3/30/2005

தமிழர்களைப் பற்றிப் பெரியார் அவர்கள் கூறியவை

எனக்கு விஸ்வாமித்ரா அவர்களிடமிருந்து டிஸ்கியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை யூனிகோடில் மாற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றில் சிலவற்றை நான் கேள்விப் பட்டிருந்தாலும் பல எனக்குப் புதியவையே. பகுத்தறிவுப் பகலவன் என்று அழைக்கப்படுபவர் செயல்பாடுகளையும் அதே பகுத்தறிவு கொண்டு ஆராய முற்படுவது தவிர்க்க முடியாது. ஆகவே விஸ்வாமித்ரா அவர்கள் கூறியதைப் பார்க்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஓவர் டு விஸ்வாமித்ரா:

"தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
சொன்னது யார்? ஆரியர்களா? தமிழை வெறுப்போர்களா? வட நாட்டுக்காரர்களா? சம்ஸ்கிருதுதத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்களா? காஞ்சி மடாதிபதியா? மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கும் கமலஹாசனா?

இல்லை ஐயா,. இல்லை, தமிழர்களின் தந்தை என்றும் பெரியார் என்றும் ஒரு கூட்டத்தினரால் அழைக்கப் படும் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்னும் கன்னடியர். இப்படிப் பட்ட ஒரு ஆசாமியை, தமிழர்களை கருங்காலிகள் என்று அழைத்தவரையே, தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று அழைத்தவரையே கொஞ்சம் கூட வெட்கமின்றி, மான ரோஷமின்றி, தமிழர் தலைவர் என்று ஒரு கூட்டம் அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவரது உண்மையான முகம் என்ன? அவர் தமிழர்களை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? மேலே படியுங்கள்.

'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
ஈ.வே.ரா.வின் முழக்கம்

தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில்
பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை,
தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.

சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில்
உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து
எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப் படவில்லை.

உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள், தனது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்னும் புத்தகத்தில், திரட்டியிருக் கொடுத்திருக்கும் மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம். .

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக் கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.

யார் இந்த கி.ஆ.பெ.?

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.

ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.

அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-

அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.

இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.

இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.

எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.

ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

இனியேனும் சொல்வாரா?

இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?

பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.

மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?

இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி
வைதிருப்பதே போதுமான சான்றாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி
மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற
'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.

(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)


இன்று ராமதாசையும், திருமாவையும் தமிழுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று அழைக்கும் கூட்டம், தமிழர்களைக் கருங்காலிகள் என்று அழைத்த ஈ வெ ராவை எப்படி அழைக்கப் போகிறார்கள்? யார் தமிழ்நாட்டில் பித்தலாட்டக் கருங்காலிகள்? முறையாகத் தமிழ் படித்த அறிஞர்களை கருங்காலி என்று அழைத்தவரைப் போய் தமிழர் தந்தை என்று அழைப்பது அறிவீனம் அல்லவா? மூளைச்சலவை செய்யப் பட்டோரே சற்றே சிந்தியுங்கள்.

விஸ்வாமித்ரா"

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

ROSAVASANTH said...

பதிவின் தலைப்பு ""தமிழர்களைப் பற்றிப் பெரியார் அவர்கள் கூறியவை"

பதிவில் மொத்தம் பெரியார் கூறியதாய் மொத்தமாய் இடம் பெறுபவை

" 11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்."

வானம்பாடி said...
This comment has been removed by a blog administrator.
வானம்பாடி said...

வசந்த், பதிவை நன்றாக கவனித்து எழுதியிருக்கிறீர்கள். பெரியார் சொன்னதற்கு ஆதாரம் அந்த 'விடுதலை' தலையங்கம் மட்டும்தான், அதிலும் அவர் தப்பாக எதுவும் எழுதவில்லை. //தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.// இதுவும் பெரியார் பேசியதாக யாரொ சொன்னது தான். மொத்தத்தில் இந்தப் பதிவிற்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை.

அதிருக்கட்டும் டோண்டு ஐயா, பெரியாரைப் பற்றி உங்கள் பள்ளியில் பாடமெடுத்த 'XYZ' ஐயங்கார்கள் ஏதேனும் சொல்லி இருக்கிறார்களா?

dondu(#11168674346665545885) said...

சிலர் கூறியிருக்கிறார்கள்.

முதலாமவர் ஐந்தாம் வகுப்பாசிரியர் (1955 - 56) ரங்கா ராவ் அவர்கள். அவர் கூறுவார் "நாத்திகம் என்பது ஆத்திகத்துடன் சேர்ந்தே இருந்து வந்துள்ளது. இப்போது பெரியார் அவர்கள் கூறும் கருத்துக்களை மிஞ்சும் வகையில் ஜாபாலி மஹரிஷி ராமாயணத்தில் பேசி விட்டார், சார்வாகர் பேசாததா?"

எட்டாம் வகுப்பாசிரியர் "ஜயராம ஐயங்கார் (1958-59) கூறுவார். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்றுப் பேசிப் பேசியே அவர் கடவுளை அதிகம் நினைப்பதால் அவருக்கு சுவர்க்கம் நிச்சயம்"

ஏழாம் வகுப்பாசிரியர் துரைசுவாமி ஐயங்கார் கூறியது "எந்த வேளையில் பிள்ளையார் சிலைகளை உடைக்க ஆரம்பித்தாரோ தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்த வண்ணம் உள்ளன."

அப்ரஹாம் லிங்கன் என்று எங்களால் செல்லமாக அழைக்கப் படும் தமிழாசிரியர் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுகையில் "இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? ஒரு விஷயம் தெரியுமா, இவ்வளவு பேசும் இவரே கொம்பு வைத்த லை, நை, ஆகியவற்றைத்தான் உபயோகிக்கிறார். ப்ரூஃப் பார்ப்பவர்கள் பார்த்துத்தான் அதை திருத்தி விடுதலையில் இட வேண்டியுள்ளது.

பெரியாரே கூறியதை காஞ்சி பிலிம்ஸின் "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" " என்றத் தலைப்பின் கீழ் வந்தப் பதிவைப் பார்க்கவும். ""நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

-L-L-D-a-s-u said...

யார் சொன்னார்கள் என்பதை காட்டிலும் சொன்னது உண்மையா என்பது காண்பது அறிவு ..

dondu(#11168674346665545885) said...

என் ஆசிரியர்கள் பொய்யுரைப்பவர்கள் அல்ல. அவற்றை நம்பாதது கண்மூடித்தனமாகப் பெரியாரைப் பகுத்தறிவுப் பகலவன் என்றுக் கூறுபவர்களின் பிரச்சினை. அவ்வாறு நம்பி, பெரியார் அவர்கள் தமிழனைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்கு வலு சேர்க்கிறார்கள் அவர்கள். காதில் கூடை பூவையே வைத்துக் கொள்ளுகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Vaa.Manikandan said...

பெரியார் தமிழனை தாக்கினாரா ,தாக்கவில்லையா என்பது பற்றி எல்லாம் தெரியவில்லை.
ஆனால் அவர் சமூகத்திற்க்குச் செய்த பணிகளை "சும்மா" என புறக்கணிக்க முடியாது."பகுத்தறிவுப்பகலவன்" என்னும் பெயர் அவருக்கு பொருந்தாமல் வேறு யாருக்கு பொருந்தக்கூடும்?

வா.மணிகண்டன்

kirukan said...

ஏன் உங்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஐய்யர், ஐய்யங்காராக மட்டும் இருக்கிறார்கள். நீங்கள் வேறு எவரிடமும் படிக்கவில்லையா? அல்லது மற்றவர் சொல்வதை பொருட்படுத்துவதில்லையா?

SHIVAS said...

உங்கள் வாத்தியார்கள் சொல்வது போல எங்களை விட பெரியாரை அணு அணுவாக பிரித்து பார்த்து, பேசி நீங்களும் பெரியார் தொண்டராகிவிட்டீர்கள். நன்றி

dondu(#11168674346665545885) said...

ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் நான் படித்த போது 80% க்கும் அதிகமாக பார்ப்பனர்களே ஆசிரியர்களாக இருந்தனர். இப்போது நிலைமை என்ன என்றுத் தெரியவில்லை. காஞ்சி அவர்களே, எங்கள் ஆசிரியர்கள் பெரியாரைப் பற்றிப் பேசும் போது அவர் வீட்டிற்கு வருபவர்களிடம் மரியாதையாகப் பேசுவதை மிகவும் உயர்த்தியே கூறினர். அவர் பத்திரிகைகளில் எழுதும்போதும் சரி பிரசாரக் கூட்டங்களில் பேசும் போதும் சரி மிகக் கடுமையான வார்த்தைகள் பிரயோகித்ததைப் பற்றியும் கூறினர். இவை அனைத்தும் நான் அங்குப் படித்த 8 வருடங்களில் அவ்வப்போது தெரிந்துக் கொண்டது. அவரைப் பற்றி அறிவதனால் அவர் தொண்டனாகி விடுவேனா என்ன? ஆண்டவன் விஷயம் வேறு. பெரியாரிடம் ஒரு முறை ஒரு கேள்வி வைக்கப்பட்டது. "கடவுளே உங்கள் எதிரில் வந்து தான் இருப்பதை நிரூபித்தால் என்ன செய்வீர்கள்?" அதற்கு அவர் பதில் "என்ன சாமி முன்னாடியே வந்திருக்கக் கூடாதா? இவ்வளவு நாட்கள் உங்களைத் திட்டி விட்டேனே?" இதுவும் நான் ஒரு பத்திரிகையில் படித்தது. பெயர் நினைவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

http://www.thinnai.com/pl0304045.html
http://www.thinnai.com/pl0311042.html
http://www.thinnai.com/pl0311043.html

வள்ளுவரையும், சிலப்பதிகாரத்தையும் எப்படி திட்டுகிறார் பாருங்கள்.
இன்னும் பெண்களை தற்குறிகள், விபசாரிகள் என்றெல்லாம் சொல்கிறார்.

out of context quote பண்ணிணால் எப்படி அனர்த்தம் வரும் என்று தெரிகிறது.

-/சுடலை மாடன்/- said...

எனக்கு சோ இராமசாமியைப் பிடிக்கும் அளவுக்கு இராகவன் ஐயாவுக்கு பெரியாரைப் பிடிக்கும் போல :-) அதற்காக விஸ்வாமித்திரரிடம் கடன் வாங்கி போடுவதை விட அவரே எழுதுவது மேல்.

விஸ்வாமித்திரரும், இராகவனும் என்ன ம.பொ.சி.யுடனும், கி.ஆ.பெ.யுடனும் உடன் படுகிறார்களா என்ன? தமிழ் மொழி விசயத்தில் நீங்கள் இருவரும் பெரியாருடன் உடன்படுவதே அதிகமிருக்கும் :-).

பெரியார் உண்மையிலேயே தமிழ் மொழியைப் பற்றியும், தமிழ்ப் பற்றாளர்களைப் பற்றியும் இப்படியெல்லாம் சொன்னதாகவே இருக்கட்டும். மொழிவெறியர்கள் என்று நீங்களெல்லாம் கருதும் பெருவாரியான தமிழர்கள், பெரியார் இப்படிக் கூறும் பொழுது மட்டும் ஏன் கோபமடையவில்லை.

ஏனென்றால் பெரியாருடைய உள்நோக்கத்தில் அவர்களுக்குச் சந்தேகமில்லை. மொழியை ஒரு கருவியாக வைத்து அடிமை செய்ய நினைக்கும் சோ இராமசாமிகளின் மென்மையான விமர்சனத்துக்கும், பெரியாரின் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் அறிவர். முன்னது தமிழர்களை அடிமைப்படுத்தும் நோக்கிலும், பின்னது தமிழர்களை விடுதலைப் படுத்தும் நோக்கிலும் வெளிப்படுத்தப்பட்டவையென்று.

1. பெரியார் சொல்லியவற்றை அவரது காலச் சூழலுடன் பொருத்திப் பார்ப்பதே அறிவுப்பூர்வமானது. அவர் சொல்லியவற்றுக்கு ஒரு தேவையிருந்ததா? ஆம் என்றே கூறுவர் அவருடைய சுடுசொற்களை கரடுமுரடானவை அல்லது நாகரீகமில்லாதவை என்று விமர்சிப்பவர்கள் கூட.

2. பெரியார் சொல்லாதவற்றை அல்லது அதிகம் கண்டு கொள்ளாதவற்றை அலசும் பொழுது, அவருடைய தலித்து புரிந்துணர்வை (Dalit Sensitivity) சந்தேகிக்க முடியும். இரவிக்குமார் வல்லினத்திலும், சிவகாமி புதிய கோடாங்கியிலும் அதைத்தான் செய்திருக்கின்றனர்.

3. பெரியாரை அவருடைய கல்விப் பின்னணியை வைத்து மதிப்பிட்டால் பெரிய சிந்தனையாளர் என்றே கருதுகிறேன்.

சில பிரச்சினைகளில், சில நேரங்களில் அவர் ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்காமல் தனி நபர் அனுபவத்தின் அடிப்படையிலும் கோபத்திலும் வார்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளார் என்பது என் கணிப்பு. அவை அனைத்திலும் கூட தன்னலமற்ற சிந்தனையிருந்தது என்று கருதுகிறேன்.

ஆனால் அவர் சொல்லிய கருத்துக்களை விமர்சிப்பதை விட்டு அவர் சொல்லிய வார்த்தைகளை வைத்து அவரை ஒரு இரவுடியைப் போலச் சித்தரிக்க நினைப்பது பார்ப்பனியத்தனம் தான்.

4. அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிடுகையில் பெரியாருடைய கருத்துக்களில் சிலவற்றில் தெரியும் ஆழமின்மையை விமர்சிக்கும் பொழுது கூட இருவருடைய கல்விப் பின்னணியையும் ஒப்பிட வேண்டும். அதை விடுத்து பெரியாரின் கருத்துக்களை பைத்தியக்காரனின் உளறல்கள் போல இரவிக்குமார் அண்மையில் கேலியாகச் சித்தரித்தது (நான் இன்னும் ஒரு நல்ல கல்லச்சார இதழாக நினைத்து வரும்) காலச்சுவட்டின் உள்நோக்க அரசியல் என்றே நினைக்கிறேன். இருப்பினும் இரவிக்குமாருக்கும், இதர தலித்து அரசியல் மற்றும் இலக்கியவாதிகளுக்குமுள்ள அந்த உரிமையையோ அல்லது தகுதியையோ மறுக்க நினைப்பது வேளாளத்தனம் என்று நினைக்கின்றேன்.

5. வேளாளச் சாதிகளுக்கும், அச்சாதிகளில் தோன்றிய பெரியார் உள்ளிட்ட சாதி மறுப்பு சிந்தனைவாதிகளுக்கும் , தலித்துகள் காட்டும் எதிர்ப்பு நியாயமானவை. அவற்றை புரிந்து கொள்ள முன்வர வேண்டும், சில நேரங்களில் அவை பார்ப்பனியவாதிகளின் தூண்டுதலின் பேரால் நடந்தாலும் கூட. ஏனெனில் படிநிலை அமைப்பான சாதிய ஒடுக்குமுறையில் மேலே உள்ளவர்களை கீழே இருப்பவர்கள் எதிர்க்கவும், சந்தேகிக்கவும், அதை வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டுப் பேசவும் நியாயம் உண்டு என நினைக்கிறேன்.

6. ஆனால் பார்ப்பனியவாதிகளுக்கு (அதாவது தம்மை இன்னும் ஒரு சாதியினுள் அடையாளம் காணுகின்றவர்கள், தன் சாதி விமர்சிக்கப் படுகின்றது என்று ஆதங்கப்படுகின்றவர்கள்) பெரியாரையோ மற்ற சாதி மறுப்பு சிந்தனையாளர்களையோ விமர்சிப்பதற்கு உரிமை வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் தகுதிதானில்லை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

dondu(#11168674346665545885) said...

"வள்ளுவரையும், சிலப்பதிகாரத்தையும் எப்படி திட்டுகிறார் பாருங்கள்.
இன்னும் பெண்களை தற்குறிகள், விபசாரிகள் என்றெல்லாம் சொல்கிறார்.
கான்டெக்ஸ்ட் இல்லாது கோட் பண்ணிணால் எப்படி அனர்த்தம் வரும் என்று தெரிகிறது"
ஆதிரை அவர்களே நீங்கள் கொடுத்த சுட்டிகளைப் பார்த்தால் அவ்வாறு செய்தது பெரியார் அவர்களே என்றுத் தெரிகிறதே? சேம் சைட் கோலுக்கு நன்றி. நான் கூற மறந்ததை இப்போது நினைவு படுத்தி விட்டதற்கும் நன்றி. பெரியார் தன் முதல் மனைவி கோவிலுக்குச் செல்லும் போது, அவரைத் தன் நண்பர்களை விட்டுக் கேலி செய்வித்து அந்த உத்தமப் பெண்மணி பீதியடையச் செய்தார். இப்போது அதற்கு ஈவ் டீஸிங் என்றுப் பெயர். ஆறு வருடக் கடுங்காவல் நிச்சயம்.

எந்தப் பெண்ணும் மழையை வரவழைக்க முடியாது என்பதால் எல்லோரும் விபசாரிகள் என்று ஒட்டு மொத்தமாகவே கூறுபவர் தன் மனைவியரைப் பற்றி என்ன கருத்து வைத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

பகுத்தறிவை சற்று உபயோகித்துப் பாருங்கள். பொருந்தாத் திருமணத்தை முதலில் அவரே எதிர்த்ததன் காரணங்களில் முக்கியமானதாக எதைக் கருதுகிறீர்கள்? நான் கூறுகிறேன். பெண்ணுக்குத் திருப்திகரமான உடலுறவு கிடைக்காது என்று. சரியோ தவறோ ஆண் எந்த நிலையிலும் உடலுறவு கொள்ளலாம். சமுதாய விதிகள்படி பெண் திருமணத்துக்குள்தான் அதைக் காண வேண்டியிருக்கிறது. ஆனாலும் உடல் வேட்கை என்பது இரு பாலருக்கும் வரும். இயற்கையின் செயல்பாடு அது. ஆக்வே பொருந்தாத் திருமணங்கள் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமையே. அக்கொடுமையை பிறகுப் பெரியாரே செய்தார். அதை மணியம்மையார் தானே விரும்பி ஏற்றார் என்பவர்களுக்கு நான் கூறுவது. அவ்வாறு தானே விரும்பி தன் கணவனுடன் மதுரைக்குச் சென்ற கண்ணகியை விட்டு வைத்தாரா பெரியார்? அதே அபிபிராயத்தைத்தானே அவர் தன் மனைவியைப் பற்றியும் வைத்திருக்க வேண்டும்?

"அதற்காக விஸ்வாமித்திரரிடம் கடன் வாங்கி போடுவதை விட அவரே எழுதுவது மேல்"
நீங்கள் சங்கர பாண்டியைக் கேட்டு எழுதுகிறீர்கள். நான் விஸ்வாமித்ராவைக் கேட்டு எழுதுகிறேன். அதற்கென்ன இப்போது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு. சுந்தரமூர்த்தி said...

ராகவன் சார்,

பெரியாரை எதிர்க்கவும், தமிழ் பாதுகாப்பு குழுவை எதிர்க்கவும் உங்களுக்கான அரசியல் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் தமிழ்ப்படங்களுக்கு தமிழ்ப்பெயர் வைக்கக் கோரும் த.பா.கு. வை எதிர்த்து 'ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் பரவாயில்லை' என்று ஒருபக்கம் வாதம் செய்துக்கொண்டே இன்னொரு பக்கம் தமிழை, தமிழர்களை பெரியார் அவமதித்தார் என்று புலம்புவது ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறெதே!

உங்கள் வசதிக்காக என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில் இருக்கும் பெரியாரின் இரண்டு கட்டுரைகளை பதிவிடுகிறேன். அவற்றை நீங்கள் பெரியாரைத் தாக்கவோ அல்லது த.பா.கு. வைத் தாக்கவோ பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரே ஒரு சிக்கல், இரண்டையும் சேர்த்து செய்யமுடியாது.

dondu(#11168674346665545885) said...

ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் பரவாயில்லை என்று நான் எங்கே கூறினேன் ஐயா? என்னப் பெயர் வைப்பது என்பது தயாரிப்பாளர் உரிமை என்றுதான் எழுதினேன். இவ்வுரிமையை மறுத்துத் தயாரிப்பாளர்களை பயமுறுத்துவது வேண்டாத வேலை என்றுதான் கூறுகிறேன். சென்ஸார் போர்ட் வேலையெல்லாம் இவர்கள் ஏன் செய்ய வேண்டும் என்றுக் கேட்கிறேன். அவ்வாறுக் கூறும்போது அவர்கள் நோக்கம் சில்லறை பார்ப்பதுதான் என்று சந்தேகப்படுக்றேன்.
பெரியாரைப் பற்றி இப்போது. "உங்கள் வசதிக்காக என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில் இருக்கும் பெரியாரின் இரண்டு கட்டுரைகளை பதிவிடுகிறேன்." எப்போது?
தான் செய்தப் பகுத்தறிவு வாதங்கள் தனக்கு எதிராகக் கூறப்பட்டப் போது "பெருமாள் சோத்தைத் தின்னுட்டு அவருக்கெதிராகவே எழுதுறாங்க" என்றுக் கூறியதையும் இதே மாதிரிச் செய்த மற்ற நேர்மையின்மைகளையும்தான் எதிர்க்கிறேன். அவர் சமாதியில் தேங்காய் உடைக்கிறார்கள், கற்பூரம் ஏற்றுகிறார்கள், மொட்டைப் போடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு அவை உண்மையா என்றுக் கேட்டதற்கு இது வரை உண்டு அல்லது இல்லை என்ற பதில் வரவில்லை. நான் ஏற்கனவே கூறியபடி அவை உண்மையாக இருக்கக் கூடாது என்பதுதான் என் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வானம்பாடி said...

//எந்தப் பெண்ணும் மழையை வரவழைக்க முடியாது என்பதால் எல்லோரும் விபசாரிகள் என்று ஒட்டு மொத்தமாகவே கூறுபவர் தன் மனைவியரைப் பற்றி என்ன கருத்து வைத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?//

படு அபத்தமான வாதம். 'பத்தினிப் பெண்ணால் மழையை வர வைக்க முடியும்' என்ற புளுகை உடைப்பதற்காக கூறப்பட்டது இது. ஒரு பெண்ணால் மழை வர வைக்க முடியாது என்பதால் அவள் பத்தினியில்லாமல் போய் விடுவாளா என்பதுதான் பெரியாரின் கேள்வி. 'பத்தினி அல்லாதவள்' என்பது கேட்பவருக்கு உரைக்க வேண்டும் என்பதற்காக் கூறப்பட்ட வார்த்தை 'விபச்சாரி'. அவர் முழுக்க முழுக்க எதிர்த்த ஒரு புளுகை அவர் நம்பியதாகக் கற்பித்து, அவர் எல்லா பெண்களையும் விபச்சாரி என்று கூறினார் என்பது கடைந்தெடுத்த ....... சரி வேண்டாம்.

அவர் கேட்ட கேள்வியை நன்றாக ஒரு முறை உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

aathirai said...

பின்புலம் எதுவும் இல்லாமல் அங்கொன்று இங்கொன்றுமாக வெறும் வார்த்தைகளை மட்டும் வெட்டி எடுத்து எப்படி
அபத்தமாக எழுதலாம் என்று எடுத்துகாட்டவே அப்படி ஒரு பின்னூட்டத்தைப் பதித்தேன். எல்லோருக்கும்
புரிந்திருக்கிறது.

பெரியார் புராணங்களில் பெண்களின் நிலைமையை எப்படி விளக்குகிறார் என்று
எல்லோருக்கும் புரிகிறது. அதில் உள்ள அனர்த்தம் மட்டுமே டோ ண்டு சாருக்கு விளங்குகிறது.
ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் விட்டேன். (இவருக்கு உண்மையிலேயே புரியவில்லையா?)

அதிகமாக அனர்த்த பத்திரிகைகளை படித்தால் இப்படியும் நேர்ந்து விடுமா? விரைவில் டோ ண்டு சார்
அனர்த்த பதிப்பகங்களுக்கு புத்தகம் எழுதலாம். இதற்கு மேல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

dondu(#11168674346665545885) said...

இவ்வளவு வெளிப்படையாகப் பெரியார் அவர்கள் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் விமசரித்திருக்கிறார். தன்னுடைய உபதேசங்கள் எல்லாம் ஊராருக்குத்தான் தனக்கல்ல என்று வெளிப்படையாகவே காட்டியிருந்திருக்கிறார். ஆனாலும் அவர்தான் தலைவர் என்று இன்னும் சிலர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் நான் என்னக் கூற இருக்கிறது?
அன்புடன்,
டோண்டு ராகவன்

வானம்பாடி said...

பெரியார் எல்லாப் பெண்களையும் 'விபச்சாரி' என்று சொன்னார் என சந்தடி சாக்கில் ஒரு புளுகை அவிழ்த்து விட்டு விட்டு, அதற்குப் மறுமொழியாக 'அதாகப்பட்டது பெரியார் இப்படியெல்லாம் தமிழருக்கு எதிராக செய்தார்' என பொத்தாம் பொதுவாகக் கிளறி மூடுவது தங்கள் மேதமைக்கு அழகல்ல.

neyvelivichu.blogspot.com said...

dondu,

please refer to my todays blog (7th july) i have posted three articles from viswamitra..

one of them is the same as this blog..

regards

vishy

dondu(#11168674346665545885) said...

தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=203
"எனது நண்பர்கள் எளிமையானவர்கள். அவர்கள் ஒரு பென்சிலை கையால் தட்டிக்கொண்டே மச்சி கட்டை சூப்பர்டா என்று தெருப்பெண்ணைப் பார்த்துப் பேசும் சாகசங்கள் செய்யமுடியாதவர்கள்;"

ஆனால் உங்கள் வாக்கியங்கள எளிமையானவையல்ல. அவற்றை முதலில் எளிமையாக்குங்கள்.

இப்போது பொம்மைகள் உடைபடும் நேரத்தைப் பற்றிப் பேசுவோமா. எந்த இயக்கமாயினும் ஆரம்பத்தில் எளிமையாகவே ஆரம்பிக்கும். உதாரணத்துக்கு யூதர்களில் பாரிசீக்கள் என்ற பிரிவினர் ரொம்பவே கடுமையாக விதிகளைப் பின்பற்றுபவர்கள். அவர்களை எதிர்த்து ஏசு போராடினார். ஆனால் அவரைப் பின்பற்றுவதாகவும், அவரது பிரதம சீடர் பீட்டர் என்ற எளிமையான மனிதரை தங்கள் முதல் போப்பாண்டவராகக் கூறிக் கொள்ளும் கத்தோலிக்க குருமார்கள் இப்போது நடத்தும் விலாவாரியான பூஜை முறைகளையும் பார்க்கின்றோமே. அவற்றை எதிர்த்து ப்ரொடெஸ்ட் செய்ததால் ப்ரோட்டெஸ்டண்ட் என்று அழைக்கப்படுபவர்களின் செயல்பாடுகளும் அம்மாதிரித்தானே.

ஏன் இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும்? அதுதான் மனித இயல்பு. எல்லாவற்றையும் நிறுவனப்படுத்தும் அவர்கள் முயற்சியே காரணம். ஆனால் அவ்வாறு நிறுவனப்படுத்தப்பட்டால்தான் அந்த இயக்கங்கள் செயல்பட முடியும் என்பதும் உண்மையே.

புத்த மதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும் பல பிரிவுகளாகத்தானே பிளந்தது. ஹீனயானம், மஹாயானம் என்றெல்லாம் போகவில்லையா? ஸ்ரீலங்காவில் புத்த பிக்குகள் மேற்கொள்ளாத வன்முறையா?

முகம்மது நபி சாதாரணமாக அப்போதைய அரேபிய சீதோஷ்ண நிலை, அரசியல் நிலை ஆகியவற்றுக்கேற்ப ஆரம்பித்து வைத்த வாழ்க்கை நெறிகள் இப்போது பல விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு சண்டை மண்டை எல்லாம் உடையவில்லையா?

இந்து மதத்திலும் அதே நிலைதானே. சைவம், வைணவம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தானே, அதாவது எளிமையாக ஆரம்பித்து, சிக்கலாக மாறுவது.

இப்போது சுயமரியாதை இயக்கத்துக்கு வருவோமா. பெரியார் அவர்கள் சுயமரியாதையை போதித்தார், சரி. அவரைப் பின்பற்றுபவர்கள் அதை கடைபிடிக்கும்போது மகிழ்ச்சியும் அடைந்தார். ஆனால் மற்றவர்கள் தனக்கெதிராகவும் அதே சுயமரியாதையைக் கடைபிடித்தபோது மட்டும் வெகுண்டெழுந்தார்.

ஒரு சமயம் கதிரேசன் என்னும் ஏழைப்புலவர் அவரிடம் வந்திருக்கிறார். அவருக்கு அருந்த பால் கொடுத்திருக்கிறார். அதே சமயம் புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தானே என்ற தொனியில் பேச அப்புலவரோ அவர் கொடுத்தப் பாலை வாயில் விரல்விட்டு வாந்தி எடுத்துவிட்டு அப்புறம் சென்றார். அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும் பெரியார் அவர்களே "கதிரேசன் என்னும் வாயாடிப் புலவர்" என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது கூறுங்கள், தான் பிச்சை போடுகிறோம், அதைப் பெறுபவன் அதை அவமானத்துடன் சேர்ந்துதான் விழுங்க வேண்டும் என்ற இவரின் மனோபாவம்தானே இங்கு முன்னால் தெரிகிறது.

அதேபோலத்தான் தன்னுடைய பொருந்தாத்திருமணத்தை எதிர்த்த தன் சீடர்களிடம் தன்னையே எதிர்க்கத் துணிந்தார்களா, அதுவும் தான் மற்றவர்களுக்கெதிராக வைத்த வாதங்களையே அதற்காக உபயோகப்படுத்திக் கொண்டார்களா என்ற எரிச்சல்தான் தெரிகிறதே தவிர, பகுத்தறிவு ஒன்றும் இதில் தெரியவில்லை.

இப்பின்னூட்டம் உண்மையான டோண்டு ராகவன்தான் எழுதினான் என்பதை குறிக்கும் வகையில் என்னுடைய பெரியாரைப் பற்றி நான் இட்ட "தமிழர்களைப் பற்றி பெரியார் அவர்கள் கூறியவை" என்ற இப்பதிவிலலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_30.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது