4/23/2012

சாதிகளின் அவசியம்



சாதிகளின் அவசியம் என்னும் தலைப்பில் திண்ணை டாட் காம்-ல் மலர்மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரை


மலர் மன்னன் எனது நண்பர். அடிக்கடி ஃபோனில் பேசிக் கொள்வோம். அண்ணா பற்றிய அவரது இரு பதிவுகள் மற்றும் கோட்ஸே பற்றிய அவரது பதிவுகள் ஆகியவற்றை நான் அவரது அனுமதியுடன் எனது இந்த வலைப்பூவிலும் இட்டுள்ளேன். இப்போது இடவிருக்கும் அவரது கட்டுரை திண்ணையில் வந்தது. அதை அவரது அனுமதியுடனேயே இங்கேயும் இடுகிறேன்.

முதலில் மலர் மன்னன். இங்கு வரும் ”நான்” அவரையே குறிக்கும்.
சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகிறது. சில சாதிகள் குறிப்பிட்ட தொழில்களில் தேர்ச்சியுள்ள குழுக்கள் ஒருங்கிணைந்தமையால் தனி அடையாளம் பெற்று உருவாகியிருக்கின்றன. ஆனால் எல்லா சாதிகளுமே குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளதையொட்டி உருவானவையாகக் கொள்வதற்கில்லை. தமிழ்நாட்டில் இருந்த வலங்கை இடங்கை சாதிகள் தொழில்களின் அடிப்படையில் இனம் காணப்படவில்லை. 

ஒரு சாதி செய்யும் தொழிலை வைத்து அது வலங்கையிலோ இடங் கையிலோ சேர்க்கப்படவில்லை. சமூகத்தில் அவ்வப்போது நிகழும் கொந்தளிப்பின் விளைவாக சாதிகளின் மேலாதிக்கம் இடம் மாறி அதன் தாக்கம் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் பிரதிபலித்திருக்கிறது. 

சாதிக் கட்டமைப்பு செங்குத்தாக மேலிருந்து கீழ் என்றில்லாமல் படுக்கைவாட்டில் அமைந்தமையால் அவ்வப்போது எதன் கை ஓங்குகிறதோ அது வரிசைக் கிரமத்தில் முன்னோக்கி நகர்வதும் பின்னுக்குப் போவதும் நிகழ்ந்திருக்கிறது. சாதிகள் அனைத்தும் சரிசமமான சமூக அந்தஸ்துள்ளவையாக இருந்தாலும் வரிசைக் கிரமத்தில் முதலாவது இரண்டாவது என்று அவ்வப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப இடமாற்றம் செய்து வந்துள்ளன. 


ஒரு விளையாட்டில் நிகழ்வதுபோல் இது ஆரோக்கியமான போட்டியாக இருந்து சமயங்களில் விளையாட்டுகளிலுங்கூட பகைமையும் பொறாமையும் எப்படியும் முதல் இடத்தைக் கைப் பற்றியே தீர வேண்டும் என்கிற வெறியும் தோன்றிவிடுவதுபோலவே சாதிகளிடையேயும் வரிசைக் கிரமத்தில் முதலிடத்தைக் கைப்பற்றுவதில் தொடங்கும் போட்டி பகைமை வெறியில் முடிவதுமுண்டு.

சாதிகளிடையே வரிசைக் கிரமப்படி நிலைகளில் இடமாற்றங்கள் நிகழ்வதுதான் சாத்தியமாகியிருக்கிறதேயன்றி ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் இன்னொரு சாதிக்கு மாறுவது வெகு அரிதாகவே நிகழ்ந்துள்ளது. கள்ளர், மறவர், அகமடியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனாரே என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் எல்லா சாதிகளிலும் இப்படி ஒட்டு மொத்தமாக சாதியை மாற்றிக் கொள்வது சாத்தியமாகியிருப்பதாகக் கூறுவதற்கில்லை.


உணவு விடுதியில் சமையற்காரராகவோ பரிசாரகராகவோ ஒரு பிராமணர் இருக்கையில் அந்த விடுதியின் உரிமையாளர் நாடார், ரெட்டியார் என எந்த சாதியினராகவும் இருக்கும் நிலை இன்று மாநகரங்களீல் உள்ளது. இந்த நிலவரத்தை எந்தத் துறையிலும் காணக் கூடிய நிலைதான் இன்று உள்ளது. முக்கியமாகத் தகுதியும் திறமையும் பொருளாதார மேம்பாடும் செல்வாக்கும் குறிப்பிட்ட ஒரு நபரை அவர் எந்த சாதியைச் சேர்ந்தவரானாலும் உயர் நிலைக்குத் தூக்கிக்கொண்டுபோய் விடுகிறது. அதுபோலவே ஒருவர் எந்த சாதியினராக இருந்தாலும் கீழ் நிலைக்குப் போய் விட நேர்கிறது. இத்தகையோர் வெறும் வறட்டு ஜம்பமாகத் தாம் உயர்சாதி என்று வேண்டுமானால் பெருமை பாராட்டிக் கொள்ளலாமேயன்றி உயர் சாதி என்று தலை நிமிர்ந்து நடமாடிக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. 


ஹிந்து சமுதாயத்தில் காலத்திற்கு ஏற்ப இயல்பாக நிகழ்ந்துள்ள மாற்றங்களுள் இதுவும் ஒன்று. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வு உணர்வை காணாமலடிக்கும் மந்திரக் கோல் இது. .காலப் போக்கில் சாதிகளிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை மறைய இந்த மாற்றம் உதவும். ஆனால் உத்தியோகப் பதவிப் படிநிலைகள், பொருளாதாரம், அரசியல் முதலான காரணிகள் சமுதாயத்தில் உயர்வு தாழ்வு உணர்வைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கும். வாலு போச்சு கத்தி வந்தது என்கிற கதைதான்!
வர்ணாசிரமப் பிரிவில் உயர்வு தாழ்வு எதுவும் கற்பிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அந்தந்தப் பிரிவுகள் ஆற்ற வேண்டிய கடமைகளையே அது பேசுகிறது. மனித உடலில் எந்த உறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். உறுப்புகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்வது அறியாமை. அதேபோல் கடமை களிடையே ஏற்றத் தாழ்வென்பதும் இல்லை சமூகம் சீராக இயங்கிவர எல்லா உறுப்புகளும் நல்லபடியாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதோடு அவை ஆற்றும் கடமைகளும் சரிவர நிறைவேற்றப்பட வேண்டும். சமூகத்தை ஒரு விராட் புருஷனாகக் கற்பிதம் செய்து கடமைகளின் நிர்ணயம் சிரசு, தோள்பட்டை, வயிறு, கால்கள் எனக் குறியீடாகக் காட்டப் பட்டுள்தேயன்றி ஆரிய சமாஜத்தைத் தோறுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி சொன்ன மாதிரி அவரவரும் பிறப்பது அவரவர் அன்னை யின் யோனியிலிருந்துதான். சமூகத்தின் சிறிதாக்கபட்ட வடிவமே குடும்பம். அதன் சிறிதாக்கப்பட்ட வடிவம் மனிதன். ஆகவேதான் சமுகத்தை ஒரு விராட் புருஷனாக, பிரமாண்ட மனித சரீரமாக உருவகித்துக்கொள்கிறோம்.


ஆக, உயர்வு தாழ்வு என்கிற பிரக்ஞையே சாதிகளின் கட்டமைப்பில்தான் அவற்றுக்கிடையிலான போட்டா போட்டிகளிருந்துதான் வருகிறது.இந்த சாதிகளுக்கிடையிலான உயர்வு தாழ்வு மனப்பான்மையை எப்பாடுபட்டாவது அகற்றிவிட்டால் எல்லாரும் ஓர் நிறை என்கிற நிலவரம் உருவாகிவிடும். இதற்காக மூட்டைப் பூச்சித் தொல்லைக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதுபோல் சாதி களையே இல்லாமற் போகச் செய்ய வேண்டியதில்லை. அது சாத்தியமும் இல்லை.
நமது ஆன்மிகத் தத்துவ விசாரங்களின் விஷயத்திலும் இதுதான் எனது வழக்கமாக உள்ளது. ஒருமுறை மாயையை அறிதல் பற்றி எனது சாமானிய அறிவுக்கு எட்டியவாறு ஒரு கட்டுரை எழுதினேன் ஒரு தத்துவப் பேராசிரியர் அதற்கு எதிர்வினை செய்கையில் ஒரு கோணத்தில் என் கருத்து சரியாகத் தோன்றினாலும் தத்துவ வரம்புக்கு அது உட்பட்டதல்ல, தவறான புரிதலுக்கு இடமளித்து விடும் என்ற கருத்துப்பட எழுதியதாகச் சொன்னார்கள். பேராசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும், அவர்கள் இலக்கண பூர்வமாக ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தாம் கற்ற சூத்திரங்களுக்கு ஏற்பவே பாடம் நடத்துபவர்கள்; ஆதலால் எந்தவொரு பொருளைப் பற்றி அவர்கள் பேசினாலும் அதன் இலக்கண வரம்புக்கு உட்பட்ட தாகத்தான் இருக்கும், நான் சொல்வது என் சாமானிய அறிவுக்கு எட்டிய பிரகாரம் இருப்பதால் தவறாகப் போய்விட வாய்ப்புண்டு என்று சொன்னேன். 



அதேபோல இப்போது நான் வெளியிடும் சாதிகளைப் பற்ரிய என் கருத்தும் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காகவே யன்றி, எதையும் புகட்டுவதற்காக அல்ல.


எவ்வித நியாயமோ காரணமோ இன்றித் தலைவிரித்தாடும் சாதி வெறியைச் சில பகுதிகளில் கண்டு எரிச்சலடைந்து இந்த உயர்சாதி கீழ்சாதி உணர்வு போனால்தான் ஹிந்து சமுதாயத்திற்கு விடிவு பிறக்கும் என்று சொல்வதற்கு மாறாக சாதிகளே ஒழிந்து போய்விட வேண்டும், அது இருப்பதால்தான் உயர்வு தாழ்வு என்கிற பேத உணர்வு தலையெடுக்கிறது என்று நானும் பேசியதும் எழுதியதும் உண்டுதான். ஆனால் யோசிக்கும் வேளையில் ஹிந்து சமுதாயத்தின் நலனைக் காப்பதற்கான வழி சாதிகளிடையே காணப்படும் உயர்வு தாழ்வு உணர்வு பாராட்டும் போக்கை ஒழிக்கப்பதுதானே யன்றி, சாதிக் கட்டமைப்பை அல்ல என்கிற விவேகம் வருகிறது..


சாதி ஒழிப்பு சாத்தியமாகப் போவதில்லை என்றாலும் அப்படியொரு மாற்றம் வலுக் கட்டாயமாக நிகழ்வதாயின் அது சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைப் போல மோசமான பின்விளைவுகளைத் தருவதாகவே இருக்கும்..


சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகன்றுவிட்டால் சமுதாயம் பல வண்ணப் பூக்கள் மலரும் நந்தவனமாகத் தோற்றமளிக்கும்.


சமுதாயம் ஒரே கட்டமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருப்பதால் ஒவ்வொரு சாதியும் மொத்த சமுதாயத்தைக் காட்டிலும் சிறியதாக இருக்கும். ஆகையால் அதில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள், முன்னேற்றங்கள் யாவும் எளிதாக சாத்தியமாகும். இதைக் குறிப்பிடுகையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது நாடார் சாதியினர்தான். இந்தச் சாதி குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளிலும் கால் வைத்து ஓசைப்படாமல் பெரும் முன்னேற்றங் கண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. சமுதாயம் ஒட்டு மொத்த அமைப்பாக இல்லாமல் பல்வேறு சாதிப் பிரிவுகளாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆரோக்கியமான பார்வையாக இருக்கும். ஒவ்விரு சாதியும் தன்னளவில் ஒன்றுபட்டு தனது முன்னேற்றத்திற்கான ஆக்க பூர்வ வழியைத் தேடுவது மற்ற சாதியுடன் சச்சரவிட்டுக் கொள்ளும் மோதலை மாற்றி சுமுகமான சமூகச் சூழல் உருவாவது மிகவும் இயல்பாக நடந்தேறிவிடும்.
ஆனால் ஒருவருடைய வர்ணம் என்பது அவரது குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் ஏற்ப மாறக்கூடிய, மாற்றிக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தது என்றுதான் வர்ணாசிரம தர்ம இலக்கணம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. வர்ணம் பிறவியினால்.வருவது அல்ல என்று அது மிகவும் உறுதிபடச் சொல்கிறது. ஆனால் சாதிகளின் சமாசாரம் அப்படியில்லை. ஒரு சாதியில் பிறந்தால் பிறந்ததுதான் தனி நபர் எவராலும் தாம் பிறந்த சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. சில சாதிக் குழுக்கள் வரிசைக் கிரமத்தில் தமக்கு முன்னால் உள்ள இடத்தைப் பெறுவதற்காக அந்த இடத்தில் உள்ள சாதியுடன் சேர்ந்து அதனோடு இரண்டறக் கலந்து போவது வேண்டுமானால் சாத்தியமாகியிருக்கலாம். இது குறிப்பாக பொருளாதார அடிப்படையில் சாதிகள் முன்னேறுகையில் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் வர்ணாசிரமத்தில் மாற்றம் சாத்தியமாவது குழப்பமற்றுத் தெளிவாகவே சாத்தியமாகிறது. அவரவர் தத்தம் குணவியல்புகளுக்கும் ஈடுபாடுகளுக்கும் இணங்க நடந்து கொள்கிற போதும் சமூகத்தில் தமக்குரிய கடமை இன்னதென்று தேர்ந்துகொள்ளும்போதும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வர்ணத்தை இயற்கையாகவே மாற்றிக் கொண்டவராகின்றனர்.
சாதிகளை இல்லாமல் செய்தாலொழிய ஹிந்து சமுதாயத்திற்கு விமோசனம் இல்லை என்று மிகுந்த நல்லெண்ணத்துடனும் அக்கரையுடனும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். சாதி அமைப்பைக் கண்டித்து மிகவும் தீவிரமாகப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். 
ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்று சாதி உணர்வு பன்மடங்கு அதிகரித்து மேலும் மேலும் உக்கிரமாக வளர்ந்து வருவதாகத்தான் நிலைமை இருக்கிறது.. சாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுக் கொள்கையின் விளைவு இது. என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் ரொம்பப்பேர் வெளியே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வெளீப்படையாக இதனை ஒப்புக் கொண்டுவிட்டால் அங்கீகாரமோ மரியாதையோ ஆதரவோ கிடைக்காமல் போய் விடும். இவை பற்றிய கவலை இல்லாதவர் களுக்குப் பிரச்சினை இல்லை.
நான் சமூகவியலாளனோ மானிடவியல் ஆய்வாளனோ அல்ல. பண்டிதர்கள் மிகவும் காரண காரியங்களுடன் இவை பற்றி விளக்கக் கூடும். ஆனால் எனக்கு இருக்கிற சாமானிய அறிவுக்கு இணங்கவே எனக்குத் தோன்றுகிற கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். நான் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதமும் எனக்கு இல்லை. சொல்லப் போனால் பண்டிதர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று என்று ஒதுங்கிப் போய்விடுவதுதான் எனது வழக்கம். வெற்றுப் பிடிவாதமான தர்க்கங்களால் கால விரையம் தான் மிச்சம். அந்த நேரத்தில் எவ்வளவோ ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாம். 
இருவேறு சாதிகளிடையே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதிகளை ஒழித்துக்கட்டிவிடலாம் என்கிற கருத்து மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. நான் அறிந்தவரையில் இப்படி இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணம் ஒரு புதிய சாதியை உற்பத்தி செய்து சாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தான் பயன் படுகிறது. மேலும் வேறு சாதியில் மணம் புரிய விழைபவர் களில் பெரும்பாலோர் தமது சாதியை விட உயர்ந்தது என்று வழக்கில் உள்ள மேல்சாதியில் மணம் புரிவதிலேதான் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிலும் இரு வேறு சாதிகளுக்கிடையிலான திருமணத்தில் தம்பதிகள் ஒன்றுபட்டு வாழ்க்கையைத் தொடங்கும்போது முற்றிலும் அந்நியமான சாதி நடைமுறைக்குத் திடீரென அறிமுகமாகும் மனைவிதான் தனது சாதி அடையாளங்களை விட்டுக் கொடுத்துக் கணவரது சாதியின் நடைமுறைகளுக்குக் கட்டுப் பட்டுப் போவதாக இருக்கிறது.
ஒவ்வொரு சாதிக்கும் சில பிரத்தியேகமான கலாசாரக் கூறுகள் உள்ளன. வீட்டுக்கு வீடு வித்தியாசப்படுகிற நடைமுறைகள்கூட உள்ளன. இவை மிகுந்த சுவாரசியத்துடன் விவாதிக்கப்படுவதுண்டு. அதுவே ஒரு. மகிழ்ச்சிகரமான தகவல் பறிமாற்றமாக இருக்கும். ரசனை உள்ள மனம் .அவற்றை அனுபவிக்கவே விரும்பும். எல்லாவற்றையும் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகளாகப் பார்த்துச் சலிப்படைய ரசனையுள்ள மனம் விரும்புவதில்லை. இரு வேறு சாதிகளுக் கிடையிலான திருமணம் நடக்கும்போது ஒரு சாதியின் கலாசாரக் கூறு அழிந்துபோகிறது. ரசனையுள்ள மனம் இதற்காக வருந்தவே செய்யும்.
ஹிந்து சமுதாயம் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே கட்டமைப்பாக இருந்திருந்தால் பாரசீக சமுதாயம்போல் ஒட்டு மொத்தமாக வலுக் கட்டாய மத மாற்றத்திற்கு இலக்காகித் தனது பாரம்பரிய கலாசார அடையாளத்தை எப்போதோ இழந்துவிட்டிருக்கும். எத்தனையோ நெருக்குதல்கள், வன்முறைகள், மோசடிகள், ஆசை காட்டல்கள் இருந்தும் ஹிந்து சமுதாயம் இன்றளவும் தனது பாரம்பரிய கலாசாரத்தையும் இறைக் கோட்பாட்டையும் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சாதிப் பிரிவுகள்தான் என்பதை மறந்துவிடலாகாது. ஒரு குரு பீடம் ஒரு புத்தகம் என்கிற நிலைமை இங்கு இருந்திருந்தால் மத மாற்றங்கள் பெருமளவில் வெகு எளிதாக நடந்தேறியிருக்கும்.
இன்று சாதிகளிடையே நிலவும் அமைதி ஒருவிதத்தில் எரிமலை குமுறி வெடிப்பதற்கு முன் நிலவும் அமைதியைப் போலவே உள்ளது. இட ஒதுக்கீட்டில் இடம் பிடிக்கும் தாபம் ஒவ்வொரு சாதியிலும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, தனது வாய்ப்புக் குறைவதாக ஒவ்வொரு சாதியும் கவலைப்பட ஆரம்பித்துச் சாதிகளிடையே பகைமை உணர்வும் பொறாமையும் வளரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு சாதி இன்னொரு சாதியை இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்க்க் கூடாது என்று போராடத் தொடங்கி கடைசியில் சம்பந்தப்பட்ட சாதிகளுக்கிடையிலான மோதலாக வெடிக்கும் அளவுக்குப் பதட்ட நிலை முற்றிவிடும்.. வம்பை விலைக்கு வாங்குவது போன்ற சாதி அடிப்படையிலான இட ஒதுக்கிட்டுக் கொள்கை எவ்வளவு துரிதமாகக் கைவிடப்படுகிறதோ அவ்வளவுக்கு சாதிகளிடையிலான பூசல் தவிர்க்கப்படுவது சாத்தியமாகும். நான் உயர்ந்த சாதி நீ தாழ்ந்த சாதி என்று சச்சரவிட்டுக்கொள்வதைவிட சமநிலையில் உள்ள சாதிகளே தமக்குள் நீயா நானா என்று சண்டை போட்டுக் கொள்ளும் நிலை தோன்றிவிடும். மாறாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்குமானால் சாதிகளிடையே சுமுக உறவு கெடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
மீண்டும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவேயே பலமுறை கூறியதுதான். சாதி அமைப்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அதன் உபயோகம் இல்லாமலிருந்தால் அது நீடித்திருக்க இயலாது என்பதுதான் நிஜம். சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலாது எனக் குறிப்பிட்ட எனது பதிவில் உள்ள விஷயங்களை அலட்சியம் செய்ய முடியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

அருள் said...

// //சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகன்றுவிட்டால் சமுதாயம் பல வண்ணப் பூக்கள் மலரும் நந்தவனமாகத் தோற்றமளிக்கும்.// //

இந்தக் கருத்தில் முதல் பாதியை நான் ஏற்கிறேன், - அதாவது "சாதிக் கட்டமைப்புக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகல வேண்டும்" என்பதை. இரண்டாவது பாதி குறித்து கருத்து ஏதும் இல்லை. ஏனெனில், உயர்வு தாழ்வு அகன்றுவிட்டால் அதன் பின்னர் சாதி இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?

வருணாசிரம தர்மம் சாதிகளைத் தோற்றுவிக்கவில்லை என்பது உண்மைதான். ஏனெனில், ரிக் வேதத்தின் புருச சூக்தத்தில் உள்ளபடி 'பிராமண, ராஜ்யன, வைசிய, சூத்திர' பிரிவுதான் சாதியை தோற்றுவித்தது என்பது உண்மையானால் - இந்தியா முழுவதும் 4 அல்லது 5 சாதிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், உண்மை என்பது ஆயிரக்கணக்கான சாதிகளாக இருக்கிறது.

அதே சமயம் மனுதர்மமும், பகவத் கீதையும் சாதீய ஏற்றத்தாழ்வினை கட்டமைக்க உதவின என்பதை மறுக்க முடியாது. அல்லது, சாதிகள் வருணாசிரம தர்மத்தை பயன்படுத்திக் கொண்டன என்றும் கருதலாம்.

வருணாசிரம தர்மத்துக்கு உள்ளே, சாதிகள் இடப்பெயற்சிக்கான போராட்டம் நீண்டகாலம் நடந்துள்ளது. அந்த வகையில் சமற்கிருதமயமாக்கல் என்பது அக்காலத்தில் முற்போக்கானதாகவே இருந்துள்ளது என்று கருதலாம்.

Ganpat said...

எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும்,எண்ணிக்கையில் மிகுந்த(Majority) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மிகவும் அனுகூலமாக உள்ள ஒரு கொள்கையை அது தவறாக இருந்தாலும் விலக்கிக்கொள்வது மிக கடினம்.
யாரை வெல்வது கடினமோ அவர்களை போட்டியிலிருந்தே சாமர்த்தியமாக விலக்குவது மிகவும் செளகரியம்.
Casteism & Reservation policy are here to stay.Brahmins pack off!

PUTHIYATHENRAL said...

உங்கள் கூற்று படி வர்ணாசிரமம் ஜாதி வேறுபாடுகளை தோற்றுவிக்க வில்லை என்பதை சரியென்று வைத்து கொண்டாலும் சங்கராச்சாரி முதல் ஹிந்து மத பிராமண பிடாதிபதிகள் ஜாதி வெறியை வளர்ப்பதை உங்களால் மறுக்க முடியாது. மனிதர்களை தொட்டால் தீட்டு, ஒருவர் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்கிற காரணத்தால் அவரை தொட, அவர் இருந்த இருகையில் அமர மறுக்கும் அளவுக்கு மனிதர்களுக்குள் பேதம் வளர்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

உலகம் விஞ்சனத்தின் உட்ச்சத்தில் இருக்கும் நிலையில் இப்படி மனிதர்களை வர்ணங்கள் அடிப்படையில் பிரித்து கற்கால சிந்தனையை உருவாக்குவது முறையா டோண்டு ஐயா சொல்லுங்கள்.

Kannan said...

ரொம்ப அழகா புரியமாதிரி எழுதி இருக்காரு மலர் மன்னன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது