க முடியுமா? அப்போது சொத்து ஈ.வி.கே. சம்பத்துக்குத்தானே போயிருக்கும். அவ்வாறு விட்டு விட முடியுமா? //

நீங்கள் குறிப்பிடும் சொத்து என்பது ஈ.வே.ராவின் தனிப்பட்ட சொத்தையா? அப்படி என்றால் அதன் மதிப்பு எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அல்லது மாறாக திராவிட கழகத்தின் சொத்தை சொல்கிறீர்களா? ஈ.வே.ராவின் திராவிட கழக சொத்துக்கள் அனைத்தும் "டிரஸ்ட்" ஆக மாற்றப்பட்டுவிட்டது. அதனை பராமரிக்கவே மற்றவர்களால் முடியுமே தவிர சுருட்ட முடியாது.
கண்மூடித்தனமாக சேர்ந்த சொத்துக்களை சாணக்கிய தனமாக தன்னுடைய சாவிற்கு முன் தன் தம்பியின் மேல் மாற்றிவிட்டு சென்ற திருவண்ணாமலையில் தன் தாய்க்கு சமாதி அமைத்து அதன் அருகிலேயே இருந்தும், தன் தம்பியை பிரியமுடியாமலும் குடும்ப பந்தத்தில் உழன்றாலும் தன்னை ரிஷி என்று பீற்றிகொள்ளும் ரமணருக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது பொருந்தும்.
பெரியார்/மணியம்மை திருமணத்திற்கு வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடியுங்கள் சார்.

9:05 PM


Dondu said...
"ஈ.வே.ராவின் திராவிட கழக சொத்துக்கள் அனைத்தும் "டிரஸ்ட்" ஆக மாற்றப்பட்டுவிட்டது. அதனை பராமரிக்கவே மற்றவர்களால் முடியுமே தவிர சுருட்ட முடியாது."
எப்போது அவ்வாறு ட்ரஸ்டாக மாற்றப்பட்டன? 1949-க்கு முன்பேயா? மணியம்மைய்யார் உயில் எழுதி சீல் வைக்கப்பட்டக் கவரில் அதை வைத்திருந்தார். அவர் மரணத்துக்குப் பிறகு சட்டப்படி சீல் உடைக்கப்பட்டு உயில் படிக்கப்பட்டது. அதில் அவர் தெளிவாக வீரமணி அவர்களை வாரிசாக நியமித்திருந்தார். இதை நான் அக்காலக் கட்டத்தில் பத்திரிகையில் படித்திருக்கிறேன்.
ட்ரஸ்டாக இருந்தால் என்ன ஐயா? அதன் பராமரிப்பு என்பதே ஒரு வகை அதிகாரம்தானே. அதற்கே எவ்வளவு போட்டிகள் தெரியுமா? அது சரி டிரஸ்டில் இருந்தவர்கள் யார் யார்?
பதிவுத் திருமணம் செய்து கொண்டது பிற்காலத்தில் டிர்ஸ்ட் சம்பந்தமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கே. இதில் பெரியாருக்கு முக்கிய ஆலோசனை வழங்கியது அவர் உயிர் நண்பர் திரு ராஜாஜி அவர்களே. என்ன இருந்தாலும் அவர் வக்கீல் அல்லவா? அவர் அளித்தது சட்ட ஆலோசனை. ஒரு விஷயம். இம்மாதிரியான சட்ட ஆலோசனை பெறுவதில் பெரியார் அவர்கள் இட ஒதுக்கீடு கொள்கையை அனுசரிக்கவில்லை. திறமைக்கேதான் மதிப்பு கொடுத்தார். இது ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாகச் சொல்வது போல் இல்லை?
ரமண மஹரிஷி? இது வரைக்கும் அம்மாதிரி செய்தியைக் கேள்விப்படவில்லை. ஆகவே கருத்து ஏதும் இல்லை.
26 வயது பெண்மணியை திருமணம் செய்து கொண்ட 72 வயதுக் கிழவர் மனைவிக்கு என்ன உடல் சுகம் கொடுத்திருக்க முடியும்? மனைவியுடைய வாழ் நாள் முழுதும் பாழ் ஆகவில்லையா? மணியம்மையாரை யாரும் கட்டாயப் படுத்தவில்லைதான். இருப்பினும் பெரியாருக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டாமா? அம்மாதிரி சொந்த விருப்பின்படி தியாக வாழ்க்கை வாழ்ந்தக் கண்ணகியைப் பற்றி மட்டும் பெரியார் ஏன் அவ்வாறுக் கடுமையாகப் பேச வேண்டும்?
அவருடைய இச்செயல் புத்தியுள்ளவர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவேதான் அவர் தனக்கு புத்திசாலிகள் தேவையில்லை, முட்டாள்களே போதும் என்றுக் கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

3:10 AM

மாயவரத்தான் said...

டோண்டு சார் போட்டு தாக்குங்க..!

சாதாரணமா இதே விவாதம் ஒரு பேச்சுக்கு ரமண மகரிஷியையோ அல்லது வேறொருவரைப் பற்றியோ இருந்திருந்து அதில் இதே போல ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (இது ஜாதி பெயர் தானே?!) பற்றி எதுவும் கமெண்ட் வந்திருந்தால் சிலருக்கு பொத்துக் கொண்டு வரும். உடனே இப்படி சம்பந்தமில்லாமல் அவரை இழுத்துக் கொண்டு வருவது பா____ லாஜிக் என்றெல்லாம் ஜல்லியடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இங்கே அதே போல ஜெயலலிதா, சங்கராச்சாரியார், ரமண மகரிஷி பற்றியெல்லாம் அநாவசியமாக இழுப்பது மட்டும் என்ன லாஜிக்காம்?! இதுக்குதான் M.I.V.P. லாஜிக்குன்னு சொல்லுவாங்க! (அது என்னன்னு கேக்குறீங்களா? அவங்களே பதில் தருவாங்க பாருங்க!)

டிரஸ்ட் வைத்தால் அதில் உள்ள கணக்குகளை எல்லாரும் பார்க்க முடியுமாம்! அடப்போங்க சார்..! இது காதிலே மைல் கணக்கிலே பூ சுத்துற மாதிரியான பீலிங் உங்களுக்கு வருதா இல்லையா!?

டோண்டு சார்... நெறய எழுதுங்க.. ரொம்ப பேருக்கு பிளட் பிரஷர் ஏறிகிட்டிருக்கு.. தமிழிலே என்ன என்ன வார்த்தைப் பிரயோகங்கள் இருக்குன்னு உங்களுக்கு தெரியணுமா? வரிசையா வரும் பாருங்க! :)

மாயவரத்தான் said...

மேலே 'விஸ்வாமித்ரா' எழுதியிருந்ததை என்னால் அப்படியே படிக்க முடியவில்லை. அதை யுனிகோடில்
எடுத்து மீண்டும் இட்டிருக்கிறேன். 'பகுத்தறிவு' (?!) பாதையில் செல்பவர்களுக்கு தற்காலத்திற்கு தகுந்தாற் போல் மாறிட உபயோகமாக இருக்கும் அல்லவா?!
*************************

இந்தத் திருமணத்தைக் குறித்து ஆய்ந்த ம.வெங்கடேசன் எழுதுகிறார்:

சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்

ஈவேராவின் இரண்டாவது திருமணம் 9-7-1949 ஆம் ஆண்டு நடந்தது.
அப்போது ஈவேராவின் வயது 72. மணியம்மைக்கு 26.

தன்னைவிட 46 ஆண்டுகள் இளைய பெண்ணை மணக்குமுன்
திருமணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஈவேரா சொல்வது என்ன
தெரியுமா?

''மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்,
பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர்
தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற
நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே
சொல்லலாம்.''
(குடியரசு 3-6-1928)

அது மட்டுமல்ல 1940-ல் ஈவேராவின் பத்திரிகையான விடுதலையில்
அண்ணாதுரை எழுதிய ஒரு தலையங்கத்தில் ''தாத்தா கட்ட இருந்த தாலி''
என்ற தலைப்புக் கொடுத்து எங்கோ வடதேசத்தில் நடந்த ஒரு
திருமணத்தைக் குறித்து சொல்வது:

"தொந்திசரிய மயிரே வெளிர நிறைதந்தமனைய உடலே படைத்த 72
வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளுமதவேட்கைக் கணையாலே
தாக்கப்பட்டுக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். வயது 72.
ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டி,
பேரன்பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன?
இருண்ட இந்த இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன்
கல்யாணம் செய்து கொள்ளலாமே"

என்று தொடங்கி இந்தப் பொருந்தாத் திருமணத்தை நீண்டதொரு
தலையங்கத்தில் பொதுவாய்ப் பார்ப்பனர்களைச் சாடக் கிடைத்த மற்றொரு
வாய்ப்பாய் அண்ணா எழுதியதைப் பிரசுரித்து மகிழ்ந்த ஈவேரா அடுத்த ஆறு
ஆண்டுகளிலேயே இப்படித் திருமணம் செய்து கொண்டதுதான் பெரிய
புரட்சி!

இந்தத் திருமணத்தை ஏற்காமல் அண்ணா வெளியேறியது மட்டுமல்ல.
அப்போது ஈவேராவின் மிக நெருக்கமான இராம.அரங்கண்ணல் ஒரு
காரியம் செய்தார். அதை அவரே சொல்லக் கேட்போம்.

"பழைய குடியரசு ஏடுகளில் இருந்து பெரியாரின் பேச்சுகளை அடிக்கடி
விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளைப் புரட்டிக்
கொண்டிருந்தபோது பொருந்தாத் திருமணம் பற்றிய பேச்சு கண்ணில்
பட்டது 'ஒரு இளம்பெண்னை வயதானவர் கட்டிக் கொள்வது சரியல்ல'
என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து 'தக்க வயதுப்
பொருத்தமே திருமணத்தின் இலட்சியம் - பெரியாரின் பேருரை' என்று
கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டுக் கம்போசிங்குக்குக் கொடுத்தேன்.
அதுவும் உடன் வெளிவந்தது. பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு
பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது பெரியார்
கடுங்கோபத்தில் இருந்தார். என்னைப் பார்த்து 'பெருமாள் வீட்டுச்
சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க' என்று
சொன்னார். நான் பதில் பேசாமல் வெளியேறினேன்.
(நூல்: இராம அரங்கண்ணலின் நினைவலைகள்)

இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில் பேசினார் அண்ணா.
அவர் திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு மடலின்
கடைசியில் இப்படிச் சொல்கிறார்:

"அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர கேட்போர்
காது குளிரக் கூறுவதும் அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும்
பெருமையும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும்
இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப்
பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது. அந்த
வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத்
திருமணமாம்.

'கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு' என்று ஊரார்
பரிகாசம் செய்கிறார்களே. 'ஊருக்குத்தானய்யா உபதேசம்' என்று
இடித்துரைக்கிறார்களே.

'எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒருகாலை வீட்டிலும், ஒரு
காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ
ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை' என்றெல்லாம்
பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி
தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.

வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப் படுகிறோம்
தனிமையிலே!

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு
காரசாரமாக, எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்!

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும்
கொள்கையையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது
தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார்.
நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டுமக்களின்
நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன
என்று தெரிவித்து விட்டார்.

இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால்
துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான்
சாதாரணமானதென்று சொல்ல முடியும்?

நூற்றுக் கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம்
பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ
தாத்தாவைப் பார், வணக்கம் சொல்லு!' என்று கூறுவர். கேட்டோம்
களித்தோம்.

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மனியம்மையைக் காட்டி 'தாத்தா
பெண்ணு' என்று கூறுவர்.

இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம். பனிவிடை செய்துவந்த
பாவையுடன்.

சரியா முறையா என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி.என்.அண்ணாதுரை"

(ஆதாரம்:திராவிடநாடு 3-7-1949)

பலவித எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் ஈவேராவின் இந்தத் திருமணம்
முடிந்தவுடன் கட்சியை விட்டு அண்ணா வெளியேறிப் பின் எழுதியது:

"பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்ட ஈட்டி.
இயக்கத்தின் மாண்பு அதன் தலைவரின் தகாத செயலால்
தரைமட்டமாகிவிடும். உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி
தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவை காப்பாற்றிவிட
முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும்
அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டுவிட்டது. இனி
அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயனில்லை. உழைத்து நாம் சிந்தும்
கண்ணீர்த்துளிகள் அவரது 'சொந்த' வயலுக்கு நாம் பாய்ச்சிய
தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்
வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற
கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும்
கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்."
(நன்றி: திராவிடநாடு - 21-8-1949)

கற்புக்கனல் கண்ணகியைச் சாடிவந்த ஈவேராவின் இந்தத் திருமணம்
முடிந்தவுடன், பின்னர் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் சொன்னது:

'கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு,
மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக்
கொள்ளமுடியுமா?' என்று கம்பீரமாகக் கேள்வி கேட்டு வந்தார் ஈவேரா.

முதலில் தந்தையாக உறவு கொண்டு பிறகு அவரையே கணவராகக்
காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக
அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித
உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி
அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.

இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா
சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு
கண்ணகியைச் சாடுகிறார்."
(நன்றி: தமிழ்முரசு - ஏப்ரல் 1951)

dondu(#11168674346665545885) said...

நன்றி மாயவரத்தான் அவர்களே. டிஸ்கியில் இருந்ததை நான் ஏற்கனவே என் வன்தகட்டில் இறக்கிக் கொண்டுள்ளேன். காஞ்சியும் அவர் பதிவில் இதை லதா எழுத்துருவில் தந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றி. பெரியாரின் சீடர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது. என்னதான் அவர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் பெரியாரை அவர்கள் இவ்விடயத்தில் ஆதரித்து வாதம் இடமுடியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//பெரியாரின் சீடர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது //
ஏதோ ஏற்கனவே ரொம்ப இருந்து இப்போ காலி ஆகிட்ட மாதிரி இல்ல பேசுறீங்க?!

P B said...

உங்களுக்கு ரமண மஹரிஷியையும் புரியவில்லை, திராவிட இயக்கத்தினரையும் புரிந்த மாதிரி தெரியவில்லை. என்ன செய்வது மாயா உலகம்.

dondu(#11168674346665545885) said...

"உங்களுக்கு ரமண மஹரிஷியையும் புரியவில்லை, திராவிட இயக்கத்தினரையும் புரிந்த மாதிரி தெரியவில்லை. என்ன செய்வது மாயா உலகம்."

இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சற்றே விளக்க முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

P B said...

I am sorry. I mistook someone else's comment on Ramana MAharishi as yours. I take back that comment. Real Sorry.

dondu(#11168674346665545885) said...

I am sorry. I mistook someone else's comment on Ramana MAharishi as yours.

பரவாயில்லை, நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://mayavarathaan.blogspot.com/2006/02/2006-256.html
"ஸ்தாபகரோ முதியவரும் குமரியும் திருமணம் செய்யக்கூடாதது என்பது ஊருக்குத்தான் எனக்கில்லை என்றார்"
If you mean E.Ve.Ra, When did he say so?
-Nambi"

மேலே கூறப்பட்ட வாக்கியத்தை அவர் அப்படியே கூறவில்லைதான். ஆனால் அப்பொருள் வருவது போலத்தான் அவர் நடவடிக்கை இருந்தது.

அக்காலக் கட்டத்தில் வயது மிகுந்த கிழவர்கள் தங்களிலும் சிறிய வயதுடையப் பெண்களை மணப்பதை பொருந்தாத் திருமணம் எனப் பெயரிட்டு தி.க. பெரியார் அவர்களின் தலைமையில் பெரிய போராட்டமே நடத்தி வந்தது. அப்போது போய் பெரியார் குடுகுடுவென்று போய் அதே மாதிரித் திருமணத்தை செய்து கொண்டு வந்ததால்தான் திகவிலிருந்து திமுக பிறக்கக் காரணம் என்பது சரித்திரம். அதை எதிர்த்து இப்போது எவ்வளவு பூசி எழுதினாலும் பலன் இல்லை.

உண்மை என்னவென்றால் பகுத்தறிவு என்ற பெயரில் மற்றவர்களை கொச்சையாகத் தாக்கிய பெரியார் அவர்களே தனக்கெதிராக அதே பகுத்தறிவு உபயோகிக்கப்பட்டதும் கோபப்பட்டார் என்பதுதான்.

இது பற்றி நான் எழுதிய "ஜூலை 1949-ல் நடந்தது என்ன" என்ற பதிவை அதன் பின்னூட்டங்களுடன் பார்க்கவும். அதன் சுட்டி: http://dondu.blogspot.com/2005/03/1949.html

இப்பின்னூட்டத்தின் நகலையும் நான் மேலே கூறிய அதே பதிவில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். இப்பின்னூட்டம் டோண்டுதான் இட்டான் என்பதற்கான மூன்றாம் சோதனை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mangai said...

முற்போக்கு

தான் கொள்கைகளை தானே பின் பற்ற முடியாத ஒருவரின் கொள்கைகள் மீது சவாரி செய்து கொடிருப்பவர்கள் அனைவருக்கும் தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும் தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் 'சலுகைகள்'. அதை நியாப் படுத்த
அவர்கள் பெரியார் முகம் அணிந்து கொள்கிறார்கள்.


Wishing you and your family a wonderful New Year 2008

dondu(#11168674346665545885) said...

ஆயிரத்தில் ஒரு வார்த்தை மங்கை அவர்களே.

உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mangai said...

Thanks. I raised a Q to you in
http://mangaiival.blogspot.com/2007/12/5.html

Not sure if you saw that.

Pls check and see if you could find a reply

dondu(#11168674346665545885) said...

உங்கள் பதிவில் பதில் அளித்து விட்டேன் மங்கை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது