8/20/2006

எல்லாம் நன்மைக்கே, அல்லது.....

பழைய கதைதான். ஒரு அரசருக்கு கையில் காயம்பட, அவர் மந்திரியோ எல்லாம் நன்மைக்கே என்று கூறுவான். அரசர் எரிச்சலுடன் மந்திரியை சிறையிலடைப்பார். பிறகு வேட்டைக்கு சென்ற இடத்தில் காட்டுவாசிகளிடம் அகப்பட்டு, அவர்கள் குல தெய்வத்துக்கு பலி கொடுக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்படுவார் அரசர். கடைசி தருணத்தில் அவர் கையில் ஊனமிருப்பதைக் கண்டு பூசாரி பலியிட மறுக்க அரசர் அங்கிருந்து விடுதலை செய்யப்படுவார். ஊருக்கு திரும்பிய அரசர் மந்திரியை விடுவித்து அவரிடம் மன்னிப்புக் கேட்பார். மந்திரி கூறுவார் "அரசே, நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே, ஏனெனில் சிறையில் இல்லாதிருந்தால் உங்களுடன் நானும் வேட்டைக்கு வந்திருப்பேன். உங்களை அனுப்பி விட்டு என்னை பலி கொடுத்திருப்பார்கள்" என்றார். பழைய அம்புலிமாமா கதைதான். இருந்தாலும் ஓல்ட் ஈஸ் கோல்ட் அல்லவா. இப்பதிவும் எல்லாம் நன்மைக்கே என்பதை வலியுறுத்தவே.

உண்மை கூறப்போனால், "எல்லாம் நன்மைக்கே, அல்லது ந்டப்பவை எல்லாவற்றையும் உனக்கு நன்மையாக்கிக் கொள்" என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆயினும் சற்று நீளமாகத் தலைப்பு இருப்பதாகத் தோன்றியதால் அதைக் குறைத்து இத்தலைப்பை வைத்தேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பல விஷயங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்த போது வரவேற்கத் தகுந்ததாக இல்லை. உதாரணத்துக்கு சமீபத்தில் 1969-ல் கடைசி வருட பொறியியல் பரீட்சையில் இரண்டு பேப்பரில் தேறவில்லை. முதல் வகுப்புக் கனவுகள் கானல் நீராயின, என்னுடன் பரீட்சை எழுதி பாஸ் செய்தவர்கள் மின் வாரியத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். டைம் பாசுக்காக சேர்ந்தது ஜெர்மன் வகுப்பில். அது எவ்வளவு பெரிய அற்புதமாக மாறியது என்பதைப் பற்றி நான் ஏற்கனவே இப்பதிவைப் போட்டுள்ளேன்.

இன்னும் பல உதாரணங்கள் கூறலாம். ரேஷன் கடையில் பெரிய கியூவில் நிற்க வேண்டுமா? கையில் ஒரு பெரிய நாவலை எடுத்துச் செல்ல வேண்டும். காத்திருக்கும் நேரத்தில் கணிசமான அளவுக்கு படித்து முடிக்கலாம். அந்த அளவுக்கு மொழியறிவு வளரும். அதுவும் மொழி பெயர்ப்பையே தொழிலாக நடத்தும் எனக்கு பெரிய வரப்பிரசாதம்தானே.

அதே போல ஐ.டி.பி.எல்லில் அலுவலக அரசியல் காரணமாகவும் ஒரு சக இஞ்சினியரின் ஈகோ பிரச்சினைக்காகவும் உப்பு சப்பில்லாத ஒரு வேலை கொடுத்தப் போது, அதையே உபயோகித்து என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு ஏதுவாக்கிக் கொண்டதையும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

சமீபத்தில் 1967-ல் குண்டடிப்பட்டு எம்ஜிஆர் படுத்திருந்த போது அவரைப் பார்க்க வருபவர்களுடன் விடாமல் பேசுவார். தொண்டை வலியிருந்தாலும் சளைக்க மாட்டார். வருபவர்களுக்கு ஆனந்தம் அதே சமயம் எம்ஜிஆர் அவர்களும் நன்றாக பிராக்டீஸ் செய்ததால் இன்னும் பத்து வருடங்களுக்கு திரை வானில் மின்ன முடிந்தது.

மறுபடியும் இந்த டோண்டு ராகவனையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் போலி டோண்டுவால் பீடிக்கப்பட்டாலும் அவனால் எனக்கு விளைந்த நன்மைகளும் உண்டு. இணையத்தில் இத்தனை நல்ல இதயங்கள் உள்ளன என்பது புலப்பட்டது. அவனை எதிர்த்து யுத்தம் செய்து எழுதுவதில் என் தமிழ் மேம்பட்டது. தமிழ் தட்டச்சு வேகம் அதிகரித்தது. மொழி பெயர்ப்புகளை வேகமாக செய்து வாடிக்கையாளர் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

பவர்கட் ஆகி விட்டதா, ஏதேனும் புத்தகம் எடுத்துப் படிக்கலாம். ரொம்ப நேரம் பவர்கட் என்பது தெரிந்தால் எங்காவது வெளியில் கூடப் போகலாம். அதே சமயம் ஃபிரிட்ஜ் டீஃப்ராஸ்ட் தானே நடந்து விடும். மின்சார மீட்டர் ரீடிங் அளவு குறையும்.

இப்பதிவினை முடிக்கும் முன்னால் என்னுடைய இப்பதிவையும் சுட்ட விரும்புவேன். சென்னையில் இருக்கும் வலைப்பதிவர்கள் இன்று மாலை மீட்டிங்கிற்கு வர முயற்சி செய்யவும். இந்தப் பதிவின் நோக்கங்களில் இதுவும் ஒன்றே, ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

ஜயராமன் said...

ராகவன்,

நீங்கள் சொல்வதில் உள்ள ஆழ்ந்த உண்மையை மறுக்க முடியவில்லை. எல்லாம் நன்மைக்கே என்பது எந்த லெவலில் பார்க்கிறோம் என்பதில்தான் கஷ்டமே வருகிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தை வைத்து பார்த்தால் பல திருப்பங்கள் என்னை வருத்தப்பட வைத்தன. அந்த திருப்பங்களை நிறுத்த வேண்டும் என்று நான் முயற்சித்தேன். பிராத்தனையும் செய்தேன். பல விஷயங்களில் அது பலிக்கவில்லை. பின்னால், நாலைந்து வருஷம் கடந்து அந்த திருப்பங்கள் எனக்கு வரப்பிரசாதங்களாக ஆகி என்னை இப்போது சந்தோஷப்படுத்துகின்றன. இது நீங்கள் சொல்லும் இந்த த்த்துவத்தின் பலமா இல்லை இது ஒரு co-incidance ஆ புரியவில்லை. எப்போதும் பழைமை இனிக்கிறது. நாம் எதிர்கொள்ளும் திருப்பங்களை மனிதன் தாண்டி அதில் செட்டில் ஆகி ஈடு செய்தவுடன் அந்த திருப்பங்கள் நல்லன போல் தெரிகின்றன என்றும் இருக்கலாம்?

எல்லாவற்றிலும் ஒரு பிலாஸபியில் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நடப்பதெல்லாம் நல்லதுக்கே என்று சில சமயம் இருக்க முடியவில்லை. நடந்த நிகழ்ச்சியின் சமீபத்திய தாக்கங்கள் சில சமயம் அந்த பக்குவத்தை கொடுப்பதில்லை. மேலும், பல பொது விஷயங்கள் ஏன் நடந்தன என்று நமக்கு இன்னும் புரியவில்லை. காந்தியின் மரணம், ராஜீவின் மரணம், துலுக்கர்களின் பாகிஸ்தானிய கோஷம் எல்லாமே நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றும் சில சமயம் தோன்றுகிறது. மேலும், நடப்பது நல்லதுக்குதான் என்று சில அநியாயங்களை பார்த்து பேசாமல் இருக்க கூடாது. அப்போது, இந்த பிலாஸபியை தூக்கி மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என்பது என் அபிப்ராயம்.

ரொம்ப பேசி விட்டேனோ?

நன்றி

dondu(#11168674346665545885) said...

"காந்தியின் மரணம், ராஜீவின் மரணம், துலுக்கர்களின் பாகிஸ்தானிய கோஷம் எல்லாமே நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றும் சில சமயம் தோன்றுகிறது."
ஹேரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் "நள்ளிரவில் சுதந்திரம்" என்னும் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அப்போது நடந்து கொண்டிருந்த இனக்கலவரங்கள் பெரும் அளவில் கட்டுப்பட்டனவாம். மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்த அந்தச் சம்பவம் எல்லோரையும் நின்று யோசிக்க வைத்ததாம். பெரிய பலன், ஆனால் அதற்கு கொடுத்த விலைதான் மிகப் பெரியது.

அதே போல ராஜீவ் கொலையின் முக்கியப் பலன் புலிகளின் சுயரூபம் மக்களுக்குத் தெரிய வந்ததே காரணம். அதன் அனுதாப அலையால் வந்த காங்கிரஸ் அரசு அதன் நிதி மந்திரியான மன்மோஹன் சிங்கின் தீர்க்க தரிசனத்தால் இந்தியாவை பீடித்திருந்த சோஷலிச மாயை விலக்கப்பட்டது.

இசுலாமியர்களின் கோஷத்தால் உருவாக்கப்பட்ட பாக்கிஸ்தான்? இதனால் என்ன நன்மை என்பதை யோசித்துத்தான் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anu said...

sometimes to believe that 'ELLAM NANAMAIKKAE' encourages a lot.

dondu(#11168674346665545885) said...

நன்றி அனிதா அவர்களே. பை தி வே உங்கள் சுதந்திரம் பற்றியக் கவிதை வரிகள் அருமை. பின்னூட்டம் இட்டுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது