5/16/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 83 & 84)

எபிசோட் - 83 (12.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் அவர், வசுமதி, காஞ்சனா மற்றும் அவள் கணவன் முரளி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். காஞ்சனா அசோக் காதம்பரி சம்பந்தத்தை உறுதி செய்து கொள்ளும் முகமாய் தட்டை மாற்றிக் கொள்ளச் சொல்ல, நாதன் இன்னும் சற்றே பொறுக்கலாம் எனக் கூறுகிறார். தங்கள் பிள்ளை அசோக் தங்களாலேயே புரிந்து கொள்ள ரொம்பக் கடினமானவன், அவனை இந்தக் காதம்பரி ஒரே சந்திப்பிலேயே புரிந்து கொண்டிருப்பாள் என்பதை நம்ப அவருக்கு கடினமாக உள்ளது.

காதம்பரி அருகிலுள்ள கோவிலுக்கு வந்திருப்பதை தெரிந்து கொண்ட அவர் அங்கு போய் அவளுடன் மனம் விட்டுப் பேசுகிறார். அசோக் பற்றிய அவளது கருத்துக்களை அவர் அவளிடமிருந்தே நேரடியாக தெரிந்து கொள்ளவே வந்ததாகவும், அவளது முடிவு அவளது அக்கா மற்றும் அத்திம்பேரின் தூண்டுதல்களால் உருவாக்கப்பட்டிருந்தால் அது சரியானதாக இருக்காது எனவும் அவர் கூறுகிறார். காதம்பரியும் தனது கருத்துக்களை வெளிப்படையாகவே கூறுகிறாள். முதலில் அசோக் குடுமி வைத்துக் கொண்டிருந்தது, அவனது அதீத செய்கைகள் ஆகியவை பற்றி குறைவாக என்ணினாலும் நேரில் சந்தித்து பேசிய பிறகு தான் மனம் மாறியதாகவும் கூறுகிறாள். தான் கண்டுணர்ந்த அவனது நல்ல பக்கங்களையும் வலியுறுத்துகிறாள். இருப்பினும் நாதன் முழுதாக கன்வின்ஸ் ஆகாதது போலத்தான் தோன்றுகிறது.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரது சம்பந்தி சிகாமணி முதலியார், மாப்பிள்ளை ஆகியோர் வந்திருக்கின்றனர். வேம்புவின் மகள் ஜயந்தி வர மறுத்து விட்டதாக மாப்பிள்ளை கூறுகிறான். இவர்கள் அதைக் கேட்டு வருத்தப்படுகின்றனர். வரும் ஞாயிறன்று வேம்பு குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு விசிட் செய்ய வேண்டும் என சிகாமணி முதலியார் கூற, வேம்பு ஜயந்தியை என்ணி தயங்குகிறார். இருப்பினும் மாப்பிள்ளை அவரை கன்வின்ஸ் செய்கிறான்.

நாதன், நீலகண்டன், வசுமதி, பர்வதம் ஆகியோர் நாதன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். நாதன் தனது தயக்கங்களை எடுத்துரைக்கின்றார். இப்போதைக்கு ஒத்துக் கொண்டுவிட்டு பின்னால் அப்பெண் மனத்தாங்கல்பட்டால் என்ன செய்வது என வசுமதி கேட்க, அப்படியெல்லாம் எந்த கல்யாணத்தையும் பிரெடிக்ட் செய்ய முடியாது என நீலகண்டன் எடுத்துக் காட்டுகிறார். பல திருமணங்கள் எதிர்பார்ப்புகளின் இரு பக்கங்களுக்கும் சென்றுள்ளன.

அதையே சோவின் நண்பரும் கேட்கிறார், இத்தனை ஜாதகங்கள் பார்த்தும் பல திருமணங்கள் ஏன் தோல்வியில் முடிகின்றன என்று.

சோ அவருக்கு ஜாதகங்களின் லிமிட்டுகளை விளக்குகிறார். அவை வெறுமனே சூசகமாகவே சொல்லக் கூடியவை என்றும், ஒரேயடியாக அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது என்றும் கூறுகிறார். திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்குமே கடமைகள் உண்டு உரிமைகளும் உண்டு. அவரவர் கடமைகளை நன்கு செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும் எனவும், அதன்றி ஒவ்வொருவரும் உரிமைகளை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் கஷ்டமே எனவும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் சம்பாஷணை தொடர்கிறது. கடைசியாக அசோக் பேசாமல் சிவன் கோவிலின் பூக்கட்டிப் பார்க்கலாம் என ஆலோசனை கூற, வசுமதி அது சரியாக வருமா என தயங்குகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 84 (13.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிவன் கோவிலில் பூக்கட்டிப் பார்த்து விடலாம் என அசோக் கூற, அதெல்லாம் சரியா வருமா என வசுமதி சந்தேகத்தைக் கிளப்புகிறாள். ஒரு வேளை வேண்டாம் என வந்து விட்டால் என்ன செய்வது என அவள் மனம் மயங்க, அப்போ அது ஈஸ்வர சங்கல்பம் என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அவன் பதிலளிக்கிறான். பேச்சு இதிலேயே தொங்க, நீலகண்டன் அசோக் அவனை அடிக்கடி பார்க்க வரும் தேஜஸ்வியான அந்த தபஸ்வியை அவன் மனதார பிரார்த்தித்து அவரை தருவித்து வழிக்காட்டும்படி கூறலாம் எனக்கூறுகிறார். அருகில் உள்ள கோவிலுக்கு காதம்பரியை கூட்டிப்போய் அவர்கள் இருவரும் ஒன்றாகவே பிரார்த்திக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.

அசோக்கும் காதம்பரியும் கோவிலில் சந்திக்கின்றனர். காதம்பரி அவன் ஏன் தன்னை வரச்சொன்னான் என கேட்க அவனும் நீலகண்டன் சொன்ன ஆலோசனையை அவளிடம் கூற, அவள் அதை எதிர்க்கிறாள். இது 21-ஆம் நூற்றாண்டு என அவள் கூற, நூற்றாண்டு என்பது மில்லெனியத்தில் ஒரு துளியே, சத்தியம் என்பது மாறவே மாறாது என மிருதுவாக ஆனால் அழுத்தமாகவே கூறுகிறான்.

காதம்பரி தனக்கு விதிக்கப்பட்டவள் இல்லை என்றால் அந்த தபஸ்வி நிச்சயமாக வர மாட்டார் எனவும் கூறுகிறான். இருவருமாக பிரார்த்திக்க திடீரென எங்கிருந்தோ இடியும் மின்னலுமாக மழை வருகிறது. கோவிலுக்கு வெளியிலிருந்து அந்த தேஜஸ்வி பிரவேசிக்கிறார். இவர்களை நோக்கி வருகிறார். இவர்களும் அவரை நோக்கிச் செல்கின்றனர். அசோக் ஒரு பரவச நிலையிலிருக்கிறான். காதம்பரி ஒரு பிரமிப்பில் இருக்கிறாள். அவர் ஒன்றுமே பேசாது அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்து திரும்பி போகிறார். அசோக் அவரை வணங்கிய வண்ணமே இருக்க, கடைசியில் காதம்பரி அவசர அவசரமாக ஒரு கும்பிடு போடுகிறாள்.

காதம்பரி தன் அக்கா, அத்திம்பேர், பிச்சுமணி ஆகியோரிடம் தனது இந்த அனுபவங்களைக் கூற, அவர்கள் பிரமிப்பில் ஆழ்கின்றனர். அந்த சன்னியாசி எங்கிருந்து வந்தார் என காஞ்சனா கேட்க, அவர் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை என்கிறாள் காதம்பரி. ஒரு வேளை ஏதேனும் செட்டப் வைத்து ஒரு சாமியாரை வரச்சொல்லியிருப்பானோ என பிச்சுமணி சந்தேகத்தைக் கிளப்ப, சான்ஸே இல்லை என்கிறாள் காதம்பரி. சன்னியாசியை வேண்டுமானால் செட்டப் செய்யலாம், ஆனால் அந்த இடியையும் மழையையும் எப்படி வரவழைக்க இயலும் என அவள் கேட்கிறாள்.

தெய்வ சங்கல்பம் இதுதான் என நிச்சயமாகத் தெரிகிறது என அவள் அத்திம்பேர் கூற, காதம்பரி தனது குழப்பங்களைத் தெரிவிக்கிறாள். அதாகப்பட்டது, அசோக்கின் பல எதிர்மறை விஷயங்கள் தெரிந்த நிலையிலும் அவனிடம் தன்னை ஏதோ ஒரு சக்தி இழுக்கிறது என அவள் பிரமிப்புடன் கூறுகிறாள். ஒரு வேளை ஏதேனும் பூர்வ ஜன்ம தொடர்பால் அவர்கள் இணைக்கப்பட்டவர்களோ எனக் கேள்வி வருகிறது.

இந்த இடத்தில் சோ தன் நண்பரிடம் துரோபதை பாண்டவர் ஐவரை மணந்த கதையின் பின்புலனைக் கூறுகிறார். முந்தைய பிறவியில் பாண்டவர்களுக்கும் துரோபதைக்கும் விதிக்கப்பட்டவையே ஒருங்கிணைந்து அவள் அவர்களை மணக்க நேர்ந்ததை அவர் எடுத்துரைக்கிறார்.

அப்படியே கூட இருக்கலாம் என காதம்பரி ஒத்துக் கொள்ள, அவளது அத்திம்பேர் நாதன் வீட்டுக்கு போன் செய்கிறார். பிறகு குறிப்பிட்ட நாளன்று சந்தித்துப் பேசுகின்றனர். கல்யாணம் நடக்க வேண்டிய லௌகீகங்களை விவாதிக்கின்றனர். தங்கள் ஒரே மகன் அசோக்குக்கு எப்படியெல்லாம் தடபுடலாக கல்யாணம் செய்ய வேண்டும் என அவர்கள் திட்டமிட, அசோக் அப்பக்கம் வந்து தான் ஒன்று சொல்லலாமா எனக் கேட்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நண்பர்களே ...
பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை சொல்ல வருவதற்காக மன்னியுங்கள் அனைவரும் ...
அட்சய திருதியை குறித்த ஒரு பார்வை அனைவரின் வாசிப்புக்கு பின்வரும் லிங்கில் ...
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_15.html

டோண்டு சார் ...
கல்லூரித் தோழி வித்யா ஐய்யங்கார் என்னுடைய விருப்பத்தின் பேரில் எங்கே பிராமணன் தொடரின் இரு எபிசோடுகளை ரெக்கார்டிங் செய்து தந்தார் ...பார்த்தேன் ... காட்சியாக பார்ப்பதை விட உங்களின் எழுத்து தாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது ... தொடரில் உங்களுடைய பங்களிப்பு ஏதாவது இருக்கிறதா சார் ...

வருகிறேன் ... நன்றி

dondu(#11168674346665545885) said...

தொடரில் என் பங்கா? இருக்கிறதே. எல்லா எபிசோட்களுக்கும் சுட்டி கொடுத்து ரிவ்யூ எழுதுவதுதான் அது.

எனக்கு சோ அவர்களை 47 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாகத் தெரியும். அதுவும் துக்ளக் ஆரம்பத்துக்கு பிறகு அவரை மிக நன்றாகவே அறிவேன்.

என்ன, அவருக்குத்தான் என்னைத் தெரியாது.

அட்லீஸ்ட் 84-ஆம் எபிசோடையாவது - அதை இன்னும் பார்க்காதிருந்தால் - எனது சுட்டியின் துணையுடன் பார்த்து விடுங்கள்.

மிக அருமையாக வரும் இந்த சீரியலின் மிகச்சிறந்த எபிசோடுகளில் அதுவும் ஒன்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அ.முத்து பிரகாஷ் said...

டோண்டு சார் ...
கண்டிப்பாக பார்க்கிறேன் ...
நன்றி...

Unknown said...

//எனக்கு சோ அவர்களை 47 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாகத் தெரியும். அதுவும் துக்ளக் ஆரம்பத்துக்கு பிறகு அவரை மிக நன்றாகவே அறிவேன்.

என்ன, அவருக்குத்தான் என்னைத் தெரியாது.
//
எனக்கும் ஜஸ்வர்யாராயை ரொம்ப நாளா தெரியும்.
என்ன, அவருக்குத்தான் என்னைத் தெரியாது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது