9/06/2007

IDPL நினைவுகள் - 7

ஐ.டி.பி.எல்-லில் திடீரென என்னை தலைமையகத்திலிருந்து பக்கத்திலிருந்த தொழிலகத்துக்கு மாற்றியதை பற்றி கூறியுள்ளேன். தொழிற்சாலையிலும் என்னை மறுபடி தலைமை அலுவலக கட்டிடத்தின் மின்சார பராமரிப்பை பார்த்து கொள்ள அனுப்பிவிட்டதையும் கூறியுள்ளேன்.

ஐ.டி.பி.எல். க்ஷீண நிலையை அடைந்து கொண்டிருந்தது (அப்பப் போய் உன்னை இந்த வேலைக்கு போட்டாங்களா, கிழிஞ்சது கிருஷ்ணகிரி எனக் கதறுவது முரளிமனோஹர்). இக்கட்டிடத்தின் மின்சார கட்டமைப்புகள் சரியான நிலையில் இல்லை. பல இடங்களில் விளக்குகள் எரியவில்லை. குழல் விளக்குகள் தட்டுப்பாடு. எல்லாமே தொழிற்சாலையிலிருந்துதான் போட வேண்டும். அங்கோ பணம் இல்லை. அவர்களது கவலை அவர்களுக்கு. இப்போதுதான் நான் ஒரு காரியம் செய்தேன். ஜலானி அவர்களை அணுகினேன். அப்போது அவர் DGM (Project) ஆக இருந்தார். நான் அவரை அணுகிய சமயம் பலத்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. நான் மேலே சொன்ன அதே விஷயம்தான். எல்லோரும் என்னை சாடினர். அந்த இடத்தில் விளக்கு எரியவில்லை. இன்னொரு இடதில் ஃபேன் ஓடவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள். பொறுமையாகக் கேட்டு கொண்டிருந்த ஜலானி திடீரென வெடித்தார். "பணம் ஒன்றுமே இல்லாது ராகவன் மட்டும் என்ன செய்ய முடியும்" என்று? இப்போது நான் ஒரு யோசனை சொன்னேன். ஒரு குறிப்பிட்ட தொகை இம்ப்ரஸ்ட்டாக வந்தால் இந்த சிறிய ஆனால் எரிச்சலூட்டக்கூடிய தொல்லைகளை சரி செய்யலாம் என்று.

ஜலானிக்கும் அது சரி என்று பட, தலைமை அதிகாரியிடம் பேசி எனக்கு தலைமை அலுவலகத்திலிருந்தே இம்ப்ரஸ்ட் ஏற்பாடு செய்தார். இம்மாதிரி ஓர் அதிகார மையத்தின் கீழ் வேலை செய்து இன்னொரு அதிகார மையத்திடமிருந்து நேரடியாக இம்ப்ரஸ்ட் பெறுவது ரொம்பவும் அபூர்வம். இம்ப்ரஸ்ட் கணக்கு வழக்குகளையும் நான் நேரடியாக ஜலானி அவர்களிடமே சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று இம்ப்ரஸ்ட் தொகையை அவ்வப்போது நிரப்பிக் கொள்ள முடிந்தது.

திடீரென தலைமை அலுவலகத்தில் நெருப்பு பிடித்து விட்டது (நீ ஏதாவது செய்தாயா என நக்கலடிப்பது முரளிமனோஹர்). மெயின் ஸ்விட்ச் ரொம்ப நாளாகவே அழும்பு செய்து கொண்டிருக்கவே அதை டைரக்ட் செய்து வைத்திருந்தனர். அதை மாற்ற ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்படும், இம்ப்ரஸ்ட் போதாது. ஆகவே அதை மாற்ற நான் பல முயற்சிகள் செய்து வந்தேன். இது சம்பந்தமாக நான் எழுதிய குறிப்புகள் சிவப்பு நாடா முறையால் அலைக்கழிக்கப்பட்டன. திடீரென கட்டிடத்தின் வேறு இடத்தில் நெருப்பு பிடிக்க அதனால் ட்ரிப் ஆகியிருக்க வேண்டிய முக்கிய ஸ்விட்ச் சொதப்ப, தொழிற்சாலை மின் பங்கீட்டு நிலையத்திலேயே பெரிய பட்டாசாகி விட்டது. இதுதான் சாக்கு என நான் எனது கோரிக்கையை மறுபடி வைத்தேன். ஆனால் இம்முறை ஜலானியிடம் சென்றேன். தலைமை அலுவலகத்திலிருந்தே பணம் பெற்று இரண்டே நாட்களில் வேலை முடிந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் இம்மாதிரி விஷயங்களுக்கு பிளாண்டை அணுகுவதை சுத்தமாக விட்டேன். ஏதாவது தலைமை அலுவலகத்துக்கு தேவை என்றால் நேரடியாக நோட் போட்டு, ஜலானியிடம் ஒப்புதல் பெற்று நிதி இயக்குனர் ராமச்சந்திரன் அவர்களிடம் மேல் ஒப்புதல் பெற்று காதும் காதும் வைத்தாற்போல் செயல்பட்டு என வாழ்க்கை போயிற்று.

ஒரு முறை இம்மாதிரி சாங்ஷன் காகிதத்தை எடுத்து கொண்டு போய் காசாளரிடம் வந்தேன். அப்போதுதான் கார்ப்பரேட் அலுவலகத்தில் இரண்டு மூன்று அதிகாரிகளின் பண அட்வான்ஸ் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது. என் காகிதத்தை பார்த்ததுமே காசாளர் சச்தேவா அக்கௌண்ட்ஸ் அதிகாரியை நோக்கி (அவர் ஹாலுக்கு இன்னொரு புறம் இருந்தார்) "சார் பணம் கேட்டு இன்னொரு கோரிக்கை" எனக் கத்த, அவரும் அங்கிருந்து கொண்டே "யார் கேட்பது" எனக் கேட்க அவர் ராகவன் கேட்பதாகக் கூற அவர் அங்கிருந்து கொண்டே "கொடுத்து விடு" எனக் கூற, இவரும் பணத்தை எண்ணிக் கொடுத்தார். சச்தேவாவிடம் விவாதம் செய்து கொண்டிருந்த மற்ற அதிகாரிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எனக்குமே இது ஒவர் எனப்பட்டது. என்ன ஏது எனக் கேட்காமலேயே அக்கௌண்ட்ஸ் அதிகாரி செய்தது ஆச்சரியத்தை கொடுத்தது. சச்தேவாவிடம் சாவகாசமாக கம்பெனி பஸ்ஸில் வீட்டுக்கு செல்லும்போது எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அவர் கூறிய காரணங்கள்.

1. ராகவன் நீங்கள் எப்போதுமே எல்லா காகிதங்களையும் தயார் செய்து கொண்டுதான் அணுகுவீர்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
2. வேலை முடிந்ததும் கடைசி வவுச்சரின் தேதிக்கு அடுத்த நாளே நீங்கள் கணக்கை கொடுத்து விடுகிறீர்கள். பல அதிகாரிகள் அந்த விஷயத்தில் ரொம்ப மோசம். மாதக் கணக்கில் இழுத்தடிப்பார்கள். நாங்கள் பலமுறை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கும்.
3. ஆகவே உங்களுக்கு நாங்கள் உடனடி பணம் தராது இழுக்கடித்தால் தலைமை அலுவலகத்துக்குத்தான் பிரச்சினை. அவ்வளவுதான் விஷயம் என்றார்.

இம்மாதிரி கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. சச்தேவா சொன்ன விஷயங்களெல்லாம் சரிதான். ஆனாலும் நான் அவற்றை செய்தது எனது சௌகரியத்துக்குத்தான். வவுச்சர்கள் எங்காவது மறதியாக வைத்து விட்டு அவை தொலைந்து போனால் கஷ்டம் என்பதே நான் அவற்றை உடனடியாக கணக்கு எழுதி சமர்ப்பித்தற்கு காரணம். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. 4000 ரூபாய் தேவை என்றால் 4500 ரூபாய் கேட்பேன். கணக்கு தரும்போது என்னிடம் கம்பெனி பணம் சுமார் 500 ரூபாய் இருக்கும். ஆகவே கணக்கின் கடைசி வரியாக, மிகுதிப் பணத்தை திரும்பச் செலுத்த தேவையான ஆணை இடுமாறு எழுதுவேன். அந்த ஆணையையும் கணக்கை சரிபார்த்த பிறகுதான் இடுவார்கள். பிறகு என்ன, ஒரே நாளில் அத்தனையும் நடந்து விடும். அதுவே நான் குறைச்சலாக முன்பணம் வாங்கி எனது கையை விட்டு செலவழித்திருந்தால் அவ்வாவு சீக்கிரம் கணக்கைப் பார்த்து எனக்கு நான் செலவழித்த பணத்தைத் தந்துவிட மாட்டார்கள்.

சச்தேவா கூறியதில் இன்னொரு விஷயமும் புலப்பட்டது. அதாவது என் மேல் இந்த விஷயத்தில் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதே அது. சந்தோஷம் ஒரு புறம், இத்தனை நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பயம் இன்னொரு புறம்.

ஒருவர் நம் மீது நம்பிக்கை வைத்திருப்பது என்பது மிகப் பெரிய விஷயம். நம்பிக்கையைப் பெற மாதக்கணக்கில் பாடுபடவேண்டும். ஆனால் அது குலைய ஒரு நிமிடம் போதும். இந்த அக்கௌண்ட் விஷயத்தில் எனக்கு அதுபோல் கடைசிவரை நடக்கவில்லை என்பதில் ஆறுதல்.

அதே போலத்தான் ரகசியங்கள் பெறுவதும். அது பற்றி பிறகு ஒரு நாள் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Anonymous said...

it s very nice post from dondu again.
"ஒரு குறிப்பிட்ட தொகை இம்ப்ரஸ்ட்டாக வந்தால் "

what is the இம்ப்ரஸ்ட்? will you put more light on this?

Anonymous said...

அந்த காலங்களில் "நம்பிக்கைக்கு" மதிப்பு இருந்தது இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது.
அனானியாக போடுவது இடிக்குது, பொருத்துக்குங்க.

dondu(#11168674346665545885) said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நெப்போலியன் அவர்களே.

இம்ப்ரஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் கொடுத்து வைப்பது. உதாரணத்துக்கு எனக்கு ஐயாயிரம் ரூபாய் தருவார்கள். அதை வைத்துக் கொண்டு நான் அன்றாடம் தேவைப்படும் குழல் விளக்கு, ஃபேன் கண்டன்சர்கள், எம்.சி.பி. எனப்படும் மினியேச்சர் ஸ்விட்சுகள் வாங்கி என் கீழ் வேலை செய்யும் எலெக்ட்ரீஷியனிடம் கொடுக்க அவரும் அதை பொருத்துவார். சுமார் 4000 ரூபாய் அளவுக்கு செலவானவுடன் வவுச்சர்களை வைத்து கணக்கு எழுதித் தர வேண்டும். அக்கணக்கை சரி பார்த்து எனக்கு அந்த 4000 ரூபாய்களை தருவார்கள். மறுபடியும் என்னிடம் 5000 ரூபாய்கள் இருக்கும். இப்படியே வேலைகளில் தொய்வு இருக்காது.

இதில் கஷ்டம் என்னவென்றால் இம்ப்ரஸ்ட் வைத்திருப்பவர்கள் நெருப்பு மாதிரி இருக்க வேண்டும். அப்பணத்தை சொந்தத் தேவைகளுக்காக ரொட்டேஷனில் விடக்கூடாது. இதைத்தான் பல அதிகாரிகள் செய்து சந்தியில் நிற்பார்கள். எனது இம்ப்ரஸ்ட் பணத்திலிருந்து தொழிற்சாலைக்கும் சில சாமான்கள் வாங்கச் சொன்னதை நான் மரியாதையுடன் அதே சமயம் உறுதியுடன் மறுத்து விட்டேன்.

மத்தியப் பொதுப்பணித் துறையில் அக்கௌண்ட்ஸ் விதிப்படி இம்ப்ரஸ்ட் வைத்து கணக்குகள் எழுதிய எனக்கு இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

அன்புடன்,
டொண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அந்த காலங்களில் "நம்பிக்கைக்கு" மதிப்பு இருந்தது இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது.
அனானியாக போடுவது இடிக்குது, பொருத்துக்குங்க.//
எல்லா காலங்களிலும் மக்கள் ஒரே மாதிரித்தான். அந்தக் காலம் என்றதும் எனது முந்தைய பதிவுகளில் ஒன்றில் எழுதிய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2007/08/blog-post.html
"எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில் நான் கேட்ட டயலாக்கை இடுகிறேன்.

சுந்தா: (நாடகத்தில் சேகரின் மாமா): சிகாமணி, எப்போதும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு வேண்டும். என்னையே எடுத்துக்கோ, நான் ஒரு பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நல்லா உழைத்து இரண்டே வருடங்களில் நானே ஒரு கடைக்கு முதலாளியாகிட்டேன்.

சேகர்: (நாடகத்தில் சிகாமணி): இப்பல்லாம் அது முடியாது மாமா. கல்லாவையெல்லாம் முதலாளிங்க இழுத்து பூட்டிடறாங்க.

அப்படியெல்லாம் செய்யப்படாது".

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இம்ப்ரஸ்ட் பணத்தை தனிப்பட்ட செலவுக்கு உபயோகிப்பது என்பது நிதி விஷயங்களில் கட்டுப்பாடற்று இருப்பதாகும். இப்போது எடுத்து கொள்ளலாம், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விடுவது எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் என்பது பணத்தை கையாளும்போது தெரியாது.

அதேபோலத்தான் நண்பர்களிடமிருந்து கடன் பெற்று அலைய விடுவது. குதிரை கீழே தள்ளியதும் இன்றி குழியும் பறித்தக் கதையாக தான் கடன் வாங்கியதை வெளியில் சொன்னதையே துரோகம் போல பேசுவது எல்லாம் டூ மச். அது சம்பந்தமாக இம்மாதிரி செய்யும் ஒருவருக்கு நான் இட்ட பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vinaiaanathogai.blogspot.com/2007/09/blog-post_15.html

பின்னூட்டம் இதோ:
"//மற்றபடி, அவரிடம் பணம் கைமாறாக வாங்கியதெல்லாம் உண்மை. அவசரப்பட்டு அவர் பேசியதும் 6 மாதங்களில் திருப்பிக் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறேன். ஆனால், இதை ஒரு பிழைப்பாகவே நான் செய்து வருவதாக அவர் எழுதியது, நிதானம் தவறிய அவரது உளறல் என்பதை அறிவேன். தனிப்பட்ட உறவு என்ற அளவில் என்னால் அதை மன்னிக்க முடியாது. இங்கும் தனிப்பட்ட பேச்சிலும் என்னை வசை மாறிப் பொழிந்ததையும்கூட. இனி எங்கள் உறவை ஒட்டச் செய்யவும் முடியாது.//

நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்கனவே கஷ்டத்தில் இருந்தவர் வைத்திருந்த பணத்தை வாங்கி அவரை தெருவில் அலையவிட்டது உண்மை இல்லை என ஆகிவிடுமா? "அவசரப்பட்டு" அவர் பேசியது எப்போது? சுனாமி டாக்குமெண்டரி எப்போது எடுப்பதாக இருந்தீர்கள்? ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாகத்தானே இருந்திருக்கும்? இப்போது அதை 6 மாதங்களில் திருப்பப் போவதாகப் பேசி, பிறகு அவர் அதை கேட்டதையே குறை கூறியது வடிக்கட்டிய அயோக்கியத்தனம். ஏமாற்றுவேலை. இதை விட மென்மையாக நீங்கள் செய்ததை மதிப்பிட இயலாது.

சுகுணா கூறியதை உளறல் என்று கூறும் நீங்கள் அவர் சொன்னபடி ஐந்து லட்சத்துக்கு கடன் வைக்கவில்லை, அவர் பொய் உரைக்கிறார் என்று கூறத் துணிவீர்களா?

//தனிப்பட்ட உறவுகளிலும், பொது வாழ்விலும் எவ்வளவு கவனமாக, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அவர் இதை எடுத்துக் கொள்ளட்டும்.//

இது முக்கியமாக உங்களுக்குத்தான் பொருந்தும்.

இப்பின்னூட்டம் மற்றப்படி உங்கள் பார்ப்பன எதிர்ப்பைப் பற்றி பேச வரவில்லை. நீங்கள் நிதி விஷயங்களில் பொறுப்பற்று இருந்ததையே சாடுகிறது".

இன்னொரு விளக்கம். இப்பதிவுக்கும் இப்பின்னூட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? உண்டு. பண விஷயத்தில் நெருப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் கூறும்போது அவ்வாறு இல்லாதிருப்பது எத்தனை இழிவு என்பதை காட்டவே இது.

இதை இங்கு போட இன்னொரு காரணம், சம்பந்தப்பட்ட நபர் என்னுடைய பின்னூட்டத்தை ரிஜக்ட் செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதாலேயே.

மேலும் all said and done சுகுணா திவாகர் என் நண்பர். அவருக்கு இந்த நபரால் வந்த கஷ்டம் என் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது