8/31/2006

கடன்பட்டார் நெஞ்சம் போல....

ராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ராவணனை பீடிக்க ஆரம்பிக்கின்றன. அவனது அஸ்திரங்கள் ஒவ்வொன்றாகத் தீர்ந்துபோக, அவன் கிரீடமும் ராமர் விட்ட அம்பால் கவர்ந்து போக செய்வதறியாது நிற்கிறான். என்னதான் தவறிழைத்திருந்தாலும் சுத்த வீரனல்லவா. ஓடாமல் நிற்கிறான். அதே சமயம் ராமரும் சாமான்யமானவரா? பகைவனுக்கே அருள்பாலிக்கும் திருமாலின் அவதாரமல்லவா? அப்போதே நினைத்திருந்தால் நிராயுதபாணியாக நின்ற ராவணனை கொன்றோ சிறையெடுத்தோ யுத்தத்தை முடித்திருக்கலாம். ஆனாலும் அவ்வாறு செய்யவில்லை அக்கோதண்டபாணி.

"நீ களைத்திருக்கிறாய். இப்போது உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. ஆகவே நீ போய் ஓய்வெடுத்து, இன்று போய் நாளை வா" எனக் கூறுகிறான் தசரத மைந்தன், சீதாராமனாகிய காகுத்தன். இவ்வாறு தன்னை அனுப்பித்ததற்கு பதில் தன்னைக் கொன்றே போட்டிருக்கலாமே என்று மனம் நொந்த நிலையில் அரண்மனை திரும்புகிறான் தசகண்டன் ராவணன். அன்றிரவு அவன் இருந்த மனநிலையைத்தான் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று கம்பர் அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்.

சமீபத்தில் 1959-ல் வந்த "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் ராமராகிய என்.டி.ஆர். ராவணனாகிய பகவதியிடம் இவ்வாறு கூற பகவதியும் அன்றிரவு சிவனை நோக்கிப் பாடுகிறாரே, "இன்று போய் நாளை வாராய், என எனை ஒரு மனிதனும் புகலுவதோ" என்று. ஞாபகம் இருக்கிறதா? "மண்மகள் முகம் கண்டேன் மனம் கலங்கிடும் நிலை இங்கு ஏன் கொடுத்தாய், ஈஸா" என்றும் பிரலாபிக்கிறானே எண்திசையும் முன்னர் ஒரு முறை வென்ற ராவணன். அக்கட்டத்தைத்தான் கம்பர் "கடன்பட்டார் நெஞ்சம் போல..." என்று விவரிக்கிறார்.

அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு கம்பரின் காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.

அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்ப நாட்டார் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது கம்பரே பாடமாட்டாரா என்ன.


மேலே italics bold-ல் உள்ள இரு பாராக்கள் மாற்றப்பட்டுள்ளன. கீழே பார்க்கவும்.

பை தி வே, இந்த வட்டத்திலிருந்து அரசன் கூட தப்ப முடியாது என்பது மார்க்கோ போலோ அவர்களது பிரயாணக் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நண்பர் இரா. முருகன் இதை அழகாக எழுதியுள்ளார். அதில் வரும் செந்தர் பந்தி என்னும் அரசன் பெயர் சுந்தர பாண்டியனைக் குறிக்கும். அவர் வார்த்தைகளில்:

"யாராவது கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த ஆள் தெருவில் போகும்போது, கடன் கொடுத்தவன் சரசரவென்று அவனைச் சுற்றி ஒரு வளையம் வளைந்து விடுகிறான். பணத்தைத் திரும்பத் தரும் வரை அவன் அந்த வளையத்துக்குள்ளேயே நிற்க வேண்டியதுதான். செந்தர் பந்தியே ஒரு சந்தர்ப்பத்தில் அந்நிய நாட்டு வணிகன் ஒருவனிடம் இப்படிக் கைமாற்று வாங்கி, இந்தோ தரேன் .. அந்தோ தரேன் என்று நழுவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் குதிரையில் போகும்போது கடன் கொடுத்தவ்ன் அவசர அவசரமாகத் தரையில் அவனைச் சுற்றிக் கோடு வரைய, அரசன் கட்டுப்பட்டு அப்படியே நின்றான். அரண்மனையிலிருந்து பணம் எடுத்து வந்து அடைத்து சுந்தரபாண்டியனன விடுவித்துப் போனார்கள். (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அதற்கு முன் அடகு வைத்தானா என்ன?)"

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடன் வாங்குவது/அளிப்பது, அதற்கான வட்டி தருவது/பெறுவது ஆகிய அனைத்துமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் தூண்கள். இதில் அரசு தேவைக்கு மேல் தலையிடாமல் இருப்பதே நல்லது. அரசியல் காரணங்களுக்காக திடீரென ஒரு சாராரின் அத்தனைக் கடன்களையும் தள்ளுபடி செய்வதன் மூலம் பல தவறான சமிக்ஞைகளே மக்களிடம் செல்லுகின்றன. கடன் தள்ளுபடியால் சிலர் சந்தோஷப்படலாம். ஆனால் அக்கடனை முதலிலேயே ஒழுங்காகக் கட்டியவன் ஏமாளியாகவல்லவா ஆகிறான். அடுத்த முறை அவன் கடனை ஒழுங்காகக் கட்ட விரும்புவானா? அதே நேரத்தில் பேங்குகளும் சம்பத்தப்பட்டப் பிரிவினருக்குக் கடன் வழங்க முன்வருமா? இப்படியே போனால் "கடன் அளித்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றுதான் மாற்றி எழுத வேண்டியிருக்கும். இந்த அழகில் முன்னாள் மந்திரி ஒருவரின் கடனும் இம்மாதிரி குருட்டுத்தனமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை படித்த போது எங்கு அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

இப்பதிவின் உந்துதல் எனது முந்தையப் பதிவு ஒன்றில் நான் பொருளாதாரக் காரணிகளைப் புறக்கணித்து காரியம் செய்ததில் இரண்டு நாடுகளே வரை படத்திலிருந்து மறைந்ததைப் பற்றி குறிப்பிட்டதேயாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: எல்லப்பன அவர்கள் கேட்ட ஒரு கேள்வி என்னை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டது. அதாவது கடன் பட்டார் நெஞ்சம் போல என்று கம்பர் கூறவில்லை. அது ராமாயணம் பற்றிய தனிப்பாடலில் வருகிறது. இது பற்றி ராமாயண நிபுணரான ஹரி கிருஷ்ணன் அவர்கள் அழகான முறையில் எழுதியுள்ளார். அது பின்னூட்டதிலிலுள்ளது. இப்போது இப்பதிவில் சிறிது மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதை மூலப் பதிவில் செய்வது யோக்கியமான வேலையாக இருக்காது. நான் செய்த தவறை அவ்வாறு மறைக்க விருப்பம் இல்லை. ஆகவே இங்கு அதை செய்கிறேன்.

அது என்ன கடன்பட்டார் நெஞ்சம்? அதற்கு தமிழகத்தில் சில நூற்றண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்.

அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இப்புலவர் ராவணனின் மன நிலையை அவ்வளவு சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிக்கிறார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவிதை பாடும்போது ஒரு புலவர் பாடமாட்டாரா என்ன.


அன்புடன்,
டோண்டு ராகவன்

8/30/2006

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் - 2

நான் ஏற்கனவே முதல் பகுதியில் எழுதியபடி பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் எனக்கு அதிகம் பிடிக்கும். இந்தத் தொடரில் ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர்கள் என்று பிரிக்காவிட்டாலும், இதில் அதிகம் வரப்போவது பெண் எழுத்தாளர்களே.

இங்கு நான் குறிப்பிடப் போவது ஜோகிர்லதா கிரிஜா அவர்கள். ரமணி சந்திரன் அவர்கள் அமைதியாக எழுதுவார் ஆனால் கிரிஜாவின் எழுத்துக்களில் ஒரு தார்மீகக் கோபம் கொப்பளிக்கும். இவரது "மறுபடியும் ஒரு மகாபாரதம்" திண்ணையில் எழுதப்பட்டு வந்து இப்போதுதான் முடிந்தது. அதை படித்து அதன் தாக்கத்திலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.

1916-ல் பிறந்த இக்கதையின் நாயகி தனது கதையை தன் தோழியிடம் கூற அந்தத் தோழி இவர் கதையையும் இவரது அன்னையின் கதையையும் மிக அழகான முறையில் முதலில் பாரல்லெல்லாக எழுதி, அவ்வப்போது அக்கதைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும் முறையில் காண்பித்து, பிறகு தாயும் மகளும் ஒன்று சேர்ந்து போராடுவதாக குறிப்பிட்டு என்றெல்லாம் சித்து வேலை காட்டியுள்ளார் ஜோகிர்லதா கிரிஜா அவர்கள். இவரது கதைகளை நான் எழுபதுகளிலிருந்தே படித்து வந்திருக்கிறேன் என்றாலும் நான் இப்பதிவில் பேசப்போவது அவரது "மறுபடியும் ஒரு மகாபாரதம்" மட்டுமே.

இக்கதையின் நாயகி துர்கா 11 வயதாக இருக்கும்போது கதை ஆரம்பிக்கிறது. அவருடைய திருமணம் சிவகுருவுடன் நிச்சயமாகிறது. வழமையான சீர்வரிசைகள், சம்பந்தி மாமியின் அல்பத்தனம், தேவையின்றி வரதட்சிணையை பேசிய அளவுக்குமேல் கூட்டுவது எல்லாம் அபரிதமாக நடக்கின்றன. 1927-ஆம் வருடத்திய அரசியல் நிலைமையும் பேசுபவர்கள் நிலைப்பாட்டிற்கேற்ப கையாளப்படுகிறது. கல்யாண காரியத்துக்கு வந்து சேர்கிறார் பங்கஜம், துர்காவின் உண்மையான அன்னை. பங்கஜத்துக்கு மூன்றும் பெண்ணாக பிறக்க, அதிலும் முதல் இரண்டு குழந்தைகளும் இறந்து பிறக்க, மூன்றாவது பெண்ணையும் கொன்றுவிட பங்கஜத்தின் மாமியார் ஏற்பாடு செய்ய, அக்குழந்தை வேலைக்காரி சின்னக்கண்ணுவால் இன்னொருவரிடம் கொடுக்கப்பட்டு துர்காவாக வளர்கிறது.

இந்த இடத்தில் ஒன்றை நான் கூற வேண்டும். 35 வாரங்களாக வந்த இக்கதையின் முதல் சில அத்தியாயங்களை மேம்போக்காகத்தான் படித்தேன். அதிலும் பங்கஜத்துக்கு நேர்ந்த கொடுமைகள் அவற்றை படிக்க என்னை விடவில்லை. ஆகவே துர்காதான் ப்ங்கஜத்தின் பெண் என்ற விஷயம் அப்போது அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது தெரிந்திருக்கவில்லை. இப்போது ரெவ்யூ செய்வதற்காகப் படிக்கும்போதுதான் நான் படிக்காமல் விட்ட விஷயங்கள் நன்கு புலப்படுகின்றன. எவ்வளவு திறமையாக அவற்றை ஆசிரியை கையாண்டிருக்கிறார் என்ற பிரமிப்பு இப்போது மேலோங்கி நிற்கிறது.

பங்கஜத்தின் கணவன் தாசரதி. குணம் கெட்டவன். மூன்று குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்ததற்கு பங்கஜம்தான் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புபவன். சர்வ சாதாரணமாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள ஒப்புகிறான். ஆகவே பங்கஜம் வாழாவெட்டியாக தந்தை வீட்டிற்கு திரும்பநேரிடுகிறது. சமையல் வேலைக்குப் போன இடத்தில் பண்பில்லாத எஜமானனிடமிருந்து தப்பித்து, பக்கத்து வீட்டு காந்தியவாதி சாமிநாதனின் ஆதரவு பெற்று என்று கதை சரளமாகச் செல்கிறது.சாமிநாதனை மணம் புரிந்து, சிறிது காலம் நல்ல முறையில் வாழ்க்கை வாழ முடிகிறது. ஒரு பிள்ளை குழந்தையும் பெறுகிறாள். ஆனால் சாமிநாதன் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட, பங்கஜம் மறுபடியும் அநாதையாகிறார். அவள் பிள்ளை முதல் கணவன் தாசரதி கண்களில் பட அக்குழந்தையை அப்பாதகன் மனம் நடுங்கும் முறையில் கொன்று விடுகிறான். பங்கஜம் தாம்பரத்தில் மஹிளா மண்டலி நடத்தி வந்த டாக்டர் முத்துலட்சுமியிடம் அடைக்கலம் பெறுகிறாள். சில காலம் கழித்து அவள் பெண் துர்காவும் தன் கணவன் சிவகுருவால் வஞ்சிக்கப்பட்டு அதே மண்டலியில் வந்து சேர தாயும் மகளும் தங்கள் உறவு தெரியாமல் முதலில் நல்ல தோழியாகின்றனர். பிறகு உண்மையை துர்கா முதலில் அறிந்து, தன் அன்னையிடம் உண்மை கூறி என்று விறுவிறென நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிறகு கதை சற்று வேறு தளத்தில் நடக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்வுகள் கதைப்போக்கில் கூறப்பட ஆரம்பிக்கின்றன. இதன் பிறகு காலச்சுழற்சி வெகுவேகமாக நிகழ்கிறது. சுதந்திரம் வந்ததும் ஆசிரமத்துக்கு வந்து சேரும் சுவாமினாதன் பங்கஜத்துக்கு உதவியாகச் செயலாற்ற கதை தாய் மகளையே சுற்றி வருகிறது. ஒரே அத்தியாயத்தில் 1995 -ஆம் ஆண்டு வந்து விடுகிறது. நடுவில் பங்கஜமும் மற்றும் சுவாமினாதனும் காலம் ஆகின்றனர். துர்கா தனித்து ஆசிரமத்தை நிர்வகிக்கிறார். கதையின் முடிவில் அவள் கணவன் சிவகுரு அவரிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆசிரமத்திலேயே ஒட்டிக் கொள்ள ஆசைப்படுகிறான். நல்ல வேளையாக (என் கருத்தில்) துர்கா அசட்டுத்தனமாக அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை.

கதையின் முப்பத்தைந்து அத்தியாயங்களையும் இச்சுட்டியில் பார்க்கலாம்.

இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவை என்னைச் சேரும். நிறைவாக ஏதேனும் தென்பட்டால் அதன் பெருமையெல்லாம் ஜோகிர்லதா கிரிஜாவையே சாரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/27/2006

சரித்திரம் உருவாகும்போது

சமீபத்தில் 1989 ஆரம்பித்தபோது அந்த ஆண்டு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை உள்ளடக்கியிருக்கும் என்று சிறிதும் நினைத்திருக்கவில்லை. 1985-ல் கர்பசியவ் (Gorbachev) சோவியத் யூனியனின் தலைவராக ஆனபோதே கம்யூனிசத்தின் வீழ்ச்சி வேகம் அடைய ஆரம்பித்து விட்டது என்பதை இப்போது - 2006-ல் பின்னோக்கி பார்க்கும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நிச்சயமாக 1989-ல் அது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதுதான் நிஜம். கம்யூனிச உலகில் பல அதிரடி விஷயங்கள் நடக்கின்றன என்று அவ்வப்போது பத்திரிகைகளில் படித்து வந்தாலும் சோவியத் யூனியன் இருக்கும் வரை உலகில் உள்ள ஜனநாயக சுதந்திர சக்திகளால் ரொம்ப சாதிக்க முடியாது என்றுதான் தோன்றியது.

அக்டோபரில் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் 40-ஆம் ஆண்டு விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. "40 Jahre Bestehen der DDR" (40 வருடங்களாக ஜெ.ஜ.கு.) என்றெல்லாம் வெற்றிகரமாக பேனர்கள் கிழக்கு ஜெர்மனியில் பறந்தன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே புகைச்சல் ஆரம்பித்தது.

ஹங்கேரி தனது எல்லைத் தடைகளை நீக்கியது. அதன் வழியாக ஆஸ்திரியா பிறகு அங்கிருந்து மேற்கு ஜெர்மனி என்ற கணக்கில் பல கிழக்கு ஜெர்மானியர்கள் ஓடத் துவங்கினர். தூர்தர்ஷனில் அக்காலக் கட்டத்தில் இவையெல்லாம் பரபரப்பாகப் பார்க்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனியின் அதிபர் ஹோனேக்கர் படு டென்ஷனானார். கர்பசியவ் உதவி ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்து விட்டார். அடுத்த சில நாட்களிலேயே விழவே விழாது என்று கருதப்பட்ட பெர்லின் சுவர் விழுந்தது. அடுத்த ஓராண்டுக்குள் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியில் இணைந்தது.

Cold war என்ற பெயரில் கிழக்குக்கும் மேற்கிற்கும் நடுவில் நடந்து வந்த யுத்தம் அமெரிக்கர்களின் வெற்றியுடன் முடிவடைய ஆரம்பித்தது.சோவியத் யூனியனின் ஆதரவு இல்லை என்றானதால் சீட்டுகட்டு மாளிகைகள் போல செக்கொஸ்லாவிக்கியா, ருமேனியா, போலந்த், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டு அரசுகள் கவிழ ஆரம்பித்தன. அப்போதிலிருந்து 1991 திசம்பர் வரை இழுபறியாகக் கிடந்த சோவியத் ஒன்றியமும் இறுதி மூச்சை விட்டது. Cold war-ம் முடிவுற்றது.

இதையெல்லாம் அன்றைய ஊடகங்களின் வாயிலாக நேரடியாகப் பார்த்த எனக்கு உணர்வுகள் கலந்து இருந்தன. ஒரு பக்கம் தீவிர அமெரிக்க ஆதரவாளனான நான் அமெரிக்காவின் இந்த வெற்றிக்கு சந்தோஷப்பட்டேன். அதே சமயம் 42 ஆண்டுகளாக அதனுடன் போராடிய சோவியத் யூனியனின் வீழ்ச்சி எனக்குள் பரிதாபத்தையும் ஏற்படுத்தின. அதுவும் அதன் கடைசி இரண்டு ஆண்டுகளில் பல விஷயங்கள் வெளியில் வந்தன. சூப்பர் பவராகக் கருதப்பட்ட சோவியத் யூனியன் உண்மையிலேயே எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை விளவித்தது. செண்ட்ரலைஸ்ட் பிளான்னிங் என்ற பெயரில் என்னவெல்லாம் கம்யூனிஸ்டுகள் கூத்தடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இப்படியெல்லாம் அறிவுகெட்டத்தனமாகவெலாம் நாட்டை ஆள முடிய்மா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. மனித இயற்கைக்கு விரோதமான பல கோட்பாடுகளை மார்க்ஸ் சொன்னார், லெனின் சொன்னார் என்பதற்காக மட்டுமே அவற்றை கடைபிடித்தவர்களின் அறியாமை புலப்பட்டது. எதுவும் இவ்வுலகில் இலவசம் இல்லை என்ற உண்மையை கவனியாது வேலை செய்தால் இப்படித்தான் நடக்கும் எனக் கூறிவிடலாம்.

எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏய்ன் ரேண்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய "அட்லாஸ் தோள்களைக் குலுக்கினான்" என்ற நாவல் கூறியபடியே சோவியத் யூனியனில் நடந்தது. அந்த நாடே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது.

கிழக்கு ஜெர்மனியிலிருந்து பல தொழிற்சாலைகள் வேரோடு பெயர்க்கப்பட்டு பல வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது சம்பந்தமான பேப்பர்களை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழி பெயர்க்கும் வேலை தொண்ணூறுகளில் பெற்றேன். அப்போது நினைத்துக் கொண்டேன், அடாடா இந்த தொழிற்சாலைகளை எவ்வளவு நம்பிக்கையுடன் ஆரம்பித்தனர், இப்போது இவ்வாறு இடம் மாறுகின்றனவே என்ற கிலேசம் என் மனதில் ஏற்பட்டது.

இப்போதும், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு இன்னும் பூர்த்தியடையவில்லை. அது ஏற்பட 1990-க்குப் பிறகு பிறந்தவர்கள் வயதுக்கு வந்து பொது வாழ்க்கையில் பங்கெடுக்கும்போதுதான் நடக்கும் எனத் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2006

மன நிறைவை அளித்த பதிவாளர்கள் சந்திப்பு

போன திங்களன்று இந்த மீட்டிங்கிற்காக இப்பதிவை போட்டதற்கு பின்னூட்டங்கள் குறைந்த அளவிலேயே வந்தன. நான், ஜயராமன் மற்றும் ஜோசஃப் தவிர்த்து யாரும் நிச்சயமாக வருவதாகத் தெரியவில்லை. பிறகு கிருஷ்ணா மீட்டிங்கிற்கு வரப்போவதாகப் பின்னூட்டமிட்டார். சிவஞானம்ஜி அவர்கள் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே சரியாக இல்லாததால் அவர் தான் வருவது சந்தேகம் என முதலிலேயே தெரிவித்து விட்டார். நேற்று என்னுடன் நிலவு நண்பன் தொலை பேசினார். அவர் தான் வருவது 50-50 சான்ஸ் என்று தெரிவித்தார். ஆனால் இன்று பிற்பகல் மா.சிவகுமார் சேட்டில் வந்து மீட்டிங்கிற்கு வருவதாகத் தெரிவித்தார். ஜெயகமல் அவர்கள் போன் செய்து தன் நண்பர் சரவணனுடன் வருவதாகக் கூறினார். சிமுலேஷனும் தான் வருவதை உறுதி செய்தார்.

மாலை 5 மணியளவில் என் கார் சன் தியேட்டரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது கிருஷ்ணா அவர்களின் செல் பேசி அழைப்பு வந்தது. தான் ஏற்கனவே டிரைவ் இன் வந்து சேர்ந்து விட்டதாகக் கூறினார். அடுத்த 5 நிமிடங்களில் நான் அவர் இருக்குமிடம் போய் சேர்ந்தேஎன். அடுத்த சில நிமிடங்களில் சந்திரசேகர், மதன், சிமுலேஷன் ஆகியோர் வந்தனர். 5 நிமிடம் கழித்து ஜயராமன் தான் உள்ளே வந்து விட்டதாகவும் என்னைப் பார்க்க முடியவில்லை என்றும் கூற அவருக்கு சரியான இடத்தைக் கூற அவரும் வந்தார்.

ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து ஒரு கால் வந்தது. தானும் மீட்டிங்கிற்கு வரலாமா எனக் கேட்க, தாராளமாக வாருங்கள் என அழைக்க, அவரும் 20 நிமிட நேரத்தில் வந்தார். இதற்குள் மா. சிவகுமார் அவர்களும் வந்து சேர்ந்து கொள்ள எல்லோரும் உள்ளே சென்றோம். ஜோசஃப் சார் அவசர வேலை காரணமாக 6.45 மணியளவில் வந்தார்.

மீட்டிங்கிற்கு வந்தவர்கள்:
1. ரவிச்சந்திரன், அமெரிக்காவில் வர்ஜீனியாவில் ஐ. டி. இஞ்சினியர்
2. சிமுலேஷன் என்னும் சுந்தரராமன். சத்யமில் வேலை செய்பவர்; இவர் சங்கீதம் பற்றி புத்தகம் போட்டிருக்கிறார்
3. மரபூர் சந்திர சேகரன். பிளாஸ்டிக் தொழிற்நுட்ப நிபுணர்.
4. மதன். இவரும் மரபூரும் பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்தவர்கள்
5. ஜயராமன், சி.ஏ. படித்தவர், ஆல்காடெல்லில் வேலை செய்பவர்
6. மா.சிவகுமார், ஒரு தோல் தொழில் நுட்பத்திற்கான மென்பொருள் தயாரிப்பாளர்.
7. கிருஷ்ணா என்னும் ராமகிருஷ்ணன், விப்ரோவில் தொழில் நுட்ப மேனேஜராகப் பணி புரிபவர். இந்த மீட்டிங்கிற்கான படங்களை எடுத்தவர், நான் வீட்டிற்கு வந்து சேரும்போது அவை என் மின்னஞ்சல் பெட்டியில் எனக்காகக் காத்திருந்தன.
8. டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள். கத்தோலிக்க சிரியன் பேங்கில் மென்பொருள் துறைத் தலைவர்.
9. ஜயகமல். ஜப்பானிய மொழி கற்கும் மாணவர்
10. சரவணன், அவரது நண்பர். இவர் இக்னூவில் பணி செய்கிறார். ஜயகமல் மற்றும் சரவணன் மிகவும் லேட்டாக வந்தனர்.
11. டோண்டு ராகவன்

இப்போது படங்களுக்குச் செல்வோம்: இடமிருந்து வலம் அல்லது கடிகாரச்சுற்றின் எதிர்ப்பக்கமாக:


மரபூர் சந்திரசேகர், சிமுலேஷன், டோண்டு மற்றும் மதன்


மரபூர், கிருஷ்ணா (இப்படத்தை விடுத்து மீதி எல்லாவற்றைய்ம் எடுத்தவர்), டோண்டு மற்றும் மதன்


டோண்டு, மா.சிவகுமார், மதன், மரபூர், ஜயராமன், சிமுலேஷன மற்றும் ரவிச்சந்திரன்


டோண்டு, மா.சிவகுமார், மதன், மரபூர், ஜயராமன், சிமுலேஷன மற்றும் ரவிச்சந்திரன் (எதிர்ப்புறத்திலிருந்து)

டோண்டு (கோரமாக இளித்துக் கொண்டு), மா.சிவகுமார், மதன், மரபூர் மற்றும் ஜயராமன். மற்ற இருவர் ஃபிரேமில் இல்லை


ரவிச்சந்திரன், ஜோசஃப் மற்றும் டோண்டு


ஜோசஃப், டோண்டு, ஜயராமன், சிமுலேஷன் மற்றும் ரவிச்சந்திரன்


ஜோசஃப், டோண்டு, ஜயராமன், சிமுலேஷன் மற்றும் ரவிச்சந்திரன்


டோண்டு (கைக்கடிகாரம் மட்டும் தெரிகிறது), ஜயகமல் மற்றும் சரவணன். (ஏன் லேட் என்று கேட்டால், இருவரும் கிரிக்கெட் ஆடி விட்டு வந்திருக்கிறார்கள்).

படங்களை வெற்றிகரமாக மேலேற்ற உதவி செய்த ஜயராமனுக்கு ஒரு ஓ போடுவோமா?

பாசந்தி, குலாப் ஜாமுன் மற்றும் பாதாம் அல்வா ஆர்டர் செய்யப்பட்டன. இனிப்பு வேண்டாமென சிலர் கூறி விட்டனர். போண்டா வேண்டாமென நான் தீர்மானித்து செட்டி நாடு இட்டலிகள் ஆர்டர் செய்து கொண்டேன். போண்டா ஆதரவாளர்களுக்கும் பஞ்சம் இல்லை. லேட்டாக வந்து சேர்ந்த ஜோசஃப் போண்டா ஆர்டர் செய்து கொள்ள அவருக்கு கம்பெனி கொடுக்க நானும் போண்டா ஆர்டர் செய்தேன்.

ஒவ்வொருவரும் சுய அறிமுகம் செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதைத் தவிர்த்து பேச்சுக்கள் இயல்பாக தத்தம் பாதையைத் தேர்ந்தெடுத்தன. மா. சிவகுமார் நாங்கள் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவரையும் இந்த மீட்டிங் பற்றிப் பதிவு போடும்படி கேட்டுக் கொண்டுள்ளேன். ஜோசஃப் அவர்கள் தன்னுடைய தூத்துக்குடி மற்றும் தஞ்சை அனுபவங்களை சுவைபடக் கூறினார். அவரது நண்பர் திரு தனஞ்சயின் அகால மரணம் அவரை நிறையவே பாதித்து விட்டிருந்தது. ரொம்பத் தூண்டுதலில் மா. சிவகுமார் பேசினார். தாய் பற்றி தான் எழுதிய கவிதையை பற்றி சந்திரசேகர் பேசினார்.

சிவகுமார் அவர்கள் நான் விரைவில் பாஸ்போர்ட் பெற்று வெளி நாட்டு அனுபவங்களும் பெற வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

எவ்வளவோ விஷயங்கள் பேசினோம். எல்லாவற்றையும் சட்டென்று இப்போது நினைவில் கொண்டு வர இயலவில்லை. வழக்கம் போல ஜோசஃப் மற்றும் ஜயராமன் அவர்கள் நான் விட்டதை இட்டு நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மா. சிவகுமார் தனது பார்வையிலிருந்து எழுதும் பதிவு வேறு வர இருக்கிறது.

மேலும் விஷயங்கள் நினைவுக்கு வர வர அவற்றை உசிதம் போல பதிவிலோ அல்லது பின்னூட்டங்களாகவோ சேர்ப்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல்லாம் நன்மைக்கே, அல்லது.....

பழைய கதைதான். ஒரு அரசருக்கு கையில் காயம்பட, அவர் மந்திரியோ எல்லாம் நன்மைக்கே என்று கூறுவான். அரசர் எரிச்சலுடன் மந்திரியை சிறையிலடைப்பார். பிறகு வேட்டைக்கு சென்ற இடத்தில் காட்டுவாசிகளிடம் அகப்பட்டு, அவர்கள் குல தெய்வத்துக்கு பலி கொடுக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்படுவார் அரசர். கடைசி தருணத்தில் அவர் கையில் ஊனமிருப்பதைக் கண்டு பூசாரி பலியிட மறுக்க அரசர் அங்கிருந்து விடுதலை செய்யப்படுவார். ஊருக்கு திரும்பிய அரசர் மந்திரியை விடுவித்து அவரிடம் மன்னிப்புக் கேட்பார். மந்திரி கூறுவார் "அரசே, நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே, ஏனெனில் சிறையில் இல்லாதிருந்தால் உங்களுடன் நானும் வேட்டைக்கு வந்திருப்பேன். உங்களை அனுப்பி விட்டு என்னை பலி கொடுத்திருப்பார்கள்" என்றார். பழைய அம்புலிமாமா கதைதான். இருந்தாலும் ஓல்ட் ஈஸ் கோல்ட் அல்லவா. இப்பதிவும் எல்லாம் நன்மைக்கே என்பதை வலியுறுத்தவே.

உண்மை கூறப்போனால், "எல்லாம் நன்மைக்கே, அல்லது ந்டப்பவை எல்லாவற்றையும் உனக்கு நன்மையாக்கிக் கொள்" என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆயினும் சற்று நீளமாகத் தலைப்பு இருப்பதாகத் தோன்றியதால் அதைக் குறைத்து இத்தலைப்பை வைத்தேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பல விஷயங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்த போது வரவேற்கத் தகுந்ததாக இல்லை. உதாரணத்துக்கு சமீபத்தில் 1969-ல் கடைசி வருட பொறியியல் பரீட்சையில் இரண்டு பேப்பரில் தேறவில்லை. முதல் வகுப்புக் கனவுகள் கானல் நீராயின, என்னுடன் பரீட்சை எழுதி பாஸ் செய்தவர்கள் மின் வாரியத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். டைம் பாசுக்காக சேர்ந்தது ஜெர்மன் வகுப்பில். அது எவ்வளவு பெரிய அற்புதமாக மாறியது என்பதைப் பற்றி நான் ஏற்கனவே இப்பதிவைப் போட்டுள்ளேன்.

இன்னும் பல உதாரணங்கள் கூறலாம். ரேஷன் கடையில் பெரிய கியூவில் நிற்க வேண்டுமா? கையில் ஒரு பெரிய நாவலை எடுத்துச் செல்ல வேண்டும். காத்திருக்கும் நேரத்தில் கணிசமான அளவுக்கு படித்து முடிக்கலாம். அந்த அளவுக்கு மொழியறிவு வளரும். அதுவும் மொழி பெயர்ப்பையே தொழிலாக நடத்தும் எனக்கு பெரிய வரப்பிரசாதம்தானே.

அதே போல ஐ.டி.பி.எல்லில் அலுவலக அரசியல் காரணமாகவும் ஒரு சக இஞ்சினியரின் ஈகோ பிரச்சினைக்காகவும் உப்பு சப்பில்லாத ஒரு வேலை கொடுத்தப் போது, அதையே உபயோகித்து என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு ஏதுவாக்கிக் கொண்டதையும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

சமீபத்தில் 1967-ல் குண்டடிப்பட்டு எம்ஜிஆர் படுத்திருந்த போது அவரைப் பார்க்க வருபவர்களுடன் விடாமல் பேசுவார். தொண்டை வலியிருந்தாலும் சளைக்க மாட்டார். வருபவர்களுக்கு ஆனந்தம் அதே சமயம் எம்ஜிஆர் அவர்களும் நன்றாக பிராக்டீஸ் செய்ததால் இன்னும் பத்து வருடங்களுக்கு திரை வானில் மின்ன முடிந்தது.

மறுபடியும் இந்த டோண்டு ராகவனையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் போலி டோண்டுவால் பீடிக்கப்பட்டாலும் அவனால் எனக்கு விளைந்த நன்மைகளும் உண்டு. இணையத்தில் இத்தனை நல்ல இதயங்கள் உள்ளன என்பது புலப்பட்டது. அவனை எதிர்த்து யுத்தம் செய்து எழுதுவதில் என் தமிழ் மேம்பட்டது. தமிழ் தட்டச்சு வேகம் அதிகரித்தது. மொழி பெயர்ப்புகளை வேகமாக செய்து வாடிக்கையாளர் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

பவர்கட் ஆகி விட்டதா, ஏதேனும் புத்தகம் எடுத்துப் படிக்கலாம். ரொம்ப நேரம் பவர்கட் என்பது தெரிந்தால் எங்காவது வெளியில் கூடப் போகலாம். அதே சமயம் ஃபிரிட்ஜ் டீஃப்ராஸ்ட் தானே நடந்து விடும். மின்சார மீட்டர் ரீடிங் அளவு குறையும்.

இப்பதிவினை முடிக்கும் முன்னால் என்னுடைய இப்பதிவையும் சுட்ட விரும்புவேன். சென்னையில் இருக்கும் வலைப்பதிவர்கள் இன்று மாலை மீட்டிங்கிற்கு வர முயற்சி செய்யவும். இந்தப் பதிவின் நோக்கங்களில் இதுவும் ஒன்றே, ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/18/2006

ஒரு நீதிக்கதை, ஒரேயொரு கேள்வியுடன்

இது ஒரு மீள்பதிவு. எல்லோரும் சிறுகதைகளை போட்டு அசத்தும்போது, நான் எழுதிய ஒரே கதையை இங்கு போட நினைத்தேன். முக்கியமாக சிறில் அவர்களின் கதை பற்றிய பதிவைப் பார்த்ததும்தான் எனக்கும் இதை மீள்பதிவு செய்யத் தோன்றியது. இது ஒரு நீதிக்கதை. படித்துவிட்டு கோபப்படுபவர்கள் சிறில் அவர்கள் மீது கோபபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உப்பிலி சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் 1954-55 கல்வியாண்டில் நான்காம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பூகோளப் பாட வகுப்பில் ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் உப்பிலியை எழுப்பி ஒரு கேள்வி கேட்டார். இந்தியாவின் வரைபடத்தில் அவனை காஷ்மீரைக் காண்பிக்கச் சொன்னார். உப்பிலி "எனக்குத் தெரியவில்லை சார்" என்று கூற, ஆசிரியர் கோபம் அடைந்து "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைக் கூடத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி அவனை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.

அவனும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டான். அவர் அவனைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு அவன் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றான். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி அவனை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார்.

வீட்டிற்குப் போக பயந்து உப்பிலி தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது போலீஸ்காரன் மணவாளனிடம் அகப்பட்டுக் கொண்டான். போலீஸ்காரன் அவனிடம் அவன் பெயர், ஸ்கூல் எல்லாவற்றையும் பற்றி விசாரித்து விட்டு அவன் ஏன் பள்ளியில் இல்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டான். அதற்கு உப்பிலி "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றான். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்கு போக பயந்து கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

இப்போது போலீஸ்காரன் மணவாளன் கோபப்பட்டான். "அவங்க செஞ்சது சரிதாண்டா. நீ இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி அவனை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தான். அங்கு உப்பிலி என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்க அங்குள்ள போலீஸ்காரன் ஷஹாபுத்தினிடம் அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேலையாக ஷஹாபுத்தின் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் பிறந்து வளர்ந்தவன். இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். 1947-ல் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தவன். ஆகவே தமிழில் பேச முடிந்தது. உப்பிலியிடம் என்ன நடந்தது, அவன் ஏன் பாகிஸ்தானுக்கு வந்தான் என்பதையெல்லாம் கேட்டான். அதற்கு உப்பிலி பின் வருமாறு கூறினான்.

"சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றேன். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்குப் போக பயந்து நான் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது போலீஸ்காரன் மணவாளனிடம் அகப்பட்டுக் கொண்டேன். போலீஸ்காரன் என்னிடம் என் பெயர், ஸ்கூல் எல்லாவற்றையும் பற்றி விசாரித்து விட்டு நான் ஏன் பள்ளியில் இல்லாமல் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டான். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். நானும் சோகமாக வராந்தாவில் சென்று கொண்டிருக்க தலைமை ஆசிரியர் டி.பி. ஸ்ரீனிவாசவரதனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவர் என்னைப் பார்த்து "ஏண்டா உப்பிலிதானே நீ, வகுப்பில் இல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நான் "சார் நான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் என்னை 'இந்திய வரைபடத்தில் காஷ்மீர் எங்கே' என்று கேட்டார். 'எனக்குத் தெரியாது' என்று சொன்னேன். அதற்கு அவர் "காஷ்மீர் எங்கு இருக்கிறது என்பதைத் தெரியாதவன் வகுப்பை விட்டு வெளியே செல்லலாம்" என்று கூறி என்னை வகுப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றேன். அதைக் கேட்ட தலைமை ஆசிரியர் டி. பி. ஸ்ரீனிவாசவரதன் அவர்கள் கோபம் அடைந்து "வகுப்பில் மட்டுமல்ல, நீ இந்த பள்ளியிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை டி.சி. கொடுத்து வெளியில் அனுப்பினார். வீட்டிற்கு போக பயந்து கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றேன். இப்போது போலீஸ்காரன் மணவாளன் கோபப்பட்டான். "அவங்க செஞ்சது சரிதாண்டா. நீ இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது" என்று கூறி என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பித்தான்" என்றான்.

ஷஹாபுத்தின் தலையைச் சொரிந்தான். பிறகு சொன்னான்: "இதோ பார் உப்பிலி. இந்தியர்களுக்கும் எங்களுக்கும் ஆகாதுதான். ஆனாலும் காஷ்மீர் எங்கள் இருவருக்கும் முக்கியம். அது எங்கிருக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ளாத நீ இங்கு இருத்தல் எங்களுக்கும் பிடிக்கலை" என்று சொல்லி அவனை துபாய்க்கு நாடு கடத்தினான். துபாய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உப்பிலி சாலையைக் கடக்கும்போது லாரி மோதி இறந்து போனான்.

இக்கதையிலிருந்து நீங்கள் அறியும் நீதி யாது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/14/2006

ஆகஸ்ட் 20 வலைப்பதிவர் சந்திப்பு

நண்பர்களே,

வரும் ஞாயிற்றுக் கிழமை, ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைக்க எண்ணியுள்ளோம் (டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள் மற்றும் நான்). சென்னை வலைப்பதிவாளர்கள், சென்னையில் தற்சமயம் இருக்கும் வெளியூர் வலைப்பதிவாளர்கள் ஆகியோரைக் கண்டு உரையாட ஆசை. சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடிக்கலாம்.

போன முறை செய்து நன்றாக வெற்றி கண்ட அதே முறைதான். மீட்டிங்கிற்கான செலவு பற்றி பேசுகிறேன். இம்முறையும் சந்திப்புக்கு வருபவர்கள் எல்லோருமே செலவை பகிர்ந்து கொள்கிறோம். செலவு என்ன பெரிய செலவு, போண்டா, காபி ஆகியவைக்கு ஆவதுதான். நிறைய பேர் வந்தால் ஒரு ஹாலை அங்கே இரண்டு மணி நேரத்துக்கு எடுக்க வேண்டி வரலாம். சாதாரணமாக இது தேவைப்படாது, பார்க்கலாம்.

போன முறை ஒரு சிறு குறைபாடு தென்பட்டது. பலர் காபி மட்டும் போதும் எனக் கூறிவிட்டனர். ஆனால் டிவைடிங் சிஸ்டமில் எல்லோரையும் போலவே காண்ட்ரிப்யூட் செய்தனர். எனக்கு உறுத்தலாக இருந்தது. இம்முறையாவது தயவு செய்து கூச்சமின்றி ஆர்டர் செய்யுங்கள். உட்லேண்ட்ஸ் டிஃபனை அனுபவித்து உண்ணவும். சற்றே காலி வயிற்றுடன் வரவும். வழக்கம் போல வசூல் செய்யப் போவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவனே. போண்டா மட்டுமே உணவல்ல, இட்லி வடையும் (பதிவாளர் அல்ல), ஆனியன் ஊத்தப்பமும், பூரி கிழங்கும், பாஸந்தியும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும்.

This will be strictly Dutch treat.

இம்முறையும் போன முறையைப் போலவே போதிய அவகாசம் கொடுத்துள்ளோம். வரும் எண்ணம் உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாக அதை வெளியிடலாம். தொலைபேசியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

டோண்டு ராகவன்: 9884012948
டி.பி.ஆர். ஜோசஃப்: 9840751117

சாதாரணமாக பேச வேண்டிய அஜெண்டாவெல்லாம் கூறுவதில்லை. இருப்பினும் இம்முறை பேச ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதுதான் தமிழ்மணம் கை மாறிய விஷயம். அருமை நண்பர் காசி மற்றும் அவரது நிர்வாகக் குழுவினர் இத்தனைக் காலம் இதைக் கட்டிக் காத்து அருமையாக நடத்தியுள்ளனர். அவர்களுக்கு நமது நன்றியும் மேலே மேலே அவர்கள் தத்தம் புது முயற்சிகளில் வெற்றி பெறவும் எமது வாழ்த்துக்கள். புது நிர்வாகத்தினரை திறந்த மனதுடன் இதய பூர்வமான வரவேற்பையும் நல்க வேண்டும். இதையெல்லாம் பற்றி நிச்சயம் பேசலாம். மேலும் இருக்கவே இருக்கிறது எல்லோரையும் பாதிக்கும் இன்னொரு விஷயமும் கூட, ஹி ஹி ஹி.

நானும் ஜோசஃப் சாரும் காலையில் வைத்துக் கொள்ளலாமா எனவும் யோசித்தோம். ஆனால் அதில் பல பிரச்சினைகள், ஆகவே வேண்டாம் என விட்டு விட்டோம். மேலும் உட்லேன்ட்ஸ் டிரைவ் இன்னின் சௌகரியம் மற்றதில் இல்லை என்றும் கூற வேண்டும்.

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

காலை 11.20 க்கு சேர்க்கப்பட்டது:

யார் வருகிறார்களோ இல்லையோ போலி டோண்டு முதலிலேயே இப்பதிவில் அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டான்.

ஜோசஃப் சார் பெயரில் பின்னூட்டமிட்டு விட்டான். ரொம்ப இயல்பானதாக இருந்ததால் எப்போது ஜாக்கிரதையாகச் செயல்படும் டோண்டு ராகவனே சற்று அச்ந்து பின்னூட்டத்தை மட்டுறுத்தல் செய்து பதிலும் போட்டு விட்டான். திடீரென ஒரு சந்தேகத்தில் எலிக்குட்டி சோதனை செய்து பார்த்து, வந்தது அந்த இழிபிறவி என்பதை உணர்ந்து, அவனது பின்னூட்டத்தையும், தனது பதிலையும் அடையாளம் இன்றி அழித்து விட்டான்.

இருப்பினும் அவன் கேட்ட கேள்வி பலரும் கேட்கக் கூடியதே. ஆகவே இங்கு அது பற்றி பதிவிலேயே கூறிவிடுகிறேன்.

கேள்வி:
வலைப்பதிவர் சந்திப்புக்கு குடும்பத்துடன் வரலாமா? நீங்கள் அழைத்து வருகிறீர்களா?

பதில்:
ஐடியா நன்றாக உள்ளது ஜோசஃப் அவர்களே, ஆனால் சமாளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நீங்களேதான் பார்த்தீர்களே, பெரிய அளவில் டேபிள் போடுவதற்கு உட்லேண்ட்ஸ் தரப்பில் போன முறை சற்று தயக்கம் இருந்ததென்று.

அது மட்டும் காரணமில்லை, என் குடும்பத்தினர் தமிழ் வலைப்பூவில் சிறிதும் ஆர்வம் காட்டாதவர்கள். வலைப்பூவில் நடக்கும் அசிங்கத் தாக்குதல்களை பற்றி ஒன்றும் அறியாதவர்கள். மேலும், அவர்களுக்கு போர் வேறு அடிக்கும், ஆகவே நான் அழைத்து வரப்போவதில்லை.

போன முறை ஒருவர் தன் மகளை அழைத்துவர, நான் கூறியது நினைவிலிருக்கிறதா? அதாவது போட்டோவில் அப்பெண் கண்டிப்பாக வரக்கூடாது ஏனெனில் அதை அசிங்கமான முறையில் எக்ஸ்ப்ளாயிட் செய்ய ஒரு இழிபிறவி அலைந்து கொண்டிருக்கிறதல்லவா? ஜயராமன் சார் காமெராவில் பேட்டரி தொல்லை செய்ததால் ஒரு போட்டோவுமே எடுக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்.

இருப்பினும் இப்போது நான் தெளிவாகக் கூறுகிறேன். அழைத்து வருபவர்கள் தாராளமாக அழைத்து வரட்டும். காண்ட்ரிப்யூஷனும் அதற்கேற்ப மாறும். அதாவது அவர்களும் டிவைடிங் சிஸ்டத்தில் வந்து அவர்களை அழைத்து வருபவர்கள் காண்ட்ரிப்யூட் செய்து விடுவார்கள்.

அவர்கள் நலனுக்காக அவர்களைப் பற்றி நான் இப்பதிவுக்கு அடுத்து வரும் மீட்டிங்க் பற்றிய பதிவில் ஒன்றும் குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/10/2006

ராஜாஜி என்னும் மாமனிதர் - 2

தற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா?

இப்போது மிகத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றிப் பேசுவேன். 1953 ஆம் வருடம் சென்னை மாகாணத்தின் நிலையைப் பார்ப்போம்:

குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.

அப்போது ராஜாஜி அவர்கள் முன்னிறுத்திய ஆரம்பக் கல்வி வெறும் ஏட்டளளவில் நிற்காமல் தொழில் சார்ந்ததாயிற்று. இரண்டு வேளைகளும் பள்ளி இருந்ததால், பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே தவிர்த்தனர். ஏனெனில் தங்கள் தொழில்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். மேலும் இரு வேளையும் வகுப்புக்கு வர வேண்டிய நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு மட்டும் கல்வி தர முடிந்தது.

ராஜாஜி அவர்களின் திட்டம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வீச்சில் தீர்வு கண்டது. அதாவது, மாணவர்கள் தினம் மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்புக்கு வர வேண்டியது. அந்த தினசரி அவகாசத்தில் பெறும் கல்வி அவர்களுக்கு முழுப்பரீட்சை எழுதும் அளவுக்கு பாடம் கற்பிக்கப் போதுமானதாக இருந்தது. காலையில் ஒரு பேட்ச் வகுப்புக்கு வர வேண்டியது, மாலையில் இன்னொரு பேட்ச். இதனால் 100 பேருக்கு பதில் 200 பேருக்கு ஒரு பள்ளியில் கல்வி அளிக்க முடிந்தது. அதே கட்டிடம், அதே மற்ற வசதிகள். ஆனால் பலன் இரு மடங்குப் பேருக்கு. பிள்ளைகள் வகுப்புக்குச் செல்லாத நேரத்தில் ஏதாவது தொழில் கற்றுக் கொள்ளலாம் என்றுக் திட்டமிடப்பட்டது. பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களிடமே தொழில் கற்றுக் கொள்வதற்காக வைத்திருக்கும் பெற்றோரிடம் தினசரி 3 மணி நேரத்துக்காவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்பது வலியுறுத்தப் பட்டது. முதலில் ஆரம்ப வகுப்புகளுக்கு மட்டும் இத்திட்டம் அமல் செய்வது என்றும், பிறகு படிபடியாக நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இதை விரிவுபடுத்தலாம் என்றும் திட்டமிடப்பட்டது. கிராமங்களில் கல்வி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே இத்திட்டம் சோதனை முறையில் அங்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது.

என்னத் தொழில் கற்பது? இதில் மாணவர்களது பெற்றோர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அப்போதிருந்த ஆசிரியர்கள் எல்லோரும் மக்காலே முறையில் கல்வி கற்று பேனா பிடிக்கும் வேலைகளுக்கே லாயக்காய் இருந்தனர். ஆதாரக் கல்வி அளிக்கவே பணம் இன்றிக் கஷ்டப்பட்ட அரசு கண்டிப்பாகத் தொழில் கல்வியைப் பள்ளிகளில் அளிக்கும் நிலையில் இல்லை. அதற்கான கட்டிட அல்லது வேறு வசதிகள் இல்லவே இல்லை. ராஜாஜியின் எதிர்ப்பார்ப்பு என்னவென்றால், தன் சுயநலத்துக்காகவாவது ஒரு தகப்பன் தன் மகனுக்க்குத் தான் செய்யும் தொழிலில் சிறந்தப் பயிற்சியே அளிப்பான் என்பதே.

உண்மையை கூறப்போனால் இக்கல்வி இருக்கும் வசதிகளை முடிந்த அளவுக்கு எவ்வளவு பேருக்கு அளிக்க முடியுமோ அத்தனைப் பேருக்கு அளிப்பது என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே கூறியது போல எந்தத் தொழிலைக் கற்பதென்பது பெற்றோர்கள் விருப்பத்துக்கே விடப்பட்டது. தச்சன் மகன் வேறு தொழில் கற்கலாம் அல்லது ஒன்றுமே கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக யாரும் சம்பந்தப்பட்டக் குழந்தைகளை தண்டிக்கப்போவதில்லை. அத்தொழில்களில் தேர்வும் கிடையாது. அந்தத் தரத்தில் ஒரு பள்ளியால் நிச்சயம் பயிற்சி தந்திருக்க முடியாது.

ஒரு தொழில் கற்றுக் கொண்டால் கைகளுக்கு ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறன் வரும். மூன்று மணி நேரக் கல்வியே பரீட்சைகளில் தேர்வு பெறப் போதுமானது. ஆகவே மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு எழுதவோ மேற்படிப்பு படிக்கவோ எந்த விதத் தடையும் இல்லை.

நிறையப் பேருக்குத் தெரியாத இன்னொரு விஷ்யம். 1953 - 54 கல்வியாண்டில் இம்முறை நிஜமாக அமலுக்கு வந்தது. பல ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர் வருகையில் முன்னேற்றத்தைப் பார்த்தனர். கூடிய சீக்கிரம் நகரங்களுக்கும் இம்முறையை விஸ்தரிக்க வேண்டும் என்றக் கோரிக்கையும் எழுந்தது.

21 ஜூன் 1953 கல்கி இதழில் கிண்டி பொறியியல் கல்லூரியின் அப்போதைய முதல்வர் கர்னல் எஸ். பால் கூறியதன் சாரம். இக்கல்விமுறை அவர் மாணவராக இருந்தப்போது யாழ்ப்பாணத்தில் காரை நகரில் செயல்பட்டது. கல்வியின் தரம் அருமை. பால் அவர்கள் சக்கிலிய மற்றும் தச்சுத் தொழிலில்களில் தேர்ச்சி பெற்றார். அது அவர் மேல் படிப்புக்குச் செல்லத் தடையாக இல்லை. சொல்லப் போனால் அவர் தன்னம்பிக்கை அதிகமானது. இவ்வாறு கூறியது பொறியியல் கல்லூரி முதல்வர்.

சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 1953-ல் பள்ளி செல்லும் வயதில் 80 லட்சம் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 70 லட்சம் பேர் கிராமத்தில். கிராமத்துக் குழந்தைகளில் 38.5 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை.மீதி 32.5 லட்சம் குழந்தைகளில் 10 லட்சம் பேர் மட்டும் கல்வியைத் தொடர்கின்றனர். மற்றவர்கள் படிப்பைப் பாதியில் விடுபவர்கள். ஆக 60 லட்சம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு எப்படியாவது பகுதி நேர படிப்பையாவதுக் கொடுப்பதே ராஜாஜி அவர்களின் புதுக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.

எப்படியும் தங்கள் தொழிலில் தங்களுக்கு உதவியாக இருப்பதற்காகக் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் பெற்றோர்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் சாதகமான மனநிலைக்கு வருவதற்காகவே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இம்முறையை ராஜாஜி அவர்கள் எங்கிருந்தோ திடீரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது.

கையில் ஒரு தொழில் இருப்பது எவ்வளவு சுயநம்பிக்கைத் தரும் என்பதை உணர நிஜமாகவே ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக் கொண்டால் புரிந்து கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் கூறிய கல்விமுறை சரியானபடி நிறைவேற்றப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பார்ப்போம். மக்காலே கல்வி முறையால் நடந்த விபரீதங்கள் இல்லாமல் போயிருக்கும்.

அவை என்ன? தகப்பன் நெற்றி வேர்வை நிலத்தில் விழப்பாடுபடுவான். பிள்ளை ஏட்டுக் கல்வி படிப்பான். டிகிரியும் வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்? அத்தனைப் பேருக்கும் வெள்ளைக் காலர் வேலைக்கு எங்குப் போவது? படித்த மாணவர்களும் கையில் அழுக்கு ஏறும் தந்தையின் தொழிலைச் செய்யும் மனநிலையில் இல்லை. மகன் பந்தாவாக ஊரைச் சுற்றி வர, தகப்பன் உடல்நிலை பாதிக்கப்படுவதுதான் மிச்சம். ராஜாஜி கூறிய முறையில் தொழிலுக்கு மரியாதை வந்திருக்கும். ஏட்டுப் படிப்பும் படித்ததால் அவர்களை யாரும் சுலபத்தில் ஏமாற்றியிருக்க முடியாது. வேலை கிடைக்கிறதோ இல்லையோ கைவசம் தொழில் இருக்கவே இருக்கிறது. இந்த அருமையானக் கல்வி முறைக்குத்தான் குலக்கல்வி என்றுப் பெயரிட்டு கூக்குரலிட்டனர். பின்னால் வந்தத் தலைவர்கள் அதை அவசரம் அவசரமாகக் கைவிட்டதுதான் பெரிய சோகம்.

ராஜாஜி அவர்கள் உடல்நிலைக் காரணமாக ஏப்ரல் 1954 - ல் ராஜினாமா செய்தார். எல்லோரும் கூறுவது போல கையெழுத்து வேட்டை காரணமாக இல்லை. அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/05/2006

திடீர் போனஸ்

இன்று பிற்பகல் ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. எதேச்சையாக கே டிவி பக்கம் செல்ல, அங்கு தில்லானா மோகனாம்பாள் படம் (இப்பதிவை போடும்போதும் அது ஓடிக் கொண்டிருக்கிறது). எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பது நினைவிலில்லை. இன்னும் அலுக்கவில்லை.

சமீபத்தில் ஐம்பதுகளில் இது ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது படித்துள்ளேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தது அக்கதை. சமீபத்தில் புத்தகத்தையும் வாங்கி இன்னொரு முறை படித்தேன். இரண்டு வால்யூம்கள். அதை இப்போது நிதானமாகப் படிக்கும்போதுதான் பல விஷயங்கள் புதிதாகப் புலப்பட்டன. முதல் விஷயம் திரைக்கதை. சாதாரணமாக பிரசித்தி பெற்ற புத்தகங்கள் திரைப்படமாக்கப்படும்போது அவை சரியாக வெற்றி பெறுவதில்லை. காரணம் திரையாக்கம் கதையைப் படித்த ரசிகர்களின் கற்பனையுடன் ஒத்துப் போவதில்லை. ஆனால் தில்லானா மோகனாம்பாள் ஒரு விதி விலக்கு.

மூன்றரை மணி நேரத்துக்குள் அடக்கி ஓட்டியிருக்கிறார்கள். சுவையானவற்றை எடுத்து பூத்தொடுத்திருக்கிறார்கள். மூலக் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் ஆலோசனை இதில் பெறப்பட்டது என அறிகிறேன்.

அதே நேரத்தில் மூலக் கதையிலிருந்த பல கதாபாத்திரங்கள் திரைக்கதையில் சேர்க்கப்படவில்லை. அவற்றில் பல மிக சுவாரசியமானவை. உதாரணத்துக்கு காரைக்கால் நடேசனை சொல்லலாம். இப்போது வெகு நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை இங்கே கூற ஆசைப்படுவேன். அதாவது, இக்கதையை மெகா சீரியலாக எடுக்க முடியுமா என்று. ஏற்கனவே ஜாவர் சீதாராமனின் "பணம் பெண் பாசம்" திரைக்கதையாக முன்னரே எடுக்கப் பட்டிருந்தாலும் சீரியலாகவும் வந்து சோபித்தது என்பதை மனத்தில் கொண்டால், நான் கொண்டிருப்பது வீணாசையல்ல என்றுதான் கூற வேண்டும்.

இது வெற்றிகரமாக நடைபெற என்னென்ன தேவை? இன்னொரு நல்ல திரைக்கதை ஆசிரியர். எவ்வளவு எபிசோடுகள் என்ற நிர்ணயம். நல்ல நடிக நடிகையர் தேர்வு. இவற்றில் முதல் இரண்டும் என் சக்திக்கப்பாற்பட்டவை. நல்ல நடிக நடிகையரைப் பட்டியலிடுவதே நான் செய்யக் கூடிய காரியம். அவ்வாறே செய்வேன். ஒரு பாத்திரத்திற்கு ஒன்றுக்கு மேல் கலைஞர்களைக் குறிப்பிட்டிருப்பது ஒரு சாய்ஸாகத்தான்.

ஷண்முகசுந்தரம்: பிரபு, சூர்யா, விக்ரம்
மோகனா: ரேவதி, மீனா
பாலையா: ஜூனியர் பாலையா
சிங்கபுரம் மைனர்: ராதா ரவி
ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
மதன்பூர் மகாராஜா: நம்பியார்
வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
வடிவாம்பாள்: வடிவுக்கரசி

எனக்கு இப்போதைக்கு தோன்றியவை அவ்வளவே. எல்லோரும் பெரிய திரை நடிகர்கள் என நினைக்காதீர்கள். அவர்களில் பலர் சின்னத் திரையிலும் வந்து விட்டார்கள்.

நம் சக வலைப்பதிவாளர்கள் என்ன கூறுகிறீர்கள்? உங்களுக்கு பிடித்த லிஸ்டுகளையும் போடுங்கள். விவாதிப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/03/2006

மினி வலைப்பதிவாளர் சந்திப்பு

சில நாட்களுக்கு முன்னால் பினாத்தல் சுரேஷ் என் வீட்டிற்கு வந்திருந்தார். மனிதர் 35 நாட்கள் லீவில் வந்திருக்கிறார். பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். பிறகு அங்கிருந்தே என்றென்றும் அன்புடன் பாலாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

இன்று மாலை ரோசா வசந்த், ரஜினி ராம்கி, பினாத்தலார், உருப்படாதது நாராயணன், என்றென்றும் அன்புடன் பாலா, ஐகாரஸ் பிரகாஷ் மற்றும் நான் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் சந்திக்குமாறு பாலா ஒரு ப்ரொக்ராம் ஆர்கனைஸ் செய்தார். மாலை 6.30 க்கு மீட்டிங் ஆரம்பிக்க வேண்டும். என் கார் டிரைவ் இன்னில் நுழையும்போது மணி 6.20. பாலாவும் பினாத்தலாரும் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து ஐகாரஸ் பிரகாஷ் வந்து சேர்ந்தார். செல் பேசியில் விசாரித்ததில் ரஜினி ராம்கியும் ரோசாவும் தாங்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினர். அதற்குள் மணி 7 ஆகி விட, முதலிலேயே வந்திருந்த நாங்கள் நால்வரும் உள்ளே சென்று டேபிளில் அமர்ந்தோம். போண்டா (வழக்கமான!) மற்றும் சாம்பார் வடை ஆர்டர் செய்தோம். சிறிது நேரத்தில் ராம்கியும் ரோசாவும் ஒரே சமயத்தில் வந்தனர். கடைசியாக வந்தவர் நாராயணன்.

சந்திப்புக்கு எதிர்பாராத இன்னொருவரும் வருகை புரிந்தார். அவர்தான் திருவாளர் மழையார். அவரவர் வாரி சுருட்டிக் கொண்டு உள்ளே மூவ் செய்தோம். சர்வர் பதறிப் போய் வர அவரிடம் நாங்கள் உட்காரப் போகும் டேபிளைக் காண்பித்தேன். புதிதாக வந்தவர்களுக்கு ஆர்டர் செய்த போது அவர்களுக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நானும் பாலாவும் எங்க்களுக்காக ஆளுக்கொரு பூரி செட் ஆர்டர் செய்து கொண்டோம்!

பேச்சு பல விஷயங்களை நோக்கிச் சென்றது. தேன்கூடு போட்டியில் தான் பெற்ற அனுபவத்தை பினாத்தலார் கூறினார். நாராயணன் அவர்கள் சிவாஜி படத்தில் கமல் கெஸ்ட் ரோல் செய்வதாக ஹாட் நியூஸ் தந்தார். ரோசா வசந்த சாரு நிவேதிதாவுடன் தன் அனுபவத்தைக் கூறினார். கமல் படங்கள் டிஸ்கஷனில் மைக்கேல் மதன காமராஜன் எல்லோருடைய ஏகோபித்த ஓட் பெற்று சிறந்தப் படமாக அறிவிக்கப் பட்டது.

ரஜினி ராம்கி எழுதிய இரு புத்தகங்கள் பற்றியும் பேசினோம். இன்னும் அவற்றை நான் படிக்கவில்லை, படிக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.

கமலைப் பற்றிப் பேசும்போது, நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் எழுதிய கமல் பதிவு பற்றி பேச ஆரம்பித்து, அப்பதிவால் பிரபலமானவரைப் பற்றி பேச ஆரம்பித்து, இது காரியத்துக்காகாத வேலை என்று தீர்மானம் செய்து அந்த நூலிழையை முடித்துக் கொண்டோம்.

வெளியில் மழை தூற ஆரம்பித்தது. 9 மணியளவில் நான் முதலில் விடை பெற்றுக் கொண்டு செல்ல, என் கார் என்னை வீட்டில் கொண்டு விட்ட 5 நிமிடத்துக்குள் பாலா தன் வீட்டிலிருந்து ஃபோன் செய்தார். இந்த சந்திப்புக்கானப் பதிவை போடுவேனா என்று கேட்க, நான் ஓம் என்றேன். இதோ அந்தப் பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது