1/20/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 & 19)

எபிசோட் - 18 (18.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
தாய் தந்தையரை துக்கப்படுத்தக் கூடாது எனக் கூறாத வேதமும் வேதமா என சிங்காரம் கேட்கும் கேள்வியை ஆமோதிக்கிறார். சோவின் நண்பர்.

சோ பேச ஆரம்பிக்கிறார். யுத்தத்தில் போர் செய்யும் வீரன் வீர சொர்க்கம் அடைந்தாலும் அவன் தாய் தந்தையர் வருந்தத்தானே செய்கின்றனர்? அப்போது படையில் சேரவே கூடாதா? தாய் தந்தையரை வருத்தினாலும் சில உயரிய கடமைகளை ஒருவன் செய்ய நேரிடும்போது அதற்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. மாதா, பிதாவுக்கு அப்புறம்தான் குரு வருகிறார். இருப்பினும் ஒரு மாணவன் ஞானப்பாதைஅயை தேடும் நிலை வரும்போது அவன் குரு சொல்லும் வழியில்தான் செல்ல வேண்டும். பெற்றோரால் ஞான தரிசனம் தம் மகனுக்கு செய்விக்க இயலாது.

அசோக்கின் விஷயத்தில் அவனது பெற்றோர்கள் அவனை கட்டுப்படுத்தும் நிலை கடந்து விட்டது. ஆனாலும் தாயின் ஸ்தானம் எப்போதுமே காக்கப்பட்டுள்ளது. பெற்றோரைத் தவிர தன் பூர்வாசிரம் உறவினர்கள் யார் இறந்தாலும் ஸ்நானம் செய்ய வேண்டியதில்லை சன்னியாசி. அவன் தந்தையே அவனை வணங்க வேண்டிய நிலை வந்தாலும், அவன் தாயை அவன் வணங்கியே ஆக வேண்டும். ஆக, எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று முடிக்கிறார் சோ.

சிங்காரத்துடன் தனது பேச்சை தொடருகிறான் அசோக். அன்றொரு நாள் கடற்கரையில் சிங்காரம் தனக்கு அவனையறியாமல் உபதேசம் செய்ததை அவனுக்கு எடுத்துரைக்கிறான். அவனது அந்த உபதேசத்துக்கு பிறகுதான் தனது தேடுதல் துவங்கியது என்றும் கூறுகிறான். சிங்காரத்துக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும் அசோக் தன்னுடன் வீட்டுக்கு வரவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறான்.

வேதம் படிக்கும் அசோக்கை தொந்திரவு செய்வதாக சாம்பு சிங்காரத்தை கண்டிக்கிறார். வெறும் புத்தகம்தானே அதை எப்போ வேணும்னாலும் படிச்சுக்கலாமே என சோவின் நண்பர் கேட்கிறார்.

அதுவே தவறு என்கிறார். வேதம் என்பது காதால் கேட்டு வருவது. அப்போதுதான் ஸ்வரம் மாறாமல் அவற்றை ஓதவியலும். தான் ஏற்கனவே பல முறை சொன்னது போல, அசோக் செய்யும் இக்காரியமும் அரைகுறையானதுதான் என சோ கூறுகிறார். பிறகு வேத அத்தியயனம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்.

இப்போது சாம்புவுடன் வாதம் செய்யும் சிங்காரம் வசுமதி அவரை பூஜை செய்ய வரவேண்டாம் எனக்கூறிவிட்டதை சொல்லிவிட, அசோக் திடுக்கிடுகிறான். சிங்காரம் சென்றபிறகு சாம்புவிடம் இது பற்றி விசாரித்து உண்மையை அறிந்து கொள்கிறான். தனது தந்தைக்கு இது அவசியம் தெரிய வேண்டும் என்று அவன் கூறிவிட்டு நாதனை சந்திக்க அவரது அலுவலகம் செல்கிறான்.

முதலில் அசோக்கை அலுவலகத்தில் வைத்து சந்திக்கத் தயங்கும் நாதன் பிறகு அவனை உள்ளே அனுமதிக்கிறார். அசோக் சாம்பு சாஸ்திரிகளை அவனது அன்னை அவமானம் செய்ததைக் கூறுகிறான். இந்த விஷயத்தைத் தான் அன்றுதான் சிங்காரத்திடமிருந்து தெரிந்து கொண்டதையும் கூறுகிறான். அவரது பிழைப்புக்கு உலை வைத்தது பற்றி நியாயமும் கேட்கிறான். வசுமதி செய்தது தவறு என நாதனும் ஒத்துக் கொள்கிறார். தான் ஆவன் செய்வதாகவும் கூறுகிறார்.

பிறகு அவனது குருகுலவாசம் எவ்வாறு போகிறது என்பது பற்றியும் கேட்கிறார். மிகவும் மனவமைதி தருவதாக அது உள்ளது என்பதை அசோக் விளக்குகிறான். வாழ்க்கையின் எளிமையான பல விஷயங்கள் புதிய கருவிகளால் செயற்கையாக்கப்பட்டதையும் உதாரணங்களுடன் விளக்குகிறான்.

இதற்காக புதிய கண்டுபிடிப்புகளை குறை சொல்லலாமா என சோவின் நண்பர் ஆதங்கப்பட, பல கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நமது புராணங்களில் உண்டு என்பதை சோ அவர்கள் வேறு உதரணங்களுடன் விளக்குகிறார்.

நாதன் விடாமல் ஆர்க்யூ செய்தாலும், அசோக் எல்லா வாதங்களையும் அனாயாசமாக எதிர்கொள்கிறான். பிறகு சாம்பு சாஸ்திரிகளை மறுபடியும் பூஜைக்கு கூப்பிட வேண்டும் என்றும், அதனால் ஒரு வைதீக குடும்பம் பிழைக்கும் என்றும் கூறுகிறான். அவ்வாறு செய்யப்படும் பூஜா பலன்கள் நாதனின் குடும்பத்துக்கு கிட்டும் என்பதையும் அவன் கூறிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறான்.

நாதன் அசோக்கைக் குறித்து குழப்பமான யோசனைகளில் ஆழ்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் 19 (19.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வீட்டுக்கு வரும் நாதன் வசுமதியுடன் வாதம் புரிகிறார். அவள் தன்னிடம்கூட சொல்லாமல் அவரை பூஜைக்கு வரக்கூடாது என நிறுத்தியதை குறை கூறுகிறார். வசுமதியும் தான் செய்ததே சரி என வாதிடுகிறாள். அவள் தானே போய் சாம்புவை அழைத்துவரப்போவதாக அவர் கூறிவிடுகிறார். வசுமதி பொருமுகிறாள்.

கோசாலைக்கு செல்லும் அசோக் வேம்பு சாஸ்திரிகளின் வீட்டின் வழியாக செல்ல, அவர் மனைவி சுப்புலட்சுமி அவனை உள்ளே அழைக்க அவனும் செல்கிறான். தனது கணவர் அவனை சீண்டிவிட்டதால்தானே அவன் இவ்வாறு கோலம் பூண்டான் என அவள் ஆதங்கப்பட, அவன் லட்சுமணன் கோட்டை சீதை தாண்டாமல் இருந்தால் ராமாயணமே நடந்திருக்காது என சிலர் சொல்வது போல இருக்கிறது என புன்னகையுடன் கூறுகிறான்.

இது பற்றி சோவின் நண்பர் பிரஸ்தாபிக்க, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் துளசி ராமாயணம் ஆகிய எந்த ராமாயணத்திலும் லட்சுமணன் ரேகை என ஒரு நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படவே இல்லை என ஒரே போடாக போடுகிறார். பிறகு சீதையின் அபகரிப்பு பற்றி இந்த மூன்று ராமாயணங்களும் என்ன கூறின என்பதையும் சுருக்கமாகக் கூறுகிறார்.

வேம்புவின் மனைவியும் அவரது தமக்கையும் அசோக்குடன் மேலே பேசுகின்றனர். தனது தம்பி செய்தது தவறுதான், ஆனால் அதற்காக அசோக் இந்தக்கோலம் பூண்டது தனது மனதை புண்படுத்துகிறது எனக்கூறும் அவரது தமக்கை அசோக் பேசாமல் எல்லாவர்றையும் விட்டுவிட்டு தனது வீட்டுக்கு செல்வானா எனக் கேட்கிறாள். கங்கையைப்போய் கங்கோத்ரிக்கே திரும்பச் சொல்லவியலுமா என அசோக் திருப்பிக் கேட்கிறான். தான் வேம்பு மாமாவிடம் இது குறித்து பேசி விட்டதாகவும், அவர் மேல் எத்தவறும் இல்லையென்றும் கூறி விட்டு அசோக் அவர்களிடமிருந்து விடை பெறுகிறான்.

சாம்புவின் வீட்டுக்கு நாதன் வருகிறார். அசோக் சாம்புவின் வேட்டியை துவைத்து கொடியில் காயப்போட்டு கொண்டிருப்பதை பார்த்து திகைக்கிறார். அவனுடன் குரு சிஷ்ய உறவு பற்றி கேள்விகள் கேட்டு பதில்களும் பெறுகிறார்.

பிறகு வீட்டுக்குள் சென்று சாம்புவுடன் பேசி தனது மனைவி செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்கிறார். மறுபடியும் அவர் பூஜைக்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். முதலில் தயங்கும் சாம்பு அவரது மனைவியும் அவர் நாதன் கூறுவதை ஏற்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ள சம்மதிக்கிறார்.

நாதன் கார் செல்லும் தெருவில் அசோக் ஒரு வீட்டில் பிட்சை எடுப்பதை சிங்காரம் அவருக்கு காட்டுகிறான். அசோக்கின் கண்ணில் படாமல் காரை திருப்பிச் செல்லுமாறு நாதன் அவனிடம் கூற, காரும் அதே போல செலுத்தப்படுகிறது.

(தேடுவோம்)


சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

dondu(#11168674346665545885) said...

தமிழிசிடமிருந்து வந்த மின்னஞ்சல்:
from Tamilish Support
reply-to support@tamilish.com
to raghtransint@gmail.com
date Wed, Jan 20, 2010 at 12:58 PM
subject Made Popular : சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 & 19)
mailed-by u15347499.onlinehome-server.com

hide details 12:58 PM (13 minutes ago)


Hi Dondu,

Congrats!

Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 & 19)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th January 2010 07:28:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/172017

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஸ்
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

dondu(#11168674346665545885) said...

தமிழிசிடமிருந்து வந்த மின்னஞ்சல்:
from Tamilish Support
reply-to support@tamilish.com
to raghtransint@gmail.com
date Wed, Jan 20, 2010 at 12:58 PM
subject Made Popular : சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 & 19)
mailed-by u15347499.onlinehome-server.com

hide details 12:58 PM (13 minutes ago)


Hi Dondu,

Congrats!

Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 18 & 19)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th January 2010 07:28:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/172017

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஸ்
அன்புடன்,



அப்பாடி இவங்களாவது டோண்டு மாய்ந்து மாய்ந்து எழுதுவதை படிக்கிறார்களே!

திராவிடமணி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது