8/12/2008

வெறுப்பின் அடிப்படையில் மதப்பிரசாரம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் என்னும் தலைப்பில் வந்துள்ளப் பதிவை அனைவரும் கூர்ந்து படிக்க வேண்டும்.

அதாவது இந்துமதம் என்றே ஒன்றும் இல்லையாம். எல்லாமே கிறித்துவ மதம்தானாம். அதுவும் புனித தோமையார் நிறுவிய கிறித்துவ மதத்தைத்தான் திரித்து இவ்வாறு சைவம், வைணவம் என்றெல்லாம் ஆக்கினார்களாம். அக்கட்டுரையில் காணப்படும் சில கருத்துக்கள். (அடைப்புக் குறிகளுக்குள் எனது எதிர்வினைகள் தடித்த சாய்வு எழுத்தில்).

முதலில் ஒரு டிஸ்கி. கீழே உள்ள கருத்துக்களை பற்றி ஜெயமோகனுக்கும் எனக்கும் ஒரே அபிப்பிராயமே; அதாவது அவற்றை முழுமையாகவே நிராகரிக்கிறோம். அதே சமயம் தடித்த சாய்வெழுத்தில் எனது எதிர்வினைகள் என்னுடையவை மட்டுமே. இந்த உளறல் கருத்துக்களை அசாத்திய பொறுமையுடனே அவர் படித்துள்ளார். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை கிடையாது. இப்போது அவற்றில் சில கருத்துகளுக்கு போவோமா? அத்தனை கருத்துகளையும் பொறுமையாக ஜெயமோகன் அவர்களது பதிவில் படிக்க இயலுபவர்களுக்கு பொறுமை திலகம் எனப் பட்டம் தரலாம்.

"இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.

அதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால் அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது".

(ஏன் தமிழ் மொழியை விட்டுவிட்டார்கள்? விட்டால் அதுவும் அரேமிக் மொழி என்று கூற வேண்டியதுதானே? மாட்டார்கள், ஏனெனில் அதை லத்தீன மொழி என கூறிக்கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள். அப்படி சொன்னால் அவர்களே சிரிப்பார்கள் போலும்).

"புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சம்ஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்".

(நான் சிறுவனாக இருந்தபோது, என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் என்னை நட்பு முறையில் கலாய்க்கவே கூறிய சில கருத்துகள்: "தெலுங்கு மொழிதான் முதல் மொழி. கிருஷ்ணதேவராயர்தான் தமிழகத்துக்குக் மன்னர். சேரக் கிராமம், சோழக் கிராமம் மற்றும் பாண்டியக் கிராமம் என்ற மூன்று கிராமங்கள் மட்டுமே தமிழகம். தனது ஆஸ்தான கவி தெனாலிராமனை வைத்து திருக்குறள், சிலப்பதிகாரம், ஆத்திச்சுவடி ஆகிய நூல்களை எழுதி எல்லாவற்றையும் ஒட்டக்கூத்தர் என்ற ஒருவரிடம் கொடுத்தார் அவர்". இவையாவது தமாஷ் என்ற ரூபத்தில் கூறப்பட்டன, அவ்வாறே புரிந்தும் கொள்ளப்பட்டன. ஆனால் கிறித்துவம் பற்றிய கருத்துகள் இவ்வளவு உளறலாக இருப்பினும் அதையும் நம்பும் மனிதர் உள்ளனரே. ஒன்று மட்டும் நிச்சயம் பார்ப்பன எதிர்ப்புக்கு தேவையான ஐடியாக்கள் எங்கிருந்து வந்தன என்பதில் இப்போது ஐயமே வேண்டாம்).

"தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனித தாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்ட வடிவம். இன்று இந்துக்கள் சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே. இந்து என்ற ஒரு மதம் இல்லை. அப்படி ஒருமதம் இருப்பதாக எந்த ஒரு அறிஞருமே சொன்னதில்லை. அது ஆரிய பிராமணர்கள் சாதிபேதங்களை உருவாக்கும்பொருட்டு உருவாக்கிய பொய். ஆகவே சைவம் வைணவம் என்ற இரு மதங்களைச் சேர்ந்த இந்துக்களை ஆதிகிறித்தவர்கள் அல்லது தாமஸ்கிறிஸ்டியன்ஸ் என்றுதான் சொல்லவேண்டும்". (அப்படிப் போடு அருவாளை)

"சிந்துவெளியில் உள்ள நினைவுக்கல் வழிபாடானது பைபிள் கூறும் பெத்தேல் வழிபாடே ஆகும். கல்லில் எண்ணை ஊற்றி வழிபடுவது கிறித்தவத்தில் இருந்து வந்தது. பெத்தேலில் யாக்கோபால் நினைவுக்கல்லின் மேல் எண்ணை ஊற்றப்பட்டதை நினைவுகூரும்வகையில் ‘எண்ணை ஊற்றப்பட்டவர்’ என்ற அர்த்தம் வரும் சொல்லாகிய கிறிஸ்து என்பதால்தான் ஏசு அறியப்படுகிறார். அந்த வழிபாட்டை நாம் திராவிட [தமிழ்] வழிபாட்டில் காண்கிரோம்.ஆகவே திராவிட சமயம் என்பது கிறித்தவமே". (ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் சாத்துவதற்கும் ஏதேனும் கிறித்துவ ஆதாரம் வைத்திருப்பார்களே)

"இயேசுகிறிஸ்து சாவைக்கொடுக்கும் சாத்தானை வென்று உயிர்த்தெழுந்து சாவின்மீது அடைந்த வெற்றியைத்தான் சற்றே உருமாறிய வடிவத்தில் சுடுகாட்டில் முயலகன் மீது சிவன் ஏறி ஆடும் நடனத்தில் காண்கிறோம். பெத்தேலின் நினைவுக்கல்லின் நினைவால் கிறிஸ்து ‘உயிருள்ள கல்’ என்று சொல்லப்பட்டார். அதிலிருந்து சிவலிங்க வழிபாடு தோன்றியிருக்கலாம். சிவலிங்க வழிபாட்டிலிருந்து சிவகுடும்ப வழிபாடு உருவானது. இது திருக்குடும்பம் என்ற கிறித்தவ கருத்தாக்கத்தின் விளைவேயாகும். பிதா சிவன் ஆகவும் சக்தி பரிசுத்த ஆவி ஆகவும் ஏசு முருகன் ஆகவும் உருமாற்றம் பெற்றார்கள்". (சிவலிங்கத்துக்கு வேறு அர்த்தம் தந்தார்களே, அது இல்லையா இப்போ)?

"கிறித்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்றநிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆகியது. உலகைப்படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாக தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறித்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப்பட்டன". (ஆகா என்ன தெய்வீக சிந்தனை)!

"இவ்வாறு சிவ வழிபாட்டில் பலதெய்வக் கோட்பாடு ஆரியர்களான பிராமண அன்னியர்களால் உருவாக்கப்பட்டது. அதை மீண்டும் தூய கிறித்தவ அடிப்படைகளின்படி திருத்தி ஓரு தெய்வக் கோட்பாட்டை நோக்கிக் கொண்டுவர எழுதப்பட்ட நூலே சிவஞானபோதம் ஆகும். திருமந்திரம் ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என்று சொல்வது புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட இந்த தூய கிறித்தவ கருத்தையே. அன்பு என்பது கிறித்தவக் கருத்து". (ஆமாமாம், இந்த அன்புக் கருத்தைப் பரப்பவே அவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பழங்குடியினரை அன்புடன் சிதையில் வைத்து உயிருடன் கொளுத்தினர்).

"தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் பௌத்தத்தில் மகாயானம் என்ற பிரிவு உருவானது. இதன் பிறகே பௌத்தத்தில் தத்துவ சிந்தனைகள் உருவாயின. புத்தரை ஏசுவைப்போன்ற ஒரு கடவுளாக ஆக்கினார்கள். புத்த மைத்ரேயர் என்ற கடவுள் உருவாக்கப்பட்டார். அவர் ஏசுவைப்போன்றே ஊழி முடிவில் பிறந்து வருவார் என்று சொல்லப்பட்டது. மகாயான பௌத்தத்தில் இருந்துதான் பௌத்த தத்துவங்கள் உருவாக்கி சீனாவுக்கு சென்றன. ஜென் பௌத்தம் அவ்வாறுதான் உருவாயிற்று

அதேபோல தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் சமணத்தில் சுவேதாம்பரம் என்ற பிரிவு உருவாகியது. இதன் பின்னரே சமண மதத்திலும் தத்துவ சிந்தனை உருவாகியது. சமணர்கள் கிறித்துவ தீர்க்கதரிசிகளைப் பின்பற்றி தங்கள் தீர்த்தங்காரர்களை கற்பனைசெய்து அவர்களை வழிபட ஆரம்பித்தார்கள்". (சமண புத்த மதங்களும் அவ்வளவுதானா, கண்ணைக் கட்டுதப்பா).

"வேதங்களில் ஆரியர்கள் கிறித்தவக் கோட்பாடுகளை திருடி எழுதிவைத்திருக்கிறார்கள். பிரஜாபதி என்று வேதங்கள் சொல்வது கிறிஸ்துவையே.

திருக்குறள் தாமஸ் கற்பித்த ஆதிகிறித்தவக் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முழுமையான கிறித்தவ நூல் ஆகும். திருக்குறளின் பாயிரம் கிறித்தவர்களின் விசுவாசப் பிரமாணமே. அதேபோல சிவஞானபோதமும் ஒரு பற்றுறுதிப்பிரமாணமே.

இவ்வாறு இந்தியசிந்தனைகள் அனைத்தையுமே உருவாக்கிய தாமஸ் பற்றி இந்தியநூல்களில் எதிலுமே எந்தக்குறிப்பும் இல்லை. காரணம் ஆரிய பிராமணர்களின் சதியே". (ஒருவன் மரம் வெட்டும் வேலைக்கு வந்தானாம். அவனது முன்னனுபவம் பற்றி கேட்கப்பட்டபோது சகாரா பாலைவனத்தில் மரம் வெட்டியதாகக் கூறினானாம். அங்கு மரமே இல்லையென்றதற்கு, "இப்போது இல்லை" எனக் கூறுங்கள் என்றானாம். சக்கரவர்த்தி ஆடையின்றி இருக்கிறார் என்பதை கூறும் குழந்தைகள் இங்கு யாருமே இல்லை என நினைத்தார்களா இந்த புருடாக்களை எழுதியவர்கள்)?.

"பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தூய கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்தது. இந்த முழுமையான கிறித்தவத்தின் அடிப்படையில் திரிபு நிலையில் உள்ள் தமிழர்களின் ஆன்மவியலை நாம் திருத்தியமைக்க வேண்டும்".

இப்போது ஜெயமோகன் அவர்கள் மேலே கூறுவது:
இக்கருத்துக்களை நாம் டாக்டர் தேவகலா எம்.ஏ எம்.·பில் பி.எச்.டி எழுதிய ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ என்ற தமிழ் நூலில் தெளிவாகவும் விரிவாகவும் காண்கிறோம். இது தமிழ் கிறித்தவ ஊழியருக்கான சுருக்கக் கையேடு. இது ஆய்வளர் தெய்வநாயகம் அவர்களால் செயப்பட்ட ஆய்வுமுடிவுகளை ஊழியர்களுக்குக் கொண்டுசெல்லும்பொருட்டு அவரது மகளால் உருவாக்கப்பட்டது

கிட்டத்தட்ட ஒரு அதிகாரபூர்வ கையேடு இது. சென்னை -மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேரயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் இதற்கு அளித்த முன்னுரையில் ‘இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே என்பதை டாக்டர் தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலைநாட்டியிருக்கிறார்’ என்று சொல்லி ‘சைவர் வைணவர் அனைவரும் மறைமுகக் கிறித்தவர்களே’ என்று சொல்கிறார். இந்தக் கருத்தை பிரச்சாரம்செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் மயிலை தாமஸ் ஆலயத்தில் நிகழும் என்றும் அதில் பங்குபெறுவோருக்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்கிறார்.

இந்திய சுவிசேஷத் திருச்சபை பேராயர் டாக்டர் எஸ்றா சற்குணம், சி.எஸ்.ஐ. தென்னை திருமண்டல பேராயர் அம்மா மறைதிரு ஜோன் தேவசகாயம் அவர்கள், சென்னை அப்போஸ்தல தலைமைபோதகர் பாஸ்டஎ எம்.கெ.சாம் சுந்தரம் அவர்கள், குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி முதல்வர் மறைதிரு மாணி சாக்கோ அவர்கள் ஆகியோர் இந்நூலின் ‘நிரூபிக்கப்பட்ட’ கருத்துக்களை வழிமொழிந்து இந்திய சிந்தனைகள் அனைத்துமே தாமஸிடமிருந்து உருவானவையே என்று சொல்கிறார்கள்.

ஆரியர்கள் என்று ஒரு இனம் இல்லை என்று டாக்டர் தேவகலா அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா மீது படைஎடுத்து வந்த பாரசீகர், கிரேக்கர்,சகர், குஷானர், ஹூணர் ஆகியோர் கிபி ஏழாம் நூற்றாண்டில் மௌண்ட் அபு என்ற இடத்தில் கூடி அப்போது இருந்த திராவிட அரசனான ஹர்ஷவர்தனனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தார்கள். அவர்கள் தாங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தமையால் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் உருவாக்கிய நீதியே மனுநீதி

மனுநீதியின்படி ஆரியர் உயர்வானவர்கள். திராவிடர்கள் அவர்களுக்கு அடிமைகள். அப்படி அடிமையாக திராவிடர்கள் இருக்க வேண்டுமென்று கூறுவதே இந்துத்துவம் ஆகும் என்கிறார் டாக்டர் தேவகலா. இந்தக்கருத்தை வலியுறுத்துபவர்கள் பிராமணர்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள் பத்துபாட்டு எட்டுத்ததொகை முதலியவை கிபி இரண்டாம் நூற்றாண்டில் ,அதாவது தாமஸ் வந்தபின் நூறுவருடம் கழித்து உருவானவை என்று டாக்டர் தேவகலா சொல்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதன்- அவ்வை என்று சொல்லப்படுகிறவர்கள் ஆதாம் ஏவாள்தான் என்கிறார். தமிழ்ச் சொல்லாகிய அன்பு என்பதில் கிறித்தவத்துக்கே உரிய அன்பு என்ற நற்குணத்தின் சில பண்புக்கூறுகள் காணப்படுகின்றன என்பதை ஒரு முக்கிய ஆதாரமாக தேவகலா குறிப்பிடுகிறார். ஏறத்தாழ 300 பக்க அளவுள்ள இந்த நூல் இத்தகைய விரிவான ஆய்வுகளை முன்வைக்கிறது.

இது ஒரு தனிநபரின் ஆய்வோ, அல்லது சிறு குழுவின் கருத்துக்களோ அல்ல. இதற்கு தமிழகத்தின் செல்வாக்குள்ள எல்லா கிறித்தவ சபைகளும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சென்ற பத்து வருடங்களில் இக்கருத்தை பிரச்சாரம்செய்யும் ஏராளமான ஆங்கில தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பலநூறு துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி கிறித்தவ ஆலயங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகக் கிறித்தவர்களில் உயர்கல்வி கற்றவர்கள் பழந்தமிழ் ஆய்வுசெய்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டை ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை என்றே எண்ணுகிறார்கள். உதாரணமாக குமரிமாட்டத்தின் பிரபல அறிவுஜீவியும் நவின இலக்கிய வாசகருமான பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல் இக்கருத்தை ஒரு நூலில் வழிமொழிகிறார்! கிறித்தவப் பள்ளிகளில் இந்த வரலாற்றை அதிகாரபூர்வமற்ற வகையில் சொல்லியும் கொடுக்கிறார்கள்.

இந்த நூல்களை முழுக்க எனக்கு திரட்டி அளித்தவர் தக்கலையைச் சேர்ந்த லுத்தரன் சபையைச் சேர்ந்த கிறித்தவ ஊழியர் ஒருவர். நான் இவற்றைப் படித்தால் என்னுடைய வரலாற்றுப் பார்வையே மாறிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் படிக்க மாட்டேன் என்று சவால் விட்டார். படிப்பேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் எனக்கு அளித்த பிற நூல்கள் இவை:

1. India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.

2. Hindu Religion is the offshoot of St.ThomaS Dravidian Christianity- By Dr.Devakala [ Meypporul Publications 278, Konnur High Road,ayanapuram Chennai 600023]

3.Love Hindus. By M.Christopher MA LLB, Beniah Kallukatti, Kuzhithurai K K dist Tamilnadu 629163

4 தமிழர் சமயத்தை விடுவிக்கப்போவது யார்? பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எம் ஏ.பி எச் டி [மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023 ]

மற்றும் பத்து துண்டுபிரசுரங்கள். பெரும்பாலும் ஒரே ஆதாரங்கள் ஒரே வரிகளினால் ஆனவை இவை. இந்நூல்களின் பின்னட்டைகளில் ஏராளமான பிற நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
***
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.

அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்பைப் பற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.

இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.

ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்கச்செய்யும்போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்.

இந்த வரலாற்று மறு உருவாக்கத்தில் பொதுவாக இரு கூறுகள் செயல்படும். இவற்றை மிகமேலோட்டமாக சமகால ஆப்ரிக்க ஆசிய வரலாறுகளை அணுகினாலே காணமுடியும். ஒன்று அந்நாடுகளில் பண்பாடு, சிந்தனை, மெய்யியல் எதுவும் பூர்வீகமாக இருந்ததில்லை, கிறித்தவம் மூலமே அவை கொண்டுவரப்பட்டன என்று நிறுவுவது. மதம்மாறியவர்கள் அந்த அப்பழைய காலத்தை ‘இருண்டகாலம்’ என்று சொல்லத்தலைப்படுவார்கள்.

இரண்டு அந்த தேசத்தை இரு பெரும் இனப்பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒன்று இன்னொன்றை முழுமையாக அடக்கி ஆண்டது, அந்த நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும் அந்த அடக்கியாண்ட இனம்தான் காரணம் என்று நிறுவுவது. பலநாடுகளில் அப்படி குறிப்பிடப்படும் இரு இனங்களிலும் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளக்கூட உரிமை இருக்கும்! உதாரணம் ரவாண்டாவின் டுட்சி-ஹூடு இனங்கள். நைஜீரிஒயா, சியலா லியோன் போல ஆப்ரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் மாற்றமே இல்லாமல் இதே வரலாற்றுபாணியை கிறித்தவ மதப்பரப்பாளர்கள் கடைபிடித்திருப்பதைக் காணலாம். அந்த வெறுப்புகள் பெரும் இனக்கலவரங்களாக வெடித்து ரத்த ஆறை ஓடவிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது, அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. ஆரியர்களையும் பிராமணர்களையும் கிட்டத்தட்ட ரத்தவெறிகொண்ட பேய்களைப்போல சித்தரிக்கின்றன இந்த நூல்கள். இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.

ஆகவே இந்தக் கருதுகோள் ஏற்கப்பட்டது. பெரும் நிதியுதவியுடன் முதல் ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான்சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற 2005 ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. நியூயார்க்கில் மதப்பரப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் சுந்தர் தேவப்பிரசாத் அதற்கான அமெரிக்க தொடர்பாளர்

கருத்தரங்க மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரியின் வாழ்த்துச்செய்தி உள்ளது. செனெட்டர் ஹிலாரி கிளிண்டனின் வாழ்த்துச்செய்தி, ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க் அவர்களின் வாழ்த்துச்செய்தி, நியூயார்க் மேயரின் வாழ்த்துச்செய்தி, கவர்னர் ஜார்ஜ் படாகியின் வாழ்த்துச்செய்தி ஆகியவை உள்ளன.ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெடுத்தார். வழக்கம்போல இந்தியாவின் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபையில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் உள்ளன. மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்தி போன்றவை உள்ளன

அத்துடன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்த்துச்செய்தியும் உள்ளது. தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப்பழமையில் பெருமைகொள்வதாக சொல்லும் முதல்வர் அது ஒரு மிக அறிவார்ந்த நிகழ்வாக இருக்கும் என்று வாழ்த்துகிறார். (அதானே பார்த்தேன், இந்துக்களை திட்டவேண்டுமென்றே அவதாரம் எடுத்தவராயிற்றே, மாண்புமிகு முதல்வர்)!

மாநாட்டின் நோக்கம் முதலிலேயே ஜான் சாமுவேலால் தெளிவுறச் சொல்லப்பட்டுவிடுகிறது. தாமஸ்கிறித்தவமே இந்துமதம் என்றும் அதை ஆரியபிராமணர் அழித்தார்கள் என்பதும்தான் அது. தாமஸ் பற்றிய ஒரு துதியுடன் மலர் ஆரம்பிக்கிறது. குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் சைவசித்தாந்தம் இந்துமதம் போன்ற தலைப்புகளில் மீண்டும் மீண்டும் தெய்வநயகமும் தேவகலாவும் கட்டுரைகள் சமர்ப்ப்பித்திருப்பதைக் காணலாம். அத்துடன் பெரும்பாலான கட்டுரைகள் ஒரே குழுவினரால் உருவாக்கப்பட்டவைபோல ஒரேவகையான திரிப்புகள் ஒரேவகையான சொற்றொடர்கள் மையக்கருத்துக்களுடன் காணப்படுகின்றன.

இந்த மாநாட்டில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ‘Early Christianity in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தமிழின் எல்லா பண்டைய இலக்கியங்களும் கிறித்தவ தாக்கத்தால் உருவானவையே என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ஆர்ச் பிஷப் மயிலை-சென்னை ஏ.எம்.சின்னப்பா தொடங்கி ஏறத்தாழ எல்லா சபைத்தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் கருத்தரங்கு பெரும் வெற்றிபெற்று இந்தியவரலாற்றைப்பற்றிய மறுக்க முடியாத கருத்துக்களை நிறுவி விட்டது என்று சொல்லும் ஜான் சாமுவேல் அதை மேலும் விரிவுபடுத்தவே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிடுகிறார்.

டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன் போல தமிழில்பரவலாக அறியப்படும் கிறித்தவ சிந்தனையாளர்கள் அனேகமாக அனைவருமே இந்த அரங்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லா கருத்துக்களும் ஒரே சாரம் கொண்டவை. ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறார்.

இப்போது இந்த கருத்தரங்குகளின் நீட்சியாக ‘தமிழர் சமய உலக முதல் மாநாடு’ 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட அருட்பணி மையத்தில் [ரோஸரி சர்ச் சாலை சாந்தோம், சென்னை 600004] நடக்கவிருக்கிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராயர் முனைவர் எ.எம்.சின்னப்பா [சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம். சாந்தோம்.சென்னை] முனைவர் மு.தெய்வநாயகம் நிறுவனர் உலக தமிழர் ஆன்மவியல் இயக்கம் சென்னை. துணைஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், முனைவர் தெ.தேவகலா அமைப்பாளர் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்.

இவ்வரங்கின் கோஷமாக முன்வைக்கப்படுவதை அதன் அறிவிப்பு இதழில் காண முடிகிறது. ‘ஓவ்வொருவரும் தன்மான உணர்வுடன் பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் இந்துத்துவாவின் பிடியில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவனாக தன்னைக் கூறாமல் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவன் என்று அறிவித்து இந்துத்துவாவின் பிடியில் இருந்து விடுபட்டு தன்னுடைய பழைய சிறப்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’

அழைப்பிதழின் அட்டையில் உலக உருண்டைக்கு மேல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ‘என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழிலேயே மாநாட்டில் பேசுபொருட்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தமிழர் சமயம் என்பது தோமாகிறித்தவமே என்பதுதான் அது.

இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏன் செய்ய மாட்டார்கள், துட்டு கொழுத்து கிடக்கிறதே)!

****

தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல் , மிக எளிமையான தர்க்கங்களுடன் , கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவேண்டும் என்றால் இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்புபலம்தான். ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் மூளையில் உதித்த இந்தக் கரு இப்போது பலகோடி ரூபாய் புரட்டும் சக்தியுடைய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் அறிவுஜீவிகளில் பணத்துக்காகப் பேசாதவர்கள் மிகச்சிலரே.

இப்போதே அ.மார்க்ஸ் இந்தக் கருத்தரங்கில் பேசவிருப்பதாக எனக்கு இவ்விதழ்களை அளித்தவர் சொன்னார். அ.மார்க்ஸ் அவ்வளவு எளிதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரும் தமிழில் புகழ்பெற்ற அறிவுஜீவிகளான எஸ்.வி.ராஜதுரை, தொ.பரமசிவன், ஞானி, தமிழவன், குமரிமைந்தன் போன்றவர்களை சாதாரணமாக இந்த அமைப்பு திரட்டிவிடமுடியும். அவர்களை உள்ளே இழுக்கவேண்டிய இடைவெளிகளை இந்த கருத்தமைப்பு அதற்கான தந்திரங்களுடன் உள்ளே விட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்ச்சூழலில் பிரபலமாக உள்ள கருத்துக்களை எடுத்து சற்றே திரித்து தோமா வரை கொண்டுசெல்வது இதன் வழி.

உதாரணமாக இந்தியசிந்தனை முழுக்கவே குமரிக்கண்டத்தில் இருந்து வந்தது என்ற கருத்து குமரிமைந்தனுக்கோ ஞானிக்கோ உவப்பானதுதான். தமிழர்களின் சிந்தனையை ஆரியர் அழித்தார்கள் என்றோ இந்துஞானம் என்ற ஒன்று இல்லை என்றோ சொன்னால் தொ.பரமசிவம் அதை ஏற்றுப்பேசுவார்தான். அவர்களை உள்ளிழுக்கும்படி ஒரு பொதுவான தலைப்பில் ஓர் அரங்கை உருவாக்கி அதில் அவர்கள் தங்கள் இடத்தைமட்டும் பேசிவிட்டுச்செல்ல செய்தால்போதும். இயல்பாக அடுத்தபடிக்கு தெய்வநாயகமும் ஜான்சாமுவேலும் நகர்ந்தால் இவர்கள் பேசாமலிருப்பார்கள்.

மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும். உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சமணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று. 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதை பாருங்கள். (மக்களுக்கு மறதி என்று உண்டல்லவா)?

அதேபோல இந்திய மெய்ஞானம் முழுக்கமுழுக்க கிறித்தவர்களால், இல்லை தன்னந்தனியாக வந்த ஒரே ஒரு கிறித்தவரால், [தாமஸ் தனியாகவே வந்தார் என்கிறார் தெய்வநாயகம்] கொண்டுவரப்பட்டது என்பதும் தமிழ் வரலாறு பற்றிய பல கோட்பாடுகளில் ஒன்றாக ஆகிவிடும். மெல்ல பாடபுத்தகங்களில் இணைக்கவும் படும். அதை மறுப்பவர்களை இந்துத்துவர்கள், பார்ப்பனியர்கள், சாதியவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தி வசைபாட ஆரம்பித்தால் ஐயங்கள்கூட மெல்ல இல்லாமலாகும்

***
உண்மையில் தாமஸ் இந்தியா வந்தாரா? வந்திருக்கலாம். ஆனால் ஓரளவேனும் பொருட்படுத்தும்படியான வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை. இன்றுவரை அவரது வருகை அது ஒரு மதநம்பிக்கையாகவே உள்ளது. தாமஸ் பற்றி பொதுவாகவே அதிகம் தெரியாது. மிகவிரிவான கிறித்தவ ஆய்வுகள் நிகழ்ந்த மேலைச்சூழலில் அவரைப்பற்றி கத்தோலிக்க கலைக்களஞ்சியமே மிகக் குறைவான தகவல்களையே அளிக்கிறது.

பிற்காலத்தில் உருவான ஆக்டா தோமா என்ற சிறு நூலில் சில குறிப்புகள் உள்ளன. அதில் இருந்து அறியக்கூடியவை இவை. தாமஸ் கீழைநாட்டுக்கு மதத்தை பரப்புவதற்காக கிளம்பினார். அலக்ஸான்டிரியாவுக்கு வந்தார். ‘காப்டிக்’ திருச்சபையை நிறுவினார். அவர் ஆப்கானிஸ்தான் [காந்தாரம்] வழியாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவே இயல்பான பாதையாகும். அவர் அங்கே ஒரு மன்னனை மதம் மாற்றினார். கொல்லப்பட்டார். அவரது சடலம் மீண்டும் எடேஸாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவெ நமக்குக் கிடைக்கும் தகவல்.இதுகூட மிகப்பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒன்று.

ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய் நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவியும் மகன் வாசனையும் மதம் மாற்றினார். மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ் பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும் குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது!

நாணய ஆய்வுகளின் படி தாமஸ் வட இந்த்¢யாவுக்கு வந்திருக்கலாமென சில ஆய்வாள்ர்கள் சொல்கிறார்கள். தென்னிந்தியா வந்தமைக்கு எந்த விதமான புறவய ஆதாரமும் இல்லை. அவர் இந்தியாவந்தார் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வாஸ்கோடகாமா முதலியோர் இந்தியா வந்தபோது இங்கே உள்ள கிறித்தவர்களைக் காண விழைந்திருக்கிறார்கள். இங்கெ மலபார் கடற்கரையில் ஒரு சிறு கிறித்தவ சமூகம் இருந்தது.அவர்களை அவர்கள் தாமஸ்கிறித்தவர்களாக அடையாளம் கண்டார்கள்.

ஆனால் அது பாரசீக வணிகர்களால் ஆன ஒரு சிறிய கிறித்தவக் குழுதான். தாமஸ் என்று அவர்கள் சொல்வது ஏழாம் நூற்றாண்டில் மதமாற்றக் குழு ஒன்றை கொண்டுவந்த ‘கானா தோமா’ வையே என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் இன்றும் உள்ள மார்த்தோமா கிறித்தவர்களின் சபையும் பண்பாடும் பெரிதும் அராபியச் சாயல்கொண்டது. காப்டிக் சாயலே அதில் இல்லை. அவர்களின் போப் பாரசீகத்தில் பதவி ஏற்றார் என்று பண்டைக்கால குறிப்புகள் சொல்கின்றன [Cosmas Indicopleustes] ஆனால் அவர்கள் தாமஸால் மதமாற்றம் செய்யபப்ட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை.

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின் தோமா கிறித்தவர்கள் தாங்கள் ஏசுவின் சீடரான தாமசால் மதமாற்றம்செய்யப்பட்டவர்கள் என்று நம்ப ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் ரோமாபுரி கிறித்தவர்களான போர்ச்சுக்கல்காரர்களை எதிர்த்து தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதானால் அந்நிலைபாட்டை அவர்கள் ஏற்றார்கள் என்று சொல்லலாம். மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த சில தேவாலயங்களை தாமஸால் உருவாக்கப்பட்டவை என்று அடையாளம் சொல்வது அவர்களின் வழக்கம்.

சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் மலை தாமஸ் இருந்த இடமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது தாமஸ் அங்கே கற்சிலுவை ஒன்றை உருவாக்கினார் என்று சொல்லி சில கல்வெட்டுகளைக் காட்டுகிறார்கள். தாமஸின் காலத்தில் கிறித்தவ மதத்தில் சிலுவை வழிபாடு வேரூன்றவில்லை என்றும் புனித தாமையர் மலையில் உள்ள சிலுவையில் உள்ள எழுத்துக்கள் மிகவும் காலத்தால் பிந்தியவை என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவ்வெழுத்துக்கள் இன்றுவரை அதிகாரபூர்வ புறவய ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. தாமஸ் தெற்கு அமெரிக்க நாடுகளுக்குச் சென்றதாககூட நம்பிக்கை உள்ளது.

தாமஸின் இந்திய வருகையை பற்றி மேலைநாட்டு ஆய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதை ஒரு மதநம்பிக்கை என்று மட்டுமே கொள்கிறார்கள். பெரும்பாலான மதநம்பிக்கைகள் காலத்தால் பலவாறாக உருமாற்றப்பட்டவை. மொழியில் எவ்வகையிலோ இருந்துகொண்டிருப்பவை.

இந்திய நிலப்பகுதியில் வெளிநாட்டவர்கள் சரித்திரகாலம் முன்பே வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிரேக்கர்களும் ரோமர்களும் வந்திருக்கிறார்கள். அபிசீனியர்களும் அரேபியர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகள் இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பைச் செலுத்தியிருக்கும்? இந்திய நூல்களைப் பார்க்கும்போது புறச்சிந்தனைகளின் பாதிப்பை பெரும்பாலும் காணமுடிவதில்லை. யவனர்கள் தமிழ்நாட்டில் காவலர்களாகவும் வணிகர்களாகவும் சகஜமாகப் புழங்கியிருக்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் எவரது சிந்தனைகளையும் நாம் தமிழிலக்கியத்தில் காணமுடியாது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் ஒழிய.

இதையே சீன சிந்தனைகளுக்கும் சொல்லலாம். நமக்கும் சீனாவுக்குமான உறவு என்பது மிகமிக தொன்மையானது. சீனப்பொருட்கள் இங்கே மிக விரிவாகப் பரவின. நம்முடைய தச்சு சாஸ்திரத்தின் சீனப்பாதிப்பு மிக விரிவானது. இருந்தும் சீனச் சிந்தனைகள் நம் இலக்கியங்கலில் துளியேயும் காணப்படுவதில்லை. உரையாசிரியர் குறிப்புகளில்கூட ஒரு பெயர் இல்லை. ஏன், நமது பண்டைய மொழியில் கிரேக்க,லத்தீன், அராமிக், சீன சொற்கள்கூட இல்லை. மீண்டும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு தேவை.

ஏன்? இரு ஊகங்களைச் செய்யலாம். ஒன்று இங்கே சிந்தனையில் ஒருவகை செவ்வியல்தன்மை நிலவியது. செவ்வியல் எப்போதும் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கும். நுட்பமான வித்தியாசங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும். தமிழிலக்கிய வாசகன் எளிதில் இதைக் கண்டடையலாம். இந்த அம்சம் புறப்பாதிப்பை முழுமையாக உதாசீனம் செய்யும்.

இரண்டு, மலையாள வரலாற்றாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் செய்யும் ஊகம். அதாவது நம் நாட்டுக்கு வந்த அன்னியர் கடலோரங்களில் தனிச்சமூகமாக வாழ்ந்துசென்றனர். அவர்களுக்கும் நம் சமூகத்தின் மையத்துக்கும் எந்தவிதமான உரையாடலும் நிகழவில்லை. இப்போதுகூட கடற்கரை நம் மையப்பண்பாட்டில் இருந்து மிக ஒதுங்கியதாகவே உள்ளது.

இதற்கு பி.கே.பாலகிருஷ்ணன் ஒரு சான்று சொல்கிறார். [ஜாதி வியவஸ்தையும் கேரள சரித்ரமும்] அரேபியரும் கிரேக்கரும் ஒரே காலகட்டத்தில் மேற்குக் கடற்கரைக்கு வந்து சென்றார்கள். பலநூறு வருடம். கிரேக்கர்கள் நல்லமிளகை கேரளத்தில் கோழிக்கோட்டில் வாங்கினார்கள். போகும் வழியில் அரேபியாவில் இருந்து சுக்கு வாங்கினார்கள். அதை ஒரு அரேபியப்பாலைவன வேர் என்றே பலநூற்றாண்டுக்காலம் அவர்கள் நம்பினார்கள். அரேபியர்கள் சற்று கீழே கொல்லத்தில் இருந்து சுக்கு வாங்கிக்கொண்டுசென்று தங்கள் நாட்டில் வைத்து விற்றார்கள்.

அந்த அளவுக்கு அன்றைய உரையாடல் இருந்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்களுக்கு நல்ல மிளகை விற்றவர்களிடம் பேசியே இருந்திருக்கமாட்டார்கள். நம் மரபை வைத்துப் பார்த்தால் அந்த வணிகத்தை நடத்த ஒரு தனி சாதி உருவாகியிருக்கும். அவர்கள் அதைச் செய்வார்கள். மற்றவர்களுக்கு தொடர்பே இருக்காது. ஆகவேதான் ஆயிரம் வருடம் கிரேக்கர் வந்து போன மலையாளச்சூழலில் ஒரு சிறு கிரேக்க தடையம் கூட கிடையாது, மொழியில் பண்பாட்டில். இப்படித்தான் நம்முடைய பண்பாடும் இருந்துள்ளது.

தாமஸ் வந்திருந்தால்கூட கடற்கரையோரம் மிகச்சிறிய ஒரு சமூகத்தை உருவாக்குவதுடன் அவரது பணி முடிந்திருக்கும். அவரது காலம் வரலாற்றுத் தொடக்க காலம். அவருக்குப் பின்பு, சாலைகளும் தொடர்புகளும் பலமடங்கு பெருகியபின், வந்த புனித சவேரியார் பல காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார். அவருக்கு தமிழிலக்கியத்தில் சிந்தனையில் பண்பாட்டில் உள்ள பங்களிப்பு என்ன? பைபிளின்படி தாமஸ் தத்துவம்கற்றவர் அல்ல. ஆனால் சவேரியார் ஒரு தத்துவஞானி. சவேரியாரின் பணி கடலோரங்களில் தொடங்கி அங்கேயே முடிந்தது. அவரது பெயர்கூட நம் இலக்கியங்களில் இல்லை

அதேப்போல முகமது நபிக்குபின் நெடுங்காலம் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பதிமூன்றாம்ன் நூற்றாண்டில் அவர்கள் வட இந்தியாவிலிருந்து படையெடுபப்து வரை அவர்களின் பாதிப்பு தமிழ்ச் சிந்தனையில் மிகமிகக் குறைவே.

இந்த தர்க்கமெல்லாம் தெய்வநாயகம் போன்றவர்களின் கண்மூடித்தனமான பிரச்சார வேகம் முன் ஒன்றும் செய்யமுடியாது. ஆயினும் இதுவே சிந்திக்கும் பழக்கம் உடையவர்களுக்கான பதில். நாளை அவர்களின் மேடை ஏறி முழங்கப்போகும் தமிழ் திராவிட அறிவுஜீவிகளுக்கும் இதுவே விளக்கம்.

****

கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். இருந்தும் ஏன் அவரை திடீரென மீட்டெடுக்கிறார்கள்?

இந்திய பாரம்பரியம் கிறித்தவம் வருவதற்கு முன்பு சிந்தனையற்ற இருண்டகாலம் கொண்டிருந்தது என்று சொல்வதற்கு தடையாக உள்ளவை இங்குள்ள பேரிலக்கியங்கள். அவற்றை மறைப்பது கடினம்.ஆகவே அவற்றின் காலத்தை பின்னுக்குத்தள்ளி கிறித்தவத்தின் வருகையை முன்னுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அதற்கு தாமஸ் தேவையாகிறார். (என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் விளையாட்டாக கலாய்ப்பதற்கே ஒட்டக்கூத்தர் வரவேண்டியிருந்தது, ஆனால் இவர்கள் வினையானவர்கள், அவ்வளவே).

தாமஸின் சுவிசேஷம் என்று ஒன்று எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்துள்ளது. [விவிலியத்தின் முகங்கள் - ஓர் அறிமுகம் ]பாப்பிரஸ் சுவடிகளில் எழுதப்பட்ட அந்தச்சுவடி கார்பன் டேட்டிங் முறைப்படி கிபி இரண்டாம்நூற்றாண்டுக்கு முந்தியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தாமஸ் எகிப்தில் வாழ்ந்தார் என்ற வரலாற்றுடனும் காப்டிக் சர்ச்சை நிறுவினார் என்ற வரலாற்றுடனும் அந்த விஷயம் பெருமளவு ஒத்துப்போகிறது. ஆய்வாளர் நடுவே அச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது

அந்த சுவிசேஷத்தில் [மறைக்கப்பட்ட பைபிள்: தோமையர் எழுதிய சுவிசேஷம்] தாமஸ் ஏசுவை ஒரு தேவனாக, கடவுளின் மகனாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு ஞானகுருவாக முன்வைக்கிறார். கிறிஸ்து வானத்தில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வரவில்லை, மண்ணில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வருகிறார். பைபிளின் அதிகாரபூர்வ வரிகளில் இருப்பதைவிட ஆழமும் கவித்துவமும் கொண்டவையாக அவ்வரிகள் உள்ளன. நாக் ஹமாதியிலும் செங்கடல் பகுதிகளிலும் கிடைத்த பல பைபிள் வடிவங்களை வலுவான தொல்பொருள் சான்று இருந்த போதிலும்கூட கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துவிட்டது. ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இந்தியப் பண்பாடே தாமஸ் என்ற தனிநபரால் உருவாக்கப்பட்டது என்று நிறுவ முயல்கிறது.

மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப் பேசியிருக்கிறேன்:"மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்"

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

அதற்கும் அப்பால்சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர்மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனை பொய்களைச் சொல்ல கூச மாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.

(சபாஷ் ஜெயமோகன் அவர்களே)

அன்புடன்,
டோண்டு ராகவன்

42 comments:

Anonymous said...

தசரதனுக்கு 60,000 பொன்டாட்டி என்றால் அது உண்மை

ராமர் பாலம் கட்டினார் என்றால் அது உண்மை

ஆனால் தாமஸ் வந்தார் என்றால் அது மட்டும் தமாஷா

Anonymous said...

ஜெயமோகன் ஏதோ காமெடி செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்...

ராமகோபாலன் அறிக்கை விடுவதற்கு முன்பு ஒரு முறை ஜெயமோகனுக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு சொல்லிவிடவும்...

இலைக்காரா ? உடனே உன்னுடைய போஸ்ட் ஒன்றை போடவும்...

Anonymous said...

ரெடி, ஸ்டார்ட் மீஜிக்.
திம்மிகள் ஒவ்வொருத்தரா வந்து கும்மிட்டுப் போங்க.

Anonymous said...

//தசரதனுக்கு 60,000 பொன்டாட்டி என்றால் அது உண்மை

ராமர் பாலம் கட்டினார் என்றால் அது உண்மை

ஆனால் தாமஸ் வந்தார் என்றால் அது மட்டும் தமாஷா//

அது பொய்யெனும் பட்சத்தில் இதுவும் பொய்யென்று ஒத்துக்கறீங்களா?

Anonymous said...

வழக்கம்போல மொக்கை பதிவு டோண்டு

Anonymous said...

//திருக்குறள் தாமஸ் கற்பித்த ஆதிகிறித்தவக் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முழுமையான கிறித்தவ நூல் ஆகும். திருக்குறளின் பாயிரம் கிறித்தவர்களின் விசுவாசப் பிரமாணமே. அதேபோல சிவஞானபோதமும் ஒரு பற்றுறுதிப்பிரமாணமே.///

சரியான காமெடி !!!!

manikandan said...

இத பத்தி எழுதறது வீணான விளம்பரம் டோண்டு சார்.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில்ன்னு சொல்லி ஒரு ஈமெயில் சுத்திகிட்டு இருக்கு. அது மாதிரி.

100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தா ஜாலி தான். நம்ப மக்கள் எதாவது மல்லிகா ஷெராவத் பாட்டு இருக்கான்னு பாக்க போவாங்க.

நானும் கூட. இந்த பிரச்சாரம் அந்த அளவு தான் பயன்படும்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நன்றி. முன்னறிவிப்பிற்க்கு. 1 - 2 நிமிடத்தில் உங்கள் பதிவைப் படித்துவிட்டேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//இரு ஊகங்களைச் செய்யலாம். ஒன்று இங்கே சிந்தனையில் ஒருவகை செவ்வியல்தன்மை நிலவியது. செவ்வியல் எப்போதும் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கும். நுட்பமான வித்தியாசங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும். தமிழிலக்கிய வாசகன் எளிதில் இதைக் கண்டடையலாம். இந்த அம்சம் புறப்பாதிப்பை முழுமையாக உதாசீனம் செய்யும்.
//

திரு.ராகவன்,ஜெயமோகனின் இந்தக் கூற்று சிந்திக்க வேண்டிய ஒன்று.

தமிழர்களின் மத நல்லினக்கக் கோட்பாடு இவ்வளவு சுதந்திரத்தை கிருத்தவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இதைப் படிக்கும் போது பண்டைய தமிழரின் வாழ்வும்,இறையியல் பற்றிய என்னுடைய பதிவின் மீதமிருக்கும் பகுதிகளை சீக்கிரம் எழுத வேண்டியதன் அவசியம் தெரிகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி.

வஜ்ரா said...

//
இத பத்தி எழுதறது வீணான விளம்பரம் டோண்டு சார்.

தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில்ன்னு சொல்லி ஒரு ஈமெயில் சுத்திகிட்டு இருக்கு. அது மாதிரி.

100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தா ஜாலி தான். நம்ப மக்கள் எதாவது மல்லிகா ஷெராவத் பாட்டு இருக்கான்னு பாக்க போவாங்க.

நானும் கூட. இந்த பிரச்சாரம் அந்த அளவு தான் பயன்படும்.
//

மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும். உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று. 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதை பாருங்கள்.

-தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

வால்பையன் said...

என்னுடைய கொள்ளு தாத்தா தான் இயேசு,
அவருடைய மூனாம் பங்காளி நபிகள்,
அவங்களுக்கு பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தவர் ராமன்

அப்போ நான் யார்

வால்பையன்

வால்பையன் said...

//"கிறித்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்றநிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆகியது. உலகைப்படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாக தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறித்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப்பட்டன".//

என்ன ஆணாதிக்கம் இந்த கூற்று உண்மைஎன்றால் இந்துவில் பெண் கடவுள்களே கிடையாதா, இவனுங்க உளறல்களுக்கு ஒரு அளவே இல்லையா

வால்பையன்

வால்பையன் said...

//இந்த அன்புக் கருத்தைப் பரப்பவே அவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பழங்குடியினரை அன்புடன் சிதையில் வைத்து உயிருடன் கொளுத்தினர்//

இப்போ மட்டும் என்ன வாழுதாம், அமெரிக்க கிறிஸ்தவர்கள் தானே அரபு நாடுகளில் கொன்று குவிப்பது

வால்பையன்

வால்பையன் said...

//தீர்த்தங்காரர்களை கற்பனைசெய்து அவர்களை வழிபட ஆரம்பித்தார்கள்".//

அவங்க கற்பனை பண்ணினார்கள், இவர் மட்டும் நேரில் பார்த்துவிட்டு எழுதுகிறார்

வால்பையன்

வால்பையன் said...

//இது ஆய்வளர் தெய்வநாயகம் அவர்களால் செயப்பட்ட ஆய்வுமுடிவுகளை ஊழியர்களுக்குக் கொண்டுசெல்லும்பொருட்டு அவரது மகளால் உருவாக்கப்பட்டது//

அவர் உயிரோட இருந்தா வரசொல்லுங்கப்பா, மனுஷன நேர்ல பாக்கணும்

வால்பையன்

வால்பையன் said...

//குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.//

இந்த காரணத்திற்காக இந்த புத்தகத்தை எதிர்க்கிறீர்களா
இல்லை இதில் சொன்ன விசயங்கள் டுபாக்கூர் என்ற முறையில் எதிர்க்கிறீர்களா

வால்பையன்

வால்பையன் said...

//தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும்//

தாமஸ் ஒருத்தர் தான் இயேசுவுக்கு சீடரா, மத்த எல்லோரும் பிரச்சாரம் பண்ண போறதா சொல்லிட்டு பொண்டாட்டி புள்ளைங்க கூட செட்டில் ஆகிட்டாங்களா,
அந்த நூறு கோடிய சோமாலியாவுல பட்டினில சாகுறவங்களுக்கு கொடுக்கலாமே

வால்பையன்

வால்பையன் said...

//கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். //

அப்படி போடு அருவாள

வால்பையன்

வால்பையன் said...

//தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.//

அப்படி பரப்புவனின் மூக்கில் குத்துவது என் பிறப்புரிமை என்று சொன்னால் ஒத்துகொள்வார்களா

வால்பையன்

ராஜ நடராஜன் said...

தூக்கம் வருமளவுக்குப் பதிவு போடுகிறீர்கள்:)எப்படியோ வந்ததுக்கு ஏதாவது சொல்லியாகவேண்டுமே.மதம் என்பதே வெறுப்பின் அடிப்படையா என்ற சந்தேகம்.

dondu(#11168674346665545885) said...

//இந்த காரணத்திற்காக இந்த புத்தகத்தை எதிர்க்கிறீர்களா
இல்லை இதில் சொன்ன விசயங்கள் டுபாக்கூர் என்ற முறையில் எதிர்க்கிறீர்களா//
இப்பதிவில் தடித்த சாய்வெழுத்துக்களில் கூறியிருப்பது முழுக்க முழுக்க எனது கருத்து. மற்றப்படி ஜெயமொகன் அவர்கள் எழுதிய பதிவுதான் இது. அதில் உள்ள கருத்துக்களுடன் நான் 100% ஒத்துப் போகிறேன் என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன்.

மிஷனரிகளின் இந்த தந்திர அணுகுமுறையால் விளைந்த அனர்த்தங்களில் பார்ப்பன எதிர்ப்பும் ஒன்று அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ramesh said...

நல்ல பதிவு.

என் ஆசை, இந்தியாவில் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். என் வீட்டில் கடை பிடிக்கிறேன். ( என் நண்பர்கள் கிண்டல் செய்வது கேட்கிறது - உன் ஜாதியை, குழந்தைகளுக்கு டாக்டர் என்ஜினியர் இடம் வாங்க காட்டுவாய் என்று. பார்க்கலாம்.)

மதமன் மதம் காணாமல் போக வேண்டும் - வீட்டிற்குள்ளே.

கலப்பு மணம் வேண்டும்.

அனைவரும் திறமை வளர்த்து கொள்ள ஒரு தூகுமானம் வேண்டும்.

ஒற்றுமை வேண்டும்.

Anonymous said...

Not only Jeyamohan's article, the responses that the article has received are also very interesting.

I am pasting all of them below.

Anonymous said...

August 13, 2008 – 7:13 am
அன்புள்ள ஜெயமோகன்

கிறித்தவ மதமாற்ற இயந்திரம் இந்திய வரலாற்றில் நிகழ்த்தும் ஊடுருவலைப் பற்றிய உங்கள் கட்டுரை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது. ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் எண்பதுகோடி முழுமூடர்களின் நாடு என்று நம்மைப்பற்றி நமக்கே கற்பிக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள், இங்குள்ள சிந்தனைகள் எல்லாமே திராவிடர்களால் உருவாக்கப்பட்டது. அந்த திராவிடர்கள் ஆரியர்களான பிராமணர்களிடம் தங்கள் சிந்தனைகள் அனைத்தையுமே இழந்து பரிதாபமாக சீரழிந்து முட்டாள்களாக ஆயிரம் வருடங்களாக வாழ்கிறார்கள். தாமஸ் வந்து அவர்களுக்கு கொஞ்சம் ஞானத்தை அளிக்கிறார். அதைக்கூட இந்த மூடத்தமிழர்களால் பேணிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் மேலும் மேலும் சீரழிந்து அசட்டுக்கும்பலாகவே வாழ்கிறார்கள். ஆரியர்கள் அவர்களை அடிமைகளாக ஆக்கியதற்கு அடிபணிந்து அவர்கள் சொன்னதை எல்லாம் நம்பி அவர்கள் கற்பித்த வரலாற்றையே தங்கள் வரலாறாக ஏற்றுக் கொன்டு வாழ்கிறார்கள். அவர்களை மீட்க மிஷனரிகள் வந்தார்கள். எப்பேற்பட்ட கதை.

இது ஆரியர்களை இழிவுபடுத்தவில்லை. உண்மையில் தமிழர்களை புழுவிலும் கேவலமானவர்களாகக் காட்டுகிறது. சிந்தனைத்திறனும் போர்த்திறனும் இல்லாத அசடுகளாக, தாங்கள் கற்றவற்றைக்கூட பிறர் திரிக்க அனுமதிக்கும் அறிவிலிகளாக காட்டுகிறது. எத்தனை ஆணவமும் , தமிழ் மக்களைப்பற்றிய கேவலமான மதிப்பீடும் இருந்தால் இத்தனைய ஒரு கோட்பாட்டை சொல்லி தமிழ்நாட்டிலேயே மாநாடு கூட்டுவார்கள்! அந்த மாநாட்டுக்கு நம்முடைய தமிழ் அறிஞர்கள் எல்லாம் சென்று அமர்ந்து பேசுவார்கள். நினைக்கும்போது கண்ணீரே வருகிறது.

நூற்றாண்டுகளாக நாம் உருவாக்கிய தத்துவம், ஆன்மீகம், கலைகள், இலக்கியங்கள் எல்லாமே பொய்யா?

நமக்கு சுயசிந்தனையே இல்லையா?

நாம் வெறும் அற்பப் பிறவிகள் தானா?

இதைக்கேட்கவா திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் திருமுறைகளையும் உருவாக்கி நமக்களித்துச் சென்றார்கள் நம் மூதாதையர். நெஞ்சு கொதிக்கிறது. நன்றாக இருக்கட்டும்.

ஆதிக்க வெள்ளையர்கள் அளித்த சிறு தொகைகளை வாங்கி சொந்த மண்ணையும் மக்களையும் களங்கப்படுத்தும் அந்த மாமனிதர்கள் பிள்ளை குட்டிகளுடன் நீட்டுழி வாழட்டும்.

ஆடலரசு
சென்னை

Anonymous said...

ஜெயமோகன்,

“யூரோப்பியர்கள் முதலில் இங்கே வந்தபோது எங்களிடம் நிலமும், அவர்களிடம் பைபிளும் இருந்தது. கண்களை மூடி ஆண்டவனிடம் பிரார்த்திக்க எங்களுக்கு அவர்கள் கற்பித்தார்கள். நாங்கள் எங்கள் கண்களை திறந்தபோது எங்கள் நிலங்கள் அவர்களுடையதாக இருந்தன; எங்களிடம் எஞ்சியது பைபிள். - ஒரு ஆப்பிரிக்க பாதிரியார்”

பணம் என்பது தேவைகளை நிறைவேற்ற உருவாக்க பிறந்த ஒரு வஸ்து. தேவைகள் இல்லாவிட்டால் அந்த வஸ்துவின் தோற்றமும் பயன்பாடும் அர்த்தமற்றதாகிவிடும். பொருளாதாரத்தில் குறைந்த பரிச்சயம் உள்ளவர்களுக்குக்கூட தெரியும் உண்மை இது.

ஆனால், ட்ரில்லியன் டாலர்களில் மதம் பரப்புவதற்காக இந்த நாட்டில் பணம் கொட்டப்படுவது எந்த தேவைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு என்று கேள்வி எழுப்பப்படவேண்டும். எதற்காக இந்த முதலீடுகளும், மாநாடுகளும், படப்பிடிப்புகளும், பாடத்திட்டங்களும்? என்கிற கேள்விகளுக்கு உங்களது கட்டுரை பதிலளிக்கிறது.

ஆப்பிரிக்காபோல ஆசியாவையும் மாற்ற.

ஆப்பிரிக்காவை சுரண்டி வளர்ந்தவர்களாகவும், வளர்பவர்களாகவும் உள்ள செல்வ செழிப்பு நாடுகள் இந்தியாவின் வளங்களையும், இந்தியர்களான நம்மையும் சுரண்டவே இந்த முதலீடுகளும், மாநாடுகளும், படப்பிடிப்புகளும், பாடத்திட்டங்களும்.

ஆரியர் திராவிடர், கிருத்துவர்-பாகன்கள், இஸ்லாமியர் - காஃபிர்கள், ஹுடுக்கள் - டுட்ஸிக்கள், பார்ப்பனர் - சூத்திரர், உள்ளவர்-இல்லாதவர், தாழ்த்தப்பட்டவர் - உயர்த்தப்பட்டவர் என்று குழு குழுவாய் பிரிந்து அடித்துக்கொண்டு சாகும் மனிதர்கள் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் விளைவே.

உலகில் அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த ஆப்பிரிக்கக் கண்டத்தில் குடிக்க நீர்கூட இல்லாமல் மூத்திரத்தையும், இலைதழைகளையும் உண்டு உயிர்வாழ்பவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் (please check the attachment). அவர்களை ஆபிரகாமிய மதவாதங்கள், கற்பனையாக உருவாக்கப்பட்ட இனவாதத்தின் அடிப்படையில் ஒருவர்மேல் ஒருவர் வெறுப்புகொள்ள வைத்து சகிக்க முடியாத கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றன.

ஒவ்வொரு வளமான நாட்டிலும் கற்பனையான இனங்களை கண்டுபிடித்து, தங்களது கல்விதிட்டங்கள் மற்றும் கல்விநிலையங்கள் மூலமாக இனப் பிரிவினைவாதத்தைப் பரப்பி, வன்முறையை நிலைநிறுத்துபவதாக இருப்பது மதவாதம்.

இறைவனின் சாம்ராஜ்ஜியத்தையோ அல்லது உண்மையான ராமராஜ்ஜிய/கம்யூனிஸ/கேப்பிட்டலிஸ சுவனத்தையோ இந்த மண்ணில் கொண்டுவர உழைக்கும் இந்த மதவாதத்தின் நபிமார்கள். பூசாரிகள்.

அதனால் விளையும் மதவெறி. அதை கண்டுகொள்ளாமல் விடும் மனிதர்கள். பிணங்கள். அவலம்.

இதுகுறித்து எதுவும் அறிய, அறிவிக்க விரும்பாது தங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளும் புத்திசாலிகள். இந்த அவலத்தை வெளியே சொல்லி ஏளனத்திற்கும், முத்திரை குத்துதலுக்கும் உள்ளாகும் முட்டாள்கள்.

பரவுவது ஆக்கிரமிப்பின் தாமஸும், அடங்கச் சொல்லும் தமஸும்.

உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்ததா? இப்படித்தான் இருக்குமா? இதில் நானும், என் மனைவியும், குழந்தைகளும், நண்பர்களும், அன்பர்களும் என்ன ஆவோம்?

மனித வெடிகுண்டுகளாகவோ, அல்லது அவர்களால் பலியிடப்படுபவர்களாகவோ ஆக்கப்பட்டு நடுத்தெருவில் உடல்சிதறி சாவதுதான் எங்கள் விதியா?

பள்ளி சென்றிருக்கும் என் குழந்தை நலமாய் வீடு வந்து சேருவாளா? இன்று பிழைத்தால் நாளை?

இந்துத்துவவாதமும், கிருத்துவ, இஸ்லாமிய பயங்கரவாதங்களும் மோதிக்கொள்ளும் இந்த சூழலில் இந்த கேள்விகள் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் பயத்தை உண்டாக்குகின்றன. குஜராத், அமர்நாத் கலவரங்கள். கோயம்புத்தூர், பெங்களூர் குண்டு வெடிப்புகள். மதுரை தென்காசி கொலைகள். நீதியையும், சட்டத்தையும் மதிக்காத அரசியல்வாதிகள். விளைவு? இனப்படுகொலைகள்.

உலகில் மிகக்கொடூரமான இனப்படுகொலையாக வரலாற்றில் இடம்பெறுவது ஹுடு - டுட்ஸி இனக்கலவரம். இதே இனவாதம் இந்தியாவில் ஆரிய - திராவிட இனவாதமாகக் காட்டப்படுகிறது. வேறு பெயர்கள். அதே இனவெறி.

இந்தியாவிலும் சரி, ஆப்பிரிக்காவிலும் சரி - இல்லாத இன வெறுப்பை கண்டுபிடித்து, வன்முறையை வளர்த்து அதில் வளம் காண்பதாக கிருத்துவம் விளங்குகிறது. ஹுடு - டுட்ஸி இனக்கலவரம் இதையே மீண்டும் நிறுவுகிறது.

இருப்பினும் இந்தியர் ஆப்பிரிக்கர்களைப் போல தோல் போர்த்திய எலும்புகளாய் ஆகாமல் தப்பிப் பிழைத்திருப்பது எதனால்?

இந்திய ஞான மரபினால். இந்த ஞான மரபே சுதந்திர வேட்கையையும், தனிமனித விடுதலையையும், கலையுணர்வையும் தூண்டுகிறது. அதனால்தான் இதை அழிக்க மதவெறி முயலுகிறது. நேரடியாக அழிக்க முடியாதபோது மறைமுகமாக அரவணைத்து நெருக்கி அழிக்கப் பார்க்கிறது. உங்களிடம் இருக்கும் ஞான மரபு எங்களிடம் இருந்தே வந்தது என்று தங்களின் பெருமையையும், கேட்பவரிடம் கீழ்மையையும் ஏற்படுத்துகிறது.

இதையொத்த மதவாதமே சூடானில் இஸ்லாமியர்களால் வன்முறையை பரப்புகிறது. சூடான் நாடே, இரண்டு வேறு நிலப்பகுதிகளாக மதத்தின் அடிப்படையில் பிரிந்து அடித்துக்கொள்ளுகின்றது.

இந்த மதவெறியை அனுமதிப்பதால் அல்லது கண்டுகொள்ளாமல் போவதால் பஞ்சத்தாலும் வறுமையாலும் அழிந்துபோன மக்கள்கூட்டத்தைச் சேர்ந்தவனாக மாறுவதுதான் என் குடும்பத்திற்கு எஞ்சும். ஆப்பிரிக்க மக்களுக்கு நடப்பதுபோல.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் லட்சக்கணக்கான மனிதர்கள் மலத்திலும் கேவலமான உயிர்தரித்தலில் இருந்து தப்பிக்க மரணத்தை வரவேற்று காத்திருக்கிறார்கள். மரணத்தை அடுத்த வினாடி தழுவ இருக்கும் குழந்தையின் உடலை ருசித்துத் தின்ன கழுகுகள் காத்திருக்கின்றன.

இத்தகைய காட்சி ஒன்றை படம் பிடித்து அதற்காக புலிட்ஸர் ப்ரைஸும் பெற்ற கெவின் கார்ட்டர் இந்த வறுமையின் கொடூரத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் (http://en.wikipedia.org/wiki/Kevin_Carter).

கலைஞர்களால் வன்முறையை தாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் இயற்கையின் மென்மையில் தங்களை இழந்தவர்கள். கலைஞர்கள் மௌனமான புரட்சியாளர்களாக மாறுவது வன்முறையை உலகிற்கு அறிவிக்கும் இந்த தருணத்தில்தான்.

அவர்களாலேயே மனிதம் பிழைக்கிறது. அதனால்தான் கலைஞர்களை மனிதம் மதிக்கிறது. அவர்களே வன்முறையின் கொடூரத்தை குறித்து உலகிற்கு முதலில் அறிவிக்கிறார்கள். எச்சரிக்கிறார்கள். இந்த கட்டுரையின் மூலம் நீங்களும் அதையே செய்துள்ளீர்கள்.

உங்களது இந்த கட்டுரை என் மகள் பள்ளியிலிருந்து பத்திரமாய் திரும்ப ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை எனக்கு தருகிறது.

நம்பிக்கையுடன்,

ஆனந்த கணேஷ், வை.

Anonymous said...

அன்புள்ள ஜெயமோகன்

சற்று வேலை பளு. அதிகம் எழுதவில்லை. தங்கள் எழுத்துக்களை இணையத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன்

மேலை நாட்டு மற்றும் கீழை நாட்டு சிந்தனைகளின் அடிப்படை கூறுகளி-ன் மாறு-பாட்டை (அன்றாட வாழ்வில்) தனது ஆராய்ச்சியின் வெளிப்-பா -டாக மூன்று கட்டுரைகளில் ஆசிரியர் லியூ - யங் எழுதி உள்ளார்.

எளிமையுடனும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் உங்கள் வாச்கர்களும் ரசிக்க…

அன்புடன்
முரளி.

http://www.myseveralworlds.com/2007/10/24/icons-for-understanding-eastern-and-western-cultures-part-one/

Anonymous said...

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களுடைய தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ கட்டுரையை படித்தேன்.

கருத்து சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது என்பது இப்போது விளங்குகிறது

நன்றி உங்களின் பதிவுகளுக்கு

அன்புள்ள
சக்திவேல்
கனடா

Anonymous said...

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று குமரிக்கண்ட ஆராய்ச்சிகள் மொழி மற்றும் மத தீவிர அமைப்புகள் மூலம் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. நீரடி , கடலடி நிஜ ஆராய்சிகளைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவை திரித்து கூறப்படுகின்றன.

மத சக்திகள் , குறிப்பாக இந்துத்துவ, இஸ்லாமிய , கிறுத்துவ சக்க்திகளின் பண வீச்சு அளவிட முடியாத்தது.

வறுமையால் வாடும் ஒரு மனித உயிரை விட தங்கள் கடவுளின் சேவை என இவர்கள் கருதும் மகா மூட காரியங்களுக்கு தொகையளிப்பதற்கு மனிதகுலமனைத்துமே தயாராக உள்ளது . ஓருமணிக்கூர் தொலைக்காட்சி சாட்டிலைட் ஒளிபரப்பிற்கு 70000 ஆகும் (சரியான தகவல் தெரிந்தால் தேவலாம்) என அறியும் போது இவர்கள் எப்படி இத்தனை கிறுத்துவ சேனல்களை மிக சாதாரணமாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். எந்த மத குழுவும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இந்து மதமும் இந்த போட்டியில் தன் அசுர பலத்தை காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதில் மர்க்ஸ் வந்தால் என்ன, குமரி மைந்தன் வந்தால் என்ன. எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

அன்புடன்
ஆனந்த்.

Anonymous said...

எழுத்தாளருக்கு -

புனித தாமஸ் அப்போஸ்தலரின் தூய வரலாற்றை புளுகு என்று நீங்கல் எழுதியிருப்பதைப் படித்தேன். பார்ப்பனியப்பிதற்றல்களை உண்மை என்று நினைக்கும் உங்களுக்கு உண்மையான தேவனின் செய்தியும் அதன் மெய்யான அப்போஸ்தலரின் வருகையும் பொய்யாகத்தான் தோன்றும்.

உங்களுடைய மனதில் பார்ப்பனிய நஞ்சும் பார்ப்பனிய மலமும் இறுகி கெட்டியாகி இருக்கிறது.

நீங்கள் மனம்திரும்பி ஏசுவை பிரார்த்தனைசெய்தாலன்றி உங்களைப்போன்றவர்களுக்கு நித்யமான நரகமே காத்திருக்கிறது.

சிலுவையின் முன் மண்டியிட்டு உங்கள் பாவங்களைச் சொல்லி அழுவதே உங்களுக்கு வழியாகும்.

மெய்யான தேவனின் நற்செய்தியால் உருவானது தமிழ் திராவிடச் சிந்தனைகள் என்பதை இனிமேல் உலகமே உணரத்தான் போகிறது.

நீங்களும் உணரத்தான் போகிறீர்கள். அப்போது நீங்களும் உங்கள் சந்ததிகளும் துக்கப்படுவீர்கள்.

கிறிஸ்துவின் மெய்யான ஞானத்தை பழித்தவர்களுக்கு மரணமும் ரோகமும் சகல தீங்குகலும் வரும் என்பது கண்கூடு.

அதை ஆறுமாசத்துக்குள் நீங்கள் உணர்வீர்கள்.

உலகமும் அறியப்போகிறது. எச்ச்சரிக்கை.

தோமாகிறித்துவ மறைஞானத்தை அழித்து பார்ப்பன பிணந்தின்னிக் கும்பல் சவைத்துப் போட்ட எச்சிலைத்தான் நீங்கள் திருப்பி எடுத்து தின்றுகொண்டிருக்கிறீர்கல்.

இந்து மதம் என்பது தோமாகிறித்தவ மதத்தின் பிணம்தான். இதை நீங்கள் உணரவேண்டும்.

உங்கள் மனதில் உள்ள பார்ப்பனிய மலமும் பாவத்தின் நாற்றமும் அழிந்து உங்கள் மனதில் கிறிஸ்துவின் ஒளி பிறக்க வேண்டும் என்று ஏசப்பாவை பிரார்த்தனை செய்கிறேன்

[இதைப்போல 32 மின்னஞ்சல்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே எனக்கு நோய், மரணம், குடும்பத்தினருக்கு கெடுதல்கள் ஆகியவை நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறன [ஜெ] ]

Anonymous said...

இப்போதுதான் தாமஸ் பற்றிய உங்கள் கட்டுரையை படித்து முடித்தேன். நீங்கள் போப்பாண்டவரே தாமஸ் தென் இந்தியாவுக்கு வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலை குறிப்பிட மறந்துவிட்டீர்கள்.

http://www.rediff.com/news/2006/nov/22pope.htm
//தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.//

உண்மைதான். நான் கிறிச்துவை ‘ஊளியர்களை’ விட நன்றாக புரிந்துகொண்ட பல கிறித்தவர்கள் அல்லாதவர்களை கண்டிருக்கிறேன். மனித வரலாற்றிலேயே மிக அதிகமாக தெரியவந்த, அதேசமயம் மிக அதிகமாக தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும். கீதையைப்போலவே பைபிளும் அதிகமான பலதரபப்ட்ட அர்த்தங்களை உருவாக்கக் கூடியது. மானுட இனத்தின் பிற மாபெரும் நூல்களைப்போலவே மதத்தை தாண்டி வாசிக்கமுடியுமென்றால் மேலும் உள்ளொளியை அளிக்கக்கூடியது.

சிறில் அலெக்ஸ்
http://www.cyrilalex.com

Anonymous said...

வாசகர்களுக்கு

எனக்குவந்த பலவகையான கடிதங்களுக்கு நான் எழுதிய பதிலில் உள்ள சாரத்தை மீண்டும் தொகுத்து எழுதி கீழே கொடுத்திருக்கிறேன் [ஜெ]

இக்கடிதங்களில் உள்ள ஆதங்கம் கோபம் வருத்தம் ஆகியவற்றை கவனத்தில் கொள்கிறேன்.

நான் இந்திய கிறித்தவ மதப்பரப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனத்துக்குக் கொண்டுவர எண்ணினேன். அதனால்தான் அக்கட்டுரை. வரலாற்றை திரிப்பதும் மோசடிசெய்வதுமல்ல ஆன்மீகச் செயல்பாடு. அது கிறிஸ்துவின் உண்மையான செய்தியை மக்களிடம் கொண்டுசெல்வதே. எத்தனை முறை திரித்தாலும் அழியாத ஒரு அக்கினி கிறிஸ்துவின் சொற்களில் உள்ளது என்றே நான் எண்ணுகிறேன். அது எளிமையே மகத்தானது என்றும், மனிதன் சகிப்பதன்மூலம் தன்னை மேலெடுத்துக்கொள்ளலாம் என்றும் நம்மிடம் சொல்கிறது. தன் நெஞ்சோடு கைசேர்த்து கிறிஸ்துவை அறியும் ஒரு எளிய கிறிஸ்தவனை நேசிக்கவும் ,அவனுடன் சேர்ந்து கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்யவும் என்னாலும் முடியும் என்றே எண்ணுகிறேன்.

நான் வணங்கும் அந்த கிறிஸ்து தல்ஸ்தோயின், தஸ்தயேவ்ஸ்கியின் கிறிஸ்து. என் இணையதளத்தில் அந்த கிறிஸ்துவை நோக்கிச்செல்லும் ஆயிரம் வழிகளை ஒரு வாசகன் காணலாம். என் ஆசிரியர் நித்ய ¨சைதன்ய யதி எனக்கு அளித்த கிறிஸ்து. அந்த கிறிஸ்து ஒரு மாபெரும் ஆன்ம ஞானி. எல்லா ஆன்ம ஞானிகளையும்போலவே தன்னை பலியாக்கி ஞானத்தை முன்வைத்தவர்.

அந்த கிறிஸ்து இந்தியாவுக்கு தேவை என்றே எண்ணுகிறேன். அந்த கிறிஸ்துவால் தொட்டெழுப்பப்பட்ட பற்பல மகத்தான ஆத்மாகளை நான் அறிவேன். அவர்களின் மாபெரும் தியாகங்களையும் அறிவேன். அவர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

இந்த ஆதிக்கவாதிகளின் அரைகுறை முயற்சிகளை வைத்து கிறிஸ்துவை மதிப்பிட்டு விடகூடாது என்று மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அப்படிச்செய்ய முயலும் மதவாத நோக்குகளை முழுமையாகவே இக்கணம் நிராகரிக்கிறேன். இந்த அமைப்புமனிதர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள தூரம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மிக எளிமையான ஆதிக்க அரசியல் மட்டும்தான் இது. ஒவ்வொரு நாளும் மண்டியிட்டு கண்மூடி இவர்கள் பிரார்த்தனைசெய்வது கிறிச்துவிடமல்ல, கையில் சாட்டை ஏந்திய ஏகாதிபத்தியத்திடம்தான்.

ஜெயமோகன்

DEVAPRIYA said...

From the Book-
திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.

The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.

இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போத்ள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)

The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.
Dr.சு.ராஜசேகரன்.,1989,
Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

DEVAPRIYA said...

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.
Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.

Anonymous said...

ஆனந்த கணேஷ் என்பவர் எழுதியிருப்பதைப் படித்தால் பயம் வருகிறது.

அந்த அளவுக்கா நிலமை மோசமாக இருக்கிறது?

DEVAPRIYA said...

What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article “The Acts of Thomas” by Rev.Anthony Poathoor.

- “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that – “The Acts of Thomas” is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former… We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. …. there is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View. Page- 24
Holy see’s Publisher “Burn Oares & Wash Boune Ltd’ has Published Multi Volume –“Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of “The Early Spread of Christianity in India” – Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
. “ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

Holy See’s publisher says that Indian Christianity has mostly the Origins from Edessa, which is in present Turkey- But did Edessa was the area where Thomas Worked?- let us see, how a detailed study by a Secular Historian says-

“Edessa-the modern Urfa in North West Mesopotamia is a city with an immensely long history going back to the Babylonian & Assyrian age. About 132BC it has became a seat of local dynasty, one of whose king raised the pillar. CHRISTIANITY Was Introduced in the Jewish Colony in the 2nd Century CE, and the church developed a national spirit using the Syriac Language and becoming the First Seat of Christianity in the Syriac speaking Community.”- Page-2176, World History; Editor J.A.Hanmeston.

Former English Professor of St.Joseoph College, Trichy, Dr.Joseph Kolangodan wrote a book “The History of Apostle Thomas” and it has the total appraisal from a fellow Christian, Professor John Ochanthurthi, Dept. of History, Calicut University saying-
“As the Well known Orientalist and Syrian Scholar George Every in his book “Christian Myths”(New York; Page-92)- India of this Legend (Acta THomae) is certainly not Malabar and may not be in the Indian Peninsula”

CHURCHES very clearly know the above Research truths with its vast Experience of “ a lie repeated becomes Legendry History as that of New Testament Hero- Jesus”.

What does Church know about Thomas. Let us get from a Christian Scholar-

“ The VERY NAME of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramaic Teoma whose Greek Translation is Didymas, meaning “Twin”, most probably his original name was Judas, and the Parentheses and the versional variants could have been Scribal clarification. How could an Apostle be known by an epithet or an adjective such as “TWIN” - “Person And Faith of Apostle Thomas in the Gospels”- Dr.George Kaniarakath,CMI

What is the Opinion about Acts of Thomas, in Catholic Church- Acta Thomae was composed in the Ist half of the 3rd Century AD in Gnostic Manichean circle with Encrastic tendencies. Page-411, Vol-3, New Catholic Encyclopedia &

Holy see’s Publisher “Butler’s Lives of Saints” 1938 Edited by Rev.Alban Butler with Nihil Obstat & Imprimatur from Two Archbishop and it says-

It is now commonly agreed that there is no Truth behind the extravagant but interesting story as just outlined.

I also refer to “Church History of Travancore” by C.M.Agur, (released by the Church in commemoration of Centenary Celebrations of the Church in 1903) reprint 1990, refers to the Merchant Thomas of Cana who came in 745 AD and clearly affirms-

“ Long after his Death the people Canonised him and the Subsequent Generation confused St.Thomas the Armenian Merchant with St.Thomas the Apostle, who never came to Malabar. This Confusion becomes more potent when we look in to the names of the Churches said to have been founded by the Merchant Thomas are Identical with the names of the Churches attributed to St.Thomas. Page-12

Christian Churches say that Thomas founded seven churches are at Kodungallur, Palayur, Paravoor, Kokkamangalam, Niranam, Chayal and Kollam.

Also we saw that Church claims that Thomas landed at Cranganore- a corrupted version of modern Kodungallur, and most of the other Six are all on Western Keralite Coast. Let Us what is the Truth of Archaeological Truth. The Church Apologists also say is the Cranganore as the Musiri the famous Port referred in Sangam Literature Former Professor of Chennai University Head of the Department of Archeaology Professor-Dr.K.V.Raman in Tamil says

கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது....
கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.

கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..

திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.

திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.

பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”

I summarise it in English, Professor refers to the Archaeological research work done under Mr.Anu John Achhan and after analyzing all the findings says First Occupation of Humankind in Kodungallore Belt and surroundings happened in 8 or 9th Century AD, as Virgin Soil without Any Human Occupation came then, all researches in the surrounding areas took us to the Second Chera period of and certainly Kodungallore is not the Musiri the famous Port referred in Sangam Literature.

Does the Apostle Thomas in India Fables spreading Churches aware that Coastal Kerala was below Sea till 7th or 8th Century CE.

Let us see from History of Christianity in India, Vol. I, by Fr. A. Mathias Mundadan, Professor of Church History and Theology at the Dharmaram Pontifical Institute, Bangalore, in says
“Opinion seems to be Unanimously insupporting the Hypothesis that the whole or Greater part of the western section of the Kerala coast was once under waters and that the formation of the Land was due to some process of nature either gradual or Sudden.” Page-12

Incidentally Kodungallore Church are also called MALANKARA. What Does MALANKARA Mean? The Tamil word correct form is Mal-Iyan Karai, which became Maliankara or Malankara. The Land formed By God Vishnu(Mal) and God Siva(Iyan).

Now I refer again Dr.Joseph Kolangodan wrote a book “The History of Apostle Thomas” and it has the total appraisal from a fellow Christian, Professor John Ochanthurthi, Dept. of History, Calicut University

“As for as I could see from all the Shreds of Quotations presented by Prof. Kolangadan in this Volume, the antiquity of St.Thomas Tradition in South India cannot go beyond 13th Century. So for as direct and explicit support in favour of the St.Thomas Tradition in South India is concerned, I have No Doubt that the answer must be, None. Neither the Church Fathers nor the Apocrypal Acts say anything explicityly about Malabar.” Page 79

I quote from Rev.George Menachery Edited St. Thomas Christians Encyclopedia”,Vol-2, Article DID St.Thomas Really Come to INDIA- From a Doubter’s point of View by
Rev H.COMES. It explains-

“Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas’s carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.”


It explains and analyses further in detail all other points and finally concludes as-
" For all these reasons it is our honest opinion, and thus we conclude, that Christianity was brought to India, not by St.Thomas, but by merchants, refugees and missionaries from Persia; that in this movement of Christianity towards India, Rewardshir, which was not only a great church, but also a great port, played an important part; that the St.Thomas Tradition itself may have been brought to Socotra to Konkan -Gujarat and to South India by these early settlers and missionaries from Persia; but that its ultimate origin may have been some of the regions near Palestine Christianized in the First Century." Page-24

Linguistics Help much, Brahmins and Vedas have been regarded with Highest Hanour in Thol Kappiyam, Sangam Literature, Tirukural, Silapathigaram and Manimekalai which covers a period from BCE300 to 300 CE. Vedas are not written for long because it does not follow Panini’s Grammar, but has to get the right interpretation, hence we use Sanskrit-“SRUTHI” Means “Heard”- where as we have many names in above Tamil Literature such as “Marai, (மறை, எழுதா கற்பு, ஓத்தும் அறம், ஆர்ங்கம் நான்மறை)Ezutha kaRpu, Aram, Aarangam etc., Sanskrit words have been mixed in All the Above Literature. We do not have a Single Hebrew, Greek, Latin word which confirms the absence of anu major presence of this people here.
We saw, from Highest Authorities of Roman Churches, that
1. Acts of Thomas is totally unreliable an unacceptable book, with absolutely Un-Historical Fables, totally rejected.
2. Even this Fable Acta Thomae- and the Geography it says are not in Indian Peninsula itself.
3. As for as South Indian Traditions we know there was nothing, as confirmed by Calicut University Professor of History.
4. Kodungallore and most of the places are below Sea till 7th/8th Century of Common Era(CE), which has been very clearly proven by Archaeological Researches.
5. The Indian Christianity came from Syrian Edessa even that has no Thomas Back Ground as per Historical Truths.
6. Church has absolutely no Knowledge about any of the 12 Apostles or even the founder of Christianity Paul. Even though Church does not know the real name of any Back ground about Thomas, But very clear earliest recordings say that Thomas did not suffer from any Opposition and died a Normal death mostly in Judea itself.
Why Church is spreading this Fables – I quote a Church Scholar’s WORK which tells Truth openly-
“Psychologically such a Perception is important , in that it helps to attach the involved population to a long tradition which in turn insets them with Dignity and Pride. Sociologically such a cognition defines Indian Christianity as Pre-Colonial phenomenon which is of Tremendous Existential Consequence.” - Page-40, The Christian Clergy in India, Vol.-I, T.K.Comen & Hunter.P.Malony, Sage Publications
Though most of these materials are familiar to Scholars and Specialist in the Fields, it is never made available to the Wider Public.

Anonymous said...

மானமிகு டோண்டு ஐயா,

என்னுடைய இந்த கேள்வியை உங்களுடைய வெள்ளிக்கிழமை வினா-விடை பகுதியில் சேர்த்து பதிலளிக்குமாறு வேண்டுகிறேன்.

/// ஆனந்த கணேஷ் என்பவர் எழுதியிருப்பதைப் படித்தால் பயம் வருகிறது.

அந்த அளவுக்கா நிலமை மோசமாக இருக்கிறது?

August 13, 2008 6:25 PM ////

Anonymous said...

//இந்திய சுவிசேஷத் திருச்சபை பேராயர் டாக்டர் எஸ்றா சற்குணம்//

You can see this guy in almost all the meetings of DMK and DK. And he will speak like a typical pagutharivu guy, abusing Hindu beliefs.

No wonder, he is also part of this 'Thomas' farce!!!

குரங்கு said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

யப்பா, எவ்வளவு பெரிய பதிவு...

மதத்தை பற்றி பேசினாலே சிக்காலே சிக்கல்தான் போல.

எல்லா மதத்தையும் ஒழிச்சுடனும். அப்பத்தான் நிம்மதி.

Ramesh said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

virutcham said...

ராகவன் sir , இப்போ இந்த புனைவு ஆய்வுகள் எல்லாம் எந்த அளவு முன்னேற்றம் கண்டு இருக்கின்றன என்பது பற்றி ஏதாவது தெரியுமா?

Anonymous said...

Jewelry is women's best friend. It is surely a [B][URL=http://www.tiffanysfree.com]tiffany[/URL][/B] long lasting gift to your loved ones and enhances ones beauty [U]3tiffany & co jewellery[/U] with its attention getting charm. So, while buying such beautiful jewelry for [B]tiffany jewelry boxes[/B] your precious ones, you need to make [B]tiffany jewelry boxes[/B] sure that you get them from trust worthy places. Pandora bracelets, Links of London, Tiffany jewelry [U][B]knockoff tiffany jewelry[/U][/B] offer you top edge designs and high quality jewelry at affordable prices. They are known for their [U][B]tiffany jewelry store[/U][/B] elegant yet bright designs that could match any occasion. Jewelry these brands offer has a specific [B][URL=http://www.etiffanystore.com]tiffany pendants[/URL][/B] meaning that expresses many feelings.

Silver bangles and bracelets of Tiffany jewelry [B][URL=http://www.etiffanystore.com]tiffany jewelry[/URL][/B] are known for their delicate knots and symbols which express unity and harmony. Their heart shaped lockets which express love make [U][B]best website to buy discounted tiffany jewelry[/U][/B] their partner feels that they are precious [B]tiffany jewellery uk[/B] and wonderful.

These jewelries are quite famous [B]tiffany company jewelry[/B] among couples who say that these unique and simple [U]baltimore tiffany jewelry[/U] designs of Tiffany jewelry are long-lasting and incomparable. Some [U][B]discount tiffany jewelry[/U][/B] designs in Tiffany's jewelry date back to decades ago, which make them [B][URL=http://www.tiffanysfree.com]tiffany earrings[/URL][/B] a perfect gift as a heirloom, so that it could be passed from one generation to another, this explains the timeless beauty [U]3tiffany & co jewellery[/U] of the jewelry and still be in fashion even after many generations


Links of London is yet another designer [U][B]best website to buy discounted tiffany jewelry[/U][/B] jewelry store that offers wide variety of jewelry which [B]tiffany jewellery uk[/B] makes every one a proud owner, who ever buy it. These jewelries are outstanding [U][B]authentic tiffany jewelry monthly promotion[/U][/B] jewelry store in London. There are known for its craftsmanship, each [B]tiffany jewellery uk[/B] and every piece of jewelry is hand made in its workshops situated at [B]replica tiffany jewelry[/B] London. Pendants, necklaces, ear rings studded with immaculate diamonds are completely mesmerizing. Get your self [U]discount tiffany jewelry[/U] a best buy in any of these brands, sure you [U]tiffany company jewelry[/U] well not regret.

Anonymous said...

Greetings every one, fine forum I find It exceedingly accessible and it's helped me a great deal
I hope to be able to give something back & assist other people like this forum has helped me

_________________
[URL=http://electricalhelper.co.uk/electrical-help/install_a_consumer_unit.htm]consumer unit[/URL]

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது